Archive for கவிதை
சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி – படிக்கவேண்டிய கட்டுரை
பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம் – கவிதை
பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம்
பென்சிலை சீவிக்கொண்டிருக்கிறாள் மகள்
சீவி விழும் மரச் சீவல்களைச் சேகரித்து
தன் டப்பாவில் வைத்துக்கொள்கிறாள்
மீண்டும் சீவத்தொடங்குகிறாள்
கை வலிக்க
அதைக் கீழே வைத்துவிட்டு
அப்படியே படுத்துக்கொள்கிறாள்
கனவெங்கும் மரத்தின் சீவல் சுருள்கள்
வீட்டின் அறைமுழுக்க சுருள்கள்
அலையின் நுரையைப் போல்
அள்ளிப் பூசிக்கொள்கிறாள்
நதியின் நீரென முங்கி எழுகிறாள்
வாய் நிறைய காற்றடக்கி
ஊதித் தள்ளுகிறாள்
விடிந்ததும் நேராக ஓடிவந்து
புது பென்சில் வேணும்ப்பா என்கிறாள்
தினம் ஒரு பென்சிலா, உருப்படும் என்று சொல்லும் என்னை…
எப்படிச் சொல்ல
புரியாமலா
வினோதமாகவா
விரோதமாகவா
எரிச்சலுடனா..
எப்படியோ பார்க்கிறாள்
அறையெங்கும் அவளைத் தேடிக்கொண்டிருக்கின்றன
இரவில் கும்மாளமிட்ட மரச் சுருள்கள்
கவிதை
வேர்வையில் நனைந்து
கண்கூசும் வெயிலில்
சிக்னலுக்குக் காத்திருக்கும்போது
படபடத்து மின்னி மறையும் பட்டாம்பூச்சி
நூறு நூறு கண்களில்
விதைத்துச் செல்கிறது
ஒரு மரத்தை.
கிரீடம் (கவிதை)
நத்தையைப் பார்த்துச் சிரிக்கிறாள் மகள்
எதோ நினைத்துக்கொண்டவளாய்
மழலை மாறாத சொற்களில்
வேப்பமரம் துள்ஸி என்கிறாள்
மிகப்பெரிய பளுவொன்றை சுமந்துகொண்டு
வாசற்படி ஏறும்போது
சிறு பஞ்சுப் பொதியென வயிற்றில் முட்டி
யூகேஜி வந்துட்டா நான் பெரியவதானப்பா என்கிறாள்
இரவின் வானமும் அதன் நட்சத்திரங்களும்
மரங்களின் வாசமும்
குயில்களும் கிளிகளும் அணில்களும்
துளசிச் செடியும் அதில் குடியிருக்கும் வீட்டுத் தெய்வமும்
என் வீட்டுக்குள் காத்திருக்கின்றன
இவள் பேசட்டும் என்று.
நான் அணிந்திருக்கும்
வைரம் பதித்த தங்கக் கிரீடம்
லேசாக உறுத்தத்தான் செய்கிறது
கொஞ்சம் கூச்சமும் கூட.
உறுத்தினாலும் கூச்சம் தந்தாலும்
அது கிரீடம்.
மூன்று கவிதைகள்
மலைப்பயணம்
மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்
(10-அக்டோபர்-2015)
சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்
(10-அக்டோபர்-2015)
—
இருளிரவு
நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.
(10-அக்டோபர்-2015)
Five poems
நண்பனுக்கு
நானறியா ஏதோவொன்று
என்னிடமே உள்ளதென்பதைப்போல
நீயறியாத ஏதோவொன்றும்
என்னிடம் இருக்கலாம்.
நம்மிடம் இருக்கட்டும்.
இவ்வுலகில் ரகசியங்களே இல்லை
என்பதற்கொப்பாகவே
இவ்வுலகில் ஒவ்வொன்றும் ரகசியமே.
திடீர் சப்தத்தில்
மரம்விட்டு
வான்வெடிக்கும்
பறவைகளை விலகி
மரத்தில்
விழி உயர்த்தாமல்
ஒரு பறவை அமர்ந்திருந்தால்
அது நானோவென
நீயுணரும் நேரத்தில்
நம்மிடை அமைகிறது நட்பு.
***
இன்மையொன்றில்
அநாதரவாக
அலைந்து கொண்டிருந்த
நெருப்புத்துளியொன்றைப் பிடித்து
வீட்டுக்குள் வைக்க
அனைத்தும் எரிந்து சாம்பலாகியென
ஒன்றும் நிகழவில்லை.
துளியைத் தூக்கிக்கொண்டோடி
மலைமேலிட்டேன்
சலனமற்றிருந்தது அவ்வுலகு.
குடத்துக்குள் இட்டபோதும்
துளியெனவே உயிரசைத்தபடி.
மென்காற்றொன்றில்
அத்துளி இறக்க
இருள் கவிகிறது சட்டென.
***
மலைப்பயணம்
மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்
***
இருளிரவு
நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.
***
இன்னுமொரு இன்னுமொரு
சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்
கவிதை
முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.
பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள்
பாதை
மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்
எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்
இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை
என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்
குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்
என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த
சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை
அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்
அப்படியே ஆகுக
காற்றில் இலை பரப்பி
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து
குலை சிதைத்து
தோல் உரித்து
வெண்தண்டு கடித்துக் குதறி
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது
அனைத்தையும் பார்த்திருந்த
புதுக்கன்று
மெல்ல தலைதூக்கி
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்
ஆதிகுரல்
அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது
செக்மேட்
அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.
பாம்பு புகுந்த வீடு
தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்ல
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.
பெரியப்பாவின் வருகை
பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்
அஞ்சலி
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி