Archive for கவிதை

நான்கு கவிதைகள்

உயிரோசை.காமில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. நன்றி உயிரோசை.காம்.

யோகம்

என் அகமெங்கும் நெருப்பெரிய
தீராத வனத்தில்
அடைமழையில்
காத்துக்கொண்டிருக்கிறாள் குடைப்பெண்

எட்டும் தூரத்திலிருக்கும் அவள் கை
நெருங்க நெருங்க
தூரச் செல்கிறது

உச்சி ஏறியபின்புதான் கேட்கிறது
மரத்தின் கீழே காத்திருக்கும்
செந்நாய்களின் மூச்சிரைப்பு

உச்சிக்குப் பின்னும் மரம் நீட்டும்
யோகமொன்றில் அமர்கிறேன்
கொதி நெருப்படங்க

மெல்ல புன்னகைக்கிறாள் குடைப்பெண்.

அந்தரங்கம்

கண்ணாடியின் அந்தப்புறமிருந்து
செய்கையில் நிறைய சொன்னான்
நான் இப்புறமிருந்து
தலையாட்டிக்கொண்டிருந்தேன்
கண்ணாடியில் பிரதிபலிக்கின்றன
ஏகப்பட்ட கண்கள்

அவனது கண்கள் வழியாக

நிறைய பேசினான்
கேட்டுக்கொண்டே இருந்தேன்
நானும் என்னென்னவோ சொன்னேன்
திடீரென்று தாமரை மலரைப் பற்றிச் சொன்னான்
சட்டென நினைவுக்கு வந்தது
சில நாள்களுக்கு
கனவெங்கும் விரிந்து கிடந்த
தாமரை மலர்கள்
சொன்னேன், கேட்டுக்கொண்டான்.
பின்பும் ஏதேதோ பேசினோம்
வெறுமையடைந்த சொற்களின் ஒரு தருணத்தில்
எலுமிச்சை பற்றி ஏதோ சொன்னான்.
ஒரு நொடி வியப்புக்குப் பின்
என் கண்முன் விரிந்தது
இரண்டு நாள் முன்பு கண்ட கனவில்
சிதறி ஓடிய எலுமிச்சைகள்.
கேட்டுக்கொண்டான்.
தொலைபேசியை வைத்ததும்
மென்மையாகப் புன்னகைத்திருப்பானோ?.


ப்ளாட்ஃபார்ம்

காத்திருந்த இரண்டு ரயில்கள்
எதிரெதிர் நகரத் தொடங்க
இடைப்பட்ட காலத்தின் அதிர்வில்
நிலைகொண்டிருந்தேன்
கண்ணெங்கும் கம்பிகள் கடக்க

Share

நான்கு கவிதைகள்

முற்று

நண்ப
உன் நீண்ட கடிதம்
என் முரண்களில்
நீ கொள்ளும் கோபம்,
என்னைப் பற்றி
நான் படிப்பது
சலிப்பானது என்றாலும்
வாய் பிளந்து நிற்கும்
முதலையை மிதிக்காமல்
இருக்க முடிந்திடுவதில்லை
நீண்ட வரிகளுக்குள்
சிக்கி மீளும்போது
கொலை பற்றிய எண்ணமும்
தற்கொலை பற்றிய எண்ணமும்.
என் கூடாரத்தின்
மூடிய போர்வையை
இழுத்துப் பார்க்காமல்
இருந்திருக்கலாம்.
என் ரசனை,
தேவையற்ற இடமொன்றில்
நீ வைத்திருந்த முற்றுப்புள்ளி.

முளை

நிழலின்றி நடக்கும்
மிருகமொன்றின்
கழுத்தைத் திருகத் திருக
பெரிதாகும் உடலும்
புதைத்து வைத்த
கோபக் குழியிலிருந்து
வெளி நீட்டித் தெரியும்
முள்மரத்தின் முளையொன்றும்
வாலாட்டித் திரிய
எள்ளல் சிரிப்போடு
கவிகிறது அன்றைய இரவு
தொடர்கனவின் காத்திருப்போடு.

என் மீது நிகழும் வன்முறை

யாருக்காகவோ
ஒலித்துக்கொண்டிருந்த
வானொலியிலிருந்து
சன்னதம் கொண்ட தேவதை
வெட்டியெடுத்த கையொன்றை
கையில் ஏந்தி
கண்கள் சிவக்க
தொட்டு எழுப்பினாள்
அதிகாலை
என் மீது இறங்கியது
வழியெங்கும்
ரத்தத் துளிகள்
சிதறிக் கிடக்க

வீட்டின் பாடல்

வனத்தைத் தொலைத்த
வீட்டிலிருந்து
வெளியேறிபடி இருக்கிறது
வீட்டின் பாடல்
சதா கேவல்களாகவும்
சீற்றங்களாகவும்
இரவுகளில்
வீடெங்கும் சன்னதம்
கொண்டலையும் மிருகமொன்று
பகலில் பறவையாகி
சாலைகளில் நத்தையாக
ஒடுங்கும்போது
வீட்டின் பாடலில்
உச்சம் கொள்கிறது
விலங்குகளின் பறவைகளின்
பூச்சிகளின் சேர்ந்திசை.

மேலே உள்ள கவிதைகள் ‘மணல் வீடு’ செப்-அக் 2008 இதழில் வெளியானவை. நன்றி: மணல் வீடு.

Share

பொம்மைகள் – கவிதை

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்க்கேள்விகூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை.
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

Share

கவிதைகள்

கனவு

நீண்ட நாளுக்குப் பின் தோட்டம்
மீண்டும் கனவில் வந்தது
தானகவே முளைத்திருந்த
பப்பாளி மரங்களின் கிளைகளில்
வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது
காகத்தின் எச்சம்
சிறுவர்கள் எறிந்த பந்து
கண்டெடுக்கப்படாமல் அலைந்து
நிலைத்திருக்கவேண்டும், அதன்
உடலெங்கும் மண்ணாக
கரிய சுவரில்
நிழலில்லா கரும்பூனை
தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க
மண்வாசனையுடன் லேசான தூரலென
திசை மறக்கத் தொடங்கினேன்
கனவு கலையும் நேரம்
கை பிரிந்து செல்லும்
காற்றைப் பற்றிக் கவலையில்லை
எங்கேனும் சுற்றித் திரிந்து
மீண்டு ஏகும்
எனக்கான கனவைப் போல
எனக்கான காற்றும்.

-oOo-

மாயக் கண்ணாடி

லாயத்திலிருந்த சிவப்புக் குதிரை
என்னை வலப்பக்கம் செல்லச் சொன்னது
அங்கிருந்த ஆற்றில் கண்விழித்து நின்றபோது
குளித்துக்கொண்டிருந்த மீனொன்று
நீரில் மூழ்கச் சொன்னது
பாதாள உலகத்தில் படுத்துக்கிடந்த பாம்பு
மாயக் கதவொன்றைத் திறக்க
இரட்டைச் சாலைகள் விரிந்தன
சுமைதாங்கிக் கல்லில்
காத்துக்கொண்டிருந்த
அதி யௌவனப் பெண்ணொருத்தி
என் ரேகையைப் பார்த்து
தென்மேற்குத் திசை போகச் சொன்னாள்
அங்கே நான் தெய்வமென்றறியும்
சிலை ஒன்று காத்துக் கிடப்பதாக
வழியெங்கும் நமத்துக் கிடந்த கோரைப் புற்கள்
என் வழி தவறென்றன
மாயக் கண்ணாடியைக் கோபம் கொண்டு உடைத்தேன்
சிதறி விழுந்த கண்ணாடிகள்
ஆளுக்கொரு திசை சொல்லி நின்றன.

-oOo-

இரவுகளின் வரைபடம்

தினம் தினம் வரைந்துவைத்த
இரவுகளின் படங்களில்
வழியும் கருமையிருந்தது
தெருநாய்களின் ஊளையிருந்தது
கழட்டி வைக்கப்பட்ட கொலுசிருந்தது
எரியும் சிறு அகலும்
வியர்வையும் அலுப்பும்
தோல்வியும் வெற்றியும்
ஒன்று சேர்ந்து குழம்பிக் கிடந்த
காகிதம் இருந்தது
அழும் குழந்தையின் எரிச்சலைப் போல
விடிகிற வானமும் இருந்தது.

-oOo-

Share

மூன்று கவிதைகள்

அன்பு

வீடெங்கும் அன்பு சூழ
அன்பே பிரதானம்,
அப்படியே ஆகுக.
அன்பைப் பற்றியே
எழுதத் தொடங்கினேன்
அடித்தல் திருத்தல்களில்
கிழித்தெறியப்பட்ட
காகிதப் பந்தில்
பயந்து கலைகிறது
தடித்த பல்லி
வாயில் கௌவிய
ஒரு பூரானோடு.


நாம்

நான் அழகனாக இருந்தேன்
மெல்ல வால் வளர்ந்தென
அதிர்ந்த நேரத்தில்
கொம்பும் முளைத்திருந்தது
மேலெங்கும் ரோமங்கள் முளைக்க
பற்களை மறைக்க
பிரயத்தனப்பட்ட நேரத்தில்
ஒரு பெண்ணை எதிர்கொண்டேன்
அவள் அழகாக இருந்தாள்…


கதை நேரம்

தாழ்வாரத்தின் சரிவிலிருந்து
கொட்டிக்கொண்டிருக்கிறது மழைநீர்
கதைக்குள் அமிழ்ந்துவிட்ட வண்ணத்துப்பூச்சி
அதன் பக்கங்களுக்குள் பரவி மேய
உயிர்ப்போடு விளங்கியது புத்தகம்
பக்கங்களுக்குள் சிக்கிக்கொண்ட
வண்ணத்துப் பூச்சி இறந்துவிட்டபோதிலும்
ஆவியுடன் காத்துக்கொண்டிருக்கும்
ஒரு கோப்பை தேநீர்
மேற்பரப்பில் தேடிக்கொண்டிருக்கிறது
என் முகத்தை
தூரத்திலிருந்து பரவும்
இனம்புரியாத மணம்
எல்லாவற்றின் மீதும் கவிய
தன் இருப்பின் கர்வத்தோடு
புரள்கின்றன பக்கங்கள்

மேலே உள்ள மூன்று கவிதைகளும் வார்த்தை ஏப்ரல் 2008 இதழில் வெளியானவை.

Share

நதியின் பக்கங்கள் – கவிதை

நீண்ட நாள்களுக்குப் பின்
புரட்டியபோது
அடையாளம் தெரியாமல்
சிதைவுற்றிருந்தது
பழம்புத்தகத்தின் பக்கங்களில்
தடங்கள்
எண்களை இணைத்து
சித்திரம் கூட்டுதல் போல
கோடுகளை ரொப்ப
புதிய தடங்கள்
காற்றெங்கும்
தீராத ஒலிகளை நிரப்பி
என் காலடி மண்ணை
அரித்துக்கொண்டோடுகிறது நதி

Share

5 கவிதைகள்

01. வழி

நிர்ணயிக்கப்பட்ட
சாலைகளில்
பயணம்
அலுப்பாயிருந்தது
வழி தப்பிய தட்டான்
பேருந்துக்குள்
நுழையும்வரை

02. கவிதையைக் கற்பித்தல்

“குழலினிது”
“குழலினிது”
“யாழினிது”
“யாழினிது”
“என்பர்தம்”
“என்பர்தம்”
“மக்கள்”
“மக்கள்”
“மழலைச்சொல்”
“மழலைச்சொல்”
“கேளா”
“கேளா”
“தவர்”
“தவர்”

03. எதிர்பாராத கவிதை

சூரியனருகே
சுற்றிக் கொண்டிருக்கும் பறவை
கீழே நதியோடும்
பாலமொன்றில்
காற்றிலாடும்
கூந்தல் முகம்
சாரல் போல் தெறிக்கும்
நதிநீர்த் திவலைகள்
பேரிருளுக்குள்
கனன்று கொண்டிருக்கும்
கங்கு…
பெரும்பட்டியலில்
தன்னிடத்திற்குக்
காத்திருக்கவில்லை
திடீர் முற்றத்துச் சத்தம்
படபடக்கும் தாளில்
சின்ன சின்ன நீர்த்துளிகள்

04. அமைதி

குழந்தைகள்
காடுகளைப் பற்றி
படித்துக்கொண்டிருந்தார்கள்
அங்கு வந்தன மரங்கள்
கொடிகள் செடிகள்
புதர்கள் விலங்குகள்
பறவைகள் இன்ன பிற
சீறிக்கொண்டோடியது
வேகப் பேருந்து
குழந்தைகள் திடுக்கிட

05. வீடுவிட்டு விளையாட்டு

வீட்டிலிருந்து வெளியேற
உடன் வாங்கிக்கொண்டது
உலகம்
ஆயிரம் பாம்புகள்
கனவெங்கும் துரத்த
மீண்டு
வீடு வந்த போது
புன்னகையுடன்
காத்திருந்தது
கடவுள்

Share

இரு கவிதைகள்

பிரதி

முடிக்கும்போது
இருப்பதில்லை
தொடக்கம்

எழுத்து மாறாமல்
பிரதி எடுக்கும்போதுகூட
இரண்டு அ-க்கள்
ஒன்றுபோல் இருக்கவில்லை

வானெங்கும் விரவிக்கிடக்கும்
வெண்பனி அலைந்து
கீழிறங்கும்
பறவையைப் பற்றிய
குறிப்புகளில்
இப்போது
பறவையில்லை,
வெண்பனியில்லை
வானில் அதன் தடங்கள் இல்லை.

விலகி இருத்தல்

அவனைப் பற்றி நினைக்கும்போது
தனிமையில்
எதிரியை
மிக மூர்க்கமாய்
வெய்த மோசமான வார்த்தையும்
அவளைப் பற்றி நினைக்கும்போது
மூக்கைச் சிந்தி
ஏதோ யோசனையில்
சேலையில் துடைத்துக்கொண்ட காட்சியும்
கவனத்தை சிதைக்கிறது நண்ப.
கொஞ்சம் விலகியே இருப்போம்.

Share