Archive for கவிதை

யாருமற்ற பொழுது – கவிதை

யாருமற்ற இரவின் பொழுதொன்றில்
பெண்ணொருத்தியை நினைத்தேன்
பின் மகனை நினைத்தேன்
என்றோ செய்த
பயணமொன்று நிறுவியிருந்த
பயத்தைப் பற்றியும்.
காலையில் கண்ணில் பட்டு
ஒரு நொடியில் மறைந்துவிட்ட
கண்ணாடியின் பிரதிபலிப்பைக் கொஞ்சம்.
உடலின் தசைகள் முறுக்கேற,
மகன் நடுவீட்டில் இருந்த
சிறுநீரில் கையளப்பி ஓசை எழுப்ப,
அடிவயிறு கௌவிக்கொள்ள,
கண் கூசும் பிரதிபலிப்பில்
வீடெங்கும் நிறைந்து கிடக்கின்றன
அவ்வவற்றிக்கான மனப்பிரதிமைகள்.

Share

அந்திமழை.காம் – கவிதைத் திருவிழா

அந்திமழையில் கவிதைத் திருவிழாவில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. வாசிக்க இங்கே சுட்டவும்.

நத்தை மனிதன்

கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை.

பீடம் பற்றிய கவிதை

சிறிய மலையொன்றின் உச்சியில்
எனக்கான பீடமிட்டிருந்தேன்
செல்லும் வழியெங்குள்ள மணமற்ற பூக்களை
காலால் மிதித்தும் தாண்டியும் ஓடினேன்
மேலே ஏற ஏற
கீழே மனிதர்கள் எறும்புகளாய் ஊர்ந்தார்கள்
என் சத்தமிட்ட சிரிப்பில்
வண்டுகள் கலைந்தோட
எதிரொலியில் என் வயிறே அதிர்ந்தது
பீடக்கால்களின் நுனியை என் கைகள் தொட்டபோது
சுற்றியிருந்த நறுமண மலர்களின் வாசத்தை
நுகர மறுத்தது என் மூக்கு
பீடமேறி அமர்ந்தபோது
மலையுச்சியிலிருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது என் ஆன்மா
ஒன்றும் இழப்பில்லை
பீடங்களில் உலகில்
இலவசமாகவே கிடைக்கும்
புதிய ஆன்மாக்கள்

சுவர்கள்

தடுப்புகளற்ற எதிரெதிர் இருக்கைகளில்
மூன்று பேர்கள்
முதலாமவனின் எண்ணம் இரண்டாக இருந்தது
இடைச்சுவரை உடைப்பது நல்லது மற்றும்
இந்தச் சுவருக்குப் பின்னிருப்பதே பாதுகாப்பானது.
இரண்டாமவள் இடைச்சுவரை உடைத்தல் பற்றி யோசித்தாள்
மற்றும் இடைச்சுவருக்குப் பின்னிருத்தல் பாதுகாப்பானது என்பது பற்றியும்;
ஏனெனில் இது ஆண்களின் உலகம்.
மூன்றாமவனின் நினைவுக்குள்
சுவரை மீறுவதாகவும்
பின்னிருப்பதே பாதுகாப்பானதாகவும்.
மூன்று சுவர்களுக்குள்ளிருந்து வெளியேறி
மூன்று பேரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
அப்போது அங்கே
மூன்று இருக்கைகள், மூன்று பேர்கள்
மற்றும் மூன்று சுவர்கள்.

சுயசரிதை எழுதுதல்

நான் நினைத்ததுபோல்
எளிதாக எழுத இயலாமல்போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.

அணிலைப் பற்றிய குறிப்புகள்

உலகின் அற்புதங்களில் ஒன்றாக
நான் கருதும் அணில்களைப் பற்றி
நிறைய நாள்கள் மறந்துவிட்டிருந்தேன்
நான்காம் நாள் கனவில் ஒரு பூ கொண்டு வந்தது அணில்
உண்மையில் அன்றுவரை பூ கொண்டு வரும் அணில் என்பதாக
எக்குறிப்பையும் நான் எழுதிவைக்கவில்லை,
சிறிய பழக்கொட்டையை
இரண்டு கைகளில் ஏந்தி நிற்கும் அணிலே
என் விருப்பத்தேர்வாக இருந்திருந்தது,
மிருதுவான அதன் உடற்பரப்பும்
துடிக்கும் வெதுவெதுப்பான சாம்பல் நிற வயிறும்-
நீளும் என் குறிப்புகளில்
பூவோடு வந்த அணிலால்
மறுநாள் பொழுது சந்தோஷமாகக் கழிந்தது
அதன் மூன்று கோடுகளைப் பற்றி
புதிதாக எழுத யோசித்துக்கொண்டிருந்தபோது
பூனை ஒன்று குதித்தோடியது, வாயில் அணிலின் வாலோடு.
தொலைந்துபோன அதன் சதைப்பிண்டங்களைப் பற்றியும்
குறிப்பெழுதி வைத்தேன்,
பூனையைப் பற்றிக் குறிப்புகள் எதுவுமில்லை.

Share

முறிந்து விழுந்த கிளை – கவிதை

முறிந்து விழுந்துவிட்ட
அந்தக் கிளையைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை
எல்லாக் கிளைகளுக்கும் போலவே
சில பொதுக்குணங்கள்
பருத்தி மொட்டு பூத்திருந்த காலத்தில்
பறவைகள் பிரசித்தம்
நீளமான காபி நிறக்காய்கள் தொங்கியபோது கல்லெறி
இரண்டாம் தளத்தில்
12 பி வகுப்பு வராந்தாவிலிருந்து
நீளும் கைகள்
கர்வத்தில் மிதந்த கிளை
எதிர்பாராத நிமிடத்தில் முறிந்து விழுந்தது
மரத்தைப் பார்த்தபடி
விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பிய கைகள்
கிளையிழந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றன
மரம் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது
காற்றில் கலந்திருந்தது
முறிந்த கிளையின் ஏக்கமூச்சு.

Share

பின்னோக்கி நகரும் பெருங்காலம் – கவிதை

ஆலமரத்தின் பரந்த கருநிழலும்
மஞ்சள் வெளிர் மஞ்சள் படர்வுகளும்
கண் எல்லையிலிருந்து மறைய
பின்னோக்கி நகரும் பெருங்காலம்

எப்போதோ அமிழ்ந்தொளிந்த
ஆழ்மனக் காட்சிகள்
கண்ணை மறைத்துப் பெருங்காட்சியாய் விரிய
ஒரு நொடி பேரமைதி,
அப்போதே அத்தையின் மரணம்.
ஒரு வருடத்திலெல்லாம் மாமா.
வீட்டில் கருமை சூழ்ந்த ஒரு தினத்தில் அம்மா
அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
ஒலித்தது புதிய குரல்

யாராலும் தடுக்கமுடியாத
காலத்தின்
பின்னோக்கியப் பெரும்பயணத்தில்
ஓரடி முன்னேயென
தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.

Share

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம் – கவிதை

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.

அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு ஒதுங்கிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாசனை.

வெயிலின் உக்கிரம், வியர்வை;
இடுக்காட்டின் முன் பாட்டாசு.

கிட்டத்தட்ட அனாதை என்றார்கள்;
தெருவில் இரு ஓரத்திலும்
காத்திருந்தது பெருங்கூட்டம்.

ஊர்வலத்தின் பின் நீளும்
வண்டிகளின் சக்கரங்களில்
நசுங்கிக்கிடக்கும் மலர்களுள்
அவனுக்குப் பிடித்ததெதுவோ.

சீக்கிரம் சவ வண்டி கடந்துபோக
காத்திருக்கும் நீண்ட வரிசையில்,
அவனின் சாதனைகள் பற்றிய
யோசனையுடன்
அடுத்த நொடியில்
அவனை மறக்கப்போகும்
நான்.

Share

திரை – கவிதை

காற்றில் ஆடும் ஜன்னல் திரையில்
மலர்ந்திருக்கின்றன போலிப்பூக்கள்
என்னைப் பார்த்தவண்ணம்.

படுக்கைக்கு மேலே
உத்திரத்தில் தொங்குகிறது
நிலவும் பிறையும்
சில நட்சத்திரங்களும்;
திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி
படுக்கையறைக்குள்ளே ஒரு விளக்கணைப்பில்.

இரவுகள் பகலாகவும்
பகல்கள் போலியாகவும்
அங்குமிங்கும் அலைகின்றன
சிறிய திறப்பைத் தேடி

உள்ளங்கைக்குள் வேர்த்தடங்கிக்கிடக்கும் வெளி

கையைத் திறக்க
மெல்ல கசிகிறது
நெகிழும் திரையின் வழியே
என் படுக்கையறை
உலகுக்கு.

Share

முகம் – கவிதை

எப்போதோ அணிவித்தார்கள்
எனக்கான ஜென்டில் மேன் பட்டத்தை.
இளகிய ரப்பராலான பட்டம்
மெல்ல
கனத்துக் கனத்து
முகத்திற்கு மாட்டப்பட்ட
இரும்புறையாய் மாற
என் அலறல்
முகச்சிரிப்பில் சிறிதும் அலங்காத
நரம்புகளில் மோதி
என் காதுக்குள்ளேயே எதிரொலிக்கிறது
எப்படியேனும் போராடி
என்றேனும் வென்று
சுயம் மீட்கும்போது
அரண்டு
ஓடி
குலைக்காமலிருக்கவேண்டும்
வீட்டு நாய்.

Share

அவளின் படம் – கவிதை

எப்படி இத்தனை நாள் அந்தப் புகைப்படத்தை
நினைக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை.
இப்படித்தான் நிறைய மறந்துவிடுகின்றது.
சேது வீட்டில் ஆல்பம் பார்த்துக்கொண்டிருந்தபோது
கண்ணில் பட்டது அந்த ஃபோட்டோ
வெகு கம்பீரமாய்
கால் மேல் கால் போட்டு
முகத்தில் புன்னகை கொப்பளிக்க
வயதுக்குரிய கொணட்டல்களுடன்
அவள் வீற்றிருக்க, பயந்த முகத்துடன்
நான் பின்னின்றிருக்கிறேன்.

நேற்றிரவு எழுந்த கனவில் கூடப்
பின்னின்றிருந்தாள்
இப்போது
உறக்கத்தில் கூட
நான் வலப்புறமாய்ப் படுத்திருக்க
என் முதுகு நோக்கி அவள்.
எப்போதும் எனக்குப் பின்னாலே
இருந்த நினைவுதான் தேங்குகிறது.
ஏழாம் வகுப்பில்
மஞ்சள் பை சுற்றிக்
காற்றில் பறந்த போதும்
பின்னின்றிருந்தாளாம்,
கேட்டபோது கலக்கமாயிருந்தது.
தாலி ஒன்றைக் கட்டிவிட
வீட்டில் கலகங்களில்
தெருவின் குரைப்புகளில்
ஆகாசக் கோட்டைகளில்
கற்பனைகளில்
எப்போதும்
எல்லா இடங்களிலிலும்
பின்னால்தான்.

அந்த ஃபோட்டோவைக்
கேட்டு வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டேன்.

Share