Archive for சிறுகதை

தொலைதல் – சிறுகதை

நான் எழுதிய தொலைதல் சிறுகதை ஜெயமோகனின் தளத்தில் வெளியாகியுள்ளது. சந்தோஷமாக உள்ளது.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

நான் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கே செல்லவும்.

Share

சுற்றம் – சிறுகதை

எனது ‘சுற்றம்’ சிறுகதை சொல்வனம் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Share

முகம் – சிறுகதை

எனது முகம் சிறுகதை வடக்கு வாசல் ஏப்ரல் 2010 இதழில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி: வடக்குவாசல்

நீண்டுகிடக்கும்
தாழ்வாரத்துக்கு வெளியே
ஓடும் தெருவில் திரியும்
பல்வேறு நினைவுகளைக் கடந்து
புகையில் தெரியும் நிலவென
தூரத்தில் தெரியும் முகம்
என் கைகள் ஜில்லிட
-நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை இது.

* * * *

பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள் தெரிந்தார்கள். எனக்கெனத் தனியாகத் திரையிடப்படும் ஒரு திரைப்படம் போன்றகாட்சி அது. நான் எதிர்பாராத ஒரு தருணத்தில் அப்புறத்தில் இருந்து ஒருவர் மிக அருகில் வந்து, நான் பார்த்துக் கொண்டிருந்த துளையின் வழியே தன் கண்ணை வைத்துப் பார்த்தார்.

நெருங்கி வந்த நிழல் மெல்ல மூடி முழு இருட்டு ஆகிவிடுவது போல் அப்புறத்தில் ஒன்றும் தெரியாமல் மறைந்து போனது. மனிதர்களின் சத்தம் மட்டும் லேசாகக் கேட்டது. மிக அருகில் நெருங்கி வந்த அந்த மனிதனின் முகம் என்னுடைய கண்ணுக்குள் நுழைந்து என்னுள்ளே இறங்கிக் கொண்டது போலிருந்தது; பரவி வரும் நிழல் கீழே உள்ள சகலத்தையும் போர்த்திக் கொண்டுவிடுவது போல.

அந்த முகம் யாரோ ஒருவருடையது போலிருந்தது. மிகத் தனித்துவமான முகமாகவும் தோன்றியது. மூக்கின் மேலே லேசான ரோமங்கள் இருந்தன. இரண்டு புருவங்களுக்கு மத்தியில் லேசான புடைப்பு இருந்தது. மீசை மெல்லக் காற்றில் ஆடியது. யாரோ அப்பக்கம் இருந்து பார்க்கிறார்கள் என்கிற யோசனையுடன் அம்முகம் அத்துளையைப் பார்த்திருக்க வேண்டும்.

அன்றிலிருந்துதான் நான் முகங்களை உற்று நோக்குவதாக நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்துக் கொள்வது என் பழக்கத்துக்கு ஒரு வயதை நிர்ணயித்தது. ஆனால் நான் மிகச் சிறிய வயதில் எப்போதோ பார்த்த முகங்கள் கூட புதுத் தெளிவு பெற்று வலம் வரத் தொடங்கின என்பதும் உண்மைதான்.

இரவில் மெல்ல நகரும் பேருந்தில் ஏறிக்கொண்டபோது இந்த முகங்களைப் பற்றி யோசிக்கவே கூடாது என நினைத்துக் கொண்டேன். முதலில் கண்ணில் பட்டது கண்டக்டரின் முகம். அதிவேகத்தில் சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் அதே வேகத்தில் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டன முகங்கள் பற்றிய நினைவுகள்.

ஒவ்வொரு மனிதனின் முகமும் ஒவ்வொன்றாகக் காட்சி தருவதை நினைக்கும் போதெல்லாம், ஒருவிதக் கிளர்ச்சி மனதுக்குள் வியாபிப்பதைப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் அசிங்கமாக இருந்தது. நான் இப்படி மிக அந்தரங்கமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, தலையில் எஞ்சியிருந்த ஒன்றிரண்டு முடியை கண்டக்டர் சீவிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்ணுக்குக் கீழே கருவளையம் ஒன்று உருவாகி வந்திருந்தது. மீசையில்லா முகங்களைக் காணும்போது ஏற்படும் ஒருவித எரிச்சல். அவனது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஓர் உள்ளுணர்வு சொன்னது, இவன் எதையாவது பேசிக் கொண்டே இருக்கப் போகிறான் என.

தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளில் ஒருவரை எழுப்பி அந்த மனிதர் ஐந்து ரூபாய் குறைவாகக் கொடுத்துவிட்டதாக அரை மணி நேரம் சண்டையிட்டதைப் பின்பு பார்த்தேன்.

மனிதர்களின் முகங்கள் நிச்சயம் வெவ்வேறானவை. ஆனால் தொடர்ந்து முகங்களைப் பார்ப்பதன் மூலம் அவற்றையாரும் மெல்ல வாசித்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் வளர்ந்திருந்தது. அந்தப் பயணி ஐந்து ரூபாய் தரமுடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். கண்டக்டர் கோபத்துடன் தனக்குள், “அவனப் பாத்தா ஏமாத்தறஆளு மாதிரியா இருக்கு,’ என்று சொல்லிக்கொண்டே போனார். “ஜன்னல சாத்துயா, காத்து பலமா அடிக்குதுல்ல,’ என்று முன்னாலிருந்த வேறொரு பயணியை நோக்கிப் போனார். அந்த இரண்டு பயணிகளையும் பார்க்க எழுந்த ஆவலை அடக்கிக் கொள்ள முயற்சித்தபோது, உடலுக்குள்ளே லேசான கிளர்ச்சியை உணர்ந்தேன்.

தூக்கத்தில் என் மேல் வழிந்து விழுந்துகொண்டிருந்தான் பக்கத்திலிருந்தவன். தோராயமாக இருபது வயதிருக்கலாம். சவரம் செய்யவேண்டிய தேவை இல்லாத மாதிரியாக லேசாக ஒன்றிரண்டு ரோமங்கள் தாடைக்குக் கீழே வளர்ந்திருந்தன. எனக்கெல்லாம் இருபது வயதிலேயே கன்னமெங்கும் கருகருவென ரோமங்கள் வளர்ந்துவிட்டன. அதுவே ஒருவித ஆண் தன்மையை எனக்குத் தந்தது என்று என் நண்பர்கள் சொல்வார்கள். பக்கத்தில் இருந்த பையன் முகத்தில் எவ்விதச் சலனமுமில்லை. மெல்லிய மீசையுடன் தூக்கமே சிறந்த யோகம் என்பதாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மெல்ல என் கண் வழியே அவனது முகம் நுழைவதைப் பார்த்தேன். சிலரின் முகங்கள் இப்படி சில நிமிடங்களில் நுழைந்துவிடுகின்றன; இரு புருவங்களுக்கு மத்தியில் மெல்லிய புடைப்பைக் கொண்ட ஒருவனது முகம் தகரச் சுவற்றில் இருந்த சிறு துளையின் வழியே என்னுள்ளே நுழைந்ததைப் போல.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மூடியிருந்த இமைக்குள் கருவிழி புடைத்து வெளியில் தெரிந்தது. அவனது தொண்டைக் குழியும் அப்படியே புடைத்திருந்தது. அவனது கேராவின் வழியே வியர்வை வழிந்து ஒரு கோடாகக் காட்சி தந்தது. பலமான காற்று என்று சொன்ன கண்டக்டர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். டிரைவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவரது முகம் என் கண்ணுக்குள்ளே ஏன் நுழையவில்லை என்பது குறித்து தனியே யோசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அவன் இன்னும் என் மேல் நன்றாகச் சாய்ந்தான். அவனது வயதில் நான் இத்தனை கவலைகள் இல்லாமல் இருந்தேனா என்பது எனக்குச் சந்தேகமாக இருந்தது. என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது வெறும் குழப்பமே மிஞ்சுகிறது. இன்றைய என் முகம் கூட சட்டென நினைவுக்கு வர மறுப்பது விநோதம்தான். நான் சிறுவயதில் எப்படி இருப்பேன் என்று பார்க்க என் பர்ஸில் இருந்த என் பழைய புகைப்படம் ஒன்றைஎடுத்துப் பார்த்தேன்.

இன்றைய என் முகத்தோடு ஒப்பிடும்போது அது நிச்சயம் பால்வடியும் முகம்தான். நான் திருடிய ஒரு புத்தகம் பற்றிய விசாரணை வந்தபோது, என் ஆசிரியர் நிச்சயம் நான் திருடியிருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்து என்னை எதுவும் கேட்காமலேயே அனுப்பியதை நினைத்துக் கொண்டேன். அந்த ஆசிரியரின் முகம் ஓர் ஏமாளியின் முகம்தான். ஒருவித சப்பட்டையான முகம். கண், மூக்கு, தாடை எல்லாமே உள்ளடங்கிப் போய்க் கிடக்கும் முகம். அவரது மனைவியைப் பார்த்தாலே அவர் நடுங்குவார் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் மனைவியின் முகம் பருத்த முகமாகவும், விகாரமானதாகவும் இருந்தே தீரும் என்று நினைத்தேன். அந்த வருட ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அந்த ஆசிரியர் தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். நான் வரைந்து வைத்திருந்த முகத்தைத் தன் கழுத்தில் தாங்கிக் கொண்டு அவள் வந்திருந்தாள்.

தகரச் சுவற்றின் துளைகளின் வழியே நுழைந்த மனித முகத்திலிருந்து இன்று வரை இந்த பதினெட்டு வருடங்களில் இப்படி எத்தனை முகங்கள் என்னை ஆக்கிரமித்தன என யோசிக்கத் தொடங்கினேன்.

ஒரு பாடலைக் கேட்டதும் அப்பாடலின் சூழலுக்குள் நம்மை அறியாமலேயே அமிழும் மனம் போல், என்னை அறியாமல் பலவித முகங்களும், சூழலும் என்னை அலைக்கழித்தன.

பலாக்கொட்டையைப் போன்ற மொழு மொழு முகத்தைக் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்தேன். அன்றே அவள் என்னுள் என் எதிர்ப்பையெல்லாம் மீறி இறங்கினாள். இது சாதாரண முகம் பார்த்தல் அல்ல என்று தோன்றியது. மெல்லிய வெண்ணிலா வெளிச்சத்தில் என் மாமா வீட்டு மொட்டை மாடியில் நான் அவளை வெறியுடன் கலைத்தேன். இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று நினைத்த நேரத்தில் மின்னலென காயத்ரியின் முகம் தோன்றி மறைந்தது.

காயத்ரியைத் தான் கல்யாணம் செய்து கொண்டேன். என் மாமனாரின் முகமும் மாமியாரின் முகமும் ஏதோ ஒரு தருணத்தில் எரிச்சல் தருவதாக என்னுள்ளே பதிந்துபோனது. அன்றிலிருந்து இறுவரை நாங்கள் பரஸ்பரம் மரியாதையாகப் பேசிக் கொண்டு, உள்ளுக்குள்ளே பெரிய எரிச்சலைப் பொத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி எத்தனை எத்தனை முகங்கள். ராங் சைடில் வந்து என் காலில் மோதிவிட்டு, என்னைப் பார்த்துச் சிரித்து, “சாரி பிரதர்” என்று சொன்னவனின் முகம். அவனுக்குப் பின்னே மரணம் செல்கிறதோ என்று தோன்றியது. அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

“இதெல்லாம் என்ன நோட்டுன்னு குடுக்குறீங்க?!” என்று என்னை அதட்டிக் கேட்ட பேங்க் மேனேஜரின் முகம். அந்த ஆள் நிச்சயம் கடுமையானவர் அல்ல என்று நினைத்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில், “எதுக்குச் சொல்றேன்னா” என்று ஆரம்பித்தார்.

இப்படி முகங்கள் என்னைக் கடந்து கொண்டே இருக்கின்றன. நான் அவற்றைச் சாதாரணமாக மீறிப் போகமுடியாமல் ஏதோ ஒரு நோய்க்குள் விழுந்து கொண்டிருக்கிறேன் என்பது உறுதியாகத் தெரிந்தது. ஒருநாள் ஒரு டாக்டரைச் சென்று பார்த்தேன். அவர் ஏதேதோ சொன்னார். இதெல்லாம் உங்க கற்பனை என்று அவர் சொன்ன தருணத்தில் அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். கடைசி வரியைத் தவிர அவர் என்னவெல்லாம் சொன்னார் என்பதே நினைவில் இல்லை. அவரது முகம்தான் அப்படியே பதிந்து போயிருந்தது. அவரது மனைவி நிச்சயம் அமைதியானவளாகவும் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என ஓர் எண்ணம் ஓடியது. சென்று கேக்கலாமா என்று ஒரு கணம் நினைத்து, அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். அக்கேள்வியின் வழியே நிச்சயம் என் முகம் அவருக்குள் ஆழ இறங்கிப் போவதை நான் விரும்பவில்லை.

என் மேலே சாய்ந்திருந்த பையனின் வாய் ஓரத்திலிருந்து நீர் வடிந்தது. பொறாமை என்னை உந்த அவனைப் பார்த்தேன். எவ்விதச் சங்கடங்களும் இல்லாமல் அவன் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவனது முகத்தில் சீராக மூச்சு ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு அடுத்து தாடி வைத்த மனிதர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மீசையும் தாடியும் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருந்தது. ஏதோ சங்கடத்தில் தூங்குபவர் போலத் தோன்றியது. மேற்கொண்டு எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு என் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பையனைப் பார்க்கத் தொடங்கினேன். இப்படி கவலைகள் இல்லாமல் உறங்கி எத்தனை நாளாகியிருக்கும்.

பஸ் திடீரென நின்றது. தூக்கத்தில் இருந்த அனைவரும் உலுக்கி எழுப்பப்பட்டார்கள். பக்கத்தில் இருந்த பையன் எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கேட்டான். “அருப்புக் கோட்டையா?’

“இல்லயே, மதுரை.”
“அருப்புக் கோட்டை போயிடுச்சா…”
“ஆமா, அங்கதான் இறங்கணுமா?”

“ஆமா’ என்றான் எவ்விதப் பதட்டமும் இல்லாமல். அவனது முகம் அமைதிக்கான முகம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எதிரே நேராக முட்டிக் கொள்வது போல வந்த பஸ் கொஞ்சம் வழிவிடவும், எங்கள் பஸ் மீண்டும் கிளம்பியது. என் பக்கத்தில் இருந்த பையன் எழுந்து, தாடிக்காரரைத் தாண்டி கண்டக்டரை நோக்கிப் போனான். கீழே இறங்குவதற்கு வண்டியை நிறுத்தச் சொல்லிக் கேட்கப் போகிறான் என நினைத்த நேரத்தில், வேகமாக ஓடும் பஸ்ஸிலிருந்து தாவிக் குதித்தான். பக்கத்தில் எங்களை முந்திக் கொண்டிருந்த பேருந்து அவனை மோதித் தூக்கி எறிந்தது. ஒன்றிரண்டு பேர் ஐயோ என்று கத்தினார்கள். என் வயிற்றுக்குள் ஒரு கத்தி இறங்கியது. அடுத்தடுத்து எல்லாப் பேருந்துகளும் அங்கே நிறுத்தப்பட்டன. எங்கள் பேருந்தின் டிரைவர் வண்டியை மெல்ல ஓரம் கட்டினார். அவரது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

ஜன்னல் வழியே எட்டி சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனது முகத்தைப் பார்த்தேன். அமைதியான முகத்துடன் ஆயிரம் கேள்விகளுடன் அவனது முகம் மட்டும் என்னுள்ளே ஆவேசமாக மீண்டும் இறங்கியது. அதுவரை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அமைதியான முகத்தைக் கலைத்துப் போட்டது. இரண்டு நெற்றிப் புருவங்களிடையே புடைப்பைக் கொண்ட மனிதன் சிரித்துக் கொண்டே மெல்ல விலகிக் கொள்ள, ரத்தத்தில் தோய்ந்த முகத்துடன், வேறொரு பேருந்துக்காகத் தெருவில் காத்துக் கொண்டு நிற்கிறேன்.

Share

அலை – சிறுகதை

அலை சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

Share

அங்குமிங்குமெங்கும் – சிறுகதை

படிக்க: http://www.vadakkuvaasal.com/article.php?id=192&issue=53&category=2

Share

மழை – அறிவியல் புனைகதை

சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் வசத்தில் அவன் இல்லை என்பது தெரிகிறது. சுரேஷன் நாயர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு விரலை வைத்திருந்த ஒல்லி ஆசாமியின் விரல் நாணயத்தோடு அங்குமிங்கும் நகர ஆரம்பித்தது.

S
U
C
C
E
S
S

சுரேஷன் நாயர் ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார். இந்தியா முழுவதும் அறியப்படும், எதிர்பார்க்கப்படும் அந்த விஞ்ஞானியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

நாடெங்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அலறிக்கொண்டிருந்தன. புயல் சின்னம் உருவாகி இருந்தது. இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்கிற செய்தியெல்லாம் ஒளி(லி)பரப்பாமல் ஊடகங்கள் இன்னொரு முக்கியச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தன. புயலை திட்டமிட்டு நகர்த்தும் முயற்சியின் முதல் சோதனை அன்று நிகழவிருக்கிறது. இதுவரை உள்கட்டங்களில் மட்டும் சோதனையில் இருந்த, ‘புயலை விருப்பப்பட்ட இடத்துக்கு மாற்றும் சோதனை’ இன்று முதன்முறையாக சோதிக்கப்பட இருக்கிறது.

சுரேஷன் நாயர் தலைமையில் நூற்று நாற்பது பேர் கொண்ட குழு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் புயல் சின்னத்தை நகர்த்தி, கடலுக்கு நடுவில் அதை வலுவிழக்கச் செய்யவேண்டும். 920 மில்லிபார் உள்ள குறைவழுத்த காற்று மண்டலம். அதைவிடக் குறைந்த காற்றழுத்த தாழ்வை, விரும்பும் இடத்தில் உருவாக்கி, அதை நோக்கி குறைந்த காற்றழுத்தத்தை நகர வைப்பதுதான் அடிப்படை நோக்கம். குறைந்த காற்றழுத்தத்தைவிட மிகக்குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதில் வெற்றி அடைந்த சுரேஷன் நாயர் இத்திட்டம் நிச்சயம் வெல்லும் என்று நம்பினார். அறிவியல் பொய்த்தாலும் ஆவி சொன்னது பொய்க்காது என்று நினைத்துக்கொண்டார்.

மிகக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கவேண்டிய இடத்தைத் தேர்வு செய்து, அதற்கான வேலையை ஆரம்பித்தார். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவருக்கு. ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார்.

சிறிய குன்றின் உச்சியில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார். மேலே செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த தலைப்பாக்கட்டு பண்டாரம் காவிப் பல் தெரியச் சிரித்துக்கொண்டார். கைகளில் பற்ற வைத்திருந்த பீடியை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டு தூரத்தில் நிற்கும் தூணில் உள்ள சிலையிடம் பேசினார்.

‘மழைய நிறுத்திடுவானுவளா மக்கா? கேக்கேன், நிறுத்திடுவானுவளாங்கேன்? கேட்டா அறிவியலும்பானுவோ. இன்னைக்கு நானும் பாக்கேன். மழ வல்லேன்னே இனிமே தலைப்பாக்கட்டு கிடையாதுங்கேன். என்னவே சிரிக்கீரு? பாரும், மழ வரும். புயல் வரும். ஒரு மசுரையும் ஒரு மசுராண்டியாலும் புடுங்கமுடியாதுங்கேன். தலப்பாக்கட்டா அறிவியலான்னு நானும் பாக்கேன்.’

கேமராக்கள் பளிச்சிட ஒளி வெள்ளத்தில் சுரேஷன் நாயர் பற்கள் தெரிய பேட்டி கொடுத்தார். மிகப் பெரிய வெற்றி. கரையைக் கடக்கும் புயல் கடலையே கடந்தது. கடலிலேயே மழை பெய்து, காற்றடித்து புயல் ஓய்ந்துவிட்டது.

‘இது ஒரு மிகப்பெரிய சாதனை. இச்சாதனையை இதுவரை எந்த நாடும் செய்ததில்லை. இச்சாதனையில் இந்தியா ஒரு முன்னோடியாக விளங்கும். ஒரு காற்றழுத்தத்தைவிடக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் இதைச் சாதித்தோம். மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீர் ஓடுவதைப் போல, காற்று நாங்கள் சொன்ன திசைக்கு ஓடியது.’

சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டார். வெண்மை நிற மேகங்கள் மெல்ல மெல்ல தங்கள் நிலையிலிருந்து விலகி, சுரேஷன் நாயர் வட்டமிட்டிருந்த இடத்திற்குச் சென்றன.

‘இது ஒரு தொடக்கம்தான். இதை வைத்தே புயலையும் நாம் உருவாக்கமுடியும். தேவையான அளவு மழையையும் நாம் பெறமுடியும். இது அதற்கடுத்த பெரிய வெற்றியாக இருக்கும். செயற்கை மழைக்கு அவதிப்படவேண்டியதில்லை. ஒரு சின்ன காற்றழுத்தத் தாழ்வுநிலை. கொஞ்சம் நீராவி. மழை ரெடி.’

கேள்விகள் நாலா பக்கமும் இருந்து பாய்ந்துவந்தன.

’எல்லாம் பகவதி செயல்’ என்றார்.

‘மழையை நிறுத்தவே முடியாது என்று பலர் சொன்னார்கள். நானும் மரபிலும் இயற்கையிலும் நம்பிக்கை உள்ளவந்தான். ஆனால் அறிவியலின் சாத்தியங்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவை. நீங்கள் கடவுளையும் அறிவியலையும் பிரிக்கவேண்டியதில்லை. எனக்கு அறிவியலும் பகவதியும் ஒன்றுதான்.’

‘மிகக்குறைந்த காற்றழுத்தத்தை எப்படி உருவாக்கினோம் என்பது ரகசியம். அணுக்கரு பிளவின் அடிப்படையிலான உயர் சோதனை அது. அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். தடுக்கமுடியாத புயல் தரும் அழிவையும் சேதத்தையும் விடக் குறைவுதான்.’

சுரேஷன் நாயர் ஓர் இந்திய முகமாக மாறத் தொடங்கியிருந்தார்.

கோவிலின் படிகளில் சோர்ந்து படுத்திருந்தார் தலப்பாக்கட்டு பண்டாரம். அவர் கண்களில் பெரும் மருட்சியும் பயமும் தெரிந்தன. தான் இப்படி தோற்போம் என்று அவர் நினைக்கவே இல்லை. இயற்கையையும் கடவுளையும் விஞ்சும் அறிவியலைப் பற்றித் தனக்குத் தெரியவில்லையே என்கிற கவலையும் கொஞ்சம் இருந்தது.

எதிரில் தூணில் இருந்த சிலை தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்ட பண்டாரம் நெக்குருகி ‘முருகா’ என்றார். இனியும் தான் தலைப்பாக்கட்டு கட்டக்கூடாது என்று எண்ணி, தலையில் கட்டியிருந்த துணியை எடுத்து தூர வீசினார். காற்றில் அவரின் தலைமயிர் பரவிப் பறந்தது. அப்படியே ஓர் ஓரத்தில் ஒண்டிப் படுத்துக்கொண்டார். சொல்லொணாத துயரத்தில் அதன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. ‘இனி வெள்ளமே இல்லை’ என்பதை நினைக்கவே அவருக்குக் கஷ்டமாக இருந்தது. தன் சிறுவயதில் திடீர் மழையில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தையும், அந்நீரில் மிதந்த காகிதக் கப்பலையும் நினைத்துக்கொண்டார். ஆறு பொங்கிப் பிரவகித்து ஊருக்குள் வர, அனைவரும் முழங்கால் வரைக்கும் ஆடைகளைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தூரத்தில் எங்கும் பரவிக்கிடக்கும் வெள்ளத்தைப் பார்த்த சந்தோஷத்தை நினைத்துக்கொண்டார். இது எல்லாம் இனிமேல் கிடையாதா என்று நினைத்தபோது அவரது சோகம் எல்லை மீறியது.

எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த பண்டாரத்தின் மீது நீர்த்துளிகள் பட்டன. எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றிரண்டு நீர்த்துளிகள் வானத்திலிருந்து பொத்துக்கொண்டு வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. வலுத்த மழை மேலும் மேலும் வலுக்க, இதுவரை தான் காணாத ஒரு பேய் மழையைக் காணப் போகிறோம் என்பது பண்டாரத்திற்குப் புரிந்துபோனது.

சுரேஷன் நாயரின் குழு தீவிரவமாக ஆராய்ந்தது. எங்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமில்லை. இது புயலில்லை என்றார் சுரேஷன் நாயர். ஆனால் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. காற்று சுழன்றடித்தது. தீவிரமான மழை. விடாமல் இரண்டு நாள்கள் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம். நிறைய வீடுகளில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சுரேஷன் நாயர் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவினார். இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்கிற அறிக்கை மட்டும் வானிலைச் செய்தியாகச் சொல்லச் சொல்லிவிட்டுப் போனார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்த மக்கள் கோவிலின் படிகளில் ஏறி, மேலே உள்ள கோவிலில் தஞ்சம் பெற ஓடினார்கள். பண்டாரம் உறக்கச் சொன்னார், ‘மழய நிறுத்திட்டோம்னு சொன்னவன் அறிவாளி, மழ வரும்னு முன்னக்கூடியே இங்க வந்து நிக்கவன் பயித்தியக்காரனா, சொல்லுங்கல.’

தூரத்தில் கிடந்த துணியை எடுத்து மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார் பண்டாரம்.

Share

மூன்று பேர் – அறிவியல் புனைகதை

இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், 🙂 ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter ‘அறிவியல் கட்டுரை/கதை’ will be referred as ‘எழவு’) எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, – முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.

என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.

அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. ‘ஒரு ஊர்ல ஒரு’ என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் ‘ஒரு ஊர்ல ஒரு’ இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த ‘எழவிலும்’ நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. 🙂 முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.

விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.

நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். ‘தாயோளி’ என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.

மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. ‘நல்லா பாத்தியா’ என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.

மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)

திடீரென மேத்யூ சொன்னார், ‘நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?’ என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் ‘எழவு’ எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)

சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் ‘ரணகளம் ரத்தபூமியாக’ மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.

மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.

மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. 🙂 பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.

மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.

இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. ‘இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு’ என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.

மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.

மேத்யூவிடம் சொன்னேன். ‘உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.’

‘அப்படியா?’

‘ஆம், ‘சண்டை போடு’ என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்’ என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.

மேத்யூ ஆச்சரியம் பொங்க, ‘என்ன செய்தாய்’ என்றார்.

‘நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது’ என்றேன்.

இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.

ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?

— சீவன், 24-11-2108

(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)

நன்றி: பண்புடன் குழுமம்

Share

வசியம் – சிறுகதை

டும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. ‘தானா வேர்த்தா நல்லதுடே’ என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அரைத்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன. எப்படியும் சோலை இரவு வருவாள் என்று நினைத்து ஏங்கிக் கிடந்து, காமம் தலைக்கேறி குதியாட்டம் போட்டு அடங்கி அவள் வராமல் மனதெங்கும் பெரும் கோபத்தோடு, உறங்கிப்போவதும் சிறு சத்தம் கேட்டு விழிப்பதுமாகக் கழிந்த இரவுகள் அவருக்கு இப்போதுகூட பெரும் எரிச்சலைத் தந்தது.

ஜாடைமாடையாகப் பேசி ஒருவழியாக தன் மனதில் இருப்பதை அவளுக்குச் சொல்லிவிட்டதாகவே நம்பியிருந்தார் பூபதியாப்பிள்ளை. ஐந்து வருட கொதிப்பை ஒருவழியாகச் சொல்லி முடித்ததில் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. பட்டென உடைத்துச் சொல்லமுடியாவிட்டாலும் ஜாடைமாடையாகச் சொன்னதே பெரிய வெற்றி என நினைத்தார். ஒருவழியாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ராத்திரி வேல கொஞ்சம் கெடக்கு, வந்துடு’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தார். நாகம்மை ஆச்சி வீட்டுக்கு வர காலை ஆகும் என்று அவருக்குத் தெரியும். அவள் சுருக்கக் கிளம்பினாலே ஒருநாள் ஆகும். ஆனால் அன்று இரவு சோலை வரவில்லை.

காலையில் நாகம்மை எப்போதும் விடும் பெருமூச்சோடு வீடு வந்து சேர்ந்தாள். நாகம்மையின் உலகம் பெருமூச்சால் ஆனது. எதற்குப் பெருமூச்சு விடுவாள் என்றில்லை. தன் கணவன் பூபதியாப்பிள்ளையை நினைத்தால் ஒரு பெருமூச்சு. தன் அண்ணன் நெல்லையப்ப செட்டியாரை நினைத்தால் ஒரு பெருமூச்சு. சோலை வேலைக்கு வரவில்லை என்றால் ஒரு பெருமூச்சு. பெருமூச்சை விட்டவுடனேயே அந்த விஷயம் அவள் அளவில் முடிவுக்கு வந்துவிடும். பூபதியாப்பிள்ளைஅரசல் புரசலாக பிள்ளை சோலைக்காக கிடந்து அலைவது பற்றித் தெரிந்திருந்தது. அதை அறிந்த தினம் அதற்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். இன்னும் சில பெருமூச்சுகளுடன் சமையலைச் செய்து முடித்து பூபதியாப்பிள்ளையைச் சாப்பிட அழைத்தாள். தோளில் கிடந்த துண்டைக் கொண்டு வேர்வையைத் துடைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அவர் மனம் வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தது. பருப்புத் துவையலும் கீரைக்கூட்டும் அவர் கவனத்தைக் கவரவே இல்லை. நாகம்மை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் உண்டதும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவப் போனாள்.

வாசலில் குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டது.

‘நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’

நாகம்மை ஆச்சி உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள். “புள்ள பொறந்த வீடு.”

‘இப்படி ஊர ஏமாத்தற வரைக்கும் எந்தப் புள்ள இங்க பொறக்கும்’ என நினைத்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை.

“ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது. ஐயா மனசுல இருக்கிற வாட்டம் நீங்குது.”

‘என்னத்த’ என்று சலித்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை. நாகம்மை ஆச்சி கோபத்துடன் ‘சொன்னா போறதில்ல’ என்று வெளியே வந்தாள். குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை அடித்தபடி அடுத்த வீட்டுக்கு நகர்ந்தான்.

பூபதியாப்பிள்ளை குடுகுடுப்பைக்காரன் உடலெங்கும் போர்த்திக்கிடந்த சீலைகளைப் பார்த்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்துடன் அவனைச் சுற்றியிருந்தது. குடுகுடுப்பைக்காரனின் நெற்றியில் குங்குமமும் செந்தூரமும் நீண்டிருந்தது. முருகலான மீசை கூரிய நுனியுடன் வெளி நீட்டிக்கொண்டிருந்தது. பலமுறை தட்டப்பட்ட செப்புத் தகட்டுக் கோடுகள் போல அவன் முகமெங்கும் வரிகள் நிரம்பியிருந்தன. நாகம்மை முணுமுணுத்துக்கொண்டே ‘பச்சப் புள்ளய கொன்னுப்புடுவானுக’ என்றாள். எந்தக் குழந்தைக்காக நாகம்மை விசனப்படுகிறாள் என்பது பிள்ளைக்கு விளங்கவில்லை. காலார நடந்துவரலாம் என்றெண்ணி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். குடுகுடுப்பைக்காரனைக் கடந்து செல்லும்போது அவரது கவனம் முழுதும் அவன் மேலும் அவன் சொல்லும் வார்த்தைகள் மேலும் படிந்திருந்தது. அடுத்தவீட்டிலும் தவறாமல் சொன்னான், ‘நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா, குழந்தையாட்டம் தோள்ல ஒக்காந்து சொல்றா கேட்டுக்க.’

கிராமத்தில் காலை ஆனதற்கான அறிகுறியாக வெயிலைத்தவிர எதுவும் தெரியவில்லை. காந்தி சிலைக்குப் பின்னுள்ள தோட்டத்தில் பொது டிவி ஓடிக்கொண்டிருந்தது. சில பையன்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களின் ஆனந்தம் அவருக்குள் பெரிய சோகத்தை எழுப்பியது. மேலும் அங்கிருக்க விரும்பாமல், தாமிரபரணி செல்லும் மருத மரங்கள் அடங்கிய சாலையில் நடக்க ஆரம்பித்தார். மருத மரங்கள் அவருக்காகவே அசைந்து காற்றைத் தந்தது என்கிற கற்பனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மரம் தனக்காக அசைகிறது, ஆனால் வீடெங்கும் கூலி வேலை செய்து பிழைக்கும் சோலை அசையவில்லை. சோலையின் பிடிவாதம் இவ்வளவு இருக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை. புடைவையைக் கால் தெரிய உடுத்தி, இடுப்பு தெரிய கொசுவத்தைச் சொருகியிருக்கும் சோலையின் தோற்றத்தை நினைத்தாலே அவருக்கு நிலைகொள்ளாது. வேலை செய்ய வீட்டுக்கு ‘பொம்பள’ வருகிறாள் என நினைத்தவருக்கு சோலையைப் பார்த்த மாத்திரத்தில் பொறி கலங்கியது போலிருந்தது.

பூபதியாப்பிள்ளையின் பெண் மோகத்தை நாகம்மை அறிந்தே வைத்திருந்தாள். ‘நம்ம மாதிரி கெடயாது, இவிங்க சாதிய நம்பப்புடாதுல்லா. அதுக்குத்தான் தலதலயா அடிச்சுக்கிட்டேன். ‘செட்டி’லயே பாப்போம்னு’ என்றார் நாகம்மை ஆச்சியின் அண்ணன். ஒரே தெறிப்பாக பூபதியாப்பிள்ளை ‘ஊருக்குள்ள இவன் எத்தன கூத்தியா வெச்சிருக்கான்னு எனக்குத்தாம்ப்ல தெரியும்’ என்று சொல்லிவிட்டார். நாகம்மைக்கு இரண்டுமே முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் ‘ஆம்பளைங்கன்னா இப்படித்தாம்ல’ என்று பக்கத்துவீட்டு மாமி சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டாள். ‘ஒழுக்கம் பொம்பளைக்குத்தாம்பில வேணும்’ என்பார் பூபதியாப்பிள்ளை. அதைக் கேட்டு வாயொழுகச் சிரிப்பார்கள் சுற்றியிருப்பவர்கள்.

ஆற்றுக்குப் போகும் வழியில் பதநீர் விற்றுக்கொண்டிருந்தான் மருதன். அவருக்குத் தாகம் தலைக்கேறி இருந்தது. இதுவாவது தணியட்டும் என்கிற எண்ணத்தில் ‘பதநி ஊத்துல’ என்றார். மருதன் ஊர் விஷயங்களைப் பேசிக்கொண்டே பனை ஓலையை வாட்டமாக மடித்து அவரிடம் கொடுத்தான். “குறுக்கிப் பிடிச்சுக்கிடுங்க” என்றான். “ரொம்ப குறுக்கிட்டீங்கன்னா கிழிஞ்சிடும்” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு அவரைத் திட்டுவது போலிருந்தது. “தெரியும்ல, வியாக்யானம் வெக்காம ஊத்துடே” என்றார். நுங்கு வெட்டிப் போட்டான். தாகம் கொஞ்சம் அடங்கியது. குடித்து முடித்தவுடன் அதை வாங்கி தன் காலுக்கருகில் போட்டுக்கொண்டான். “நாய் நக்கக்கூடாது கேட்டேளா.” பின்பு தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, “தனிமரத்துக் கள்ளு இருக்கு வேணுமா அண்ணாச்சி” என்றான். பூபதியாப்பிள்ளை கொஞ்சம் யோசித்து, “இல்லடே வேணாம்” என்றார். யோசனையாக, “கொஞ்சம் வாயேண்டே நடப்போம்” என்றார். மருதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கருப்பந்துறைக்கு சமீபத்தில் போன முக்கியமானவர்களைக் கேட்டுவிட்டு, தன் போக்கில் செல்லும் பூபதியாப்பிள்ளை இன்று அவனை கூட நடக்க அழைப்பதை அவனால் நம்பவேமுடியவில்லை. அவன் தூரத்தில் இருந்த பையனை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கூட நடந்தான்.

“ஒடம்பெல்லாம் எரியுதுடே. அதான் பதனி குடிச்சேன். பதனி குளிர்ச்சிதான?”

“நேரத்த பொருத்துங்க அண்ணாச்சி. வெடியக் காலேல குடிச்சேள்ன்னா குளிர்ச்சி. இப்பம் குடிச்சேள்னா சூடு.”

“ஓ. இம்பிட்டு கத கெடக்கா. சரில. உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். ஒங்கப்பனுக்கு வசிய மருந்து செய்யத் தெரியும்ணு ஊருக்குள்ள பேச்சு கெடக்கே. அது நெசந்தானா?”

“எல்லாம் கதை அண்ணாச்சி. எங்க அம்மாளயே கடசி வரைக்கும் கூட வெச்சிக்கத் தெரியாம சீப்பட்டான். நீங்க வேற.”

“ஏ, பொம்பள சமாசாரத்துக்காக கேக்கலடே. பொதுவாவே வசியம் பத்திக் கேட்டேன்னு வெய்யி.”

“அட நீங்க வேற. வசியம்ன்றதே எதுக்குங்கீய? மேற்படிக்குத்தான்றது ஒரு கணக்கு.”

“அப்படீங்க?”

“பின்ன? என்ன விஷயம்னு சொல்லணும். அப்பத்தான் மேக்கொண்டு பேசமுடியும்.”

மெல்ல பெரிய மனிதனின் தோரணையை மருதன் உடுத்திக்கொண்டான். அதை பூபதியாப்பிள்ளை கவனித்தாலும் கவனிக்காதவாறு பதில் சொன்னார்.

“இம்புட்டுத்தானா? காசக் கொடுத்து வாட்டீன்னா வாரா. அதுக்கெதுக்கு வசியமருந்து எளவெல்லாம்?”

“அம்புட்டு சுளுவில்லடே. கிராதகி. ஆமா அவளுக்கு எம்பிட்டு வயசுல இருக்கும்? இருபத்தஞ்சு இருபத்தாறு இருக்குமா? நாஞ்சொல்றது புரியாமயா கெடக்கு? எளவு மானத்த விட்டுப்புட்டு வாயிலேயே சொல்லிட்டேங்கேன், ராத்திரி வாட்டீன்னு. என்னயே போயிட்டு வாவேங்களே, அத கொஞ்சம் யோசிச்சு பாருங்கேன்.”

“அப்படி சொல்லுதேளா. அதுவுஞ் சரிதான். கூலி வேலி செய்ற கழுத சிலிப்பிக்குதோ.”

“திட்டாதடே.”

பூபதியாப்பிள்ளை கொஞ்சம் வருத்தத்தோடு சொன்னதாகப்பட்டது மருதனுக்கு. லேசான நாணம் கூட இருந்ததோ? அவரைத் திட்டியிருந்தால்கூட தாங்கிக்கொண்டிருப்பார் என்று நினைத்தான் மருதன். இந்த மனிதரிடம் எப்படியும் பணம் தேறும் என்கிற நினைப்பு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கூடவே, சோலையிடம் சொல்லி அவளை எச்சரித்து வைக்கவும் முடிவு செய்தான்.

“அப்ப வசியமருந்துதான் காரியங்கேளா?”

“நா சொல்லலடே, உங்கிட்ட கேக்கேன். வசியமருந்துங்காங்களே, அது சரிப்படுமாங்கேன்.”

“எனக்கு அதப்பத்தி ரொம்ப தெரியாது கேட்டேளா. ஆனா ஒண்ணு, செய்யிறவன் செஞ்சான்னா அதுக்கு இணை இல்லன்னு கேட்டிருக்கேன். கூனியூர்ல ராமையா இருந்தாம்லா? ஞாபகம் இருக்கா? பைத்தியம் புடிச்சு அலைஞ்சு கெடந்து செத்தானே… அவங்கிட்டேர்ந்து வசிய மருந்த வெச்சித்தான் சொத்தப் பிடுங்கினதாப் பேச்சு.”

கொஞ்சம் பயந்த மாதிரி பிள்ளை “அப்படியா” என்றார்.

“என்ன இப்படி கேக்கிய. செஞ்ச பார்ட்டி பெரிய பார்ட்டி. சேர்மாதேவி மசானத்துக்குள்ள அலைவானே குடுகுடுப்பக்காரன். அவந்தான் மருந்து செஞ்சது. வெசயம் தெரிஞ்சவன்னு பேச்சு.”

“அப்படீங்க?”

“பின்ன? ராமையா பய எதிர்மருந்து வெக்கேன்னு யாரோ ஒருத்தன்கிட்ட வாங்கி வைக்க, என்னாச்சுங்கீய? பயித்தியம் பிடிச்சுட்டு. அதுக்குத்தான் சொல்றது வெசயம் தெரிஞ்சவனா இருக்கணும்னு.”

‘நம்ம ஊர்ல ஒரு குடுகுடுப்பைக்காரன் அலைதானே, அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ’ என்று கேட்க வந்ததை சட்டென அடக்கிக்கொண்டு, “சரி விடுல. நமக்கெதுக்கு இந்த வினையெல்லாம். வந்தா வாரா, வராட்டி போறா, நமக்கா நஷ்டம். காசு கொடுத்தா கோடி பொம்பளைங்க. என்னாங்க?” என்று சொல்லிவிட்டு, “நீ சோலியப் பாரு. நா அப்படியே வூட்டுக்குப் போறேன்” என்று சொல்லிக் கிளம்பினார். இப்படி திடீரென்று பிள்ளை வெட்டிக்கொண்டது மருதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை வைத்து கொஞ்சம் பணம் கறக்கலாம் என்று நினைத்திருந்தது ஏமாற்றமாகிவிட்டது.

பூபதியாப்பிள்ளை வேகவேகமாக தெருவுக்குச் சென்று அங்கு குடுகுடுப்பைக்காரன் இருக்கிறானா என்று பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. வசிய மருந்தை குடுகுடுப்பைக்காரன் செய்வான் என்று ஏன் தனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டது என்பது குறித்து வருந்தினார். வேகவேகமாக நடந்து வந்ததில் அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது. நாற்பது வயதில் இந்த அலைச்சல் தேவையா என்று தோன்றியது. தேவைதான் என்று உடனே முடிவுக்கு வந்தார்.

ரவில் அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிப்பதும் மூத்திரம் கழிக்கப்போவதுமாக இருந்த அவரைப் பார்த்து நாகம்மைக்கு பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் “ஆம்பிளைங்க” என்று முணுமுணுத்துக்கொண்டே படுத்துக்கிடந்தாள். பெருமூச்சு விட்டாள். எட்டு முழப்புடைவையை உடலெங்கும் சுற்றி, வியர்வையோடு படுத்துக் கிடக்கும் நாகம்மையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது பூபதியாப்பிள்ளைக்கு. அவள் புடைவையை ஒரு அவசரத்திற்கு அவிழ்க்கக்கூட முடியாது என்பதை நினைக்கும்போது அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவளது வியர்வையும் பெருமூச்சும் நினைவுக்கு வரும்போதே கோபம் வரும் பிள்ளைக்கு. ‘என்னத்துக்கு இம்புட்டு பெருமூச்சு விடுதா ஒரு பொம்பளை?’ நாகம்மை உறங்கும்வரை காத்திருந்துவிட்டு, நடுச்சாமம் தாண்டிய பின்பு சத்தமில்லாமல் வெளியில் வந்தார்.

நள்ளிரவுக்குப் பின் தெருவைப் பார்த்ததே இல்லை என்று உரைத்தது அவருக்கு. தூரத்தில் படுத்துக்கிடந்த இரண்டு நாய்கள் அவரைத் தலைதூக்கிப் பார்த்தன. பின்பு படுத்துக்கொண்டு விட்டன. “நாய்க்குக்கூட சட்ட இல்லியோ” என்று நினைத்துக்கொண்டு, சத்தமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனார். மருதமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன. ‘ரெண்டு பக்கமும் முனிசிபாலிட்டி காரனுவோ லைட்டு போட்டு விட்டானுவோ’ என்று நினைத்துக்கொண்டார். கருப்பந்துறைக்குள் நுழையுமிடத்தில் வெட்டியான் உட்கார்ந்திருந்தான். அவரைப் பார்த்து “எவம்லே இங்க வாரது? அதுவும் உசுரோட” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “குடிகாரத் தாயோளி, செருப்பால அடிப்பேன். கொஞ்சம் தண்ணி உள்ள போய்ட்டா மருவாதி வாயில வராதோ” என்றார். வெட்டியான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, “சொல்லுங்க சாமி” என்றான். எப்போது வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவான் போல இருந்தது. “ஏல, இங்க எங்கல குடுகுடுப்பைக்காரன் இருக்கான்?” என்றார். வெட்டியான் “என்னது” என்றான். மீண்டும் கேட்டார் பிள்ளை. அவன் மீண்டும் என்னது என்றான். பிள்ளைக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. ‘சரி போ, நா போய் தேடிக்கிறேன்” என்றார். அவன் குடிபோதையில் “இங்க எதுக்கு குடுகுடுப்பக்காரன் வாரான்? சொன்னா செருப்பால அடிப்பேம்பான். ஏல எரிக்கிற இடத்துல குடுகுடுப்பக்காரன் வருவானால” என்று சொல்லி தொப்பென்று கீழே விழுந்தான். அவனை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, மசானத்தைத் தாண்டி நடந்தார். தூரத்தில் ஒரு குடிசை கண்ணுக்குப் பட்டது. குடுகுடுப்பைக்காரன் அங்குதான் இருக்கவேண்டும் என நினைத்து நடையை எட்டிப்போட்டார்.

தூரத்தில் ஏதோ ஒரு உருவம் தன் குடிசையை நோக்கி வருவதைப் பார்த்த குடுகுடுப்பைக்காரன் என்னென்னவோ திட்டினான். வாயில் வராத வார்த்தைகளையெல்லாம் சொல்லி “தூ தூ” என்று துப்பினான். சைத்தான் சைத்தான் என்றான். கொஞ்சமும் பயப்படாமல் உருவம் பக்கத்தில் வரவும் அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. பிள்ளை குடிசைக்கருகில் வரவும், குடிசையிலிருந்து கொலுசுச் சத்தத்தோடு ஒரு உருவம் முக்காடு போட்டுக்கொண்டு ஓடியது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“எலே ஊரு விட்டு பொழக்க வந்த பய யார நாயிங்க.”

கண்கள் இரண்டையும் உருட்டி, என்ன சொல்வதென்று தெரியாமல் வந்தவர் யாரென்று புரியாமல் தன் புருவங்களைச் சுருக்கி ஞாபக அடுக்குகளில் தேடினான் குடுகுடுப்பைக்காரன். தான் குடித்திருப்பதால்தான் அவர் யாரெனத் தெரியவில்லை என நினைத்தான்.

‘என்ன முழிக்க. நாந்தாம்ல முதத்தெரு பண்ணையாரு.”

“இந்தக்காலத்துல பண்ணையாரா?”

“குடிச்சுக்கெடந்தாலும் நக்கல் போலயோ. சரில. கொஞ்சம் பேசணும்னு வந்தேன்.”

நடுஇரவில் போதையேற்றிக்கொண்டு பெண் மீது பாயக்கிடந்தவன் சாத்தான் என நினைத்து அலறியதில் கொஞ்சம் போதை இறங்கியிருந்தது. பண்ணையார், பேசணும் என்கிற வார்த்தைகள் குளறல் போல அவன் நெஞ்சுள் இறங்க, இன்னும் கொஞ்சம் போதை இறங்கி, “இதான் நேரமா சாமி” என்றான்.

“ஊர் சுத்துற ஒன்ன எங்கல பிடிக்க? ஒம் வீடு இங்கதாம்ல கெடக்கு? அப்ப இங்கத்தான் வருவான்.”

அவன் பெண் ஓடிய திசையில் ஏக்கமாகப் பார்த்துவிட்டு, “சொல்லுங்க” என்றான்.

“ஒம் பேரு என்னல?”

“கம்மாளனுங்க.”

“வசிய மருத்து செய்யத் தெரியுமால ஒனக்கு?”

பக்கத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலை இரண்டு தடவை தட்டிவிட்டு அதில் உட்கார்ந்துகொண்டார் பிள்ளை. ஒருவன் தொடர்ந்து படுப்பதனால் ஏற்பட்ட கயிற்றுக்குழியில் சட்டென அவரது உருவம் அமிழ்ந்தது. இதில் எப்படி இன்னொரு பெண்ணோடு படுப்பான் என யோசித்தார்.

“என்னத்தல பதில காணோம்?”

“வயசுக்காலத்துல செஞ்சிருக்கேன். இப்பல்லாம் எவன் கேக்கான் அதை? ஊரு ஊரா பிச்ச எடுத்து பொழப்ப ஓட்டிக்கிட்டு கெடக்கோம்.”

“ஒஞ்சோகத்த இப்ப அளக்காத. நா ஒனக்கு வேண்டிய காசு தாரேன். வசிய மருந்து செய்வியால?”

காசு என்றதும் அவன் கொஞ்சம் யோசித்தான். நடு ராத்திரியில் வசிய மருந்த்துக்கு அலையும் இந்தக் கிறுக்கனிடம் இருந்து நிறைய கறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, “அதுக்கு ரொம்ப செலவாகும் சாமி.”

“செலவப்பத்தி கவலப்படாத. நான் பாத்துக்கிடுதேன். ஆனா ஒண்ணு. வசிய மருந்து வேல செய்யணும்.”

“அது பெரிய காரியமில்ல சாமி. வசிய மருந்து நா செஞ்சா சக்கம்மாவே ஒனக்குத் தொணயா வந்து நிப்பா.”

“ஏல, காரியமாத்தான் சொல்லுதியால? இல்ல காசக் கறந்துப்பிட்டு பல்லக்காட்டுவியா?”

“என்ன சாமி இப்படி சொல்லிட்டிய? என் வாக்கு பலிக்காம போயிருக்கா? வசிய மருந்தோட வசிய மந்திரமும் இருக்கு. ரெண்டயும் ஒனக்கு தாரேன். எப்பேற்பட்ட பொம்பளையும் பின்னாடி நடப்பாங்கேன்.”

பூபதியாப்பிள்ளை நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, “பொம்பளைக்கில்லல. ஒருத்தன் நம்மகிட்ட வாலாட்டுதான். அவன நம்ம காலச் சுத்தி நாய் மாதிரி வரவைக்கணும். அதுக்குத்தான்” என்றார்.

வெற்றிலை போட்டுப் போட்டுச் சிவந்த நாக்கையும் காரை படிந்த பல்லையும் காட்டிக்கொண்டு, “நம்பிட்டேன் சாமி” என்றான். முன்பணமாக ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார். “சாமி துட்டு எப்படியும் அஞ்சு ஆறு ஆயிடும்.”

“அவ்ளோ ஆகுமால?”

“பின்ன என்ன நினைக்கிய? என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?” யாருக்கும் புரியாத வகையில் ராகத்தோடு இழுத்து கம்மாளன் சொல்ல ஆரம்பித்தான். “சுட்டி வேர் நின்று சிணுங்கி நிலம் பறண்டி நாவடிக்கி கொன்றை வேர் கொல்லங்க கோவைக் கிழங்கு வென்றி தரும் ஆனை வணங்கி அழிஞ்சில் முறை மசக்கி பூனை வணங்கி புழுக்கை வேர் ஏனையுள்ள சீதேவியார் செங்கழுநீர் திகைப்பூடு மாதிகராமான வழக்குவெல்லி பாதிரிவேர் ஆடையொட்டியோடே சுவரொட்டி ஆன தண்டைப் பூடு சுற்றி மேற்படர்ந்த புல்லுருவி மூடு கட்டும்…..”

“எல என்ன சொல்லுத நீ? ஒண்ணும் வெளங்கலியே…”

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கம்மாளன் கண்ணை மூடிக்கொண்டு தீவிரமாக அவன் வாய் நாலாத்திசையும் அசைய கர்ண கொடூரமான குரலில் தொடர்ந்தான்.

“வெட்டி வேர் பூலாங்கிழக்கு லாமிச்சம்வேர் தட்டிலாக் கொண்டோ சனைக் கிழங்கு கிட்டும் கடை மருந்து குங்குமப்பூ கஸ்தூரி மஞ்சள் சடை மாஞ்சி நாகன மஞ்சட்டி அடைவுபெறு செங்கழுநீர்க் கொட்டமொடு தேவதாரம் அரத்தை தங்கு பச்சைக் கற்பூரம் சாதிக்காய் பொங்கும் அவின் புழுகு சட்டமிவை அத்தனையும் கூட்டிக் கவின் பெற தூளாக்கிக் கலந்து குவிந்ததொரு…”

“ஏல நிறுத்துங்கேம்லா” என்று அவன் சத்தத்தை மீறி அலறினார் பிள்ளை. பெரும் தவம் கலைக்கப்பட்ட முனிவனைப் போல கம்மாளன் கண்ணைத் திறந்து பார்த்தான்.

“இம்புட்டு விஷயம் இருக்கு. இதென்னா சுளுவா சேக்க?”

“எல்லாத்தயும் கைல வெச்சிருக்க மாட்டியா? சரி, செஞ்சுக் குடு. இத என்னல செய்யணும்? சாப்பாட்டுல சேத்து சாப்பிட்டா போதுமால?”

கம்மாளன் மசானம் அதிரச் சிரித்தான். மீண்டும் கண்ணை மூடி, கன்னக்கதுப்பு வரிகள் விரிந்து சுருங்க, அவனுக்கே உரிய குரலில் ராகத்தோடு தொடர்ந்தான்.

“புற்றுப் பெருங்கரையான் புன்னை நிணம் பாம்பு விஷம் வற்றிக் கிடந்த மரவட்டை முற்றிய செவ்வரணையின் கொழுப்பு சேரவே அம்மியிலிட்டு” என்று சொல்லி நிறுத்தி, “திம்பேளா?” என்றான். அவருக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. “ஏல ஒனக்கு வசிய மருந்து நெசமா தெரியுமால? இல்ல வாந்தி மருந்து செய்தியா? ஒண்ண நம்பலாமால? காச வாங்கிட்டு ஏமாத்திப்புடமாட்டியே?” கம்மாளன் “பின்ன, வேல எளப்பம்னு நெனச்சேளா?” என்றான். “சரி நாளக்கித் தருவியா” என்றார். காத்திருந்தது போல கண்ணை மூடி பல்லைக் கடித்து கண்களை உருட்டி மீண்டும் பாடத் தொடங்கினான்.

“ஒவ்வொரு நாளைக்கு ஒரு சாமம் எவ்வமற கூட்டி ஒரு மாதம் அரைத்து குணம் பார்த்து வாட்டமில்லா செண்பகப்பூ மல்லிகைப்பூ சூட்டுகின்ற முல்லைப்பூ ஓலைப்பூ முற்றுமிதி பாகல் பூ வில்லைப் பூ வாசமிகவூட்டி வல்லதொரு காடேறி ஒன்பதுநாள் காளி சிவம் பத்துநாள் ஈடாம் அகோரம் இருபதுநாள் நாடுகின்ற மோகினி நாற்பது நாள் முற்றும் உருவேற்றி…”

இடையிடையில் ‘ஏல நிறுத்துங்கேம்லா’ என்றார் பிள்ளை. கம்மாளன் நிறுத்தவில்லை. பெரும் காற்றடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அவன் பாடியதை நிறுத்தியபோது. “வெசயம் தெரிஞ்சவந்தாம் போல இருக்கு. என்னமோ நெனச்சிப்பிட்டோ ம்” என்று நினைத்துக்கொண்டு, “அப்ப மூணு நாலு மாசம் ஆகுங்க?” கம்மாளன் தலையாட்டினான்.

“சரில, பாட்டெல்லாம் சொல்லி காசப் பிடுங்கலாம்னு பாக்காத. வெசயம் நடக்கணும். அம்புட்டுதான்.”

“சாமி, என் தோள்ல பாரு சாமி. ஒங்கண்ணுக்குத் தெரியாது. என்னாங்க? சக்கமா சாமி, கொளந்தயா ஒக்காந்து கெடக்கா. குறி சொல்றவன் வாயி சாமி. ச்ரவன பிசாசினி மந்திரம்னு கேட்டிருக்கியா? சக்கம்மா கொளந்தயாட்டம் ஒக்காந்து குறி சொல்வா. பேச்ச மாத்தினோம் பிசாசினியாயிடுவா.”

“எனக்கெங்க ஒன் சக்கம்மாவும் தெரியுது பிசாசும் தெரியுது. என்னத்தயோ செய்யி.” போகும்போது, கம்மாளன் தனக்கு நிஜமாக வசிய மருந்து தயாரிக்கத் தெரியும் என்ற நம்பிக்கை கொள்ளுமளவுக்கு “ஏல, வெசயம் தெரிஞ்சவம்தாம்லே நீயி” என்று சொல்லிவிட்டுப் போனார். கம்மாளன் மௌனமாக அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பூபதியாப்பிள்ளையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தன. நாகம்மைக்கு ரொம்ப யோசனையாக இருந்தது. பின்னர் ‘ஆம்பிளைங்க’ என்று நினைத்துக்கொண்டு அவரைப் பற்றி யோசிப்பதையே முற்றிலுமாக நிறுத்தினாள். பிள்ளை அர்த்த ராத்திரியில் குளித்தார். தனியறையில் உட்கார்ந்து விடாது ஏதோ மந்திரம் ஜபித்தார். அந்த அறைக்குள் யாரையும் வரக்கூடாது என்று சொல்லி, அவரே பெருக்கி அவரே மொழுகினார். அவரது கையில் வசிய மந்திரம் எழுதிய காகிதமும் வசிய மந்திர யந்திரமும் எப்போதும் பத்திரமாக இருந்தன. “இந்த மந்திரத்த 1008 தடவ சொல்லி, யந்திரத்த யார்கிட்ட கொடுக்கீயளோ அவங்க ஒங்களுக்கு வசியம்தான், சக்கம்மா வாக்கு இது. தப்பாதுங்கேன்.” அந்த நாளுக்காகக் காத்திருப்பதில் பெரும் ஆனந்தமும் சந்தோஷமும் அடைந்தார் பிள்ளை. ஐந்து வருடங்களைத் தள்ளி அவருக்கு நான்கு மாதத்தைத் தள்ளுவது பெரும் பாடாக இருந்தது. அன்று இரவு கம்மாளன் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் வசிய மருந்தை வைத்து சோலையை அடைந்துவிடலாம் என்கிற நினைப்பே அவருக்கு சந்தோஷமாக இருந்தது. வசிய மருந்தோ மந்திரமோ ஏதாகிலும் ஒன்று சரிப்பட்டு வரும் என்று நம்பினார். விடாமல் மந்திரத்தை ஜெபித்தார்.

“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”

ருதன் சோலையைச் சென்று பார்த்தான். அதுவரை அவளது உடல்வாகு பற்றி அவன் தனியாக யோசித்ததில்லை. ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தபோது ஏன் பூபதியாப்பிள்ளை கிடந்து அலைகிறார் என்பது புரிந்தது. அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.

“நா கேக்கணும்னு நினைச்சேன். பண்ணையார்னு சொல்லிட்டு திரியுதானே பூபதியாப்பிள்ள, அவன் எப்படி ஆளுன்னு நீ நெனைக்கட்டி?”

“வாட்டி போட்டின்ன பல்லு பேந்திடும்.”

பூபதியாப்பிள்ளை சொல்வதுபோல் இவளிடம் சீக்கிரத்தில் காரியம் நடக்காது என்பது புரிந்தது. மெல்ல சுதாரித்துக்கொண்டு,

“அட தங்கச்சிய கூப்பிட்ட மாதிரின்னு வெச்சுக்கோ.”

“இப்ப எதுக்கு ஒனக்கு அவசியமில்லாத கேள்வி?”

“இல்ல, கொஞ்ச காலமா பிள்ளைவாள் வசிய மருந்து அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரியறதா கேள்வி. நடுசாமத்துல கருப்பந்துறைக்கு வாரதும் குடுகுடுப்பைக்காரனோட கும்மாளம் அடிக்கிறதும்… கேள்விப்பட்டியா?”

“ஊர்ல எவன் எங்க போறான்னு பாக்க சோலி எனக்கெதுக்குங்கீரு?”

“அதில்ல, வசிய மருந்தே உனக்காகத்தான்னு பேச்சு.”

சோலைக்குக் கொஞ்சம் புரியத் தொடங்கியது. பூபதியாப்பிள்ளையின் உருளும் கண்களும் ஒருநாள் இரவு சம்பந்தமே இல்லாமல் வீட்டுவேலையாக வரச் சொன்னதும் நினைவுக்கு வந்தன.

“எவ சொன்னா? நாக்க அறுத்துப் போடுவேன்னு சொல்லு” என்று சொல்லி விருட்டென்று நடக்கத் தொடங்கினாள். அன்று எப்போதும்போல் நாகம்மை ஆச்சி விட்டில் வேலைக்குப் போனாள். நாகம்மை எதையும் சொல்லாமல் ஏனங்களையெல்லாம் போட்டுவிட்டு, கொல்லைப்புறத்தில் சென்று அமர்ந்துவிட்டு முந்தானையால் விசிறிக்கொண்டாள். வீடெங்கும் நோட்டம் விட்டாள் சோலை. பிள்ளைவாளைக் காணவில்லை. துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யும் சாக்கில் அவரது அறைக்குள் நுழைந்தாள். அறையின் சுவரில் ஒரு யந்திரத்தின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த அறையில் அதற்கு முன்னர் அதைப் பார்த்த நினைவில்லை. கொஞ்ச நாளாகவே நாகம்மை ஆச்சி அவளை அந்த அறையைப் பெருக்க விடுவதில்லை என்பதை வைத்தும் பூபதியாப்பிள்ளையின் மேயும் கண்களை வைத்தும் சில விஷயங்களை யூகித்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடுக்காமல் இருக்க நினைத்திருந்தாள். ‘ஒரு பொம்பளைக்காக ஒரு ஆம்பிளை இம்புட்டு செய்வானா?’ யோசனையாக இருந்தது சோலைக்கு. பூபதியாப்பிள்ளையை நினைக்கவே பாவமாக இருந்தது. அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து தலை திருத்திக்கொண்டாள்.

ம்மாளன் நெருப்பு வெளிச்சத்தில், தன் கையிலிருக்கும் வசிய மருத்தைக் காண்பித்துச் சத்தமாகச் சொன்னான். “சாதாரணப்பட்ட மருந்தில்ல சாமி. முன்னோருங்க சொன்னதையெல்லாம் ஒண்ணுவிடாம போட்டு பெசலா செஞ்சது. வத்திக் கெடக்குற மரவட்டைக்கு எம்பிட்டு அலைஞ்சேன்னீங்க? சும்மா சொல்லப்பிடாது, அதிர்ஷ்டம் வேணும் சாமி. ஒமக்கு இருக்கு அது. இப்போ இதுக்கு மயங்காதவ எவ இருக்காங்கேன்? இத கொஞ்சம் மறச்சி வெச்சிக்கிட்டு அவகிட்ட போய் நில்லு. அப்புறம் பாரு சாமி சேதிய.”

“பொம்பளைக்கில்லன்னேம்லல?”

பற்கள் தெரிய “நம்பிட்டேன்” என்றான். கைகள் நடுங்க, மிகுந்த நம்பிக்கையுடன் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியபடி, உதடுகள் வசிய மந்திரத்தை ஜெபிக்க, அவன் கொடுத்த வசிய மருந்தை வாங்கினார்.

“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”

-முற்றும்.

நன்றி: யுகமாயினி, ஏப்ரல் 2008

Share