Archive for திரை

பேட்ட

* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.

* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.

* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.

* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.

* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.

* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.

* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.

* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.

* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.

* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.

” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.

இனி அரசியல்:

விஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.

ரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.

தமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.

Share

சென்று வருக 2018 (திரைப்படப் பதிவு)

சிறந்த திரைப்படம்: வடசென்னை

முக்கியமான திரைப்படங்கள்: பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை

சிறந்த நடிகர்: யாருமில்லை

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (2.0)

சிறந்த இசையமைப்பாளர்: செக்கச் சிவந்த வானம் (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த பாடல்கள்: நீல மலைச்சாரல் (செக்கச் சிவந்த வானம்), யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா (சந்தோஷ் நாராயண், காலா), சி ஈ ஓ இன் தி ஹவுஸ் (சர்க்கார்),

நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: அசுரவதம், ப்யார் ப்ரேமா காதல், டிக் டிக் டிக்.

சிறந்த குழந்தைகள் திரைப்படம்: 2.0

சிறந்த வணிகத் திரைப்படம்: ராட்சசன்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: 2.0

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோலமாவு கோகிலா)

சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை

சிறந்த ஒளிப்பதிவாளர்: தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: கலகலப்பு 2, சர்க்கார், மெர்க்குரி, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், காற்றின் மொழி, படைவீரன்

படு மோசமான படம்: கஜினிகாந்த்

அளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட திரைப்படம்: 96

இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தடக் (ஹிந்தி), ஹிச்கி (ஹிந்தி), துமாரி சுலு (ஹிந்தி)

Share

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share

விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.

தொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.

தீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.

அந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.

விஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.

Share

சர்கார் (தமிழ்)

சர்க்கார் –

முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது.

மற்றபடி

வலுவே இல்லாத கதை. அதனால் எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அலைபாயும் திரைக்கதை.

அரசியல் ஒரு கதையென்றால், கூடவே நடிகர் விஜய்யின் முதல்வர் கனவு இன்னொரு கதை. இதனால் தமிழ்நாட்டில் நடந்த எல்லாவற்றையும் எங்கேயாவது எப்படியாவது தூவ வேண்டிய நிர்ப்பந்தம். கந்துவட்டி, ஜல்லிக்கட்டு, நீயுட்ரினோ என வாயில் வந்ததையெல்லாம் யார் யாரோ சொல்கிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு முன்பு பதவி ஏற்பு ரத்து, ஒரு ஓட்டு கள்ள ஓட்டானதால் அதற்கு மறு ஓட்டு உரிமை தரப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மறுதேர்தல் என்றெல்லாம் நம்பவே முடியாத கதை. முதல்வனும் நம்பமுடியாத கதைதான். ஆனால் அதில் தெளிவான ஓட்டமும் திரைக்கதையும் இருந்தன. முதல்வன் போல ஒரு படம் எடுப்பது அத்தனை எளிதில்லை என்று நிரூபிக்கிறது சர்கார். கூடவே விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்துகொண்டதால் தெலுங்குப் படம் போல போகிறது.

இதற்கிடையில் விஜய்யின் கமர்ஷியல் ஹீரோ பிம்பத்தையும் கட்டிக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. குப்பத்துக்குப் போய் பேசி மீனவன் என்கிறார். உடனே நம்பி ஓடி வருகிறார்கள். (அதிலும் அந்த தக்காளி விளக்கம் ஐயையோ.) ஆளும் கட்சி கூட்டத்துக்குப் போயே பேசுகிறார். நாம் திடீரெனக் கனவு காண்போமல்லவா, ஜெயலலிதா நாளைக்கே ஜெயிலுக்கு போனால், கருணாநிதி கைதானால் என்று, அதை அத்தனையும் விஜய் செய்கிறார். ஆளும்கட்சியின் முதல்வர் மரணம் அடைந்தாலும் 15 நாளில் தேர்தல் நடக்கிறது. படத்தின் போக்குக்கு இது முக்கியம் இல்லைதான். ஆனால் இப்படிப் பல நெருடல்கள்.

ஒரு ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டால் பேலட் ஓட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்பது விதி. தேர்தலின் முடிவில் குழப்பம் இருந்தால் தேவைப்பட்டால் மட்டுமே அந்த பேலட் ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். விஜய் பேலட் ஓட்டும் போடுவதில்லை என்பதால் என்றாரம்பித்து என்ன என்னவோ செய்து… முடியல. அதிலும் அந்த கொடுமையான க்ளைமாக்ஸ், கற்பனை வறட்சி. ஓட்டுப் பதிவு தொடங்கி பாதி நேரம் பதிவு கழிந்தும்… ரொம்ப ஓவருங்க இதெல்லாம். தாங்கமுடியலை.

பல முக்கியமான காட்சிகளில் விஜய் என்னவோ போல் பேசி வெறுப்பேற்றுகிறார். அதிலும் ஆளும்கட்சி அலுவலகத்துக்குள்ளே போகும் காட்சி (ஆமாம், இப்படி ஒரு காட்சி!) கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்போதே விஜய் அடிதடியில் இறங்கி அக்காட்சியை காலி செய்கிறார். சாதாரணமாகப் பேசுவதே இல்லை. மீண்டும் தேர்தல் என்பதைக் கூட அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பொங்க மட்டுமே பேசுகிறார் விஜய். இப்படியே போனால் பிற்கால சிவாஜியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே காட்சி, வரலட்சுமி பழ.கருப்பையாவுக்கு மருந்து கொடுக்கும் காட்சிதான். அதற்குப் பின்னர் தெலுங்குப் படமாகிவிட்டது.

வலுவற்ற கதை, வலுவற்ற திரைக்கதை, திக்கின்றி அலையும் காட்சிகள். சீரியஸான காட்சியில் சொதப்பும் விஜய். இதுதான் சர்க்கார்.

Share

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம் என்றொரு கொடுமையைப் பார்த்தேன். தலையெழுத்து. ஒரு காட்சி கூடவா நல்லா இருக்காது? மாயாண்டி குடும்பத்தார் போன்ற இன்னொரு‌ கொடுமை இது. இதில் விவசாயி காளை ஆணவக் கொலை என்றெல்லாம் அங்கங்கே தூவல் வேறு. ஜாதியைத் திட்டிக்கொண்டே அவங்களும் பெரிய தலைக்கட்டு என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். வளவள என்று காது தொங்கும் அளவுக்கு வசனம். கண்றாவி.

Share

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2
 
நாம் நம் ஊரில் சில தையல்காரர்களைப் பார்த்திருப்போம் அவர்கள் தங்களிடம் மீதமுள்ள துணிகளை வைத்து ஒரு சட்டையைத் தைத்துவிடுவார்கள். அது நன்றாகவும் இருக்காது, அதைத் தூக்கி எறியவும் முடியாது. அதேபோல் கமலஹாசன் தன்னிடம் ஏற்கெனவே இருந்த ஒரு படத்தின் மீதக்காட்சிகளிலிருந்து புதியதாக ஒரு படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டுவிட்டார். அது ஒரு படமாகவும் இல்லாமல் படம் இல்லாததாகவும் இல்லாமல் ஏதோ ஒன்றாக உருவாகி இருக்கிறது.
 
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். என்னவெல்லாமோ காட்சிகள் திடீர் திடீரென வருகின்றன. தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அக்காட்சி முடிவடைந்ததும் நாம் ஏதேனும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இதற்கிடையில் கமலின் வழக்கம்போன்ற மேதாவித்தனமான வசனங்கள் வேறு. புரியவில்லை என்பதன் அர்த்தம், கமல் எப்போதுமே 20 வருடங்களுக்கு முன்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் வகையிலானது அல்ல. தெளிவின்மை தரும் புரிதலின்மை.
 
ஒரு காட்சி ஏன் வருகிறது, அது சொல்ல வரும் செய்தி என்ன என்று எதுவும் யாருக்கும் புரியாது. முதலில் இருந்து கடைசி வரை ஒரே இடத்திலேயே கதை அப்படியே நிற்கிறது. காட்சிகள் தொடர்பின்றி நகர்கின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யாரோ யாரோஒருவரைக் கொன்று கொண்டே இருக்கிறார்கள். யார் செத்தால் நமக்கென்ன என்ற மனப்பான்மையில் நாம் அமர்ந்திருக்கிறோம். முதல் பாகத்தில் தப்பித்துப்போன ராகுல்போஸ் இடைவேளைக்குப் பிறகுதான் தலையைக் காண்பிக்கிறார். இப்படத்தில் இவருக்கு எவ்வித ஸ்கோப்பும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலான காட்சிகள்தான் படம் நெடுகிலும் பெரும்பாலும் வருகின்றன.
 
64 வயது கமலுக்கு இரண்டு பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொண்டும் பேசும் காட்சிகள் பெரும் அலுப்பைத் தருகின்றன. எரிச்சலை அடக்கமுடியவில்லை. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது. கமலின் மனைவி அவரை ஏன் அன்றுதான் கல்யாணம் ஆன ஒருவர் போல உருகுகிறார் என்பதெல்லாம் ஒரு மண்ணும் புரியவில்லை. வசீம் என்று அழைக்கிறார். கொடுமை.
 
கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது. அந்த 64 என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 1947ல் சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிடுகிறது என்றால் 64 என்பது இடிக்கிறது. நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒருவேளை 2011ல் நடக்கும் கதையா? இதை விளக்க கமல் இன்னொரு படம் எடுத்துத் தொலைக்காமல் இருக்கவேண்டும்.
 
முதல் பாகத்தில் மிகத் தெளிவாக, இந்திய முஸ்லீம் நல்லவன் என்கிற அடையாளத்தைச் சொல்லி இருந்தால் படத்திற்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, இப்படத்தில் இந்திய முஸ்லிம்களை வெளிப்படையாக உயர்த்தும் காட்சிகள் மிக தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்தத் தெளிவு முதல் படத்தில் கிடைத்த அடியில் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 
பிராமணர்கள் மேல் இருக்கும் எரிச்சல் கமலுக்கு இன்னும் தீரவில்லை. படத்தில் இந்தியாவைக் காட்டிக் கொடுப்பவர் ஒருவர் பிராமணர். அவர் பெயர் ஐயர் என்றே வருகிறது. அதுமட்டுமின்றி வகைதொகை இல்லாமல் எல்லோரும் பிராமண பாஷையில் பேசிக் கொல்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் எட்டிப் பார்த்து ரூம் போட உதவி செய்யும் ஒரு நபர் கூட பிராமண பாஷையில் பேசுகிறார். இது போதாதென்று திடீரென ஆண்ட்ரியாவும் பிராமண பாஷை பேசுகிறார். நல்லைவேளை, அடுத்த காட்சியில் கொல்லப்பட்டுவிடுகிறார். முஸ்லிம்களை வம்பிக்கிழுத்தால், அது இந்திய முஸ்லிம் உலக முஸ்லிம் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, கொமட்டிலேயே கும்மாங்குத்தாகக் கொண்டு வரும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட கமல், பிராமணர்கள்தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருப்பது பெரிதும் வரவேற்கப்படவேண்டியது. அரசியல் செய்ய உயிர் வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்று சுருங்கச் சொல்லினர்.
 
படத்தில் பக்கத்து வீட்டுக்குப் போய் வரும் தோரணையில் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். கமல் நினைத்தால் கண்மூடி ஆப்கானிஸ்தான் போகிறார். அடுத்த காட்சியில் அம்மாவைப் பார்க்க டெல்லி வருகிறார். அவரிடம் தான் மகன் என்று சொல்லத் தேவையில்லை எனச் சொல்லிவிடுகிறார். காலில் விழுகிறார். பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடாய்ப்படுத்துகிறார்கள். அவர் மதமென்ன என்று யோசிக்கும்போதே கமல் வேறு நாட்டுக்குப் போய்விடுகிறார். கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாரா டெல்லியில் இருக்கிறாரா ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா பாகிஸ்தானில் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது.
 
கமலுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் அழகாக இருக்கிறார், நடிக்காமல் இருக்கும்போது மட்டும். பிரச்சினை என்னவென்றால் படம் முழுக்க ஏதாவது நடித்துக் கொண்டே இருக்கிறார். பார்த்து பார்த்து புளித்து போன நடிப்பு.
 
பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும். பல காட்சிகள் ஆங்கிலப்படத்தின் தரத்துடன் இருக்கின்றன – பார்க்க மட்டும். இதற்கு இணையாக பல காட்சிகள் தரமற்று இருக்கின்றன.
 
படத்தில் சிரிக்க சீரியஸான பல காட்சிகள் உண்டு என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி சிரிப்பின் உச்சம். 40 நொடியில் கமல் குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்து வில்லனையும் கொன்று தன் மனைவி கொல்லப்படுவதற்கு முன்னால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வரும் காட்சி, வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அதிலும், உன் கடவுளே உன்னைக் கொல்லும் என்று சொல்லவும், சாகக் கிடக்கும் ஒரு அல்லக்கை கமலைப் பார்த்து சைகையில் கேட்க, கமல் அதை மறுக்க, இவர் ஊதறும் அவ ஆடறதுக்கும் இணையான காட்சி.
 
ஒரு திரைப்படம் எடுத்து முடித்ததும் அதை எப்படி தயாரித்தோம் என்று கடைசியில் ஓட விடுவார்கள். பெரிதினும் பெரிது கேள் என்ற எண்ணத்தில் கமல் அதையே ஒரு திரைப்படமாக்கத் துணிந்து விட்டார். விஸ்வரூபம் பாகம் 1 படத்தித்துக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் படத்தை கமல் தவிர்த்திருக்க வேண்டும்.
 
பின்குறிப்பு: எப்போதும் ஒருத்தன் என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். தம்பி போல அவன். ஒருநாள் திடீரென்று பெயர் சொல்லி அழைத்தான். நீ போ என்று சொல்ல ஆரம்பித்தான். என் மனதுக்குள் மலைபோல கேள்விகள். வேறொன்றுமில்லை. உத்தமவில்லன் வரை ஜிப்ரான் என்றறியப்பட்ட இசையமைப்பாளர் இப்படத்தில் முகம்மது ஜிப்ரான் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள். வரும்போதே ஜோசப் விஜய் ஆகவும் முகமது ஜிப்ரான் ஆகவும் வந்து விடுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.
Share