Archive for திரை

பிக்பாஸ் மோகன்லால்

Image result for biggboss malayalam

மலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நேற்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதைப் பற்றி எழுதி எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சிறுகுறிப்பாவது எழுதாமல் இருப்பது பாவம் என்பதால்…

தமிழைப் போலவே மலையாள பிக்பாஸும் பெரிய அறுவை. தமிழைப் போல அல்லாமல், தினமும் டாஸ்க். டாஸ்க் இல்லாமல் செல்ஃப் பிக்கப் எடுக்கவே இல்லை. தமிழிலும் முதல் பிக்பாக்ஸ் இப்படித்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் ஓவியா என்றொரு புயல் மையம் கொண்டதால், பிக்பாஸுக்கு வேலை குறைந்துபோய்விட்டது. ஓவியாவே பிக்பாஸுக்குப் பதில் நிஜமான டாஸ்க் பலவற்றை அள்ளி வீசினார். ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ்1க்கு இத்தனை விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

தமிழைப் போல இல்லாமல், மலையாளத்தில் அனைவரும் ஆச்சரியமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். குறைவாகவே புரணி பேசுகிறார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் வருவதில்லை. சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் உடனே மறந்துவிடுகிறார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அரிஸ்டோ சுரேஷ் (ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவில் குடித்துவிட்டு கைலியை அவிழ்த்து பிரச்சினை பண்ணும் நடிகர், முத்தே பொன்னே பிணங்கல்லே புகழ் சுரேஷ்) கையில் கிடைக்கும் எந்த ஒரு சாதனத்திலும் தட்டிப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த அணியினரும் கூடப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

தமிழோடு ஒப்பிட, இங்கே அனைத்து நடிகைகளும் மிக நாகரிகமாக உடை அணிந்து வருகிறார்கள். மலையாளத்தில் முதல் பிக் பாஸ் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ என்னவோ.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய அளவில் சண்டை வரும் முகாந்திரங்கள் எல்லாம் அப்படியே சிதறிப் போகின்றன. பிக்பாஸும் எத்தனை முயன்றும் இன்னும் நிகழ்ச்சி செல்ஃப் எடுக்கவில்லை. மலையாளி ஓவியாவை இங்கேயும் அனுப்பிப் பார்க்கலாம். 🙂 சாபு என்பவர், பெண் விடுதலை, பெண்ணிய உரிமைகள் என்ற பெயரில் உள்ள எல்லாவற்றையும் ஏற்கமுடியாது என்று அடித்து ஆடுகிறார். கம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன். அவரது மலையாளம் நன்றாக உள்ளது. மிகக் குறைவான ஆங்கிலக் கலப்போடு பேசுகிறார். இவர்தான் மிக இயல்பாக இருக்கிறார். ஆனால் இவரது பின்னணி – பிக்பாஸுக்கு முன்னர், பிஜேபி பெண் தலைவர் ஒருவரைப் பற்றி மிகவும் மோசமாக இவர் எழுதி, அது பிரச்சினையாகி இருக்கிறது. காலாபவன் மணி மரணத்தில் இவர் பெயர் அடிபட்டிருக்கிறது. இவையெல்லாம் நான் கூகிளில் கண்டவை.

அனூப் மேனோன் ஸ்வேதா மேனோனைப் பற்றிச் சொன்ன கமெண்ட் பெரிய பிரச்சினையை உண்டு பண்ணியது. அவர் ஸ்வேதாவைப் பார்த்து, ‘இன்னும் மலையாளிகள் உன்கிட்ட பார்க்க என்ன பாக்கி இருக்க்கிறது’ என்று கேட்டதை அடுத்து, அங்கே பெண்ணியக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தார்கள். அனூப் தான் காமெடியாகச் சொன்னதாகவும் அது தவறுதான் என்றும் மன்னிப்புக் கேட்டார். இதைப் போல ஒன்றிரண்டு எபிசோடுகள் கொஞ்சம் ஆக்டிவ்வாக இருந்தால், மற்ற எல்லா நேரமும் அன்பாகவும் ஆரவாரத்துடனும் ஆடிப்பாடியே இருக்கிறார்கள். ஒரு சண்டையோ பிரச்சினையோ இல்லாமல் ஒரே அறுவை. 🙂

தமிழில் பிக்பாஸ் செய்தபோது முதலில் கமல் இதற்கு செட் ஆகமாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் போகப் போக, கமல் இதனை மிக அட்டகாசமாகக் கையாண்டார். மலையாளத்தில் மோகன்லால் முதல் எபிசோடிலிருந்தே அடித்து ஆடுகிறார். சான்ஸே இல்லை. மோகன்லால் மலையாளம் பேசும் வேகமும், அட்டகாசமான மலையாளமும் வேற லெவல். எவ்விதத் திக்கலும் திணறலும் இன்றி, யாருக்கும் ஆதரவாக இல்லாமல், மனதில் பட்டதை மிக வெளிப்படையாகப் பேசுகிறார். அதைவிட முக்கியம், சனி ஞாயிறுகளில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பேசும்போது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் அதைவிட வேகத்தில் கவுண்ட்டர் கொடுப்பதும் நகைச்சுவையாகப் பேசுவதும் என கலக்குகிறார். நான் பலதடவை கைதட்டிச் சிரிக்கும் அளவுக்கான டயலாக் டெலிவிரி. எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் பாதி, தானாக அவர்கள் பேசுவது பாதி என்பதுதான் இந்நிகழ்ச்சி என்பது என் உறுதியான நிலைப்பாடு. அதில் மோகன்லாலின் திறமை விண்ணைத் தொடுகிறது. ஆள் அழகாக கம்பீரமாக இருக்கிறார். கமல் கலக்கினார் என்றால் மோகன்லால் கமலைப் பலமடங்கு தாண்டுகிறார். (ஒருவழியாக ஏன் எழுதுகிறேன் என்ற காரணத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்!)

இன்னும் 3 வாரங்கள் மட்டும் பார்க்க உத்தேசித்திருக்கிறேன். மோகன்லாலுக்காக மட்டும். எதாவது க்ளிக் ஆகினால் மட்டுமே தொடர்ந்து பார்ப்பேன். தமிழில் பிக்பாஸ்1ஐ ஓவியா வெளியேறும் நாள் வரை பார்த்தேன். பின்பு பார்க்கவில்லை. பிக்பாஸ்2 இதுவரை ஒரு நிமிடம் கூடப் பார்க்கவில்லை – ஓவியா உள்ளே வந்த அந்த 5 நிமிடங்கள் தவிர. மலையாளத்தில் பார்ப்பது, மோகன்லால் என்கிற ராட்சசனுக்காகவும் மலையாளத்தைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவும்.

Share

காலா விமர்சனம்

காலா

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

படத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

Share

இரும்புத் திரை

இரும்புத்திரை
 
ஸ்மார்ட் போன், ஆதார் அட்டை தகவல்கள் கசிவு போன்ற தகவல்கள் மக்களுக்கு உருவாக்கி இருக்கும் குழப்பத்தை அறுவடை செய்திருக்கிறது இத்திரைப்படம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் கட்டற்ற தகவல்கள் பரிமாற்றம் மற்றும் டிஜிடல் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பது நிச்சயம் அவசியமே. ஆனால் இத்திரைப்படம் அது பற்றிய பெரிய குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் உருவாக்கிவிடுகிறது. அதையும் மிகக் கச்சிதமான திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களுக்கு பெரிய அச்சத்தை உண்டுபண்ணுவதில் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் நாளைய உலகத்துக்கு எதிரான ஒன்றே.
 
ஒரு திரைப்படமாக, மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். ஸ்மார்ட் போன் மற்றும் டிஜிடல் தகவல்கள் யாருக்கு அச்சத்தைத் தரவேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு, மத்தியத் தட்டு மக்களைச் சுற்றிக் கதையைப் பிண்ணியது பெரிய சாமர்த்தியம். இதுவே படத்தின் ஆதாரம். ஐநூறு கோடி உள்ளவனுக்குப் பணம் போவதும் வருவதும் வேறு வகையான பிரச்சினை. நாளை அப்பாவுக்கு ஆபரேஷன், அந்த நேரத்தில் ஐந்து லட்ச ரூபாய் வங்கியில் இருந்து எந்தச் சுவடும் இன்றிக் காணாமல் போவது, மத்தியத் தரத்துக்கு வேறு வகையான பிரச்சினை. எது மக்களை அதிகம் சென்றடையுமோ அதைக் கையில் எடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
 
இடைவேளை வரை படம் வேற லெவல். புதிய அலை இயக்குநர்கள் வந்த பிறகு திரைப்படங்களில் ஒரு கறார் தன்மையைப் பார்க்க முடிவதாக எனக்கு ஒரு உணர்வு. அல்லது கலகலப்பு 2 போல மிகக் கேவலமாகத் தரையில் இறங்கி அடிக்கும் படங்கள். இப்படி இல்லாமல் சாதாரணமாக ஒரு நல்ல படத்தைப் பார்க்கமாட்டோமா என்ற எதிர்பார்ப்பை கொஞ்சம் பூர்த்தி செய்கிறது முதல் பாதி .
 
இரும்புத்திரை, முதல் பாதியில் கச்சிதமான வணிகப் படமாக வந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு, டிஜிடல் யுக அம்புலிமாமா சாகஸங்கள் என்னும் அளவுக்கு அலை பாய்கிறது. படத்தின் பலம் வசனங்கள். படு கூர்மை. ஒரு வணிகப்படத்துக்கு இதைப் போன்ற வசனங்கள் பெரிய அவசியம். நாம் சொல்வது தொழில்நுட்ப ரீதியாகப் பொய் என்றாலும், சாத்தியமே இல்லை என்றாலும், அதை மக்கள் நம்பும் அளவுக்கு பலமாக, தரவுகளுடன் சொல்வது போன்ற தோற்றத்தில் சொல்லவேண்டும். அதை அனாயசமாகச் செய்திருக்கிறார் ஆண்டணி பாக்யராஜ் (வசனம் இவர் என்று கூகிள் சொல்கிறது).படத்தின் அடுத்த பலம் அர்ஜூன். அத்தனை கெத்தாக இருக்கிறார். வில்லனாக நடிக்கவேண்டும் என்றால் ஒரு கெத்து தானாக வந்துவிடும் போல. (பல இடங்களில் இவரது குரல் ரஜினியின் குரல் போலவே உள்ளது.)) சமந்தா அழகின் இலக்கணம். ரோபோ ஷங்கர் கலகலக்க வைக்கிறார் – இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஒரே ஒரு காட்சி தேவையே இல்லாமல் வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அட்டகாசம்.
 
ஆதார் கார்ட், ஸ்மார்ட் போன்களில் நாம் பரிமாறிக் கொள்ளும் அதீதத் தகவல்களை ஒட்டி ஒரு திரைப்படத்தை இந்த அளவு சுவாரஸ்யமாக எடுக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. இதை ஒட்டி எங்கெல்லாம் தகவல்கள் கசிய முடியுமோ அத்தனையையும் ஒரு வலைப்பின்னலாக்கியது அபாரம். இயக்குநர் மித்ரன் பாராட்டப்படவேண்டியவர். இது முதல் திரைப்படம் என்கிறது கூகிள். பெரிய நம்பிக்கை தருகிறார். இயக்குநருக்கு வாழ்த்துகள்.
Share

காலா பாடல்கள்

கபாலி படத்தில் – மாய நதி பாடலும் உலகம் ஒருவனுக்கா பாடலும் எனக்குப் பிடிக்காதவை. பிடித்தவை – நெருங்குடா பாடலும் வீரத் துரந்தரா பாடலும்தான். இதை மனத்தில் கொண்டு மற்றவற்றைப் படிக்கவும்.
 
காலாவில் முதல் பாடல் செம வெயிட்டுடா வெளியிடப்பட்ட போது ரொம்ப டிப்ரஸிங்காகவே இருந்தது. பிடிக்கவே இல்லை. நேற்று எல்லாப் பாடல்களும் வெளியிடப்பட்டன. அவற்றைக் கேட்டதில் (3 முறை கேட்டிருக்கிறேன்) –
 
நிக்கல் நிக்கல் – கிளம்பு கிளம்பு பாடல் மிக அட்டகாசம். இதுவே பெஸ்ட் இப்போதைக்கு. யார் வெச்சது யார் வெச்சது உங்க சட்டமடா அடுத்த கலக்கல். கிளம்பு பெஸ்ட்டா யார் வெச்சது பெஸ்ட்டா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே அட்டகாசம். நிலமே என் உரிமையின் பின்னணியில் வரும் (இஸ்லாமியப் பாடல்களின் சாயலுடன் வரும்) ஆலாபனை இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
இன்னொரு பாட்டில், ஒத்தையில நிக்கிற வேங்கடா தில்லிருந்தா மொத்தமா வாங்கடா என்பதைப் பாடலிலேயே வைத்தவிதம் அழகு.
 
சந்தோஷ் நாராயண் ரஜினியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். பாடல்கள், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தைப் பெரிய அளவில் தூண்டுகின்றன. இந்த இசையமைப்பாளரை நேற்றைய விழாவில் ரஜினி மறந்தது ஆச்சரியம். (மறந்தாரா? கடைசியில் ரஜினி பேசுவதை மட்டுமே கேட்டேன்.) கடைசியில் அவரை அழைத்து மேடையில் சொல்லி சமாதானம் செய்தார். உண்மையில் சந்தோஷ் நொந்திருப்பார் என்றே நினைக்கிறேன். பிரச்சினையில்லை, இது வரலாற்றில் இடம் பெறும். 🙂
 
மாய நதி போலவே, கண்ணம்மா பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் மாயநதியைவிட இது பெட்டர்தான்.
 
போராடுவோம் மற்றும் தெருவிளக்கு பாடல்கள் – பல பாடல்களின் சாயலுடன் உள்ளன! குறிப்பாக ஹிப் ஹாப் தமிழாவின் பாடலைப் போன்று உள்ளது.
 
சட்டென்று எல்லாப் பாடல்களுமே ஒரே போல் தோன்றும். மெல்ல மெல்ல இது மாறும் – சிலருக்காவது.
 
பாடல்களில் என்னவோ 80களின் சாயல் தெரிவது போல் உள்ளது. என் பிரமையா எனத் தெரியவில்லை. சிறியதும் பெரியதுமாக 9 பாடல்கள் என்பது தரும் யூகமா என்றும் புரியவில்லை. படம் நாயகன் திரைப்படம் போன்ற ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாக இன்னொரு பக்கம் தோன்றுகிறது.
 
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஏற்ப வரிகள் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. படத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்பது நிச்சயம். ஆனால் அது எனக்குப் பொருட்டே அல்ல. 🙂 அண்ணாமலை திரைப்படம் வந்த சமயத்தில் ரஜினியின் ஒரு வரி பன்ச்சுக்காக தியேட்டரே அதிர்ந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அப்படி அதிர வாய்ப்பு (ரசிகர்கள் ஷோ தவிர மற்ற ஷோக்களில்) குறைவுதான். ஆனால் இது அதிகம் பலன் தரும் என்றே யூகிக்கிறேன். வெற்றி நிச்சயம்.
 
ரஜினி திரைப்படம் எதிர்பார்ப்புக்கு நடுவேயும், தோற்றுப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் இடையேதான் வெளிவந்துள்ளது. முதல் முறையாக, ரஜினியின் அரசியல் அறிவிப்படை அடுத்து, வெறுப்புக்கு நடுவில் வெளியாகிறது. இந்த வெறுப்பும் ஃபேஸ்புக் அறிவாளிகளின் வெறுப்புதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படம் வென்றால், உடனே இது திரைப்படத்துக்கான வெற்றி மட்டுமே என்று சொல்வார்கள். தோற்றால், அரசியலிலும் தோல்வி என்பார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. இந்த வெற்றியும் அரசியல் வெற்றியும் வேறு வேறானவை. இரண்டிலும் ரஜினி வெல்வார் என்றே நினைக்கிறேன்.
 
அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நீங்கிய நிலையில் ரஜினி திரைப்படம் வெளியாவது, எனக்கு மிக முக்கியமானதாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. எவ்விதப் படபடப்பும் இன்றிப் படம் பார்க்கலாம்.
 
ஒரே பிரச்சினை, இந்தப் படத்தில் ரஞ்சித் முன்வைக்கப்போகும் அரசியல். அது தலித் அரசியல் மட்டும் என்றால், நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது, பாராட்டப்படவேண்டியது. அதன் பின்னணியில் ஹிந்துத்துவ / ஹிந்து மத எதிர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே எதிர்பார்ப்பு. மற்ற மதங்களைத் தூக்கிப் பிடிப்பதில் பெரிய பிரச்சினையோ கேள்வியோ இல்லை – ஹிந்து மதத்தைத் தூற்றாத வரை. காலா அறிவிப்பு வந்த தினம் முதல் இந்த ஐயம் கடுமையாக எழுந்துள்ளது. கபாலி வந்தபோது இந்த அச்சம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. ரஜினிக்கு இருக்கும் ஒரு அரசியல் பெரிய வட்டத்தை இப்படம் குறுக்காமல் இருந்தாலே, இப்படம் ரஜினிக்கு செய்திருக்கும் பெரிய நன்மையாக இருக்கும். பார்க்கலாம்.
 
காலா – காத்திருக்கிறேன்.
Share

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்

அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் – ஒரு தந்தையின் புலம்பல்

இரண்டு மாதங்களாகவே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என அபிராம் சொல்லிக்கொண்டிருந்தான். ஏப்ரல் 27 காலா ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்ப அதுக்குத்தான முதல்ல போவ என்று சோகமானான். காலா ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதும் இந்தப் படத்துக்குப் போவது உறுதியானது அவனவளவில் பெரிய நிம்மதி.

குழந்தைகள் பார்க்கும் சானல்கள் அத்தனையிலும் விடாமல் விளம்பரம் துரத்திக்கொண்டிருந்தது. கூகிளில் தேடி இப்படம் பற்றிய அனைத்து விவரங்களையும் அபிராம் தெரிந்து வைத்திருந்தான். கூடவே நண்பர்களிடம் பேசியதில் இருந்தும். பேட் மேன் சூப்பர்மேன் எல்லாம் வரமாட்டாங்களா என்று தெரியாமல் கேட்ட தினத்தில்தான் நான் இதைக் கண்டுபிடித்தேன். அவெஞ்சர்ஸ் என்றால் யார், மார்வெல் என்ற நிறுவனம், அது இது என அள்ளி அடித்தான். இதெல்லாம் பெரிய அறுவையான புள்ளிவிவரங்கள் என்ற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டேன். ஒருவழியாக நேற்று படத்துக்குப் போனேன்.

*

ஏற்கெனவே பேட் மேன் வெர்சஸ் சூப்பர் மேன் தந்த சூடு ஞாபகம் இருந்தது. இந்தப் படத்தில் வரிசையாக அவெஞ்சர்கள் வந்தவாறு இருந்தார்கள். படத்திலும் சரி, பார்க்கவும் சரி, சரியான கூட்டம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அத்தனை பெற்றோர்களும் என்னைப் போலவே விழித்துக்கொண்டுதான் தியேட்டரில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு அவெஞ்சர் தோன்றும் காட்சியிலும் கைத்தட்டும் விசிலும் காதைப் பிளந்தன. நிஜமாகவே சொல்கிறேன். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். இது என்ன ஊர், ஏன் இப்படி மாறிப் போனது என்றெல்லாம் குழப்பம். என் பக்கத்து சீட்டில் இருந்த பையன் ஒவ்வொரு அவெஞ்சரின் வருகையின்போதும் சரியாக அந்த அவெஞ்சரின் பெயரையும் அந்த நடிகரின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தான். ஆச்சரியமாக இருந்தது. ஸ்பைடர் மேன், ஐயன் (சாதி அல்ல!) மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா தவிர எந்த அவெஞ்சரும் எனக்குப் பழக்கமில்லை. ஆண்ட் மேன், ஸ்ட்ரேஞ்ச், தோர் மேன், ப்ளேக் பேந்தர், விசன், ப்ளாக் விடோ, ஃபால்கன், மார்வெல் எனப் பலரை இப்படத்தில்தான் கண்டுகொண்டேன். இத்தனை பேருக்கும் தனித்தனியே படங்கள் இருக்கின்றனவாம். மார்வெல் காமிக்ஸின் சாதனை பெரியதுதான். ப்க்கத்தில் இருந்த வாண்டுகளெல்லாம் இவர்களை நம் வீட்டுச் சொந்தக்காரர்கள் போல, இவனைத் தெரியலையா என்று தம் பெற்றோர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தன.

*

அவெஞ்சர்ஸ் படம் சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன் அளவுக்கு மோசமில்லை. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் அப்படி இப்படிப் போனாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் மிரட்டி எடுக்கிறார்கள். பூமியைப் போன்ற பல கிரகங்கள். அத்தனையிலும் நடக்கும் கதை. இதைவிட விளக்கமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அத்தனை அவெஞ்சர்ஸையும் காண்பிக்கவேண்டி இருப்பதால் திரைக்கதை அங்குமிங்குமாக ஓடுகிறது. எந்த நேரத்தில் எந்த அவெஞ்சர் இன்னொரு எந்த அவெஞ்சரைக் காப்பாற்ற வருவார் என்பது திரைக்கதை எழுதியவருக்கே தெரியாது என நினைக்கிறேன்.

ஹல்க்கை காமெடி பீஸாக்கிவிட்டார்கள். தோரை உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இந்தப் படத்திலும் ஸ்பைடர் மேன் ஐயன் மேனிடம் கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். தானோஸ் அதிரடி. படமே இவர் தோளில்தான். மிகப் பெரிய அளவில் வில்லனைக் காட்டி, அவர் முன் அனைத்து அவெஞ்சர்ஸ்களும் பிச்சை எடுக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஒரு ரத்தினக் கல்லைப் பெற்றுக்கொண்டுவிட்ட தானோஸ் மீதி ஐந்து கல்லை எடுக்கப் போராடுவதுதான் கதை. அப்படி எடுத்துவிட்டால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆளும் சக்தி வந்துவிடும். தானோஸின் நோக்கம் ஒன்றுதான், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களில் (!) பாதி பேரைக் குறைப்பது. குறைக்கும் வழி கொலைகள். இதை எதிர்த்து அவெஞ்சர்ஸ் போராடுகிறார்கள். ஆறு கல்லையும் தானோஸ் அடைகிறார். பின்னர் என்ன ஆகிறது? இன்னும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.

ஆறாவது கல்லை அடையும் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. அதேபோல் தன் வளர்ப்பு மகளை பலி கொடுக்கும் காட்சி மிக நன்றாக உள்ளது. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை கிராஃபிக்ஸ்தான். எதோ ஒரு தனியான உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டு வருகிறார்கள். தானோஸ் இறுதிக் காட்சியில் இறுக்கமான முகத்துடன் பிரபஞ்சத்தைப் பார்த்தவண்ணம் அமரும் காட்சி பல விஷயங்களைச் சொல்கிறது. கவித்துவமாக தானோஸைப் படைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க இருட்டில் நடக்கிறது. சில காட்சிகள் மட்டுமே வெளிச்சத்தில் தெரிகின்றன. அவெஞ்சர்ஸ் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் காமெடிக் காட்சிகள், இப்படத்தையே சுவாசமாகக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடுதலாகப் புரியும். தமிழ் டப்பிங்கில் பாகுபலியையெல்லாம் சேர்த்து கைத்தட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்றே நினைக்கிறேன். சில வழக்கமான, ஹெல்மெட் மண்டையா என்பதைப் போன்ற வசனங்களைத் தவிர மற்றவை பாதகமில்லை. இந்த ஹெல்மெட் மண்டையா வசனத்துக்கு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வாண்டு வானம் வரை குதித்தான். மீண்டும் மீண்டும் ‘ஹெல்மெட் மண்டையனாம்ப்பா’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். சரியாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கிறார்கள். அல்லது ட்யூன் செய்து வைத்திருக்கிறார்கள்.

*

ஒரு படம் பார்த்து முடித்ததும் அதைப் பற்றி அதிகம் பேசக்கூடாது என்று வீட்டில் ஒரு சின்ன சட்டம். நேற்று அந்த சட்டத்தைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அபிராமிடம் பேசினேன். ஏனென்றால் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால். இடைவேளையின்போதே மெல்ல கூகிளில் நோட்டம் விட்டிருந்தேன். அபிராம் அடித்து முழக்கினான். எப்படிடா இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட என்று சொன்னதுக்கு அவன் சொன்ன பதில் – நானெல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா, திருநெல்வேலில அரவிந்த் இதைவிட அதிகம் சொல்லுவான். அரவிந்த் என் அண்ணா பையன். இன்னும் என் தங்கை பையன்களுடனெல்லாம் பேசினால்தான் தெரியும், அவெஞ்சர்ஸ் எந்த அளவுக்கு நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என.

குழந்தைகளுக்கான சானல்களே இவர்கள் நம் சமூகத்தில் இத்தனை தீவிரமாக வெற்றிகரமாக நுழைந்தற்கான வழி என நினைக்கிறேன். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள். படத்தையும் ஏனோ தானோ என்று எடுப்பதில்லை. மிகக் கச்சிதமான திட்டமிடல். அசுர உழைப்பு. ‘கேமராவுக்கும் கிராஃபிக்ஸுக்குமே காசு சரியா போச்சு’ என்கிறான் அபிராம். உண்மைதான். எல்லாமே உச்சம்தான். பாகுபலி முதல் பாகத்தைப் போல அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் முடிந்திருக்கிறது. பல விஷயங்கள் தெளிவாகவில்லை. பாகுபலியைக் கொன்றது யார் என்பது போல, காற்றில் உதிரும் அவெஞ்சர்ஸ்க்கு என்ன ஆச்சு என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. மீண்டும் ரத்தினக் கற்கள் கைக்கு வருமா? விஷன் திரும்ப வருவானா? அவெஞ்சர்ஸ் 2ல் இவையெல்லாம் தெரிய வரும் என்று நான் சொன்னபோது, இது அவெஞ்சர்ஸ் 3, அடுத்து அவெஞ்சர்ஸ் 4 என்ற பதில் கிடைத்தது. நேக்கு தெரிஞ்சதெல்லாம் ரஜினி கமல் புளிப்பு மிட்டாய் என்று காலம் ஓடிவிட்டது. ஆனால் இந்தப் பொடியன்கள்… இன்னும் முழித்துக்கொண்டிருக்கிறேன்.

*

மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் ஏப்ரல் 27ம் தேதி இரண்டு தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டிருந்தன. தியா மற்றும் பக்கா. அவெஞ்சர்ஸ்க்கு வந்த கூட்டத்தை அடுத்து, எல்லாக் காட்சிகளுமாக இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். சுவரொட்டிகளைப் பார்த்து ஏமாற வேண்டாம். 

*

Share

அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி

கலைக்கான படங்களில் பிரசாரமும் பிரசாரப் படங்களில் கலையும் முக்கியமானவை. உண்மையில் ஒரு கலைப்படத்தில் உள்ள பிரசாரத் தன்மையும் பிரசாரப் படத்தில் உள்ள கலைத்தன்மையும் ஒரு திரைப்படத்தின் விவாதங்களைப் பல முனைகளுக்கு எடுத்துச் செல்ல வல்லவை. கலைப்படத்தில் உள்ள பிராசரத்தையும் ஒரு பிராசரப் படத்தில் உள்ள கலைத்தன்மையையும் சேர்த்தோ தனித்தனியாகவோ எதிர்கொள்வது எளிதானதல்ல. இவை இரண்டும் சரியாகப் பொருந்திப் போகும் ஒரு படம், பிரசாரவாதிகளின் கனவாகவே இருக்கும்.

 

அறம் இப்படியானதொரு படம். இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை ஒரு தரமான திரைப்படம் என்று சொல்லும்படியான தன்மையுடன் இயக்குநர் கோபி நயினார் இயக்கி இருக்கிறார். எப்படி ஒரு திரைப்படத்தில், தவிர்க்கமுடியாத பிரச்சினைகளையும் இந்திய எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இணைக்கமுடியும் என்பதை மிக அழகாகச் செய்து காட்டி இருக்கிறார்.

 

இந்த மாதிரியான படங்களின் அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தரமான மற்றும் உணர்வு ரீதியான திரைப்படம் என்ற வகையில் மட்டும் புரிந்துகொள்ளும் சாமானியர்களை, மிக எளிதாக இந்திய எதிர்ப்பு அரசியல் அவர்களது பிரக்ஞை இன்றியே சென்று சேரும். இதுதான் இந்திய எதிர்ப்புப் பிரசாரப் படங்களின் நோக்கம். ஆனால் இதைச் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. கொஞ்சம் பிரசாரம் தூக்கினாலும் படத்தை சாமானியர்கள் நிராகரித்துவிடுவார்கள். பல படங்கள் இப்படி வெற்றுப் பிரசாரப் படங்களாகவே தேங்கிவிடும். கலைத்தன்மை மட்டும் அதிகரித்து மாற்றுத் திரைப்படமாகத் தோன்றினால் அது சாமானியர்களுக்கான படமல்ல என்கிற ஒரு கருத்து உருவாகிவிடும். பிரசாரப் படங்கள் சாமானியர்களிடம் இருந்து விலகுமானால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாது. இரண்டும் இல்லாமல் அந்தரத்தில் அலையும் படங்களாகப் பல படங்கள் அமைந்துவிடும்.

 

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இந்திய எதிர்ப்பு என்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக பிரசாரம் செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

பொது மக்களுக்கு எதிரான ஒரு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியது. மக்களிடம் அந்த அரசுக்குரிய பிரச்சினைகளைக் கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். கூடவே அது பொதுமக்களின் கடமையும்கூட. ஆனால் எந்த அரசை எந்தக் காரணங்களுக்காக அம்பலப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. காரணங்களைக் கண்டுகொண்டு அதற்குப் பொறுப்பான அரசை எதிர்ப்பதுதான் சரியான அரசியல். ஆனால் இங்கே முற்போக்கு என்னும் முகமூடியில் நடப்பதெல்லாம், எந்த அரசை எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு, பின்பு அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி அந்த அரசின் மீது சுமத்துவது.

 

இப்படிச் செய்வதிலாவது ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கவேண்டும். ஆசை வெட்கம் அறியாது என்பதைப் போல, மாநில அரசுக்குரிய பொறுப்புக்களைக் கூட மத்திய அரசின் குற்றப்பட்டியலில் சேர்ப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. காரணம் மத்தியில் இருப்பது ஹிந்து ஆதரவு மற்றும் ஹிந்துத்துவ ஆதரவு அரசு. மோதியின் தலைமையிலான இந்த அரசைக் குறை சொல்வதுதான் ஒரே நோக்கம். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு பிரச்சினையும் மத்திய அரசின் பிரச்சினையாகக் காட்ட போலி முற்போக்காளர்கள் தயாராகவே இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் இதைச் செய்வார்கள். திரைப்படம் என்பது இன்னும் ஒரு ஊடகம். வலுவான ஊடகம். அதை நேர்மையற்ற முறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, அந்த ஊரை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை, புறக்கணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஹிந்துத்துவவாதிகளும் இப்படியான ஒரு அநியாயத்தை ஏற்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மையான பொறுப்பு யாருக்கு உள்ளது? மாநில அரசுக்குத்தானே? ஆனால் ராக்கெட் விடும் மத்திய அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை என்கிற பிரசாரம் படம் முழுக்கப் பரப்பப்படுகிறது. அதைவிட முக்கியமாக மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பாகிறது.

 

ஆழ்துளைக் கிணற்றுக் குழியில் குழந்தை விழுந்துவிடுகிறது. அடிக்கடி இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். இது போன்ற செய்திகள் தரும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இதுபோன்ற செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான்கைந்து நாள் தூக்கம் இழந்து தவிப்போம். இப்படிக் குழந்தைகள் விழுவதும் இறப்பதும் பெரிய கொடுமை. இதற்கான பொறுப்பை உண்மையில் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்பதல்ல. வேறொரு வகையில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

 

 

ஏன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு குழந்தை சாகும்போதும் எதாவது நிவாரணப் பணம் கொடுக்கும் அரசு, இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்விதான், அப்படி குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்ற, குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான கருவிகளை மத்திய மாநில அரசுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பது. இந்த மூன்றுமே முக்கியமானவைதான். கோபி நயினார் மூன்றாவது கேள்வியை மட்டும் மையமாக்கி மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்குகிறார். கருவிகள் கண்டுபிடிக்கப்படாதது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மை என்றாக்கி அத்தகைய இந்தியாவை எல்லா விதங்களிலும் எதிர்க்கலாம் என்பதை நோக்கிப் போகிறார்.

 

மத்திய அரசைப் பொறுப்பாக்குவதால் மாநில அளவில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் முதல் குஞ்சு குளுவான் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மாநில அரசியலில், அதுவும் கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்த வரை வெளிப்படையாக மாநில அரசியலைக் கேள்வி கேட்டு இவர்களுக்குப் பழக்கமில்லை. அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறார்கள்.

 

*

 

திண்ணைப் பேச்சுக்காரர்கள் வம்பளக்கும்போது எதாவது ஒன்றை எதோ ஒன்றுடன் கோர்த்துப் பேசுவார்கள் என்பதைப் பார்த்திருப்போம். ராணுவத்துக்குக் கோடி கோடியாகச் செலவழிக்கிறோம், ஆனால் தெருவில் பாதுகாப்பில்லை என்பது தொடங்கி, சைன்ஸ் சைன்ஸ்னு சொல்றாங்க, 21ம் நூற்றாண்டுன்னு சொல்றாங்க, ஒரு குழந்தையைக் காப்பாத்த முடியலை என்பார்கள். இதில் மேம்போக்கான நியாயம் உள்ளது என்பது சரிதான். ஆனால் நியாயம் மேம்போக்காக மட்டுமே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

 

இந்தத் திண்ணை வம்பின் ஒரு பரிமாணத்தை மட்டுமே இயக்குநர் அறம் படத்தில் காட்டி இருக்கிறார். பல கோடி ரூபாயில் ராக்கெட் விடும் அரசுக்கு ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை என்றால், ராக்கெட் ஒரு கேடா என்பதுதான் கம்யூனிஸ இயக்குநரின் புலம்பல். ராக்கெட் விடுவதும் அதனால் வரும் நன்மைகளை மக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் வேறு. குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பது வேறு. ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தும் அரசு குழந்தையைக் காப்பாற்ற கவனம் செலுத்தாது என்று சொன்னால் அது அயோக்கியத்தனமே. குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு ராக்கெட் விடுவது மோசடி என்பதும் இதற்கு இணையான இன்னுமொரு அயோக்கியத்தனமே.

 

எல்லோருக்கும் ஏற்பில்லாத நீர்ப் பற்றாக்குறை, ஆழ் துளைக் கிணறு பிரச்சினைகளையெல்லாம் ராக்கெட் விடுவதோடு தொடர்புபடுத்தி மத்திய அரசையும் எனவே இந்தியாவையும் அதை ஆதரிப்பவர்களையும் அராஜகவாதிகளாகச் சித்திரிக்கிறார் இயக்குநர்.  ராக்கெட் விடுபவர்களை ஆதரிப்பவர்களும் நீர்ப்பற்றாக்குறையையும் ஆழ் துளைக் கிணற்றில் குழந்தைகள் இறக்கும் பிரச்சினையை எதிர்க்கத்தானே செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதோடு ராக்கெட் விடுவது என்னவோ ஒரு அவசியமற்ற வேலை என்பதான எண்ணத்தை வெகுஜனங்களின் மத்தியில் விதைக்க பெரிய அளவில் மெனக்கெடுகிறார். இவை எல்லாமே ஆபத்தான மற்றும் நியாயமற்ற போக்குகள்.

 

இந்தப் போக்குகளின் ஊடே இன்னும் இரண்டு அநியாயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஒன்று, ஐஏஎஸ் அதிகாரி முட்டாள்தனமாக உணர்ச்சிப் பெருக்கில் செயல்படுவதுதான் சரி என்பதோடு, யோசித்து யதார்த்தமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் எல்லாம் முட்டாள்கள், அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள் என்கிற பார்வையைப் படம் நெடுகிலும் கொண்டு வந்தது. இன்னொன்று, அறிவியல் என்பதே அவசியமற்றது, மாறாக அசட்டு நம்பிக்கையே தேவையானது என்ற பார்வை.

 

ஐஏஎஸ் அதிகாரியாக நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வாழ்நாள் வேடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த ஐஏஎஸ் கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கம்யூனிஸ்ட்டின் கனவு என்பதைத் தாண்டி எந்த வகையிலும் யதார்த்தம் கொள்ளவில்லை. குழந்தை உயிருக்குப் போராடும்போது மக்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று அரசு ஊழியர்களையே கேள்வி கேட்பதும் மக்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு குழந்தையை உள்ளே செலுத்துவது என்று முட்டாள்தனமான முடிவெடுப்பதும் என இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினியோ அஜித்தோ தன் எதிரிகளை ஆயிரம் பேரை ஒரே ஆளாகத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கற்பனைகள்கூட ஆபத்தில்லாதவை. அவற்றில் முட்டாள்தனம் மட்டுமே உண்டு, அதற்குப் பின்னால் அரசியல் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஐஏஎஸ் கதாபாத்திரத்தின் அசட்டுத் துணிச்சலுக்குப் பின்னே, ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கும் அரசியல் உள்ளது. ஆளும் வர்க்கம் புனிதமானது அல்ல. அதே சமயம் அந்தப் புனிதத்தன்மையைக் கேள்வி கேட்பது முட்டாள்தனத்தின் வழியாகவோ, மக்களை உணர்வுரீதியாக மட்டுமே தூண்டிவிடும் முயற்சிகளின் வழியாகவோ இருக்கக்கூடாது. கோபி நயினார் எவ்விதத் தர்க்கமும் இன்றி இந்தியாவின் அறிவியல் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் மனம் போன போக்கில் மட்டுமே அணுகுகிறார்.

 

மத்திய அரசுக்கு எதிரான ஒரு போக்கு ஒருவேளை சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அதை அப்படியே இந்தியாவுக்கு எதிராகக் கட்டமைக்கவேண்டும் என்பது மட்டுமே கோபி நயினாரின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. மத்திய அரசுக்கு எதிரானவர்கள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் கருத்துக்கும், இந்தியாவின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அதே கருத்தைச் சொல்லும்போது அது எதிர்கொள்ளப்படும் விதத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே தீரும்.

 

இந்த எதிர்ப்பில் பிற்போக்குத்தனமான கருத்துகளைச் சொல்வதோடு உதவ வரும் அரசு இயந்திரங்களையும் கேலி பேசுகிறார் இயக்குநர். தன் மனைவி மயக்கம் போட்டு விழும்போது மருத்துவர்களின் உதவி தேவையில்லை என்பதை நியாயப்படுத்தும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம் என்றொரு கிராமம் எல்லா சமயத்திலும் முடிவெடுக்க முடியுமா? இத்தனைக்கும் ஒரு குழந்தை குழியினுள்ளே விழுந்ததும் அனைத்து அரசு இயந்திரமும் விழுந்தடித்துக்கொண்டே அங்கே வருகிறது. அங்கேயே நிற்கிறது. இப்படிக் குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்றத் தேவையான வசதிகளும் கருவிகளும் இல்லை என்று அந்த அரசு இயந்திரமும் கவலைப்படத்தான் செய்கிறது. இதையெல்லாம் தன்னை அறியாமலேயே படத்தில் பதிவு செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

இத்தனைக்குப் பிறகும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் விதமாகவும் மறைக்கும் விதமாகவும் இந்திய எதிர்ப்பு இந்தப் படத்தில் மையச் சரடாகப் பின்னப்பட்டுள்ளது. காவல் துறையின் உதவி, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய அரசு அதிகாரியான ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு (மடத்தனமாக நடந்துகொண்டபோதும் உள்நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவதுதான்) என எல்லாவற்றையும் பின் தள்ளி, இந்திய எதிர்ப்புக் குரலும் அறிவியலைக் கிண்டலடிக்கும் அறிவீனக் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.

 

இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குடித்துவிட்டு, குழியினுள் விழுந்த குழந்தையின் தந்தையைப் பார்த்தும் காவல்துறையைப் பார்த்தும் பேசிக்கொண்டே இருக்கும். குழந்தையின் தந்தையைப் பார்த்து, இவங்க நம்ம குழந்தையைக் காப்பாத்த மாட்டாங்க என்றும் அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கேலி செய்தும் புலம்பிக்கொண்டே இருக்கும். அக்கதாபாத்திரம் வேறு யாருமல்ல, முற்போக்காளர்கள் என்ற பெயரில் அவநம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கும் நபர்களின் உருவம்தான். இந்திய எதிர்ப்பையே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் நபரின் பிரதிபலிப்புதான் அந்தக் கதாபாத்திரம். ஒருவகையில் அவர் இயக்குநர் கோபி நயினார்தான்.

 

*

 

1990ல் மாலூட்டி என்றொரு மலையாளத் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்றது. அச்சு அசலாக ‘அறம்’ திரைப்படத்தின் அதே கதைதான். ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லக் குழந்தை ஆழ் துளைக்காகத் தோண்டப்பட்ட கிணற்றுக் குழியில் விழுந்துவிடும். அதை எப்படித் தூக்குகிறார்கள் என்பதே கதை.

 

 

‘அறம்’ திரைப்படத்தைப் போலவே முதல் காட்சிகளில் கணவன் மனைவியின் கூடல் காட்சிகளெல்லாம் வரும். மாலூட்டியில் அக்காட்சிகள் மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கும். ‘அறம்’ படத்தில் இக்காட்சிகள் மிக யதார்த்தமாக உள்ளன. இக்காட்சிகளில் வரும் நடிகை, இப்படத்தின் கதாநாயகி நயன்தாராவின் நடிப்பையும் தாண்டிச் செல்கிறார். ‘அறம்’ படத்தைப் போலவே ‘மாலூட்டி’ படத்திலும் காவல்துறை, அரசு இயந்திரம் என எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவார்கள். எனவே ‘அறம்’ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை என்ற வகையில் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆனால் அக்களத்தைத் தன் அரசியலுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘மாலூட்டி’ படத்தில் இத்தகைய அரசியல் எதையும் பரதன் முன்வைக்கவில்லை. ஒரு கடினமான நேரத்தில் பொது மக்கள் சொல்லும் குறைகளும் புலம்பல்களும் காட்டப்படத்தான் செய்தன. ஆனால் அப்படியே அவை வளர்ந்து இந்திய வெறுப்புத் தோற்றத்தைக் கைக்கொள்ளவில்லை. அங்கேதான் ‘அறம்’ அரசியல் படமாகிறது.

 

*

 

‘அறம்’ திரைப்படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கில் மனம் வெறுத்துத் தன் வேலையை ராஜினாமா செய்யும் ஐஏஎஸ் அதிகாரி எம்எல்ஏ ஆகிறார். அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் கொள்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்கமுடியும் என்று யூகிக்கலாம். அல்லது சுயேச்சையாக வென்றிருக்கலாம் என்று தர்க்கம் செய்யலாம். எப்படி இருந்தாலும் அது இயக்குநரின் கனவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரி அரசுக்கு எதிராக மனம் நொந்து அரசுப் பணியில் இருந்து விலகி அரசின் அங்கமாகவே மாறும் ஒரு கனவு. உண்மையில் இந்தக் கனவு இன்றும் சாத்தியம் என்பதுவே இந்தியா நமக்களித்திருக்கும் கொடை. ஆனால் இயக்குநர் இந்தக் கனவைச் சொல்ல இந்திய எதிர்ப்புக்கான களத்தை அமைத்துக்கொள்கிறார். ராக்கெட் விடுவதைக் கேலி செய்யும் காட்சிகள் உணர்வு ரீதியாக மக்களைத் தன்வயப்படுத்த மட்டுமே. உண்மையில் நமக்குத் தேவை, ராக்கெட் விடுவதும்தான், இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதும்தான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பதும், ஒன்று நிகழும் வரை இன்னொன்று நிகழ்வது ஒரு கேடா என்று சொல்வதும், அறிவுபூர்வமான தர்க்கங்களல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். இந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே அறம் போன்ற திரைப்படங்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்கமுடியும்.

Share

அந்திமழை ஏப்ரல் 2018

அந்திமழை ஏப்ரல் 2018 இதழ் –

(உடனே அடுத்த அந்திமழை இதழில் நான் எழுதப் போகிறேனா என்று கேட்கப் போகிறவர்கள் நடையைக் கட்டவும்.)

நாற்காலிக் கனவுகள் என்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. என்றாலும் தூக்கிச் சாப்பிடும் கட்டுரை நாற்காலிக் கனவைப் பற்றியதல்ல. டி.எம். சௌந்தர ராஜனைப் பற்றியது. இன்னும் துலக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், விஜயராஜ் என்பவர் டி.எம்.எஸ்ஸைப் பற்றி எடுத்திருக்கும் ஆவணப்படம் பற்றியது. (மதிமலர் என்பவர் எழுதி இருக்கிறார்.)

1968லேயே இளையராஜா இசையமைப்பில் தீபம் என்ற படத்துக்காக (பின்னர் சிவாஜி நடித்து வெளிவந்த தீபம் அல்ல) ‘சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு’ என்ற பாடலை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார் என்ற தகவலை கங்கை அமரன் சொல்லி இருக்கிறார்! அந்தப் பாட்டை இந்த ஆவணப்படத்தில் சேர்த்திருக்கிறாராம் விஜயராஜ். ஆச்சரியம். (சொக்கன் முன்பு சொல்லித்தான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு நபிநாதரிடம் போய்ச் சொல்லு பாடலும் ராஜா இசையமைத்தது என்ற ஆச்சரியமான தகவல் தெரியும்!) இந்தக் கட்டுரையை வாசிக்க: http://andhimazhai.com/news/view/tms-special-article-642018.html (ஆன்லைனில் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள். அச்சிதழில் தொடரும் என்றெல்லாம் இல்லை.)

இன்னுமொரு சுவாரஸ்யம், ஆவணப்படத்துக்காக ராஜாவும் டிஎம்எஸ்ஸும் சந்தித்துப் பேசியது. அதில், புதிய குரல்களுக்காகத்தான் டிஎம்எஸ்ஸைப் பயன்படுத்தவில்லையே தவிர அவரை ஒதுக்கவில்லை என்று ராஜா அவரிடமே சொல்லி இருக்கிறார். மற்றபடி தான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் டிஎம் எஸ் என்று ராஜா சொல்லி இருக்கிறார்.

இந்த ஒரு கட்டுரைக்காக இந்த இதழை வாசிக்கவேண்டும். சிறிய கட்டுரைதான்.

நாற்காலிக் கனவுகள் தலைப்பில் வந்த கட்டுரையில் மாலனின் கட்டுரை (வைகோ பற்றியது) அட்டகாசம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதை வெளியிட்டார் என நினைக்கிறேன். மற்றவை எல்லாம் மிக அவசரத்தில் அல்லது இடப்பற்றாக்குறையில் எழுதப்பட்டவை போல உள்ளன.

அகில் எழுதிய கட்டுரையில், எம்ஜியார் எஸ் எஸ் ஆர் கழகம் என்ற பெயரில் எஸ் எஸ் ஆர் ஒரு கட்சி தொடங்கினார் என்ற செய்தி (மட்டும்!) வியப்பளித்தது.

இந்த இதழில் சில பக்கங்கள் கனடா சிறப்பிதழாகவும் வந்துள்ளது. அதில் அ.முத்துலிங்கத்தின் (சுமாரான) பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.

மேக்ஸ்டரில் கிடைக்கும் என நினைக்கிறேன். தேவைப்படுபவர்கள் வாங்கி வாசிக்கவும்.

Share

Secret Super Star (Hindi)

சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி)

புல்லரிக்க வைக்கும் இன்னுமொரு ஹிந்தித் திரைப்படம். இந்தப் புல்லரிப்பு, காட்சிகள் தரும் உணர்ச்சிவசத்தால். முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேதான் இருக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பேத்தல் என்று சொல்லிவிடும் ஒரு சூழலில்தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. இறுதிக்காட்சி உணர்ச்சிகளின் மகுடம்.

இஸ்லாம் குடும்பம், நடுத்தர வர்க்கம், கண்டிப்பான கொடூரமான அப்பா. பெண்ணுக்கு பாடுவதில் ஆர்வம். பர்தா போட்டுக்கொண்டு யூ ட்யூப்பில் தனது வீடியோவை வெளியிட்டு, அதற்கான போட்டியில் பிரபலமாகிறாள். யார் அந்த ரகசிய சூப்பர் ஸ்டார் என்று பெரிய தேடல் நடக்கிறது. அமீர்கான் மிக அலட்டலான ஒரு இசையமைப்பாளர் – போட்டி நடுவராக வருகிறார். என்ன அலட்டல். அட்டகாசம். அவர் மூலம் ஒரே பாடலில் பிரபலாகும்போது தந்தையின் பிடிவாதத்தால் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு சவுதிக்குச் செல்லத் தயாராக இருக்கும் அப்பெண்ணின் அம்மா ஒரு முடிவெடுக்கிறாள். பர்தாவை விடுத்துப் பெண் மேடை ஏறுகிறாள். அம்மாவின் கண்ணீருடன் படம் நிறைவடைகிறது. அம்மாவாக நடிக்கும் பெண் ஒட்டுமொத்த படத்தையும் ஹை ஜாக் செய்கிறார். அமீர்கான் துணை நடிகராக வந்துபோகிறார். இவையெல்லாம் தமிழில் நிகழுமா என்பதைக் கேட்காமல் விடுகிறேன். தமிழில் செய்திருந்தாலும் வேறொரு வகையில் விக்கிரமன் படம் போலப் புல்லரிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

யூ டியூப்பில் முதன் முதலாக அந்தப் பெண் வலையேற்றும் பாடலும், முதன்முறையாகத் திரைப்படத்துக்குப் பாடும் அந்தப் பாடலும் நிஜமாகவே அட்டகாசம். இசை அமித் த்ரிவேதி.

மிக அட்டகாசமான தனித்துவமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் ஃபீல் குட் முவீ என்று தமிழில் எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஹிந்தியில் நிஜமான ஃபீல் குட் முவீ எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

Share