Archive for திரை

ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்

நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்

என்னவோ எடுக்க இயக்குநர் முயன்றிருக்கிறார். அது அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல் வந்திருக்கிறது. அடுத்த படத்தில் நினைத்தது நடக்கட்டும்.

கௌதம் கார்த்திக்கின் நடிப்பு மெல்ல மெல்ல இயல்பாகிக்கொண்டே வருகிறது. இப்படத்தில் அடுத்த கட்டம். கலக்கி எடுக்கிறார். அசட்டுத்தனமான ப்ளே பாய் ரோல். மிக எளிதாகக் கையாளுகிறர். இயல்பாகவே வருகிறதோ என்னவோ. 🙂 அவரது குரல் அப்படியே அந்தக் கால கார்த்திக்கை நினைவூட்டுகிறது. கௌதம் கார்த்திக்கின் ஆரம்பக்காலப் படங்களில் பழைய கார்த்திக்கின் குரலுடன் இத்தனை நெருக்கமாக இல்லை. ஆனால் இந்தப் படத்தில் கார்த்திக்கே பேசுவது போல் உள்ளது. கார்த்திக் அந்தக் காலத்தில் இப்படியே பேசத் துவங்கி இதுவே அவரது பாணியாக அந்தப் பாணியே அவருக்கு எமனாவும் ஆனது. கௌதம் கார்த்திக் அதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஏற்கெனவே லைட்-வெய்ட்-போர்னோ படங்களாகத் தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் கௌதமுக்கு இதுவும் சேர்ந்தால் பின்னாளில் ‘மேற்படி’ படங்களில் மட்டும் நடிக்கவேண்டிய அபத்தம் நேரலாம். தூர்தர்ஷனில் நடித்துக்கொண்டிருந்த சில நடிகர்களை அப்படிப்பட்ட படங்களில் திருநெல்வேலியின் புண்ணிய தியேட்டர்களில் பார்த்தபோது கொஞ்சம் ஷாக்காகவும் அதே நடிகர்களை தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்த்தபோது அதிகம் ஷாக்காகவும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் ஆசுவாசம்.

விஜய் சேதுபதி, நடிப்பில் அப்படியே நிற்க உடல் மட்டும் விரிவடைந்துகொண்டே போகிறது. இப்படியே போனால் டி.ராஜேந்தர் ஆக்கிவிடுவார்கள். தேர்ந்தெடுத்து நடிப்பது ரொம்ப முக்கியம். நல்ல திறமையான நடிகர் வீணாகிக்கொண்டிருக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன். பின்னணி இசை அழகு. ஒரு குத்துப் பாட்டு, கொஞ்சம் காசு துட்டு மணியை நினைவூட்டினாலும், அதகளம். கேட்க:

 

Share

Rustom (Hindi)

ரஸ்டம் (ஹிந்தி)

(ருஸ்தம் என்பதே சரியான உச்சரிப்பு என்று சொன்ன நண்பர்களுக்கு நன்றி.)

ஒரு திரைப்படமாக மட்டும் இந்தப் படத்தைப் பார்த்தபோது அது ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. இந்தப் படத்தை ஏன் பார்த்தேன் என்றால், அப்படத்தின் பை-லைன்: மூன்று குண்டுகள் இந்தியாவை உலுக்கிய கதை என்று இருந்ததால்தான். மொத்தத் திரைப்படத்தையும் பார்த்து முடித்தபோது இது ஏன் இந்தியாவை உலுக்கி இருக்கவேண்டும் என்று தேடிப் படித்ததில் – நிஜமாகவே உலுக்கத்தான் செய்தது. முதலிலேயே இவற்றையெல்லாம் படித்துவிட்டுப் பார்த்திருந்தால் இப்படம் வேறொரு பரிமாணத்தில் பார்க்கக் கிடைத்திருக்கலாம். ஆனால் எதையும் வாசிக்காமல் படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி படத்தைப் பார்த்துவிட்டு, தேடிப் பிடித்து வாசித்தேன்.

அனைத்து முன்னணி ஆங்கில இதழ்களும் இந்த வழக்கைப் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளன. சின்ன சின்ன விவரங்கள்கூட சுவாரஸ்யமானதாகவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் உள்ளன. அத்தனையையும் இந்தப் படத்தில் ஓரளவு நியாயமாகவே கையாண்டிருக்கிறார்கள். இரண்டு ஜாதிக்குரிய பிரச்சினைகளை மட்டும் அணுகாமல் விட்டுவிட்டார்கள். பார்ஸி சமூகத்தின் ஆதரவை மட்டும் காட்டியவர்கள், சிந்தி சமூகத்தின் கருத்தைக் காட்டியதாகத் தெரியவில்லை. நுணுக்கமான சித்திரிப்புகள் மூலம் செய்திருந்தார்களா என்பது எனக்குப் பிடிபடவில்லை. ஒருவேளை, இப்படம் முடிவடையும் தறுவாயில் தொடங்கும் வரலாற்றில்தான் சிந்தி சமூகத்தின் பிரச்சினை தொடங்கி இருக்கலாம்.

கமாண்டர் கவாஸ் மேனக்ஷா நானாவதியின் மனைவி சில்வியா, உண்மையில் இங்கிலாந்துக்காரர். இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இவருக்கு உண்டு. திரைப்படத்தில் இதையெல்லாம் விட்டுவிட்டார்கள். அதிகம் சிக்கல் இல்லாமல் மிக நேரடியாக, ஹீரோ நல்லவர், வில்லன் கெட்டவன் என்று காண்பிக்கவும் சில்வியாவின் திரைப்பட கதாபாத்திரமான சிந்தியாவுக்குக் கொஞ்சம் கருணைப்பார்வையைக் கொண்டு வரவும் ஏற்றவாக்கில் திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இது மட்டுமே படத்தில் கற்பனை, இதுவே மைனஸ் பாய்ண்ட்டும் கூட. கமாண்டர் சுட்டுக் கொல்ல ஒரு இந்தியப் பற்று ரீதியிலான காரணம் ஒன்றைக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படம் என்ற அளவில் கூட இது தேவையில்லை என்றே நினைக்கிறேன். இது இல்லாமலேயே இத்திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஈர்ப்பை உண்டாக்கவே செய்திருக்கும். 1960களில் நடக்கும் இந்த வழக்கு, அந்தக் காலகட்டத்தைக் கண்முன் கொண்டு வரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

சிந்தியாவின் திருமணத்துக்கு வெளியிலான தொடர்பை கமாண்டர் கண்டுபிடிக்கிறார். ஆனால் உண்மை வாழ்க்கையில், தன்னால் மறைக்கமுடியாது என்று வெளிப்படையாகவே சில்வியா சொல்லி இருக்கிறார். பிரேம் அஹுஜா தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், சம்மதம் தெரிவித்திருந்தால் கமாண்டரை விவாகரத்து செய்துவிட்டுத் திருமணம் செய்துகொண்டிருப்பார் என்றும் தெரிகிறது. கமாண்டர் தற்காப்புக்காகக் கொன்றார் என்று ஜூரி பெரும்பான்மையாகத் தீர்ப்பளிக்கிறது. திரைப்படத்தில் பார்த்தபோது இதை எப்படி நம்பமுடியும் என்று யோசித்த எனக்கு, அப்படித்தான் உண்மையில் நடந்தது என்று அறிந்தபோது, சிரித்துக்கொள்ளவே முடிந்தது.

சுட்டுக்கொன்றுவிட்டுச் சரணடையும் கமாண்டரைக் காப்பாற்ற ஒரே வழி, இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை அல்ல என்று நிரூபிப்பது. ‘ஒரு இரவு படுத்துவிட்டால் உன் மனைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமா’ என்று பிரேம் அஹுஜா கேட்டதால் கொன்றதாகச் சொல்லப்படும் காரணத்தை ஜூரி ஏற்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்தில் கமாண்டருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. உச்ச நீதி மன்றம் அதை உறுதி செய்கிறது.

ஜூரியின் முடிவில் விடுதலையாகும் கமாண்டர் தன் மனைவியுடன் சுவிஸ்ஸில் குடியேறுவதோடு திரைப்படம் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவங்கள் அதற்குப்பிறகுதான் விறுவிறுப்படைந்திருக்கின்றன.

மக்கள் மத்தியில் கமாண்டருக்கு ஆதரவு பெருகிறது. அவர் செய்தது சரிதான் என்று ஒரு தரப்பு உருவாகி வர ப்ளிட்ஸ் பத்திரிகை தீவிரமாகச் செயல்படுகிறது. கமாண்டர் ராமன், சில்வியா சீதை, அஹுஜா சீதாவைக் கவர்ந்த ராவணன். மேலும் அஹுஜா ஒரு ப்ளே பாய். இப்படிச் செய்திகளை மிகத் தெளிவாகப் பரப்புகிறது பத்திரிகை. 25 பைசா மதிப்புள்ள பத்திரிகையை 2 ரூ கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். தெருவில் அஹுஜாவின் டவலும் நானாவதியின் பிஸ்டலும் விற்கப்படும் அளவுக்கு வழக்கு பிரபலமாகிறது. ஜூரியின் உறுப்பினர்களும் இப்பத்திரிகையின் கருத்தையே தங்கள் கருத்தாக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அப்பத்திரிகை தொடர்ச்சியாக இது தொடர்பான செய்திகளை வெளியிடுகிறது. பின்னர் ஜூரி முறையே ஒழிக்கப்பட இவ்வழக்கு ஒரு முக்கியமான காரணமாகிறது.

பார்ஸி சமூகத்தினர் பங்கேற்கும் ஒரு ஊர்வலத்தை பத்திரிகை நடத்துகிறது, கமாண்டருக்கு ஆதரவாக. கமாண்டர் விடுதலை செய்யப்படக்கூடாது என்கிறது சிந்தி சமூகம். விஜயலக்ஷ்மி பண்டிட் (நேருவின் சகோதரி) கவர்னர். சிந்தி சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு வியாபாரிக்கும் கமாண்டருக்கும் மன்னிப்பு தந்து இப்பிரச்சினையை புத்திசாலித்தனமாக (!) கையாளுகிறார்.

இதற்குப் பின் சில்வியா, தன் கணவர் கமாண்டர் நானாவதியுடனும் தன் குழந்தைகளுடனும் கனடா செல்கிறார். பின்னர் பொது உலகத்துடன் தொடர்பே இல்லை. 2003ல் கமாண்டர் மரணமடைகிறார்.

சில்வியா ஆங்கிலேயர் என்பதை வைத்து இதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது. அவர் இந்தியராக இருந்தால் ஒரு இந்திய மனம் இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதை யோசிக்கவே மலைப்பாகத்தான் இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு கற்பனையான சந்தோஷத்தைத் தரவும் செய்கிறது.

திரைப்படத்துக்குப் பின்னான தேடல் ஒரு திரைப்படத்தைவிட சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்தது ஆச்சரியம். இந்த சுவாரஸ்யம்தான் இத்திரைப்படத்தைக் கூட, படம் பார்த்த பின்பு, பிடித்த ஒன்றாக மாற்றுகிறது.

குளித்துவிட்டு வெளியில் வரும் பிரேம் அஹுஜாவைக் கொன்றிருந்தால் எப்படி டவல் கொஞ்சம் கூட அவிழவில்லை என்ற கேள்வியின்மூலம் கமாண்டருக்குத் தண்டனையை உறுதி செய்யக் காரணமாக இருந்தவர் ராம் ஜெத்மலானி. இவரது வாழ்க்கையின் வெற்றிகரமான துவக்கப்புள்ளி இந்த வழக்கு என்கின்றன பல பத்திரிகைகள். இந்த டவல் தொடர்பான கேள்விக்குச் சரியான பதிலைத் திரைப்படத்தில் இயக்குநர் அளிக்கவில்லை. அதை அப்படியே விட்டிருக்கிறார். அது ஏன் என்று படம் பார்த்தபோது உறுத்தியது. ஆனால் வரலாற்றில் இந்த டவலின் இடம் இதுதான் என்று அறிந்தபோது, இயக்குநர் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.

உண்மை வரலாற்றில் சில்வியா விரும்பியே அஹுஜாவுடன் உறவு கொண்டிருக்கிறார். தன் கணவர் தன்னைவிட்டு பல நாள்கள் பிரிந்து கப்பலில் சென்றுவிடுவதால் ஏற்படும் தனிமையில் அவர் இந்த முடிவுக்கு வருகிறார். அஹுஜா தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதை அறிந்தே அவர் விலகுகிறார். திரைப்படத்தில் அது சரியாகப் படமாக்கப்பட்டுள்ளது என்றாலும், பிறகு இந்திய மனங்களை திருப்திபடுத்துவதற்காக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. விக்ரம் மஹிஜா (அஹுஜா என்ற நிஜத்தின் திரைப்படப் பாத்திரம்) கமாண்டரைப் பழி வாங்க இப்படி திட்டம் தீட்டினார் என்று பின்னால் காட்டப்படுகிறது.

*

வரலாற்றை ஒட்டிய திரைப்படம் ஒன்று தரும் சுவாரஸ்யம் எல்லையற்றது. தல்வார் திரைப்படம் சிறந்த உதாரணம். இத்திரைப்படத்தை தல்வார் திரைப்படத்தின் மேன்மையுடன் ஒப்பிட முடியாது என்றாலும், உண்மையிலிருந்து கொஞ்சம் மட்டுமே விலகி ஓரளவு நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இலியானா சரியான தேர்வு. அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான விருதெல்லாம் அராஜகம்.

தமிழில் இதுபோன்ற வரலாற்றை ஒட்டிய திரைப்படங்கள் வருவதே இல்லை. ஆனால் ஹிந்தியில் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். எமர்ஜென்ஸி, மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம், தினகரன் நாளிதழில் வேலை செய்த இரண்டு பேர் எரிக்கப்பட்டது, வாச்சாத்தி, கீழ்வெண்மணி, திராவிட இயக்கத்தின் அரசியல், ஈழப் பிரச்சினை என எதையும் நாம் தொடவே இல்லை. எங்காவது ஒரு வசனமாகவோ அல்லது ஒரு காதல் திரைப்படத்தில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு காட்சியாகவோ மட்டுமே வைக்கிறோம். அரசியல் திரைப்படமாக எடுப்பதே இல்லை. நம் ஆட்சியாளர்கள் எடுக்கவிடுவதும் இல்லை. நாம் பார்ப்பதும் இல்லை. இதில் யாரைக் குறை சொல்லி என்ன செய்ய? மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவற்றையெல்லாம் பார்க்கும்போது பெருமூச்சு விடத்தான் வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று இதைக் கொஞ்சம் முயன்றிருக்கிறது. ஆனாலும் முழுமையாகக் கைகூடவில்லை. வணிக ரீதியான வெற்றிக்காகப் பலியிடப்பட்டுவிட்டது. தமிழில் எல்லாப் படங்களுக்குமே இந்த அவலம் தவறாமல் நேர்ந்துவிடுகிறது. தமிழ்த் திரைப்பட உலகம் இதிலிருந்து விரைவில் மீளும் என்று நம்புவோம்.

பின்குறிப்பு: ரஸ்டம் திரைப்படம் பார்த்துவிட்டு, கூகிள் தேடிப் படித்த கட்டுரைகள், பேட்டிகளின் வழியாக எனக்குத் தெரிந்தவற்றை எழுதி இருக்கிறேன். மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி.

Share

Mom – Hindi

மாம் (ஹிந்தி)

இத்தனை‌ திறமையான நடிகை ஸ்ரீ தேவி‌ இத்தனை‌ சீக்கிரம் இறந்திருக்கவேண்டாம். அடிப்படையில் தமிழ் நடிகையாக இருந்தும் அலட்டலில்லாமல் அதே சமயம் அட்டகாசமாகவும் நடிக்கிறார்.

படத்தின் முதல் பாதி வேற லெவல். இரண்டாம் பாதி மக்களின் மனசாட்சி. நியூட்டன், ஹைவே போன்ற படங்களை இப்படிப் புரிந்துகொள்வது சரியெனத் தோன்றுகிறது. எல்லாம் கைவிடும் நேரத்தில் கற்பிதங்களே வழித்துணை. கிட்டத்தட்ட கடவுள்.

இசை ரஹ்மான். பின்னணி இசை இவருடன் இன்னொருவரும். அந்தப் பெண் காரில் கடத்தப்படும் காட்சியின் பின்னணி இசையும் படமாக்கலும் மிரட்டல்.

நவாசுதின் சித்திக், அக்‌ஷய் கன்னா எல்லாருமே கச்சிதம்.

பார்க்கவேண்டிய திரைப்படம். ஒரு பழிவாங்கும் படத்தை சிறப்பான மேக்கிங்கில் கலக்கி இருக்கிறார்கள். தமிழ்ப் படங்கள் இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி. புலி போன்ற கொடுமைகள் அவருக்கு நிகழ்ந்தாலும், இங்கிலீஷ் விங்கிலீஷும் மாம் படமும் மிக முக்கியமானவை. அவர் திறமைக்குச் சான்று. என்றென்றும். ஓம் சாந்தி.

Share

கமல் அரசியல்

கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் – பூ அல்ல விதை – இந்த விளையாட்டெல்லாம் மலையேறி ஆண்டுகள் பலவாகிவிட்டன. கருணாநிதி இதையெல்லாம் மாஸ்டர் செய்து, அவருக்கே போரடித்து, அது மக்களுக்கும் போரடிக்கிறது என்று உணர்ந்து, கட்டுப்படுத்திக்கொண்ட வார்த்தை விளையாட்டை, கமல் தொடங்கி இருக்கிறார். இது போன்ற அறுவைகள் தரும் எரிச்சலெல்லாம் சொல்லி முடியாது.

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பார்த்ததுபோல, பேசிப் பேசியே டெபாசிட் இழக்கப் போகிறவர்களின் காலத்தில் இருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும், கருணாநிதியின் அரசியல் ஓய்வுக்குப் பிறகும், சோபை இழந்த தொலைக்காட்சி ஊடகங்கள், ரஜினி மற்றும் கமல் வருகையை ஒட்டி, சிக்கினாய்ங்கடா என்று ஓவர் கூச்சல் போடுகின்றன. தினம் தினம் கமல் மற்றும் ரஜினி சொல்லும் விஷயத்தை ஒட்டி வெட்டி விவாதங்கள். இதில் நான் பார்த்தது என்னவென்றால், கமல் பற்றிய விவாதமெல்லாம் தூர்தர்ஷனில் வரும் அஞ்சலி இசை நிகழ்ச்சிகள் போலவும் ரஜினி பற்றிய விவாதம் தீப்பொறி பறப்பது போலவும் தோன்றுகிறது இது என் தோற்ற மயக்கம்தான் 🙂 இத்தனைக்கும் அத்தனை ஊடகங்களும் கிட்டத்தட்ட கமலுக்கு ஆதரவாகவும் ரஜினிக்கு எதிராகவுமே இருக்கின்றன. ரஜினிக்கு இது பெரிய மாரல் சப்போர்ட். இப்படியே இருந்தால் ரஜினிக்கு ரொம்ப நல்லது. 🙂

கலாம் பெயரைச் சொல்லி இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று ரஜினியும் கமலும் நம்பினால் அதைவிட ஏமாளித்தனம் வேறெதுவும் இல்லை. அப்துல் கலாமை எல்லாருக்கும் பிடிக்கும். பொதுவாக. அவரே அரசியலில் நின்றிருந்தால் டெபாசிட் போயிருக்கும். எனவே யாரை எதற்காகப் பிடிக்கிறது என்பதறிந்து அரசியல் செய்யவும். ஆத்மார்த்தமாக அப்துல் கலாமின் புகழ்பாடுவதெல்லாம் வேறு. அது அவரவர் தேர்வு. அரசியலில் அவரை வைத்து ஓட்டு வாங்கலாம் என்று நினைத்தால், அரசியலின் அரிச்சுவடியே இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், அரசியல் பேய் இன்னும் உங்களை செவுளோடு சேர்த்து அறையவில்லை என்று அர்த்தம். சீக்கிரம் அடிக்கும்.

Share

எரடனே சலா – கன்னடம் – குசும்பு

எரடனே சலா என்றொரு கன்னடப்படம். இன்னும் பார்க்கவில்லை. தொடக்கத்தில் புகை பிடிப்பது தீங்கானது என்று போடுவார்களே, அப்படியான ஸ்லைடில் இடம்பெற்ற படங்கள் ஆர்வத்தை வரவைத்தன. எனக்குக் கன்னடம் தெரியாது என்பதால் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் அவருக்குத் தெரிந்த கன்னடம் வரையில் படித்துச் சொன்னவை:

நித்யானந்தா உள்ள படம் சொல்வது: புகை மட்டுமல்ல, பெண் தொடர்பும் சில சமயங்களில் தீங்கானது என்னும் அர்த்தத்தில்.

நேரு உள்ள படம் சொல்வது: புகை பிடிப்பது உடலுக்கும் நாட்டுக்கும் தீங்கானது, சாமானியர்களாக இருந்தாலும் பெரிய மனிதராக இருந்தாலும் என்னும் பொருளில்.

தில்லுதான். இதை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள்?

இதில் உள்ள சுவாரஸ்யம், நித்யானந்தாவின் முகத்தை மறைத்ததுதான்!

Share

Pad Man

Pad Man பார்த்தேன். காவியத் திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றாலும் மிக முக்கியமான திரைப்படம், தேவையான திரைப்படம். 90களில் தொலைக்காட்சியில் காண்டம் மற்றும் நேப்கின் விளம்பரங்கள் வந்தபோது நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவுக்கு வருகிறது. முன்பெல்லாம் கழிப்பறைகளின் ஜன்னல்களில் கரடுமுரடான அழுக்கான கறை படித்த துணி ஒன்று இருக்கும். எது என்னவென்று யோசித்ததே இல்லை. பிற்பாடுதான் அது என்ன என்று புரியத் தொடங்கியது. இதைப் பற்றிக்கூடப் பொதுவில் பேசத் தயங்கிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு தலைமுறைப் பெண்ணும் தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய இத்துணியின் போதாமைகளையும் அடுத்த கட்ட நகர்வான நேப்கின்களையும் வெளிப்படையாக ஆனால் எவ்வித ஆபாசத் தன்மையும் இன்றிப் பேசி இருக்கிறது இத்திரைப்படம்.Pad Man பார்த்தேன். காவியத் திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றாலும் மிக முக்கியமான திரைப்படம், தேவையான திரைப்படம். 90களில் தொலைக்காட்சியில் காண்டம் மற்றும் நேப்கின் விளம்பரங்கள் வந்தபோது நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவுக்கு வருகிறது. முன்பெல்லாம் கழிப்பறைகளின் ஜன்னல்களில் கரடுமுரடான அழுக்கான கறை படித்த துணி ஒன்று இருக்கும். எது என்னவென்று யோசித்ததே இல்லை. பிற்பாடுதான் அது என்ன என்று புரியத் தொடங்கியது. இதைப் பற்றிக்கூடப் பொதுவில் பேசத் தயங்கிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு தலைமுறைப் பெண்ணும் தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய இத்துணியின் போதாமைகளையும் அடுத்த கட்ட நகர்வான நேப்கின்களையும் வெளிப்படையாக ஆனால் எவ்வித ஆபாசத் தன்மையும் இன்றிப் பேசி இருக்கிறது இத்திரைப்படம்.

தனக்குத் திருமணம் ஆகவும்தான் ஒரு பெண்ணின் பிரச்சினையையே உணர்ந்துகொள்கிறான் இப்படத்தின் கதாநாயகன். இத்தனைக்கும் அவருக்கு வயதுக்கு வந்த சகோதரிகள் உண்டு. இதுதான் யதார்த்தம். தன் மனைவிக்கு எவ்வித நோயும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நேப்கின் வாங்கச் செல்லும் அவன், எப்படி உலகப் புகழ் பெறுகிறான் என்பதை, தமிழரான அருணாசலம் முருகானந்தம் வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொண்ட கதையின் வழி திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

திரைப்படம் என்று பார்த்தால் சில காட்சிகள் இழுவையாக உள்ளன. ஆனால் இப்படி ஒரு கதையை இத்தனை சுவாரஸ்யமாகப் படமாக்கியதே பெரிய சாதனைதான். ஹிந்தித் திரைப்படங்களுக்கே உரிய புல்லரிப்புக் காட்சிகள் படம் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. நன்றாகப் புல்லரிக்க வைத்து கண்ணில் நீர் கோர்க்க வைத்தே அனுப்புகிறார்கள். அதிலும் உச்சக் காட்சியில் அக்‌ஷய் குமார் பேசும் லிங்கிலீஷ் காட்சி அட்டகாசம்.

தமிழரின் கதையை எப்படி ஹிந்தியில் எடுக்கலாம் என்று சிலர் கோபப்பட்டிருந்தார்கள். தமிழில் யாரும் எடுக்கவில்லை. அப்படியே எடுத்திருந்தாலும் அது எப்படியான படமாக இருந்திருக்கும் என்று யூகிக்கவே முடியாது. ஹிந்தியில் அது ஒரு டீஸண்டான படமாக வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் உள்ள ஹிந்தி பேசும் பெரிய அளவிலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. முன்னாபாய், ட்யூப் லைட், பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற உணர்ச்சிபூர்வமான திரைப்படங்களைப் போன்ற ஒரு படமாக உருவாகி இருக்கிறது.

அக்‌ஷய் குமார் முடிந்த அளவு நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே அழுதுகொண்டே இருக்கிறார். ட்ரம் அடிக்கும் பொம்மை வெங்காயம் வெட்டுவது, அனுமார் வாய்க்குள்ளே போகும் தேங்காய் உடைந்து வெளிவருவது, ரூபாய் வைத்தால் அனுமாருக்கு பூஜை செய்ய உள்ளே போய் திரும்பி வரும்போது லட்டுக்களுடன் வரும் பொம்மை போன்ற யோசனைகள் நன்றாக வந்திருக்கின்றன.

குறை என்று பார்த்தால், அக்‌ஷய் குமாருக்கு உதவ வரும் பெண் அவரைக் காதலிப்பாகக் காட்டி இருப்பது. இதைத் தவிர்த்திருக்கலாம். எத்தனையோ படங்களில் பார்த்துச் சலித்தாகிவிட்டது.

இசை ஹிந்தித்தன்மையில் இருக்கவேண்டும் என்பதற்காக ராஜாவைத் தேந்தெடுக்கவில்லை என்று பால்கி சொன்னதாக இணையத்தில் பார்த்தேன். என்ன ஹிந்தித்தன்மை உள்ளது என்பதை நான் இனிமேல்தான் கண்டுபிடிக்கவேண்டும். எனக்குத் தெரியாத ஹிந்தித்தன்மை என்னவோ இருந்திருக்கலாம்.

பார்க்கவேண்டிய திரைப்படம்.

பிகு: இப்போது இந்த பயன்படுத்தப்பட்ட நேப்கின்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் சமூகம் இருக்கிறது. இதை எரிக்கத் தேவையான எந்திரங்களை அரசு பள்ளிகளுக்கு வழங்க இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தகட்ட நகர்வு.

Share

துப்பறிவாளன் – துப்பறிய நிறைய இருக்கிறது

துப்பறிவாளன் திரைப்படம் பார்த்தேன். (கொஞ்சம் மெல்லத்தான் வருவோம்…)

ஏன் இத்தனை கொலைகள்? வெறும் பணத்துக்காகவா? பணத்துக்காக ஒருவர் சாகலாம், ஒட்டுமொத்த கூட்டமும் ஒருவர் பின் ஒருவராகவா? இது என்ன லாஜிக்? ஒரு கொள்கைக்காக தன் உயிரை தீர்த்துக்கொள்வதில் ஒரு ஏற்பு உள்ளது. அதெப்படி வெறும் பணத்துக்காக எல்லாரும் சாவார்கள்? ஜப்பானிய முறைப்படி தன் வயிறை அறுத்து ஒருவர் சாவது வெறும் பணத்துக்காகவா? இதில் பெரிய அளவில் மிஷ்கின் சறுக்கிவிட்டார் என்றே நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய கெடுதல் நடந்து அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும்போது, மாட்டிக்கொள்பவர்கள் இப்படிச் சாவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாமல் பணம் ஒன்றே குறிக்கோள் என்பதற்காகச் செயல்பட்டவர்கள், கூலிப்படையினர், இப்படி மாட்டிக்கொண்டதும் வரிசையாகத் தற்கொலை செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய பிசகு என்றுதான் இப்போதும் தோன்றுகிறது.

ஒருவேளை எனக்குத்தான் படம் புரியவில்லையோ என்னவோ. 

Share

அருவி – திரைப்படம்

சரவண கார்த்திகேயன், எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறீர்கள். இதே சந்தேகங்கள்தான் நான் படம் பார்த்த நாளிலும் இருந்தது. பலரிடம் தொலைபேசியிலும் சொன்னேன். இந்தப் பெண் பழிவாங்குவது என்பது அபத்தம். சம்மதத்துடன் நடந்த உடலுறவு இது. அதுவும் எய்ட்ஸ் வந்த பெண் உடலுறவுக்கு ஒத்துக்கொள்வது, அந்தப் பெண் பழிவாங்குவது போலத்தான் உள்ளது.

இதில் அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவும் விதமே சரியானதுதானா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

படத்தில் வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடர்பான காட்சிகளில் தரமில்லை. ஆனால் மக்கள் கைதட்டி ரசித்தார்கள் என்பது உண்மை.

ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு மாவோயிஸ்ட்டா என்றெல்லாம் போலிஸ் துறையே கலங்கியது என்பதெல்லாம் சுத்தமாக நம்பவே முடியாதவை.

ஆனால் இத்தனையையும் மீறி இந்தப் படம் ஒரு பாதிப்பைச் செய்தது என்பதும் உண்மை. இரண்டு நாள் இந்தப் படம் பற்றிய நினைப்பாகவே இருந்தது. அதிலும் முதல் இருபது நிமிடங்கள் (நான் படம் பார்த்த அன்றே இதைக் குறிப்பிட்டு எழுதி இருந்தேன்) அழகோ அழகு.

நடிகையின் நடிப்பு மிக அனாயாசம்.

எனக்குள்ள இன்னொரு பிரச்சினை: படத்தில் ஏமாற்றுபவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக வேண்டுமென்றே சித்திரிப்பது. ஒருவர் உபன்யாசம் செய்பவர். இன்னொருவர் உதவி செய்யும்போது பின்னணியின் அடிகளாரின் படம் பார்த்த நினைவு. டிவி ஷூட் தொடங்கும்போது பிள்ளையாரை வணங்குவதுபோன்ற ஒரு ஷூட். இதிலெல்லாம் எனக்குப் பிரச்சினை என்பது, இப்படி எடுக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் ஏமாற்றுபவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பது போன்ற ஒரு செய்தி வருவதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஏமாற்றுவது என்பது ஒரு பொதுவான செயல்! அப்படியானால் கடவுள் நம்பிக்கை தந்தது என்ன என்பது பெரிய அளவில் யோசிக்கவேண்டிய தத்துவார்த்தப் பிரச்சினை.

சிலர் இப்படம் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகச் சொன்னார்கள். நான் ஏற்கவில்லை. பல போலிஸ்காரர்களின் குரல்களும், நியாயம் பேசும் நபர்களின் குரல்களும் இப்படத்தில் பிராமண வழக்கிலேயே ஒலித்தன என்பது நினைவுக்கு வருகிறது.

இப்படம் நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு படம் என்பதே என் நிலைப்பாடு.

இந்த சின்ன வயதில் ஒரு இயக்குநர் இந்தப் படம் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்படவேண்டியது, நம்பிக்கையைத் தருவது.

Share