Archive for திரை

மெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி

* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம். 

* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல.  இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக்கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை. 

* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சினையா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.

* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.

* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.

* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இருந்தால்.

* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும். 

* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.

* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு!

* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)

* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.

* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁

* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss. 

ஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.

Share

2013 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

என் பட்டியல் இது:

 

விருதுகள்

சிறந்த திரைப்படம் – மதயானைக் கூட்டம்

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்

சிறந்த இயக்குநர் – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த திரைக்கதை – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)

சிறந்த கதை – கடல் (ஜெயமோகன்)

சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)

சிறந்த படத்தொகுப்பு – கிஷோர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த பாடல் இசை – ஏ.ஆர். ரஹ்மான் (மரியான், கடல்)

சிறந்த பாடல் ஆசிரியர் – ஏகாதசி (மதயானைக் கூட்டம்)

சிறந்த நடிகர் – பாலு மகேந்திரா (தலைமுறைகள்)

சிறந்த நடிகை – ஷெல்லி கிஷோர் (தங்கமீன்கள்)

சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)

சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)

Share

தலைமுறைகள் – திரைப்பட விமர்சனம்

தன்னகங்காரத்திலும் வறட்டுப் பிடிவாதத்திலும் ஊறிக்கிடக்கும் ஒரு முதியவர் தன் பேரனின் வரவால் தன்னை அறிந்துகொள்ளும் கதையை பாலுமகேந்திரா தலைமுறைகளில் காட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவின் படங்களுக்கே உரித்தான, நிலைகொள்ளும் கண்கள் காணும் காட்சிகளோடு அவரது கேமரா வெகு இயல்பாக உணர்ச்சிகளைத் திரையில் கொண்டுவருகிறது.

முதியவராக பாலுமகேந்திரா நடித்திருக்கிறார். காவி வேட்டியுடன் நடுங்கும் குரலுடன் தடுமாறும் நடையுடன் உடைந்த குரலுடன் திரைமுழுக்க அவரது உடல்மொழி வியாபித்துக் கிடக்கிறது. தன் மகனிடம் காண்பிக்கும் முரட்டுப் பிடிவாதத்திலும் சரி, தன் பேரனை முதன் முதலில் பார்க்கும்போது தனது இறுக்கங்களெல்லாம் உடைந்து தளர்ந்து அழும்போதிலும் சரி, அவரது அலட்டலற்ற இயற்கையான நடிப்பு அசர வைக்கிறது.

படத்தில் பேரனாக வரும் சிறுவனும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் தேவை உணர்ந்து, மிகை நடிப்பில்லாமல் நடித்திருப்பது பெரிய பலம்.

இளையராஜாவின் இசை எந்த ஒரு இடத்திலும் உறுத்தலாக இல்லை. பெரும்பாலான மௌனமான காட்சிகளுக்கிடையே பின்னணியில் உறுத்தாத இசை என இளையராஜாவின் இசை படத்தோடு ஒன்றி வெளிப்படுகிறது.

இத்தனை இருந்தும் படத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. படம் முழுக்க ஒரு சரடாக இல்லாமல், சிறிய சிறிய காட்சிகளாக நகர்வது போன்ற ஒரு தோற்றமே அதன் காரணம். சிறிய சிறிய காட்சிகளின் வழியாக, நாம் தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்கிறோம் என்றாலும், பல காட்சிகள் க்ளிஷேத்தனமாக உள்ளது. கதையில் புதுமை இல்லை என்னும்போது காட்சிகளிலாவது புதுமை வேண்டும். அது இல்லை.

தாத்தா தனது பாரம்பரியத்தைத் தன் பேரன்மீது செலுத்த முயல்வது இயல்பு என்றால், ஒரு பாதிரியார் ஒரே ஒரு வார்த்தை சொன்னதும் அதைக் கைவிடுவதும், ஏசு படத்தைத் தன் பூஜையறையில் மாட்டி வைப்பதும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிகின்றன. பழமைவாதத்துடன் ஒரு கதாபத்திரம் கடைசி வரையில் இருப்பது இயல்புக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையில் அதுவே இயல்பு. ஆனால் இந்தக் காட்சிகளின் மூலம் பாலு மகேந்திரா ஒரு செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். திரைப்படத்தில் செய்தி சொல்வது என்பதே யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்வதுதான். படமும் இந்தப் புள்ளியில் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்த ஒருவருக்கு வாட் இஸ் யுவர் நேம் என்றுகூடக் கேட்கத் தெரியாது என்பது ஏற்கும்படியாக இல்லை. 12 வயதுள்ள சென்னையில் வளரும் ஒரு பையனுக்கு தமிழ் தெரியாது என்பதும், டாக்டர் பெண்ணுக்கு நதி என்றால் என்னவென்று தெரியாது என்பதும் நம்பும்படியாக இல்லை. கதாபாத்திரத்தை நிறுவ இத்தனை கருப்பு-வெள்ளையாக்க வேண்டியதில்லை.

நறுக்குத் தெரித்தாற்போல் வந்துவிழும் வசனங்கள் பெரிய பலம். பல காட்சிகளில் இந்த வசனங்களே படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், வசனம் மிக யதார்த்தமாக, நாம் யாரும் பேசும் மொழியில் அதே வார்த்தைகளோடு வெளிப்படுகிறது என்பதுதான்.

தமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வரவேண்டும். அந்த வகையில் இது முக்கியமான படம். பாலுமகேந்திராவின் சமீபத்திய முந்தைய திரைப்படங்களைவிட இது சிறப்பாக உள்ளது என்பதும் உண்மை. சிறந்த நடிகருக்கான விருது பாலுமகேந்திராவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி: ஆழம், ஜனவரி 2014

Share

என்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா?

என்றென்றும் புன்னகை திரைப்படத்தைக் கடந்த வாரம் பார்த்தேன். விமர்சனம் எழுதும் அளவுக்குப் படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். படத்தின் முதல் பாதியில், மூன்று ஆண்கள் நட்பின் போர்வையில் அடித்துக் கொள்ளும் கூத்துகள் ஆபாசமானவை. ஆனால் தமிழ்த் திரையுலகத்துக்கு ஆபாசம் ஒன்று புதிதல்ல என்பதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆபாசத் திரைப்படங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்ததால், சிறிய முகச்சுளிப்போடு இவற்றைக் கடந்துசெல்ல பழகிவிட்டதால், இதெல்லாம் ஆபாசமா என்ற எதிர்க்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திராணி இல்லாமல் அமைதியாக இருக்கப் பழகிவிட்டதால், இப்படத்தையும் அப்படியே கடந்தேன். இரட்டை அர்த்த வசனமெல்லாம் மலையேறிப்போய், பார்த்திபன் பாணியில் – ஒரே அர்த்தம்தான், அது அதுதான் – என்று இன்றைய தமிழ் வணிக சினிமா மாறிவிட்டிருக்கிறது. இதில் என்றென்றும் புன்னகையை மட்டும் வைத்து வருத்தப்படத் தேவையில்லை என நினைத்தேன்.
 
டிவிட்டரில் ஒருவர், அது மருத்துவர் ராமதாஸின் தயாரிப்பில் வந்த படம் என்று சொல்லியிருந்தார். முதலில் அதைப் பகடி என்று நினைத்துவிட்டேன். பின்னர் கூகிளிட்டபோதுதான் தெரிந்தது, படத்தை தயாரித்தவர் பாமக அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் மகன் என்பது! அப்படியானால் என்றென்றும் புன்னகை முன்வைக்கும் ஆபாசங்களைப் பற்றியும் அதன் தொடர்ச்சியான அரசியலைப் பற்றியும் பேச வார்த்தைகள் இருக்கின்றன. படத்தை இயக்கியவர் அஹ்மத். அவர் இப்படி இயக்கியது பற்றி எனக்குப் பொதுவான கருத்துகள் உண்டென்றாலும், தனியாகச் சொல்ல எதுவுமில்லை.
 
பாபா திரைப்படம் வந்தபோது அதில் குடிக்காட்சிகளும் சிகரெட் புகைக்கும் காட்சிகளும் வருவதால் அதனைத் தடைசெய்ய அராஜகமான வழியில் போராடியது பாமக. குடிக்காட்சிகள் வரக்கூடாது, புகைக்கும் காட்சிகள் வரக்கூடாது என்று பாமக போராட சகல உரிமையும் உள்ளது. ஆனால் அது பயமுறுத்தும் வன்முறையைக் கைக்கொள்ளும் வகையிலும் மிரட்டும் தோரணையிலும் அமையக்கூடாது. ஆனால் அன்று பாபா திரையிடப்பட்ட திரையரங்குகளில் கலாட்டா செய்வோம் என்று பாமக மிரட்டியது. அதிகார பலம் தன் பக்கம் இருப்பதால் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஜாதி ஓட்டுக்காக அரசு வாய்மூடி இருக்கும் என்று பாமக நம்பியது. அதுதான் நடக்கவும் செய்தது. இதனாலும் (வேறு காரணங்களாலும்) பாபா தோல்வி கண்டது. ரஜினி தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார். இதற்கெல்லாம் காரணம், சமூக அக்கறை என்று காட்டிக்கொண்டது பாமக.
 
இன்று பாமகவின் அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் புதல்வர் ஜி.கே.எம். தமிழ்குமரன் எடுத்திருக்கும் படம் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்று பார்ப்போம். மூன்று இளைஞர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பப்பில் ஆபாச நடனம் ஆடுகிறவர்களுக்கு மத்தியில் குடிக்கிறார்கள். ஒருவர் ஆண்குறியை இன்னொருவர் பார்ப்பது சகஜம் என்பதுபோல பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். ஹோமோ போல நடந்துகொள்கிறார்கள். 
 
பொதுவாகக் காதல் திரைப்படங்களில் காதலர்கள் உறவுகொள்வதைக் காண்பிப்பதில்லை. ஆனாலும் பார்வையாளர்கள் தேவையெனில் அவர்கள்  உறவுகொண்டதாகவே நினைத்துக்கொள்வார்கள். அதேபோல் இதில் ஹோமோ என்று நேரடியாகக் காண்பிக்காவிட்டாலும், அவர்கள் ஹோமோ என்று பார்வையாளர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிலேதான் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் இந்த மூன்று நண்பர்களுள் ஒருவர், மற்ற இருவரை ஹோமோ என்று சொல்லிக் கலாய்க்கும் காட்சியும் உண்டு. (இந்தக் காட்சியில் ஹோமோ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.) ஹோமோ பற்றித் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அதை எப்படி எந்த சீரியஸ் உணர்வுடன் படமாக்கிறோம் என்பது முக்கியமானது. அதைவிட அதை யார் படமாக்குக்கிறார்கள், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பாடு என்ன என்பதும் எனக்கு முக்கியமானதே. இன்று இப்படி கலாய்க்கத் தொடங்கினால்தான் நாளை இதைப் பற்றி அலசும் முக்கியமான திரைப்படங்கள் வரும் என்றும் இங்கே நம்புவதற்கில்லை. ஏனென்றால் இன்றுவரை திருநங்கைகள் பற்றி ஒரு உருப்படியான திரைப்படமும் வந்ததில்லை. (சந்தோஷ் சிவன் ஒரு படம் எடுத்ததாக நினைவு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை.) ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து இப்படி திரைப்படங்களில் கேவலமாகக் கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எனவே தமிழ்த் திரையுலகம் ஹோமோக்களைப் பற்றிய உருப்படியான படத்தை எடுத்துவிடும் என்றும் நம்புவதற்கில்லை.
 
என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் எப்போதும் ஆண்கள் குடித்துக்கொண்டே இருப்பதோடு, ஒரு காட்சியில் ஹீரோயினையும் குடிக்க அழைக்கிறார்கள். ஐடி கல்ச்சரைக் காண்பிக்கிறார்களாம். இதுதான் யதார்த்தம் என்றால், பாபா படத்தில் ஒரு ரௌடி குடிப்பது போலவும் புகைப்பது போலவும் காட்டுவது யதார்த்தம் இல்லையா? பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எனவேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும்!) அப்படி எதிர்க்கமுடியவில்லை என்றால், பாபாவை எதிர்த்த தவறுக்கு ரஜினியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.

 
குடிக்காட்சிகளும் புகைக்காட்சிகளும் தவறு என்பதை ஏற்று, தனது அடுத்த படத்தில் ரஜினி சுவிங்கத்தை மென்றுகொண்டு வந்தார். அந்தப் பண்பாவது இவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

 

 

 

 

Share

மதயானைக் கூட்டம்

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.


ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.


நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.


ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.


இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.
பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.


இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.


மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்

Share

ராவண தேசம் – திரைப்பட விமர்சனம்

ராவண தேசம்

சில நேரங்களில் நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத களம் ஒன்றில் திரைப்படங்கள் வந்துவிடக்கூடும். அப்படி ஒரு நிகழ்வு தமிழ்த் திரைப்பட உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவர சாத்தியமே இல்லை என்று நாம் நம்பவைக்கப்பட்டுவிட்ட களம் ஒன்றை அஜெய் நூத்தகி திரைப்படமாக்கியிருக்கிறார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மேலோட்டமாக ஈழத் தமிழர்களின் இன்னல்களைக் கோடிட்டுக் காட்டும் படங்கள் சில தமிழில் வந்ததுண்டு. அவை எதுவுமே ஈழ மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகத்துக்கு எந்த வித நியாயத்தையும் செய்ததில்லை. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் காட்சிப்படுத்திய திரைப்படம். ஆனால் அதுவும்கூட, ஈழத்தைப் பின்னணியாக மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கமான தமிழ்த் திரைப்பட செண்டிமெண்ட்டை மட்டுமே முன்னெடுத்தது.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியான அதிர்ச்சியைத் தருகிறது ராவண தேசம். இந்தப் படத்தை எப்படி சென்சார் அனுமதித்தது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானதாக இல்லை. என்றாலும், புலித் தலைவர் வரும் ஒரு திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி அளித்ததே ஆச்சரியமான விஷயம்தான்.  

முள்ளி வாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்படும் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்குகிறது திரைப்படம். முள்ளி வாய்க்காலை இலங்கை சிங்கள ராணுவம் கைப்பற்றுகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் செய்யும் கொடுமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் காண்பிக்கப்படுகின்றன. முள்ளி வாய்க்காலை மீண்டும் புலிகள் (புலிகள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) கைப்பற்றுகிறார்கள். சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம், எனவே தமிழர்கள் யாரும் முள்ளி வாய்க்காலை விட்டு வெளியேறவேண்டியதில்லை, மீறி வெளியேறினால், கொல்லப்படுவார்கள் என்று அறிவிக்கிறது போராளிகள் குழு.

அங்குள்ள மக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், இந்த மண்ணும் வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் சொந்தங்கள் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்கிறார்கள். இங்கேதான் ஒரு திருப்பம் நிகழ்கிறது.

தன் கூட்டாளி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, போராளிகளின் தலைவர் (பிரபாகரன் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) தன்னைச் சுடும்படிச் சொல்கிறார். அவரும் சுட்டுவிடுகிறார். தலைவர் வீர மரணம் எய்துகிறார். சிங்கள ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று சொல்ல இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்படிப் காட்சிப்படுத்தியிருப்பது எவ்வித நம்பகத்தன்மையையும் அளிக்கவில்லை.

இனியும் இங்கிருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று சொல்லும் பத்து பேர் அடங்கிய குழு, புலிகளுக்குத் தெரியாமல் கடல் வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து தப்பிக்கிறது. அவர்கள் கடலில் எதிர்கொள்ளும் உயிரை உறைய வைக்கும் பிரச்சினைகளே மீதிப் படம்.

கடலில் திசை தெரியாமல் வழிதவறிப் போகிறார்கள். கொண்டு வந்த உணவு காலியாகிவிடுகிறது. பணப்பேராசை பிடித்த ஏஜெண்ட் தன் உணவை யாருக்கும் தருவதில்லை. தங்கள் மகனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கும் வயதான கிழவி அந்தப் பயணத்திலேயே மரணமடைய, அந்த உடலை கடலில் வீசிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். கைக் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக வேறு வழியின்றி கடல் நீரைப் பருகுகிறாள் ஒரு தாய். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் கரு கலைகிறது. இப்படி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை மிரள வைக்கின்றன.

ராம தேசத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்து கதாநாயகன் ராம தேசத்து மக்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தங்கள் சாவுக்கு மௌன சாட்சிகளாக விளங்கும் இந்திய தேசம் என்றேனும் ஒருநாள் தங்கள் மனசாட்சிக்கேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பொருளில் அக்கடிதம் அமைகிறது.

ஒரு அகதியாகக்கூட வழியின்றித்தான் ஈழத் தமிழனின் நிலை உள்ளது என்பதை மிகவும் அழுத்தமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் திரைப்படம் என்ற வலிமையான ஊடக மொழியின்படி இப்படம் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது என்றே சொல்லவேண்டும். இடைவேளை வரும் காட்சிகள் மிகவும் நாடகத்தனமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்து மக்களின் போராட்டம் என்ற அளவில்கூட, ஒரு நாட்டு மக்களின் போராட்டம் இப்படத்தில் பதிவாகவில்லை.

தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மக்களைக் கேடயமாகப் புலிகள் பயன்படுத்தியைப் பற்றியெல்லாம் எவ்விதக் குறிப்புகளும் இல்லை. ஆனால் திடீரென்று மக்கள் எங்களுக்கு உயிர்தான் வேண்டும் என்ற காட்சி மட்டும் உள்ளது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் காட்டப்படவில்லை.

இந்திய தேசத்துக்குச் செல்ல முடிவெடுக்கும் பத்து பேர் அடங்கிய குழுவை எப்படி இந்தியா எதிர்கொள்கிறது என்கிற சவாலுக்குள்ளேயே இயக்குநர் செல்லவில்லை. கடலோடு படத்தை முடித்துவிட்டது பெரிய ஏமாற்றம். கடலில் சாகும் தறுவாயில் கதாநாயகன் கடிதம் எழுதும்போது குறிப்படப்படும் தேதியும், பிரபாகரன் மரணத் தேதியும் பொருந்தாமல் உள்ளது.

ஈழத்தில் இறந்து மடிந்த ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள். இப்படத்தில் ஈழத் தமிழராக ஹிந்து அடையாளத்தோடு காண்பிக்கப்படும் மனிதரோ மிகவும் மோசமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். படத்தின் கதாநாயகன், அவரது நண்பர்கள் எல்லாம் நல்ல, அப்பாவிக் கிறித்துவர்களாக மத அடையாளத்தோடு  காட்டப்படுகிறார்கள்.இவ்வளவு துயரத்துக்குப் பிறகும் ஒரு தமிழன் ஹிந்து என்பதாலேயே வெறுக்கப்படும் அரசியலை நினைத்து வேதனையே மிஞ்சுகிறது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் பற்றிப் படமே எடுக்கமுடியாது என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாருமே கோழைகளாகவோ அல்லது ஊரை ஏமாற்றிக்கொண்டோ இருக்கவேண்டும். இத்திரைப்படம் அதை வலுவாக நிரூபிக்கிறது. இதுபோன்று ஒரு பத்து திரைப்படங்கள் வந்தால், மிகத் தீவிரமான அரசியல் படங்கள் ஈழத்தை மையாக வைத்து வர வாய்ப்புண்டு. அந்தக் கதவை இந்தத் திரைப்படம் திறந்து வைத்திருக்கிறது.

 

திரைப்படங்கள் இதுவரை பல வகைகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைக்காக, பிரசாரத்துக்காக, இயக்கத்துக்காக, பொழுது போக்கிற்காக என. இன்று உலகக் கவனம் பெறும் திரைப்படங்கள் எல்லாமே தங்கள் நாட்டின் தங்கள் மக்களின் தங்கள் இனத்தின் பிரச்சினைகளைப் பேசுபவையே. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இதைப் பற்றியெல்லாம் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களோடு ஒப்பிடத் தகுந்த வகையில், தங்கள் இனம் பற்றியோ மண் பற்றியோ பேசத் துவங்கவில்லை. மேலோட்டமான முயற்சிகள் உண்டு. அவை இன்னும் சரியான அளவில் வடிவம் பெற்று மேலெழவில்லை. இத்திரைப்படம் திரைப்பட மொழியில் மிகவும் மோசமாகத் தோற்றாலும், தன் மக்களைப் பற்றிப் பேசவேண்டும் என்ற உந்துதல் உள்ளது நல்ல விஷயம்தான். முக்கியமான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு தெலுங்கர்.

(நன்றி: ஆழம், டிசம்பர் 2013 இதழ்)

 

Share

சூது கவ்வும் விமர்சன அபத்தம்

அபிலாஷ் எழுதிய இந்த விமர்சனம் ஜூன் மாதம் உயிர்மையில் வந்தது. சூது கவ்வும் திரைப்படத்தைவிட அபத்த நகைச்சுவையாகப் பட்டது. ஒரு படத்தைப் புகழவேண்டும் என்று முடிவு கட்டி, அதில் வரும் சாதாரணக் காட்சிகளைக்கூடப் புகழ்ந்து தள்ளுவதும் (சாரு இப்ப்டித்தான் செய்வார், ஆனால் சாருவின் திரைப்பட விமர்சனம், நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ, நிச்சயம் உருப்படியானதாக இருக்கும். வார்த்தைகளில் விளையாடும் ஏமாற்றெல்லாம் இருக்காது) எதாவது ஒன்றிரண்டு ஹங்கேரிய மங்கோலிய இயக்குநர்களின் பெயர்களை உள்ளே இழுத்துவிடுவதுமென இலக்கியப் பத்திரிகைக்கான சம்பிரதாயங்களில் இருந்து சிறிதும் விலகாத விமர்சனம் இது. 

இந்த மாத உயிர்மையில் வாசகர் கடிதம் பகுதியில் திருமாவளவன் என்பவர் சரியாக இவ்விமர்சனத்தைப் பற்றிக் கருத்துரைத்துள்ளார். திருமாளவன் இன்னும் கொஞ்சம் ஆழமாக இவ்விமர்சனத்தின் அலட்டல்களையும் செயற்கைத்தனத்தையும் சொல்லியிருக்கலாம்.

இவ்விமர்சனத்தைப் படித்த சூது கவ்வும் இயக்குநர் தனக்குத் தெரியாததெல்லாம் அபிலாஷுக்குத் தெரிந்திருப்பது பற்றி நிச்சயம் அதிர்ச்சியும் கவலையும் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால் இந்த விமர்சகர்கள் ஒரு படத்தைப் பாராட்டினால் அடுத்த படத்தைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிடுவார்களே! பாவம் நலன். அதிலும் திடீரென்று அபிலாஷ் தத்துவ நோக்கில் அடித்துச் செல்லும் வரிகள் எல்லாம் – நெஜமாவே முடியலை! 

இன்னொரு முக்கியமான விஷயம், சூது கவ்வும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அபத்த விமர்சனத்தைப் படித்தபின்பும் எனக்கும் சூது கவ்வும் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது என்றால், அப்படத்தின் சாதனையைப் புரிந்துகொள்ளுங்கள். சூது கவ்வும் அபத்த நகைச்சுவை என்றால், இவ்விமர்சனம் அபத்தம்.

Share

பரதேசி பற்றி நாலு வரி

 

* தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பிரச்சினையை பிரதிபலிக்கவேண்டிய படம், கிறித்துவ மதமாற்றத்தைச் சொல்லும் படமாக வந்ததில், ஓர் ஹிந்துத்துவ ஆவணமாக ஆகிப் போனதில், வருந்தவா மகிழவா எனத் தெரியவில்லை.

* டேனியலுக்கு இப்பேற்பட்ட துரோகத்தை, அநியாயத்தை பாலா செய்திருக்கவேண்டாம்.

*முதல் பாதியில் நடிப்பு அதீதம். இசை அதீதம். பார்க்க சகிக்கவில்லை. முதல் பாதியில் படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியோ வெறும் தொகுப்பாகப் போய்விட்டது. 

* நாஞ்சில் நாடனுக்கும் செழியனுக்கும் அந்த மூதாட்டிக்கும் (என்ன ஒரு யதார்த்தம்) வாழ்த்துகள்.

Share