Archive for திரை

களத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்

  • படத்தில் தொடர்பே இல்லாமல் ஒரு காமெடி காட்சி. ஜீவா கதாபாத்திரமும் காமெடி நடிகரும் பைக்கில் வருகிறார்கள். அப்போது ஒருவன் எதிரே ஓடி வருகிறான். அவன் காவி வேட்டி, பட்டை அணிந்திருக்கிறான். அவன் ஜீவாவிடம், ஒரு பிரச்சினை உடனே வாருங்கள் என்று அழைக்கிறான். என்ன பிரச்சினை என்று சொல்லாமல், பிரச்சினை பிரச்சினை என்று இழுக்க, காமெடி நடிகர் காவி வேட்டி கட்டியவனைப் பார்த்துச் சொல்கிறார், ‘ஊர்ல மீத்தேன் பிரச்சினை அது இதுன்னு ஆயிரம் பிரச்சினை இருக்கு, இதுதான் ஒனக்கு பிரச்சினையா, ஓட்றா’ என்று சொல்லிவிட்டு, ‘இப்ப பிரச்சினை சரியாய்ட்டா என்ன பண்ணுவ’ என்று கேட்க, காவி வேட்டிக்காரர் சொல்கிறார், ‘ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவேன்’ என்று. காவி வேட்டிக்காரனை ஜீவாவும் காமெடி நடிகரும் விரட்டும்போது காமெடி நடிகர் சொல்லும் வசனம், ‘அஞ்சறிவு உள்ள இவனையெல்லாம் விரட்டணும்.’ (வசனங்களை நினைவில் இருந்து எழுது இருக்கிறேன். அஞ்சறிவு என்னும் வார்த்தை காதில் விழுந்தது போலத்தான் இருந்தது. இன்னொரு முறை பார்க்கும் பொறுமை இல்லை என்பதால் அதை உறுதி செய்யாமல் எழுதி இருக்கிறேன்.)
  • கிறித்துவப் பெண்ணை ஹிந்துப் பையன் காதலிக்கிறான். கிறித்துவப் பெண் சொல்கிறாள், ‘எங்கப்பாகிட்ட நீ பொண்ணு கேட்டு வரும்போது எங்கப்பா ஒன்னை அசிங்கமா திட்டுவாரு. மதம் மாறச் சொல்வாரு..’ எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லும் ஹீரோ (அருள்நிதி), எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டு, மதம் மாற பிரச்சினையே இல்லை என்று சொல்கிறார்.
  • கிறித்துவப் பெண் தன் காதலை ஏற்றுக் கொள்ள அருள்நிதி கதாபாத்திரம், சர்ச்சில் ஹீரோயின் பின்னாலேயே தவம் கிடைக்கிறது. இரண்டு முறை இந்தக் காட்சி வருகிறது. ஆனால் ஒரு தடவை கூட கிறித்துவப் பெண் தன் காதலனுக்காக கோவிலுக்குள் காலை வைக்கும் காட்சி என்றில்லை, கோவில் இருக்கும் தெருவில் காலை வைக்கும் காட்சி கூட இல்லை!
  • ஜீவா கதாபாத்திரம் ஒரு வசனம் சொல்கிறது. ‘அரேஞ்ச்ட் மேரேஜ் சிஸ்டத்தை மொதல்ல ஒழிக்கணும்!’

முக்கியமான பின்குறிப்பு: தொடர்பே இல்லாமல் ஒரு காட்சியை சொன்னதற்காக, மற்ற காட்சிகள் எல்லாம் தொடர்போடு இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். எல்லாக் காட்சிகளுமே தொடர்பே இல்லாமல்தான் நகர்கின்றன.

Share

அந்தகாரம்: ஒரு வெளிச்சம்

அந்தகாரம் – தமிழின் மிக முக்கியமான படம். நல்ல படம், மோசமான படம் என்ற இரு வகைகளைத் தாண்டி புத்திசாலித்தனமான படம் என்றொரு வகையை புதிய அலை திரைப்படங்கள் தோற்றுவித்திருக்கின்றன. பீட்ஸா, ஜிகர்தண்டா, சூது கவ்வும் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்தகாரம் இந்தவகைத் திரைப்படம்.

சில இயக்குநர்கள் தங்கள் வருகையின்போதே தாங்கள் மிக முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் வரப் போகிறவர்கள் என்று அறுதியிட்டுச் சொல்லும் படங்களோடு வருவார்கள். பாரதிராஜா, மணிரத்னம், நலன் குமாரசாமி, கார்த்தி சுப்புராஜ், மணிகண்டன் போல. விக்னராஜனும் அப்படி ஒரு படத்துடன் வந்திருக்கிறார். அரசியல் செருகல்களால் திசை மாறாமல் இருக்கவேண்டும்!

தமிழில் வந்த திரைப்படங்களில் இது போல, கிட்டத்தட்ட கடைசி வரை என்னதான் நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் ஒரு படம் இருக்குமா எனத் தெரியவில்லை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றால் இரண்டரை மணி நேரத்தில்தான் இத்திரைப்படத்தின் முழு விஷயமும் பிடிபடுகிறது. காலக் கோட்டைக் கலைத்துப் போட்டு ஆடும் விளையாட்டை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். லூஸியா (தமிழில் என்னைப் போல் ஒருவன்) திரைப்படத்தை மட்டுமே இப்படத்துடன் ஒப்பிட முடியும். படமாக்கலும் கிட்டத்தட்ட லூஸியா போலவே உள்ளது.

படமாக்கலைப் பொருத்தவரை, இயக்குநர் மற்றும் எடிட்டரின் அசாதாரண உழைப்பு நன்றாகத் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு யோசித்துச் செய்திருக்கிறார்கள். தமிழில் இது மிகவும் அரிது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட இத்தனை யோசித்துச் செய்வார்களா என்று சந்தோஷம் கொள்ள வைக்கிறது இப்படம். அதிலும் அந்த விஷயங்கள் துருத்திக் கொண்டிருக்காமல் சரியாக அமைந்திருப்பது பாராட்டப்படவேண்டியது. கதையும் அது நகரும் விதமும் எந்த அளவுக்கு இருந்தது என்றால், தமிழில் இப்படி யோசிக்க யார் இருக்கிறார்கள், நிச்சயம் இது எதாவது ஒரு உலகப் படத்தின் தழுவலாகத்தான் இருக்கும் என்று நான் கூகிளில் தேடும் அளவுக்கு இருந்தது! இயக்குநரைப் பாராட்டும் நோக்கில்தான் இதைச் சொல்கிறேன்.

நடிகர்கள் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் படத்துடன் சட்டென ஒன்றிக்கொள்ள முடிகிறது. அத்தனை நடிகர்களும் மிக யதார்த்தமாக நடிக்கிறார்கள். தமிழின் புதிய அலைத் திரைப்படங்கள் நமக்குத் தந்திருக்கும் ஒரு கொடை இந்த யதார்த்த நடிப்பு.

இந்தப் படத்தின் முக்கியமான பலம் வசனம். மிகக் கூர்மையான வசனங்கள். மிகக் குறைந்த அளவிலான வசனங்கள்.

எல்லா வகையிலும் முக்கியமான திரைப்படம் இது. பேய்ப்படம் என்றும் சொல்லலாம். இல்லாவிட்டாலும் கூட இது முக்கியமான திரைப்படமே. பேய் என்றால் திடும் திடுமென இசையைக் கூட்டி அலற வைக்கவேண்டும் என்கிற க்ளிஷேவை எல்லாம் உடைத்து, பேய்ப்படத்தை ஒரு த்ரில்லர் போலக் காட்டி இருக்கிறார்கள். தமிழில் பேய்ப்படங்கள் என்றாலே எதோ ஒரு ஆங்கிலப் படத்தை உல்ட்டா செய்து எடுத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் இத்திரைப்படம் வித்தியாசமாக இருக்கிறது. அதனால்தான் பேயைக் குறைவாகவும் த்ரில்லர் களத்தை அதிகமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் போல.

படத்தின் குறை என்று பார்த்தால், இரண்டரை மணி நேரத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எப்படிப் பார்ப்பது என்கிற ஒரு அலுப்பு பார்வையாளர்களுக்கு வரலாம். பொதுப் பார்வையாளர்களுக்கு இப்படி ஒரு அலுப்பு வரவே செய்யும். அதேபோல் நொடிக்கு நொடி மாறும் காட்சிகள், அந்த ஒரு நொடிக் காட்சியைக் கூட மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய அவசியம் – இவற்றையெல்லாம் எல்லாரும் புரிந்துகொள்வார்களா எனத் தெரியவில்லை. நான் சொல்லும் குறைகள் கூட பார்வையாளர்கள் பார்வையில்தானே தவிர, திரைப்படத்தின் குறைகளாக இல்லை.

தொடர்ச்சியாகப் பேய்ப் படங்கள் என்கிற பெயரில் வரும் ஆபாசப் படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் வித்தியாசமான, முக்கியமான திரைப்படம்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

ஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்

பாலாஜி தரணீதரனின் ஒரு பக்கக் கதை. தமிழின் புதிய அலைப் படங்களில் தலையாயதான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் இயக்குநரின் அடுத்த திரைப்படம் ஒரு பக்கக் கதையாக இருந்திருக்கவேண்டும். இப்படம் அறிவிக்கப்பட்டு பல வருடங்கள் கிடப்பில் கிடந்து, அதற்கிடையில் ’சீதக்காதி’ அறிவிக்கப்பட்டு, அது வருவதிலும் சிக்கலாகி, ஒருவழியாக சீதக்காதி வெளிவந்தது. முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றும், தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டும், இரண்டாம் படத்துக்கு ஒரு இயக்குநருக்கு இந்த நிலைமை.

சீதக்காதி திரைப்படம் பாலாஜி தரணீதரனின் முதல் படம் தந்த அதிசயத்தைத் தகர்த்தது. சீதக்காதியைவிட ஒரு பக்கக் கதை கொஞ்சம் உருப்படியான படம்தான் என்றாலும், ‘ஒரு பக்கக் கதை’ பாலாஜி தரணீதரன் மீதான நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஒன் முவீ ஒண்டராக அவர் தேங்கிப் போகாமல் இருக்கவேண்டும்.

‘ஒரு பக்கக் கதை’யின் நோக்கத்திலேயே தெளிவில்லை. முழுமையான ஒரு அறிவியல் புனைகதையாக எடுக்கும் அளவுக்கு கதையில் வலுவில்லை. எனவே அதை மூட நம்பிக்கையுடன் பிணைக்கப் பார்த்திருக்கிறார்கள். அதிலும் பெரிய பயணத்தைச் செய்யமுடியவில்லை. இரண்டும் இல்லாமல், எதற்காக யாருக்காக இந்தப் படம் என்ற தெளிவின்றி படம் முடிவடைகிறது.

ஆணுடன் எவ்வித உடலுறவும் கொள்ளாமல் ஒரு பெண் தாயாகிறாள். உலகின் முதல் ‘தந்தையில்லாக் குழந்தை’யை உலகமே ஆச்சரியத்துடன் வரவேற்கிறது. இப்பெண்ணின் காதலன் தன் காதலியுடன் கடைசிவரை துணை நிற்கிறான். பிறந்த குழந்தை ஒரு தெய்வக் குழந்தை என்று மடம் பிடுங்கிக் கொள்கிறது. மடத்தில் இருந்து குழந்தை எவ்வாறு மீட்கப்படுகிறது என்பதே கதை!

மடத்தின் மூடநம்பிக்கைதான் முக்கியக் கதை என்றால், படத்தின் முக்கால் மணி நேரக் கதையை அறிவியலிலும் சஸ்பென்ஸிலும் நகர்த்தி இருக்கக் கூடாது. ஓரளவுக்காகவது நன்றாக வந்திருக்கவேண்டிய படத்தை இந்த வகையில் கொஞ்சம் கொல்கிறார் இயக்குநர்.

அடுத்து, படம் அநியாயத்துக்கு மெல்ல போகிறது. கதாநாயகன் நடந்தால் மெல்ல நடக்கிறான். அடுத்து கதாநாயகி ஃபீல் செய்தபடியே மெல்ல நடக்கிறாள். அடுத்து கதாநாயகியின் அம்மா. அவளை ஃபீலுடன் அப்பா பார்க்கிறார். கதாநாயகி தாயானதை மூன்று டாக்டர்கள் நான்கு தடவை உறுதி செய்கிறார்கள். ஒரு குழந்தை தானே தெய்வம் என்று நான்கு தடவை உறுதி செய்கிறது. இது போதாது என்று, மெகா சீரியல்களில் வருவது போல, ஒவ்வொருவரின் எக்ஸ்பிரஷனையும் பத்து பத்து நொடிகள் காட்டி, பின்பு அதையே மொத்தமாகக் காட்டி சாவடித்துவிட்டார் இயக்குநர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் இது நன்றாக இருந்ததன் காரணம், அதில் இழையோடிய நகைச்சுவை. இந்தப் படமோ மிக சீரியஸான படம். அதில் நகைச்சுவையை இழையோட வைக்க இயக்குநர் முயன்றிருப்பது புரிகிறது. ஆனால் அது எரிச்சலைத்தான் கொண்டு வருகிறது.

மடம் தொடர்பான காட்சிகள் வந்த பிறகு இந்த நகைச்சுவையை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு இயக்குநர் கொஞ்சம் சீரியஸாகிறார். படமும் அந்தக் குழந்தையும் ஒரு பரிதாபத்தைக் கொண்டு வருகிறது. மடம் மிகவும் பெரிய மடம் என்று சொல்வதற்காக, மடத்துக்கு இன்று பிரதமர் வருகிறார் என்றெல்லாம் செய்திகள் காண்பிக்கப்படுகின்றன. செய்திகள் என்றும் நினைவுக்கு வருகிறது. ஒரு விஷயம் நடந்துவிட்டால் உடனே பத்து செய்தி சானல்கள் இதே செய்தியைச் சொல்கின்றன. பத்தையும் காண்பிக்கிறார் இயக்குநர். செய்தித் தாள்களில் ஒரு செய்தி வந்தால், அதை எல்லாரும் படிக்கிறார்கள் என்று காட்ட இருபது பேர் படிப்பதை இருபது காட்சிகளாகக் காட்டுகிறார் இயக்குநர்!

மடம் தொடர்பான காட்சிகளில் நம்பகத்தன்மையின்மை தலைவிரித்தாடுகிறது. ஒரு பாரம்பரிய மடம் இப்படி ஒரு குழந்தையை தெய்வக் குழந்தை என்பதற்காகத் தூக்கிக் கொண்டு போகாது. பெற்றோரின் சம்மதமின்றி எந்தக் குழந்தையையும் ஒரு மடம் கொண்டு போகாது. குறைந்த பட்சம் இந்த மடம் கிராமப் புறத்தில் இருக்கும் ஒரு சின்ன கோவில் சார்ந்த மடம் என்றாவது காட்டி இருக்கலாம். ஆனால் பிரம்மாண்டத்துக்காக பெரிய மடம் என்றும், பாரம்பரிய மடம் என்றும், பிரதமரே வருவார் என்றும், மடத்தின் சாமியாரிடம் ஆசி வாங்க அமைச்சரே வந்து போவார் என்றெல்லாம் வேறு காட்டிவிட்டார்கள். எனவே லாஜிக் பொருந்தவில்லை.

பெற்றோரின் சம்மதத்துடன் குழந்தைகள் துறவிகளாகி மடத்துக்குத் தலைமை ஏற்பார்கள். அப்படி பூர்வாச்ரமத்தில் தன் மகனாக இருந்த ஒரு பையனைப் பெற்றோர்கள் பார்த்த புகைப்படம் இரண்டு நாள்கள் என்னை அலைக்கழித்தது. இப்படத்தில் வரும் அந்தச் சிறுமியின் முகமும் நம்மை அப்படி அலைக்கழிக்கும். இந்த அலைக்கழிப்பை இயக்குநர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னொரு கோணத்தில், கொஞ்சம் புத்திசாலித்தனமாக இதை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.

இப்படி சிக்கலான ஒரு கதையை எடுத்துக் கொண்டும், வேண்டுமென்றே மதத்தைச் சீண்டும் வேலையைச் செய்யவில்லை. இப்படி ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது என்பதை மட்டும் சொல்லும் நோக்கம் மட்டுமே இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அதில் கூட மூடநம்பிக்கை வேறு, கடவுள் நம்பிக்கை வேறு என்றொரு வசனமும் வருகிறது. எல்லா இடங்களில் எல்லா மதத்தையும் சேர்த்துக் கொள்கிறார் இயக்குநர். இதற்காகப் பாராட்டலாம்.

படத்தில் வசனங்கள் மிகக் கூர்மையாக உள்ளன. இசையும் நன்றாக இருக்கிறது. நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அபாரம். இத்தனை பிரச்சினைக்குரிய கதையை எடுத்துக்கொண்டாலும் துளி ஆபாசம் கூட இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதே நேரம், தன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தந்தை சொல்லவும், கதாநாயகன் உடனே அந்தச் சின்ன பெண்ணைப் பார்ப்பது, என்னதான் நகைச்சுவை என்றாலும், என்னதான் கதையோடு நேரடியாக சம்பந்தப்பட்டது என்றாலும், எனக்கு மிகவும் நெருடியது. அதைக் கடக்கவே ஒரு நிமிடம் ஆனது. மற்றபடி, நேரம் இருப்பவர்கள் இப்படத்தை ஒரு தடவை பார்க்கலாம். இந்தக் கதையின் மூலம் சொல்லப்  போவது என்ன என்ற தெளிவுடன், மெல்ல நகரும் காட்சிகளைக் கட்டுப் படுத்தி எடுத்திருந்தால், ஒரு பக்கக் கதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

இந்தப் படம் ஸீ5ல் வெளியாகி இருக்கிறது. திரையரங்குக்கு வரவில்லை. இப்படி படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓடிடி சானல்களில் வெளியாவதால் அதை பலராலும் பார்க்க முடியாமல் போகிறது. சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றில்லாமல், நூறு ரூபாய் கொடுத்து ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்ற நிலை வராவிட்டால், இப்படிப் பல படங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் போய்விடும். தமிழ்த் திரை உலகம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை இது.

Thanks: OreIndiaNews

Share

2020

2020ல் என்ன என்ன செய்தேன்?

கொரோனா என்ற ஒரு பெரிய அச்சுறுத்தல் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்யவில்லை. தினம் தினம் படம், தாய விளையாட்டு, சீட்டாட்டம், நல்ல உணவு இப்படியே போயின நாள்கள். ஒரு வரி கூட படிக்க மனம் வரவில்லை. இழுத்துப் பிடித்து வைத்து ஒரு நாவல் எழுதினேன். நான் எதிர்பாராத அளவுக்கு அது பேசப்பட்டது. மாயப் பெரு நதி மறக்க முடியாத நாவல்.

சில குறுங்கதைகளையும் மூன்று சிறுகதைகளையும் எழுதினேன். பன்னிரண்டு வலம் இதழ்கள் வெளியாகின. தடம் பதிப்பகம் சார்பாக சில புத்தகங்களைக் கொண்டு வர முடிந்தது. நரசிம்மனின் சிறகு முளைத்தது, நெல்லை கணேஷின் பாரதி என் காதலன், எஸ்.ஜி.சூர்யாவின் பாஜக வடகிழக்கை வென்றது எப்படி, எனது மாயப் பெரு நதி மற்றும் நடுநிலைமை அற்றவனின் சில தமிழ்சினிமா குறிப்புகள்.

வேலை சார்ந்து ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் கிழக்கில் என்ன செய்யப் போகிறோம், கிழக்கு என்ன செய்யப் போகிறது என்ற குழப்பமே எஞ்சி இருந்தது. ஜூலையில் மீண்டும் வேலைக்கு வந்து, எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து ஓரளவுக்கு விற்பனையைத் தொடங்க முடிந்தது. இந்த டிசம்பரில் ஏதோ கொஞ்சம் விற்பனை பரவாயில்லை என்ற இடத்துக்கு வந்திருக்கிறோம்.

ஜனவரியில் புத்தகக் கண்காட்சி இருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் புத்தகக் கண்காட்சியை நடத்திவிட பெரிய முயற்சிகள் நடக்கின்றன. நல்லதுதான், நடக்கட்டும். எல்லாப் பதிப்பாளர்களுமே விற்பனைச் சிக்கலில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு மெகா சீரியலுக்கு வசனம் எழுதத் தொடங்கினேன். மெகா சீரியலைக் குறித்து செய்த கிண்டல்கள், நக்கல்கள் எல்லாம் என் அம்மா உருவில் எனக்கெதிராகவே நின்று என்னை கேலி செய்கின்றன.

மகா நடிகன் என்றொரு சத்யராஜ் படம். அதில் சத்யராஜ் பெரிய நடிகர். ஏகப்பட்ட பந்தா செய்வார். ஒரு துணை நடிகை நடிக்க வருவார். சத்யராஜ் அந்த நடிகையை, டிவி நடிகைதான என்று கிண்டலாகப் பேசுவார். எரிச்சலாகும் அந்த நடிகை சத்யராஜைப் பார்த்துச் சொல்வார், ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க, நீங்களும் ஒருநாள் டிவிக்குத்தான் வரணும் என்று. இதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

கொரோனா தந்த பயத்தையும் எதிர்கால வாழ்க்கைக் குழப்பத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 2020 ஓரளவுக்கு நல்ல வருடமே. ஆனால் கொரோனா இந்த 2020 நினைவுகளே வேண்டாம் என்றே சொல்கிறது. 2021 வளமான ஆண்டாக இருக்கட்டும். அனுபவத்திலும் செழிப்பிலும்.

சென்ற மார்கழியில் பெருமாள் கோவிலுக்குச் சென்ற வண்ணம் இருந்தேன். இந்த மார்கழியில் கோவில் பக்கம் கூடப் போகவில்லை. வைகுண்ட ஏகாதஸிக்குக் கூட. 🙁 இப்படி ஒரு ஆண்டு இனி வேண்டாம்.மாயப் பெரு நதி நாவலும், சூரரைப் போற்று மற்றும் கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்பட விமர்சனங்களும் அதிக அளவில் பேசப்பட்டதில் 2020க்கு நன்றி.

இன்னும் நிறைய படித்திருக்கலாம். எழுதி இருக்கலாம். ஆனால் ஜூலை வரை கொரோனா மன நெருக்கடி. பின்பு நேரமில்லை. எப்போதும் இப்படி நேரமில்லை என்று சொல்லும்படியே இறைவன் வைத்திருக்கட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

படித்த புத்தகங்கள்:

புகார் நகரத்துப் பெருவணிகன், பிரபாரகன்

ராமோஜியம், இரா. முருகன்

வீரப்பன் வேட்டை, விஜய்குமார்

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் (கிழக்கு, ம.வெங்கடேசன், விரைவில் வெளியாகும்)

ஒரு இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து, வேலூர் இப்ராஹிம்

புதிய கல்விக் கொள்கை – ரங்கராஜ் பாண்டே

கடலுக்கு அப்பால், ப.சிங்காரம்

Alchemist (Tamil)

Who killed Sastri – Vivek Agnihotri

1984 – India’s guilty secret – Pav Singh

RSS 360 – Ratan Sharda

Our Moon has blood clots – Rahul Pandita

பார்த்த திரைப்படங்கள்:

சூரரைப் போற்று

கணவர் பெயர் ரணசிங்கம்

Samskara (Ka)

Kaanoru Heggadati (Ka)

Hamsa Geete (Ka)

Kaadu (Ka)

Phaniyamma (Ka)

Face to Face (Ka)

Neuron (Ka)

Geetha (Ka)

Sankashtakara Ganapathi (Ka)

Pathinettam padi (Ma)

Love Mocktail (Ka)

D/O Parvathamma

வானம் கொட்டட்டும்

Section 375 (Hi)

Law (Ka)

Striker (Ka)

Ottam (Ma)

Jack & Daniel (Ma)

Mundina Nildana (Ka)

Ayushmanbhava (Ka)

C U Soon (Ma)

Kannad Kothilla (Ka)

Paapam Cheyyadavar Kalleriyatte (Ma)

Sufiyum Sujathayum (Ma)

Alidu Uluduvaru (Ka)

பெண் க்வின்

Aakala Ratri (Ka)

Eeda (Ma)

Nalpathiyonnu (Ma)

Anjaam Pathira (Ma)

Forensic (Ma)

Kappela (Ma)

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

சுட்டுப் பிடிக்க உத்தரவு

ஆர்.கே.நகர்

செத்தும் ஆயிரம் பொன்

சைக்கோ

Chola (Ma)

பொன்மகள் வந்தாள்

99 (Ka)

Kapata Nataka Patradari (Ka)

Parasite

Android Kunjappan 5.25

தாராள பிரபு

வி1 மர்டர் கேஸ்

Kettiyolanu ente Malaka (Ma)

Shikara (Hi)

Trance (Ma)

பாரம்

திரௌபதி

Nanna prakara (Ka)

Knock Knock

Vettah (Ma)

Ayyappanum Koshiyum (Ma)

Avane Sriman Narayana (Ka)

Virus (Ma)

Thallana (Ka)

Before the Rains

Hero

Driving Lisence (Ma)

Puss in the Boots

Dia (Ka)

Porinji Mariyam Jose (Ma)

Helen (Ma)

Padmavat

பக்ரீத்

Jallikkattu (Ma)

Ea.Ma.Yu (Ma)

Gantumoote (Ka)

அருவம்

தர்பார்

Share

சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்

ஏர் டெக்கான் மற்றும் கேப்டன் கோபிநாத் என்ற பெயர்கள், இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவை. இன்று ஏர் டெக்கான் மூடப்பட்டிருந்தாலும், கேப்டன் கோபிநாத் கொண்டுவந்த புதுமையான யோசனையும் அதனால் விளைந்த பயனும் இன்றியமையாதவை. எதையுமே பெரிதாக யோசி, வித்தியாசமாக யோசி என்பதைச் செயல்படுத்திக் காண்பிக்கும் தொழிலதிபர்களே நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவர்கள். இன்றைய ஜியோ புரட்சியை இதனுடன் ஒப்பிடலாம். நாளை ஜியோ நஷ்டத்தில் மூடப்பட்டாலும், 4ஜி தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் சாமானியனுக்கும் கொண்டு சென்ற பெருமை ஜியோவையே சேரும். அப்படி ஒரு புரட்சியையே கேப்டன் கோபிநாத் செய்தார். ஜியோ செய்த புரட்சியையும் விட கடினமான புரட்சி என்று புரிந்துகொண்டால், கேப்டன் கோபிநாத்தின் சாதனை நமக்குப் புரியும். கேப்டன் கோபிநாத்தின் ஏர் டெக்கானும் நஷ்டத்தாலும் பிற சூழ்ச்சிகளாலும் மூடப்பட்டது. ஆனாலும் முன்னோடி கேப்டன் கோபிநாத்தின் சிந்தனைதான்.

எல்லா ஆர்வலர்களையும் போல கேப்டன் கோபிநாத்துக்கும் புத்தி ஒரு நிலையில் இருக்காது. விவசாயம், ஹெலிகாட்பர் சேவை, அரசியல் ஆர்வம், ஏர்டெக்கான் என்று அவர் என்னவெல்லாமோ செய்து பார்த்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை சந்தேகமே இல்லாமல் ஒரு திரைப்படத்துக்கு உரியதுதான். சோகம் என்னவென்றால், தமிழில் நாம் இன்னும் இதற்குப் பக்குவப்படவில்லை என்பதுதான். இத்தனைக்கும் ஒரு திறமையான இயக்குநரே படத்தை இயக்கி இருக்கிறார். அப்படி இருந்தும் இத்தனை சறுக்கல்.

படத்தின் ப்ளஸ்களை முதலில் வேகமாகப் பார்த்துவிடலாம். ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க முடிகிறது. மிகத் திறமையான நடிகர்களைத் தேடி தேடி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அச்யுத், பரேஷ் ராவல், பிரகாஷ் பெலவாடி என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சிறந்த நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் படத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு நடிக்கிறார்கள். தமிழ் நடிகர்களில் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, பூ ராமு என்ற திறமையான நடிகர்கள். திருஷ்டிப் பொட்டு என்றால், ஊர்வசி மற்றும் மோகன் பாபு. மோகன் பாபு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நாள்களிலேயே நடிக்கத் தெரியாது. இப்போதும் அப்படியே. சூர்யா என்னதான் நடிக்க முயன்றாலும், எனக்கு ஒட்டாது. இவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டுகிறார் அபர்ணா. அவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். அப்படி ஒரு நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் தரம். ஒவ்வொரு காட்சியும் தரமாக இருப்பதில் அத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் முள்ளும் மலரும் ஓடும் காட்சி, சூர்யா – அபர்ணாவின் காதல் காட்சிகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். சடங்குகளை முடித்துக்கொண்டு, பிரச்சினைக்குப் போகலாம்.

கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம்.

சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை.

கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’புத்தகத்தில் இருந்து.
ஆங்கிலத்தில் வந்த Simply Fly – A Deccan Odyssey புத்தகத்தின் தமிழாக்கம்.

கேப்டன் கோபிநாத் ஒரு தொழிலை ஆரம்பித்துச் செய்ய பல வகைகளில் கஷ்டப்படுகிறார். அவருக்கு உதவுவது அரசியல்வாதிகள்தான். எஸ்.எம்.கிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு, வெங்கய்யா நாயுடு (பாஜக), ராஜிவ் பிரதாப் ரூடி (பாஜக) என அனைவரும் பல வகைகளில் உதவி இருக்கிறார்கள் – கட்சி பேதமின்றி. விமானத்தின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி பிரச்சினை வரும்போது மத்திய அரசே ஏர் டெக்கானுக்குத் துணை நிற்கிறது. ஆனால் திரைப்படம் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. என்னவோ அரசியல் அரங்கில் அனைவரும் மாறன்களை ஒழித்துக் கட்டிவிட்டு கோஸ்வாமிகளை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள் என்று காண்பிக்கிறார்கள். சூர்யாவை பிராமணராகவே காட்டி இருந்தால், இந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியாது. மீறி எடுத்தால், இந்தப் படம் வெறும் தொழில் போட்டிப் படமாகி இருக்கும். திரைப்படக் குழு இதனை விரும்பவில்லை. கேப்டன் கோபிநாத் எதிர்கொண்டது தொழில்போட்டியைத்தான். ஆனால் சூர்யாவுக்காக இத்திரைப்படம் ஜாதிப் போட்டிகள் நிறைந்த படமாக மாறிவிட்டது!

வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பதே கேப்டன் கோபிநாத்தின் கனவு. எதோ ஒரு பேட்டியில் தற்செயலாக கோபிநாத் ‘வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல்’ என்று சொல்லப் போக, பத்திரிகை அதையே தலைப்புச் செய்தியாக்க, வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பது ஒரு ஸ்லோகனாக மாறிப் போனது. தமிழில் இந்த உடுப்பி ஹோட்டலை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டுவிட்டார்கள். கோபினாத்தை மாறனாக்கியவர்கள் இதனைக் கூட முனியாண்டி விலாஸ் ஆக்கி இருக்கலாம். ஆனால் இதை மாற்றுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதை மாற்ற வேண்டும், எதை மாற்றத் தேவையில்லை என்று தெளிவாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு கனவுக்குப் பின்னாலும் ஒரு தனிப்பட்ட சோகம் அல்லது உந்துதல் இருக்கும் என்கிற திரைப்பட பாலபாடத்தை இவர்களும் பின்பற்றி இருக்கிறார்கள். கேப்டன் கோபிநாத்தைப் பொருத்தவரை அவரது அப்பா ஒரு தெய்வம். தனது புத்தகத்தையே முதலாக அவர் தனது அப்பாவுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் இதில் சூர்யாவைப் புரிந்துகொள்ளாத அப்பாவாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். பின்னர் தன் மகனையே எண்ணிச் செத்தும் போகிறார். அவரைப் பார்க்க சூர்யாவால் முடியவில்லை. ஏன்? ஏனென்றால் அவரது கையில் பணமில்லை. எனவே விமானத்தில் பறக்க முடியவில்லை. இத்தனை பத்தாம்பசலித்தனமாக யோசித்திருக்க வேண்டாம். தொடர்ச்சியாக நீண்ட காட்சிகள் – அலுப்பைத் தருகின்றன. என்ன நடக்கப் போகிறது எனத் தெரியும் என்னும் திரைக்கதைக்கு இவையெல்லாம் தேவையா? அப்பாவைப் பார்க்க முடிந்திருந்தாலும் மாறன் விமானப் போக்குவரத்தை ஆரம்பித்திருப்பானே? அவனுடைய கனவே அதுதானே?

கேப்டன் கோபிநாத் தேர்தலில் நின்று தோற்றுப் போகிறார். பாஜக சார்பாகப் போட்டி இட்டார். வாஜ்பாயுடன் பிரசாரம் எல்லாம் செய்திருக்கிறார். 2019ல் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகப் போட்டி இடுகிறார். மீண்டும் தோற்கிறார். ஆனால் திரைப்படம் இந்தத் திக்கில் போகவே இல்லை. அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது, கோபிநாத்தின் காதலும் கல்யாணமும்தான். தேவைக்கு அதிகமாக அதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முதல் விமானப் பயணம் தோல்வியில் முடியும்போது கூட, மனைவியின் பிரசவம் என்றெல்லாம் சவ்வாக இழுக்கிறார்கள். ஒரு பயோ பிக் திரைப்படத்தில் சொந்தப் பிரச்சினைகளை எந்த அளவில் எங்கே நிறுத்தவேண்டும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

படம் மிக மெதுவாகப் போகிறது. எப்படா விமானம் ஒழுங்கா ஓடும் என்று கொட்டாவி வரும் அளவுக்கு மெல்லப் போகிறது. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள், காரணங்கள், நம்பிக்கைத் துரோகங்கள், பழிவாங்கல்கள், சூர்யாவின் ஒரே டெம்ப்ளேட் வசனங்கள் – இவையே இந்த தொய்வுக்குக் காரணம். எந்த ஒரு சாதாரண விஷயத்துக்கும் கூட சூர்யா தடதடவென ஓடுகிறார். அங்கே நாம் ஒரு தொழிலதிபரைப் பார்க்க முடிவதில்லை. சூர்யாவைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு பயோ பிக் திரைப்படத்தை எடுக்கும்போது திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றுவது முக்கியமானதுதான். அதற்காக யாரைப் பற்றிப் படம் எடுக்கிறோமோ அவரை முதல் காட்சியிலேயே கொலை செய்துவிட்டு ஆரம்பிக்கக் கூடாது. அப்படி ஒரு முயற்சியையே சூரரைப் போற்று செய்திருக்கிறது. சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்ததில் தொடங்கி இப்படியே யோசித்து, நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு சுயசரிதைத் திரைப்படத்தை நேர்மையற்ற படமாக்கி இருக்கிறார்கள்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

கீதா (கன்னடம்)

கீதா (க) – கோகக் கிளர்ச்சி என்று சொல்லப்படும் கிளர்ச்சி, கர்நாடகத்தில் கோகக் (ஞானபீட விருது பெற்றவர்) என்பவரால் கன்னட மொழிக்காக தொடங்கப்பட்ட கிளர்ச்சி. மூன்று மொழிக் கல்விக் கொள்கையைக் கைக்கொண்டிருந்த கர்நாடகாவில், பள்ளிகளில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகள் கன்னடத்தைவிட அதிகம் முக்கியத்துவம் பெற்றதால், அதை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சி இது. இப்படியே போனால் எதிர்கால சந்ததி கன்னடத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அஞ்சி, கன்னடத்தை அலுவல் மொழியாக ஆக்க இக்கிளர்ச்சி செய்யப்பட்டது. முதலில் சுணங்கி இருந்த இந்தப் போராட்டம், ராஜ்குமார் தலைமையில் கர்நாடகாவின் முழு ஆதரவையும் பெற்றது. இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் கீதா! இந்தப் பின்னணியில் வரும் காட்சிகளில், பள்ளிகளில் ஹிந்தி ஆங்கிலத் திணிப்பைக் காட்டாமல், ஊரில் மற்ற மொழிக்காரர்களின் வளர்ச்சியைக் காண்பித்து, அதை எதிர்த்துப் போராட்டம் என்று கொண்டு போகிறார்கள். அதிலும் தமிழ் பேசும் நான்கு பேரை கணேஷ் அடித்து நிமிர்த்துகிறார். அடுத்த காட்சியிலேயே பெங்காலிப் பெண்ணைக் காதலிக்கிறார். கோகக் கிளர்ச்சியை மையமாகக் கொண்டு வரும் காட்சிகள் வரை படம் பார்க்கும்படியாகவே உள்ளது. அதற்குப் பின்பு அது காதல் படமாகி எங்கெங்கோ அலைந்து எப்படியோ போய், சீக்கிரம் முடிங்கய்யா என்று கதறும்போது முடிகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு? ஆனால் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

ஷங்கர் நாக்-கின் (பழைய) கீதா என்னும் திரைப்படம் கன்னட க்ளாஸிக் என்று சொல்லப்படுகிறது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. ஜொதயலி ஜொத ஜொதயலி (விழியிலே மணி விழியில் – தமிழில்) பாடல் கர்நாடகாவின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் வரும் கேளதே நிமகீஹா (தேவதை இளம் தேவி – தமிழில்) பாடலும் மிக நன்றாக இருக்கும். அதே போல் சந்தோஷக்கே ஹாடு என்ற பாடல் கர்நாடகாவின் பட்டி தொட்டிகளிலும் நிச்சயம் ஒலித்திருக்கும். இளையராஜா ரம்மியமான ஒரு பொழுதில் இந்தப் படத்தின் பாடல்களைப் போட்டிருக்கவேண்டும். ஏனே கேளு கொடுவே ஈகா பாடல் அத்தனை இனிமையாக இருக்கும். இந்த ஜொத ஜொதயலி பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்றே கணக்கில்லை.

(புதிய) கீதா படத்தில் முதல் காட்சியிலேயே (பழைய கீதா படத்தின்) ‘கீதா சங்கீதா’ பாடல்தான். ஹெட்போனில் படம் பார்க்க ஆரம்பித்தபோது இந்தப் பாடல் ஒலிக்கவும் ஏற்பட்ட புல்லரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இளையராஜாவின் இசை என்னை எங்கோ கொண்டு போய்விட்டது. கமலின் ஏக் துஜே கேலியே படத்தைப் பார்க்கப் போகும் ஹீரோயினுக்கு கணேஷ் ராஜ்குமாரின் பெருமைகளைச் சொல்லி, கமலே புகழ்ந்த நடிகர் ராஜ்குமார் என்று சொல்லும் வசனமும் உண்டு. கன்னடத்தின் பெருமைகளைச் சொல்லும் கணேஷ், ராஜ்குமாரின் ஒரு பாடலைக் குறிப்பிட்டு சிலாகிக்கிறார். அது, ஜீவா ஹூவாகிதே. இதுவும் ராஜா இசை! கேட்டாலே மனதை உருக்கிவிடும் ஒரு காதல் பாடல்.

நல்லா எழுதுறீங்கய்யா வசனமும் திரைக்கதையும்!

Share

OTT வழியாக வரும் திரைப்படங்கள்

கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின்போதே எழுத நினைத்தேன். படத்தின் விமர்சனம் தடம் மாறிப் போய்விடுமோ என்று எழுதாமல் விட்டேன். இந்தத் திரைப்படம் பார்க்க ஒரு காட்சிக்கு 199 ரூ. சென்னையில் தியேட்டருக்குப் போய் ஒரு படம் பார்த்துவிட்டு வர எல்லாச் செலவுகளும் சேர்த்து குறைந்தது 500 ரூபாய் வரை ஆகும். நேரமும் கணிசமாகவே ஆகும். வீட்டில் அமர்ந்து பார்த்தால் 199 ரூபாய் மட்டுமே. ஆனால் திரையரங்கு தரும் பிரமாண்டம் நிச்சயம் தவறிப் போகும். பெரிய தொலைக்காட்சி, 5.1 என்று இந்த அனுபவத்தைக் கொஞ்சம் நெருங்கலாம் என்றாலும், திரையரங்கு தரும் அனுபவம் அலாதிதான். அதேசமயம், பணமும் நேரமும் எத்தனை மிச்சம் என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படம் வந்தபோது கமல் இதைச் செய்ய நினைத்தார். அன்று நடந்த தவறு என்ன? சுருக்கமாகச் சொன்னால், பேராசை. ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய்! இது கமலின் முடிவா, டிஷ் நிறுவனத்தின் முடிவா என்பதெல்லாம் தெரியாது. ஒரு குடும்பத்துக்கே ஆயிரம் ரூபாய்தான் என்று யோசித்து அவர்களே சமாதானம் ஆகி இருப்பார்கள் போல. பொருட்படுத்தத் தக்க அளவுக்குக் கூட முன்பதிவு இல்லை. அத்திட்டம் கைவிடப்பட்டு, திரைப்படம் வழக்கம்போல் திரையரங்கிலேயே வெளியானது. இன்று க/பெ 199 ரூபாய்க்கு வந்திருக்கிறது.

அமேஸான் ப்ரைம் ஒரு மாதத்துக்கு 160 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு பல திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. எப்படியும் புதுத் திரைப்படம் ஒன்றாவது பார்த்துவிட முடிகிறது. வேற்று மொழிப் படங்களையும் பார்க்க முடிகிறது. அதை ஒப்பிட்டால் இந்த 199 ரூபாயே அதிகம் என்கிற தோற்றம் உருவாகி வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

டிஷ் வழியாகப் பார்க்கப்படும் படங்களில் பிரச்சினைகள் என்ன? டாடா ஸ்கையின் ஆன் டிமாண்ட் மூலம் படம் பார்த்தால், அப்படத்தை அந்தத் தினம் முழுக்கப் பார்க்கலாம். ஆனால் க/பெ அப்படிப் பார்க்க முடியவில்லை. ஒரு காட்சி மட்டுமே. அதாவது திரையரங்கில் பார்ப்பதைப் போலவே. அன்று திடீரென மழை பெய்து படம் தெரியாமல் போனால்? மின்சாரம் தடைபட்டால்? வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால்? பணம் போனது போனதுதான். திரையரங்கில் இப்பிரச்சினைகள் எல்லாம் இல்லை. வீட்டில் இந்த அத்தனை பிரச்சினைகளும் உண்டு. எனவே ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்பதை மாற்றவேண்டும்.

அதேபோல் எதாவது ஒரு சானலில் என்பதைக் கைவிட வேண்டும். ஏன் எக்ஸ்க்ளூசிவிட்டிக்குப் (தனியுரிமை) போகிறார்கள் என்றே தெரியவில்லை. அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு சானலின் வழியாகவும் படம் பார்க்க முடியும் என்கிற வசதி வரவேண்டும். ஒரு படம் பார்க்க கட்டணம் இவ்வளவு என்று மட்டுமே நிர்ணயிக்கவேண்டும். அதாவது இந்த ஓடிடி சானல்கள் திரையரங்குகளின் இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது 10% தள்ளுபடி கொடுத்து கூடுதல் பார்வையாளர்களைப் பெற முடிந்தால் அது அவர்கள் இஷ்டம். இப்படிச் செய்தால், டிஷ், அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு தளத்தின் வழியாகவும் பார்க்க முடியும் என்பதால், நிச்சயம் பார்வையாளர்கள் கூடுவார்கள்.

ப்ரைமில் கூட, இப்படி தனியுரிமை இல்லாமல் வெளியாகும் படங்களுக்குப் பணம் வசூலிக்கலாம். ப்ரைமில் இல்லாதவர்கள் ஒரு படத்துக்கு மட்டும் பணம் செலுத்திப் பார்க்க முடியும் என்ற வசதியைக் கொண்டு வரலாம். நெட்ஃப்ளிக்ஸிலும். ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு 50% தள்ளுபடி தரலாம். இப்படியெல்லாம் செய்தால் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு கூட்ட முடியும்.

எந்த ஒரு சானலில் படம் ஒளிபரப்பானாலும் மறுநாளே திருட்டுத்தனமாகப் படத்தைத் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்றாகிவிட்டது. அப்படி இருக்கும்போது, படத்துக்குக் குறைவான கட்டணத்தை வைத்துக் கூடுதல் பார்வையாளர்களைக் கொண்டு வர முயலவேண்டும். விஸ்வரூபம் பார்க்க 1000 ரூபாய் என்ற தப்பை, எதோ ஒரு சாதாரணப் படத்துக்கு 200 ரூபாய் என்று வைத்து, இன்னொரு வகையில் தவறு செய்யக் கூடாது. தேவை என்றால் முதல் நாள் மட்டும் 200 ரூபாய், மறுநாள் 100 ரூபாய் என்று கூட யோசிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்வையாளர்களைக் கூட்டுவது எப்படி என்று யோசிப்பது நல்லது. அதற்கு இந்தத் தனியுரிமை என்னும் எக்ஸ்க்ளூசிவிட்டி ஒழியவேண்டும். அதற்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒரே அணியில் வரவேண்டும். இதெல்லாம் நடக்குமா எனத் தெரியாது. நடக்காமல் இருக்கவே வாய்ப்பதிகம். அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வணிக நிறுவனங்களும் இப்படி நடப்பதை விரும்பாது, அனுமதிக்காது. ஆனால், எந்தத் திரையரங்கில் எந்தப் படம் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எப்படி இல்லையோ அது போல இந்த ஓடிடி உலகம் மாறாதவரை, திரைப்படங்கள் தங்களுக்கான நியாயமான சந்தையை முழுமையாகப் பெறப் போவதில்லை.

Share

கணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு

Spoilers ahead. கதையைத் தெரிந்துகொள்ளவேண்டாம் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். நீண்ட பதிவு.

நல்ல ஒரு கதையை வைத்துக்கொண்டு, அதில் தேவையே இல்லாமல் அரசியல் கலப்பதால் எத்தனையோ படங்கள் தங்கள் இலக்கைத் தொடாமலேயே தேங்கிப் போய்விடுகின்றன. அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவை இப்படித்தான். மீண்டும் மீண்டும் ஒரே அரசியல்தான் இதிலும் சொல்லப்படுகிறது. இந்தியா வாழ லாயக்கற்ற தேசம், இந்தியாவில் தனிமனிதனால் வாழவே முடியாது என்ற செய்திகள்தான். இந்திய அரசு (இந்தப் படத்தில் மாநில அரசையும் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்) எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் இருந்தாலும் செத்தாலும் அரசுக்குக் கவலை இல்லை. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது. கவலைக்குரிய ஒரு பெண்ணின் வலியோடு. இந்த அரசியலில் கவனிக்கப்படவேண்டிய இந்தப் பெண்ணின் வலியும் அது சார்ந்த பிரச்சினைகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ரணசிங்கம் வீரன், தீரன், முற்போக்காளன், எக்ஸட்ரா எக்ஸட்ரா. ராமநாதபுரத்தில் தன் கிராமத்தில் குடிநீருக்காகப் போராடுகிறான். கிராமத்தின் ஒற்றுமைக்காகப் போராடுகிறான். அவனை அத்தனை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள். அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள்ளாகவே அவனது மரணச் செய்தி வந்து சேர்கிறது. ரணசிங்கத்தின் வீர தீர காதல் எல்லாம் அவ்வப்போது நினைவலையாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எதாவது ஒரு நினைவு வந்து அங்கேயும் விஜய் சேதுபதி வந்துவிடுவாரோ என்ற அச்சம் வரும் அளவுக்கு அதீதமாக ரணசிங்கத்தின் காட்சிகள் வருகின்றன. பத்தாம் நிமிடத்திலேயே அவன் செத்துப் போய்விடுவதால், கதை எதைப் பற்றியது என்ற ஆர்வம் நமக்கு வருகிறது. ஆனால் படமோ ரணசிங்கத்தை விவரிப்பதிலேயே சுற்றுகிறது.

பின்னர் ஒரு வழியாகக் கதை என்பது ரணசிங்கத்தின் உடலை துபாயில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதுதான் என்பது தெரிகிறது. ஏன் துபாய் அரசும், அங்கே ரணசிங்கம் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனமும் அவன் உடலைத் தரவில்லை? அதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை. நம்புவோம். ஏனென்றால் கதை அந்தக் காரணம் பற்றியது அல்ல. அப்படிச் செத்துப் போகும் இந்தியர்களின் உடல் இந்தியாவுக்கு வருவதைப் பற்றியது. இதிலுள்ள சிக்கலில் இந்தியாவின் அரசு நிர்வாகம் எத்தனை மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இப்படம் பற்றிய நோக்கம்.

ரணசிங்கத்தின் திருமணம் இரவோடு இரவாக நடக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் படத்தைப் பார்த்து நொந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கு ஆதாரமே இல்லை. அதாவது ஊரில் எல்லாருக்கும் தெரியும். ஆதாரம் மட்டும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரண சிங்கம் செத்துப் போனதோ துபாயில். அவன் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மனுச் செய்ய அவரது மனைவிக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்தான் மனைவி என்பதற்கு ஆதாரம் இல்லை. அதை அரசு கேட்கிறது. இதில் என்ன தவறு? இத்தனைக்கும் அரசு அதிகாரியாக வரும் பிராமணர், தங்கை மூலம் உடலைக் கோரலாம் என்று நியாயமான, நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் சொல்கிறார். வசனம் எழுதியவர் அவரை அறியாமலேயே இந்த உண்மையை எழுதி இருக்கவேண்டும். இங்கே மட்டும் அல்ல, அரசின் குரலாகப் பல இடங்களில் உண்மையை எழுதி இருக்கிறார். இதற்காக இவரையும் இயக்குநரையும் பாராட்டவேண்டும். ஆனால் ரணசிங்கத்தின் மனைவி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், தான் தான் ரணசிங்கத்தின் மனைவி என்று நிரூபிக்கும் போராட்த்துக்குள் போகிறாள். ரணசிங்கம் எத்தகையவன் என்று சொல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட படம், இங்கே ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியே என்று நிரூபிக்கப் போராடும் பெண்ணின் படமாக மாறுகிறது.

ரணசிங்கத்துக்கு ஆதரவாகவே நல்லவராக வரும் கலெக்டர் (ரங்கராஜ் பாண்டே) தன்னளவுக்கு இயன்றவரை உதவி செய்கிறார். முதலில் ரணசிங்கத்துக்கும், பின்னர் அவனது மனைவிக்கும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் ரணசிங்கம் இறந்துவிட்டதால், அந்த விபத்தை மறைக்க நினைக்கும் நிறுவனம், ஏதேதோ பொய் சொல்கிறது. செட்டில்மெண்ட்டுக்கெல்லாம் வருகிறது. ஆனால் உடலைத் தர மறுக்கிறது. ஏனென்றால் உடலே அவர்களிடம் இல்லை. இது இறுதிக்காட்சியில்தான் நமக்குத் தெரிகிறது.

இதற்கிடையில் துபாயில் ஸ்ரீதேவி இறந்து போக, அதற்கு பிரதமர் இரங்கல் செய்தி போட்டு ட்வீட் போடுகிறார். அவரது உடல் மூன்றே நாளில் இந்தியா வருகிறது. இந்த ஒப்பீடு ஒரு நல்ல கற்பனைதான். ஆனால் யதார்த்தமும் இதுதான். ஒரு நடிகையின் மறைவுக்குப் பிரதமர் ட்வீட் போடுகிறார், ஆனால் ஒருத்தன் துபாயில் செத்துப் போய் பத்து மாதங்கள் ஆகின்றன, அவன் உடல் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படித்தான். பாஜகவிலும் இப்படித்தான். ஊரிலும் வீட்டிலும் இப்படித்தான். ஆனால் இயக்குநர் இதைத் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ரணசிங்கத்தின் மனைவி சென்னைக்கு வந்து, மத்திய அமைச்சர் வரும் காரில் போய் விழுந்து நீதி கேட்கிறாள். மத்திய அமைச்சர் ஒரு பெண். பாதுகாப்பு அமைச்சர். ஆனால் நிர்மலா சீதாராமன் அல்ல! அவர் பரிவுடன் விசாரித்து, ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியுடன் ஒரு செல்ஃபியும் போட்டு, சக அமைச்சருக்கு டேக்-க்கும் செய்கிறார். விஷயம் இந்தியா முழுக்கவும் பரவுகிறது. ஆனால் பிரயோஜனமில்லை.

அரியநாச்சி தமிழ்நாட்டு முதல்வரைப் பார்க்க முயல்கிறாள். ஆனால் போலிஸ் தரப்பு அவளை முதல்வர் அருகில் கூட வரவிடுவதில்லை. இப்படியே வெளியுறவுத் துறை அதிகாரிகளும் செய்கிறார்கள். வேறு வழியே இன்று டெல்லி போகிறாள். அணையைத் திறந்துவிட வரும் பிரதமர் வரும் இடத்துக்குப் போய், அணையில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறாள். கையில் குழந்தையுடன். அதை லைவாகவும் ஒளிபரப்பாகிறது. பிரதமர் மோதி வருகிறார். அதாவது மோதியைப் போல ஒருவர் வருகிறார். அவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரிகிறது. பரிவுடன் பரிசிலீக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் இந்தியா வரவேண்டும், அதுவரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். இந்தியாவே பரபரக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ரணசிங்கத்தின் உடல் இந்தியா வருகிறது. அரியநாச்சியே அணையைத் திறந்துவிடட்டும் என்று பரிவுடன் பிரதமர் சொல்ல, அரியநாச்சியே திறந்து வைத்துவிட்டுப் போகிறாள். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்று சொல்கிறார் பிரதமர்.

ரணசிங்கத்தின் உடல் வீட்டுக்கு வருகிறது. எரிக்கும்போது அரியநாச்சி கண்டுகொள்கிறாள், அது ரணசிங்கத்தின் உடல் இல்லை என. ஆனாலும் அது ரணசிங்கத்தின் உடல்தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். இரவில் தனிமையில் ‘வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க’ என்று சொல்கிறாள். தேவடியா பசங்க என்பது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உருப்படியான படமாகவே எடுத்திருக்கலாம். தமிழில் அதிகம் விவாதிக்கப்படாத கதை இது. ஒரே கதையிலேயே கிராமத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் காட்ட நினைத்தது முதல் தவறு. விஜய் சேதுபதிக்காக கதையை அவரைச் சுற்றிப் பின்னிவிட்டது இரண்டாவது தவறு. அவனது உடலைக் கொண்டு வருவதற்கு ஏதேனும் காரணங்களைச் சொல்லவேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் அவன் மீது இருக்கும் வழக்குக்களை எல்லாம் சேர்த்து என்னவெல்லாமோ வசனங்களைச் சொல்லவிட்டது அடுத்த குழப்பம். பன்னாட்டு நிறுவனமும் துபாய் அரசும் சேர்ந்துகொண்டு செய்யும் பிரச்சினைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் என்ன செய்யமுடியும் என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலே சொல்லாமல் விட்டது பெரிய சறுக்கல். இதில் ஸ்ரீதேவியின் உடல் மட்டும் மூன்றே நாளில் வருகிறது என்பதை இத்துடன் எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

பன்னாட்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விபத்தை மூடி மறைத்தால், அதுவும் அது வேறொரு நாட்டில் நடந்தால், அதை இங்கிருந்தபடியே ஒரு கிராமத்துப் பெண் எதிர்கொள்வது உள்ளபடியே கஷ்டம்தான். இதன் பொருள் இந்திய அரசு அவளைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல. வேண்டுமென்றே இந்தியாவைத் திட்டவேண்டும் என்று நினைத்தால்தான் இப்படி யோசிக்கமுடியும். ரேஷன் அரிசியில் பெயர் சேர்க்க வரும் ஒரு அதிகாரியிடம் நாங்க இந்தியாவுலயே இல்லைன்னு எழுதிக்கோ என்று அரியநாச்சி சீறுகிறாள். ஆனால் வந்த அதிகாரி கேட்கும் கேள்வி நியாயமானது. அந்த நியாயத்தை மறைக்க அவர்கள் கேட்ட விதத்தை வேண்டுமென்றே மோசமாக்கி எடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படித்தான் அந்த பிராமண அதிகாரி விஷயத்திலும் நடக்கிறது.

பிராமண அதிகாரியின் விஷயத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டி இருக்கிறது. படத்தில் வரும் எந்த ஒருவரின் சாதியும் மதமும் தெரிவதில்லை. இரண்டு பேரைத் தவிர. ஒருவர் பிராமணர். இவர் கலெக்டரின் உதவியாள். அதிகாரி. அரசுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யும் ஆள். கலெக்டரையும் மீறி, அரியநாச்சியுடம், வந்த பிணம் ரணசிங்கம்தான் என்று கையெழுத்து வாங்க அலைகிறார். அரியநாச்சியைப் பற்றி அலட்சியமாகப் பேசுகிறார். அவரை இப்படிக் காண்பிக்கிறார்கள். இன்னொருவர் முஸ்லீம். அவர்தான் ரணசிங்கத்தை, பணம் வாங்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்புகிறார். துபாய் பன்னாட்டு கம்பெனி இவர் மூலமாகத்தான் பண பேரம் பேசுகிறது. ஆனால் இவர் பேசும் வசனத்தில் ஒன்றில்கூட வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். தன் கையறு நிலையைப் பேசுகிறார் இந்த ஏஜெண்ட். மிகத் தெளிவாக இரண்டு கதாபாத்திரங்களையும் அமைத்திருக்கிறார்கள். முஸ்லீம் ஒருவரை நல்லவராகக் காண்பிப்பது, சூழ்நிலைக் கைதியாகக் காண்பிப்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக இன்னொரு கதாபாத்திரம் வரும்போது எப்படி யோசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஸ்ரீதேவி இறந்தபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருக்கு ஒரு ட்வீட் செய்தாலே போதும் எப்படி உதவுவார் என்று உலகமே வியந்தது. அவர் இறந்தபோது காங்கிரஸ் அமைச்சர்களே அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இயக்குநருக்கு அது மட்டும் நினைவில்லை போல.

பிரதமரே வந்திருந்து ஒரு பெண்ணுக்கு உதவுகிறார். ஆனாலும் அந்தப் பெண் அரியநாச்சி தேவடியா பசங்க என்று யாரைத் திட்டுகிறாள்? அவளுக்கே அதில் தெளிவில்லை. இயக்குநருக்கும் தெளிவில்லை. யார் மீது கோபத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. புகைப்படமும் இல்லை. பத்திரிகையும் இல்லை. அப்படியானால் அதிகாரிகளால் எப்படி உதவமுடியும்? அதற்கான வழிகளையும் ஒரு அதிகாரி சொல்கிறார். எல்லா இடங்களிலும், அரசு அலுவலர்களின் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும், வேலை நடக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் இறந்து போன ஒருவரின் உடலைக் கொண்டு வருவது என்பது நிச்சயம் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். அதற்கு இந்தியாவின் மீது கோபப்பட்டு, வெறுப்புடன் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அரியநாச்சியாக அட்டகாசமாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அற்புதமான நடிப்பு, இந்த அரசியலில் பின்னுக்குப் போய்விடுகிறது.

எப்படியாவது இந்திய, ஹிந்து, பாஜக வெறுப்பைக் காண்பித்தால்தான் ஆதரவு கிடைக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் படத்தை அதன் ஆதாரக் கருத்தை மட்டுமே சுற்றி எடுத்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சிகளில் வரும் கிராமம் மற்றும் குடும்பம் சார்ந்த காட்சிகள் மிக இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தன. அதைவிட்டுவிட்டுப் படம் எப்போது புரட்சி வசனங்களை நோக்கிப் போகிறதோ அங்கேயே தன் பிடியை இழக்கத் துவங்குகிறது. அதிலும் உன் பேர் என்னப்பா என்ற கேள்விக்குக் கூட, ஊர் நியாயம் உலக நியாயம் சாதி மத இன வேறுபாடு என்று பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி பேசத் துவங்கும்போது கொட்டாவிதான் வருகிறது. அவர் செத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொல்கிறாரே என்று தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தையெல்லாம் விட்டுவிட்டு, அரசுடன் போராடும் ஒரு பெண்ணின் கதையை மட்டும் சொல்லி இருந்தால், அரசின் மெத்தனமும் அலட்சியப் போகும் பின்னணியில் அதுவாகவே வெளிப்படுவதாகக் காட்டி இருந்தால், இந்தப் படம் வேறு தளத்துக்குப் போயிருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்.

பின்குறிப்பு: சென்னைக்கு வந்து இறங்கிய உடனேயே தெரிந்த ஒருவர் உதவுவது, ஒரு கதாபாத்திரம் தலையை ஆட்டிக்கொண்டே வருவது (சோ-வின் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது) என்பதையெல்லாம் சினிமா உலகம் தாண்டி எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. இயக்குநர் கொஞ்சம் மனம் வைக்கவேண்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share