Archive for திரை

மிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி

தொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் லாஜிக் சிதைக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். இதையெல்லாம் தாண்டி, கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழின் ஒரே சிறந்த சீரியல் கொலைப்படம் ராட்சசன். ராட்சசன் ஏன் முக்கியமானது என்பதை, சைக்கோவின் குழப்பங்களைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

பெண்களைக் கடத்தி ஒரே இரவுக்குள் தலையை வெட்டி வெறும் உடலை மட்டும் காட்சிக்கு அனுப்பி வைக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், தலைகளை சேமித்து வைக்கிறான். கொல்லப்பட்டவர்களுள் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எப்படி யோசித்தாலும் யார் ஏன் கொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. போலிஸ் திணறுகிறது.

பார்வையற்ற ஹீரோ, குரலைக் கொண்டே காதலிக்கும் ரேடியோ ஜாக்கியிடம், தன் காதலைச் சொல்லி அவள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கும் இரவில் அவள் கடத்தப்படுகிறாள். பார்வையற்ற தன் காதலன் ஒரு வாரத்துக்குள் தன்னை மீட்பான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சபதமும் செய்கிறாள். அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான் சைக்கோ. எப்படி பார்வையற்ற ஹீரோ வெல்கிறான் என்பதே சவசவ மீதிக் கதை! ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள்? அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும்? இப்படி பல எப்படிகள் அப்படியே காற்றில் அலைகின்றன.

சின்ன வயதில் நாம் கதை கேட்டிருப்போம். பார்வை தெரியாத ஒருவனும் கால் நடக்கமுடியாத ஒருவனும் நட்பாகி வெல்லும் கதை. அதையே கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கிறார் மிஷ்கின். பார்வையற்ற ஹீரோவுக்கு கால் நடக்கமுடியாத பெண் (முன்னாள்) ஐபிஎஸ் துணை. சதா தன் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் அந்த ஐபிஎஸ். சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் கே பாலசந்தர் ரக கதாபாத்திரங்களை நினைவூட்டும் சீரியஸான நகைச்சுவை பாத்திரமாக எஞ்சுகிறது இந்த ஐபிஎஸ்.

ஏன் ஹீரோ பார்வையற்றவராக இருக்கிறார்? என்ன தேவை இந்தப் படத்துக்கு? அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார்? எல்லாம் அப்படித்தான்! அப்படி இருக்கக்கூடாதா என்ன என்ற கேள்வியைத் தாண்டி ஒரு பதிலும் இல்லை! ஒரு பார்வையற்ற ஹீரோ இந்த அளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கப் போகிறான் என்ற ஒற்றை வரி தரவேண்டிய சுவாரஸ்யம் பெரும் அலுப்பையே கொண்டு வருகிறது. கடைசிக் காட்சி வரை அந்த அலுப்பு தீரவே இல்லை. அதிலும் கண் தெரியாத ஹீரோ கார் ஓட்டுவதெல்லாம் ராம நாராயணன் படத்தில் பாம்பு கார் ஓட்டுவதையும் விட மோசமான கற்பனையாகவே எஞ்சுகிறது.

சிசிடிவி என்ற வஸ்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், இதன் மூலம் உலகளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் பல கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதையும், ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை சில மணி நேரங்களுக்குள் போலிஸ் தெரிந்துகொண்டு விடுகிறது என்பதையும் யாராவது இயக்குநருக்குச் சொன்னால் நல்லது.

மிஷ்கினுக்கும் இலக்கிய உலகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பறைசாற்றுவதற்காகவே ஷாஜி, பாரதி மணி, பவா செல்லத்துரை ஆகியோர் ஐயோபாவமாக வந்து போகிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அள்ளுகின்றன. ஆனால் விழலுக்கு இறைத்த நீர்! இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக வந்திருக்கவேண்டிய ‘தாய் மடியில்’ பாடல் கடைசியில் ஒற்றை வரி மட்டுமே வருகிறது. ஏன் இப்படி இயக்குநர்கள் ராஜாவின் கழுத்தை அறுக்கிறார்கள் என்பது புரிவதே இல்லை.

ஒருவன் ஏன் சைக்கோ கில்லராகிறான் என்பதற்கான காரணம் மிக முக்கியம். அந்தக் காட்சிகளை மட்டும் இப்படத்தில் ஓரளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள். அந்த பத்து நிமிடம் மட்டுமே கொஞ்சம் படத்துடன் ஒட்டிப்போக முடிந்தது.

சிறுவயதில் கிறித்துவப் பள்ளியில் படிக்கும் மாணவனை கிறித்துவ பெண் ஆசிரியை (மிரட்டலான நடிப்பு), மாணவனின் இயல்பான பதின்ம வயது சுய இன்பத்துக்குத் தரும் கொடூரமான தண்டனை அவனை சைக்கோவாக்குகிறது. சீர்திருத்தப் பள்ளிக்குப் போகும் வழியில் அவன் ஒரு போலிஸால் பாலியல் வதைக்குள்ளாக்கப்படுகிறான். இந்தக் காட்சிகள் காட்சிரீதியாக காட்டப்படாமல், பாதிக்கப்பட்ட நபரால் சொல்லப்படுவதுபோல், மாற்று அரங்க நாடகங்களின் பாதிப்பில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடகங்களில் பரிச்சியமில்லாதவர்கள் எரிச்சாகிவிடும் சாத்தியங்களும் உள்ளன. ஆனால் இந்தக் காரணங்கள், ஏன் அவன் பல கொலைகளை அதுவும் பெண்களாகப் பார்த்துக் கொல்கிறான் என்பதையோ அவன் ஏன் அவர்களைப் பாலியல் ரீதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதையோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

மற்றபடி கொலைகாரன் யாரையாவது கொல்லப்போகிறான் என்ற பயம் நம்மிடம் பரவவே இல்லை. அதேபோல் ஏன் இந்த ஹீரோ முன்பின் தெரியாத, காதலிக்கத் துவங்காத ஒரு பெண்ணுக்காக இத்தனை அலைகிறான் என்பதும் பிடிபடவே இல்லை. திடீர் திடீர் என்று ஹீரோவும் போலிஸும் என்னவோ யோசித்து எதையோ கண்டுபிடிப்பதெல்லாம் எவ்வித லாஜிக்கும் இன்றி, சட்டென்று தோன்றும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சாகும் முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலிஸெல்லாம் – பாவமாக இருக்கிறது இந்தக் கால இயக்குநர்களை நினைத்தால்!

இடைவேளை வரை படம் தொடங்கிய புள்ளியில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை என்பது அலுப்பைத் தருகிறது. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தரும் வேளையில், மீண்டும் மீண்டும் கொடூரமான கொலைகள் என்ற பழைய பல்லவிக்கே படம் திரும்பிவிடுகிறது. அதிலும் சைக்கோ கொலைகாரன் மேல் ஹீரோயினுக்கு கொலைகாரன் மேல் வரும் இரக்கமெல்லாம் படு க்ளிஷேவாக இருக்கிறது. ஒரே வெட்டில் தலையை வெட்டி எரிவதை தினம் தினம் பார்க்கும் ஹீரோயின் அவனிடம் குழந்தையைப் பார்த்தேன் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்.

இப்படத்தில் சுய இன்பம் தொடர்பான வார்த்தையும் நான்கெழுத்து ஆங்கில வசவு வார்த்தையும் மயிறு என்ற வார்த்தையும் வெளிப்படையாக ம்யூட் செய்யப்படாமல் இடம்பெற்றிருக்கின்றன. நாம் முன்னேறுகிறோம்! படம் நெடுகிலும் கொடூரமான கொலைகள். வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது. குழந்தைகள் பார்க்கக்கூடாத ஒன்று.

மிஷ்கினுக்கு ஒரு திரைப்படம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவை ஒரு நல்ல கதை மற்றும் திரைக்கதையோடு சேர்ந்து பெரிய படைப்பாக மாற்றத் தெரியவில்லை. திணறுகிறார். இந்தப் படம் அதற்கு இன்னொரு சான்று. திரைப்பட இயக்குநர்கள் தீவிர இலக்கியவாதிகளாக, தீவிர இலக்கிய வாசகர்களாக இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை என்ற என் எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதைகளை இலக்கியவாதிகளிடம் இருந்து எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்ற திரைக்கதையையும் திரைமொழியையும் உருவாக்கும் படங்களே பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சைக்கோ – இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு, முதல்நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்தேன். இனிமே வருவியா இனிமே வருவியா என்று பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தொடைகளில் வைத்து இழுத்து..

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

தர்பார் – திரை விமர்சனம்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ஒரு வருடம் கழிந்த நிலையில், அவர் மீதிருந்த தீவிரமான ஆதரவும் வெறுப்பும் கடந்த ஒரு வருட கால இடைவெளியில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுவிட்ட நிலையில் வந்திருக்கிறது தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் பொதுவாக நல்ல கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர்பெற்றவர். இன்றைய நிலையில் வெளிப்படையாக ரசிக்கத்தக்க, எவ்வித அரசியலும் அற்ற கமர்ஷியல் படங்கள் வருவது அரிதாகிவிட்ட சூழலில், ரஜினியும் ஏ.ஆர். முருகதாஸும் இணைவது கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான் செய்திருந்தது. திரைப்படத்தை தங்கள் அரசியல் கருத்துகளுக்குப் பயன்படுத்தும் வெளிப்படையான இயக்குநர்களின் படத்தில் ரஜினி நடிக்கும்போது வெளிப்படும் அரசியல் கருத்துகளை ரஜினியின் அரசியல் கருத்துகாகக் கொள்ளக்கூடாது என்பது ஒருவித சமாளிப்பு மட்டுமே. உண்மையில் இது கொஞ்சம் விவரமான சமாளிப்பு என்றே சொல்லவேண்டும். ரஜினி வெறும் நடிகராக மட்டுமே இருந்து, இயக்குநர்களும் வெறும் இயக்குநர்களாக மட்டுமே இருந்தால் இக்கருத்தை ஒட்டுமொத்தமாகவே ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் அப்படி இல்லாத ஒரு நிலையில் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினியின் காலா வருவதற்கு முன்பு ரஜினி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாகப் பேசிய பேச்சு கொடுத்த எதிர்வினை, அனைத்து ‘முற்போக்காளர்களையும்’ ரஜினிக்கு எதிராகப் பேச வைத்தது. ஆனால் படமோ அப்பட்டமான ஹிந்துத்துவ எதிர்ப்புத் திரைப்படம். உடனே தங்கள் நிலைப்பாட்டை ரஞ்சித்தை முன்வைத்து காலா திரைப்படத்துக்காக மட்டும் மாற்றிக்கொண்டார்கள் ‘முற்போக்காளர்கள்.’ அதாவது தங்கள் வசதிப்படி இருந்தார்கள்.

இன்று ஒட்டுமொத்த திரைப்பட உலகமும் ஹிந்து மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இரண்டு திரைப்படங்களை அப்பாவிப் பூனைகளாக எடுக்கும் இயக்குநர்கள் திடீரென்று ஒரு அரசியல் கருத்தோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள். அல்லது அரசியல் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் இப்படிச் செய்யக்கூடாது என்பதல்ல. ஆனால் இவர்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஹிந்து மதத்துக்கு எதிரான அரசியல் என்பதாக மட்டுமே இருக்கிறது. மறந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ மதமாற்ற விஷயங்கள் குறித்தோ ஒரு மாற்றுக் கருத்தைக் கூட வைத்துவிடமாட்டார்கள். இந்தச் சூழலுக்கு ரஜினியும் பலியானார். காலாவைத் தொடர்ந்து வெளிவந்த பேட்ட படத்திலும் இந்த ஹிந்துத்துவ எதிர்ப்பு வெளிப்படையாகவே முன் வைக்கப்பட்டது. அதன் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் முதலிரண்டு படங்களை நல்ல இயக்குநராகத் தந்தவர், பேட்ட படத்தை ரஜினியின் ரசிகராகத் தந்தவர், இன்று சி ஏ ஏ (தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம்) தொடர்பாக திடீரென்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். இப்போது அவரது படங்களை நாம் வெறும் திரைப்படங்களாக அணுக முடியாது. அணுகக் கூடாது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இதை ஏன் தர்பார் திரைப்படத்தின் போது பேசவேண்டும்? ஏனென்றால் ஒரு திரைப்படத்தை வைத்து அந்தத் திரைப்படத்தை மட்டுமே அணுகமுடியும் என்று சொல்வதற்கும், இனி வரும் திரைப்படங்களில் இந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் யார் வசம் சிக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது என்று சொல்வதற்கும்தான். அப்படி இருக்கிறது நிலைமை.

தர்பார் திரைப்படம் வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை. ஆனால் நுணுக்கமாக ஒரு விஷயத்தை மெல்லத் தாண்டிப் போகிறது. தாண்டி போவதன் நோக்கம், பயம் மட்டுமே. வேறு எந்த வகையிலும் ஹிந்து மத அரசியலைப் பழிக்கவேண்டும் என்பதற்காகவோ, பிற அரசியல் இயக்குநர்கள் செய்வது போல ஹிந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்ல. வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை என்பது தரும் நிம்மதியுடன், நுணுக்கமாக அது தாண்டிப் போகும் விஷயத்தையும் நாம் பேசத்தான் வேண்டும். அதே சமயம் தர்பார் திரைப்படம் மிக தைரியமாக வெளிப்படையாக காவல்துறையை அங்குலம் அங்குலமாக ஆதரிக்கிறது. இன்றைய நிலையில் ஹைதராபாத் என்கவுண்டரைப் பொருத்து மக்களின் மனநிலையில் என்கவுண்ட்டர்களுக்கு ஆதரவான மனநிலை இருப்பதால் தப்பித்தது. இல்லையென்றால் இப்படம் வேறு மாதிரியான எதிர்வினைகளைப் பெற்றிருக்கக்கூடும். எவ்வித விசாரணையும் இல்லாத என்கவுண்ட்டர்களை, ஹைதராபாத் என்கவுண்ட்டர்கள் உட்பட, நான் ஆதரிக்கவில்லை. சட்டரீதியாகத் தரப்படும் தண்டனையே சரியானது அது மரண தண்டனையாக இருந்தாலும் சரிதான். ஆனால் ஹைதரபாத் என்கவுண்ட்டரின்போது இருந்த பொதுமக்களின் கொதிநிலையின் முன்பு இக்கருத்துச் சொல்லப்பட்டபோது மிகத் துச்சமாகவே அது எதிர்கொள்ளப்பட்டது. ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் என்பது நிச்சயம் கேட்ட நொடியில் ஒரு மகிழ்ச்சியைத் தரவே செய்கிறது. குரூர மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அறிவு சொல்கிறது. பொதுமக்களோ சட்டென கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே தங்கிக்கொள்கிறார்கள். இப்படமும் என்கவுன்ட்டரின் இன்னொரு‌ பக்கத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட முனையவில்லை. நல்ல கிறுக்குத்தமான போலீசின் என்கவுன்ட்டர் என்பதே போதும் என்று நினைத்துவிட்டார்கள்.

இப்படம் வன்புணர்வுக்குத் தரப்பட்டும் என்கவுண்ட்டரை மட்டும் சொல்லும் படமல்ல. மாறாக எந்த ஒரு கொடூர குற்றத்துக்கும் என்கவுண்ட்டர் செய்யும் ஒரு போலிஸை ஹீரோவாகக் காண்பிக்கிறது. தொடர் என்கவுண்ட்டர்கள். கொல்லப்படுபவர்கள் அனைவருமே கெட்டவர்கள். எனவே மக்கள் இந்த என்கவுண்ட்டருக்கு மிக நெருக்கமாகிப் போகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது வெடித்த ரஜினியின் உண்மைக்குரலும் இப்படத்தின் கருத்தும் அப்படியே ஒன்றிப் போகிறது. இதை ஒட்டித்தான் இனி ரஜினிக்கும் இப்படத்துக்கும் முருகதாசுக்கும் வேப்பிலை அடிப்பார்கள். அடிக்கட்டும், நல்லதுதான். அதுமட்டுமல்ல, மிக வெளிப்படையாகவே மனித உரிமைக் கழகத்தின் போலித் தனத்தை விமர்சிக்கிறார்கள். ரஜினியின் வசனம் ஒன்று ஒரு மனித உரிமைக் கழக அலுவலரைப் பார்த்து இப்படி வருகிறது, ‘எவனாவது செத்தா மனித உரிமைக் கழம் வரும், நீங்களே செத்தா எந்த கழகம் வரும்?’ என்று. அதேபோல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களைக் காட்டி, பணம் கொடுத்தா யாருக்கு வேணா பேசுவாங்க என்று வசனம் வருகிறது. சசிகலாவைக் குறிப்பிடும் ஒரு வசனமும் போகிற போக்கில் வருகிறது.

ரஜினி இதுபோல தன் கருத்துக்கு ஒத்துவரும் படங்களை எடுத்துக்கொண்டு நடிப்பது அவருக்கு நல்லது. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் நடித்துவிட்டு, அது வெறும் படம் என்று சொல்லும் சமாளிப்பையெல்லாம் நிறுத்திக்கொள்வது அவரது அரசியலுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் நமக்குப் பழக்கப்பட்ட ரஜினி இப்படிப்பட்டவர் அல்ல! ஆன்மிக வாதி! அதை திடீரென்று மாற்றும் தேவையற்ற விஷச் சுழலில் ரஜினி சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அரசியலில் கமலுக்கும் ரஜினிக்கும் வித்தியாசம் நூலிழை அளவு மட்டுமே இருக்கும்.

இப்படம் வெளிப்படையாக ஹிந்துக்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் மும்பையில் போதை மாஃபியா, ரவுடியிஸம் என எல்லாவற்றையும் செய்து குவித்தது தாவூத் இப்ராஹிம். அதைச் சொல்லக்கூட தைரியம் இன்றி, இயக்குநர் அதை ஹரி சோப்ரா என்று வைத்துக்கொண்டு விட்டார். இன்னுமா அச்சம்? இது வன்முறை தொடர்பான அச்சமல்ல. தனக்கும் இத்திரைப்படத்துக்கும் முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று எழும் அச்சம். அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியான பின்னடைவு ஏற்படுத்தும் பயம். இதையே ஹிந்துக்களும் திருப்பிச் செய்யாதவரை இந்தத் தமிழ்த் திரையுலகம் ஹிந்துக்களை துரத்துவதை நிறுத்தப்போவதில்லை.

ஒரு படமாகப் பார்த்தால் – முதல் பகுதி போவதே தெரியவில்லை. மிரட்டல். கார்த்தி சுப்புராஜ் தம்பட்டம் அடித்துக்கொண்டு காண்பித்த பழைய ரஜினியை ஏ.ஆர். முருகதாஸ் அலட்டலே இல்லாமல் சாதித்துக்காட்டிவிட்டார். கடந்த நான்கு படங்களில் ரஜினிக்கு இல்லாத சுறுசுறுப்பும் வேகமும் இப்படத்தில் வந்திருக்கிறது. ஆச்சரியம். காலா, கபாலி படங்களில் ரஜினி ஓடும் காட்சியெல்லாம் கிடையாது. இப்படத்தில் பல காட்சிகள் ரஜினி படு எனர்ஜட்டிக்காக இருக்கிறார். முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மெல்ல இழுக்கும் படம், மும்பையின் விபசார விடுதிகளின் ரெய்டுகளின் போது வேகம் பிடிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், எவ்வித திருப்பமும் இன்றிப் படம் செல்வதுதான். ரஜினியின் மகள் கதாபாத்திரத்தின் முடிவு மிக உருக்கமானது, முக்கியமானது என்றாலும், அது தரும் சிறிய அலுப்பு படத்துக்கு பெரிய தடையைக் கொண்டு வருகிறது. அதிலிருந்து படம் மீளவே இல்லை. ரஜினி தனியாளாகப் போராடுகிறார். இன்னமும் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தனியாளாகத்தான் வில்லனிடம் மோதவேண்டும் என்ற நிலை வரும்போது, ரஜினியின் தனியாள் போராட்டமும் வீணாகப் போகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு படமாக நிச்சயம் படம் நன்றாகவே உள்ளது. காலா, கபாலி, பேட்ட திரைப்படங்களில் இல்லாத நகைச்சுவையான கலகலப்பான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. இது பெரிய ப்ளஸ். ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா அட்டகாசமாக நடிக்கிறார். எந்த ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக நடிக்கும் நடிகைக்கு தமிழ்த் திரையுலகில் கதாநாயகி என்று பெயர். இப்படத்தில் நயந்தாரா. இசையும் ஒளிப்பதிவும் கச்சிதம். இடைவேளைக்குப்‌ பின்னர் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் எங்கேயோ‌ போயிருக்கும்.

ரஜினிக்கு 70 வயது. இந்த மாதிரி கமர்ஷியல் படத்தில் இந்த அளவுக்கு உழைப்பதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. என் அப்பாவின் 70வது வயதில் அவர் கையைப் பிடித்து பாத்ரூமுக்குக் கூட்டிச் செல்வேன்!

இனி ‘முற்போக்காளர்களிடம்” ரஜினியை விட்டுவிட்டு நாம் ஸ்வீட் சாப்பிடலாம்!

Thanks: OreIndiaNews.com

Share

பிகில் – தொலைந்துபோன பந்து

மிக சீரியஸான ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் ஹீரோயிச நடிகர்களால் திரையில் நிகழ்த்தவே முடியாது என்பதற்கான இன்னொரு நிரூபணம் விஜயின் பிகில் திரைப்படம். அதுவும் அட்லீ போன்ற இயக்குநர்கள், இந்த முக்கியமான விஷயங்களையெல்லாம் கூட ஏனோ தானோ என்று, ஒரு ஹீரோவின் மாஸ்ஸைக் கூட்டுவதற்காக மட்டுமே எடுப்பார்கள். இவர்களிடமெல்லாம் ஒரு சீரியஸ்தன்மையை எதிர்பார்ப்பதே நாம் நமக்குச் செய்துகொள்ளும் அவமரியாதை.

விஜய்யின் சமீபத்திய திரைப்படங்களில் இருந்த அதீத நடிப்பும் அலட்டலும் இதில் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் ஆசுவாசம். முதல் ஐந்து நிமிடங்களில் மீண்டும் அதே அதீத அலட்டலா என்ற எண்ணம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் போகப் போக எப்படியோ சமாளித்து, மெல்ல முன்னேறி கொஞ்சம் நன்றாகவே நடிக்க தொங்கிவிட்டார். ஆனாலும் இடையிடையே அப்பாவைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று கொஞ்சலாக நடந்து நம்மைப் பாடாகப் படுத்தவும் செய்கிறார். பல காட்சிகளில் ‘கில்லி’ படத்தில் வரும் விஜய்யின் அதே நடிப்பைப் பார்க்கமுடிகிறது. ராயப்பனாக வரும் விஜய் சுத்தமாக ஒட்டவில்லை. அவர் நடிப்பதும் இளமையான விஜய் நடிப்பது போலவே இருக்கிறது. அதேசமயம் வேறு மாதிரி நடிக்க முயன்றிருந்தால் நாம் அரண்டு மிரண்டிருப்போம் என்பதால் இதையே பாராட்டிவிடுவது நல்லது என்றும் தோன்றுகிறது.

இடைவேளை வரை கொஞ்சம் கலகலப்பாகவும் வேகமாகவும் செல்லும் திரைப்படம், இடைவெளைக்குப் பிறகு டொக்கு விழுந்த மாதிரி ஆகிவிடுகிறது. ஏனென்றால் அப்போதுதான் முக்கியமான கதைக்குள்ளே எண்ட்ரி ஆகிறார் இயக்குநர்! இதை விளையாட்டுத் துறையைப் பற்றிய படமாக எடுப்பதா, விஜய்யின் படமாக எடுப்பதா என்ற குழப்பம். (ஒருவேளை குழப்பமே இல்லையோ?) எந்தப் படத்தையும் ஹீரோவின் படமாகத் தங்களால் மாற்ற முடியும் என்று தமிழ் இயக்குநர்களின் அடியொற்றி இந்தப் படத்தையும் மாற்றி, இப்படம் எதோ ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

ஹிந்தியில் இதே போன்ற கருவுள்ள திரைப்படத்தையெல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று இவர்கள் பார்க்கவேண்டும். அவையும் வணிகத் திரைப்படங்களே. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை புல்லரிப்பு வர வைத்தே அனுப்பி வைப்பார்கள். ஆனால் அதில் ஹீரோயிஸத்தைப் பலப்படுத்த, இன்னும் மேம்படுத்த, இவற்றைப் பயன்படுத்தமாட்டாரகள். இப்படத்தின் பெரிய சறுக்கல் இங்கேதான் தொடங்குகிறது.

ஹீரோயிஸப் படம் என்று முடிவெடுத்துவிட்டால், மைதானத்தில் விஜய் ஆடவேண்டும். ஆனால் இங்கே வெளியே நின்று என்ன என்னவோ சைகைகளைச் செய்கிறார். இதை ஈடுகட்ட, ஒரு கும்பல் விஜய்யைக் கடத்த, அவர் இவர்களைப் பந்தாட, போலிஸ் ஸ்டேஷனில் மாஸ் காட்ட என்று என்ன என்னவோ செய்கிறார். இவை எதுவுமே ஒட்டவில்லை. ஏனென்றால் நமக்கு முன்னரே எப்படியும் விஜய்யின் அணி வெல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கும் போது திரைக்கதை எப்படி இருக்கவேண்டும்? கோல்ட் ஹிந்திப் படத்தில் இந்தியா ஹாக்கியை வெல்லும் என்பது நமக்குப் படம் தொடங்கும் முன்பே தெரியும். ஆனால் கடைசிக் காட்சி வரை அந்த புல்லரிப்பை அப்படியே தக்க வைப்பார்கள். அதுவும் வணிகத் திரைப்படமே.

ஒவ்வொரு காட்சியிலும் தான் விஜய்யாகத் தெரியவேண்டும் என்று விஜய் மெனக்கெடுவதுவே என்பதுவே இப்படத்தின் எரிச்சலாக ஆகிவிடுகிறது. ஏன் நம் கதாநாயகர்களை இரண்டு அல்லது மூன்று வேட வெறி பிடித்து ஆட்டுகிறது என்று புரியவில்லை. ராயப்பனாக ஒரு கெத்தான நடிகரை நடிக்க வைத்தால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? ஹிந்தியில் இதைச் செய்திருப்பார்கள்.

இதில் அட்லீ, விஜய்யின் அடையாளச் சிக்கல் வேறு குழப்புகிறது. மைக்கேல் என்று பெயர் வைத்த ஹீரோவின் அப்பாவின் பெயர் ராயப்பன். கிறித்துவர். ஏன் காவி வேட்டி கட்டி, விபூதி குங்குமம் வைத்து, கழுத்தில் சிலுவை போட்டு ஏசுவைக் கும்பிடுகிறார்? யாருக்கும் தெரியாது. கூடவே ஒரு ராவுத்தர் வேறு. பத்தாது என்று திடீரென்று பட்டை போட்டுக்கொண்டு வரும் ஆனந்தராஜ் வேறு. என் சமுதாயம் என் சமுதாயம் என்று சொல்கிறார் ராயப்பன். யார் அந்த சமுதாயம்? ஒரே சமுதாயம், அதுவும் ஒரே இடத்திலிருந்து எப்படி ஒரு தமிழக அணிக்குத் தேர்வாக முடியும்? அப்படியானால் அவர்களுக்குள்ளே நடக்கும் அந்த மோதல் யாருக்கும் யாருக்குமானது? ராயப்பனை எதிர்ப்பவரும் ஒரு கிறித்துவரே. அப்படியானால் இது எந்த சமூகத்துக்கான பிரச்சினை? ஒரு தெளிவும் கிடையாது. ஆனால் படம் முழுக்க கிறித்துவக் குறியீடுகள் வரவேண்டும் என்பதில் மட்டும் அட்லீ தெளிவாக இருந்திருக்கிறார். அதை சமன்படுத்தவே ராயப்பனின் முகத்தில் குங்குமும் விபூதியும் போல.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை நிறுத்திவிட்டு, வேறு யாரையோ வைத்து இசையமைக்க வைக்கிறார் போல. தொடர்ச்சியாக எப்படி இப்படி மிக மோசமான பாடல்களைத் தருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இளையராஜா உச்சத்தில்  இருந்தபோது அவர் இசையமைத்து உச்ச நடிகர்களான கமல், ரஜினி படம் வருமானால் பாடல்கள் அசரடிக்கும் என்பதை எழுதியே தரலாம். ஆனால் ஏ ஆர் ரஹ்மானால் ஒரு விஜய் படத்துக்குக்கூட உருப்படியாகப் பாடல்களை அமைக்கமுடியவில்லை. சிங்கப்பெண்ணே என்று அவர் உணர்ச்சிகரமாகப் பாடும்போது பாவமாக இருக்கிறது. அட்லீ, ஏ ஆர் ரஹ்மான், விஜய் கூட்டணி ஒரு பாடலில் வரும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று தோன்றியது!

தேவர்மகன், பாட்சா, நாயகன் என்று பல படங்களில் இருந்து பல காட்சிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் அட்லீ. இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களையே ஒத்திருந்தபோது அவரிடம் அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்னாராம், அது எனக்குப் பெருமைதான் என்று. அட்லீயும் அதையே சொல்லிவிடக்கூடும். ஒரு படத்தை மட்டுமே காப்பி அடிப்பதால் வரும் பிரச்சினைகளை, பல படங்களில் இருந்து காப்பி அடிப்பதால் சமாளிக்கும் புதிய வித்தையை அட்லீ அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று எதிர்காலத்தில் இயக்குநர்கள் பாராட்டக்கூடும். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது எதாவது ஒரு பாடல் பச்சக்கெனப் பிடித்தால், அது முன்பே எப்போதோ இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றின் உருவலாக இருக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், நான் முன்பு ரசித்த படங்களின் காட்சிகள் என்பதால், இவையும் பிடித்துப் போய்விட்டன என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு காட்சிகூட தன்னியல்பான காட்சி கிடையாது. இப்படியான சில உருப்படியான காப்பி காட்சிகள், சில இடங்களில் விஜய்யின் நடிப்பைத் தாண்டி இப்படத்தில் ஒன்றுமே இல்லை.

இடைவேளை வரை இருந்த படத்தின் வேகத்தை அப்படியே கொஞ்சம் நீடித்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால், மோட்டிவேஷன் கதை, ஹீரோயிசக் காட்சிகள் போதாதென்று, பிராமணப் பெண்ணை ‘மீட்டு’க் கொண்டு வந்து ஆட வைப்பது, முகத்தில் அமிலம் அடிக்கப்பட்ட பெண்ணை மீட்டுக்கொண்டு வந்து நேரடியாக ஃபைனலில் ஆட வைப்பது போன்ற சமூகக் கருத்துகளைச் சொல்லத் தொடங்கி, இருந்த கொஞ்சம் நஞ்சம் உயிர்ப்பையும் விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறது பிகில்.

பழைய நல்ல படங்களை நினைவூட்டுவதால் ஒரு தடவை பார்க்கலாம். 

Share

கோமாளி

கோமாளி என்றொரு கொடுமையைப் பார்த்தேன். (ஹாட்ஸ்டாரில் விஐபி-யிலேயே கிடைக்கிறது.) ஒரு நல்ல முடிச்சை எடுத்துக்கொண்டு அதை காமெடியாக எடுப்பதா அல்லது சீரியஸாக எடுப்பதா என்று தெரியாமல் குழப்பி அடித்திருக்கிறார்கள். இதில் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் விலக்கம் பற்றியும் மீண்டும் மனிதாபிமானமே முக்கியம் என்ற ‘புத்தம் புதிய’ கருத்தையும் சொல்ல நினைத்து கசக்கி எறிந்துவிட்டார்கள். எல்லா சாதிகளும் இனங்களும் வேற்றுமை மறந்து வெள்ளத்தின்போது உதவினார்கள் என்பதை வலிந்து வலிந்து காட்டுகிறார்கள். அதில் பூணூல் தெரிய பிராமணர் உதவ, சிங் உதவ, இஸ்லாமியர் உதவ, கிறித்துவர் ஜோசஃப் என்று தன் பெயர் சொல்லிப் போகிறார். அப்படியும் பிராமணரை விடவில்லை. இன்னொரு காட்சியில், “தோப்பனார் கிட்ட சொல்வேன்” என்று வசனம் வைத்து, யோகி பாபு அதற்கு பதிலாக “தோப்பனார் தொண்டையை கிழிச்சிருவேன்” என்று என்னவோ சொல்கிறார். இது சின்ன விஷயம், சின்ன கிண்டல், சின்ன சீண்டல்தான். ஆனால் ஏன் இதை வைத்தார்கள் என்பதுதான் விஷயம். 40 வயதான ஆண் ஒருத்தன் ஒரு பிரச்சினைக்கு என்றைக்காவது “என் தோப்பனார்கிட்ட சொல்வேன்” என்று சொல்வானா? இந்தப் படத்தில் சொல்கிறான். சின்ன பையன் சொல்வது போலவாவது வைத்திருக்கலாம். ஒரு காட்சியை இப்படி வைக்கும்போதே உரைக்காதா என்ன? ஆனாலும் வைக்கிறார்கள் என்னும் எண்ணத்தின் பின்னணியில் உள்ள விஷயமே முக்கியமானது. ஆனாலும் இயக்குநர் மற்ற காட்சிகளில் இப்படி படுத்தவில்லை.

மோடியை யோகிபாபு என்னவோ சொல்கிறார், அது ம்யூட் ஆகிவிட்டது. ப்ளம்பர் என்று சொல்கிறார் எனக் கேள்விப்பட்டேன். ரஜினி குறித்த காட்சி நீக்கப்பட்டு நாஞ்சில் சம்பத் வருகிறார். இதுவே ஒரு குறியீடோ என்ன எழவோ. ரஜினி பற்றிய காட்சி, லாஜிக்கே இல்லாத, ஆனால் மக்கள் மனதில் இருக்கும் கருத்துடன் பொருந்திப் போன நல்ல காட்சிதான். ஏன் இத்தனை பொங்கி நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 2017 வரை ரஜினி வெளிப்படையாக என்றும் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதே இல்லை. அப்படியானால் அதைக் காட்சியாக வைத்து எப்படி ஜெயம் ரவி இன்னும் இது 1996 என்று சொல்லமுடியும்? லாஜிக் தவறான காட்சியை வைத்துவிட்டு அதை உணர்ந்து நீக்கினார்களோ என்னவோ.

மொத்தத்தில் கர்ண கொடூரமான படம்!

Share

தர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்

மிக மோசமான, அடிப்படையற்ற ஒரு படம். லாஜிக்கே இல்லாமல் இப்படிப் படம் எடுப்பது தமிழில் புதிதல்ல. ஆனால் இதில் ஒரு புதிய சாதனை செய்திருக்கிறார்கள். ஒரு படம் முழுக்க ஹிந்து மதத்தை, ஹிந்து மதத்தின் கடவுளர்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற சாதனை இதுவரை வந்ததில்லை. கூடவே ஈவெராவையும் (இன்னும் 3 தலைவர்களையும்) கிறித்துவ மதத்தையும் தெரஸாவையும் புகழ்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களையும்விட மோசமான உருவாக்கத்தில் வந்திருக்கும் இப்படத்தைப் பார்ப்பதே ஒரு தியாகம்தான். இந்தப் படத்தைப் பற்றி எழுத ஒரு அவசியமுல்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்கு ஹிந்து மத வெறுப்பையும் அதன் ஒட்டாக கிறித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பார்த்தேன், எழுதுகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் முத்துக்குமரன். இவருக்குப் படம் எடுக்கத் தெரியுமா என்பதையும் தாண்டி, இவர் ஒரு நல்ல படத்தையாவது பார்த்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் பெயர் மட்டும் முத்துக்குமரன். உண்மையில் இவர் ஹிந்து மதத்துக்குச் செய்யும் பெரிய சேவை ஒன்று இருக்குமானால், தன் பெயரை உடனே மாற்றிக்கொண்டு விடுவது. திரையுலகத்துக்குச் செய்யும் சேவை என்று ஒன்று இருக்குமானால், இனி படங்களையே எடுக்காமல் இருப்பது. இப்படத்தில் கதையே இல்லை என்பதோடு, திரைக்கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை, ஒன்றுமே இல்லை. ஆனால் பிரசாரம் மட்டும் பலமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகம் மிகப்பெரிய மாயவலையில் சிக்கி இருக்கிறது என்பதை எத்தனையோ முறை எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். அதன் இன்னொரு நிரூபணம் இத்திரைப்படம்.

* படத்தின் முதல்  காட்சியே இரட்டை அர்த்த வசனத்தில் தொடங்குகிறது. பேசுபவர் யமன்.

* யமனின் மகனாக வரும் யோகி பாபு புதிய யமனாகிறார். இவர் வாயைத் திறந்தாலே யாரையாவது எதற்காகவாவது திட்டிக்கொண்டே இருக்கிறார்.

* நடனம் என்பதை சிவன் கொச்சைப்படுத்திப் பேசி, முருகன் பிள்ளையாருடன் குத்தாட்டம் போடுகிறார்.

* சிவன் போடா வெண்ண என்றெல்லாம் வசனம் பேசுகிறார்.

* நரகத்துக்கு அழைத்துச் செல்ல கருப்பான மனிதர்கள் அரக்கர்கள் வருகிறார்கள். அவர்கள் அரக்கர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் சொர்க்கத்துக்குச் செல்ல வெண்ணிற தேவதைகள், கிறித்துவ பாணியில் இறக்கைகளுடன் வருகிறார்கள். அதாவது கெட்டவர்கள் என்றால் கருப்பாக ஹிந்து அடையாளங்களுடன் இருப்பார்கள். உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லவர்கள் எல்லாம் கிறித்துவ அடையாளங்களுடன் வெள்ளையாக இருப்பார்கள்.

* பாம்புக்குப் பால் ஊற்றினால் பாம்புக் குட்டிகள் செத்துப் போகும் என்று படத்தில் சொல்கிறார்கள். யார் சொன்னது? பாம்பே சொன்னது!

* யானையைப் பிச்சை எடுக்க வைத்தால் யானை பாகனைக் கொல்லும். ஆனால் யமன் அந்த யானையை மீண்டும் திருவண்ணாமலைக்கு அனுப்புகிறார். திருவண்ணாமலைக்குப் போய் அந்த யானை என்ன செய்யும்? இவ்வளவுதான் இயக்குநர் முத்துக்குமரனின் மூளை!

* யமன் கிறித்துவ தேவாலயத்துக்குள் போய் படுத்து உறங்குகிறார். ஏசுவை யமனே ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார். ஏசுவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் சித்திரகுப்தனை!

* இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு யமலோகம் வருகிறார்கள். அவர்களை வளர்க்க யமன் அவர்களை யாரிடம் ஒப்படைக்கிறார்? தெரஸாவிடம்! தெரஸா புகழ் வேறு உண்டு. மறந்தும் ஹிந்து சன்னியாசிகள் அனாதைக் குழந்தைகளை வளர்ப்பதாகக் காண்பிக்கமாட்டார்கள். இப்படியான பொதுப்புத்தியை வளர்ப்பதே இயக்குநர் முத்துக்குமரன்களின் நோக்கம்..

* சமூகத்தில் நடக்கும் விஷயங்களையெல்லாம் பேப்பர் கட்டிங் எடுத்து வைத்துக்கொண்டு படமெடுத்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன். அதில் ஒன்று, ஸ்கூட்டரில் செல்லும் தம்பதிகளை ஒரு போலிஸ் காலால் உதைத்துத் தள்ள, அதில் இறந்து போகும் ஒரு பெண்ணைப் பற்றியது. அதில் அப்படி உதைத்துத் தள்ளும் போலிஸ் நெற்றி நிறைய பட்டை போட்டு சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு, ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்ட பக்தர்! ஐயப்ப பக்தர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அடுத்து அரங்கேறுகிறது.

* ஹிந்துக் கடவுள்கள் என்றால், ஹிந்துக்களின் இயற்கையோடு ஒட்டிய வழிபாடு முதற்கொண்டு கிண்டல் செய்து பகுத்தறிவு பேசுவது, கிறித்துவம் என்று வந்துவிட்டால் புகழ்வது. இதற்கு எதற்கு ஒரு படம்? பேசாமல் ‘எழுப்புதல் கூட்டம்’ ஒன்றில் பேசி வீடியோவாக்கி வெளியிட்டிருக்கலாம்.

* சித்திரகுப்தன் நெற்றியில் பட்டை போட்டிருக்கிறார். அவர் மனிதனாக வரும்போது நாமம் போட்டிருக்கிறார். தெளிவாக பிராமணர் என்று காண்பிக்கிறார்கள். ஏனென்று பார்த்தால் அடுத்த காட்சியிலேயே யமன் ஈவெராவைப் புகழ்கிறார். இந்த பிராமணர் அதை மறுக்கிறார். ஆம், மறுக்கிறார், மரியாதையுடன் மறுக்கிறார், திட்டவில்லை! யமனின் சந்தேகத்தைப் போக்க அதே சித்திரகுப்தன் ஈவெராவின் பெருமைகளை அவிழ்த்துவிடுகிறார். இப்படிப்பட்டவர்களை தன் தந்தையான முதலாம் யமன் ஏன் கொல்கிறார் என்று இந்தப் புதிய யமனே நொந்துகொள்கிறார்.

* அடுத்து அம்பேத்கரைப் பாராட்டுகிறார்கள். அடுத்து சுபாஷ் சந்திர போஸின் சிலையைப் பார்த்துப் புகழ்கிறார்கள். எத்தனை விவரம் பாருங்கள். சுபாஷ் சந்திர போஸைப் புகழும்போது ஒரு வசனம், இவர்தானே உண்மையான தேசத் தந்தை என்று. அதில் உண்மையான என்ற வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

* அடுத்து காந்தி சிலையைப் பார்த்து ஜஸ்ட் ஒரு வார்த்தை பாராட்டிச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

* பாஸ்கி என்றொரு நடிகர், சோ-வாக நடிக்கிறார். பாஸ்கிக்கு மண்டைக்கு வெளியே மட்டுமில்லை, உள்ளேயும் ஒன்றும் கிடையாது என்று தெரிகிறது. இவர் இத்தனை நாள் சொல்லிக்கொண்டிருந்தவை எல்லாமே பொய்தானோ என்றும் தோன்றுகிறது. இத்தனைக்கும் இவர் திரைப்படங்களின் விமர்சகர் வேறு. ஒரு படத்தில் யாரை எப்படிக் காண்பிக்கிறார்கள், அதில் நாம் ஏன் நடிக்கிறோம் என்கிற அடிப்படை அறிவுகூட இவருக்கு இல்லை.

* மாமா வேலை பார்த்தே சோ அரசியல் பணி ஆற்றினார் என்றே படத்தில் காட்டுகிறார்கள். தன் வாழ்நாள் முழுக்க திராவிட வெறி அரசியலுக்கு எதிராகப் பேசியவருக்கான மரியாதை இவ்வளவுதான். இதை பாஸ்கியும் அப்படியே நடித்திருக்கிறார் என்பது நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். இங்கே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது வாய்ப்பரசியல்தான். உண்மையோ தர்மமோ அல்ல.

* யமன் மாமா வேலை பார்க்கிறார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

* இதற்கிடையில் இயக்குநர் முத்துக்குமரனுக்கு அரசியல் பகடி செய்ய ஆசையும் வருகிறது. ‘ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி  கேக்குதாம்’ என்ற வசனம் எனக்கு மட்டும் கேட்டது.

* எவ்வித அறிவும் இன்றி அரசியல் பகடியை எடுப்பது என்பது நம் தமிழ் இயக்குநர்களுக்கே வந்த கலை. மேம்போக்கான வசனம் ஒன்றை ஒற்றைத் தெறிப்பில் சொல்லிவிட்டு, அசப்பில் ஒரு அரசியல்வாதியைப் போன்ற ஒருவரைக் காட்டிவிட்டு, என்னவோ பகடித் திரைப்பட வரிசையில் பெரிய சாதனை செய்துவிட்டது போல இருப்பதே நம் இயக்குநர்களின் பணி. சத்யராஜின் ‘மகா நடிகன்’ தொடங்கி இன்று வரை இதுதான் இவர்களுக்குப் பழக்கம். மிக அரிதாக சில படங்கள் (அமைதிப்படை, புதுப்பேட்டை போன்றவை) வரும். இந்தப் படத்தில் நம் இயக்குநருக்கு எதுவுமே வரவில்லை என்பதால், இந்தப் பகடியும் வரவில்லை என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை.

* ஓ பி எஸ் வருகிறார். மோடியைப் பெயர் சொல்லாமல், அதுவும் ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லிக் கிண்டல் செய்கிறார்கள். செல்லூர் ராஜுவைக் கிண்டல் செய்கிறார்கள். தமிழக அதிமுக அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறார்கள். ஒன்றிலும் ஒரு விஷயஞானமும் இல்லை. ஆனால் மிக விவரமாக இயக்குநர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்லி வைக்கிறார்!

* அடுத்து ஆணவக் கொலைக்குள் போகிறார் இயக்குநர்.

* இறுதியில் ஈவெரா, காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் என நால்வரையும் யமன் மீண்டும் உயிர்ப்பித்து அனுப்பும்போது, என்னடா இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை என்கிற எண்ணம் நமக்கு எழுகிறது.

இத்தனையிலும் நாம் கவனிக்கவேண்டியது, இத்தனை ஹிந்துக் கடவுள்கள் கிண்டல் செய்யப்பட்டபோதும் ஒரே ஒரு கிறித்துவக் கடவுள் கொண்டாடப்பட்டிருப்பதையும், மறந்தும் இஸ்லாம் என்கிற ஒரு வார்த்தைகூடப் படத்தில் வரவில்லை என்பதையுமே. தமிழில் யமனைப் பற்றிய கேவலமான முதல் படம் இதுதான் என்றில்லை. யமனுக்கு யமன் தொடங்கி லக்கிமேன் வரை பல படங்கள். அவை அனைத்திலும் இயக்குநர்களின் முட்டாள்தனம் மட்டுமே வெளிப்பட்டது. யமன் குத்தாட்டத்தை ரசிப்பதாகக் காட்சிகள் வைப்பார்கள். யமனுக்கு மூளையே கிடையாது, முட்டாள் என்று காண்பிப்பார்கள். யமனை நாடகத்தின் ஒரு நகைச்சுவை நடிகரைப் போலக் காண்பிப்பார்கள். இந்தப் படம் அதே அடிப்படையில் ஹிந்து வெறுப்பையும் கிறித்துவ ஈவெரா பிரசாரத்தையும் இணைத்து அடுத்த தளத்துக்குச் சென்றிருக்கிறது. முட்டாள்கள் இயக்குநரோ பாஸ்கியோ யோகி பாபுவோ அல்ல.

நன்றி: ஒரே இந்தியா

Share

காப்பான் – திரைப்பட விமர்சனம்

தீவிரமான கமர்ஷியல் படங்களை எடுக்க நாம் இன்னும் பழகவில்லை. உண்மையில் பழக விரும்பவில்லை. வணிகத் திரைப்படங்கள் என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் அது ஒரு ஹீரோயிஸப் படமென்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். நம் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இதனால் வணிகத் திரைப்படங்கள் ஏனோதானோவென்று எடுக்கப்படுகின்றன.

சமீபத்தைய ட்ரெண்டாக, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை, அதன் ஆழம் புரிதல் எதுவுமின்றி அப்படியே மேம்போக்காக ஒரு வசனமாகப் பயன்படுத்தும் போக்கும் பரவலாக இருக்கிறது. அல்லது சில காட்சிகளை சும்மா பயன்படுத்திக்கொள்வது. இந்த காப்பான் படத்தில் அப்படிப் பலவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக இவர்கள் எடுத்துக்கொண்டிருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.

நிலம் முக்கியம், திட்டங்கள் முக்கியமல்ல என்று எங்கெல்லாமோ சுற்றி சுற்றி வந்து சொல்லி இருக்கிறார்கள். அதை இவர்கள் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ‘விவசாயி தற்கொலை செய்துகொள்வதே பரவாயில்லை’ என்று மக்கள் சொல்லிவிடும் அளவுக்கு உள்ளது. ஏகப்பட்ட விஷயங்களையெல்லாம் அப்படியே படத்தில் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாக இந்தப் படம் சொல்ல வருவதுதான் என்ன என்பதில் பெரிய குழப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்திய முக்கியம், காஷ்மீர் முக்கியம், தீவிரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும், மிக நல்ல பிரதமர் வர்மா (மோகன்லால் – நரேந்திர மோடி போன்ற கெட்டப்), அவரது மகன் அதைவிட நல்லவர்! இப்படி ஒரு கதை. இவரை கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்கிறது. பிரதமரைக் கொல்கிறார்கள். பிரதமர் மகன் (ஆர்யா) மறு பிரதமராக, அந்த நல்லவரையும் கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்க, அதற்கு போலிஸில் இருப்பவர்களே உதவ என்று என்னவெல்லாமோ சுழற்றி அடிக்கிறார்கள். படத்தில் திருப்பம் இருக்கலாம், அதற்காக திருப்பங்களே படமாக இருந்தால் பார்க்கவேண்டாமா? முறுக்கு சுற்றுவது போல இழுத்துக்கொண்டே போகிறார்கள்.

ரகசிய போலிஸான சூர்யா குண்டு வைக்கிறார். அடுத்த நிமிடமே களை பறிக்கிறார், நீர் பாய்ச்சுகிறார். வெளிநாட்டில் பிரதமரைக் கொலையில் இருந்து காப்பாற்றி, காதலியிடம் இரட்டை வசனம் பேசுகிறார். மீண்டும் விவசாயியாகி விவசாயம் விவசாயம் என்று தஞ்சாவூர் விவசாயிகளுக்குக் கொடி பிடிக்கிறார். மனிதனின் மலத்தை உரமாக்கி அதைக் கொண்டு எக்கசக்கமாக உணவை விளைவிக்கிறார். அடுத்த காட்சியிலேயே பிரதமருக்கு அருகில் அவரது காப்பானாக நிற்கிறார். இத்தனை அசட்டையாக இனி யாராலும் படம் எடுக்க முடியாது.

கதையில் எதாவது பதறும்படி வைக்கவேண்டும் என்பதற்காகவும், அது புதுமையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரு பூச்சியைக் கண்டுபிடித்து உலவ விட்டிருக்கிறார்கள். அது குட்ஸ் ட்ரைனில் கொண்டு வரப்படுகிறது. அதை சூர்யா முறியடிக்கிறார். இதற்கிடையில் காதலும் செய்கிறார். நட்பையும் கொண்டாடுகிறார். பிரதமரை அபி அபி என்று பெயர் சொல்லி அழைக்கிறார். உரம் போட்ட விவசாயத்தை வெளுத்து வாங்குகிறார். அதாவது விவசாயிகளிலும் இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவாம். இதில் ஆர்கானிக் விவசாயத்தைவிட இயற்கை விவசாயம் ஒரு படி மேல் என்கிறார். இந்தியா போன்ற நாடுகளில், உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை நம்பி விவசாயம் செய்யவில்லை என்றால், உணவுக்கு நாக்குதான் வழிக்கவேண்டி இருக்கும். அப்புறம் மனிதர்களுக்கு மலமும் வராது, அதிலிருந்து உரமும் வராது. ஆனால் இதையெல்லாம் சூர்யா கமுக்கமாகப் பேசாமல் இருந்துவிடுகிறார்.

இதற்கிடையில் சூர்யாவுக்கு ரசாயண குண்டுகளை அழிப்பது, காஷ்மீர் பணி, பாகிஸ்தான் போவது, அங்கிருந்து ஒரு நதியில் குதித்து தப்பித்து இந்தியா வருவது, இங்கே காதலித்துக்கொண்டே அங்கே பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரியைப் போட்டுத் தள்ளுவது என்று ஏகப்பட்ட வேலைகள். என்னவெல்லாமோ செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர் பிரதமராகிவிட்டால் வீட்டுக்கு ஓடி வந்துவிடவேண்டும் என்று நினைத்தேன், நல்லவேளை அப்படி எதுவும் சம்பவிக்கவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் – கொடுமை.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில், கெத்தாக எவ்வித அலட்டலும் இல்லாமல் நடிக்கும் மோகன்லாலைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

இந்திய ஆதரவு, மோடியைக் குறை சொல்லாமல் இருப்பது, அதே சமய கார்ப்பரேட்டைக் குறை சொல்வது, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று பலவற்றையும் பேசி, எதையும் உருப்படியாகச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். சூர்யாவுக்கு வேறு ஏதேனும் கணக்குகள் இருந்தால் அது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகவே ஆகும்.

கே.வி. ஆனந்தின் பொறுத்துக்கொள்ளவே முடியாத தரை வணிகப்படங்களில் கவணுக்கு அடுத்து இது!

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

OTT தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தணிக்கை

அரவிந்தன் கண்ணையன் ஒரு பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதாவது அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சானல்களில் திரைப்படங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்டிருந்ததை நான் பார்வேர்ட் செய்ததை ஒட்டிய பதிவு அது.

சிவசேனா கேட்டதற்காக அல்ல, நான் முன்பிருந்தே இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கை வேண்டும் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். நான் கேட்டதன் காரணம் மத ரீதியானது என்பது முதற் காரணம் அல்ல. முதன்மையான காரணங்கள், அந்தத் திரைப்படங்களில் வரும் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகளும் மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகளும்தான். அதேசமயம் மதரீதியான விஷயங்களுக்கும் தணிக்கை இருப்பதற்கு நான் எதிர்ப்பும் அல்ல. அதுவும் கிறிஸ்தவ மாஃபியா கைகளில் சிக்கி இருக்கும் இது போன்ற தளங்களுக்கு இத்தகைய தணிக்கை இல்லாமல் இருப்பதுவே ஆபத்தானது.

உண்மையில் இன்றைய திரைப்படங்கள் தணிக்கைக்குப் பின்தான் வருகின்றன. ஆனால் அங்கே எந்த வகையிலும் இந்து மதம் பாதுகாக்கப்படவில்லை. இது ஒரு மிக வெளிப்படையான உண்மை. எனவே இது போன்ற சானல்களுக்குத் தணிக்கை என்று வந்துவிட்டால் அது பாசிசம் என்றாகி விடும் என்ற கருத்து அடிப்படையற்றது.

இன்று ஹிந்து மதத்திற்காக நான் பேசுவதாக நீங்கள் வைத்துக்கொண்டாலும் கூட (அது உண்மையே), நாளை அது எந்த ஒரு மதத்திற்கும் உதவத்தான் போகிறது. இது கூடத் தெரியாமல் நான் அதைச் சொல்லவில்லை. எங்கோ மற்ற மதங்களின் மதத் தலைவர் ஒருவரின் படம் எடுக்கப்பட்டதற்கு இங்கு சென்னையும் தமிழ்நாடும் அப்படிக் கொந்தளித்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் இதுபோன்ற திரைப்படங்களுக்குத் தணிக்கை அவசியமா என்பதைப் பார்க்க வேண்டும்.

திரைப்படங்களுக்கான தணிக்கை என்று ஒன்று இருக்கும்பொழுது இதுபோன்ற தளங்களுக்கான படங்களுக்குத் தணிக்கை தேவையில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தணிக்கை என்பதே ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்ற மிக முற்போக்கான சமூகத்தில் நாம் வாழவில்லை. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. அதை நம்புபவர்கள் இந்த விவாதத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அரவிந்தன் கண்ணையன் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

அவரது பதிவில் கிழக்கு பதிப்பகம் என்று குறிப்பிட்டு, அந்தப் பதிப்பகத்தைக் குறிப்பிடக் காரணம், நாளை கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் தணிக்கை வேண்டுமா என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதற்கு இரண்டு பதில் சொல்ல வேண்டும். முதலாவது, புத்தகங்களும் திரைப்படங்களும் ஒன்றல்ல. அந்த இரண்டையும் ஒன்றாகவே கருதி, தணிக்கை இரண்டுக்கும் வேண்டும் என்று சொல்லும் அசட்டுத் துணிச்சல் எனக்கில்லை. உண்மையில் அரவிந்தன் கண்ணையனுக்கும் முடிந்து இருக்க முடியாது. ஆனால் ஹிந்து மதத்தை ஆதரிப்பவரை பாசிஸ்ட் என்று சொல்ல வேண்டும் என்ற அவரது பதற்றமே இதற்குக் காரணம். இரண்டாவதாக கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான பத்ரி சேஷாத்ரி இதுபோன்ற தளங்களுக்கு தணிக்கை என்பதற்கு முற்றிலும் எதிரானவர். ஆனால் இது ஒரு பொருட்டாக அரவிந்தன் கண்ணையனுக்குத் தெரியவில்லை. அதில் வேலை செய்யும் எனது கருத்தை வைத்துக்கொண்டு வேகவேகமாகக் கருத்தைச் சொல்வது அவருக்கு முதன்மை ஆகிறது. அதற்கும் காரணம் இந்து மதம்தான்.

ஹிந்து மதம் என்று வரும்பொழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பேசுவது என்பது ஒட்டுமொத்த முற்போக்காளர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. பொதுவாக இதை அடிப்படையாக வைத்து எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது முற்போக்காளர்கள் என்ற பெயரில் உலாவரும் கம்யூனிஸ்டுகள்தான். இன்று அது ஒரு பொதுவான போக்காகவே மாறிவிட்டிருக்கிறது. இந்து மதத்தை வம்படியாகத் திரைப்படங்கள் தாக்கும்போது இவர்கள் யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள். மாறாகப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்கள். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தணிக்கை வேண்டும் என இப்படி ஒரு அறிக்கை விடும்போது என்று வரும் பொழுது மிகச்சரியாக ஓடி வருவார்கள்.

அந்த எனது பதிவில் ஒரு கமெண்ட்டில் நானே தெளிவாகச் சொல்லி இருந்தேன், சிவசேனா என்பது புனிதம் அல்ல என்று. அதுவெல்லாம் இவர்களுக்கு முக்கியமே அல்ல. இவர்களது நோக்கம் இந்து மதத்தை ஆதரிக்கும் ஒருவரை பாசிஸ்ட் என்று அழைப்பதும் அவர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை இழுத்து அதற்குத் தணிக்கை வேண்டும் என்று கேட்பதும்தான். அது எந்த அளவுக்கு என்றால் திரைப்படங்களும் புத்தகங்களும் ஒன்று என்ற அளவிற்கு.

உண்மையில் இன்று புத்தகங்களுக்குத் தணிக்கை இல்லை என்பதனால் நீங்கள் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது. புத்தகம் வெளிவந்த மறுதினமே தடைசெய்யப்படும் அத்தனை சாத்தியங்களும் உள்ளது. மேலும் புத்தகம் வாசிப்பாளர்கள் மிகமிகக் குறைந்துவிட்ட தருணத்தில் இன்று புத்தகங்களையும் திரைப்படங்களையும் ஒன்றாக வைக்கமுடியாது. அதிலும் வீட்டுக்குள்ளே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வரும் இது போன்ற சேனல்களில் வரும் திரைப்படங்களை, சீரியல்களை ஒப்பிடவே முடியாது. ஆனால் அரவிந்தன் கண்ணையன் தைரியத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

அதே பதிவில் ஒரு அறிவுக்கொழுந்து என்னைப் பற்றி, 21 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று கூறியவர்தானே இவர் என்று கேட்டிருக்கிறார். நான் சொன்னது, உண்மைதான். ஆனால் அது யாருக்குச் சொன்னது என்பது முதலாவது விஷயம். கல்யாணத்தைக் காரணம் காட்டி, மதமாற்றத்தைக் காரணம் காட்டி, பெண்களுக்குப் பாலிய விவாகம் வேண்டும் என்று கூறுபவர்களிடம், தயவுசெய்து 21 வயது வரையிலாவது பொறுத்திருங்கள் என்ற தொனியில் எழுதப்பட்ட கட்டுரை. தன் மகள் மதம் மாற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ள இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் 25 வயது 30 வயது வரையில் கூடக் காத்திருந்து அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்ளட்டும். அதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் தன் மகள் மதம் மாறக் கூடாது என்று நினைக்கும் ஒருவர், பால்ய விவாகம் என்ற கருத்தை நோக்கிச் செல்வது அபத்தமானது, அநியாயமானது, அராஜகமானது; அது கூடாது என்ற நோக்கில் குறைந்தபட்சம் 21 வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன். இன்று பெண்ணுக்குத் திருமண வயது 18. நான் 21 வயதில்தான் திருமணம் செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்குக் கூட அல்ல, பெண்களுக்கு மட்டுமே, அதுவும் தவிர்க்கமுடியாத பட்சத்தில். ஆனால் அந்த அறிவுக்கொழுந்துக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒருவேளை தானும் தன் மகளும் எதிர்காலத்தில் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்பவர்களுக்கும், தானே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அல்லது செய்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று தோன்றலாம். அவர்களுக்கானது அல்ல இது.

இந்து மதத்தினரும், எந்த ஒரு மற்ற மதத்தினரும் கல்யாண ஆசை காட்டி சூறையாடப்பட்டு விடக்கூடாது என்பதற்கான பதில்தான் நான் எழுதி இருந்தது. ஆனால் இந்த அறிவுக்கொழுந்து அதையெல்லாம் படித்திருப்பாரா என்பது தெரியவில்லை. படித்தாலும் புரிந்திருக்குமா என்பது இரண்டாவது விஷயம். அல்லது எந்த ஒன்றையும் ஒரே வரியில் சொல்வது இன்றைய சமூக ஊடக ஜாதியைச் சேர்ந்த ஒரு விஷயம் ஆகிவிட்டதால் அவருக்கும் அந்த வியாதி தாக்கி இருக்கலாம். எனவே அந்த அறிவுக்கொழுந்துக்கு இனியும் பதில் சொல்வது தேவையற்றது.

ஆனால் அதில் நான் நம்பும் சிலர் கமெண்ட் போட்டிருந்தார்கள். அந்தப் பதிவை நான் எழுதியபோது இதற்கு ஒரு பதில் சொல்ல நினைத்தேன். இன்று அதே நண்பர்கள் மீண்டும் அதையே செய்யும்பொழுது இதைத் தெளிவாக்குவது என் கடமையாகிறது.

அவர்களை விடுங்கள். மீண்டும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். உங்களுடைய மகனோ மகளோ கல்யாணம் என்ற ஒன்றைக் காட்டி மதம் மாறக் கூடாது என்று நினைத்தால் அதுவும் அதை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். மதம் என்பதை திருமணத்தின் போது திடீரென ஒன்றாக நுழைத்தால் இதுதான் நிகழும். நீங்களே சரியாக இருந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஒருவேளை வராது. அப்படியும் மீறி இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் மகள் கல்யாணம் என்ற ஒன்றைக் கட்டி மதம் மாற்றப்படக் கூடிய அபாயம் இருந்தால், உண்மையில் 21 வயதில் திருமணம் செய்விப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பால்ய விவாகத்தை ஆதரிக்கும் கட்டத்துக்குள் போய்விடாதீர்கள். இதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நிலைப்பாடு. இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் நேரு அல்ல பிரச்சினை நேருவியர்களே என்று. அந்த நேருவியர்கள் வெற்று காங்கிரஸ்காரர்களாக மாறிவிடும் அபாயமான சூழல் இன்று சூழ்ந்திருக்கிறது என்பதை உணருகிறேன்.

Share

மகாமுனி – திரைப்பார்வை

‘மௌன குரு’ எடுத்த இயக்குநரின் படம் என்பதாலேயே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மௌன குரு எதிர்பார்ப்பே இல்லாமல் வந்த நல்ல படம். மகாமுனிக்கு இதுவே ஒரு பெரிய அழுத்தத்தைத் தந்திருக்கும். ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் (என்று நினைக்கிறேன்) என்பது கத்தி மேல் நடப்பது.மிகக் கவனமாக இதைச் செய்ய நினைத்திருக்கிறார் சாந்தகுமார். பட சுவரொட்டிகளிலெல்லாம் உலகத் தரத்தில் ஒரு திரைப்படம் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். எனக்கு கமலின் சூரசம்ஹாரம் நினைவுக்கு வந்தது! நல்லவேளை, இது அந்த அளவுக்கு இல்லை.

இரன்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகள். அரசியல் கொலைகளில் அடியாழம் வரை தொட்டிருக்கிறார். ஆணவக் கொலையில் கொஞ்சம் மட்டுமே பேசி இருக்கிறார். எனவே அரசியல் தொடர்பான காட்சிகள் முதலில் சவசவ எனத் தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் வேகம் பிடிக்கின்றன. முனி தொடர்பான காட்சிகள் அப்படியே ஏதோ போகின்றன.

எத்தனை பெரிய இயக்குநரும் ஏன் இந்த இரட்டை வேடக் கதைகளில் விழுந்துவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசியில் அத்தனையும் இந்த ஆள்மாறாட்டத்துக்கா என்றாகும்போது சே என்றாகிவிடுகிறது. இதை முதலிலேயே காண்பித்துவிடுகிறார்கள். சஸ்பென்ஸ் என்றெல்லாம் வைத்து காதில் பூ சுற்றவில்லை. ஆனால் எப்படியும் இப்படித்தான் ஆகப்போகிறது என்னும்போது, இத்தனை நாள் எத்தனையோ தடவை தமிழ்த் திரையுலகம் சப்பிப் போட்ட மாங்கொட்டையை மீண்டுமா என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆர்யா நன்றாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியாக வரும் நடிகையும் நன்றாக நடிக்கிறார். இளவரசு வழக்கம்போல நல்ல நடிப்பு. மற்றவர்கள் யாருமே ஒட்டவில்லை. மௌன குருவில் இருந்த ஒரு கச்சிதம் இதில் இல்லை என்பதே பெரிய குறை. படம் ஆணவக் கொலை அரசியல் கொலை என்றெல்லாம் சுற்றினாலும் யாரையும் எந்த மதத்தினரையும் புண்படுத்தவேன்டும் என்ற எண்ணமெல்லாம் சாந்தகுமாருக்கு இல்லை என்பது ஆசுவாசம். மலினமான கேலிகள், வம்பிழுத்தல் என எதுவும் இல்லை. முதல் காட்சியில் வழுக்கைத் தலையுடன் கருப்புக் கண்ணாடி போட்டிக்கொன்டு மஞ்சள் துண்டுடன் ஒருவர் தமிழ்ச் செய்யுளில் ஆரம்பிக்கவும் ஆகா என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் இல்லை.

வசனங்களைக் குறைத்து, நடிகர்களின் நடிப்பைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி ஒரே ஒரு கதையை மட்டும் ஆழமாகப் பேசி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கவேண்டிய படம் இப்போது எங்கேயோ தேங்கி நிற்கிறது. மற்றபடி உலகத் திரைப்படம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

பின்குறிப்பு: நடிகை ரோஹிணி நடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு வசனம் மட்டுமே. சாந்தகுமாரின் இந்த முன்னெச்சரிக்கையைப் பாராட்டவேன்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ் வலைத்தளம்

Share