Archive for புத்தகப் பார்வை

அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலங்கள்’ புத்தகத்தின் விமர்சனம் உயிரோசையில் வெளியாகியுள்ளது.

சிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்.’ (அகல் வெளியீடு.) அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.

ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.

தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகிறது. அரசியலுக்குச் செல்கிறார். அவர் கொள்கைக்காகச் சிறை செல்வது பிடித்திருக்கிறது.

சிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள்கூட தனக்கென கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கிறது.

சிறையில் எளிதாக தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிட சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.

சிறையில் ஜோதி, அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணைக் கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.

விசாரணைக் கைதிகளின் மிக முக்கிய பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.

சிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைகைதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.

இந்தப் புத்தகத்தின் குறைகளாகச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குள்ளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.

இப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.

ஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

இது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

ஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. எனி இந்தியனில் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.

இன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.

(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

Share

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும்

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும் – புத்தக விமர்சனம் உயிரோசை.காமில் வெளியாகியுள்ளது.

நன்றி: உயிரோசை.காம்

சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் (அதாவது ஷரியத் சட்டங்களை முக்கியமாக வைத்து இயங்காமல்) எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள் செயல்களை வடிவமைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் சூஃபிக்களை இந்துக்களும் முஸ்லிம்களும் முக்கியமானவர்களாகக் கருதுகிறார்கள். ஹிந்துவாக இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி, தான் பிறந்து வளர்ந்த மதத்தின் தேவியையும் விக்கிரகத்தையும் கைவிடமுடியாமல் தவிக்கும் ஒரு பெண் பீவியாக மாறும் நாவல் ‘சூஃபி சொன்ன கதை.’ அந்த பீவியை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள். கார்த்தி என்னும் பெண், சித்தாராவாகி, வாழ்நாளெங்கும் தன்னை விரட்டும் காமம் சார்ந்த அகச்சிக்கல்களைப் புறந்தள்ளமுடியாமல் அதற்குப் பலியாகி, பீவியாகிறாள்.

பீவியின் மஸாரை (புனித சமாதி) ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்கத் தொடங்குவதோடு நாவல் தொடங்குகிறது, அங்கு வரும் சூஃபி ஒருவர் ‘முதல் பீவி’யின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

மேலே புல்லாரத் தரவாட்டில் கார்த்தி பிறக்கிறாள். கார்த்தி வளர வளர, அவளின் தாய்மாமன் சங்குமேனன் தன் மருமகள் கார்த்தியின் மீது – கேரள பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது இது – காமம் கொள்கிறான். கார்த்திக்கும் தன் தாய்மாமன் மீது இனம்புரியாத காமம் இருக்கிறது. ஆனால் சங்குமேனன் தன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவில் கொண்டு அவளிடமிருந்து விலகியிருக்கிறான். அதுமட்டுமன்றி, கார்த்தியை பகவதியின் அம்சமாகவே காண்கிறான். கார்த்தியின் வீட்டில் அனைவரையும் பெரியம்மை நோய் தாக்கும்போது, கார்த்தி மட்டும் நோயிலிருந்து விலகி, ஜோதியாக ஒளிர்கிறாள். தறவாட்டைச் சோதனையிட வரும் வெள்ளைக்காரத் துரைமார்கள் பகவதியின் உருவத்தை ஜோதியாகக் கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய வரும் மாமுட்டிக்கும் கார்த்திக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. மாமுட்டி மாப்பிள்ளா சமூகத்தைச் சேர்ந்தவன். தறவாட்டை விட்டுவிட்டு மாமுட்டியோடு செல்கிறாள் கார்த்தி. அதைத் தடுக்க நினைத்தாலும், தடுக்க இயலாதவனாக ஆகிறான் சங்குமேனன்.

ஊரே அதிசயிக்க, ஒரு இந்துப் பெண்ணை அழைத்துச் செல்லும் மாமுட்டியை அவரு முஸலியார் இஸ்லாமானவளாக மாற்றுகிறார். குப்பாயம் மாட்டி, ஐவேளை தொழுது இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுகிறாள். எப்போதும் படுக்கையறையில் மாமுட்டியுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் சித்தாராவாகிய கார்த்திக்கு வாழ்க்கையே புதுமையானதாகவும் இனிமையானதாகவும் தோன்றுகிறது. வியாபார விஷயமாக மாமுட்டி மீண்டும் வெளியூர் செல்லும் இரவில், மாமுட்டி இல்லாமல் அலைபாயும் அவள், தான் புகுந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கிறாள். அங்கு அவள் எதிர்பாராமல் காணும் தேவி விக்கிரகம் அவளுக்கு அவள் பகவதி தன்மையை மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. இஸ்லாம் வீட்டுப் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் ஏதோ இனம்புரியாத ஒன்று வந்துவிட்டதாக அஞ்சுகிறார்கள். ஆனால் மாமுட்டி அவளுக்குத் தனியே கோவில் கட்டித் தருகிறான். இந்த ஹராமான செயலைக்கண்டு, அவனது ஊர்க்காரர்களும் சொந்தக்காரர்களும் அவனை ஒதுக்கிவைக்கிறார்கள். அவரு முஸலியாரும் கடும் கோபம் கொள்கிறார்.

அவரு முஸலியாரின் குடும்பமும் நான்கு தலைமுறைகளுக்கு முன்புதான் மதம்மாறிய குடும்பம். பழம் ஹிந்துக் குடும்பத்தின் நினைவுகள் தாக்கத் தொடங்க, அவரு முஸலியார் தன்வசம் இழக்கிறார். என்ன செய்கிறோம் என்ற நினைப்பில்லாமல் ஹிந்து விக்கிரகங்களைத் தொழவும், நினைவு வந்து அல்லாவிடம் மன்னிப்புக் கேட்கவுமென அலைக்கழிகிறது அவரது வாழ்க்கை. தனது வாழ்க்கை சீரழிவது தன் மனைவியால் என்கிற எண்ணம் எழவும், அவளோடு உறவு கொள்ளமுடியாத அலியாகிறான் மாமுட்டி. தன் காமத்திற்கு வடிகாலாக, பதினைந்தே வயதான அமீருடன் உறவுகொள்ளத் தொடங்குகிறான். இதனை அறியும் கார்த்தி, காமத்தோடும் தாய்மை உணர்வோடும் அவனைத் தன் மார்போடு இறுக்கி, குளத்துக்குள் அமுக்கிக் கொல்கிறாள். ஒரு துரையைப் பார்க்கப் போகும் மாமுட்டி, தனது ஹராமான செயலுக்காகக் கொல்லப்படுகிறான். கார்த்தியும் கடலில் கலந்து பீவியாகிறாள். கடலில் நிலைதடுமாறும் ஆண்களைக் காத்து, கரை சேர்க்கிறாள் பீவி. அம்மக்கள் அவளுக்குக் கல்லறை கட்டித் தொழுகிறார்கள். அவள் பகவதியாகவும் பீவியாகவும் கொண்டாடப்படுகிறாள்.

இரண்டாம் பீவியின் கதையை சூஃபி சொல்லத் துவங்குவதுடன் கதை நிறைவடைகிறது.

ஒரு நாவலின் கதையை இப்படி முழுமையாகச் சொல்வது சரியானதல்ல என்றாலும், இந்த நாவலைப் பொருத்தவரையில் இது மிகவும் முக்கியமானதாகிறது. பகவதியாகத் தன்னை இனம் காணும் ஒரு பெண் பீவியாகும் கற்பனை மிக அசாதாரணமானது. இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் ராமனுண்ணி. கதை முழுவதும் ஒருவித மந்திரச் சொல்லாடல்கள் போன்ற மொழியில் சொல்லப்படுகிறது. எம்.டி. வாசுதேவன் நாயர் இக்கதை பற்றிச் சொன்னதுபோல, பழைய வார்த்தைகளைக் கொண்டு புதிய பொருள்களை உருவாக்குகிறார் ராமனுண்ணி. இப்படி ஒரு நீண்ட, அசாதாரணமான கற்பனையை ஓர் எழுத்தாளர் சாத்தியமாக்கியிருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்று.

சங்குமேனன் கார்த்தியின் மீது கொள்ளும் காமமும், அவன் பகவதி மீது கொள்ளும் பக்தியும் ஒன்றோடொன்று பொருந்திப் போவது மிகச் சிறப்பாகப் புனையப்பட்டுள்ளது. இந்த விவரிப்பிற்குத் தேவையான, ஒருவித மெஸ்மரிஸத்தை உருவாக்கக்கூடிய எழுத்து நடையை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் ராமனுண்ணி. இது மிகவும் எளிதாகப் படித்துமுடிக்கப்படக்கூடிய நாவலல்ல. மாறாக, வாசகனின் முழுக்கவனத்தையும், கடுமையான உழைப்பையும் வேண்டும் நாவல் என்பதை நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணர்ந்துகொள்ளலாம்.

கார்த்தியின் அகச்சிக்கல்கள் இந்நாவல் முதலிலிருந்து கடைசிவரை விவாதிக்கப்படுகின்றன. அவளது அகச்சிக்கல்கள் முழுக்க முழுக்க காமம் சார்ந்தவையே. அவள் பூப்பெய்தும் காலத்தில் தன் தாய்மாமன் சங்குமேனன் மீது கொள்ளும் காமம் துவங்கி, தன் கணவன் மாமுட்டியோடு கொள்ளும் உறவுகள் வரை, அவள் நிலைகொள்ளாமல் தன்னையும் தன்னுடலையும் தன் வாழ்வையும் பற்றி எப்போதும் யோசிக்கிறவளாக இருக்கிறாள். உடல் மீது கவனமும் கடும் காமமும் இருக்கும்வரை அவள் பகவதியை நினைக்காமல் இருப்பதும், ஒரே நாளில் ஒரு விக்கிரகத்தை அவள் கண்டடையவும் மிக உக்கிரமாக அவளை பகவதி ஆக்கிரமித்துக்கொள்வதும் நடக்கின்றன. தன்மீது வந்து அழுத்தும் சுமைகளை நீக்க, அவள் வீடெங்கும் கிடக்கும் சுமை நிறைந்த பொருள்களாகத் தூக்கி இறக்குவது சிறப்பான குறியீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தன் புகுந்தவீட்டில் தேவி விக்கிரகத்தைக் கண்டடைவதுமுதல், அவள் ஒரு இஸ்லாமானவளாகவும் ஹிந்துவாகவும் இருக்கிறாள். அந்த இடத்தில் அவள் ஒரு பீவியாக மாறத் தொடங்குகிறாள். ஆரம்பத்தில் அவளிடமிருந்து விலகி ஓடும் பெண்கள், அவளுக்குள் இருக்கும் ஒருவித மந்திர சக்தியை அறிந்து, அவளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார்கள். மிகப்பெரிய பிரச்சினையைக்கூட மிக எளிதாக அவள் எதிர்கொள்ளும் விதமும், எப்போதும் சாந்தம் தவழும் ஜோதி எரியும் முகமுமென அவளை எளிதாக இஸ்லாம் பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்நேரத்தில் அவள் கணவன் அவளிடமிருந்து விலகுவது அவளுக்குப் பெரும் கலவரத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் தன்னுள் பொங்கிப் பிரவகிக்கும் தாய்மையைப் பதினைந்து வயது அமீருக்கு அள்ளிக் கொடுக்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறான். அவனை காமத்தின் உச்சியில், தாய்மையின் கனிவில், பகவதியின் உக்கிரத்தோடு நீரில் முக்கிக் கொள்ளும்போது கார்த்தி சொல்லும் வசனங்கள் மிக முக்கியமானவை. இத்தகைய அகச்சிக்கல் அலைக்கழிப்புகளுக்கு ராமனுண்ணியின் எழுத்தே அதற்கான உயிர்ப்பைக் கொடுக்கிறது. தறவாடெங்கும் பெயரியம்மை பரவுகிறது என்பதை ராமனுண்ணி சொல்லும் விதத்தை, அவரின் எழுத்து நடைக்கு இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ படித்தபோது வீடெங்கும் கருமை சூழ்ந்ததை உணர்ந்ததைப் போல, பெரியம்மை வீடெங்கும் வீரிய விதைகளாகப் பரவும் விவரணையைப் படித்தபோது, என் வீடெங்கும் அதன் விதைகள் காற்றில் உலவுவதுபோன்ற ஓர் எண்ணத்தை அடைந்தேன். இது ராமனுண்ணியின் மிகப்பெரிய வெற்றியல்லவா.

அவரு முஸலியார் அறிவு நிலையில் தன்னை முஸ்லிமாகவும், உணர்வு நிலையில் தன்னை இந்துவாகவும் நினைத்துப் படும் அவஸ்தைகளும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு, அவரின் முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறுகிறார்கள். உயிர்பயம், காரிய சித்தி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இஸ்லாமாக மதம் மாற, சிலர் ஜோதிடம்கூடக் காண்கிறார்கள். மதம் மாற மறுக்கும் சிலர் உயிர் துறக்கிறார்கள். அப்போது மதம் மாறிவிட்டாலும், அவரு முஸலியாரின் தாத்தாவிற்குள் ஹிந்து நினைப்பு ஓடுகிறது. அது காலம் காலமாக மறைந்திருந்து, அவரு முஸலியாரின் உணர்வுக்குள் ஏறிக்கொண்டு அவரைப் பாடாய்ப்படுத்துகிறது. வேறு வழியறியாமல், உண்மையான முஸ்லிமாக வாழவேண்டிய ஆசை நிறைவேறாமல், இறந்துவிட முடிவெடுக்கிறார் அவரு முஸலியார். ஆனால் ஒரு பீவியின் தோற்றம் அவரது அலைக்கழிப்பிலிருந்து அவரை மீட்கிறது. ஒரு சூஃபியின் தேவையை மிக அழகாக இந்த இடத்தில் நிலைநிறுத்துகிறது நாவல்.

குறிஞ்சிவேலன் இந்நாவலை மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறார். மலையாளத்தில் ராமனுண்ணியின் நடை எத்தனை கடுமையானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்குமென யூகிக்கமுடிகிறது. அதை மொழிபெயர்ப்பது எளிதான வேலையல்ல. அதைத் திறம்படவே செய்திருக்கிறார் குறிஞ்சிவேலன். ஆனால் பல இடங்களில், பல வாக்கியங்கள் பொருளற்றதாகத் தெரிகின்றன. அதேபோல் பல இடங்களில், அவள் – நான், அவனை – தன்னை – என்னை என்கிற குழப்பங்கள் காணப்படுகின்றன. ஒரு ஆசிரியரின் கூற்றும், ஒரு கதாபாத்திரத்தின் தன்கூற்றும் சட்டென மாறும் இடங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் மொழிபெயர்ப்பாளர். பல இடங்களில் மலையாள வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. ஆனால் தேவையற்ற பல இடங்களில், அதற்கான தமிழ்வார்த்தைகள் உள்ள நிலையில் அவற்றை ஏன் அப்படியே பயன்படுத்தவேண்டும் என்று புரியவில்லை. வெளிச்சப்பாடு என்பதை வெளிச்சப்பாடு என்று எழுதி, அதற்கான ஒரு குறிப்பையும் கொடுப்பது சரியானதுதான். ஆனால் கிக்கிளி என்பதை அப்படியே பயன்படுத்தவேண்டியதில்லை. கிச்சுகிச்சு என்று சொல்லலாம். மேலும், நாவலில் இன்னும் இரண்டு இடங்களில் கிச்சுகிச்சு என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புழை என்பதற்கு ஆறு என்றே பயன்படுத்தி இருக்கலாம். புழை என்று பயன்படுத்தி அதற்கான குறிப்பைத் தந்திருந்தாலும், இது தேவையற்றது என்றே தோன்றுகிறது. மூலச் சொல்லை அப்படியே மொழிபெயர்க்க முடியாத நேரத்திலும், அதன் தேவை அவசியம் என்று கருதுகிற இடங்களிலும் மட்டுமே அவ்வார்த்தையை அப்படியே பயன்படுத்திவிட்டு அடிக்குறிப்பு கொடுப்பது நல்லது என்பது என் எண்ணம். இவற்றை எல்லாம் மீறி, ஒரு சவாலான மொழிபெயர்ப்பை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் குறிஞ்சிவேலன் பாராட்டுக்குரியவரே.

சூஃபி சொன்ன கதையின் மலையாள மூலம் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூஃபி சொன்ன கதை, நாவல், கே.பி. ராமனுண்ணி; தமிழில்: குறிஞ்சிவேலன், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, விலை: 110 ரூபாய்.

Share

கருத்த லெப்பை – அருவத்தின் உருவம்


கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.

சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.

கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.

அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.

கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.

இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.

சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.

‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.

அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஆன்லைனில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=34061

நன்றி: வடக்கு வாசல், நவம்பர் 2008.

Share

கடல்புரத்தில் – புத்தகப் பார்வை

கடல்புரத்தில், கிழக்கு பதிப்பகம், ரூபாய் 75.
ஆன்லைனில் வாங்க: காம்தேனு.காம்.

தமிழில் கடல்புரத்தைச் சார்ந்த நாவல்கள் எல்லாமே பெரிதாகப் பேசப்பட்டவை. ஒரு கடலோர கிராமத்தின் கதை (தோப்பில் முஹம்மது மீரான்), புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம்), ஆழிசூழ் உலகு (ஜே.டி. குரூஸ்). வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலும் சிறப்பான ஒன்றே.

கடல்புரத்தில் வாழும் ஒரு மீனவ கிறித்துவக் குடும்பத்தின் கதை. பிலோமியின் நிறைவேறாத காதலின் வழியே, குருஸுவின் உலகத்திற்கும் அவரது மகன் செபஸ்தியின் உலகத்திற்கும் இடையேயான தலைமுறை இடைவெளியின் வழியே, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் போராட்டம், வன்மம், உறவு, துரோகம் என பல உணர்வுகளை மையமாக வைத்துச் சுழலும் நாவல்.

குருஸு தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு நகரத்திற்குச் செல்ல விருப்பப்படாதவர். மகன் செபஸ்தி எல்லாச் சொத்தையும் விற்றுவிட்டு நகரத்தில் ஆசிரியராக வாழும் வாழ்க்கையைத் தொடர விரும்புபவன். குருஸுவின் மனைவி ஒரு வாத்தியாரோடு தொடர்பு வைத்திருப்பவள். குருஸுவின் மகள் பிலோமி, சாமிதாஸோடு ஏற்பட்ட காதலில் தன்னை இழந்தவள். செபஸ்தியும் ரஞ்சியுடனான காதலில் தோல்வி அடைந்தவனே. குருஸு படகில் மீன்பிடிப்பவர். அங்கே லாஞ்சில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கும் படகில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கும் எழும் பிரச்சினையில் ஒரு உயிர்ப்பலி நேர்கிறது. குருஸுவின் மனைவி அதிகம் குடித்து, கீழே விழுந்து அடிபட்டு இறக்கிறாள். இனியும் கடல்புரத்திலேயே மீன் பிடித்து வாழ்க்கையைக் கழிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளும் குருஸு, வேறு வழியின்றி, தன் சொத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் செல்லமுடிவெடுக்கிறார். முடிவெடுத்துவிட்டாலும், தன் ஊரை, தன் மண்ணை விட்டுப் பிரியும் சோகம் அதிகமாக, அவர் புத்தி பிறழ்கிறது. குருஸுவின் மனைவியோடு தொடர்பு வைத்திருந்த வாத்தியார், பிலோமிக்கு உதவத் தொடங்க, தன் நினைவுகளோடு, அங்கேயே வாழ்க்கையைத் தொடருகிறாள் பிலோமி.

கதை என்பது தனியாக இல்லை என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். கடல்புரத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளும், யாரும் எப்போதும் கடல்புரத்தில் கண்டுவிடக்கூடிய மக்களின் முகமுமே நாவல் எங்கும் காட்டப்படுகின்றன. அதில் கதை தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. பிலோமி தன் காதல் நிறைவேறாது என்பதை மிக எளிதாக ஏற்றுக்கொள்கிறாள். தன் அண்ணன் ரஞ்சியுடன் கொண்டிருந்த காதலும் இப்படி நிறைவேறாமல் போனதே என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் தன் காதலும் நிறைவேறாமல் போவதில் அவளுக்குப் பெரிய அதிர்ச்சியில்லை. எதிர்பாராமல் அவளுக்கும் சாமிதாஸுக்கும் இடையே ஏற்படும் உடலுறவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

குருஸுவின் மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு சொல்லப்பட்டிருக்கும் விதம் அழகானது. மரியம்மையின் மரணத்தின்போது வாத்தி அடையும் கலக்கங்களும் ஒன்றிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுவிடுகின்றன. வாத்திக்கும் பிலோமிக்கும் இடையே உருவாகும் அன்பும், உறவும் புதிர்த்தன்மை கொண்டதாக இருக்கிறது. வாத்தி பிலோமியிடம் மரியம்மையையே பார்க்கிறார். ஊரிலும் பலவாறாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் கதையில் எந்த ஒரு இடத்திலும் பிலோமியோ, வாத்தியோ அதை மறுப்பதுமில்லை; ஏற்பதுமில்லை.

எல்லா கதாபாத்திரங்களும் தன்னளவில் நிறைவுபெற்று விளங்குகின்றன. அதிலும் பிலோமியின் பாத்திரம் நாவலில் பெரும் எழுச்சி கொள்கிறது. மிகச்சாதாரணமாக, தன் காதலனைக் காண்பதையே இன்பமாகக் கருதும் ஒரு சிறிய பெண்ணாக அறிமுகமாகும் பிலோமி, வாத்தியின் புதிரான அன்பை ஏற்றுக்கொள்வதும், ரஞ்சியின் அன்பைப் பற்றி நினைத்து அடையும் மகிழ்ச்சியும் என வேறு ஒரு பரிமாணம் கொண்ட பெண்ணாக, வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்டு அனுபவித்து அதன் பின் கிடைக்கும் அனுபவத்தைக் கைவரப்பெற்றவளாக முதிர்ச்சி பெறுகிறாள். இந்த முதிர்ச்சிக்குக் காரணம் என்று பார்த்தால், அவள் சாமிதாஸுடன் கொள்ளும் உறவு. அந்த உறவுக்குப் பெண் அவளது சிறுமித்தன்மை காணாமல் போகிறது. சாமிதாஸுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்பது தெரிந்தவுடன், அவள் இவ்வுலகத்தில் எல்லா அனுபவங்களையும் கண்டு தெளிந்துவிட்ட பெண்ணாகிவிடுகிறாள். அவளால் வாத்தியுடன் உறவு வைத்துக்கொண்டிருந்த தன் மரியம்மையை நேசிக்கமுடிகிறது. வாத்தியைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவளது உலகம் எல்லாரையும் நேசிக்கும் உலகமாகிவிடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் விவரணைகளே கடல்புரத்தையும் அது சார்ந்த மக்களின் செயல்பாடுகளையும் கண்முன் நிறுத்துகின்றன. இந்த எளிமையான, பலமான விவரணைகள் வழியாகவே கதாபாத்திரங்கள் உயிருள்ளவர்களாக மாறுகிறார்கள். கதையை படித்துமுடித்ததும், கடல்புரத்து மனிதர்களோடு வாழ்ந்துவிட்ட உணர்வைத் தருபவை இந்த விவரணைகளே. இந்த விவரணைகள் தனியே தெரியாமல், மிக நேர்த்தியாக கதையோடு பின்னிக் கிடக்கின்றன என்பதால், அவை நம்மை கடலுக்குள்ளும், அதைச் சுற்றிய ஊருக்குள்ளும் எளிதில் இழுத்துச் செல்கின்றன.

நாவலின் இன்னொரு முக்கியத்துவம் அதன் வட்டார மொழி. கடல்புரத்து கிறித்துவ மக்களின் வட்டார மொழியை அவ்வளவு சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் வண்ணநிலவன். வண்ணநிலவன் சில மாதங்கள் கிறித்துவராக மதம் மாறி வாழ்ந்திருந்தார் எனக் கேள்விபட்டேன். இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறப்பான நாவலைக் கொண்டுவர, அக்காலகட்டம் உதவியிருக்குமானால், அதற்காக மகிழலாம். இந்நாவலை வண்ணநிலவன் எழுதும்போது 29 வயது. என்னளவில் இது ஓர் ஆச்சரியம்; அதிசயம்.

Share

கேண்டீட் – புத்தகப் பார்வை

கேண்டீட், வோல்ட்டேர்; தமிழில்: பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், விலை: 100 ரூபாய்.

’வாள்முனையைக் காட்டிலும் பேனாவின் முனை சக்தி வாய்ந்தது’ என்றும் ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அவ்வாறு சொல்லும் உன் உரிமையை என் உயிர் போனாலும் காப்பேன்’ என்றும் தத்துவங்களையும் தீர்க்கதரிசனங்களையும் அள்ளி வழங்கிய வோல்ட்டேரின் நாவல் கேண்டீட். ஏகப்பட்ட கவிதைகளையும் நாவல்களையும் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களையும் எழுதிய வோல்ட்டேரின் கேண்டீட் நாவலின் வாசிப்பனுபவம் மிகவும் வித்தியாசமானதாகவும், பல இடங்களில் அதிசயிக்க வைப்பதாகவும் இருந்தது. வோல்ட்டேர் தனது witகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவர். கேண்டீட் நாவல் முழுக்க அவரது விட் குணத்தைக் காணமுடிகிறது. இன்று திரைப்படங்களில் நாம் பார்க்கும் விதந்தோத்தி ஏற்றி, தடாரென்று காலை வாரும் விட்டுகளை 250 வருடங்களுக்கு முன்பே வோல்ட்டேர் தன் நாவலில் சர்வசாதாரணமாகப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். வோல்ட்டேரின் அப்பா வோல்ட்டேரை ஒரு வழக்குரைஞராகப் பார்க்க ஆசைப்பட்டாராம். ஆனால் அவரை ஏமாற்றி, வழக்குரைஞராகப் பணியாற்றுவதாகப் பொய் சொல்லி, வோல்ட்டேர் இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அந்த வழக்குரைஞர் சகவாசம் நாவல் முழுக்க காணக்கிடைக்கிறது. மிகக்கடுமையான வாதங்கள், கேள்விகள், ஆழ்ந்த தத்துவங்கள் என வோல்ட்டேர் மிகக்கடினமான எழுத்தை மிக எளிமையாக முன்வைக்கிறார்.

கேண்டீட் என்னும் மனிதன் ஒரு ஜமீந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறான். அதன் காரணமாக நாட்டை விட்டு விரட்டப்படும் அவன் எப்படி தன் காதலியை அடைகிறான் என்னும் கதையை, பல்வேறு உலகங்களில் கேண்டீட் மேற்கொள்ளும் பயணங்கள் மூலமும், அந்நாடுகளின் மக்களும் பாதிரிகளும் தலைவர்களும் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கையின் மூலமும், ஆழ்ந்த தத்துவ விசாரணையோடு விவரிக்கிறார் வோல்ட்டேர். தத்துவ விசாரணைகளுக்கும், கிண்டலுக்கும், கேலிக்கும், பாங்க்லாஸ் என்னும் கேண்டீடின் ஆசிரியர் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் சொல்லும் தத்துவமான ‘உலகில் ஒவ்வொன்றும் சிறப்பானதாகவே இருக்கிறது’ என்பது, பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக அலசப்பட்டிருப்பதுடன், அது சரியானதல்ல என்கிற முடிவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், கேண்டீடின் உதவியாளனாக வரும் மார்ட்டீன் என்னும் மனிதன் மூலம் விவாதிக்கப்படும் இன்னொரு தத்துவமான மானிகியர்களின் தத்துவமும் கடுமையாக கிண்டலடிக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது.

கேண்டீடின் காதலியாக வரும் குனிகொண்டே அடையும் அவமானங்களைக் காட்டிலும் தான் அதிகம் அவமானம் அடைந்ததாக ஒரு கிழவி சொல்லும் கதையும் அதைத் தொடர்ந்து அவர்களோடு கப்பலில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் தானே அதிகம் துன்பம் அடைந்ததாகக் கூறும் கதைகளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இன்னொரு வகையில் தத்துவ விசாரணை செய்கின்றன. இது உண்மையாக இருக்குமானால் பேராசிரியர் பாங்க்லாஸ் சொல்லும் எல்லாமே சிறப்பானது என்னும் தத்துவம் அடிபட்டுப்போகிறது என்று கேண்டீட் நினைக்கும்போதே பூலோக சொர்க்கமாக இருந்திருக்கவேண்டிய எல் டொரோடாவை அடைகிறான். அங்கு அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பாங்க்லாஸ் சொன்னது உண்மையாக இருக்கவேண்டும் என்று அவனை யோசிக்க வைக்கின்றன.

கேண்டீட் தொடர்ந்து எதிர்கொள்ளும் வெவ்வேறு உலகின் வெவ்வேறு மனிதர்கள் அவனுக்கு வாழ்க்கையின் பல்வேறு நிறங்களைப் புரியவைக்கிறார்கள். ஒரு விபசாரியும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு பாதிரியும் மகிழ்ச்சியாக இல்லை. அரசனும் மகிழ்ச்சியாக இல்லை. அரச பதவியை இழந்தவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களது பணியாளர்களும் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கான காரணமாக கேண்டீட் கண்டடைவது, அவரவர்கள் அவரவர்கள் வேலையைச் செய்யவேண்டும் என்பதே. இப்படியாக தனது வேலையைச் செய்வதன் மூலம் தன் வாழ்க்கையின் ஒளியைக் கண்டடைகிறான் கேண்டீட். குனிகொண்டேவுடன் தனது வாழ்க்கையைத் தொடருகிறான்.

இந்த நாவல் மிக முக்கியமான சிறப்புகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. கேண்டீட் சந்திக்கும் எல்லா மனிதர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சுயநலம் என்பது மக்களின் ஒரு குணம் என்பதை கேண்டீட் உணர்ந்துகொள்கிறான். 250 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு நாவலில் இந்த உண்மை ஆழமான வசனங்கள் மூலமும், கேண்டீட் அடையும் அனுபவங்கள் மூலமும் நிறுவப்படுகிறது. நாவலாசிரியர் வோல்ட்டேர் ஒரு எழுத்தாளராக இருப்பதால், ஒரு எழுத்தாளனும் பதிப்பாளனும் படும் கஷ்டங்களைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதையும் அவர் நாவலில் கொண்டுவரும் விதம் அலாதியானது. கற்பனையான நாவலில் உண்மையான பாத்திரங்களின் மீதான விமர்சனத்தை உலவவிட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சம். இன்றைய நாவலில் நாம் காணும் உத்தியை அன்றே வோல்ட்டேர் கையாண்டிருப்பது அசர வைக்கிறது. தனது எதிரிகளாகக் கருதும் எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனங்களை அவர் ஒரு கதாபாத்திரம் மூலம் மிகக் கடுமையாக (’அவன் ஒரு மசுராண்டி’) விமர்சிக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு ஒத்துப் பேசும் இன்னொரு கதாபாத்திரத்தின் கூற்றை அவர் போற்றவும் தவறவில்லை.அதேபோல் ஓரிடத்தில் —–ஐக் கொண்டு எறிந்தான் என்று எழுதுகிறார். அந்த கோடிட்ட இடத்தில் நமக்குத் தேவையானதை நாம் போட்டு, நம் கோபத்தை வெளிப்படுத்திகொள்ள ஒரு வாய்ப்பு என்பதைப் போல. இதுவும் ஒரு நவீன சிந்தனையே.

மதங்கள் மூலம் பாதிரிமார்கள் செலுத்திக்கொண்டிருந்த ஆதிக்கத்தின் மீது வோல்ட்டேருக்கு இருக்கும் ஆத்திரம், மிக எளிமையான ‘விட்’டுகள் மூலம் விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களை நாவல் முழுக்க ஏகப்பட்ட இடங்களில் காணலாம். மொரோக்கோவில் நடக்கும் கலவரத்தில், இஸ்லாமிய சிப்பாய்கள் நட்ந்துகொள்ளும் விதத்தையும் அவர் இதேபோன்ற விட் மூலம் விமர்சிக்கிறார். (’இடையில் முஹமதுவால் அறிவுறுத்தப்பட்ட, நாளைக்கு ஐந்து தொழுகைகள் என்பதைச் செய்ய அவர்கள் மறக்கவில்லை.’)

125 வருடங்களுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் இந்நாவலுக்கான ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி யோசித்தேன். விட் என்னும் வகையில் இரண்டு நாவல்களும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் தன்மை முற்றிலும் வேறுபட்டது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் விட்டுகள் வெறும் விட்டுகள் மட்டுமே. அதன் வழியாக அவை எவ்வித கருத்தையும் விமர்சனத்தையும் தரிசனத்தையும் முன்வைப்பதில்லை. அவை வெறும் பக்க நிரப்பிகள் மட்டுமே. ஆனால் வோல்ட்டேரின் விட்டுகள் சமூகத்தின் மீதான விமர்சனங்கள். தத்துவத்தின் மீதான கேள்விகள். எழுத்தாளரின் கோபத்தின் வெளிப்பாடு. கிழவி தனது கதையைச் சொல்லும்போது ‘அதில் ஒரு கவிதை கூட தேறாது என்பது வேறு விஷயம்’ என்னும்போது கிழவி மறைந்து வோல்ட்டேர் வெளியாகிறார். நாவல் முழுக்க இப்படி தன்னையறியாமலேயே அல்லது வேண்டுமென்றே வோல்ட்டேர் வெளிப்படும் தருணங்கள் சிறந்த விமர்சனங்கள். அதிலும் போர்தூவில் நடக்கும் சீட்டாட்டத்தின்போதும், நாடகம் பார்க்கும் இடத்தில் ஒரு விமர்சகன் நாடகத்தின் மீதும், நாடக நடிகர்கள் மீதும் வைக்கும் விமர்சனங்களிலும் வோல்ட்டேர் கொள்ளும் தீவிரம் இந்த நாவலின் உச்சம் எனலாம். இப்படி தன்னளவில் ஒரு சிறப்பான பிரதியாக மாறும் ஒரு காட்சியை நாம் பிரதாப முதலியார் சரித்திரத்தில் காணமுடியாது. இறந்தவர்கள் திடீரென ஒரு கதை கூறிக்கொண்டு உயிரோடு வரும் காட்சிகள் பிரதாப முதலியார் சரித்திரத்திலும், கேண்டீடிலும் ஒரே மாதிரியாகவே வெளிப்படுகின்றன. பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு கற்புக்கரசியின் கதையைச் சொல்லும் கதை மட்டுமே. ஆனால் ’கேண்டீட்’ காதல் கதையின் மூலம், சமூக-மத-தத்துவ சிக்கல்களை மிக ஆழமாக ஆராய்கிறது.

இந்நாவலை தமிழில் பத்ரி மொழிபெயர்த்திருக்கிறார். மிக எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்ரி இலக்கிய உலகில் தனது பயணத்தை இங்கே இருந்து சிறப்பாகத் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். வோல்ட்டேர் தனது வீச்சில் எழுதித் தள்ளியிருக்கும் வரலாற்றின் மீதான விமர்சனங்களையும் தத்துவக் கேள்விகளையும் படிப்பவர்கள் சிக்கலின்றிப் புரிந்துகொள்ளும்படியாக மொழிபெயர்க்கவேண்டுமானால், அதற்கான உழைப்பு மிக அதிகம் தேவைப்பட்டிருக்கும். இந்நாவலுக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றின் பக்கங்களைப் பற்றிய சிறப்பான புரிந்துணர்வு இருக்கவேண்டும். இது பத்ரிக்கு நிச்சயம் இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்திருக்கமுடியாது.

அதே சமயம் மொழிபெயர்ப்பில் சில கவனப்பிசகுகளும், கொள்கை வேறுபாடுகளும் இருக்கின்றன. ஹம்மிங் பறவை என்பதற்கு ஹம்மிங் பேர்ட் என்றெழுதியிருப்பது கவனப்பிசகு. ஆனால் கொள்கை வேறுபாடுகள் விவாதத்திற்குரியவை. ஒரு பிரெஞ்சு நாவலை நான் படிக்கிறேன் என்றால் என் நினைவிலி கட்டமைப்பில் என் மனம் பிரெஞ்சு நாவலை நான் படிக்கிறேன் என்று ஆழமாகப் பதிந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட நாவலில் திடீரென ‘ங்கோத்தா’ என்றும் ‘மசுராண்டி’ என்றும் வரும்போது, அந்த நினைவிலி கட்டமைப்பில் இருந்து நான் பிடுங்கப்பட்டு சென்னையில், அதுவும் 250 வருடங்கள் தூக்கி எறியப்பட்டு நிகழ்காலத்தில் நடப்படுகிறேன். இது எனக்கு ஒட்டவில்லை. ஆனால் இதை எப்படி தாண்டுவது என்று சொல்லும் திறமையும் எனக்கு இல்லை. ஒருவாறாகச் சொல்லவேண்டுமென்றால், பிரெஞ்சு நாட்டின் பணத்தை அதே பெயராலேயே குறிப்பிடுவது போல, தாமஸ் என்கிற கிறித்துவப்பெயரை தோமையார் என்று மாற்றி சாகடிக்காமல் அப்படியே பயன்படுத்துவது போல, பிரெஞ்சு வசைகளையும் அப்படியே பயன்படுத்தி, அடிக்குறிப்புகள் தந்திருக்கலாம் என்பேன். அதேபோல் இந்நாவலில் வரும் அடிக்குறிப்புகள் மிகச் சொற்பமானவையே. பல இடங்களில் அடிக்குறிப்புகளின் தேவை இருக்கின்றன. அவையெல்லாம் சேர்க்கப்பட்டால், இந்நாவல் அதனளவில் மிகச் சிறப்பானதாகவும் பூரணத்துவம் நிறைந்ததாகவும் அமையும். உதாரணமாக, காயடிப்பு செய்யப்பட்ட அலி ஒருவன் நன்றாகப் பாடத் துவங்கினேன் என்கிறான். இதற்கான அடிக்குறிப்பு இருந்திருந்தால், அக்கால கட்டத்தில் விதையடிப்பு (காயடிப்பு) செய்யப்பட்டவர்கள் நன்றாகப் பாடலாம் என்கிற மூட நம்பிக்கை பற்றியும் அப்படிப்பட்ட பாடகர்கள் தேவாலயத்தில் பாடகர்களாக ஆனார்கள் என்பது பற்றியும் தெரிந்துகொண்டிருக்கமுடியும். (இசையின் விதையும் விதையின் இசையும் கட்டுரை இதை அடியொற்றி சேதுபதி அருணாசலத்தால் வார்த்தை இதழில் எழுதப்பட்டிருந்தது.) அதேபோல் திடீர் திடீரென வரும் பிரெஞ்சு பணம் பற்றிய பெயர்களும், அளவைப் பெயர்களும் (லீக்) முதல் வாசிப்பில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கான எளிமையான குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் கேண்டீட் செல்லும் ஊர்கள் பற்றிய வரைபடம் (மேப்) இருந்திருந்தால், அதுவும் மிகவும் பயனுள்ளதாகவே இருந்திருக்கும்.

மொத்தத்தில் ஒரு சிறப்பான நாவலைப் படித்த உணர்வு இருந்தது.

ஆன்லைலில் வாங்க: காமதேனு.காம்

Share

வேர்ப்பற்று – ஆவதும் ஆக்கப்படுவதும்

முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிப்பாகவே இங்கு கருதப்படுகிறது எனலாம். எவ்வளவு உண்மையாக முற்போக்கு பேசி, எத்தனை தூரத்தில் தன்னை ஜாதியில் இருந்து பிரித்து வைத்துக்கொண்டாலும், பிறப்பால் ஒருவன் பிராமணனனாக இருக்கும்பட்சத்தில், அவன் எப்போதும் இச்சமூகத்தால் பூணூலாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறான். நிகழ்காலத்தில் ஞாநியிலிருந்து கமல்ஹாசன் வரை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். ஒருவகையில் ஞாநி, கமல்ஹாசன் போன்றவர்கள் பிராமணர்களாலும், பிராமணர்களின் எதிர்த்தர்ப்பாலும் ஏற்கப்படவும் புறக்கணிக்கப்படவும் ஆளாகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் சொல்லும் கருத்துகளை வைத்து அவர்கள் மீது தம் எண்ணத்தை ஏற்றுவதை இச்சமூகம் செய்துகொண்டே இருக்கிறது. கருணாநிதிக்கு வயதாகிவிட்டதற்காக ஞாநியும் தசாவதாரம் படத்திற்காக கமலும் பல இடங்களில் பிராமணர்களாக்கப்பட்டார்கள். இதற்கான எதிர்க்கருத்தும் பதிவு செய்யப்பட்டதும் உண்மையே. இன்றைய இந்நிலையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

திராவிடர் கழகம் முன்னிறுத்தியது போல பிராமணர்கள் அனைவரும் எத்தர்கள் அல்ல. அதேபோல் பிராமண ஆதரவாளர்கள் பிராமணர்களை முன்னிறுத்துவதுபோல் அவர்கள் அப்பாவியுமல்ல. இதையே நாவலின் எல்லா இடங்களிலும் கதாபாத்திரங்கள் வழியே பேசியபடியே செல்கிறார் இபா. இபா பிறப்பால் ஒரு பிராமணர் என்பதால் அவரை விடுத்து, நாவலை வெறும் கற்பனையாகப் பார்க்கமுடிவதில்லை. அதனால் கதாபாத்திரங்கள் சொல்லும் அனைத்து வசனங்களையும் இபாவின் விவாதமாகவே என்னால் எடுத்துக்கொள்ளமுடிகிறது. எந்த ஒரு சமூகத்தையும் பிரதிபலிக்கும் மனிதர்களைப் போலவே பிராமண சமூகத்தையும் அம்மக்கள் பிரதிபலிக்கிறார்கள். பிராமணன் ஏமாற்றுகிறான் என்பது பிரதானமாகிறது என்பதைவிட, எச்சமூகத்திலும் நிலவும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் போலவே பிராமண சமூகத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதுவே கழகக்காரர்களால் பிராமணியம் என்றழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் மனதில் பட்டதைச் சொல்லத் துவங்குகிறோமோ அப்போது அதற்கு பிராமணியச் சாயமும், ஹிந்த்துவச் சாயமும் பூசப்படுவது புதியதல்ல. இதிலிருந்து இன்றைய நிலையில் விடுபடுவது கடினம். ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, உங்கள் மேல் சாயம் பூசப்படுமுன் நீங்கள் அதற்கெதிரான கருத்தைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையிலேயே நிகழ் சமூக நிலை இருக்கிறது. இந்தக் கட்டாயத்தை மீறும்போது வேறு வழியே இன்றி நீங்கள் என்னவாக இருக்கப் பிறர் தீர்மானிக்கிறார்களோ அவராக மாறியே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப்போகிறது. இதோடு சேர்ந்து துரத்தும் வாழ்தல் தொடர்பான அவசியங்கள். வேறு வழியில்லாமல் உங்கள் மனதோடு தொடர்பே இல்லாத சில முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது. இது போன்றவர்கள் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். வேறு வழியின்றி, வாழ்தல் பொருட்டு ஒருவர் எடுக்கும் முடிவின் மீதான அவரது பங்கைவிட அவர்கள் மேல் அவர்கள் சார்ந்த சமூகம் செலுத்தும் பங்கு அதிகம் எனலாம். வேர்ப்பற்றின் கதாநாயகன் இத்தகைய ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறான். வாழ்தல்வேண்டி அவன் பூணூலானாக வேண்டியிருக்கிறது.

வேர்ப்பற்று நாவல் 1946ல் இருந்து 1952 வரை, ஓர் ஆசார பிராமணக் குடும்பத்தில் பிறந்த, சாதிகளை மறுக்கும் ஓர் இளைஞனை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஆசாரமான குடும்பத்தின் பிராமண வாழ்க்கையும், அக்குடும்பத்தில் உழலும் பிராமணக் குழந்தைகள் எதிர்கொள்ளும் வெளி உலகமும் ஒன்றோடு ஒன்று சிறிதும் தொடர்பில்லாதவை. அதனால் தன்னை வெளி உலகத்தில் ஒரு வினோத மனிதனாக, பிராமணனாகப் பிறந்த ஒரு இளைஞன் நினைப்பது தவிர்க்கமுடியாதது. இதைத் தொடர்ந்து அவன் சிந்திக்கத் தொடங்கினால் அவனுக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லது மார்க்ஸிடம் சரணைடையலாம். இரண்டாவது விஷயம், வேர்ப்பற்றின் கேசவனுக்கு நிகழ்கிறது. பிராமணன் என்கிற சாதியிலோ, அது சார்ந்த சின்னங்களிலோ சற்றும் நம்பிக்கையில்லாத கேசவன் தன்னை கம்யூனிஸ்டாக அறிகிறான். தன் தந்தையை மீறி, தன் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறுகிறான். புத்தகங்களில் இருக்கும் சித்தாந்தங்களின் வழியாக அவன் கண்டடையும் கம்யூனிஸம் அவனைக் கிறங்கடிக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக கல்லூரிக்குள் நுழையும் கேசவன், கல்லூரியில் நடக்கும் கழக – கம்யூனிஸ மோதலுக்குப் பின் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். மன்னிப்பு கேட்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்கிற நிலையில், அவன் மன்னிப்பு கேட்பதை கேவலமாக நினைக்கிறான். ஆனால் அவனுடன் சேர்ந்து போரிட்ட கம்யூனிஸ்ட்டுகள் மன்னிப்பு கேட்டுவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட, அவனுக்கு கம்யூனிஸத்தின் மீதிருக்கும் அபரிமித ஈர்ப்பு விலகுகிறது. அதோடு காந்தியின் மரணம் அவனுக்குள் தரும் சலனங்களைக் கண்டு அவனே அரண்டு போகிறான். காந்தியின் மீது தனக்கிருந்த வெறுப்பின் கீழே, மிக அடியாழத்தில் குடிகொண்டிருந்த காந்தியின் பிம்பம் விஸ்வரூபம் எடுக்கும்போது அவன் காந்தியைப் புதியதாகக் கண்டடைகிறான். அவனது கம்யூன் நண்பர்கள் அவனுக்கு, ‘நாம காந்திய கெட்டவர்னு சொல்லலே, நல்லவர்னுதான் சொல்றோம்’ என்று புதுவிளக்கம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்ட்டாகவே வலம் வரும் கேசவனின் உலகம், கல்லூரியில் நடக்கும் கலகத்திற்குப் பின் தடம் புரள்கிறது.

எல்லா பிராமண இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையின் வழியிலேயே செல்லும் கேசவன் அடுத்த எதிர்நிலையாக ஆன்மிகத்தில் செல்ல முடிவெடுத்து, துறவறம் மேற்கொள்ள சிந்திக்கிறான். ஒரு பிராமண இளைஞன் தவிர்க்கவே முடியாத இன்னொரு புள்ளி இது என்பதை இபா மிகத் தெளிவாக, மிக இயல்பாகச் சொல்லிச் செல்வது நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. துறவறம் கொள்வது கல்லூரியில் இடம்பெறுவது போன்றதல்ல என்பது அவனுக்கு விளங்குகிறது. வெளியில் தன்னை பிராமண துவேஷியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு பெரியாரிஸ்ட், கேசவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார். ஒன்று கேசவன் பிராமணனாக இருக்கவேண்டும், இல்லையென்றால் கலப்பு மணம் செய்துகொண்டு கிறிஸ்துவனாகவேண்டும் என்கிற நிலை வரும்போது, பிராமணனாக இருப்பதே எளிதானது என்கிற முடிவுக்கு வரும் கேசவன் பிராமணனாக்கப்படுகிறான். அவனது அறுபதாவது வயதில் திருச்சூர்ணத்துடனும், பஞ்சகச்சத்துடனேயுமே அவன் உலவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

நாவலின் போக்கில், கதாபாத்திரங்களின் பேச்சில் பல்வேறு வரலாறு தொடர்பான விஷயங்கள் அலசப்படுகின்றன. குறிப்பாக 1947ல் நிலவிய கழக எழுச்சியும், கம்யூனிஸ ஆதரவும் அதற்கு உண்டான போட்டியும். கழகங்களும் கம்யூனிஸமும் கல்லூரிகளில் அப்போதிருந்தே வன்முறையையே முன்வைத்திருக்கின்றன போலும். இன்றுவரை அரசியலில்லாத கல்லூரி தேர்தல்களை நாம் பார்த்துவிடமுடியாது. வீரிய விதை.

அதேபோல் நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு விஷயம் பிராமணனுக்குத் தமிழ் எதற்கு என்பது. கேசவனைக் காணும் ஒவ்வொருவரும், பிராமணர், பிராமண ஆதரவாளர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் என்கிற பேதமில்லாமல், அவன் தமிழ் படிப்பதற்கு கேலி செய்கிறார்கள் அல்லது உபதேசிக்கிறார்கள். அதில் பிராமண எதிர்ப்பாளர் கேட்கும் கேள்வி ருசிகரமானது, “இதையும் நீங்க எடுத்துக்கிட்டா நாங்க என்னதாண்டா பண்றது?” தடையை எல்லாம் மீறி தமிழ் படிக்கும் கேசவன் வேலைக்காக வேறு வழியே இன்றி பிராமணனாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுப் போகிறது. தமிழோ சமிஸ்கிரதமோ அல்ல, கடைசிவரை வரப்போவது ஜாதியே என்கிற உண்மை அவனுக்கு முகத்தில் அறைகிறது.

நாவலில் சில இடங்களில் மட்டுமே தென்பட்டாலும், இபாவின் நகைச்சுவை உணர்வு அசரவைக்கிறது. எங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் கேசவன் சொல்லும்போது முருகேசன் (கேசவனின் கம்யூன் தோழன்) என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடம் (பக் 62), கழகக்காரர்கள் போல அடுக்குமொழியில் கவிதை எழுதும் ஒரு கம்யூனிஸ்ட்டைச் சுற்றிய விவாதங்கள் (பக். 73), நேரு, ராஜாஜி உள்ளிட்டோர்கள் பேசிய ஆங்கிலத்தால்தான் சுதந்திரம் கிடைத்ததோ என்பது (பக். 81), ஒரு பெரிய கதையில் தமிழாசிரியர் ஒற்றுப் பிழைகளைக் கண்டுபிடிப்பது, கதையில் கம்பனைப் பற்றிக் குறிப்புகள் இல்லை என்று வருத்தப்படுவது (பக். 97), கேசவனின் அப்பா மகானாக்கப்படும் தருணங்கள், இப்படி பல இடங்கள்.

பிராமண இளைஞனின் கதையில் பிராமணர்களைப் பற்றி எல்லா வகையிலும் யோசித்திருக்கிறார் இபா. அவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து இதைக் கொண்டிருந்திருக்கவேண்டும். கேசவனின் தந்தையின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கையைப் பிடித்து இழுக்கும் ஒரு பிராமணருக்கு எதிராகப் பேசாமல் எல்லா பிராமணர்களும் அமைதியாக இருக்கும்போது, கேசவனின் அப்பா பிராமணனாக இருப்பதைவிட முக்கியம் நேர்மையானவனாக இருப்பது என்று முடிவெடுக்கிறார். இச்சம்பத்தில்தான் தன் தந்தையை தானே கண்டடைகிறான் கேசவன். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான சிந்தனையை ஓர் ஆசார பிராமணரிடத்தில் காணும் அவன் அதற்குப் பின் தன் தந்தையைப் பற்றிய பெருமையான தருணங்களையே தொடர்ந்து தரிசிக்கிறான். கேசவனின் பெரியப்பா பல்வேறு பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு சொத்தை இழந்து திரும்ப வருகிறார். அதற்குப் பின் அவர் கொள்ளும் நிலையில் பெரும் ஆன்மிக அமைதி காணக்கிடைக்கிறது. இத்தகைய பெரியப்பாவை வைத்து காசு பார்க்க அவர் குடும்பத்தவர்கள் முயலும்போது கேசவனின் தந்தை அப்போதும் நேர்மையே முக்கியம் என முடிவெடுக்கிறார். இப்படி ஒரு சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான மனிதர்களையும் வெளிப்படுத்துவதில் முழுவெற்றி காண்கிறார் இபா.

இக்கதையில் வரும் இடறல்கள் எனச் சிலவற்றைச் சொல்லலாம். முதல் விஷயம், இது ஒரு நாவலுக்கான கட்டமைப்பைப் பெறுவதைவிட, தொடருக்கான மனோநிலையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பது. திடீரென மாறும் காட்சிகளுக்குள் தொடர்பு இல்லாமல் போவது முதல் சறுக்கல். ஒரு கதாபாத்திரம் வரும்போது அதைப்பற்றிய இரண்டு வரிகள் தந்தே தீரவேண்டிய கட்டாயம் தொடர்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை இபாவால் சமாளிக்கமுடியவில்லை. அடுத்தது கதையில் அரசியல் நிகழ்ச்சிகள் உக்கிரம் கொள்ளும் சமயத்தில் அது தடாரெனத் தடம் விலகி, கிருஷ்ணன் (கேசவனின் கல்லூரி நண்பன்) மற்றும் கேசவனின் ஈகோவில் முட்டி நிற்பது. இதிலிருந்தும் விலகும் கதை கேசவனின் பெரியப்பா வழியாக ஆன்மிக வழிக்குச் செல்கிறது. இதையாவது, கேசவன் கடைசியாக ஆன்மிக வழியை அடைவதற்கான முகாந்திரம் என்ற அளவில் ஏற்கலாம். கேசவனின் பெரியப்பாவும் கேசவனும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அதிகமாக பாலகுமாரனை நினைவுபடுத்துகின்றன. வெகுஜன எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களில் (மாலன், ஆதவன், சுப்ரமண்ய ராஜு போன்றோர்) பாலகுமாரனே சிறந்தவர் என்பது என் எண்ணம். இபாவின் பாலகுமாரத்தனமான வசனங்களைப் படிக்கும்போது, மீண்டும் பாலகுமாரனைப் படித்து, நாஸ்டால்ஜியாவை மீட்டெடுக்கலாம் என்று தோன்றிவிட்டது. :)அதேபோல் நாவலுக்கான முடிவு என்பது ஒருவித எதிர்பார்த்த முடிவு என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால் இன்றளவும் இது யதார்த்தமாக இருப்பதால், இம்முடிவைத் தவிர்க்கமுடியாததாகவும் எடுத்துக்கொள்ளலாம். என் பெயர் ராமசேஷன் நாவலின் முடிவு இத்தகைய தன்மை கொண்ட ஒன்று. அதாவது எதிர்பார்த்த ஒன்று; ஆனாலும் யதார்த்தமானது என்கிற அளவில்.

1994ல் எழுதப்பட்ட நாவல் இன்னும் நூறாண்டுகளுக்குப் பொருத்தமாக இருக்கப்போகிறது என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

வேர்ப்பற்று, நாவல், இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம், விலை: 120 ரூ.

Share

புத்தகக் காட்சி – என் கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்

இந்தப் புத்தகக் காட்சியில் என் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். நான் பட்டியலிடும் புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவந்தவை மட்டுமல்ல, வந்து பல ஆண்டுகள் ஆன புத்தகங்களாகவும் இருக்கலாம். என் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்க்க, அதைப் பட்டியலிட்டிருக்கிறேன். அதேபோல், பட்டியலிடும் எல்லாப் புத்தகங்களும் நான் வாசித்தவை அல்ல. இன்னொரு விஷயம், சில புத்தகங்கள் என் நண்பர்கள், நான் அறிந்தவர்கள் எழுதியவை. அதையும் பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் இது என் சார்புள்ள பட்டியல். யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி. எனி இந்தியனின் புதிய வெளியீடுகள் நான்குமே முக்கியமான பதிவுகள் என்று நான் நினைப்பதால் அதையும் சேர்த்திருக்கிறேன்.

கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு (சரியான பெயரை பின்னர் சொல்கிறேன். மறந்துவிட்டது.)

Share

எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள்

உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு

ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு.

அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும் கேள்விக்கும் ஆய்விற்கும் தர்க்கத்திற்கும் உள்ளாகவேண்டிய பெரிய உலகத்தை திறந்து வைக்கின்றன. ஒவ்வொரு வரியிலும் இந்த சமூகத்தின் மீதும் சக மனிதர்கள் மீதும் தனது விமர்சன நிழலைப் பரப்பித் திரியும் இக்கதைகள், வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் களத்திலும் செயல்பட்டு புதிய தேடலை சிருஷ்டித்துக்கொள்கின்றன. தான் இயங்கும், எதிர்கொள்ளும் சமூகத்தையும் சமூகத்தைச் சார்ந்த மனிதர்களையும் வெறுத்தோ அல்லது பதிலிறுக்கமுடியாத கேள்விக்குட்படுத்தியோ அவற்றிலிருந்து விலகாமல் அவற்றிற்குள்ளேயே உயர்ந்த பட்ச தேடலை, புதிய அலையை உருவாக்க முனைகின்றன ஆபிதீனின் எழுத்துகள். கதைகள் என்கிற இலக்கணத்தை உடைத்து கதைகளிலிருந்து கதைகளை நீக்கி, ஏற்கனவே கவனம் கொள்ளத் துவங்கியிருக்கும் புதிய மரபில் நான்கு கால் பாய்ச்சலில் செல்கின்றன இவரது கதைகள். ‘கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை’ என்பதன் மூலம் புனைவிற்கான வெளியை விரிவுபடுத்துவதிலும் பொதுமைப்படுத்துவதிலும் முக்கிய இடம் பெறுகின்றன ‘உயிர்த்தலம்’ தொகுப்பின் சிறுகதைகள்.

உயிர்த்தலம் (சிறுகதைகள்) – ஆசிரியர்: ஆபிதீன் – பக்கங்கள்: 256 – விலை: 130

வாஸந்தி கட்டுரைகள்

இந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதும் இன்றைக்கும் அதே கட்டுரைகளின் தேவை இருப்பதும் இந்நூலின் தேவையை உறுதி செய்கின்றன. எந்தவித பரிவும் கொள்ளாமல் கறாரான மொழியில் நேராகப் பேசிச் செல்லும் வாஸந்தியின் மொழி பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கை இழந்து கிடக்கும் அரசியலின் மீது புதிய நம்பிக்கை கொள்ளவும் வழி அமைத்துத் தருகிறது. பத்திரிகையாளர்கள் முயன்றால் ஒரு புதிய உலகத்தை திறந்து வைக்கும் திறவுகோல்களாக இருக்கமுடியும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன வாஸந்தியின் கட்டுரைகள். பெண்ணியவாதியாகவும் செயல்படும் வாஸந்தி பெண்ணுலகத்தின் தேவையை, அவ்வுலகத்தின் கட்டுக்கடங்கா சக்தியை “பெண்ணியக் கட்டுரை”களில் தீவிரமாக வெளிப்படுத்துகிறார். “பத்திரிகை தர்மம்” என்கிற கட்டுரைகளில் அவர் தன்னையும் தான் இயங்கும் பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகளையும் பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. இந்த சுயசோதனை வாஸந்தியை ஒரு பத்திரிகையாளர் என்கிற முத்திரையிலிருந்து உயர்த்தி ஒரு இலக்கியவாதியாகக் காட்டுகிறது. வாஸந்தியின் எல்லாக் கட்டுரைகளிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது மனித நேயம் என்கிற, இன்றைய அரசியலும் உலகமும் மறந்துவிட்ட ஒரு பொருளே. அதை தொடர்ந்து எழுதி, சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் பரிவையும் உறுதிபடுத்துகிறார் வாஸந்தி.

வாஸந்தி கட்டுரைகள் – பக்கங்கள்: 240 – விலை: 120

பாவண்ணனின் நதியின் கரையில்:

புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடையத் துடிக்கும் அழகான மனநிலைகளை படம் பிடிக்கின்றன பாவண்ணனின் எழுத்துகள். எளிமை என்றுமே இயல்பானது, அதனால் என்றுமே அழகானது என்கிற அடிப்படையில் சுழலும் பாவண்ணனின் உலகம், மனம் விம்மும் பெரும் சோகத்தைக் கூட இதே சூத்திரத்தில் முன்வைக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு கைக்கூடும் இந்தப் புள்ளி அவன் எழுத்தின் உச்சம் எனலாம். பாவண்ணன் மிக எளிதாக இந்த உச்சத்தில் சென்று அமர்கிறார். தான் கண்ட காட்சியை விவரித்துக்கொண்டே வரும் பாவண்ணன், ஒரு கட்டத்தில் அதை தான் ரசித்த கவிதைக்கு விளக்கமாகவும் அல்லது விமர்சனமாகவும் மாற்றும் கட்டத்தில், அந்த நிமிடம், அக்கட்டுரை காட்சியை விவரிக்கிற எழுத்து என்கிற தளத்திலிருந்து நகர்ந்து தீவிர இலக்கியத் திறப்புக் கொள்கிறது. இதை இயல்பாகச் செய்துவிடுவதுதான் இக்கட்டுரைகளின் கூடுதல் பலம். அழகியல் மனநிலைகளை படம்பிடிக்கும் இக்கட்டுரைகள் வாழ்வியல் அனுபவமாகவும் விரிகின்றன.

நதியின் கரையில் (கட்டுரைகள்) – ஆசிரியர்: பாவண்ணன் – பக்கங்கள்: 144 – விலை: 70

வெளி நாடக இதழ்த் தொகுப்பு:

இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி நாடக இதழ். நவீன நாடகங்களின் கூறுகளை நம் பாரம்பரிய நிகழ் மரபிலிருந்தும் தெருக்கூத்துகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் உள்வாங்கி புதிய பரிமாணத்தை, புதிய உலகை சிருஷ்டிக்கமுடியும் என்கிற உண்மையை தொடர்ச்சியாக 9 ஆண்டு காலத்திற்கு வெளியான இந்த வெளி இதழ்கள் தமிழ் உலகிற்கு உணர்த்தின. வெளி ரங்கராஜன், சே.ராமானுஜம், ந.முத்துசாமி, கே.வி.ராமசாமி உள்ளிட்ட பல்வேறு நாடகக் கலைஞர்களும் வெங்கட் சாமிநாதன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வெளி இதழில் தொடர்ந்து தீவிர பங்காற்றினர். இந்த இதழ்களில் வெளி வந்த சிறப்பான பகுதிகளை கட்டுரைகள், நாடகங்கள், பேட்டிகள் என்கிற மூன்று பிரிவில் வெளி ரங்கராஜன் தொகுத்திருக்கிறார்.

ஆவண முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பான இலக்கிய வாசிப்பிற்கும் உரியதுமாக சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

வெளி இதழ்த்தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) – தொகுத்தவர்: வெளி ரங்கராஜன் – பக்கங்கள்: 320 – விலை: 160

மேலதிக விவரங்களுக்கு: http://anyindianpublication.blogspot.com/

Share