Archive for புத்தகப் பார்வை

சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வைப் படித்து இப்படி ஒரு எழுத்தாளர் தமிழின் கொடை என ஏங்கிக் கிடந்த காலங்களில் பாலகுமாரன் வழியாக எனக்குத் தெரிந்த பெயர் சுப்ரமண்ய ராஜு.பாலகுமாரன் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிய எழுதிய வரிகளின் மூலமாக சுப்ரமண்ய ராஜுவைப் படிக்கவேண்டும் என்கிற தீவிரமான எண்ணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ மூலம், கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, நிறைவேறியது. மாலனும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இடையில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ‘ஞானரதம் இதழ்த் தொகுப்பு’ நூலுக்காக படித்துக்கொண்டிருந்தபோது சுப்ரமண்ய ராஜுவின் கதையொன்றையும் கவிதையொன்றையும் வாசித்தேன். இரண்டுமே சிறப்பாக இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் இந்த இரண்டுக்குள்ளாகவே சுப்ரமண்ய ராஜுவின் மொத்த உலகமும் அடங்கிப்போனதுதான்.

வித்தியாசமான உத்தி, சிறுகதையின் எல்லைகளை பரிட்சைக்கு உட்படுத்துதல், நவீன – பின்நவீனத்துவ கதை கூறல் என்கிற எந்தவிதமான யோசிப்புக்கும் இடம் வைக்காத, வாசகனை அதிகம் மெனக்கெட வைக்காத எழுத்து. எவ்விதக் குழப்பத்தையும் வைக்காமல் நேரடியாக, எளிமையாகப் பேசுகிறது. சுஜாதாவின் நாடகங்கள் போல, தொடர்ச்சியான பேச்சு; மறுபடியும் பேச்சின் மூலமாக கதாபாத்திரங்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை எடுத்துச் செல்கின்றன. எல்லாக் கதைகளுமே பேச்சின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுஜாதாவிற்கு இருக்கும் சாமர்த்தியம் மற்றும் ஹ்யூமரைப் போன்றே சுப்ரமண்ய ராஜுவின் கதைகளிலும் சாமர்த்தியமும் நகைச்சுவையும் கதை நெடுகிலும் பரந்திருக்கின்றன. இது வாசிப்பை சுலபமாக்குகிறது; ஒரு கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. அடுத்து என்ன என்கிற எண்ணத்தையும் இப்படித்தான் இருக்கும் என்கிற முன்கூட்டிய தீர்மானத்தையும் இக்கதைகள் வெகு சீக்கிரமே பெற்றுவிடுகின்றன. ஆனால் இதைப் பற்றி சுப்ரமண்ய ராஜு யோசித்ததாகவோ கவலைப்பட்டதாகவோ அலட்டிக்கொண்டதாகவோ தெரியவில்லை. அவர் பாட்டுக்கு, ஒரு மாமி எதிரிலிருக்கும் பொம்மைக்கு மிமிக்ரி கலந்து கதை சொல்லுவதுபோல, ஓயாமல் பேசிக்கொண்டே கதைகளைச் சொல்லிச் செல்கிறார். இதனால் கவனிக்கப்படவேண்டிய கதைகள் எவை என்பதை நாம் மீண்டும் யோசிக்கவேண்டியிருக்கிறது.

சுப்ரமண்ய ராஜுவின் கதைத்தன்மையை மொத்தமாக, மேம்போக்காகப் பார்த்தால், ஆண்களின் பெண்கள் மீதான ஏளனப் பார்வையை முன்வைக்கும் கதைகளாகச் சொல்லலாம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அவை ஆண்களின் ஹிபோகிரைசியைத் தோலுரித்து, பெண்களுக்கு மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் தருவதை அவதானிக்கலாம். சுப்ரமண்ய ராஜுவிற்கு பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு கதை முழுதும் காணக் கிடைக்கிறது. பெண் இல்லாமல், பெண் பற்றிய உடல் ஈர்ப்பில்லாமல் கதைகளே இல்லை. எல்லா கதைகளும் பெண்ணையும் பெண் உடலையும் சுற்றிச் சுற்றியே வருகின்றன. பெண் கதையை நடத்திச் செல்லும்போதுகூட ஆண்களின் ஹிபோகிரைசியை தோலுரித்துவிட்டு, மிக சாதரணமாக அந்த ஹிபோகிரைசியை தான் அடைந்துகொள்கிறாள்.

பெரும்பாலான கதைகள் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, அதை நிராகரித்து அல்லது அதை கேள்விக்குட்படுத்தி, கடைசியில் அதே புள்ளியிலேயே முடிந்துவிடுகின்றன. இதை ஒரு டெம்ப்ளேட் என்று சொல்லிவிடத்தக்க அளவில் எல்லாக் கதைகளிலும் சுப்ரமண்ய ராஜு பயன்படுத்தி இருக்கிறார். பாலசந்தரின் படங்கள் – பெரும்பாலானவை – இப்படிப்பட்ட ஒரு சுழலுக்குள் சிக்கித் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் கண்டிக்கும் ஒரு விஷயத்திற்குள் அக்கதாபாத்திரமே, சூழ்நிலை காரணமாகவோ விரும்பியோ வேறு வழியின்றியோ விழுந்துவிடுவது என்கிற தொடர் சித்திரம் எனக்கு பெரும் அலுப்பை ஏற்படுத்தும் ஒன்று.

ஆண்களின் உலகை பட்டவர்த்தனமாக படம்போட்டுக் காட்டும் கதைகள், சுப்ரமண்ய ராஜுவின் உலகத்தில் சபலிஸ்டாக இல்லாத ஆண்களுக்கு இடமே இல்லையோ என்கிற தவிர்க்கமுடியாத கேள்வியை எழுப்புகின்றன. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருள் மாத்திரமே என்கிற எண்ணத்தைச் சொல்ல நினைக்கும் ராஜு தன் எல்லா கதைகளிலும் இப்படி ஆண்களை ஒவ்வொரு பெண்ணாக ஓட வைக்கிறார். அதையே பெண்களின் விஷயத்தில் சுதந்திரமாக மாற்றி, சிறந்த சிந்தனையுள்ள, ஆணைச் சாராத பெண்ணாகப் படைத்துவிடுகிறார். தூண்டில், வெளிச்சம், உமா, முகமூடி, முதல் கதை போன்ற கதைகள் ஒரு ஆணின் மனத்தில் இருக்கும் வக்கிரத்தைப் பேசுகின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் ஆணின் மனதைப் படம் பிடிக்கும் இக்கதைகள், மிக மேம்போக்காக, ஆனால் மீண்டும் மீண்டும் ஆண்களின் உலகத்தைச் சொல்வதன் மூலம் ஒரு அழுத்தத்தை உருவாக்க முயல்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவை வெறும் வார்த்தைகளாகத் தங்கி விடுகின்றன. அதேசமயம் இக்கதைகளில் வரும் பெண்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ‘நாளை வரும்’ கதையில் தன் கணவனுக்கு இருக்கும் தொடர்பை மிக எளிதாக துண்டிக்க வைக்கிறாள் ஒரு பெண். கணவனிடம் கேள்வி கேட்டால் தன் வாழ்க்கை போய்விடும் என்கிற பயத்தின் காரணமாக எதார்த்தமாகச் சிந்திக்கிறாள் அப்பெண். இப்படி சுப்ரமண்ய ராஜு ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றி பெரிய சித்திரம் ஒன்றை வலிந்து கொடுக்க முனையாவிட்டாலும், அவர்களை பெண்ணியம் பேசும் வீர வசனங்களுக்கு உட்படுத்தாவிட்டாலும், பெண்களின் பாத்திரப்படைப்பு என்பது யதார்த்தத்தையும் சமூகச் சூழலையும் கணக்கில் கொண்டு செயல்படுவதாகவே அமைந்து முழுமை பெற்றுவிடுகிறது.

சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான ‘வழியில் வந்த முட்டாள்கள்’ இப்படி ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. கதையின் உத்தி, மீண்டும் ஆரம்பத்திற்கே செல்லும் அலுப்பு தரும் உத்தியாக இருந்தாலும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் சிறந்த பதின்ம வயதுக் கதையாக இதைக் கொள்ளமுடியும். எதிர்ப்படும் ஆண்களையெல்லாம் தன் அழகைச் சார்ந்து ஏற்படும் அதீத கர்வத்தால் புறந்தள்ளும் ஒரு பெண்ணை, புறந்தள்ளுகிறான் ஒருவன். பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி உடைந்து நொறுங்கும் அப்பெண், தன் ஈகோவைத் தொலைத்துவிடாமல் அவனை மறந்து முதலில் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஆணுக்கு மீண்டும் ‘ஹலோ’ சொல்கிறாள். பெண்ணின் பார்வையில் வெளிப்படும் இக்கதை, பெண்ணை ஆணுக்குரிய சாயலில் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லும்போது கூட, சுப்ரமண்ய ராஜுவால் அவரே ஆண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் சுழலிலிருந்து மீள இயலவில்லை என்கிற எண்ணம் வருகிறது. இக்கதையின் பெண், அவரின் மற்ற கதையின் ஆண்களைப் போலவே சிந்திக்கிறாள்.

மல்லிகைப்பூ, உறவு, விலை, நடுவிலே நான், தாகம், இப்படியா சின்னப் பெண்ணை பயமுறுத்துவது போன்றவை ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் எழுதிப்பழகும் கதைகளை ஒத்திருக்கின்றன. ‘செல்லிக்கு படிப்பு வரவில்லை’ மோசமான கதைகளுள் ஒன்று. இது குமுதத்தில் தண்டமாக எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று முன்னுரையில் சொல்கிறார் தேவகோட்டை மூர்த்தி. புத்தகத்தில் இருக்கும் கதை குமுத்தத்தால் எடிட் செய்யப்பட்டதா அல்லது முழுமையானதா எனத் தெரியவில்லை. ‘கொடி’ சிறுகதையை முக்கியமான சிறுகதையாகக் கருதுகிறார் தேவகோட்டை மூர்த்தி. என்னைப் பொருத்து அது அப்பாவிக்கான கதை. கடைசியில் தன் மாமனார் போலவே அவனும் ஆகும் அதே கதைச் சுழல்!

ஆண்களும் பெண்களும் பதின்ம வயதும் ஏமாற்றலும் களவொழுக்கமும் சலிக்க சலிக்க வரும் கதைகளிலிருந்து கொஞ்சம் விலகி சில கதைகள் (லெவல் கிராஸிங், நாலு பேர்) மேலே செல்ல முயல்கின்றன. லெவெல் கிராஸிங் சக மனிதர் மீதான அன்பைச் சொல்லும் மிகச் சிறிய நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் சாதாரணமான கதை. ‘நாலு பேர்’ அதிலிருந்து கொஞ்சம் உயர்ந்து, ஒரு நண்பனின் சாவை எதிர்கொள்ளும் நான்கு நண்பர்களின் மனநிலையை அலசுகிறது. இக்கதை ஆண்-பெண் ஏமாற்றம்/ஏமாற்றப்படுதலைப் பற்றிப் பேசாமல், அதை மீறிய கதையொன்றைக் கொஞ்சம் யோசனைக்கு இடம் கொடுத்துச் செல்வதாலேயோ என்னவோ எனக்கு பிடித்துவிட்டது. இக்கதையிலும் ஆண்களுடன் உரச பெண்களும், அவர்களுடன் மோகம் கொள்ள ஆண்களும் வருகிறார்கள். ஆனால் அவை நடக்கும் சூழலுக்குப் பின்னே நிறைந்திருக்கும் பெரும் சோகம் இவற்றைத் தாண்டிய யோசனையைத் தருகிறது.

மொத்தமாக சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் ஆண்கள் பெண்களின் மன நிலையை விவரிக்கும்போது, கூடவே மிடில் கிளாஸ் மக்களின் நிலையையும் அவர்களின் எண்ணங்களையும், நகரத்து மக்களின் மனப்போக்கைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கின்றன. சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் இவை ஒரு முக்கிய அம்சம். ஆனால் இவற்றை ஒரு வாசகன் வலிந்து தேடி அடையவேண்டியிருக்கிறது. எவ்விதத் தீவிரத்தன்மையும் இல்லாமல் சொல்லப்படும் கதைகள் இந்த அம்சத்தை மிக மெல்லிய குரலில் சொல்கின்றன. உரத்து மீண்டும் மீண்டும் வலிந்து சொல்லப்படும் ஆணின் உலகம் இதை மறைத்து வைத்துவிடுகிறது என்றும் சொல்லலாம்.

சொல்லத் தோன்றும், ஆனால் அதிகம் பொருட்படுத்தத் தேவையற்ற, இன்னொரு விஷயம், சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் வரும் ஆண்களின் பெயர்கள். ராஜாராமன், கணேசன், முத்து – இந்தப் பெயர்கள்தான் பெரும்பாலான கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. தீவிர எண்ணமின்றி தோன்றிய உடனே எழுதிக் கொடுத்துவிட்டுப் விடுவதைப் போன்ற சித்திரம் ஒன்று என் மனதுள் எழுகிறது.

சிறுகதைகளோடு இரண்டு குறுநாவல்களும் தொகுப்பட்டுள்ளன. ‘இன்று நிஜம்’ குறுநாவல் பணத்தை படாடோபத்தை சுதந்திரமற்ற வாழ்க்கையை வெறுக்கும் ஒரு இளைஞனின் கதையையும் வறுமையால் அந்த இளைஞனுக்கு சித்தியாகும் ஒரு பெண்ணின் நிலையையும் ஆராய்கிறது. இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. இதிலும் மற்ற சிறுகதைகளின் நீட்சியாகவே இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அமைகின்றன.

அங்கங்கே சட்டென தெறிக்கும் சுப்ரமண்ய ராஜுவின் சாமர்த்தியமும் நகைச்சுவையும் அதிசயிக்க வைக்கின்றன. இப்படி நிறைய இடங்களில் வருவது கதையை வாசிக்கும்போது ஒரு புன்னகையை வரவழைக்கிறது. உப்பு சப்பற்ற கதைகளைக் கூட கொஞ்சமாவது உயிரோட்டத்தோடு வைத்திருப்பது சுப்ரமண்ய ராஜுவின் இந்த சாமர்த்தியமே. ஆனால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு கண சம்பவங்களும் இந்த சாமர்த்தியமும் மட்டுமே கதைகளாகிவிடுவதில்லை. இதை சுப்ரமண்ய ராஜூ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தேவகோட்டை மூர்த்தி சுப்ரமண்ய ராஜுவின் கதைகளைப் பற்றிக் கொஞ்சமும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றி நிறையவும் முன்னுரையில் எழுதியிருக்கிறார். சுப்ரமண்ய ராஜுவை இவர் சிறந்த இலக்கியவாதியாக நம்புவதாகத் தெரிகிறது. சுஜாதா தான் வெளியிட்ட பட்டியலில் புதுமைப்பித்தனைச் சேர்க்கவில்லை, சுப்ரமண்ய ராஜூவைச் சேர்த்திருந்தாராம். காலத்தின் கொடுமையில் இதுவும் ஒன்று. ஒருவேளை அப்போது சுஜாதாவிற்கு இலக்கியம் பிடிபடாமல் இருந்திருக்கலாம். இப்போது அவர் இப்படி நினைக்கமாட்டார். ஏனென்றால் காலத்தின் கரங்கள் குரூரமானவை.

கிழக்கு பதிப்பகம் வழக்கம்போல சிறப்பாக இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. ஆனால் கதைகளைத் தொகுத்தவர் பெயர் இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் முழுக்கதைத் தொகுப்பு என்னும்போது தொகுத்தவர் பெயர் முக்கியமானதாகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து தொகுத்தவர் பெயர் என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறலாம். அதேபோல் கதைகள் வந்த வருடங்கள் குறிக்கப்படவில்லை. இது ராஜுவின் எழுத்து குறித்த வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ளவிடாமல் செய்துவிட்டது. ஒரு செம்மையான தொகுப்பிற்கு இவையயெல்லாம் முக்கியமானவை.

சுப்ரமண்ய ராஜு 1973ல் ஞானரதம் இதழில் எழுதிய கவிதை:

புலி

எதிரில் நீ வரும்போது
இடப்பக்கம் ஒதுங்கிடுவான்
Peak-hour பஸ்ஸில்
பின் பக்க நெரிசலில்
உன் பக்கப் பார்வையை
ஒதுக்கியே வைத்திருப்பான்
மொட்டை மாடிக் குளிர் நிலவில்
கட்டை போல் படுத்திருப்பான்
தியேட்டரின் இருட்டிலே
கைபடாது படம் பார்ப்பான்
பெண்ணே!
உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
கற்கால மனிதனொருவன்
என்னுள் உறங்குகின்றான்
எப்போது எழுப்பட்டும்?

இக்கவிதையில் அடங்கி விடுகிறது சுப்ரமண்ய ராஜுவின் ஒட்டுமொத்த கதைகளும் அவரது உலகமும். கற்கால மனிதன், கற்கால எண்ணம் என்கிற சொல்லாடல் கூட நிறையக் கதைகளில் வருகிறது. பல பரிமாணங்களற்ற, தட்டையான கதைகள் சுப்ரமண்ய ராஜுவின் தோல்வியில் முக்கியப் பங்காற்றும் விஷயமாகும்.

(இக்கவிதை பற்றி: எனக்குப் பிடித்த கவிதை இது. ஆரம்பத்தில் படர்க்கையில் வரும் கவிதை சில வரிகளுக்குப் பின் தன்னை நோக்கித் திரும்பி, அதை முன்வைத்து ஆண்களின் பொதுவான தளத்திற்குச் செல்கிறது.)

சுப்ரமண்ய ராஜு கதைகள், கிழக்கு பதிப்பகம், விலை: 200 ரூபாய்.

இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=26120

Share

மீன்காரத் தெரு – புத்தகப் பார்வை

Thanks:AnyIndian.comமீன் விற்று வறுமையில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைக்குள் நிகழும் போராட்டங்களை, ஜாதிய அடக்குமுறைகளை, வறுமையை முன்வைத்து பெண்கள் போகப்பொருளாக்கப்படும் விஷயத்தை மீன்காரத்தெருவின் மணத்தோடும் பாசாங்கில்லா மக்களின் வாழ்க்கை முறையோடும் முன்வைக்கிறது மீன்காரத் தெரு நாவல்.

வங்கப் பிரிவினை காலகட்டத்தில் நடக்கிறது நாவலின் களம். இது காலத்தைச் சொல்ல மட்டுமே பயன்படுகிறது. மற்றபடி வங்கப் பிரிவினை கதையில் நேரடிப் பங்கைச் செலுத்தவில்லை. கதை சொல்லல் எந்தவிதக் கட்டுக்கும் உட்படாமல் நினைத்தவாறு அங்கும் இங்கும் முன்னுக்கும் பின்னுக்கும் பாய்ந்து, தொடர்ச்சியின்மையின் மூலம் ஏற்படும் எதிர்பார்ப்பையும் கூட எடுத்துக்கொண்டு, முன் செல்கிறது. கதை மாந்தர்கள் அப்படியே ரத்தமும் சதையுமாக எந்த வித ஆபரணங்களுமின்றி யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நாவலில் யாரும் நாயகனும் இல்லை, நாயகியும் இல்லை. எந்த நேரத்தில் கதை யாரைப் பிடித்துக்கொண்டு செல்கிறது என்று வரையறுக்கமுடியாதபடி மீன்காரத்தெருவின் ஒவ்வொரு நபரையும் தொற்றிக்கொண்டு செல்கிறது.

வறுமையும் தொழிலும் அதன் ஜாதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, கொஞ்சம் கூடப் பிரிக்கமுடியாத ஒன்று என்பது நாவல் நெடுகிலும் வலியுறுத்தப்படுகிறது. பங்களாத் தெருவில் வாழும் மனிதர்கள் மேட்டிமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்வு தங்கத்தாலும் பன்னீராலும் அத்தராலும் மணக்கும் திரவியங்களாலும் தினம் ஒரு பெண்களாலும் ஆனது. மீன்காரத் தெருவில் இருக்கும் பெண்கள் வயதுக்கு வரும்போது பங்களாத் தெருவில் இருக்கும் பெரியவர் வீட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள். அந்தப் பெண்களுக்கு சில நாள்களிலெல்லாம் பெரியவர் செலவிலேயே, பணமும் பொருளும் கொடுக்கப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலவும் புனைவுகள் பங்களாத் தெருவின் வாழ்க்கையை நமக்கு விவரித்துவிடுகிறது. பெரியவரின் அதே வாழ்க்கை முறையை அவரது மகன் சலீமும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். வைப்ப்பாட்டியாக இருந்தால் கூட அவன் மேற்கொள்ளும் காதல் லீலைகள், வைப்பாட்டியாக அனுப்பப்பட்டிருக்கும் பெண்களின் மனதில் பெரிய சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்துவிடுகின்றன. சலீமின் தோற்றத்திலும் அவன் பேசும் மலையாளத்திலும் வைப்பாட்டியாக இருக்கக்கூட பெண்கள் பெரும் ஆர்வம் கொள்ளுகிறார்கள்.

ஆமினாவை முக்கியமான கதாபாத்திரமாகக் கொள்ளலாம். அவளும் சலீமின் மேல் அளவு கடந்த அன்பு வைத்து நெக்குருகுகிறாள். அப்படி அவனுடன் ஏற்படும் வாழ்வு நிலையில்லாதது என்று தெரிந்தும் அவளால் அவன் மேல் ஏற்படும் அளவு கடந்த ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிறுவயதில் உடன் படிக்கும்போதிருந்தே அவளுக்கு அவன் மீது அளவில்லா ஈர்ப்பு. வாழ்க்கை தரும் ஏகப்பட்ட நெருக்கடிகளையும் மீறி அவள் அவன் நினைவிலிருந்து மாறுவதேயில்லை. பின்னர் ஒரு நேரத்தில் அவனும் அப்படிச் சொல்கிறான். அப்படிப்பட்ட ஒரு வேளையில் அம்பன் குதிரைவண்டி மீன்காரத்தெருவிற்கு வரும்போது முகமலர்ச்சியுடன் பெரியவர் வீட்டிற்குச் செல்கிறாள். இத்தனைக்கும் ஆமினா எட்டாவது வரையில் படித்தவள். மோக வேளையில் சலீம் சொன்ன வார்த்தைகள், பாங்கு ஓசை கேட்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் தழுவிக் கிடந்த தீவிரமான காம நிமிடங்கள் எல்லாமே பொய் என்பதை உணர்கிறாள், அவளுக்கும் பெரியவர் திருமணம் நிச்சயம் செய்யும்போது. மீன்காரத் தெருவில் வயசுக்கு வரும் பெண்களை தேடிப்பிடித்து பங்களாவிற்குக் கூட்டிச் செல்லும் ரமீஜா, பங்களாவில் இதெல்லாம் சகஜம் என்று ஆமினாவுக்கு அறிவுறுத்துகிறாள். அதுமட்டுமின்றி சலீமிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து அவனுக்கென ஒரு குடும்பம் இருப்பதையும் கூறுகிறாள். ஆமினாவால் இதையெல்லாம் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.

நைனா ஆமினாவின் அண்ணன். சமூகத்தின் ஏற்ற இறக்கங்களில் கடும் கோபம் உள்ளவன். எல்லாரும் இஸ்லாமியர்கள் என்னும்போது ஏன் இத்தனை வேறுபாடு என்பதில் பங்களாத் தெருவின் மீதில் அதீத வெறுப்பில் இருப்பவன். எப்போதும் குடியும் கேள்வியுமாகத் திரியும் நைனாவிற்கு வேற்று மதப் பெண் வள்ளியோடு தொடுப்பு உண்டு. ராவுத்தர் நல்ல நிலையிலிருந்து வறுமையில் விழுந்து நாதியற்று மீன்காரத் தெருவிற்கு வாழ வரும்போது அங்கு சென்று வம்பு செய்யும் நைனா அவரிடம் அவர் பெண் ஆயிஷாவைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கவும் கேட்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம், மீன்காரத் தெரு பெண்கள் பங்களாவுக்கு போனால், அங்கிருந்து ஒருத்தி ஏன் மீன்காரத் தெருவுக்கு வாக்கப்பட்டு வரக்கூடாது என்பது. மிக எளிமையான நேரடியான ஆனால் சமூகம் பதிலிறுக்கமுடியாத கேள்வி. நைனாவோடும் ஆமினாவோடும் சேர்த்து ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடுகளும் காட்டப்படுகிறது. நாவிதன் துருத்தியின் மகன் சண்முகம் பெருமாள் கோவில் அர்ச்சருக்கு ‘சவரம்’ செய்யும்போது அவரது ஆண்குறியை அறுத்துவிட்டுத் தலைமறைவாகிறான். ஆமினாவுக்கு பாடம் சொல்லித் தரும் மருதமுத்து அய்யா, பள்ளியில் நிலவும் தீவிரமான ஜாதி வேறுபாட்டைக் கண்டித்து மாற்றல் வாங்கிக்கொண்டு போகிறார். ஒருதடவை ஆமினா பேருந்து நிலையத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட, அவளுடன் படித்த, இரண்டு ஹிந்து மத நண்பர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.

ஹனீபா ராவுத்தரின் சொத்தையெல்லாம் லெபைக்காரர்கள் வேண்டுமென்றே கேஸ் போட்டுப் பிடுங்கிக்கொண்டார்கள் என்கிற கோபம் ஹனீபா ராவுத்தருக்கு இருக்கிறது. அவரது மகள் ஆயிஷாவும் தாங்கள் லெபைக்காரர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றே தீவிரமாக நம்புகிறாள். பங்களாத் தெரு சீக்கிரமே லெபைக்காரர்களின் தெருவாகப் போகிறது என்று நினைக்கிறார் அவருக்கு வீடு பார்த்துத் தரும் ஷேக்காத்தா.

நைனாவின் மனைவி மும்தாஜ் நைனாவின் முரட்டுத்தனம் தாங்காமல் அவனை விட்டுப் பிரிந்து சென்று வேறு கல்யாணம் செய்துகொள்கிறாள். இத்தனைக்கும் அவள் நைனாவிற்கும் வள்ளிக்கும் பிறக்க இருந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள சம்மத்தித்தவள். நைனா கருகமணி கட்டி வள்ளியை கட்டிக்கொள்கிறான். வள்ளி இறக்கும்போது அவளை நைனாவின் மனைவியாக ஏற்க மறுக்கிறார் முத்தவல்லி. ஆனால் மீன்காரத் தெருவே சேர்ந்து நின்று அவளை அடக்கம் செய்து, அவளை வள்ளி பீவியாக்கி, ‘அவளுக்கு ஜியாரத் செய்யக்கூட’ தயாராக இருக்கும் அளவிற்குப் போகிறது.

மீன்காரத் தெரு பெண்கள் எப்படி பங்களாவிற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இயங்கும் கதை, அதற்கு முக்கியக் காரணமாக ஜாதியையும் வறுமையையும் முன்வைக்கிறது. ஜாதியும் வறுமையும் ஒன்றோடு ஒன்று இயைந்தது என்பதை சேக்காத்தா ஒரு கட்டத்தில் சொல்கிறாள். அதே வேளையில் எப்படி லெபைக்காரர்கள் ராவுத்தர்களின் இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறாள். ஆனால் மீன்காரத் தெரு காரர்களுக்கு அந்த விடிவே இல்லை என்கிற ஆதங்கமும் ஏக்கமும் அவள் பேச்சில் தெறிக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நைனா, காசிம், ஆமினா என எல்லாருக்கும் அதே எண்ணமும் கையலாகாத் தனமும் இருக்கின்றன. “கலிமா சொல்லி குரான் வழி நடக்குற எல்லாமே முஸல்மானுங்கதே. அவுங்களுக்குள்ள ஜாதியோ பிரிவோ கிடையாதுண்டு சொல்லியிருந்தாலும் ஏதோ ரூபத்துல ஜாதி இருக்கத்தாஞ் செய்யிது” என்கிறாள் சேக்காத்தா.

மீன்காரத் தெரு பெண்கள் இரவில் கணவன்மார்கள் தூங்கியபின்பு பேசும் பேச்சுகள் மிகுந்த சுவாரஸ்யம் உள்ளவை. அசிங்கமான, விரசமான பேச்சாக அவை வெளிப்பட்டாலும், அதனூடே அந்த மக்களின் வெகுளித்தனத்தை அவை முன்வைக்கின்றன. ஆமினாவும் சலீமும் கொள்ளும் காதல் விளையாட்டுக்களின் விவரணையில் ஆமினா எவ்வளவு தூரம் சலீமை விரும்புகிறாள் என்று நமக்கு உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் இந்த வாழ்வு நிரந்தரமானதல்ல என்று தெரிந்தும் அவள் கொள்ளும் அன்பு அவள் மேல் ஒரு பச்சாதபத்தைக் கொண்டு வந்துவிடுகிறது. அதேபோல் காசிம் தன் மனைவியின் அருமை தெரிந்தவனாகச் சித்தரிக்கப்படுவது, நமக்கு பெரிய ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. ஜாதி, ஏமாற்றங்கள், சாவு எனச் செல்லும் கதையில் இப்படி ஒரு தெளிந்த நீரோடை போன்ற அன்பைப் பார்க்கும்போது சில்லிப்பு ஏற்படுகிறது.

இஸ்லாமியர்களின் வட்டார வழக்கு அத்தமிழின் இனிமையை நமக்குச் சொல்கிறது. வட்டார வழக்கில் அதிகமான இஸ்லாமிய வார்த்தைகள் சேர்த்துக் குழப்பாமல், அதே சமயம் யதார்த்த வட்டார வழக்கும் சிதைவுபடாமல் எழுதியிருக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

நாவலை பெரிய நாவலாக 400 பக்கங்களுக்கு மேல் எழுத முடியுமென்றாலும், தமிழ் நாவலின் தடித்த கட்டமைப்பை உடைத்து, சொல்லாமல் விடப்பட்டவற்றின் மூலம் வாசகனின் தவிப்பை அதிகப்படுத்துவதே குறுகிய பக்கங்களில் (104 பக்கங்கள்) நாவல் வந்ததன் காரணம் என்கிறார் ஆசிரியர் கீரனூர் ஜாகிர் ராஜா. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். எந்த வித தொடக்கம் முடிவு என்பன போன்ற சடங்குகளையும் தகர்த்தெறியும் இந்நாவல் 400 பக்கங்களில் இன்னும் விஸ்தாரமாகவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற நினைப்பைத் தவிர்க்கமுடியவில்லை.

ஜாதிகளை கடக்க மீன்காரத் தெருவையும் கடந்தே தீரவேண்டும்.

மதங்களின் மீதான விமர்சனமாக, அம்மதங்களின் மீது பற்றுள்ளவர்கள், அம்மதங்களுக்குள்ளிருந்தே செய்யும் தீவிர எதிர்ப்புகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. மதத்திலிருந்து வெளியேறி அதன் மீது விமர்சனம் வைப்பதற்கும் உள்ளிருந்துகொண்டு, மதத்தை ஏற்றுக்கொண்டு, அதில் நிலவும் பாகுபாடுகளின் மீது விமர்சனம் வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் மிக முக்கியமானது. முதலாவதை எளிதில் மதத்தின் நம்பிக்கையாளர்கள் புறக்கணிப்பதைப் போல இரண்டாவதை புறக்கணிக்கமுடியாது. மேலும் மதத்துக்குள்ளிருந்தே வரும் எதிர்ப்புகளே மதத்தை காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றும் தன்மையுடையதும் மேலும் முன்னகரச் செய்வதும் ஆகும். இதற்கு வழிவிடாத எம்மதமும் அதன் நம்பிக்கையாளர்களை தன் கொடிய கரத்தோடு துரத்துவதாகவே என்னால் கற்பனை செய்யமுடியும். மதத்தை மீறியது தனிமனித சுதந்திரமும் தனிமனித மரியாதையும். இதை நிலைநிறுத்த மறுக்கும் எம்மதமும் கேள்விக்குட்பட்டாக வேண்டிய ஒன்றே. அந்த வகையில் இந்நாவல் மிக முக்கியமான பிரதியாக காலப்பிரதியாக மாறுகிறது.

மீன்காரத் தெரு, கீரனூர் ஜாகிர் ராஜா, விலை: 60.00 ரூபாய், 144 பக்கங்கள், மருதா பதிப்பகம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: AnyIndian.com

Share

சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம். தங்கராமு ஐயா என்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். இவரை தமிழ் வாத்தியாராக, கணக்கு வாத்தியாராக அல்லது ஆங்கில வாத்தியாராக, எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம். ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஐயாவிற்குத் திடீரென்று தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சட்டம் அமலில் இருந்துவந்தாலும் அது உபயோகப்படாததால், புதுச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துவிட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவராவது பேசவேண்டும் என்று. அதற்கு அந்த அந்த வகுப்பாசிரியர்களே பொறுப்பு. பையன்களின் பேச்சாற்றலை வளர்ப்பதைவிட தமது மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற வேகம் பெருகிப்போந்த நிலையில், தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.

அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.

ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.

நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.

வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]

சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.

சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

.

Share

ரோஸ் (நாவல்) – ஒரு பார்வை

அந்திமழையில் ரோஸ் (நாவல்) ஒரு பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

குழந்தைகளின் ஏக்கங்கள் பற்றி மிக எளிமையாகவும் ஆழமாகவும் பேசும் நாவல். இரா.நடராசனின் ‘பாலீதீன் பைகள்’ நாவலை ஏறக்குறைய பத்து வருடங்கள் முன்பு வாசித்தேன். சன்னமான அதிர்வுகளுக்கு என்னை உள்ளாக்கிய நாவலது. அதன்பிறகு இப்போதுதான் இரா.நடராசனின் இன்னொரு நாவலை வாசிக்கிறேன்.

ரோஸ், இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கை வெளியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் எந்தவொரு இடத்திலும் ஆசிரியரோ கதாபாத்திரமோ விவரணைகள் எதையும் சொல்வதில்லை. ஆனால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வரியும் சிறுவன் இழக்கும் உலகத்தைத் தொடர்ந்து காட்டிக்கொண்டே வருகிறது. நாவல் முழுக்க விவரணைகள் ஏதுமின்றி, வெறும் உரையாடல்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக ஒரு சிறுவனின் உலகம் எவ்வளவு சுமை நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் இன்றையக் கல்விமுறை எவ்வளவு தூரம் சிறாரிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது என்பதையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அறியாமலேயே ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதையும் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இரா.நடராசன். உண்மையில் இந்நாவலில் வரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் அன்பற்றவர்களாகவோ அக்கறை அற்றவர்களாகவோ சித்தரிக்கப்படவில்லை. யதார்த்த பெற்றோர்கள் போல தன் மகனைச் சீக்கிரம் எழுப்பி, குளிப்பாட்டி, உணவளித்து, பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனுக்கு சிப்ஸ் வாங்கிக் கொடுத்து எனத் தன் மகனின் தேவையை மிகக் கவனத்தோடும் பாசத்தோடும் செய்கிறார்கள். ஆனால் யதார்த்தம் போலவே மகனின் உலகமும் பெற்றோர்களின் உலகமும் இருவேறு மையங்களில் சுற்றும் கோளங்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பின்றி சுழல்கின்றன. அவை எந்தப் புள்ளியிலும் சந்தித்துக்கொள்ளவே இல்லை.

காலையில் எழும்போதே பள்ளிக்குச் செல்லவேண்டும், வீட்டுப்பாடங்கள் முடிக்கவேண்டும் என்ற சுமையையும் அலுப்பையும் சேர்த்தெடுத்துக்கொண்டு எழுந்திருக்கும் சிறுவனின் வீட்டு ரோஜா பூத்திருக்கிறது. அதைப் பார்க்க அவனுக்கு அனுமதியில்லை. காரணம், காலை நேரப் பரபரப்பு; நேரமின்மை. அவன் இரவு வந்து பார்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறான். அன்று வரும் பள்ளிக் காட்சிகள் அனைத்திலும் எப்படியோ, ரோஜாவோ ரோஜா நிறமோ ரோஜா வளரும் மண்ணோ, ரோஜாவின் பெயர் அடிபடுகிறது. அவன் மீண்டும் மீண்டும் தன் வீட்டில் பூத்திருக்கும், தான் பார்க்காது வந்துவிட்ட ரோஜாவை நினைக்கிறான். பெற்றோர்களின் தனித்து இயங்கும் உலகம் போலக் கல்விக்கூடத்தின் உலகம் இன்னொரு மையத்தில் தனித்து இயங்குகிறது. அங்கு ஸ்பெல்லிங்கும் மனனமும் வீட்டுப்பாடமும் முன்னிறுத்தப்படுகிறதே அன்றி அச்சிறுவனின் உலகத்தின் மீது எந்தவொரு கவனமும் விழுவதில்லை. அச்சிறுவனுடன் படிக்கும் மற்றச் சிறுவர்கள் மட்டுமே அவனது ரோஜாவின் மீது கவனம் கொள்கின்றனர். அதுவும் கூட ஆசிரியரால் கண்டிக்கப்படுகிறது.

எல்லா வகுப்பு ஆசிரியர்களூம் இயல்பாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணி பாடம் போதிப்பது, வீட்டுப்பாடம் கொடுப்பது, ஸ்பெல்லிங் சொல்லச் சொல்வது என அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். அதில் குற்றம் காண ஏதுமில்லை. சிறுவனின் ரோஜா பற்றிய ஏக்கம் நமக்குள்ளும் இருக்கும்போது நமக்குச் சிறுவனின் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்த உரையாடல்களின் மூலமாக மட்டும், சுஜாதாவின் நாடகங்களில் கதாபாத்திரங்கள் தொடர்ந்த உரையாடல்கள் மூலம் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்வதுபோல, இது நேர்ந்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான்.

சிறுவர்களின் பள்ளி உரையாடல்கள் வெகு எளிமையாகவும் யதார்த்தமாகவும் இருக்கின்றன. அவர்களை நோக்கி ஆசிரியர்களின் கூச்சலும் சத்தமும் கோபமும் இதேபோலப் படைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பல இருக்க, குழந்தைகள் உலகம் பற்றிய நாவல் வெகு சிலவே உள்ளதால் (சட்டென சுஜாதாவின் ‘பூக்குட்டி’ நினைவுக்கு வருகிறது. ரோஸ் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வே.சபாநாயகம் கி.ராஜநாராயணின் ‘பிஞ்சுகள்’ நாவலை நினைவுகூர்கிறார்.) இதுபோன்ற நாவல்களில் தேவை அதிகமாகிறது.

66 பக்கங்களே கொண்ட, அரை மணி நேரத்தில் படித்து முடிக்கப்பட்டுவிடக்கூடிய சிறிய நாவல் மனதில் ஏற்படுத்தும் எண்ணங்கள் ஏராளம். உண்மையில் இன்றைய பெற்றோர்களின் நிலையையும் ஆசிரியர்களின் நிலையையும் அது தெளிவாகவே கூறுகிறது. ஆசிரியர் அதை விமர்சிக்கும் நோக்கத்தோடுதான் அணுகியிருக்கிறார். ஆனால் அவர்களின் செய்கைகள் தவிர்க்கமுடியாதவை என்றே நான் கருதுகிறேன். இந்த நாவலில் காலையில் சிறுவன் ரோஜாச்செடி பக்கம் சென்று நிற்கும்போது, அவனது பெற்றோர்கள் அந்த ரோஜாவை மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். இது எல்லார் வீட்டிலும் நேரக்கூடியதே. இது போலவே ஆசிரியர்களின் கூற்றும் எங்கேயும் நேரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட முடியுமா எனத் தெரியவில்லை. காலங்காலமாகக் கல்வி என்பதே மிக முக்கியம் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற்போலவே நமது சமூக அமைப்பும் அமைந்திருக்கிறது. அதையே இக்கதையின் பெற்றோர்களும் செய்கிறார்கள். நம்மைப் போலவே. உண்மையில் தங்கள் மகனின் ஆசையைப் புறக்கணித்திருக்கிறோம் என்கிற சுவடு கூட அவர்களிடம் இல்லை. அதுவும் நம்மைப் போலவே. ஓரளவிற்கு மேல் அல்லது தினசரி வாடிக்கையாகிப் போகும் நிகழ்வுகளில் தோய்ந்து தோய்ந்து இதுபோன்ற சிறிய சிறிய நிராகரிப்புகள், அதனால் குழந்தைகளின் உலகில் ஏற்படுத்தப்படும் ஏக்கங்கள் நம்மை எந்த அளவிலும் பாதிப்பதில்லை என்றே தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்தச் சின்ன வயதில் குழந்தைகளுக்கான அளவுக்கு மீறிய சுதந்திரம் அவர்களின் வாழ்க்கைக்கே ஊறாகிப் போகும் அபாயமுமிருக்கிறது. அதனால் ஒரேடியாகப் பெற்றோர்களையோ ஆசிரியர்களையோ குறைகூறிவிட முடியாது. அவர்கள் சமூக அமைப்பிற்கேற்பச் செயல்படுகிறார்கள். ஆனால், நமது அணுகுமுறையில் மாற்றம் தேவையோ, குறைந்தபட்சம் மாற்றத்தைப் பற்றி யோசிக்கவாவது வேண்டுமோ என்கிற கேள்வியை வெகு நிச்சயம் எழுப்புகிறது இந்நாவல். அந்த அளவில் இந்த நாவல் சிறந்த வெற்றி பெறுகிறது.

காவ்யா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலோடு, மூன்று சிறுகதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ரோஸ், இரா.நடராசன், காவ்யா வெளியீடு, விலை: 40.00 ரூபாய். [முதல் பதிப்பு: 2001]

Share

மிதவை – புத்தகப் பார்வை

அந்திமழையில் மிதவை – புத்தகப் பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

நாஞ்சில் நாடனின் நாவல் மிதவை முதலில் நாகர்கோவிலை மையமாக வைத்தும் பின்பு பாம்பேயின் தொழிற்பேட்டையை மையமாக வைத்தும் சுழல்கிறது. வேலை தேடி அலையும் இளைஞர்களின் இன்றைய நிலை இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலில் சற்றும் பிசகாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய இருபது வருடங்கள் வேலையற்றவர்களின் வாழ்க்கைத் தரமும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவர்கள் முதலில் சென்னை போன்ற நகரங்களுக்குள் நுழையும்போது அவர்களைச் சென்னை எதிர்கொள்ளும் விதமும் – மிகச் சிலரே சென்னையை எதிர்கொள்ளுகிறார்கள் – அப்படியே மாறாமல் இருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் எல்லார் வாழ்க்கையையும் படி எடுத்த மாதிரி ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளாகிப் போகின்றன.

நான் சென்னைக்குள் முதன்முதலில் நுழைந்தபோது ஏற்கனவே சென்னையே உலகம் என்று தஞ்சமடைந்து போயிருந்த எனது நண்பர்களுடன் பெரும் சர்ச்சையில் இருப்பேன், எந்த ஹோட்டலில் உணவு சீப்பாகக் கிடைக்கும், எப்படி பஸ் மாறிப்போனால் டிக்கட் செலவு குறையும் என. அப்படிப்பட்ட எல்லாக் காட்சிகளும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 250 ரூபாய் சம்பளம் என்றானபின், காலைச் சாப்பாடு இவ்வளவு, மத்தியானச் சாப்பாடு இவ்வளவு, ராத்திரிக்கு இவ்வளவு என்றால், அதை 30- ஆல் பெருக்கி ஒரு மாததிற்காகும் செலவைக் கிட்டத்தட்ட தினமும் கணக்கிடுவேன். என் நண்பர்களும் அப்படியே. சண்முகமும் செய்கிறான். மத்தியத் தர மனப்பான்மையும் சண்முகமும் ஒருங்கே அமைந்து மிகச் சிறந்த கலவையாகிப் போகிறார்கள். அப்போதே சண்முகம் மிதவையாகிறான். அவன் மிதக்கிறான். சென்னையில், பின்பு கொஞ்சம் பாம்பேயில், பின்பு கொஞ்சம் காமத்தில், எப்போதும் பொருளாதாரச் சிக்கலில் மிதக்கிறான். இடையிடையே அவனது எண்ணங்கள் எங்கெங்கோ மிதக்கின்றன. எப்போதும் பொருளாதாரச் சிந்தனையை முன்வைத்தே அவன் எதையும் அணுகுகிறான். நிலைகொள்ள விழையும் எந்த ஒரு பட்டதாரியின் எண்ணமும், மத்தியத் தர வகுப்பில் இருந்து வந்திருந்தால், நிச்சயம் இப்படியே அமையும். இந்த நிதர்சணமே கதையாகிறது.

கல்லூரி முடித்துவிட்டு வாழ்க்கையைச் சந்திக்கப் புறப்படும் இளைஞர்களுக்கு முகத்தில் அடிப்பது இரண்டு விஷயங்கள். இடமாற்றம் தரும் பீதி மற்றும் உணவு. இந்த இரண்டிற்கும் தப்பும் நபர்கள் ஆகக் குறைவு. சண்முகம் இடமாற்றத்தை ஓரளவு தாங்கிக்கொண்டாலும் உணவுப் பழக்க மாற்றத்தை அவனால் சட்டெனப் பற்றிக்கொள்ள முடிவதில்லை. இட அசௌகரியங்களுள் முக்கியமான இடம் வகிக்கும் காலைக் கடன் கழிப்பது பற்றிய விவரணைகள் சண்முகம் மீதும் அதையொத்த இளைஞர்கள் மீதும் நிச்சயம் ஒரு பச்சாதாபத்தை வரவழைக்கின்றன. இதுபோன்று அனுபவப்பட்டவர்கள் இக்கதையும் இன்னும் ஒன்றிப்போவார்கள். இது அனுபவத்தின் எழுத்து. அனுபவத்தின் எழுத்து மட்டுமே இதைச் சாதிக்க இயலும்.

நாஞ்சில் நாடனின் நடை நேரனாது. அதிகம் சிக்கலில்லாமல் எதையும் போட்டுக் குழப்பாமல் நேரடியாகப் பேசுவது. கதையில் அவர் வடித்துக்கொண்ட பாத்திரங்கள் பாசாங்கில்லாமல் பேசுகின்றன. அதற்கு நாஞ்சில் நாடனின் சிக்கலற்ற மொழி பலமாக அமைந்திருக்கிறது. அதே போல் நாவல் நெடுகிலும் நாஞ்சில் நாடன் பதிவு செய்திருக்கும் சிலச் சில நுண்ணிய கவனிப்புகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. எல்லார் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்கும்போல என எண்ண வைக்கின்றன. சில வரிகள் மனித நினைப்பின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்கின்றன.

மத்தியத் தர வாழ்க்கையில் ஊறிப்போன சண்முகத்தின் ஈகோவும் சிறப்பாகக் காட்டப்படுகிறது. அது இரண்டு இடங்களில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியப்பாவின் மகனால் காரியம் கைகூடவில்லை என்ற பின்பு, பாம்பேவுக்குச் செல்லும் வழியில் அங்கு அவன் நடந்துகொள்ளும் விதத்தில் மத்தியத் தர ஈகோ திருப்திபடுத்தப்படுகிறது. மாய்ந்து மாய்ந்து கம்பெனிக்கு வேலை செய்தும் அவன் நிரந்தரம் செய்யப்படாமல் போகும்போது கண்ணீர் வர எத்தனிக்கும் நிலையிலும் டிக்மேன் (மேனேஜர்) தரும் சம்பள உயர்வை வேண்டாம் என்று சொல்லும்போது சண்முகம் தன் ஈகோவைத் திருப்தி படுத்திக்கொள்கிறான். வேலை கிடைக்காமல் கஷ்டப்படும்போதும், வேலை கிடைத்து நல்ல இடம், சாப்பாடு கிடைக்காத போதும், அவனுள் உறங்கிக்கிடந்த காமம், அல்லது அவனால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காமம், அன்னமாவினால் தலைதூக்க, ஆள் அரவமற்ற கடைகளில் ஆணுறை கேட்பதில் முடிகிறது.

கதையில் எதுவுமே முடிவதில்லை. எல்லாமே அப்படியே அதன் போக்கில் இயங்குகின்றன. ஆச்சார்யாவுக்கும் சண்முகத்தும் இருக்கும் பனிப்போர் அப்படியே இருக்கிறது. அதற்கான முடிவு ஒன்று வேண்டும் என்று ஆசிரியர் நினைக்காதது நிறைவளிக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையில் பல விஷயங்கள் அப்படியே இருக்கின்றன. ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதுபோலவே இக்கதையிலும். சண்முகம் கடைசியில் ஊருக்குத் திரும்புவதுகூட ஒரு தொடக்கம்தான். மிதக்கும் பொருளின் ஒவ்வொரு அலைச்சலும் தொடக்கம் மட்டுமே. அங்கு முடிவு இருப்பதில்லை.

கதையில் வரும் இடங்களைப் பற்றிய விவரிப்புகள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. நிஜமாக இப்படி அலைந்த ஒரு மனிதர் மட்டுமே இப்படிப்பட்ட விவரிப்புகளைத் தெளிவாகச் சொல்ல முடியும். அந்த வகையில் அனுபவமே இக்கதைக்கு முக்கிய வித்தாகிறது. கதையில் அங்கு அங்கு வைக்கப்படும் சமூக நீதி மீதான கேள்விகள், விமர்சனங்கள் (‘ஏலே நீ எடக்குடில்லா!’) கதையை மீறி வெளித் தெரியாவண்ணம் சொல்லப்படுவதாகத் தோன்றினாலும் ஆழமற்ற வகையிலும் மேம்போக்காகவும் வைக்கப்படுகிறது என்கிற எண்ணம் எழுகிறது. பிராமணர்கள் மீது ஒரு சமயம் வெறுப்பும் பிறிதொரு சமயம் ஞாயமும் (தன் அப்பாவின் செயலைக்கொண்டு) கற்பித்துக் கொள்ளுகிறான் சண்முகம். இது போன்ற இடங்களில் அது ஆசிரியரின் கருத்தோ என்கிற எண்ணம் தோன்றிக் கதையிலிருந்து ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. அதே போல் 1967-இல் வென்ற திமுகவின் மீது சண்முகம் வைக்கும் விமர்சனமாக வரும் கேள்வியும் முன் பின் தொடர்பில்லாமல் கேட்கப்படுகிறது, பின்பு மறக்கப்படுகிறது. திடீரென நுழைக்கப்பட்டது போலத் தோன்றும் அதில் ஆசிரியரின் கூற்றும் உள்ளது என்கிற எண்ணத்தைத் தவிர்க்கமுடிவதில்லை. பிராமணர் மீதான சண்முகம் கொண்டிருக்கும் எண்ணம் சில இடங்களில் வெளிப்படுகிறது. முக்கியமாக இரண்டு இடங்களில் – பிராமண மெஸ்களில் அவன் நடத்தப்படுவதாக உணரும் விதம்; பார்ப்பனர்களுக்கு மட்டுமே பாரம் தருவான் என்று நூலகத்தில் சேர விண்ணப்பம் வாங்க முயலும் நேரத்தில் அவனுக்குச் சொல்லப்படும்போது மயிர்க்குரு ஒன்றைப் பிய்ப்பது போல உணரும் இடம். ஆனால் அவனுக்கு வேலை வாங்கித் தர ஒரு ஐயரே உதவுகிறார். அதேபோல் திமுகவின் மீது அவன் விமர்சனம் செய்தாலும், நூலகத்தில் அவன் பாரம் தராமல் மறுக்கப்படும்போது (அதற்குச் சொல்லப்படும் காரணம் இன்னொரு சுவாரஸ்யம். எல்லாரையும் போலசாண்டில்யன் மட்டும் படித்து விட்டுப் போய்விடுவான் சண்முகம் என்று நூலகரே ஒரு முடிவுக்கு வருகிறார்!) ஒரு திமுககாரரே உதவுகிறார். இவை கதையில் நிகழும் இயல்பான விஷயங்கள். இவை பெரிதாகச் சொல்லப்படவில்லை. அதுவே அதன் அழகைக் கூட்டுகிறது. பெரிதாகச் சொல்லப்படும்போது அதில் பேலன்சிங் தொனி தங்கிப்போயிருந்திருக்கும். அதைத் தவிர்த்திருப்பது நாஞ்சில் நாடனின் திறமை. அதுமட்டுமில்லாமல் கொள்கைகளை மீறி எத்தனையோ சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. திடீர் திடீரென வரும் ஆண்குறி, பெண்குறி என்கிற வார்த்தைகள் பெரும்பாலும் கதையோடு ஒட்டாமல் சொல்லப்படுவதுபோல் தோன்றுகிறது. இரவுகளில் படுத்துறங்கும் சேக்காளிகள் காலையில் கலைந்து கிடக்கும் கோலத்தைச் சொல்லும் இடத்தில் மட்டும் இவ்வார்த்தைப் பிரயோகம் (ஆண்குறி என்கிற பிரயோகம்) வெற்றி பெறுவதாகத் தோன்றுகிறது. மற்ற இடங்களிலெல்லாம் அவை தேவையற்றே ஒலிக்கின்றன.

சண்முகம் பொருளாதாரத் தேவைகளிலும் உணவுத் தேவைகளிலும் காமம் சார்ந்த இச்சைகளிலும் முங்கிக் கிடந்தாலும் தமிழ் மன்றத்தை அவன் நாடுவதும், சாண்டில்யன் மட்டும் படிப்பான் என்று அவனை நூலகர் சொல்லும்போது அப்படியில்லை என்று சொல்வதும் அவனுள் ஒரு இலக்கியத் தாகம் இருப்பதை உணர்த்துகிறது. அது நாஞ்சில் நாடனின் தாகமாகவும் இருக்கலாம். அந்தச் சண்முகம்தான் பிற்காலத்தில் எழுத்தாளன் ஆனானோ என்னவோ. இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அநேகம். ஏனென்றால் காலத்தின் அலையில் எந்த மிதவையும் எப்போதும் எங்கேயும் நிற்பதில்லை. அவை எங்கே செல்லும் என்றும் சொல்லுவதற்கில்லை.

மிதவை, நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், 60.00 ரூபாய்.

Share

ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை

அந்திமழையில் ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு கடையில் வெளி ரங்கராஜன் சி.சு.செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ நாவலை வெளியிட்டு அதைப் பற்றிப் பேசினார். அன்றே ஜீவனாம்சம் வாங்கினேன்.

பிராமண விதவைப் பெண் சாவித்திரியின் உலகம் புத்தகம் முழுதும் சுழல்கிறது; நம்மைச் சுழன்றடிக்கிறது. சாவித்திரியின் எண்ண ஓட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதையில் சாவித்திரியின் நினைவுகள் எழுப்பும் கேள்விகள், கேவல்கள், ஆசைகள் அனைத்தும் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விதவைப் பெண்ணின் உலகம் தீவிரமாகவும் ஆழமாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சாவித்திரி சமையல் கூடத்தைத் தாண்டாதவள். அவளின் உலகம் என்பது வெளி நபர்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிற ஒன்று. ஒவ்வொரு வெளி நபர் வரும்போதும் சாவித்திரி நினைவுச் சுழலுக்குள் ஆள்வதும், அவர்களின் மூலம் அறிகிற விஷயங்களில் இருந்து நிகழ்கால உலகத்தை யூகத்தில் உருவாக்கிக்கொள்வதும் விதவைப் பெண்ணின் கட்டுப்பெட்டி வாழ்க்கையை வெளி எளிதாகத் தெரிவித்துவிடுகின்றன.

சாவித்திரியின் புகுந்த வீடு வாழ்க்கை அவளுக்குத் தந்திருந்த சுதந்திரம் மீதும் உரிமை மீதும் அவளுக்குப் பெரிய கர்வம் இருக்கிறது. அவள் சமைத்த உணவின் ருசியின் மீது நடத்தப்படும் இயல்பான விவாதங்கள் யார் வீட்டிலும் நிகழக்கூடியதே; அதை வைத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் மறைமுகமாகச் சொல்லிவிட முடிகிறது செல்லப்பாவிற்கு. சாவித்திரி எப்பேற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாள் என்று வாசிக்கிற வாசகரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நினைக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். செல்லப்பாவின் வரிகளில் பூடகம் இல்லை. ஆனால் அவை ஒரு மனிதனின் மன ஆழத்தில் இருந்து வெளிப்படும் சொற்பமான வார்த்தைகள் தரும் அதிக பட்ச விளைவை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை. நாவலில் வரும் மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் இத்தகைய வலிமையான உணர்வுகளால் பின்னப்பட்ட வசனங்களினால் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. மிகச் சில இடங்களில் மட்டுமே நேரடியாக இடம்பெறும் கணபதி, சாவித்திரியின் எண்ண ஓட்டங்களின் மூலமாகிறான். சாவித்திரியின் எண்ண ஓட்டங்கள் ஒன்று கணபதியிலிருந்து தொடங்குகின்றன; அல்லது கணபதியில் -நேரடியாகவோ மறைமுகமாகவோ – முடிகின்றன. கணபதி குழந்தை என்பதன் மூலம் சாவித்திரியின் எண்ணத்தில் அவளுக்குக் குழந்தை இல்லாதது எங்கோ புதைந்து எரிந்து கொண்டிருக்கிறதோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது. சாவித்திரி சுமங்கலியாய் இருந்தபோது அவளது பிறந்த வீட்டில் அண்ணனோடும் மன்னியோடும் அவளுக்கிருக்கிற சிநேகபாவம் வெளிப்படும் இடங்கள் மிகவும் கிண்டலும் கேலியுமாக வெளிப்பட்டுப் போகிறது. பின்னாளில் விதவையாக அவ்வீட்டில் இருக்க நேரிடுகிற சாவித்திரிக்கு அத்தகைய சுதந்திரங்கள் அப்போது தானாகவே விலகிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அது சாவித்திரியாக உருவாக்கிக்கொள்வதில்லை. அல்லது அவளது அண்ணனோ மன்னியோ உருவாக்கிவிடுவதில்லை. எந்தவொரு விதவைப் பெண்ணுக்கும் எளிதாக ஏற்பட்டுவிடுகிற தனிமை.

சாவித்திரியின் நினைவுகள் ஒரு பெண்ணின் மன ஆழங்களை வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதிலும் விதவைப் பெண்ணாகிவிட்ட சாவித்திரிக்குத் தன் நினைவும் தன் கற்பனையும் தன் யூகமும் மட்டுமே துணை என்றாகிவிடுகிறபோது, எப்போதோ நடந்த விஷயங்களை அசை போடுவதும், அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் யோசிப்பதும், ஒவ்வொரு முறையும் அதைப் புதிய கோணத்தில் அணுகுவதும் சில சமயம் சரியாக அதை அடைவதும், சில சமயம் தனக்குத் தோதான கருத்தை அடைந்துகொள்வதும் நாவல் முழுவதும் நிகழ்கிறது. சாவித்திரியின் அண்ணனோ மன்னியோ சாவித்திரியைத் துன்புறுத்துகிறவர்கள் அல்ல. ஆனால் ஒரு நிலையில் தன் தொடர்ச்சியான யோசனைகளின் மூலம் சாவித்திரி அப்படி ஒரு நிலைக்கு வாசகர்களைக் கொண்டு வந்து விடுகிறாள். ஏனென்றால் அவளது மனதில் புகுந்தவீடு தந்த சுதந்திரம் மீதும், சாவித்திரி என்கிற ஈகோவிற்கு அவ்வீடு தந்த மரியாதையின் மீதும் பெரிய இஷ்டமும் அதைப் பறிகொடுத்துவிட்ட அவலமும் கலந்து கிடக்கிறது. பிறந்த வீடு சிறையில்லை என்ற நிலை இருந்தபோதும் புகுந்த வீட்டின் பிரேமையும் கணபதியின் வாத்சல்யமும் அவளை அப்படி ஒரு நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

அண்ணன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் நினைக்குமாறே செய்துகொள்ளலாம் என்கிற சாவித்திரி, அதன் பின் அதைப் பின்தொடர்ந்து யோசிக்கும்போது அவளுக்கு அவளே முன்வைத்துக்கொள்ளும் கேள்விகள் வாசகனைப் பதட்டமடையச் செய்கின்றன. சாவித்திரி அவளது அடுத்த முறையில் அவள் மனத்திலிருக்கும் கேள்விகளை, ஆசைகளைத் தெளிவாக அண்ணன் முன் சொல்லிடவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் பதட்டமடைகிறான். மீண்டும் மீண்டும் சாவித்திரியின் நினைவுகளாலேயே சுழன்றடிக்கப்படும் வாசகன் ஒரு கட்டத்தில் சாவித்திரியாகி, அச்சுழலில் இருந்து வெளியேறத் துடிக்கிறான். சாவித்திரி சீக்கிரம் கணபதியைக் கைகளில் ஏந்திக்கொள்வது பற்றிய ஒரு பிம்பத்தை வாசகன் உருவாக்கிக்கொண்டு, அதை மனதில் வைத்தே அந்நாவலை வாசிக்கிறான். இப்படி ஒரு விஷயத்தை வாசகன் மனதில் சாவித்திரியின் நினைவுகள் மூலம் சொல்லி, சாவித்திரி பிறந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்கிற பதட்டத்தை உருவாக்குவதில் சி.சு.செல்லப்பா மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறார். ஒரு விதவைப் பெண்ணுக்கு, அதிலும் தன் வீடு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட பெண்ணுக்கு எண்ணங்களே துணை. எனவே இந்நாவலுக்கு நினைவோடை உத்தியைத் தவிர வேறு ஏதும் உசிதமில்லை என்ற முடிவெடுத்துவிட்ட தருணத்திலேயே செல்லப்பா பெரும்பாலான நாவலை உருவாக்கிவிட்டார் எனலாம்.

ஜீவனாம்சம் கேட்கலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு சாவித்திரியிடம் நேரடியான பதிலில்லை. பல சமயங்களில் புகுந்த வீட்டின் பெருமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்கள் சார்பாகவே யோசிக்கிறாள் சாவித்திரி. ஆனாலும் சாவித்திரியின் அண்ணனின் நேரடியான கேள்விகளுக்கு சாவித்திரியிடம் பதிலில்லை. அவளது பதில்கள் எல்லாமே அவள் மனதுள் பெரும் போராட்டமாக மட்டுமே நடந்து அங்கேயே முடிந்துவிடுகின்றன. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே ஒவ்வொரு வார்த்தையாக வெளிப்படத் தொடங்குகின்றன. வார்த்தைகள் என்றால் சாதாரண வார்த்தைகள் அல்ல. அவ்வார்த்தைகள் சாவித்திரியின் மாற்றத்தை, அவளது சிந்தனைகளின் கோணங்களை வெளிப்படுத்தும் ஆழமான வார்த்தைகள். இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லும் வசனங்களில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை முக்கியமாகப் பார்க்கவேண்டியது. சாவித்திரியின் நினைவோட்டம் பெரும்பாலும் ஏதோ ஒரு வார்த்தையிலிருந்தே தொடங்குகிறது. அவளது முடிவும், அவளது மாற்றமும் மிகப் பெரிய வரியிலிருக்கும் ஏதோ ஒரு வார்த்தையில் குடியிருக்கிறது. வார்த்தையின் பலத்தைப் புரிந்துகொண்ட சி.சு.செல்லப்பா, அவற்றை பிராமணக் குடும்பத்து நடவடிக்கைகளில் கையாளுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாவலில் தொடர்ச்சியாக வரும் நினைவுகள் ஒரு சமயத்தில் அலுப்புத் தட்ட தொடங்குகின்றன. ஆனால் இந்த அலுப்பே வாசகனின் பதட்டத்திற்குக் காரணமாகவும் அமைகிறது. எப்போது சாவித்திரி இந்த அலுப்பு நிறைந்த நினைவுகளாலான உலகத்திலிருந்து வெளியேறுவாள் என்று ஒவ்வொரு வாசகனும் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறான். சாவித்திரியின் மாமனார் இறந்துவிடுகிறபோது, அவளுக்கு அதில் அதிகம் தீட்டில்லை என்ற விஷயத்தைத் தொடர்ந்து சாவித்திரியின் நினைவுகள் செல்லுகிறது. அவளுக்கான உலகம் எது, அவளுக்கான வீடு எது என்பதை சாவித்திரி கண்டடைந்துவிடுகிறாள் என்று வாசகன் முடிவுக்கு வரும்போது, “துக்கத்துக்குப் போன காலோடு அங்கு தங்கவா?” என்று கேட்டு வாசகனைக் குழப்பத்துக்குள் ஆழ்த்துகிறார் சி.சு.செல்லப்பா. ஒரு நேரடியான திறந்த முடிவு ஏனில்லை என்ற கேள்வி சாவித்திரியோடு தொக்கி நிற்கிறது. அதுவரை சாவித்திரியின் நினைவுச்சுழலுக்குள் சுழன்றடித்த அலை வாசகன் மனதில் இடம் பெயர்ந்துகொள்கிறது.

ஒவ்வொரு அத்தியாய முடிவில் வரும் வார்த்தைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அடுத்த அத்தியாய தொடக்கத்தில் பயன்படுத்தப்படுவது, உணர்வு ரீதியான கடத்தலுக்கு உதவினாலும், அடுத்த அத்தியாயத் தொடக்கம் இப்படித்தானிருக்கும் என்ற முன்னேற்பாடு வாசகன் மனதில் ஏற்பட்டுவிடுவது, அத்தியாயத்தின் தொடக்கத்திற்கு, வலிந்து திணித்தது போன்ற செயற்கைத்தனத்தைத் தந்துவிடுகிறது. உணர்வுத் தொடர்ச்சியின் பலம் வார்த்தைத் தொடர்ச்சியில் சிதைந்துபோய்விடுகிறது போலத் தோன்றுகிறது.

விதவைப் பெண்ணின் உடல் இச்சை சார்ந்த பிரச்சினைகள் பற்றிச் சி.சு.செல்லப்பா எங்கேயும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. சாவித்திரியின் சிந்தனைகள் மீண்டும் மீண்டும் உறவு வட்டத்தில் பல்வேறு கோணங்களில் விரிகிறதேயன்றி, திருமணம் ஆன சில காலங்களில் கணவன் இறந்துவிட விதவையாகும் அவளின் உடல் சார்ந்த மோகம் பற்றி அவள் அதிகம் சிந்திப்பதில்லை. நாவலின் ஓட்டம் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சாவித்திரியின் எண்ணங்களுக்குள் காமம் என்கிற ஒன்றே இல்லாமல் போவது சாத்தியமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

நினைவு மடிப்புகளுள் உள்ளடைந்துகிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடே இந்நாவலை நடத்திச் செல்கிறது. ஒரு நிகழ்வின் எல்லாக் கோணங்களையும் படம்பிடிக்கிறது செல்லப்பாவின் எழுத்து. சொல்லப்படாத விஷயங்கள் குறித்துச் சிந்திக்க வைக்கும் கூர்மையான வசனங்கள் இந்நாவலின் பலம்.

[ஜீவனாம்சம் – சி.சு.செல்லப்பா – காலச்சுவடு – 70.00 ரூபாய்]

Share

(என்) நிழல் வெளிக் கதைகள் – புத்தகப் பார்வை

அந்திமழையில் என் நிழல் வெளிக் கதைகள் (புத்தகப் பார்வை) வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

பயத்தையும் பீதியையும் கிளப்பும் வாய்மொழிக் கதைகளை நான் அதிகம் கேட்கத் துவங்கியது கல்லுப்பட்டியில் வாழ்ந்த காலங்களில்தான். அதுவரை இருந்துவந்த சூழலுக்கும் (சேரன்மகாதேவி) கல்லுப்பட்டியின் சூழலுக்கும் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன் என்றே சொல்லவேண்டும். மூளைக்குப் பொருந்தாத, ஆனால் நினைத்த மாத்திரத்தில் பயத்தைக் கிளப்புகிற பல கதைகளை யாரேனும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மூன்றாவது வீட்டில் வசித்து வந்த குட்டி அண்ணன் இது போன்ற கதைகளைத் தினமும் இரவு அவிழ்த்துவிடுவார். “அவன் ராத்திரி பயந்துக்குவான்” என்கிற என் அம்மாவின் பேச்சை மீறி, நானும் விஜயகுமாரும் வாய் திறக்காமல் கேட்டுக்கொண்டிருப்போம். ஒரு நாள் குட்டி அண்ணனின் அப்பா சொன்னார். “ராத்திரி கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்துச்சு. சரி, எதுத்தாப்புல இருக்கிற ஓடைல உட்காருவோம்னு உட்காந்து ஒண்ணுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். ணங்குன்னு யாரோ மண்டைல அடிச்ச மாதிரி. தலை முச்சூடும் வலி. பின்னாடி திரும்பி பார்த்தேன். ஒரு பயலையும் காணலை. கொஞ்சம் மயக்கமா இருந்தது. தட்டி முட்டி வீட்டுக்கு வந்து அப்படியே தூங்கிட்டேன். காலேல எந்திரிச்சு தலையை பின்னாடி தடவிப் பாத்தா, அருதலி, ரத்தமா இருக்கு. ஒடம்பெல்லாம் ஆடிப்போச்சு. ஒண்ணுக்கு இருந்துட்டு விழுந்த இடத்துல போய் பாத்தேன். அங்க ஒரு ஓணான் செத்துக் கிடந்தது.” ஆர்வமும் பயமும் ஒரு சேர நான், “ஓணான் இருந்தா?” என்றேன். குட்டி அண்ணன் சட்டென்று, “கருப்பு அப்படி எதாவது உருவம் எடுத்துதான் வருமாம். இல்லப்பா?” என்றார். அப்போது எனக்கு வயது 14.

இரவு முழுவதும் உறக்கத்திலும் விழிப்பிலும் அந்தக் கதைகள் என்னைச் சுழன்றடிக்கும்.

பண்டாரங்குளம் என்றொரு குளம் உண்டு. காலைக் கடன்கள் கழிக்க கழிப்பறைகளெல்லாம் கிடையாது. போய்க்கொண்டிருக்கும்போது பன்றிகள் பின்னால் காத்து நிற்கும். சில பன்றிகள் சிறுவர்களை முட்டித் தள்ளக் கூடத் தயாராய் இருக்கும். அப்படி பண்டாரங்குளத்தின் வரப்புகளில் ஒதுங்கியிருந்த சமயத்தில் இன்னொரு கதை காதில் விழுந்தது. பண்டாரங்குளத்தில் ஒரு புளியமரம் உண்டு. அந்தப் புளியமரத்தில் ஆணி அடித்திருந்தார்கள். ‘ஊரெல்லாம் கருப்பு சுத்தி பொண்ணுங்களையும் புள்ளைங்களையும் புடிச்சுப் போடுதுன்னு சொல்லி ஆணில அடிச்சு கட்டி வெச்சிட்டான் மந்திரவாதி’ என்ற கதை அது. அதை நம்பாமல் அந்த ஆணியைத் தொட்டவன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தான் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது. அதன் பின்பு அந்தப் புளிய மரத்தைக் கடக்கும்போதெல்லாம் என் கண் அந்த ஆணியிலேயே குத்தி நிற்கும். சில நாள்கள் கழித்துப் பார்த்தபோது அந்த ஆணியைக் காணவில்லை. நான் அந்த வயதில், அந்த ஆணியைப் பிடுங்கி எறிந்த வீரனைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

கல்லுப்பட்டிக்குப் பக்கத்து ஊர் காரைக்கேணி. கல்லுப்பட்டியைக் காட்டிலும் இது மாதிரியான பேய்க்கதைகள் உலவும் பட்டிக்காடு. அங்குப் படுகளம் என்றொரு விழா நடக்கும். அந்த விழாவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். கண்ணாக்குட்டி எங்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்றான். அங்கிருந்த இடங்கள் என்னவோ ஒன்றிரண்டுதான். ஆனால் அவற்றையெல்லாம் விடாமல் துரத்தித் துரத்திக் காட்டினான் கண்ணாக்குட்டி. இலைகளே இல்லாத முள்மரங்கள் நிறைந்த காடு ஒன்று இப்போதும் என் மனதில் நிறைந்து கிடக்கிறது. பாரதிராஜா ஏன் இன்னும் அந்த முள்மரங்களுக்குக் கீழே ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை என்பது எனது அந்நாளைய கேள்வியாக இருந்தது. கண்ணாக்குட்டி பாதாள பைரவி என்றொரு அம்மனைக் காண்பிப்பதாகச் சொன்னான். அதைக் காண்பிக்கப் போவதற்கு முன்பாகப் பாதாள பைரவியைப் பற்றிப் பெரிய பெரிய கதைகளைச் சொன்னான். ஒரு காலத்தில் அந்த அம்மன் சாலையை மறித்த படி படுத்துக் கிடந்தாள். இதனால் காரைக்கேணியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். அந்த அம்மனை அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றிப் பிரதிஷ்டை செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லாரும் பயந்தார்கள். ஒரே ஒரு பூசாரி மட்டும் தைரியத்துடன் அந்த அம்மனின் இடத்தைச் சாலையை விட்டுக் கண்மாய்க்கு நடுவில் மாற்றினார். அம்மனையும் கண்மாயின் நடுவே அமர்த்தினார். மறுநாள் காலை அந்தப் பூசாரி இரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தாராம். அதுமட்டுமல்லாமல் வேறு சில கதைகளும் சொன்னான். அந்த அம்மன் மிகவும் உக்கிரமானது என்றும் அவள் முன் நின்று பொய் சொன்னாலே மறுநாள் சாவு உறுதி என்றும் கண்ணாக்குட்டி சொல்ல, அந்த அம்மனைப் பார்த்துத்தான் ஆகவேண்டுமா என்கிற பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ ஒரு வெளிநாட்டுக்காரன் ஊர்மக்கள் சொல்வதை மதிக்காமல் அந்த அம்மனைப் புகைப்படம் பிடித்ததாகவும் ஆனால் அன்றே அவன் ஒரு விபத்தில் இறந்துபோனதாகவும் சொன்னான். மிகுந்த பயத்துடன் அந்த அம்மனைப் பார்க்கப்போனேன். சிமிண்ட்டில் செதுக்கப்பட்ட சிலையுடன் பலவித வண்ணங்களைக் கொண்டு பாதாள பைரவி நீரற்ற கண்மாயில் கையையும் காலையும் விரித்துப் படுத்துக் கிடந்தாள். அதன் காலோரத்தில் ஒரு புகைப்படம் ஒன்று கிடந்தது. யாரோ ஒருவனின் புகைப்படம் அது. அதைப் பற்றிக் கண்ணாக்குட்டியிடம் கேட்கவில்லை. நான் கேட்டு, அவன் இன்னொரு புதுக்கதையை ஆரம்பித்தால் அதைக் கேட்கிற தைரியம் எனக்கு இல்லை. மறுநாள் மாமாவிடம் (கண்ணாக்குட்டியின் அப்பா) பேசிக்கொண்டிருந்தபோது கண்ணாக்குட்டி சொன்ன கதையெல்லாம் பொய் என்றார்! அவர் ஒரு வரலாற்றைச் சொன்னார். அக்காலத்தில் ஏகாளி (வண்ணான்) வர்ணத்தைச் சேர்ந்தவர் அந்த அம்மனை கண்மாயில் வைத்தாராம். அப்படிக் கண்மாயில் வைத்துத் தன்னை வழிபடவேண்டுமென்று அந்த ஏகாளியைப் பாதாள பைரவியே சொன்னாளாம். கண்மாயில் துவைத்துக்கொண்டு, தன்னை வழிபட்டுக்கொண்டிருக்குமாறு பாதாள பைரவி அந்த ஏகாளியைப் பணித்தாளாம். அவரும் அது போலவே செய்துவந்தார். வருடத்திற்கு ஒரு முறை பாதாள பைரவிக்கு விழா எடுக்க நினைத்த அவர், நிறையப் பேருக்குத் தேவையான உணவைச் சமைத்து பிற சாதியைச் சேர்ந்த (தேவர்) பெரியவர்களைச் சாப்பிட அழைத்தாராம். அதை ஏற்க மறுத்த அச்சாதியினர் அவர் உணவை உண்ண வரவில்லை. மனம் சோர்ந்து போன ஏகாளி, அந்த உணவையெல்லாம் பாதாள பைரவியின் முன்னே ஒரு குழியைத் தோண்டி அதிலிட்டு மூடி வைத்துவிட்டார். மறு வருடம் மீண்டும் விழா நாளில் அக்குழியைப் பறித்துப் பார்த்தபோது, அந்த உணவு கெடாமல், மண் விழாமல் அப்படியே இருந்ததாம். இதைப் பார்த்துப் பாதாள பைரவியின் சக்தியை உணர்ந்து கொண்டு அனைவரும் அவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்களாம். சாலையை அம்மன் மறித்தது எல்லாம் திருநெல்வேலி பக்கத்தில் வேறொரு அம்மன் (வண்டி மறிச்ச அம்மன்) என்றும் அக்கதையைப் பாதாள பைரவிக்குப் பொருத்தி அளந்துவிட்டான் கண்ணாக்குட்டி என்றும் மாமா விளக்கினார்.

மறுநாள் படுகளம் தொடங்கியது. படுகளத்தின் வரலாற்றை நினைவில் இருந்து சொல்கிறேன். தென்னமனூர் மற்றும் கவசக்கோட்டை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. கவசக்கோட்டையில் இருந்து ஒரு வள்ளத்தான் குருவி தென்னமனூருக்கு வந்துவிட்டது. தென்னமனூரைச் சேர்ந்த ராஜா அந்தக் குருவியைத் தர மறுத்துவிட்டான். கவசக்கோட்டை ராஜா அந்தக் குருவி தனக்குச் சொந்தமானது என்றும் அது தனக்கு வேண்டுமென்றும் கேட்டான். ஆனால் அதை மறுத்த தென்னமனூர் ராஜா, வேண்டுமென்றால் நாள் குறித்துச் சண்டையிட்டு, வென்றால் அதைக் கொண்டு போ என்று சொல்லிவிட்டானாம். நாள் குறிக்கப்பட்டது. தென்னமனூருக்கும் கவசக்கோட்டைக்கும் இடையில் காரைக்கேணியில் சண்டை. தென்னமனூர் ராஜா கவசக்கோட்டை ராஜாவுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். சண்டைக்கு வருபவர்கள் இரு தரப்பிலும் ஒருவர் ஒருவராக மட்டுமே வரவேண்டும் என்பதே அது. கவசக்கோட்டை ராஜா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். அதை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆளாக சண்டைக்கு அனுப்பினான். ஆனால் தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக ஆளை அனுப்பி, கவசக்கோட்டை சண்டைக்காரர்களைத் தோற்கடித்துக் கொன்றுவிட்டான். சென்றவர்கள் யாருமே திரும்பவில்லை என்பதை நினைத்த கவசக்கோட்டை ராஜா தங்களின் பரம்பரைச் சாமிகளைக் காவலுக்கு வைத்தான். தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக அனுப்பிக் கொன்று விட்டுப் போனது தெரியாமல் கசவக்கோட்டை ராஜா சாமிகளை வேண்டிக்கொண்டான். ஒரு சேவலை அறுத்து ஒரு ஈட்டியில் குத்தி நட்டான். ஒரு ஆட்டின் குடலை உருவிவிட்டு, அந்த ஆட்டைத் தன் தலையில் மாலையாகப் போட்டுக்கொண்டாள் ஒரு கிழவி. அந்தச் சேவலும் அந்த ஆடும் சாகாமல் உயிரோடு இருந்தன. அவை சாமிகளின் சக்தி. அவற்றை வணங்கிவிட்டுக் தானே தனியாகச் சண்டைக்குச் சென்றான் கவசக்கோட்டை ராஜா. அவனும் சதிக்குப் பலியானான். அவன் பலியான போது, கழுத்தறுபட்ட சேவலும், குடலற்ற ஆடும் உயிர் துறந்தன. அதைப் பார்த்து அவர்களது ராஜா தோற்றுப்போனதை அவ்வூர் மக்கள் அறிந்துகொண்டார்களாம். இக்கதை அப்படியே படுகளத்தில் நடத்திக் காட்டப்பட்டது. ‘சேவல் ஈட்டியில உயிரோட இருக்கும்டி’ எனச் சொல்லி என்னை அசத்தி வைத்திருந்தான் கண்ணாக்குட்டி. ஆட்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஒரு கிழவி சாமியாடிக்கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணி வாக்கில் அச்சேவல் மூன்று முறை தலையைத் தூக்கி உயிரை விட்டதைத் தூரத்திலிருந்து காண்பித்தான் கண்ணாக்குட்டி. முதல் நாள் இரவில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில், தென்னமனூர்க்காரர்களாக வேடமிட்டவர்கள் ஐந்து பேரும் கவசக்கோட்டை ராஜாவாக வேடமிட்ட ஒருவரும் சேவலின் பச்சை இரத்தத்தையும் ஆட்டு இரத்தத்தையும் குடித்துக்கொண்டு கூச்சலிட்டு ஓடிவந்தார்கள். நான் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரோரத்தில் வெளியில் திரையிடப்பட்ட ஆண்டவன் கட்டளையையும் பூம்புகாரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜெயமோகனின் நிழல் வெளிக் கதைகள் இப்படி காலம் காலமாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கதைகளைப் பிடித்துக்கொண்டுள்ளது. இப்படி மரபு ரீதியான கதைகளையும் வாய்மொழிக் கதைகளையும் அறிவுக்கு ஒவ்வாதவை என விலக்கி வைத்துவிடலாம். ஆனால் அவை தரும் பழக்க ரீதியான தொடர்ச்சியையும் அக்கதைகளில் நிலவும் நிஜம் கலந்த கற்பனைகளையும் இரசிக்கத் தொடங்கினோமானால் மூதாதயர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்த்த கிளர்ச்சி உண்டாவதை உணரலாம். என்றோ இளம்பருவத்தில் கன்னி கழியாமல் செத்துப் போன ஒரு பெண்ணை இன்னும் கன்னித்தெய்வமாக வழிபடும் குடும்பத்தின் வேர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருவதைப் புரிந்துகொள்ளலாம். உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில் இல்லை, அப்படியே இருந்தாலும், அவை தேவையுமில்லை. சில விஷயங்கள் மனதைப் பொருத்தும் உணர்ச்சி சார்ந்தும் சந்ததிகளுக்குள்ளே பரிமாறிக்கொள்ளப்பட்டு வேர் பிடித்துக்கொள்கின்றன. ஜெயமோகனின் நிழல்வெளிக் கதைகளும் இத்தகையப் பரம்பரை ரீதியிலான கதைகளே.

வடிவத்தைப் பொருத்தவரையில் அனைத்துக் கதைகளும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிறுகதையின் சிறப்பான உயரங்களைத் தொட்டவர்களுள் ஒருவர் ஜெயமோகன். அதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. நிழல்வெளிக் கதைகளும் ஜெயமோகனுக்குரிய தனித்துவமிக்க மொழியில் சிறப்பான வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. உயிர்மை இதழில் வந்த கதைகளும் வேறு சில கதைகளும் இச்சிறுகதைத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இக்கதைகளில் மிகச் சிறப்பான கதைகளாக நான் கருதுவன பாதைகள், ஏழுநிலைப் பந்தல், தம்பி மற்றும் இரண்டாவது பெண். பாதைகள் கதையில் ஜெயமோகனின் எழுத்து வன்மை முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு அறை திறக்கும் விதமும் மனதை மயக்கும், வசீகரிக்கும், குழப்பும் ஓவியங்களின் விவரிப்பும் ஒரு தேர்ந்த எழுத்தானுக்கு மட்டுமே உரித்தானவை. தம்பி கதையின் உயிர்நாடி ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விஷயம்தான். என்றாலும் கதை சொல்லப்படும் நேர்த்தியும், ‘ம்ம்ம்பீ’யின் பிம்பமும் நம்முள் புகுந்துகொள்ள, சரவணன் இறப்பதை நேரில் காண்பது போன்ற எண்ணம் உண்டாகிவிடுகிறது. ‘ஏழு நிலைப் பந்தலும்’, ‘இரண்டாவது பெண்ணும்’ வசீகரமான வட்டார வழக்குடன் நெஞ்சில் அறைந்து பீதியை உண்டாக்குகின்றன. குறிப்பாக ‘இரண்டாவது பெண்’ கதையில் வரும் விவரிப்புகள், நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை மறக்கச் செய்து, இருளில் உறைந்துபோன நிலையை உண்டாக்கிவிடுகின்றன. ஐந்தாவது நபர் கதையில் வரும் தர்க்கங்களைக் கொண்டு கதையின் முடிவை வாசித்தோமானால் அக்கதை வேறொரு இடத்தில் திறப்புக் கொள்கிறது. பிளாஞ்செட்டில் இருக்கும் நான்கு நண்பர்களின் ஒட்டு மொத்த மனநிலை சேர்ந்து உருவாக்கும் எண்ணங்கள் ஐந்தாவது நபராக பிளாஞ்செட்டில் வேலை செய்கிறது என்கிற தர்க்கத்தை ஏற்றோமானால், மாஸ்டர் சரசுவைக் கொன்றார் என்பதை அந்த நான்கு பேரில் ஒருவரோ அல்லது நான்கு பேருமோ (மாஸ்டர் உட்பட) சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்ற வகையில் யோசிக்கத் தொடங்கலாம். மற்றக் கதைகளும் தத்தம் அளவில் சிறப்பாகவே வந்துள்ளன.

அயர்ச்சி தருகிற விஷயம் என்று பார்த்தால் எல்லாக் கதைகளும் ஒரே போல் தொடங்குவதும் ஒரே போல் முடிவதும் என்பதைக் கூறலாம். பெரும்பாலும் எல்லாக் கதைகளிலிலும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்குகிறார்கள். இப்படியில்லாமல் நேரடியான நிகழ்கதைகளைப் போலவே வடிவமைத்திருக்கமுடியும். இவை சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதால் ஜெயமோகன் இப்படி அமைத்தாரா என்பது தெரியவில்லை. மிகச் சிறப்பாகச் சொல்லப்படும் இரண்டாவது பெண் சிறுகதை கடைசியில் ஒரு திடும் திருப்பத்தைக் கொண்டுள்ளது போல் தோன்றுவது யதார்த்தமாக – இவை எல்லாமே யதார்த்தத்தை மீறின கதைகள் என்றாலும் – இல்லை.

கதைகளின் முழுக்க வரும் யட்சிகள் நம்மைத் தம் பிடியிலிருந்து விட நேரமாகிறது.

நிழல்வெளிக் கதைகள், உயிர்மை பதிப்பகம், விலை 60.00 INR.

Share

பிரதாப முதலியார் சரித்திரம் – ஒரு பார்வை

ஒரு விருந்தாளிப் பதிவாக பிரதாப முதலியார் சரித்திரம் புத்தகம் பற்றிய எனது விமர்சனம் தேசிகனின் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. அதை வலைப்பதிந்த தேசிகனுக்கு நன்றி. எப்போதும் அதிக நட்சத்திரக் குத்துகளையும் ஓரளவு கணிசமான பின்னூட்டங்களையும் பெறும் தேசிகன் இனிமேல் என் பதிவை ஏற்றச் சம்மதிக்கமாட்டார் என்றே நம்புகிறேன். 🙂

என் விமர்சனத்தைப் படிக்க விரும்புகிறவர்கள் சொடுக்க வேண்டிய சுட்டி: http://desikann.blogspot.com/2005/05/blog-post_26.html

நன்றி

தமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ஒருவாறு கற்பனை கொண்டு, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பெரும் கஷ்டமாய் இருக்கும் என நினைத்திருந்தேன். புத்தகம் கையில் கிடைத்து அதை வாசிக்கத் துவங்கிய பின்பு, நான் செய்து வைத்திருந்த கற்பனை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது. எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே பெரும் எழுச்சி தருவதாக அமைந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் என் மூதாதையர் எனக்கு விட்டுச் சென்ற தனிப்பட்ட கடிதத்தைப் படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழின் நவீனம் இன்னமும் சரளமாய் வாசிக்கக்கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்கிற எண்ணம் தந்த கிளர்ச்சியே இந்த நூலின் வாசிப்பனுவபம். தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்ததின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் கொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி ஆலோசிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு ஆவணமாகிறது.

பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள். இங்கே பிரதாப முதலியாரின் இளமையும் அவரின் மூதாதையர்களின் குறிப்பும், பிரதாப முதலியாரின் கல்வியும் விவரிக்கப்படுகிறது. கூடவே ஞானாம்பாளின் வாழ்வும் இதே வகையில் விவரிக்கப்பட, ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலியாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு சிறு தடங்கலும், அதைத் தெய்வம் தாமே களைந்து வைப்பது போன்ற ஓர் உரைநடை உத்தியும் அதைத் தொடர்ந்து திருமணமும் என நகரும் கதை, ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை அவர்கள் திறம்பட – தெய்வத்தின் துணையுடன் – தீர்த்துக்கொண்டு, ஞானாம்பாள் எப்படிச் சிறந்த “பத்தரை மாத்துத் தங்கமாக” விளங்குகிறாள் என்பதுடன் “சுப மங்களமாக” முடிவடைகிறது. இக்கதையை வாசிப்பவர்கள் எல்லாருமே வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார் ஆசிரியர்! கதையின் எல்லா நிகழ்வுகளுமே தெய்வத்தின் துணையுடனோ அதிர்ஷ்டத்தின் துணையுடனோ, பழங்காலத் திரைப்படங்களில் வருவது போல, பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் தொடர்ந்து தப்பித்துக்கொண்டும் வென்று கொண்டும் இருப்பது போல (மிகச் சரியாகச் சொல்வதானால் ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில் வருவது போல பொன்னியில் செல்வனிலும் பழங்காலத் திரைப்படங்களிலும்’ என்று மாற்றிச் சொல்லவேண்டும்) கதாநாயகனுக்கும் நாயகிக்கும் சார்பாகவும் அவர்கள் வெல்லும் வண்ணமும் அமைகின்றன. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் வென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெரும் மனக்கிலேசமும் சோதனையும் நேரும்; சில அத்தியாங்களில் அதை அவர்கள் தாண்டியிருப்பார்கள். அதுமட்டுமன்றி கதாநாயகனைச் சேர்ந்தவர்களும் வென்றுகொண்டே இருக்கிறார்கள். அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது. எதிர்நாயகன் என்கிற தனிப்பட்ட ஒரு பாத்திரம் இல்லை. தேவையான இடங்களில் அவ்வப்போது எதிர்நாயகர்கள் தோன்றி, கதாநாயகன் வெல்லும்போது, அவனை வாழ்த்திவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். இந்த உரைநடை நவீனத்தை “கதை” என்றே சொல்லவேண்டும். மாறி மாறிக் கதை சொல்கிறார்கள். பஞ்ச தந்திரக் கதைகளில் வருவது போல, கதைக்குள் கதையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஞானாம்பாள் இரண்டு அத்தியாங்கள் முழுவதும் அவளுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளின் கதைகளைச் சொல்கிறாள். பிரதாப முதலியார் ஒரு அத்தியாயம் முழுவதும் அவருக்குத் தெரிந்த கதைகளை, துணுக்குச் செய்திகளைச் சொல்கிறார். பிரதாப முதலியாரின் தாயார், மஞ்சள் மகிமை கொண்ட பெண்குலச் சிரோன்மணிகளின் கதைகளை வாயாரச் சொல்கிறார். இதை விட்டால் இன்னும் சில அத்தியாங்களில் துணுக்குகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். துணுக்குகள் இதைப் பற்றித்தான் என்றில்லை. ஞானாம்பாள் அரசியாக, அதிர்ஷ்டவசமாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ஒரு அரசனின் கடமைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார். அப்போது அவர் லஞ்சம் பற்றியும் வழக்கறிஞர்களின் நேர்மையின்மை பற்றியும் தமிழ் புறக்கணிக்கப்படுவது பற்றியும் விடாது பேசுகிறார். 1879-இல் வந்த கதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். சற்று மலைப்பாகத்தான் இருந்தது.

பதிவிரதையைப் பாராட்டும் முகமான கதை என்கிற ஆதார விஷயத்தையும் முழுக்க முழுக்க புனைவு என்கிற ஆதார விஷயத்தையும் கொஞ்சம் புறந்தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படத் தொடங்கும். அதனால் இது தமிழின் மிகச்சிறந்த உரைநடை ஆவணங்களுள் ஒன்றாகிறது.

முதலில் இதன் நடையைச் சொல்லவேண்டும். இந்த உரைநடையில் ஒரு வரி எளிதில் முடிவடையாததாக இருக்கிறது. சில சமயம் ஒரு வரி ஒரு பத்தியாகிறது. அவள் சொன்னாள் என்று முடிந்துவிடவேண்டிய இடம் அவள் சொன்னபோது என்று தொடர்கிறது. இது அக்காலத்தின் உரையின் வடிவம். உரைநடை மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது. சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் கலக்காத வரிகள் குறைவு என்கிற அளவிற்குத் தொடர்ந்து சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் உரைநடையில் வந்துகொண்டேயிருக்கின்றன. தமிழ் வார்த்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறு பத்திரிகைகளும் தமிழார்வலர்களும் எவ்வளவு தூரம் வென்றிருக்கிறார்கள் என்பதை அறிய இந்நூலை ஒப்புநோக்கலாம். இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சமிஸ்கிருத வார்த்தைகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. சில வார்த்தைகளை பாரதியாரின் கட்டுரைகளில் காணலாம். அவையன்றி, புதியதாக, தமிழோடு சேர்த்து எழுதியும் பேசியும் வரப்பட்ட பல வார்த்தைகளை இந்நாவலில் காணலாம். இவையன்றி, புழக்கத்திலிருந்து அருகிவிட்ட நிறையத் தமிழ்வார்த்தைகளையும் காணலாம்.

அடுத்ததாக கவனிக்கவேண்டியது ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு. வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு சில இடங்களில் நாவலாசிரியரின் திறமை பளிச்சிடுகிறது. துணுக்குகள் பலவற்றை ஆசிரியர் ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழின் முதல் உரைநடை நவீனம் என்ற அறிவிப்போடு அவர் இதைச் செய்திருப்பதால், அவை கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற போதும், அவற்றை ஆசிரியர் எழுதியிருப்பது, ஓர் ஆவணம் என்கிற வகையில், அறிந்துகொள்ள ஆர்வமூட்டுவதாகவும், இன்னமும் இந்தக் கதைகளை மையமாக வைத்துப் பட்டிமன்றங்களிலும் திரைப்படங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறியக்கூடியதாகவும் உள்ளது. வாய்வழிக் கதைகள் அப்போது முதல் இப்போது வரை விடாமல் கடத்தப்பட்டு வருகின்றன. நாம் இப்போதும் சொல்லிச் சிரித்துக்கொள்ளக்கூடிய துணுக்குகளை இந்நாவலில் காணலாம். நாம் இன்றும் கேட்டுச் சிரிக்கும் கதைகள், நம் முன்னோர்களால் அன்றும் சிலாகிக்கப்பட்டது என்கிற உணர்வு, முதலில் நான் சொன்னதுபோல பேரெழுச்சித் தருவதாய் இருந்தது. இந்த உணர்வே இந்த நாவலை நான் படிக்கும்போது தொடர்ந்து வந்தது, மையச் சரடாக. அவற்றில் சில துணுக்குகள் இன்றையத் திரைப்படங்களிலும் காணக் கிடைக்கின்றன! ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்கள் 1879-இல்தானே இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்!

நாவல் வாசிப்பவர்கள் யாரும் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டு விடக்கூடாது என்பதை ஆதர்சமாக வைத்துக் கதை எழுதியிருக்கிறார் வேதநாயகம் பிள்ளை. கதையின் தொடர்ச்சியை விடாமல் போதிக்கிறார். ஒன்றிரண்டு அத்தியாங்கள் விட்டுபோனாலும் அடுத்த சில அத்தியாங்களில் விட்டுப் போன இடத்திலிருந்து தொடர்ந்து வந்து, கதையின் நகரும் சரடோடு இணைத்துக்கொள்கிறார். விட்டுப் போன சங்கிலிகளை விடாமல் சேர்த்து இணைப்பது போல. இதே உத்தியினை பொன்னியின் செல்வனிலும் காணலாம். வாசகர் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கியக் குறிக்கோளாக இருப்பவர்கள் செய்யும் விஷயமிது. மேலும் முதல் உரைநடை நவீனம் என்பதால் அவர் அதிகச் சிரத்தை எடுத்து இதைச் செய்தது புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலின் சில இடங்கள் சிறந்த சிறுவர் கதைக்கான களமாக விளங்குகின்றன. பொன்னியின் செல்வனை நான் சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லுவேன். ஒருவகையில் பிரதாம முதலியார் சரித்திரம் கூட அப்படித்தான். எல்லாவற்றையும் வலிந்து வந்து ஊட்டி, எளிதாக்கிவிடும் உத்தி அப்படிப்பட்ட எண்ணம் அளித்திருக்கலாம். சில கதைகளும் துணுக்குகளும் சில இடங்களும் சிறுவர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்த முடியக்கூடியவை. ஒரு வீரன் பிரஸ்தாபிக்கும் துணுக்கு ஒன்று, “தலை இல்லாததால் காலை மட்டும் வெட்ட முடிந்தது” என்கிற ஹாஸ்யத்தைப் பேசுகிறது. விக்கிரமபுரியில் பிரதாப முதலியார் சிக்கிக்கொள்ள, அங்கிருக்கும் மக்கள் பிரதாப முதலியாரின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், சிறுவர் ஹாஸ்ய நூலுக்கானவை. அவை தீர்க்கப்படும் முறைகள், சிறுவர் விவேக நூலுக்கானவை.

நாவலில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் லஞ்சம் பற்றிய அத்தியாயங்கள். ஞானாம்பாள் அரசனாக (ஆம்! அரசியாக அல்ல. அரசனாக. அவள் ஆண் வேடம் பூண்டு அரசாள்கிறாள்!) ஆளும்போது செய்யும் உபதேசங்களும், தான் செய்யவேண்டியதாக அவள் கொள்ளும் ஆக்ஞைகளும். அதில் முக்கியமாக அவள் லஞ்சம் பற்றிப் பேசுகிறாள். இதைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நாம் இன்னும் 1879-இல்தான் இருக்கிறோம். அக்காலத்திலேயே “இக்காலத்தில் கலி முத்திப் போச்சு” என்று சலித்துக்கொள்ளும் வசனங்கள் பற்றிச் சிரித்துக்கொள்வேன். அது இந்நாவலிலும் தவறாமல் இடம்பெறுகிறது. இன்னொரு விஷயம் வக்கீல்களின் தொழில் நேர்மையைப் பற்றியது. அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஞானாம்பாள் “பிரஸ்தாபிக்கிறாள்.” இவையும் எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே இக்காலத்திற்குப் பொருந்திவருகிறது!

நாவலில் ஞானாம்பாள் தமிழ் பற்றிப் பேசுகிறாள். இரண்டு வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடும் முறையை விமர்சிக்கும்போது, தமிழின் மேன்மைகளும் வழக்கொழிந்துபோன சமிஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகளை விட தமிழ் எவ்விதம் சிறப்பு வாய்ந்தது என்பதையும் பேசுகிறாள். இதை ஆசிரியரின் தமிழுணர்வாய்க் காணலாம். ஆனால் அதை அவரது நடையில் காண இயலவில்லை. வெகு இயல்பாக வக்கீல் என்றும் பீசு என்றும் இன்ன பிற ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். மேலும் “அவைகள்” என்றும் “மெள்ள மெள்ள” என்றும் (மட்டுமே) எழுதியிருக்கிறார். (சுஜாதா கவனிக்கவேண்டும்.)

சர்வ சாதாரணமாக நாவலெங்கும் துலுக்கன் என்றும் சக்கிலியன் என்றும் கையாளப்பட்டிருக்கிறது. வண்ணான், அம்பட்டன், தோட்டி போன்றவர்களுக்கு ஆசனம் கொடுப்பது ஏற்புடையதல்ல என்கிற கருத்தும் ஓரிடத்தில் வருகிறது.

1879-இல் ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு எவ்விதம் இருந்தது என்பதை இந்நாவல் கொண்டு அறியமுடியவில்லை. இந்நாவல் நானறிந்த வரையில், ஆங்கிலேயர்களின் அடி போற்றுவதாகவே அமைந்துள்ளது. நேரடியான புகழ்ச்சி வைக்கப்படவில்லை எனினும், சில நிகழ்ச்சிகள் மூலம், அவர்கள் பரிபாலனை செய்வதில் தவறில்லை என்றே ஆசிரியர் நினைக்கிறார் என்று எண்ண வழிவகுக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வைக்கப்படாததால் இப்படி எடுத்துக்கொள்ளத் தோன்றியதோ என்னவோ. ஆங்கிலேய நீதிமான்களின் விசாரனையின் போதோ வேறு சில ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலோ ஆசிரியர் தம் கருத்தையோ அல்லது வேறொரு கதாபாத்திரத்தின் மூலம் எதிர்க்கருத்தையோ வைக்கவேயில்லை.

தமிழின் முதல் உரைநடை நவீனம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் “சுயசரிதம்” போல தன் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.

தேவையான இடங்களில் வேதநாயகம்பிள்ளை விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆசிரியர் கிறிஸ்துவர் என்பதால் இருக்கலாம். ஆனால் கதையின் வேறெந்த இடங்களிலும் இதை இனம் காண முடியவில்லை. மதம் பற்றிய மேன்மையான கருத்துகள் ஒவ்வொரு இடங்களில் இடம் பெற்றாலும், எதிர்மறைக் கருத்துகளே இல்லை.

நமது கலாசாரம் என்பது பெண்களின் பத்தினித் தன்மையும், கணவனுக்கும் குடும்பத்திற்கும் சேவகம் செய்வதும் என்று சொல்லும் நூல், ஒரு பெண் அரசனாகவும் நின்று சாதிக்க முடியும் என்றும் சொல்கிறது. சில மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், விதவை மறுமணத்திற்கு ஆதரவான ஒரு கருத்தும் சோதிடம் பொய் என்பதான விவாதமும் கதையினூடே வந்து போகின்றன.

யதார்த்த கதைகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதையை, ஆம்!, “கதையை” வாசிக்க விரும்புகிறவர்கள் வாசிக்கலாம். நான் இந்நாவலை வாசிப்பதற்கு முன்பு, எனக்கு சென்டிமென்டலாக இருந்த எண்ணம், தமிழின் முதல் உரைநடை புனைவை வாசித்தே ஆகவேண்டும் என்பதே. இதே எண்ணமுள்ளவர்கள் நிச்சயம் வாசிக்கலாம்.

Share