Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து

இன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று? அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது? மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.

* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.

* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள். 

* படேலிடம் வாக்குக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா? சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன? 

* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன? கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா? அதிகாரத்தைச் செலுத்தத்தானே!

* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.

* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம்? அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்? இந்த உறுதிமொழியைப் பெறத்தான்.

இத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.

இதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.

Share

ஞாநியும் சாதியும் (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தொடர்பாக)

ஞாநி போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் இது:

https://www.facebook.com/gnani.sankaran/posts/10200867431320770

//இன்றைய உடனடித் தேவை சுயசாதி மறுப்பாள்ர்களே. " நான் பிறப்பால் வன்னியன் என்றார்கள். ஆனால் நான் சாதியற்றவன். சாதிக் கலப்பையும் சமத்துவத்தையும் ஆதரிப்பவன். எல்லா சாதி வெறியையும் எதிர்ப்பேன்" என்று ஒவ்வொரு சாதியிலிருந்தும் குரல் வரவேண்டும். குரல் கொடுப்போர் இங்கு வந்து பதிய அழைக்கிறேன். முதல் குரல் என்னுடையது. நான் பிரந்த பார்ப்பன சாதியை நான் உதறிவிட்டேன். பார்ப்பபன சாதி வெறி உட்பட எல்லா சாதி வெறியர்களையும் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். சாதிக் கலப்பை ஆதரிப்பேன். இங்கே வந்து பதிவு செய்யும்படி முதன்மையாக வன்னியராகப் பிறக்க நேர்ந்த சாதி மறுப்பாளர்களை அழைக்கிறேன்.//

இதில் உள்ள மறுமொழிகளைப் படித்துவிடவும். இது தொடர்பாக என் கருத்து முதலில்:

இப்போதைக்கு எனக்கு ஜாதிய எண்ணம் இல்லை என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பூணூல் அணிவதில்லை. இதனால் ஜாதி எண்ணம் ஒழிந்துவிட்டதா என்றால் தெரியவில்லை என்றே சொல்லுவேன். ஏனென்றால் என் குடும்ப வழக்கம் எல்லாவற்றிலும் ஜாதியின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது. நான் ஜாதியைப் புறக்கணிக்க வேண்டுமானால் முதலில் என் சொந்தங்களை என் கொள்கையை முன்வைத்து மறுக்கவேண்டும். என்னால் அது இயலவே இயலாது. எனவே நான் முற்றும் ஜாதியைத் துறந்துவிடவில்லை என்பதே உண்மையாகிறது.

நாளை என் மகனுக்கு உபநயனம் செய்விக்காமல் இருப்பேன் என்று என்னால் உறுதி கூற முடியாது. என் அம்மா, என் உறவினர் அனைவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை விளைவிக்கும். அவர்களை எதிர்க்க எனக்கு உறுதி இல்லை. இது ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொல்லலாம். சொல்லிக்கொள்ளட்டும். 

நானே முன் வந்து என் மகனுக்கோ மகளுக்கோ வேறு சாதியில் வரன் பார்த்துத் திருமணம் செய்விப்பேன் என்று இன்றைய நிலையில் என்னால் நிச்சயம் உறுதி கூற முடியாது. அதையும் இப்போதே சொல்லி வைக்கிறேன். ஆனால் என் மகனோ மகளோ அவர்களாக வேறு ஒரு சாதியில் யாரையேனும் விரும்பினால் (ஹிந்து மதம் தவிர வேறெந்த மதத்தையும் ஏற்கமாட்டேன்) அவர்கள் குடும்பமும் அந்த வரனும் நல்ல விதமாக எனக்குத் தோன்றினால் நிச்சயம் மணம் செய்து வைப்பேன். அதேபோல் அவர்களாகவே விரும்புவது இன்னொரு பிராமண வரன் என்றால், அந்த வரனோ அக்குடும்பமோ நல்ல விதமாக இல்லை என்றால் நிச்சயம் திருமணம் செய்விக்க மாட்டேன். இதுவே என் இன்றைய நிலை.

நான் முதலில் இதைச் சொல்லிவிடுவதன் நோக்கம், ஞாநியின் ஸ்டேட்டஸ் குறித்து ஐயங்களை எழுப்பத்தான்.

01. முதலில் இங்கே வந்து நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொல்பவர்களெல்லாம் (பெரும்பாலும்) ஹிப்போகிரஸியை வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சும்மா வாய் வார்த்தை சொல்வது எந்த வகையில் சரி? இவர்கள் இதை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்?

02. பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டு பேசுவது நம் அனைவருக்குமே உரிய ஒன்று. இளவரசனின் மரணம் தந்த உளைச்சல் யாவருக்கும் உரியதே. எனக்கும் கடுமையாகவே இருந்தது. அவர் குடித்துவிட்டு செத்துக் கிடக்கிறார் என்று சொன்னவர்களை என் ஃபேஸ்புக்கில் அன்று நான் ப்ளாக் செய்தேன். எனக்கு ஒரு மகிழ்ச்சி இப்படி ப்ளாக் செய்வதில். அதே உணர்ச்சி வேகத்தில் நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொன்னால், அதை எப்படி காலாகாலத்துக்கும் கடைப்பிடிப்பது என்று இவர்கள் யோசித்தார்களா இல்லையா?

03. மிக முக்கியமான கேள்வி, இப்படி ஜாதியை கைவிட்டுவிட்டவர்கள் ரிசர்வேஷன் அடிப்படையில் எச்சலுகையையும் கோரி பெறமாட்டார்களா? இதைப் பற்றி ஞாநியும் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.

04. இந்திய நாட்டில் ஜாதி என்ற ஒன்று நிஜமாகவே வெறும் மோசம் செய்ய  மட்டும்தான் இருக்கின்றதா? எத்தனை எத்தனை ஜாதிகள். நம் வரையறையில் கொஞ்சம் கூட் யோசிக்க முடியாத அளவுக்கு ஜாதிகளும் அதன் பழக்கங்களும் அதன் பாரம்பரியமும் உள்ளனவே. இவைதானே பன்மைத்துவத்தின் உச்சம். ஒற்றை செயல் அடிப்படையில் இவற்றை எல்லாம் நாம் கை கழுவினால், என்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் நாம் விவாதித்திருக்கிறோமா?

இவற்றுக்கெல்லாம் பதில் சொன்னால்தான் ஜாதியைக் கைவிடுபவர்களைப் பற்றி நேர்மையாக என்னால் யோசிக்கமுடியும்.

பின்குறிப்பு: நான் ஜாதி வெறியன் என்று சொல்லப்போகிறவர்களுக்கு – நான் ஜாதி வெறியன் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும். அதை என்னால் நிரூபிக்கமுடியாது என்று ஒப்புக்கொள்கிறேன். இப்போதைக்கு என் நிலை இதுதான் என்பதை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்லிக்கொள்வது தேவை என்று கருதி இதைச் சொல்கிறேன். நன்றி. 

பின்குறிப்பு 2: நான் இதை ஞாநியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலேயே கேட்கமுடியும். விவாதம் திசை திரும்பிவிடும் என்பதற்காக மட்டுமே தனியாகப் பதிகிறேன்.

Share

நித்தியானந்தா – அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி

ரஞ்சிதாவுக்கும் நித்யானந்தாவுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்பது தேவையற்ற ஒன்று. பிரமச்சரியத்தை வலியுறுத்திய ஒருவர், தனியறையில் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்பது அவரது நேர்மையின்மையைப் பறைசாற்றுமே ஒழிய, அவர் சட்டப்படி தவறு செய்கிறார் என்றாகாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒருவரின் படுக்கை அறையில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டது முதல் தவறு. அந்த ஆபாச சிடியை சன் டிவி மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பி, குழந்தைகள் பெண்களை அருவருப்படையச் செய்தது இரண்டாவது தவறு. நித்யானந்தா செய்த நேர்மையற்ற செயலைவிட இந்த இரண்டுமே பெரிய தவறுகள். இந்த இரண்டு தவறுகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் அக்காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்கிறார்கள். நான் அதனை நம்பவில்லை. ஆனால் அப்படி சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வயதுக்கு வந்த இரண்டு பேர் மனமொத்து தனியறையில் உறவு கொள்வதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஏற்கெனவே மணமானவர்கள்  வேறு (கள்ள) உறவை வைத்திருந்தாலும் அதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். உறவுக்கு அழைத்தல் என்பதுதான் தவறு என்று நினைக்கிறேன். சட்டம் தெரிந்தவர்கள் மேற்கொண்டு சொல்லட்டும். (முன்பு மரத்தடி குழுவில் பிரபு ராஜதுரை இது பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)

ஊரெங்கும் தலைவன் என்றும் தலைவி என்று சொல்லிக்கொண்டு திரியும் பெரிய தலைகளின் படுக்கை அறைக் காட்சிகள் எல்லாம் இப்படி வீடியோவாகி முன்பே வெளியாகியிருந்தால், நித்யானந்தா இன்னும் பிரம்மசாரியாகத்தான் நமக்குத் தோன்றுவார்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி.

Share

Facebook Notes – 3

துக்ளக்கில் சாருவின் அறச்சீற்றம் – இலவச விளம்பரம் (07-ஜூலை-2011)

* இந்தியாவில் மதமாற்றம்தான் மதச்சார்பின்மை.

 * உண்மையைச் சொல்வதால் ஹிந்துத்துவவாதி முத்திரை.

 * மதமாற்றத் தடைச்சட்டம் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும்.

 * பூர்வீக மதமான ஹிந்து தர்மத்தை ஒழித்துவிடுவார்கள். (குறிப்பு: ஹிந்து தர்மம் என்பதைக் கவனிக்கவும்!)

 * காங்கிரஸ் அரசு இத்தாலியின் ப்ராக்ஸி.

 கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயாக அரபி இலக்கியம் உண்டு. வழக்கம் போல டெய்ல் பீஸில் கருணாநிதி அர்ச்சனை.

 இன்றே வாங்குவீர், இப்போதே படிப்பீர்.

 (இது இலவச விளம்பரம்தான். துக்ளக் எனக்கு பணமெல்லாம் தரவேண்டியதில்லை.)

இரண்டாம் குறிப்பு: தமிழ்ஹிந்துவெல்லாம் ஒரு தளமா? சாருவிடம் இருந்து படித்துக்கொள்ளுங்கள் ஐயா.

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும் (04-ஜூலை-2011)

கௌரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் ஒரு கொலை செய்வார். சிவாஜியின் வாதத் திறமையால் வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார். அடுத்தமுறை கொலை செய்யாமலேயே அவர் மீது கொலைப்பழி விழுந்துவிடும். சிவாஜியின் வாதத் திறமையையும் மீறி அவருக்கு த்ண்டனை கிடைத்துவிடும்.

 அரசியல்வாதிகளின், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எதோ ஒன்றில் தப்பிக்கிறார்கள். எதோ ஒன்றில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். படத்துக்கும் இவர்களுக்கும் ஒரே வித்தியாசம், இவர்கள் இரண்டிலுமே குற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.

 இன்றைய உதாரணம் சன் டிவியின் சக்ஸேனா. ஹோட்டல் சம்பந்தப்பட்ட தகராறு ஒன்றில் இவர் பெயர் அடிபட்டது. ஆனால் என்ன பிரச்சினை என்பது தெளிவாக வெளியில் வரவே இல்லை. எந்த பத்திரிகையும் கண்டுகொள்ளவும் இல்லை. இன்று இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைதுக்கான புகார் பின்னணியில் உண்மை உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்தது என்றெல்லாம் இனி கருத்துகள் வரலாம். (பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டாலும், கைதுக்கான சரியான காரணங்கள் இருந்தால் அதைச் செய்யவேண்டியதுதான். இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்!) ஆனால் கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்தபோது சன் பிக்சர்ஸின் அதிகாரம் பற்றிப் பலர் புலம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கைது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். போக போக என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெரியவில்லை. பார்க்கலாம். நிறைய நோட்ஸ் எழுத முடிந்தால் மகிழ்ச்சியே!

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும்.

சானல் 4 & ஜெயா டிவி (04-ஜூலை-2011)

சானல் 4ல் ஒளிபரப்பான போர்க்குற்றங்கள் வீடியோவின் ஒரு பகுதியை ஜெயா டிவி ஒளிபரப்பியதாக அறிந்தேன். நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்பதால், நிகழ்ச்சி ஒளிபரப்பானது உண்மைதானா என்றறிய காத்துக் கொண்டிருந்தேன். ஜெயா டிவி செய்திருப்பது அதன் வாழ்நாள் சாதனை. தமிழக டிவிக்கள் எதாவது இதனைச் செய்யாமல் தமிழ்நாட்டு வெகுஜனங்களை அடையவே முடியாது. ஜெயா டிவிக்குப் பாராட்டு.

இதனை சன் டிவி செய்யவில்லை, கலைஞர் டிவி செய்யவில்லை என்பதைவிட்டுவிட்டு, எல்லா டிவிக்களும் இதை செய்யவேண்டும். அப்போதுதான் ஓரளவாவது இலங்கையில் என்னதான் நடந்தது என்பதன் ஒரு பகுதியாவது தமிழகத்துக்குத் தெரிய வரும்.

மெரினாவில் ‘மெழுகுவத்தி ஏந்தல்’ நிகழ்ச்சி முழுமையாக கவர் செய்யப்படதாதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. பிராபகரன் உயர்த்திப் பிடிக்கப்பட்டது பல ஊடகங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கலாம். திருமாவேலன் விகடனில் ‘தனி நபர் முழக்கங்களை தவிர்த்துவிட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே என்ற குரல் மட்டுமே உயர்ந்தது’ என்று எழுதியிருக்கிறார். 🙂 ஊடகங்கள் விடுதலைப்புலி ஆதரவு குரலை கண்டனம் செய்துவிட்டாவது, இந்த மெழுகுவத்தி கூட்டத்தை கவர் செய்திருக்கவேண்டும். வழக்கம்போல செய்யவில்லை.

ஊடகங்கள் இனிமேலாவது செயல்படுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

Share

Facebook Notes – 2

புவியிலோரிடம் – பாதி (1-ஜூலை-2011)

பாராவின் புவியிலோரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இது போன்ற ஒரு கதையை (நாவல் என்று சொல்ல இயலவில்லை) நான் வாசித்ததில்லை. முதல் பாகம் வரை படித்திருக்கிறேன். பாராவின் வழக்கமான வரிகள் தந்த தடையை மீறி நாவலுக்குள் நுழைவது ஒரு சவாலாகவே இருந்தது. மேலும் வாசுவாக பாராவையே நினைக்கத் தோன்றுவதையும் மீற முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மீறியதும் நாவல் சட்டெனத் திறந்துகொண்டது. வெளிப்படையான ஒரு அரசியல் பிராமணக் கதையை  இதுவரை யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு இடத்தில் மணிரத்னத்தை நினைவுபடுத்தும் காதல் காட்சிகள். இந்த பாரா எனக்கு புதுசு. ஆயிரம் அபுனைவுகள் எழுதியிருந்தாலும் ஒரு எழுத்தாளன் ஒரு தடமாகப் பதிவு செய்யப்படுவது புனைவில்தான் என்ற எண்ணம் ஒரு அனுபவமாக எழுகிறது. முதல் பாகத்தில் பாரா ராக்ஸ். குறிப்பாக ஆசாரியார் வரும் காட்சிகளில் அவரது மனைவி பேசும் வசனங்கள். ஒரு நாவலுக்குண்டான அழகை சில இடங்களில் பார்க்கமுடிகிறது என்றாலும், அரசியலை சொல்ல நினைக்கும் அவசரமும் கதை சொல்ல நினைக்கும் வேகமும் அதனை உடைக்கின்றன. இரண்டாம் பாகம் நாளை படிக்கப் போகிறேன். சிறிய புத்தகம்தான். வசதி கருதி இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பாதி இன்று, மீதி நாளை.

 

மாவீரன்-லு (30-ஜூன்-2011)

தெலுகு டப்பிங் மாவீரன் படம் பார்த்தேன். எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ஒரு படம் வந்தால் தமிழ்நாட்டைப் போலவே அதனை தெலுகு சகோதரர்களும் விழுந்து விழுந்து வரவேற்பது கண்டு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை மொக்கையாக இருந்தாலும் ஹைப் கூட்டப்பட்ட ஃப்ளாஷ் பேக்குக்க்கு தெலுகு சகோதரர்கள் அடிமையாகிவிடுவது கண்டு ‘ஆஹா நம் ரத்தமல்லவா’ என்ற மகிழ்ச்சி ஓங்கியது. 50 ஆண்டுகளாக ஒரே காதல் காட்சியை திரும்ப திரும்ப எடுத்தும் அதை விடாமல் ரசிக்கும் தெலுகு மக்களை நினைக்கும்போது நெக்குருகி நிற்கவேண்டியிருக்கிறது. விறுவிறுப்பு என்னும் பேரில் அடுத்தடுத்த காட்சிகளிலேயே அடுத்தடுத்த சம்பவங்கள் தடால் தடால் என நடப்பது கண்டு, நம் உற்ற தோழன் தெலுகு திரைப்படமே என்ற நினைப்பு வந்து நம் நெஞ்சை மயிலிறகால் வருடுகிறது. மறக்காமல் பாருங்கள் மாவீரன். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை டப்பிங் திரைப்படம். வசனம் படு பிரமாதம். ப்ராணன் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் மாவீரன் படத்துக்கே 10 டிக்கெட் இலவசம். இதுபோக சென்னைத் தமிழும் உண்டு. ஆஹா. அட்டகாசம். அதிலும் ஹீரோ போட்டிருக்கும் செயின் பல இடங்களில் பூணூலை ஞாபகப்படுத்துகிறது. சிரஞ்சீவிகாருவின் மகன்காரு நடித்து படம்காரு வந்திருக்கிறது. தெலுகுகாருகள் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்களாம். தமிழ்காருகளை நம்பி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நாமும் தமிழ்காருகள் ஆவோம். ஆல் தெலுகு வணிக சினிமா ரசிகர்காருகளுக்கு நம் வந்தனமுலு.


ஜூன் 26, 2011

விடுதலைப் புலிகள் இருந்தபோதுகூட இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் ஆதரவு என்பதே புலிகள் ஆதரவுதான் என்னும் ஒரு மாயை நிலவியதால், அதிலிருந்து விலகி நிற்க விரும்பிய தமிழகத்தமிழர்களே அதிகம். இன்று புலிகள் தோற்கடிப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பற்றிப் பேசவும் அவர்களுக்காக குற்றவுணர்ச்சியுடன் வருந்தவும் ஆயத்தமாகும்போது, மீண்டும் புலி ஆதரவு கோஷம் தலை தூக்குகிறது. இது நிச்சயம் தமிழகத் தமிழர்களை பின்னடைவு கொள்ள வைக்கும். தமிழகத் தமிழர்களின் ஆதரவே தேவையில்லை என்று எண்ணுபவர்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக தமிழர்களின் ஆதரவும் முக்கியம் என்று எண்ணுபவர்கள், இந்த புலி ஆதரவு இல்லாமல், தமிழகத் தமிழர்களின், இந்தியர்களின் ஆதரவைக் கோரும் வகையில் செயல்படுவது நல்லது. புலி ஆதரவு என்பது இன்று வரையில் தமிழகத் தமிழர்களுக்கு ஆகாத ஒன்று. இதனை மனத்தில் கொண்டு ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செயல்படுவதே புத்திசாலித்தனம். புலி ஆதரவு இல்லாமல், அதே சமயம் ஈழத் தமிழர்களுக்காக, அவர்களின் இன்னல்களுக்காக மெழுகுவத்தி ஏற்றிய அனைவருக்கும் நன்றிகள். இனி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கப் போவது புலி ஆதரவையா அல்லது ஈழத் தமிழருக்கான ஒருமித்த ஆதரவையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

 

ரஜினி பத்தி நெண்டே நெண்டு வரி (17-ஜூன்-2011)

ரஜினி டிஸ்சார்ஜ் ஆனதும் முதன்முதலாக ஜெயலலிதாவிடம் பேசியதைத் தொடர்ந்து நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் கடும் மனநெருக்கடி அடைந்து ரஜினியின் மனநிலை தொடங்கி நம்பகத்தன்மை வரை அலசி எதற்குமே ரஜினி லாயக்கில்லை என்ற உண்மையை உடைத்துப் போட்டு வடிவேலு போன்ற மன உறுதி கூட இல்லாதவர் என்றெல்லாம் பேசி தங்கள் கறாரான பார்வையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி எங்கே நாம் பேசியது ரஜினி ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து முடிந்த அளவு அவர்களுக்குத் தெரியுமாறு தனது மீது வெளிச்சம் அடித்து குட்டிக்கரணம் அடித்து முடித்து ஏன் கருணாநிதி கூடவே இருந்து ஜால்ரா அடிக்கும்போதே உனக்கு தெரியலையா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அட அப்பவே ஏன்யா நீ கேக்கலை என்ற பதில் கேள்வியையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை முடிந்த அளவு திட்டி ஓய்ந்த ஒரு காலையில் பார்த்தால்

 இந்த ’மூளைகெட்ட பிஸினஸ்மேன்’ ரஜினிப்பய இன்று காலை கருணாநிதியையும் அழைத்து பேசியிருக்கிறார். இப்போதே அதே நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் மீண்டும் முதல் இடத்தில் தொடங்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டு நான் கலவரப்பட்டு நிற்கும் வேளையில் சொல்வதெல்லாம், உங்க மேல டார்ச் அடிச்சுக்குங்க, அது உங்க உரிமை, ஆனா என் முன்னாடி ஆடாதீங்க என்பதுதான்!

Share

வேதபுரத்து வியாபாரிகள் – வியாபாரக் கூவல்

வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை மீண்டும் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது இத்தனை மொக்கையாக இருந்ததாக நினைவில்லை. தமிழக நடப்பு அரசியலை விமர்சிக்கிறேன் என்று அதன் அங்கதத்தின் சகல சுதந்திரங்களையும் பயன்படுத்தியதின் விளைவு, சோ எழுதிய முகமது பின் துக்ளக்கிற்கு இணையான வெற்று எழுத்தாக தேங்கிவிட்டது நாவல்.
 
ஒரு நாவல் தரவேண்டிய அனுபவத்தை எல்லாம் மறந்துவிட்டு, திராவிட அரசியல் என்பதே வெறும் கோமாளிக் கூத்துதான் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நாவலை நிச்சயம் கொண்டாடுவார்கள். திராவிட நடைமுறை அரசியலைப் பற்றிய எனது எண்ணமும் இதுதான். ஆனால் திராவிட அரசியலை அதன் கோட்பாடு சார்ந்து (அப்படி ஒன்று இருப்பதாக நம்புகிறவர்கள் அவர்கள் :>) அணுகுபவர்கள், குறிப்பாக 60, 70களில் தங்கள் இளம் வயதைக் கழித்தவர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை திராவிட அரசியல் என்பது ஒரு விடுதலைக்கீற்று; பார்ப்பனியத்தின் நெருக்கடிக்கான பதிலடி. இதைத் தொடரும் ஒரு தலைமுறைக்கான இன்றைய இளைஞர்களும் இதனை இப்படியே பார்ப்பார்கள்.
 
எல்லா தத்துவமும் நீர்த்துப் போகும்போது, உணர்ச்சிகளின் பீடத்தில் நிறுவப்பட்டிருந்த (அப்படி நான் நினைக்கும்!) திராவிடம் மிக நீர்த்துப் போனதொரு தருணத்தில் இந்த நாவலை வாசிக்கும்போது வெறும் கேளிக்கையாகவும், அந்த கேளிக்கையே பெரியதொரு நடைமுறை உண்மையாகவும் தோற்றமளிக்கும் முரணைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
 
முக்கியமான விஷயம் – நான் நாவலை இன்னும் படித்துமுடிக்கவில்லை. ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு திரைப்படத்துக்கு 4 பதிவுகள் போடும் திருநாட்டில் ஒரு நாவலுக்கு ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் (யாரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை!) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு! (இன்னும் 3 பதிவுகள் வரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.)
 

(1994ல்) தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினாலாயே நாவலின் கட்டுமானத்தை இழந்து தவிக்கும் படைப்புகளின் பெருவரிசையில் இதனையும் சேர்க்கலாம். அப்போது எழுதப்பட்ட படைப்பில் இருந்து சிலவரிகள். இது எப்படி 2009ல் பலித்திருக்கிறது பாருங்கள்! இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே!)
 
“எங்கள் நாட்டைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் நூல் நிலையத்தில் உள்ளன. வரலாறு? புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு? எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு? புராணம்…”
 
“தலைவரைப் பற்றியுமா புராணம்?”
 
“புராணமில்லாமல் எப்படித் தலைவராக இருக்க முடியும்?”
 
“உதாரணம்?”
 
நஞ்சுண்டன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு கேட்டான்: “இன்று உங்களால் குளிக்க முடிந்ததே எப்படி?”
 
“குழாயில் தண்ணீர் வந்தது, குளித்தேன்.”
 
“எப்படி வந்தது?”
 
“புரியவில்லை.”
 
“பக்கத்து நாட்டுப் பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக் கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டுமென்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8,640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர் விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்தோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான் நஞ்சுண்டன்.

 
அப்புறம் வேறென்ன? நாவலை வாங்க என்று ஒரு லிங்க்கை இன்னும் நீட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா? புத்தகம் அவுட் ஆப் ஸ்டாக். 🙂 ஸ்டாக் வந்த்தும் சொல்கிறேன். இ புக்காக வாங்க விரும்புகிறவர்களும் ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருக்கவும். NHM eBook Reader is on the way!

Share

பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி

சேரன்மகாதேவி நான் சிறு வயதில் வளர்ந்த நாடு. காலார நடந்தால் ஊரை முழுக்கச் சுற்றிவர நான்கு மணி நேரம் ஆகும். கொழுந்தனா மலைக்கு அடிவாரத்தில் ஆடு மேய்ப்பார்கள். சன் பேப்பர் மில்லில் வேலை பார்த்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு நடந்தே வீடு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும், பஞ்சாயத்து ஸ்கூலும் உண்டு. நான் 6 வயதில் அங்கே இருந்தபோது சித்ரா மெட்ரிகுலேஷன் என்ற ஒரே ஒரு மெட்ரிக் ஸ்கூல் இருந்தது. இப்போது 2 அல்லது 3 இருக்கலாம்.

முன்பு ஒரு டூரிங் தியேட்டர் கூனியூர் நாட்டில் இருந்தது. கூனியூர் என்பது சேரன்மகாதேவி நாட்டுக்குப் பக்கத்து நாடு. ஒரே ஒரு சௌகரியம், கூனியூர் நாட்டுக்குப் போகவோ, கூனியூர் நாட்டு மக்கள் சேர்மாதேவி நாட்டுக்கு வரவோ விசா தேவையில்லை. யூ டோண்ட் பிலீவ் இட், பாஸ்போர்ட்டும் தேவையில்லை யூ நோ. இன்னொரு அதிர்ச்சி, இரண்டு நாட்டுக்கும் நடந்தே போய்விடலாம். கூனியூர் நாட்டுக்குப் பக்கத்து நாடு வீரவநல்லூர் நாடு. Funny countries, isn’t it?

கூனியூர் நாட்டுக்கு இப்படி நம்ம நாட்டுப் பணமெல்லாம் போகுதே என்று யோசித்தவர்கள் சேர்மாதேவியிலேயே தியேட்டர் கட்டிவிட்டார்கள். என் அப்பா சேர்மாதேவியில் பெரிய பிஸினஸ் மேனாக இருந்தவர். பிள்ளையார் கோவில் பின்புறத்தில் நின்றுகொண்டு சுண்டலும் சுக்கு வெண்ணீரும் விற்பார்.

வேத பாடசாலை உண்டு. யச்சு பாகவதர் தனியாக வேதம் பாடுவார். இந்நேரம் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். முட்டை ஊதி வைக்க வைத்தீஸ்வரன் கோவிலும் உண்டு.

எனது கோரிக்கை எல்லாம் இந்த பெரிய நாட்டை நிர்வாக வசதி கருதி இரண்டாகப் பிரிக்கவேண்டும் யுவர் ஹானர்!

சோர்ஸ்: http://thatstamil.oneindia.in/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html

Share

Facebook Notes – 1

நாள்: 12-ஜூன்-2011

Choose the best answer – கருணாநிதிக்கு உதவுவோம்

கருணாநிதியின் இந்த பேட்டியைப் (http://dailythanthi.com/article.asp?NewsID=652219&disdate=6%2F11%2F2011&advt=1) படித்தால், கலங்காத மனமும் கலங்கிவிடும். திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகாருக்கு அடுத்த உருகார் இதுதான். பல கேள்விகளுக்கு அதிரடி பதில்தான். என்ன பொண்ண கையைப் பிடிச்சி இழுத்தியா (http://www.youtube.com/watch?v=rgANpyU48cw) ரக பதில்கள்தான்.

எப்படி இந்த பத்திரிகையாளர்களும் விடாமல் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதுவும் பாவமாகவே இருக்கிறது.

திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை மறைத்துப் பேசாமல் திரித்துப் பேசாமல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார். எனது மகள் கனிமொழி என்று சொல்லிவிட்டு, இரண்டு நிமிடங்கள் கண் கலங்கி, உடன்பிறப்புகள் தலைவா கோஷமிட அவர் அன்று மத்திய அரசுதான் காரணம் என்ற வகையில்தான் பேசியதை டிவியில் நானே பார்த்தேன். ஆனால் அவரது பேட்டியோ சத்தியமாகக் கேளுங்கள் என்று வருகிறது. கடவுள் சத்தியமா கேளுங்கள் என்று இன்னொருமுறை நாக்கு தவறாததற்கு அவர் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் அவர் நிருபர்களையே பதில் சொல்லச் சொல்கிறார். தமிழ் ரத்தம் ஓடுகிறதா என்கிறார். டெல்லியில் நிருபர்கள் கேள்வி கேட்டால் ஹிந்தி ரத்தம் ஓடுகிறதா என்று கேட்காமல் இந்திய ரத்தம் ஓடுகிறதா என்றாவது கேட்கவேண்டும்.

கருணாநிதிக்கு நிருபர்கள் கொஞ்சம் கருணை காட்டி, சூஸ் தி பெஸ்ட் ஆன்சர் அடிப்படையில் கேள்விகளைக் கொடுத்துவிட்டால், அவரும் டிக் போட்டுக் கொடுத்துவிடுவார். மறக்காமல் ‘இவற்றில் எதுவும் இல்லை’ ஆப்ஷனை வைத்துவிடுங்கள்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

————–

நாள்: 10-ஜூன்-2011

பகடியா உண்மையா ரொம்பக் கண்ண கட்டுது!

சாரு எழுதுவதில் எதை சீரியஸாக எடுத்துக்கொள்வது எதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது என்பதே குழப்பமாக உள்ளது.

சாரு வாசகர் வட்டம் பற்றி அவர் எழுதியபோது, சிலர் பஸ்ஸில் அதனை நகைச்சுவைப் பதிவு என்றார்கள். ஆனால், நான் படித்தபோது அது பகடியான பதிவாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இவர்கள் அதனை பகடி என்று கண்டுபிடிக்கிறார்கள் என. சாரு இணையக் குழுமம் அல்லது ஃபேஸ்புக்கில் தொடரியாக இருந்தால்மட்டுமே இதெல்லாம் புரியும் என்றார்கள். ஆனால் தொடர்ந்து சாரு வாசகர் வட்டம் பற்றிய பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அது தொடர் பகடியா அல்லது உண்மையா என்பது குழப்பமாகவே உள்ளது. பகடிதான் என்றால், அக்கவுண்ட் நம்பரெல்லாம் கொடுத்து உண்மை போலவே பகடி செய்ய தில் வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன்!

இப்போது உயிர்மையில் சாருவின் புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி, மோதிரம் பரிசு என்று தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் சாரு. (இப்படி சாரு தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் என்று சொல்வது கூட கொஞ்சம் ரிஸ்க்காக உள்ளது! திடீரென்று அந்தப் பதிவு தூக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது!) இது மனுஷ்யபுத்திரனுக்கும் சாருவுக்கும் இடையேயான பகடியா அல்லது உண்மையா என்பது இன்னொரு குழப்பமாக உள்ளது. உண்மை என்றால், வாழ்த்துகள். பகடி என்றாலும் வாழ்த்துகள்தான்! கண்டனமா செய்யமுடியும்? :>

Link: http://www.facebook.com/note.php?note_id=206725746037686

————–

நாள்: 5-ஜூன்-2011

ராம்தேவ் கைது அராஜகம்

ராம்தேவின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், இந்த காங்கிரஸ் அரசு செய்திருப்பது அராஜகம்.

ஊழலுக்கெதிராக உண்ணாவிரதம் இருப்பதை ஏன் லத்தி சார்ஜாலும் கண்ணீர்ப் புகையாலும் கலைக்கவேண்டும்? வினேச காலே விபரீத புத்தி.

உடனடியாக ராம்தேவின் ஊழல்களை – அப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் – உடனே வெளியிட்டு அவரை கேரக்டர் அஸாஸிநேஷன் செய்யும் அரசு.

1300 கோடி சொத்து என்கிறார்கள். அவ்வளவு வரும் வரை என்ன செய்துகொண்டிருந்தன அரசுகள்?

அதிகமான சொத்து உள்ள சாமியார்களை எல்லாம் என்ன செய்யப் போகிறது இவ்வரசு? சாய்பாபா உடலுக்கு முன் சோனியாவும் மன்மோகனும் தேவுடு காத்தது ஏன்?

காங்கிரஸ் ஒரு கேவலமான ஆட்சியை நடத்துகிறது, மன்மோகன் மிக மோசமான பிரதமர். இதில் இவர்களுக்கு பாபா ராம்தேவைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

ராம்தேவின் பின்னால் இதுவரை ஆர் எஸ் எஸ் இருந்ததோ இல்லையோ, இனி இருக்கவேண்டும் – ராம்தேவ் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இல்லாதிருந்தால்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

Share