Archive for அஞ்சலி

மடங்கள்

எனக்கு மடம் என்பது சின்ன வயதில் எப்படி அறிமுகமானது என்றால், வருடத்துக்கு மூன்று நாள்கள் அங்கே சாப்பிடப் போவோம் என்ற அளவில்தான். அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப் போனது. போன எல்லா மடங்களிலும் ராகவேந்திரரையே மனதுக்குள் நினைத்து, பொத்தாம் பொதுவாக ‘பூஜ்யாய ராகவேந்திராய’ சொல்லிக் கும்பிட்டிருக்கிறேன். தெரிந்ததும் அந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே. எங்கள் மடமான வ்யாஸராய மடம் என்பது கூட, கல்யாணக் காரியங்களுக்கு மட்டுமே யாரோ சொல்லி, அந்தப் பெயர் என் செவிக்கு எட்டும் முன்னரே மறைந்துபோன ஓர் ஒலியாகவே இருந்தது.

ராகவேந்திரரின்ஆராதனையின் மூன்று நாள்களில், அம்மா எங்களை வம்படியாக அழைத்துக்கொண்டு மடத்துக்குப் போவாள். ஆராதனை என்பது ஸ்ரீ ராகவேந்திர் ஜீவ சமாதி அடைந்த நாள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் மடத்துக்குத்தான் அதிகம் போவோம். அதற்கு முன்னரும் பின்னரும் திருநெல்வேலி ஜங்க்‌ஷனில் இருக்கும் மடத்துக்குப் போயிருந்தாலும் அது மதுரையின் மடம் அளவுக்குப் பெரியதல்ல.

மதுரை மடத்தில் சாப்பாடு போட நேரமாகும். பரிமாற ஆள் இருக்காது. கூட்டம் அம்மும். அதுவும் ரஜினியின் ஸ்ரீ ராகவேந்திரர் படத்துக்குப் பிறகு கேட்கவே வேண்டாம். சாப்பாடு பரிமாறி அதைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவி வெயிலும் கல்லும் புழுதியும் சகதியும் இருக்கும் இடத்தில் கை கழுவி விட்டு, அங்கிருந்து அழகரடியில் இருக்கும் வீட்டுக்கு நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆட்டோ, ரிக்‌ஷா எதுவும் வைக்க மாட்டார்கள். அவ்வளவு வறுமை. பேச்சியம்மன் படித்துறையில் என் அம்மாவுக்கு தூரத்து உறவினர் வேதவியாஸ ராவ் என்று ஒருவர் இருந்தார். வெயிலில் ஏன் அலைகிறீர்கள், எங்கள் வீட்டில் தங்கி, காப்பி சாப்பிட்டுவிட்டு, வெயிலாறப் போகலாம் என்று சொல்வார்கள். அம்மா சந்தோஷமாக அங்கே தங்குவார். ஆனால் எனக்கு என்னவோ போல இருக்கும். (அந்த மாமாவும் அத்தையும் தங்கமானவர்கள். நான் சொல்வது அந்த வயதில் என் மன ஓட்டத்தை.)

ஒவ்வொரு சமயம் பக்கத்தில் இருக்கும் தேவி தியேட்டரில் மதியம் படம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். அன்று சந்தோஷமாக மடத்துக்குப் போவேன். அன்றைக்குப் பார்க்க இலை போட நேரமாகிவிடும். எரிச்சலாக வரும்.

பரிமாறுபவர்கள் அத்தனை பேரும் தன்னார்வத்தின் பேரில் உதவுபவர்கள். அதில் ஒருவர் மதியம் ஒரு மணிக்குப் பரிமாறிவிட்டு, நடுரோட்டிலேயே பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவார். அம்மா என்னை அழைத்துக் காண்பிப்பார், பாத்தியா எவ்ளோ பக்தின்னு என்று சொல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மடத்துக்கு இப்படிச் சாப்பிடப் போகணுமா என்று அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவோம். அவனவன் குருகளு பிரசாதம் கிடைக்காதான்னு ஃபாரின்ல இருந்து வர்றான், பக்கத்துல இருந்துட்டு போறதுக்கு என்ன கொள்ளை என்பதே என் அம்மாவின் பதிலாக இருக்கும். சாப்பாடு போடலைன்னா நீ மட்டும் போவியா என்று எதாவது சொல்லி மடக்குவோம்.

மதுரை மடத்தில் சாப்பாடு போட எப்போதும் தாமதாகிவிடும். செய்வார்கள், செய்வார்கள், பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். அங்கிருக்கும் மண்டபத்தில் யாரையாவது பாட அழைத்திருப்பார்கள். வீரமணி ராதா அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடுவார்கள், பாடுவார்கள், பாடிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போது 11 முதல் 15 வயது வரை இருக்கலாம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வயிறு பசியில் கூவத் தொடங்கிவிடும். மத்தியானம் நல்ல சாப்பாடு என்று பெரும்பாலும் காலையில் எதாவது மோர் சாதம் இருக்கும். அதுவும் இல்லையென்றால், சாமி கும்பிடப் போகும்போது சாப்பிடக் கூடாது என்று சொல்லி, வெறும் வயிறாக இருக்கும். அந்தப் பசியில் 2 மணி வரை சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும்போது எரிச்சலாக வரும்.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மடத்தில், பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பரிமாறுவார்கள். மடத்தில் இடம் கம்மி. பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போதும் அம்மா விடவில்லை. அரை நாள் லீவு போட்டுக்கிட்டு வா, இல்லைன்னா நான் தனியா வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் சொல்லி, என்னை வர வைத்துவிடுவார். நானும் சாப்பிட்டுவிட்டு அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு, எதாவது படம் பார்க்கப் போய்விடுவேன். அப்படிப் பார்த்த ஒரு படம் மலைச்சாரல் என நினைவு. கதாநாயகியின் போஸ்டரைப் பார்த்து அந்தப் படத்துக்குப் போய் பல்பு வாங்கினேன் என நினைக்கிறேன்.

மடம் என்பது அதன் தேவையுடன் எங்களுக்குப் பின்னர் அறிமுகம் ஆனது. அது வருடத்துக்கு மூன்று நாள் சாப்பிடும் இடம் மட்டுமல்ல, அதனால் நமக்கு நிறைய சமயக் கடமைகள் நிறைவேறும் என்று புரியத் தொடங்கியது எப்போதென்றால், என் தாத்தாவின் மரணத்தின் போது. பத்து நாள் காரியங்களை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ பாத ராஜர் மடத்தில் செய்யும்போதுதான் உணர்ந்தோம். அப்போதுதான் எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதும். பின்னர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அப்பாவுக்கும் எங்கள் மாமாவுக்கு அதே மடத்தில் வைத்தே காரியங்கள் நடந்தன.

பின்பு சென்னைக்கு வந்து செட்டில் ஆனோம். அம்மாவுக்குத் தெரியாத ஊர். ஆனாலும் விடவில்லை. ஆராதனை சமயத்தில் எப்படியாவது என்னை மடத்தில் விட்டுவிடு என்றார். நான் காலையிலேயே தி.நகரில் இருக்கும் அலுவலகத்துக்குப் போய்விடுவேன். என் மனைவி என் அம்மாவுக்கு ஒரு ஆட்டோ அமர்த்தித் தருவாள். அலுவலகத்துக்கு அம்மா வந்துவிட, அங்கிருந்து அருகில் இருந்த தி.நகர் மடத்துக்குக் கொண்டு போய்விடுவேன். நீண்ட வரிசை இருக்கும். அம்மா வரிசையில் நின்றிருப்பாள். ஏம்மா இப்படி கஷ்டப்படற, சாப்பாட்டுக்கா பஞ்சம் என்று கேட்பேன். நீ போடா என்று சொல்லிவிடுவாள். வரிசையில் அம்மா நின்றிருந்த சித்திரம் கண்களில் நீருடன் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. எப்படிச் சாப்பாட்டுக்காக அம்மா வரிசையில் நிற்கிறாள் என்கிற கேள்வி என்னை வாட்டி எடுத்தது. ஆனால் அதை அம்மா ஒரு சுக்காகக் கூட மதிக்கவில்லை.

திருநெல்வேலியில் பாட்டபத்து-வில் வைக்கதஷ்டமி நடக்கும். அன்று ஊர்ச்சாப்பாடு போடுவார்கள். அதற்கும் அம்மா எங்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாள். ஆனால் மடத்தில் ஆராதனைக்கு வந்தே ஆகவேண்டும் என்னும் அளவுக்கு வற்புறுத்தமாட்டாள். ஒரு தடவை போய்விட்டு, பின்னர் வரமுடியாது என்று மறுத்துவிட்டேன். அம்மாவையும் அலையவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் மடத்துக்கு ஆராதனைக்குப் போவதை மட்டும் எங்களால் தடுக்கமுடியவில்லை.

அம்மா போய் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ராகவேந்திரரின் ஆராதனை துவக்க நாளைக்கு இரண்டு நாள் முன்னர் அம்மாவின் திதி வரும். நான் அம்மாவுக்குத் திதி செய்யப் போகும்போது மடமே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால், அம்மாவின் திதிக்கு முதல்நாள் பெரும்பாலும் வரலக்ஷ்மி பூஜை இருக்கும். (சில சமயம் மாறும்.) திதி அன்றேவோ அல்லது மறுநாளோ ரிக் வேத உபகர்மா இருக்கும். அதற்கு மறுநாள் ராகவேந்திரரின் பூர்வ ஆராதனை ஆரம்பித்துவிடும். எனவே முழு பரபரப்பில் இருக்கும் மடம். திதி அன்று எப்போதும் சூழ்ந்திருக்கும் அம்மாவின் நினைவுகளைத் தாண்டி, மடத்தில் சாப்பிட அம்மா எடுத்துக்கொண்ட சிரத்தை என்னை மூழ்கடிக்கும்.

இந்த முறை ஞாயிற்றுக் கிழமை ராகவேந்திரரின் உத்தர ஆராதனை வந்தது. என் பையனையும் மகளையும் அழைத்துக்கொண்டு போக முடிவு. என்னைப் போல் அவர்கள் முரண்டெல்லாம் பிடிக்கவில்லை. உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி போய் பழகிவிட்டதால் அவர்களுக்கு அது வித்தியாசமானதாகத் தெரியவில்லை போல. அதுமட்டுமல்ல, மடங்கள் இப்போதெல்லாம் அலாரம் வைத்தது போல் சரியாகப் பன்னிரண்டரைக்குள் இலை போட்டுவிடுகின்றன. உதவி செய்யவும் ஆள்கள் பலர் இருக்கிறார்கள். மேலும், மகனும் மகளும் மதியம் 1 மணி வரை பசியுடன் இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள். எனவே அவர்களுக்கு இது ஒரு கஷ்டமான விஷயமாகவே தெரியவில்லை. நான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஒரு பக்கம் என் மனதில் ஓட, என்னையறியாமல் என் வீட்டில் நான் சொன்னேன், ‘குருகளு பிரசாதம். கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.’ அம்மாவுக்குப் புரையேறி இருக்கும்.

Share

ஜே.எஸ்.ராகவன் – அஞ்சலி

ஜே எஸ் ராகவன் மறைவு – பேரதிர்ச்சி. நேற்று வரை நகைச்சுவைப் பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தார். இன்று அவர் நம்மிடையே இல்லை. 80 வயதில் இத்தனை ஆர்வமும் கடைசி வரை ஃபேஸ்புக்கில் எழுதியதும் ஆச்சரியம். நேற்று மதியம் ஒரு மணிக்கு அவர் போட்ட போஸ்ட்:

//’ஏம்மா, இன்னிக்கு கறிகாயெல்லாம் ஏக விலை சொல்றே?’

‘தெரியாதா சாமி, காலிலே ரஷ்யாவுக்கும் யூக்ரேனுக் கும் சண்டை ஆரமபிச்சுடுத்தாமே.’//

ஜே.எஸ்.ராகவன் எழுதி, வரும் 27ம் தேதி மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் வரப்போகும் தமாஷா வரிகள் பத்தியையும் தன் ஃபேஸ்புக்கில் அவரே வெளியிட்டிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் ஜே.எஸ்.ராகவன் பங்கேற்றுப் பேசினார். கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் மென் நகைச்சுவையாகப் பேசிய ஒரே எழுத்தாளர் அவரே. அபாரமான தன்னம்பிக்கையுடன் பேசினார். 

புத்தகக் கண்காட்சிக்கு வரும்போதெல்லாம் அவரும் அவரது மனைவியும் கிழக்கு ஸ்டாலுக்கு வருவார்கள். ஜே எஸ் ராகவன் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசுவார். நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவே மாட்டார். நமக்கு வேலை இருக்கும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார். மிகவும் ஜெண்ட்டிலாக நடந்து கொள்வார். நிறைய புத்தகங்கள் வாங்குவார். 

80 வயதிலும் ஜே எஸ் ராகவனின் மெச்சத்தகுந்த ஒரு பண்பு, போனில் பேசும்போது எதைப் பேசவேண்டுமோ அதைத் தெளிவாக, சுருக்கமாகப் பேசுவது. வயதானவர்கள் சிலர் தாங்கள் நீண்ட நேரம் பேசி, சொன்னதையோ சொல்கிறோம் என்பது தெரியாமலேயே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். வயதின் பிரச்சினை. ஆனால் ஜே எஸ் ராகவன் ஷார்ட் அண்ட் ஷார்ப்.

நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாமல் இருந்த ஜே எஸ் ராகவன், சில தினங்கள் முன்பு அழைத்து, தனக்கு கிழக்கு வெளியிட்ட ‘சேரர் சோழர் பாண்டியர்’ வேண்டும் என்று கேட்டார். புத்தகம் வெளிவந்த பின்பு அனுப்புவதாகச் சொன்னேன். சில நாள் கழித்து மீண்டும் அழைத்து நினைவூட்டினார். புத்தகம் வந்ததும் அனுப்பி வைத்தேன். மிகவும் சந்தோஷமானார்.

மீண்டும் அழைத்து கிழக்கு வெளியிட்டிருக்கும் இன்னொரு புத்தகம் வேண்டும் என்றார். கிழக்கு வெளியிட்ட புதுப்புத்தகங்களின் பட்டியலையும் கேட்டார். இரண்டையும் அனுப்பினேன்.

தான் ஃபேஸ்புக்கில் எழுதுவதாகவும் எனது போஸ்ட்டுகள் அவரது கண்ணில் படுவதில்லை என்றும் சொன்னார். என்னையே ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். ஏற்றுக்கொண்டார்.

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியாததால் மிகவும் வருத்தப்பட்டார். சென்ற ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பின்பு, தன் உடலில் இருந்த அனைத்து சக்தியும் போய்விட்டதாக உணர்வதாகச் சொன்னார். வயது 80 என்றும் சொன்னார். அவரும் அவரது மனைவியும் வீட்டில் இருப்பதாகச் சொன்னார். வீட்டுக்குள் நடமாட முடிகிறதா சார் என்று கேட்டேன். அது வரை ஓகே என்றார். ஆனால் புத்தகக் கண்காட்சிக்குத்தான் வரமுடியவில்லை என்று மீண்டும் மீண்டும் வருத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிக்கு ஜே எஸ் ராகவன் வந்தபோது, அவரைப் பார்த்த அழகியசிங்கர், ‘உங்களால் முடியாவிட்டால் வரவேண்டாம். என்ன புத்தகம் வேண்டும் என்று சொன்னால் நானே வாங்கி அனுப்புகிறேன்’ என்று சொன்னதாக இரண்டு முறை என்னிடம் குறிப்பிட்டார் ஜே எஸ் ராகவன்.

இன்று காலை ஜே எஸ் ராகவன் இல்லை என்கிற செய்தி நிஜமாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. போய்வாருங்கள் ஜெண்டில் மேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி.

Share

KPAC Lalitha

கே பி ஏ சி லலிதா நேற்று உடல்நலமில்லாமல் மரணமடைந்திருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் களேபரத்தில் இந்தச் செய்தி கண்ணில் படவே இல்லை. எப்பேற்பட்ட நடிகை. எத்தனை பெரிய இழப்பு!

சென்ற வாரம் பொழுது போகாத ஒரு நேரத்தில் ‘பவித்ரம்’ என்றொரு மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். மோகன்லால் நடித்து 1994ல் வெளியான திரைப்படம். மோகன்லால், திலகன் என்று இருவரும் கலக்கியெடுக்க, கே ஏ பி சி லலிதா நிழல் போலப் படம் முழுக்க கலகலப்பாக வந்து மனதை கனக்கச் செய்தார். அதிலும் மோகன்லால் தன் மகளை (தங்கையை!) அடிக்கப் பாயும் கணத்தில் கே ஏ பி சி லலிதா தடுக்கும் காட்சி உணர்ச்சிகரமானது. மோகன்லால் கதாபாத்திரத்தின் அம்மா கர்ப்பமாகி இருப்பதை கே ஏ பி சி லலிதா நாணத்துடன் மோகன்லாலுக்கு சொல்லும் காட்சி மறக்க முடியாதது. (அந்த ஸ்ரீவித்யாவின் முகம்தான் எத்தனை பாந்தம்!)

தமிழில் 70களின் குழந்தைகளுக்கு இவர் ராஜபார்வையில் நடித்தவர் என்று சொன்னால் தெரியலாம். அதைவிட, காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வரலாம்.

ஓம் ஷாந்தி.

Share

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா

வலம் அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் வெளியான மொழிபெயர்ப்பு:

முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல் 20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத் துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இந்தக் கடிதத்தின் சில பகுதிகளை வெளியிட்டிருக்கிறது. ஜக்மோகன் கடிதத்தின் முழுமையான தமிழாக்கம் இங்கே.

காஷ்மீரில் பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்!

அன்புள்ள ஸ்ரீ ராஜீவ் காந்தி,
April 21, 1990

இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுத வைத்துவிட்டீர்கள். கட்சி அரசியலில் இருந்து தொடர்ந்து நான் விலகியே இருந்து வந்திருக்கிறேன். இருக்கும் கொஞ்சம் திறமையையும் ஆற்றலையும், சில ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய பயன்படுத்தவே விரும்புகிறேன். சமீபத்தில் மாதா வைஷ்ணவோ தேவி கோவில் வளாகத்தை மேம்படுத்த உதவியது போல. இப்படிச் செய்து நம் கலாசார மறுமலர்ச்சிக்கு உதவவில்லை என்றால், விரைவாக அழிந்துவரும் இதுபோன்ற அமைப்புகளைக் காப்பாற்ற முடியாமலேயே போய்விடும். இந்த அமைப்புகளின் உன்னதமான நோக்கங்கள் (அவை சட்ட அல்லது நீதி அமைப்புகளாக இருந்தாலும்) அதன் சாரத்தை இழந்துவிடும். நீதியின் ஆன்மாவும் உண்மையும் இன்றைய அரசியல் சூழலால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.

நீங்களும் உங்கள் நண்பர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர் தொடர்பாகப் பொய்யான ஒரு சித்திரத்தை வரையப் பார்க்கிறீர்கள். உங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஷிவ் ஷங்கர் மற்றும் என்.கே.பி.சால்வே போன்றவர்கள், வெளிப்படையாக உங்கள் அறிவுறுத்தலின் பேரில், எனக்கெதிரான மனநிலையை உருவாக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள். துர்க்மன் கேட்டில் 14 வருடங்களுக்கு முன்பு நடந்த பழைய நிகழ்ச்சியைக் கையில் எடுக்கிறார் ஷிவ் ஷங்கர். என்.கே.பி.சால்வே எனது பேட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிராக மதவாதக் குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை!

மணி சங்கர் ஐயரும் சில பத்திரிகைகளில் தன் விஷக் கருத்துகளைப் பதிவு செய்கிறார். ஆனாலும், இந்தத் தொடர்ச்சியான மூர்க்கமான தவறான தகவல் அம்புகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஒட்டுமொத்தமாகப் பொய்களைச் சொன்ன சில பத்திரிகைகளுக்கு மட்டும் சரியான தகவல்களை எப்போதாவது எழுதினேன். எனது நோக்கம், இந்த நாட்டுக்கும் வரலாற்றுக்கும் நான் செய்யவேண்டியதாக நம்பும் கல்வி மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகத்தில் மட்டும் இவற்றை எழுதினால் போதும் என்பதுதான்.

ஆனால், ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்களில் நீங்கள் பேசியவற்றின் சில பகுதிகளை என் நண்பர்கள் காட்டினார்கள். இதுதான் எல்லை என்று அப்போதுதான் நினைத்தேன். உங்கள் திரிபுகளுக்கான நோக்கங்களைச் சொல்லாவிட்டால், நீங்கள் என்னைப் பற்றிய தவறான எண்ணத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுக்கப் பரப்புவீர்கள் என்பதை உணர்ந்தேன்.

எச்சரிக்கை மணி

1988 தொடக்கம் முதலே, காஷ்மீரில் சூழத் துவங்கி இருக்கும் புயல் பற்றிய ‘எச்சரிக்கை மணி’களை உங்களுக்கு அனுப்பத் துவங்கி விட்டேன் என்பதை நினைவுறுத்த வேண்டுமா என்ன? ஆனால் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கத்தினருக்கும், இந்த எச்சரிக்கையைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இதுகுறித்த தரிசனமோ இல்லை. இவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பது, உண்மையான வரலாற்றுப் பரிமாணத்துக்குத் தீங்கிழைப்பது என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

உதாரணமாக சில எச்சரிக்கை மணிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஆகஸ்ட் 1988ல், வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழலை ஆய்வு செய்த பின்னர், இப்படித் தொகுத்துச் சொல்லி இருந்தேன்: “குறுங்குழு மதவாக்காரர்களும், அடிப்படைவாதிகளும் அதிகம் வேலை செய்கிறார்கள். நாசவேலைகள் அதிகரிக்கின்றன. எல்லை தாண்டி நடக்கும் விஷயங்களின் நிழல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இன்னும் நிறைய நடக்கலாம்.”

ஏப்ரல் 1989ல் உடனடி நடவடிக்கை வேண்டி தீவிரமாகக் கெஞ்சினேன். நான் சொன்னேன்: “சூழல் மிக வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது. இனி மீட்கவே முடியாது என்னும் ஒரு புள்ளியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களாக, பெரிய அளவில் தீவைத்தல், துப்பாக்கிச் சூடு, வேலை நிறுத்தம், உயிரிழப்பு என வன்முறை தலைவிரித்தாடுகிறது. நிலைமை கை மீறிப் போய்விட்டது. ஐரிஷ் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது பிரிட்டிஷ் பிரதமர் டிஸ்ரேலி சொன்னார், ‘முதல்நாள் உருளைக் கிழங்கு, மறுநாள் போப்’ என்று. காஷ்மீரில் இன்று இதே நிலைதான். நேற்று மக்பூல் பட், இன்று சத்தானின் வேதங்கள் (சாத்தானிக் வெர்சஸ்). நாளை அடக்குமுறை நாளாக இருக்கும். பிறகு வேறொன்றாக இருக்கும். முதலமைச்சர் தனித்து விடப்பட்ட தீவு போல் இருக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் செயலிழந்துவிட்டார். ஒருவேளை அரசியலமைப்பு ரீதியிலான சடங்குகள் செய்யவேண்டியது மட்டுமே பாக்கியாக இருக்கலாம். அவர் மீது சேறு நிறைந்திருக்கிறது. அவரை ஆதரிப்பது ஆபத்தானது. இவரது தனிப்பட்ட பிறழ்ச்சிகள்கூட இவரது பொது வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழல், செயல்திறன் மிகுந்த தலையீட்டை எதிர்நோக்கி நிற்கிறது. இன்றே செயல்படுவது சரியானது. நாளை என்பது தாமதம் என்றாகிவிடக்கூடும்.”

துணைவேந்தர்களின் பெருக்கம்

மே மாதத்தில் மீண்டும், வளர்ந்துகொண்டே போகும் என் தவிப்பை வெளிப்படுத்தி இருந்தேன். “இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு துணைவேந்தரின் வெற்றியிலும் அவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களது பகைமை மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத் திருப்பிவிடப்படுகிறது.” ஆனால் நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. உங்களது செயலின்மை மர்மமாக இருந்தது. இதற்கு இணையான இன்னொரு மர்மம், இரண்டாம் முறையாக நான் நியமிக்கப்பட்டபோதும் இருந்தது. எப்படி நான் சட்டென மதவாதி ஆனேன்? முஸ்லிம் எதிரியானேன்? இன்னும் என்னதான் இல்லை?

ஜூலை 1989ல் நான் ராஜினாமா செய்தபோது, ஒரு வெறுப்பும் இல்லை. தென் டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். பெரும்பாலும் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்த பொதுவான வெறுப்பு எனக்கு இருந்ததால், அந்த வாய்ப்பை நான் மறுத்தேன். ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்குமானால் நீங்கள் நேரடியான அணுகுமுறையின் மூலம் என்னைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட இனி திரும்பவே முடியாது என்னும் புள்ளியை அடையும் முன்பாக நான் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசித்திருப்பேன். பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது.

ஒருவேளை நீங்கள் உண்மையையும் எப்போதும் ஒரேபோல் இருப்பதையும் நல்ல குணங்களாகக் கருதாமல் இருந்திருக்கலாம். நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சத்யமேவ ஜயதே என்னும் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் என்று நினைத்திருக்கலாம். அந்த வார்த்தைகள், நம் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி நியாயமான வழிகளில் உண்மையான இந்தியாவை உருவாக்க உதவும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அதிகாரம் மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அதிகாரம், எந்த வழியிலும் சரி, என்ன விலை கொடுத்தாலும் சரி!

நான் இங்கே வருவதற்கு முன்பும் பின்பும் நிலவும் சூழ்நிலைகளின் நிதர்சனத்தை, நீங்களும் உங்கள் நண்பர்களும் தவறான வழியில் திரிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், ஜனவரி 19, 1990ல் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இங்கே ஒட்டுமொத்தமாக மனரீதியிலான ஒப்புதல் இருந்தது. டிசம்பர் 8, 1989ல் டாக்டர் ருபையா சயீத்தின் கடத்தலுக்கு ஒரு நாள் முன்பு கூட, இந்த மாநிலத்தை பயங்கரவாதக் கழுகு முழு மூர்க்கத்துடன் சுழன்றடித்தது. 11 மாதத்தில் 351 வெடிகுண்டு வெடிப்புகள் உட்பட 1600 வன்முறைச் செயல்கள் அரங்கேறின. 1990 ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை, இங்கே 319 வன்முறைச் செயல்கள், 21 தாக்குதல்கள், 114 வெடிகுண்டு வெடிப்புகள், 112 தீ வைப்புகள், 72 கும்பல் வன்முறைகள் நிகழ்ந்தன.

நாசவேலைக்காரர்கள் இங்கே அதிகார அமைப்பை முற்றிலும் கைப்பற்றியதைக் கவனிக்க ஒருவேளை நீங்கள் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக, உளவுத்துறை தந்த துப்பை அடிப்படையாகக் கொண்டு ஷாபிர் அஹ்மது ஷா செப்டம்பர் 1989ல் கைது செய்யப்பட்டபோது, ஸ்ரீநகர் உதவி கமிஷ்னர் அவரைக் காவலில் வைக்கத் தேவையான வாரண்ட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனந்த்நாக் என்னும் உதவி கமிஷ்னரும் இதே போன்றே நடந்துகொண்டார். அதோடு, மாநிலத்தின் வழக்கை நடத்த அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது பொறுப்பை அரசாங்கத்திடமும் கூடுதல் அட்வகேட் ஜெனரலிடமும் தள்ளிவிட அவர் முயன்றார். அவர்களும் ஆஜராகவில்லை!

நவம்பர் 22 1989ல் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டெடுப்பின்போது என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ‘வாக்களிப்பவருக்கு இது தரப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அதனருகில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த எவரும், அதிகாரத்தை மீறிச் செயல்படும் இந்த அறிவிப்பை நீக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இணை அமைச்சராக இருந்த சேர்ந்த குலாம் ரசூல் கர்-ரின் சொந்த ஊர் சோபோர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோல், லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் சேர்மனான ஹபிபுல்லாவுக்கும், முன்னாள் நேஷனல் கான்ஃபரன்ஸ் எம்.பியும் இணை அமைச்சருமான அப்துல் ஷா வகிலுக்கும் இதுதான் சொந்த ஊர். இருந்தாலும் சோபோர் நகரத்தில் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகின. அன்றைய காங்கிரஸ் (ஐ) அமைச்சர் இஃப்திகார் ஹுசைன் அன்சாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் பட்டாணில் ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. இதுதான் இந்த மாநிலத்தைச் சேர்ந்த உங்கள் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடும். இருந்தும் நீங்கள் நினைக்கிறீர்கள், நாச வேலையையும் தீவிரவாதத்தையும் இத்தகைய அரசியலாலும் நிர்வாகத்தாலும் எதிர்கொள்ள முடியும் என்று.

நம்பிக்கை இழந்த காவல்துறை

அந்த சமயத்தில் காவல்துறை நம்பிக்கை இழந்தது. உளவுத்துறை விரைவாக செயலற்றுப் போனது. டோபாக் (TOPAC) போன்ற நாசவேலைகள் குறித்த செய்திகளை சேவை அமைப்புகளில் ஊடுருவி இருந்தவர்கள் கொண்டு வந்தபோது, டாக்டர் அப்துல்லா வெளிநாடு போய்க்கொண்டிருந்தார். பயங்கரமான தீவிரவாதிகள் 70 பேரை விடுதலை செய்துகொண்டிருந்தார். இவர்கள் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்றவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தவர்கள். பாகிஸ்தானுக்குச் செல்லவும் வரவும் உதவும் குறுக்கு வழிகளை அறிந்தவர்கள். தலைமை நீதிபதியால் கண்காணிக்கப்படும் மூன்று நபர்கள் அடங்கிய அறிவுறுத்தல் மன்றம் இவர்களைக் காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ததால், நாசவேலை மற்றும் தீவிரவாத வலைப்பின்னலில் அவர்களால் முக்கியமான பதவிகளைப் பிடிக்க முடிந்தது. இதனால் தீவிரவாதத்தின் சங்கிலித் தொடர் ஒன்று முழுமையானது. இவர்கள் மீண்டும் பாகிஸ்தான் போய் அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொலைகளிலும் ஆள்கடத்தல்களிலும் மற்ற தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டார்கள். விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவனான, கேண்டர்பாலைச் சேர்ந்த மொஹமத் தௌத் கான், அல் பகர் என்னும் ஒரு தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான். 2500 காஷ்மீர் இளைஞர்களை அந்த அமைப்பில் பங்கெடுக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினான். 70 தீவிரவாதிகளை விடுவித்து அதனால் ஏற்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு யாரைக் குற்றம் சொல்லவேண்டும்? ‘ஜக்மோகன் காரணி (Factor) என்று நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களே இக்கேள்விக்கு பதிலளிக்கட்டும்.

கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், ஜனவரி 19, 1990க்கு முன்பு அந்தத் தீவிரவாதி தலைவனாகிவிட்டான். பொதுமக்களின் மனதை ஆக்கிரமிக்கும் அளவுக்கு, அவனுக்குத் தேவையான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு கடலில் மீன் போல அவனால் நீந்தமுடியும். அதற்குப் பின் கடல் அவனைச் சூழ்ந்துகொள்வதால் என்ன ஆகிவிடும்?

காஷ்மீர் தொடர்பான உங்களது எல்லாக் கவனக்குறைவுப் பாவங்களையும் நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்களது சின்னத்தனமான அரசியலுக்காக இதைச் செய்கிறீர்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் ஒரு வாக்கு வங்கி உருவாக்குவதைத் தாண்டி இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த காஷ்மீர் மக்களும் நான் முதன்முறை ஏப்ரல் 26 1984 முதல் ஜூலை 12 1989 வரை கவர்னாக இருந்தபோது என் மீது கொண்டிருந்த மரியாதையைக் குலைக்க நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள். எல்லா உண்மைகளையும் தாண்டி, தாக்குப் பிடிக்க முடியாத ஆதாரங்களைக்கொண்ட உங்கள் தனிப்பட்ட பிரகடனங்கள் மூலம் என்னை முஸ்லிம்களின் எதிரி என்று முத்திரை குத்தத் தொடங்கினீர்கள்.

இந்த நேரத்தில், ‘டெல்லி என்னும் சுவர்களுக்குட்பட்ட நகரம்: ஷாஜஹானாபாத்தை உயிர்ப்பித்தல்’ (Rebuilding Shahjahanabad) என்ற என் புத்தகத்தில் முன்வைத்த மூன்று முக்கியமான யோசனைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்: ஒன்று, ஜாமா மசூதி மற்றும் ரெட் ஃபோர்ட்டுக்கு இடையே பசுமைப் பகுதியை உருவாக்குவது தொடர்பானது. இரண்டாவது, நாடாளுமன்ற வளாகத்தையும் ஜாமா மசூதி வளாகத்தையும் இணைக்கும் சாலையை உருவாக்குவது. மூன்றாவது, நகரின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில், பழம்பெரும் பண்பாட்டை புதுமையான வடிவத்தில் வெளிப்படுத்தும் வகையில், மாதா சுந்தரி சாலை – மிண்ட்டோ சாலைக்கும் இடையே இரண்டாவது ஷாஜஹானாபாத்தை உருவாக்குவது. இந்த யோசனைகளெல்லாம் முஸ்லிம் எதிரியான ஒருவனின் சிந்தனையில் வருமா என்ன என்று உங்களைக் கேட்கிறேன்.

நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்தல்

காஷ்மீர முஸ்லிம்களிடையே எனக்கிருக்கும் பிம்பத்தைக் குறைக்கும் வகையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். எம்.பியான என்.கே.பி. சால்வே மே 25 1990ல் ராஜ்ய சபாவில் செய்தவையே இதற்கான ஆதாரம். பாம்பேவின் வாரப் பத்திரிகையான தி கரண்ட்டில் நான் கொடுத்ததாகச் சொல்லப்படும் பேட்டியை (அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை) முன்வைத்து, சால்வே கொஞ்சம்கூட நியாயமற்ற கருத்துகளைக் கூறினார்: “மதச்சார்புக்கு ஒரு வகையான மாதிரி உண்டு. அதை உணரமுடியும். எனவே அவர் (கவர்னர்) தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் நீக்கும் போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீக்குவதான மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது கவர்னர் தனது தகாத கொடிய வெறுப்புச் செயலுக்கு அதிகப்படியான வெட்கமற்ற செயல் ஒன்றையும் செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் போராளி என்று சொல்லி இருக்கிறார்.”

எனக்கு சால்வேவைத் தெரியும். அவர் செய்தது அவராகவே செய்தது என்று நான் நினைக்கவில்லை. அவரது பின்னணிக்கும் பயிற்சிக்கும் தொடர்பற்ற ஒன்றை அவர் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எந்த ஒருவரும், அதுவும் சால்வேவைப் போன்ற முக்கியமான ஜூரி, இப்படி ஒரு பேட்டி என்னால் தரப்பட்டதா என்ற சிறிய விஷயத்தை முதலில் பார்த்திருக்கவேண்டும். ஒருவேளை பேட்டி தரப்பட்டிருந்தால், என்னைக் குறிப்பவை உண்மையிலேயே என்னால் சொல்லப்பட்டதா என்றும் பார்க்கவேண்டும். வெளிப்படையான அவசரம் இதிலேயே தெரிகிறது. இந்தப் பிரச்சினை மே 25 அன்று எழுப்பப்பட்டது. இந்த வாரப் பத்திரிகையின் தேதி மே 26-ஜூன் 2 1990 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் நான் கொடுக்காத இந்தப் பேட்டியை அடிப்படையாக வைத்து நீங்கள் மே 25 அன்றே ஒரு கடிதத்தை அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறீர்கள். மதவெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை கவர்னராக வி.பி.சிங் நியமித்ததாக நீங்கள் விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்தக் கடிதம் மே 25 அன்று பரவலாக வெளிவரும்படியும் பார்த்துக்கொண்டீர்கள்.

மார்ச் 7 1990ல் நடைபெற்ற ஸ்ரீநகருக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, நான் 370வது பிரிவை 1986லேயே ரத்து செய்ய விரும்புவதாக நீங்கள் சொன்னீர்கள். இந்த காலகட்டம் முக்கியமான காலகட்டம். தீவிரவாதத்துக்கு எதிராக நான் போராடிய கடுமையான காலகட்டம். நாசவேலைகளின் தீய வெளிப்பாடுகளுக்குப் பின் ஜனவரி 26 1990ல் நிலைமை கொஞ்சம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம். நீங்கள் நினைத்தீர்கள், உண்மையை எனக்கெதிராகத் திரிக்க இதுதான் சரியான சமயம் என்று. உங்களது இந்தச் செயல் பொறுப்பானதா பொறுப்பற்றதா என்பதை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

1986 ஆகஸ்ட் – செப்டெம்பரில் நான் உண்மையிலேயே சொன்னது: ‘370வது பிரிவு என்பது, சொர்க்கத்தின் இதயத்தில் ஒட்டுண்ணிகள் பெருக இடமளிக்கும் களம் அன்றி வேறில்லை. இது ஏழைகளை ஒட்டிக்கொள்கிறது. அவர்களைக் கானல் நீர் போல ஏமாற்றுகிறது. அதிகார வர்க்கத்தினருக்கு நியாயமற்ற முறையில் பணத்தைக் கொண்டு வருகிறது. புதிய சுல்தான்களின் ஈகோவை விசிறிவிடுகிறது. சுருக்கத்தில், இது நீதியற்ற ஒரு நிலத்தை உருவாக்குகிறது, ரத்தமும் முரண்பாடுகளும் நிறைந்த ஒரு நிலத்தை உருவாக்குகிறது. வஞ்சகமும் போலித்தனமும் வாய்ப்பேச்சும் கொண்ட ஒரு அரசியலை உருவாக்குகிறது.

நாசவேலைகளை இது பெருகச் செய்கிறது. இரண்டு நாடுகள் என்ற ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தியா என்னும் கருத்தாக்கத்தை இது மூச்சுமுட்டச் செய்கிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான சமூக, கலாசாரப் பார்வையை இது மறைக்கிறது. தீவிரவாத நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இது அமையக்கூடும். இதன் அதிர்வுகளால் ஏற்படும் எதிர்பார்க்கவே முடியாத விளைவுகளை நம் நாடு முழுவதும் உணரக்கூடும்.

நான் சொல்லி இருந்தேன், ‘370வது பிரிவை நீக்குவது அல்லது அமலாக்குவது பிரச்சினை தொடர்பான அடிப்படையான விஷயத்தை மறந்துவிட்டோம். அது, இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் வரும் காலங்களில், ஆளும் அரசின் கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இது மாறும். அதிகாரத்திலும், நீதித்துறையிலும் சில தனிப்பட்ட லாபங்களுக்கு இது பயன்படுத்தப்படும். அரசியல்வாதிகளைத் தாண்டி, செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க வசதியான ஒன்றாக இதைப் பார்க்கிறார்கள். இந்த மாநிலத்துக்கு ஆரோக்கியமான நிதிச் சட்டங்கள் வருவதை இவர்கள் அனுமதிப்பதில்லை.

சொத்து வரி, நகர்ப்புற சில வரம்புச் சட்டம், கொடை வரி மற்றும் பல நல்ல சட்டங்கள் இந்த மாநிலத்தில் 370வது பிரிவைக் காரணக் காட்டி அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் 370வது பிரிவு தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது, தங்களுக்கான நீதியை மறுக்கிறது, அதேபோல் பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பங்கைத் தடை செய்கிறது என்பதைப் பொது மக்கள் உணராத வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.’

என் நிலைப்பாடு என்னவென்றால், 370வது பிரிவு என்னும் தடைச் சுவரின் மூலம் காஷ்மீரத்து மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையான நிலை அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். இது தொடர்பாக ஏகப்பட்ட யோசனைகளை நான் தெரிவித்திருந்தேன். அதேபோல், சீர்திருத்தம் மற்றும் நிர்வாக மறு கட்டமைப்பு தொடர்பாகவும் சொல்லி இருந்தேன். இவை கண்டுகொள்ளப்படவில்லை. மிகச் சிறந்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் என் கருத்தை வலுப்படுத்தி இருக்கின்றன. அதாவது 370வது பிரிவும் அதன் உபரி விளைபொருளான ஜம்மு காஷ்மீருக்குத் தனி அரசியலைமப்புச் சட்டம் என்பதும் போகவேண்டும். இது சட்டத்தாலும் அரசியலைப்பாலும் செய்யப்பட முடியக்கூடியது என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. நம் கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலான காரணங்களாலும், நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவை என்பதாலும் இது போகவேண்டும் என்கிறேன். ஊழல் மேட்டுக்குடியினரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மட்டுமே இந்தப் பிரிவு உதவுகிறது. இது இளைஞர்களின் மனதில் தவறான கருத்தைக் கொண்டு வருகிறது. மாநில ரீதியான பதற்றத்தையும் மோதல்களையும் இது உருவாக்குக்கிறது. சுயாட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாலும், நிதர்சனத்தில் அது சாத்தியமில்லை.

தனித்துவம் மிக்க கலாசாரம் கொண்ட காஷ்மீரை இந்தப் பிரிவு இல்லாமலேயே பாதுகாக்கமுடியும். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டால் அவர்களது உரிமைகள் பறிபோகும் என்பது பிற்போக்குத்தனமானது. 44 வருடங்களாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களது எளிய அடிப்படை உரிமையும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இது எல்லாவற்றுக்கும் மேலே, பரந்து விரிந்த இந்தியாவின் பன்முகத் தன்மையின் தேவையோடும் நிதர்சனத்தோடும் இது பொருந்தி வரவில்லை.

இன்றைய இந்தியாவின் தேவை, இந்தியாவின் ஆன்மாவையும் ஆசைகளையும் குலைத்து, வலிமையற்ற தலைமையால் ஒரு சிறிய ‘வாழைப்பழ குடியரசாக’ மாற்றப்படும் வெற்று இறையாண்மை அல்ல. மாறாக, நீதியின்பாலும் நியாயத்தின்பாலும், உண்மையையும் நேர்மையும் கருணையும் கொண்ட புதிய சமூக, அரசியல் மற்றும் கலாசார இந்தியாவே தேவை. தூய்மையான தீவிரமான துடிப்பான உள்ளார்ந்த அமைப்புதான் வேண்டும். இதுவே உண்மையான சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், உண்மையான எழுச்சியை அனைவருக்கும் தரும்.

நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற மாநிலங்கள் கூடுதல் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கும்போது, அவர்கள் தனித்துப் போகவேண்டும் என்ற பொருளில் அதைக் கேட்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அதிகாரப் பரவலாக்கலை விரும்புகிறார்கள். இதனால் நிர்வாகத்தையும் வளர்ச்சிப் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் சேவையின் தரம் கூடும். காஷ்மீரில் 370வது பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்க எழும் கோரிக்கை, அதாவது 1953ல் இருந்து நீர்த்துப் போகாமல் இருப்பதாகச் சொல்லப்படும் ‘அசலான தூய்மை’, வேறொரு நோக்கத்தில் இருந்து உருவாகி இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு தெளிவான தந்திரம் இது. தனி நாடு, தனிக் கொடி, முதலமைச்சருக்கு பதிலாக ஒரு பிரதமரை வைத்துக்கொள்ள விரும்புவது, கவர்னருக்குப் பதிலாக சாத்ர்-இ-ரியாசாத்தை வைத்துக்கொள்வது, கூடுதல் அதிகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவது போன்றவற்றுக்காகத்தானே ஒழிய, மக்களுக்கான நன்மைக்காகவோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவோ அல்லது பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை அடைவதற்காகவோ அல்ல. நியோ எலைட்டுகள் என்று அறியப்படும் ‘நியோ ஷேக்’குகளின் தேவைகளுக்காகத்தான்.

வாக்கு வங்கியின் காவலாளியாகவே தொடர விரும்புபவர்கள் தொடர்ந்து சொல்வார்கள், 370வது பிரிவு என்பது நம்பிக்கையின்பாற்பட்டது என்று. அதற்கு மேல் சொல்லமாட்டார்கள். அவர்களை அவர்களே இப்படிக் கேட்டுக்கொள்வதில்லை: நம்பிக்கை என்றால் என்ன? அதன் காரணம் என்ன? இந்திய அரசியலைமைப்புக்குள் இந்த மாநிலத்தைக் கொண்டு வந்து அதற்கு கூடுதல் ஒளியுள்ள, கூர்மையான நம்பிக்கையைத் தரவேண்டாமா? இப்படித் தருவதன் மூலம் இதை கூடுதல் நீதியும் அர்த்தமும் கொண்டதாக்கவேண்டாமா?

இதே ரீதியில்தான், ‘வரலாற்றுத் தேவையும் சுயாட்சியும்’ இவர்களால் அணுகப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் இவற்றுக்கான பொருள் என்ன? வரலாற்றுத் தேவை என்பது, காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதி என்று, அதீதமாகச் செலவு செய்து ஒரு கையால் ஒரு காகிதத்தில் எழுதித் தருவதும், நிதர்சனத்தில், இன்னொரு கையால் தங்கத் தட்டில் எழுதித் தருவதுமா? சுயாட்சி என்றால் என்ன? அல்லது 1953க்கு முன் அல்லது 1953க்குப் பின் என்று சொல்லப்படும் நிலை உணர்த்துவதுதான் என்ன? காஷ்மீரத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்ல இது வழிவகுக்காதா: ‘நீ அனுப்பு, நான் செலவு செய்கிறேன். ஊழல் மிகுந்த, உணர்ச்சியற்ற, தன்னலம் மிகுந்த குழு ஒன்றை நான் உருவாக்கினாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி டாமோக்ளெஸ்ஸின் வாள் உன் தலை மீது தொங்கினாலும், நீ இல்லை என்று சொல்லக்கூடாது.’

காஷ்மீர் பண்டிட்டுகள்:

உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினை இதற்கான தெளிவான உதாரணம்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் வரலாற்றில் எப்படியான ஏற்றத்தாழ்வும் இருந்திருக்கலாம். கடந்த காலங்களில் விதி பல அநியாயங்களை அவர்களுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இப்போது நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. மிக அறிவார்ந்த, பல்துறை நிபுணத்துவம் பெற்ற, பெருமை மிக்க இந்தியச் சமூகம் ஒன்று, சுதந்திர இந்தியாவில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய சமூகம் ஒன்றுக்கு அதற்கு இணையான மிகப் பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பது எப்படியான நகைமுரண்! இந்தக் கொடுமை மதவெறிபிடித்த சிக்கந்தர் போன்ற இடைக்கால சுல்தான்களின் கீழே நடக்கவில்லை. அல்லது எதேச்சிகார வெறிகொண்ட ஆஃப்கன் கவர்னர்களின் அரசில் நடைபெறவில்லை. மதச்சார்பற்ற தலைவர் என்று சொல்லப்படும் உங்களைப் போன்ற, விபி சிங்கைப் போன்றவர்களின் கீழே நடைபெறுகிறது. தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் அதிகாரத்தின் நாணமற்ற தேடலை, காஷ்மீரத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய தாங்கமுடியாத கஷ்டங்களையும் அவர்களது கண்களில் தெரியும் எதிர்காலம் குறித்த பயத்தையும் திட்டமிட்டே புறக்கணிப்பதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் வலியையும் பரிதவிப்பையும் அதிகரிக்கும் விதமாக, ‘காஷ்மீர் முன்முயற்சி குழு’ (Committee for Initiative on Kashmir) போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அதீத ஆர்வத்தாலும் அதீத செயல்பாட்டாலும் அவர்களது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றன இந்த அமைப்புகள். புலம்பெயர்ந்தவர்களின் கஷ்டகாலத்தின்போது துணை நிற்க விரும்புகிறவர்களை மதவெறியர்கள் என்று இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்.

இந்தியாவின் குரூரமான ஒரு பகுதி, தன் உடலிலும் ரத்தத்திலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளைக் கொடூரமாகத் தனிப்படுத்தி, அவர்களை மேய்ப்பன் இல்லாத மாடுகளாக்கி வைத்திருக்கிறது. பரபரப்பான, இதயமற்ற, ஆன்மாவை இழந்த நகரங்களில், காஷ்மீர் பண்டிட்டுகள் ஒரு தனிப்பட்ட சமூகமாகப் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. பிரிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட எல்லோராலும் கைவிடப்பட்டு, அவர்கள் இன்று தனியாக நிற்கிறார்கள். தங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக்கொண்டிருக்கும் சுக்கான் இழந்த உடைந்த படகை நம்பிக்கையின்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பான கரையில் நம்பிக்கையுள்ள எதிர்காலத்தில் தங்கள் பாதங்களைப் பதிப்பதற்கு முன்பாக, மிகவும் பயங்கரமான கொந்தளிப்பான கடலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

காஷ்மீரப் புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் இந்த பெரும் நெருக்கடி (அதனாலேயே இது ஒட்டுமொத்த காஷ்மீரின் நெருக்கடி), உண்மையில் இந்திய மதிப்பீடுகளின் மீதான நெருக்கடி. அதாவது அரசியலமைப்பின், அரசியலின், சமூகத்தின், தார்மிக விதிகளின் நெறிப்பிறழ்வு. அகதிகளின் முகாம்களை நான் பார்வை இட்டிருக்கலாம். மிகுந்த துயரில் இருக்கும் ஒரு சமூகத்துக்கு நீதியின் உறுதியான கரத்தை நீட்டி இருக்கலாம். பணத்தைப் பிச்சையிடுவதற்குப் பதிலாக விரட்டப்பட்ட காஷ்மீர பண்ட்டிட்டுகளின் அரசு அலுவலர்களுக்கு விடுமுறைச் சம்பளம் தர அறிவுறுத்தி இருக்கலாம். ஒரு தீவிரவாதியால் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் விதவையாகிப் போன அவரது மனைவி, தனக்கு வீடு ஒன்றை (அதுவும் பணம் கொடுத்தபின்பே) ஒதுக்கவேண்டும் என்று கோரிய வேண்டுகோளை ஏற்று ஒப்புக்கொண்டிருக்கலாம். இவற்றையெல்லாம் நான் செய்திருந்தால் நான் உடனே மதவெறியனாகி விடுகிறேன். முஸ்லிம்களின் எதிரியாகிப் போகிறேன். என்னைப் பற்றி இட்டுக்கட்டப்பட்ட கதைகள் பத்திரிகைகளில் பரப்பப்படுகின்றன. மாறாக, யாராவது இந்திய ராணுவத்தையும் கவர்னரின் நிர்வாகத்தையும் பொய்யாகக் குற்றம் சாட்டினால், வீட்டுமனைகளும் வண்டிகளும் தரப்பட்டன என்று எவ்வித நிரூபணமும் இன்றிச் சொன்னால், அதிலும் குறிப்பாக ஜெக்மோகனைத் தாக்கினால், அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. இந்த அறிக்கைகள் தேசிய மற்றும் பன்னாட்டு மன்றங்களில் விவாதிக்கப்படுகின்றன. உங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்வத்துடன் மேற்கோள் காட்டப்படுகின்றன. இப்படிச் செய்பவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்றும் முற்போக்காளர்கள் என்றும் மனித உரிமையின் காவலர்கள் என்றும் புகழப்படுகிறார்கள்.

ஜெக்மோகன் காரணி (Jagmohan Factor) என்பதற்கு உறுதியான சான்றுகள்:

எனது தற்பெருமைக்கு வழிவகுக்கும் எந்த ஒன்றையும் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், ஜெக்மோகனின் மதவெறிக் காரணி குறித்த உங்களது திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்துடன் உங்களை விட்டுவிடவும் தயாரில்லை. என்னைப் பற்றி இந்தப் பள்ளத்தாக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய சில அசைக்கமுடியாத ஆதாரங்களை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டு வரவேண்டும். நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் எனது இரண்டாவது கவர்னர் பதவிக்காலம் தொடர்பாகப் பொய்ப் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன்பு இதைச் செய்தாகவேண்டும்.

என்  மீது உருவாக்கப்பட்ட முஸ்லிம் எதிரி என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதில், இன்றைய காஷ்மீர அரசியலின் உங்களது முதன்மை ஆதரவாளரான டாக்டர் ஃபரூக் அப்துல்லாவுக்கும் பங்குண்டு. ஆகஸ்ட் 30, 1990ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில் வெளியான அவரது நேர்காணலில் அவர் சொல்கிறார், “முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு மாநிலத்துக்கு முஸ்லிம் எதிரி என்று நன்கு அறியப்பட்ட ஒருவர் கவர்னராக நியமிக்கப்படுகிறார்.” என்ன ஒரு பொய்ப் பிரசாரம். எத்தனை அநியாயம் இது. நவம்பர் 7, 1986ல் எனது பதவியேற்பின்போது ஃபரூக் அப்துல்லா பொதுக்கூட்டத்தில் சொன்னதை வைத்தே இதைப் புரிந்துகொள்ளமுடியும். “கவர்னர் அவர்களே, நீங்கள் எங்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்கமுடியாத அளவுக்கு அவசியம். மூளை வளர்ச்சி குன்றிப் போய், அழுகிக் கிடக்கும் இந்த நிர்வாகத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே மிகச் சிறந்த முறையில்  பணியாற்றி உங்களால் மாற்றமுடியும். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஒரு வாக்குப்பெட்டி, காங்கிரஸுக்கு ஒரு பெட்டி, உங்களுக்கு ஒரு பெட்டி என இன்று மூன்று பெட்டிகள் வைக்கப்படுமானால், உங்கள் பெட்டியே வாக்குகளால் நிறையும், மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக இருக்கும்.”

நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், உண்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத, குறிக்கோளற்ற, மேம்போக்கான அரசியலுக்கு மட்டுமே அக்கறை கொள்ளும் டாக்டர் ஃபரூக் அப்துல்லா போன்ற தலைவர்களை நாம் பெற்றிருப்பதுதான்.

மறைந்த தங்கள் அம்மாவையும் முஸ்லிம் எதிரி என்று டாக்டர் ஃபரூக் அப்துல்லா சொல்கிறார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஏனென்றால், 1984ல் அவர் பிரதமராக இருந்தபோதுதான் ‘வெளிப்படையான முஸ்லிம் எதிரி’ முதல் தடவையாக ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையான மாநிலத்துக்கு’ கவர்னராக நியமிக்கப்பட்டார்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா, ஃபிப்ரவரி 15, 1990 அன்று ஒரு எழுத்துபூர்வமான அறிக்கையை பத்திரிகைகளுக்கு உருதுவில் தந்திருக்கிறார். இதைத் தங்களுடன் கலந்தாலோசித்தே தந்ததாகத் தெரிகிறது. அதில் அவர் சொல்கிறார், “ஹல்லாகு மற்றும் செங்கிஸ்கானின் உருவகமாக விளங்கும் கவர்னர்  இந்தப் பள்ளத்தாக்கை மிகப்பெரிய சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜனவரி 20ல் இருந்து தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் குண்டுகளுக்கு எத்தனை பேர் பலியானார்கள் என்பதைச் சொல்வது கடினம். எத்தனை வீடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சொல்லமுடியாது. இந்த நேரத்தில், காஷ்மீரிகள் தங்கள் அன்புக்குரிய நாடு இப்படி சுடுகாடாக மாற்றப்படுவதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு மற்றும் உலக அளவில் மனிதத்தன்மையை ஏந்திப் பிடிப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு, துணை ராணுவப் படையினரால் காஷ்மீரிகள் கொல்லப்படுவது குறித்து உலகளாவிய விசாரணைக்கு உதவுங்கள்.”

இதோ உங்கள் ‘தேசப்பற்றாளர்’ காஷ்மீரை ‘ஆஸிஸ் வாட்டன்’ என்று சொல்வதைப் பாருங்கள். தனி நாடு வேண்டுமென யோசனை சொல்கிறார். இதோ உங்கள் ‘தேசத் தலைவர்’  காஷ்மீரிகள் இந்திய ராணுவத்தாலும் துணை ராணுவப் படையாலும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக உலகளாவிய விசாரணை  வேண்டுமெனக் கேட்பதைப் பாருங்கள். இதோ உங்கள் ‘பொறுப்பு மிக்க நண்பர்’ இந்தப் பள்ளத்தாக்கில் 25 நாளாகத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இருப்பதைப் பற்றியும், அதனால் ‘ஆயுதம் ஏந்தாத அப்பாவி காஷ்மீரிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்’ என்பதையும் ‘எத்தனை காஷ்மீரிகளின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன’ என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதைப் பாருங்கள். அவருக்கு மிக நன்றாகவே தெரியும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊரடங்கு இல்லாமல் எத்தனை நாள்கள் இருந்தன என்று. எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் பட்டியலிட்டிருக்கிறார்கள். ஃபிப்ரவரி 16 வரை 40 பேர். தொடர்ந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி விட்டுப்போன பெயர்கள் இருந்தால் அதையும் சேர்த்து அதிகாரபூர்வ அறிக்கையை உருவாக்கமுடியும். ‘ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள்’ இந்திய விமானப் படை அதிகாரிகளையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களையும், தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளையும், அப்பாவி இளைஞர்களையும் எப்படி இரக்கமே இல்லாமல்  கொல்லமுடியும் என்பதை விளக்க கொஞ்சம் கூட அக்கறையற்ற முன்னாள்  முதல்வர் ஒருவர் இங்கே இருக்கிறார். அதேசமயம் நீளமான, பரபரப்பான அறிக்கைகள் மூலம் மக்களைத் தூண்டத் தவறுவதில்லை. ஆனால் அதில், இப்படியான கொடூரமான கொலைகளைக் கண்டிக்க ஒரு வார்த்தை கூட அவருக்குக் கிடைப்பதே இல்லை.

டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் இந்தத் துரதிர்ஷ்டமான  போக்கை ஏன் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை இந்த நாடு அறிந்துகொள்ள உரிமையில்லையா? பிப்ரவரி 7, 1991ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில் வெளியான அவரது சமீபத்திய அறிக்கையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? “எனது கட்சிக்காரர்கள் ரகசியமாக எல்லை தாண்டிப் போய் ஆயுதப் பயிற்சி பெற்று என்ன வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள். ஆனால் ஜக்மோகன் கையில் பிடிபட்டுவிடாதீர்கள்.”

தனிப்பட்ட முறையில் என் முதுகில் குத்துவது எனக்கு ஒரு பொருட்டே இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் இந்தப் பிரச்சினையை ஆற விடாமல் கனன்று கொண்டே இருக்க வைப்பதன் மூலம், இன்னும் பல மரணங்களையும் பல அழிவுகளையும் கொண்டுவருகிறீர்கள்.

வேர்கள்:

ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள்: ‘நான் வரலாற்றைப் படிப்பவன் அல்ல, படைப்பவன்.’ வரலாற்றைப் படிக்காமலேயே படைக்க விரும்புபவர்கள் பொதுவாக மிக மோசமான வரலாற்றையே படைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். ஒரு பிரச்சினையின் உள்ளார்ந்த போக்கையும், நிகழ்வுகளை வடிவமைத்து எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அடிப்படைச் சக்திகளையும் இப்படிப்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

வரலாற்று நோக்கில் ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததால், நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இப்பிரச்சினையின் வேர்களையும், அதனால் இன்று வளர்ந்து நிற்கும் காஷ்மீர் பிரிவினைவாதத்தையும் காஷ்மீரின் தோல்வியையும் புரிந்துகொள்ள முடியவில்லை. காஷ்மீரின் ஆன்மாவில் விஷ விதைகள் நிரந்தரமாக விதைக்கப்பட்டுவிட்டன. இவற்றுக்கு மிகத் தாராளமாக உரமும் தரப்பட்டுவிட்டது. இந்தப் பயிர்களையும் அதற்கான உரங்களையும் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டியது உங்களது கடமை. ஆனால் உங்களுக்கோ வரலாற்றின் பாலபாடம் கூடத் தெரியவில்லை. தீமையுடன் சமரசம் செய்துகொள்வது இன்னும் பெரிய தீமைகளையே கொண்டு வரும். நமக்கு வசதியற்ற உண்மைகளைப் புறக்கணிப்பது அதை மேலும் சிக்கலாக்கும். பலவீனமானவனைக் கொடுமைப்படுத்துபவன் முன்பு பணிந்து போவது நாளை கசாப்புக் கடைக்காரனைக் கொண்டு வரும். இவை எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை.

எனது கருத்தை வலியுறுத்தும் பல உதாரணங்களை என்னால் தரமுடியும். ஆனால் ஒன்றிரண்டு உதாரணங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறேன்.

மென்மையான போக்கும் சரணடைதலும்

அக்டோபர் 2, 1988ல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று அவரது சிலை ஸ்ரீநகரில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட இருந்தது. விழா அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார். ஆனால் சில முஸ்லிம் வழக்கறிஞர்கள் இதை எதிர்த்தார்கள். விழாவின்போது பிரச்சினை செய்யப்போவதாக அவர்கள் மிரட்டினார்கள். முதலமைச்சர் கைவிட்டார். அதுவும் வேண்டுமென்றே, மிரட்டல்களுக்குப் பணிந்து அப்படி நடந்துகொண்டார். விழா ரத்து செய்யப்பட்டது.

நடந்தது சொல்வது என்ன? மதச்சார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியான மதச்சார்பற்ற காஷ்மீரில், நம் தேசத்தின் மத நல்லிணக்கத்துக்காகத் தன் உயிரையே தந்த துறவியைப் போன்ற தேசத் தந்தையின் சிலையை, இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் நீதிபதியால்கூட நிறுவ முடியாது. இதை நிறுவுவதற்கு எதிராகக் கலகம் செய்தவர்களில் முக்கியமானவர் யார்? வேறு யாருமில்லை, மொஹம்மட் ஷாஃபி பட். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர். தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர். பின்னர் இவருக்கு 1989 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீநகரில் இருந்து போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. மார்ச் 7 1990ல் நீங்கள் ஸ்ரீ நகர் வந்தபோது, கவர்னரின் நிர்வாகத்துக்கு எத்தனை கஷ்டங்களைத் தர முடியுமோ அவற்றைத் தருவதற்காக, இவருடனேதான் நீங்கள் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவழித்தீர்கள்.

அந்த நேரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி (எஃப்), காங்கிரஸ் (ஐ) ஆட்சியில் இருந்தது. இப்படித்தான் கொள்கைப் பிடிப்பில்லாமல் அவை நடந்துகொள்ளும். அரசை அமைத்த காங்கிரஸ்காரர்களின் குணமும் இப்படிப்பட்டதுதான். அந்த விழா ரத்து செய்யப்பட்டபோது, எப்படியாவது அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, அதற்கு எதிராக இவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.

பலவீனமானவர்களை மிரட்டுபவர்களின் பசிக்கு இதைவிடச் சிறப்பாக யாரும் படையல் அளித்திருக்கமுடியாது. மிரட்டல்கள் இதைவிடச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கமுடியாது. மிரட்டல்காரர்களுக்கு இதைவிடச் சாதாரணமான, உறுதியற்ற எதிரிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. இப்படிச் செய்தால் இதைவிடப் பெரிய இலக்குடன் மிரட்டல்காரர்கள் வளர்வார்கள் என்பது இயல்புதானே? இதைவிடத் தீவிரமான மிரட்டல்களை முன்வைத்தால் இன்னும் அட்டகாசமான முடிவுகள் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்களா? காஷ்மீரின் இன்றைய சூழலில் இப்படி மென்மையான போக்குடன் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து மிரட்டல்காரர்களிடம் சரணடைந்தால், அது தீவிரவாதத்துக்கும் போருக்கும் வழிவகுக்காது என்பதை அப்பாவிகளால் மட்டுமே நம்பமுடியும்.

மத நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை (Religious Institutions (Prevention of Misuse) Act) 1988ல் அரசு இயற்றியது. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாது. ஏனென்றால், 370 பிரிவு. இந்தச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தவேண்டும் என்றால், மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அது தரப்படவில்லை. ஏன்? ஏனென்றால், ஜம்மு காஷ்மீர் வேறுபட்டது! மத நிறுவனங்களின் இருப்பிடங்களை அரசியல் நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துவதை முற்றிலும் நீக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்குத் தரப்பட்ட பதில்! எப்பேற்பட்ட பதில்!

ஜம்மு காஷ்மிரைவிட இந்தச் சட்டம் மிகவும் தேவையான இடம் வேறில்லை. மத நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரைவிட வேறு எங்கும் இத்தனை தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை. விஷ விதைகளான மதவெறியும் அடிப்படைவாதமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கே இருக்கும் மசூதிகளின் பிரசங்க மேடைகளில் மிகக் கவனமாக விதைக்கப்படுவது போல வேறு எங்கேயும் விதைக்கப்படுவதில்லை. ‘இந்திய ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய மதச்சார்பின்மை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய சோசியலிசம் முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்று இங்கே பிரசங்கம் செய்யப்படுவதைப் போல வேறு எங்கேயும் செய்யப்படுவதில்லை. அப்படி இருந்தும் இரண்டு மதச்சார்பற்ற கட்சிகளால் ஆளப்படுவதாகச் சொல்லப்படும் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதிலுள்ள சதி என்னவென்றால், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் 100 மில்லியன் முஸ்லிம்களுக்கும் நல்லது என்று கருதப்படும் ஒரு சட்டம், காஷ்மீரின் 40 லட்சம் முஸ்லிம்களுக்கு நல்லதல்ல என்று கருதப்படுவதுதான்.

தேசிய நோக்கில் ஒரு கட்சி செயல்படாமல் போனால், தேசியவாத சக்திகள் ஒரு நாட்டை ஆள்கிறது என்று சொல்வதில் என்ன  பயன்? மதவாதத்தின் அரசியலில் மனப்பிறழ்ச்சி கொண்ட அடிமைகளாக அவர்கள் சிக்கி இருந்தால்… வெற்று வார்த்தைகளில் மட்டும் நம்பிக்கை கொண்டு செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால்… நாட்டை வழிநடத்தாமல் மிரட்டல்களுக்கு அடிபணிந்து நடந்தால்… பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடிக்காமல் அதை ஊக்குவித்தால்… மனிதத் தன்மையிலும் ஆன்மிகத்திலும் பலமான  புதிய சமூகத்தை உருவாக்காமல், அழுகி துர்நாற்றம் வீசும் பழைய பிரச்சினைகளை அறிந்தோ அறியாமலோ இன்னும் கிளறி இன்னும் பலம் கொண்டு எழச் செய்து தெளிவற்ற நிலையைத் தொடரச் செய்தால்… நம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இலக்குகளுக்கும் எதிராக, இன்றைய சூழலுக்கு மட்டுமே எப்போதும் முன்னுரிமை அளித்தால்… இவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த மூர்க்கமான அமைப்புகள் நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று அறிந்துகொள்ள வித்தியாசமான நுண்ணறிவு வேண்டாமா?

எவ்வித அரசியல் அல்லது தனிப்பட்ட விருப்புவெறுப்புமின்றி அணுகும்படி மட்டும் கேட்டுக்கொண்டு இக்கேள்வியை நம் தேசத்தின் நலம்விரும்புபவர்களிடம் விட்டுவிடுகிறேன். எப்படி டாக்டர் ஃபரூக் அப்துல்லா என்னை ஹல்லாகு என்றோ செங்கிஸ்கான் என்றோ அழைக்கலாம்? என்னை ‘370வது பிரிவின் எதிரி’ என்று அம்பலப்படுத்த நீங்கள் ஸ்ரீநகர் வரை வருகிறீர்கள். அதே நேரம் பெனாசிர் பூட்டோ என்னை துண்டு துண்டாகக் கிழிப்பதாக சபதம் எடுக்கிறார். ‘ஜக்மோகனை பாக்பாக் மோகன் ஆக்கவேண்டும்?’ (*பாக் என்றால் ஹிந்தியில் துண்டு துண்டாக அதாவது பாகம் என்று பொருள்.)

காஷ்மீரின் இன்னும் பல தரப்புகள் பொய்களின் குவியல்களுக்குக் கீழே புதைக்கப்பட்டுள்ளன.  மேம்போக்கான கருத்துகளில் அவை புதைந்து போய்க் கிடக்கின்றன. இந்தக் குவியல்களில் சிலவற்றை நீக்குவதில் இத்தனை நாள் நான் பரபரப்பாக இருந்தேன். இந்தப் பிரச்சினையின் உண்மையான தன்மையை ஒருநாள் இந்தத் தேசம் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். நான்தான் அவர்களின் மிகச்சிறந்த நலம்விரும்பி என்று காஷ்மீரப் பொதுமக்கள் உணர்வார்கள். தங்களைச் சுரண்டும் தன்னலக் குழுக்களிடம் இருந்தும், மதவாத ‘சீஸர்’களின் சூழ்ச்சிகளில் இருந்தும், உண்மையை வேண்டுமென்றே மறைக்கும் கும்பல்களிடமிருந்தும் காஷ்மமீர மக்களை நிரந்தரமாகக் காக்க எண்ணினேன்.

காஷ்மீரில் பாரத மாதாவைக் கைவிடும் பாவத்தை நீங்கள் ஏற்கெனவே செய்துவிட்டீர்கள். இப்போது இன்னொரு மாதாவையும் கைவிடும் பாவத்தையும் கூட்டிக்கொள்ளாதீர்கள். என்ன இருந்தாலும் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அவளை நினைவில் வையுங்கள். அவள் ஒருவேளை உங்கள் அலட்சியத்தை மன்னிக்கக்கூடும். ஆனால், உங்கள் தவறுகளுக்காக, அதுவும் அவற்றைத் தொடர்ந்து உங்களிடம் நினைவூட்டிக்கொண்டே இருந்த அப்பாவியையே குற்றம் சுமத்திய பாவத்துக்காக அவள் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டாள்.

என்னைப் பொருத்தவரை, காஷ்மீரில் மிகச் சரியான செயல்களையே செய்தேன் என்கிற சோகமான பெருமை எனக்கு இருக்கிறது. உண்மைதான், உள்ளூர் மக்களின் நல்லெண்ணத்தை நான் தற்காலிகமாக இழந்திருக்கிறேன் என்றே தெரிகிறது. ஆனால் நான் யாரிடமும் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை. தேசியக் கடமையைச் செய்யவே நான் இரண்டாம் முறை கவர்னராகச் சென்றேன். நம் நாட்டின் அரசியலும் நிர்வாகமும், ஒரு தீவிரமான பிரச்சினையை அதன் வேரோடு நீக்கவே முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டுவிட்டிருக்கிறது. தேர்தல்கள் அதன் பொருளையே இழந்து நிற்கின்றன. இந்திய ஜனநாயகமும், அதன் அரசியலமைப்பும் ஆரோக்கியமான பண்பாட்டு அடித்தளத்தையும், மண்ணின் தூய்மையான ஆன்மாவையும் பெறாதவரை இந்த பொருளற்ற நிலை தொடரவே செய்யும். நீதியின் விதையும், தன்னலமற்ற சேவையுமே முளைவிட்டு மகா மரமாகப் பூக்கமுடியும். அதுவே கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நிழலைத் தர முடியும். இப்போது அதன் ஆன்மா இல்லாமல் போய்விட்டது. கண்பார்வையற்றவர்கள் தங்கள் கைகளில் விளக்கை ஏற்றி நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சினையிலிருந்து இன்னொரு பிரச்சினைக்கென நாம் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு கவிஞர் சொல்வதைப் போல:

அது நிகழ்ந்தது
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அது மீண்டும் நிகழும்.

வாழ்த்துகளுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஜக்மோகன்

Share

A forgotten Kargil Hero

நீங்கள் மறந்துவிட்ட ஒரு கார்கில் ஹீரோ: என் அப்பா

தீக்‌ஷா

இதை எழுதவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. என் நோட்டிஸ் போர்டில் நான் ஒட்டி வைத்திருக்கும் அவரது பெயர் பொறித்த உலோக பிளேட்டை வெறித்துப் பார்க்கிறேன். எத்தனை எளிதாக நீங்கள் அவரை மறந்துவிட்டீர்கள் என்ற கோபம் எனக்குள் அதிகமாகிக்கொண்டே போகிறது. கருப்புநிற பிளேட்டில் வெண்ணிற எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்: C B DWIVEDI. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்!

ஒவ்வொரு வருடமும் ‘கார்கில் ஹீரோக்கள்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகளைப் பார்க்கிறேன். ஒன்றில்கூட இந்தப் பெயரை நான் பார்த்ததே இல்லை. நானும் பொறுமையாக 16 வருடங்கள் காத்திருந்தேன். ஜர்னலிசம் படிக்க நான் முடிவெடுத்ததற்கு என் அப்பாவே காரணம். இந்த உலகத்திலிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் எதையேனும் வித்தியாசமாக செய்து சாதிக்க நான் நினைப்பதற்கும் இவரே காரணம். எனவே இவரது கதையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

அவர் வாழ்க்கை வீணாகிப் போன ஒன்றல்ல. உண்மையில் இன்று நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நீங்கள் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

ராணுவம் என்பதும் ஒரு வேலைதான். ஆனால், வேலையைக் காட்டிலும் அதில் நிறைய அதிகம் உள்ளது. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருத்தனுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலையைக் கொடுத்து அவனிடம் ‘நாளைக்கே நீ சாக நேர்ந்தாலும் நேரலாம்’ என்று சொல்வதைப் போன்றது அது. அப்படிச் சொன்னால், பத்து லட்ச ரூபாயாக இருந்தாலும் ஒருத்தரும் வேலைக்கு வரமாட்டார்கள். நீங்கள் துப்பாக்கி ஏந்தும் பிரிவுக்குப் போகிறீர்களா அல்லது வேறு பிரிவுக்கா என்பதைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு ராணுவத்திலும் தரப்படும். அப்போது போர்முனையில் முன் வரிசையில் நின்று, எதிரிகளின் குண்டுகளை நம் நாட்டு மக்களுக்காக நெஞ்சில் ஏந்திக்கொள்ளும் ஒன்றைத் தேர்வு செய்ய நிறைய நெஞ்சுரம் வேண்டும். என் அப்பா அதைத்தான் செய்தார். அவர் பீரங்கிப் படையில் சேர்ந்தார்.

இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகள் சேவை செய்தார். இன்று இத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் கர்னல் ஆகிவிடமுடியும். அவர் இன்று உயிருடன் இருந்தால் தற்போது எந்தப் பதவியில் இருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். தூங்கக்கூட நேரம் இல்லாத போர் முனையில் இருந்தாலும் கூட, தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுத மறக்காதவர் மேஜர் சி.பி. த்விவேதி. போர் முனையிலும் தான் மிக நல்ல நிலையில் இருப்பதான பாவனையுடன் எழுதுவார். அவர் என் அம்மாவுக்கு எழுதிய கடைசி கடிதம் இப்படிச் சொல்கிறது:

அன்புள்ள பாவ்னா,

அன்பு முத்தங்கள்.

…டிவியில் காண்பிக்கப்படும் பல செய்திகள் உண்மைதான். ஆனால் பல செய்திகள் பொய்யானவையும்கூட. எனவே அதை எல்லாவற்றையும் அப்படியே நம்பவேண்டாம். கடவுளை மட்டும் நம்பு…

அப்பா தன் உயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்வதற்கு இரண்டு நாள்கள் முன்பு எழுதிய கடிதம் இது. அப்பா முழுக்க முழுக்க குடும்பத்தில் அதிகப் பிரியம் கொண்ட ஒருவர். என் அம்மாதான் வீட்டின் தலைவர். ஆனால் அவளை இப்படி ஆக்கியதும் என் அப்பாதான். ஸ்ரீ நகரில் இருந்து அழைக்கும்போது கூட, ‘என் செல்லக் குட்டி எங்கே’ என்றுதான் கேட்பார். உடனே நாங்கள் அம்மாவை அழைப்போம். இதன் அர்த்தம், அவர் அன்பற்ற அப்பா என்பதல்ல. அவர் தனது விடுமுறையை எங்கள் தேர்வுகளை ஒட்டியே திட்டமிடுவார். நாங்கள் அனைவரும் அவரை நம்பியே இருந்தோம். அவர் இல்லாவிட்டால், என் சகோதரிக்கு தேர்வுகளுக்கு தயார் செய்யவே தெரியாது.

கார்கில் போர் முனையில் இருந்தாலும் அப்பா எப்படி அவரது கடிதங்களில் இத்தனை இலகுவாக இருந்தார் என்பதை என்னால் இன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எங்களை சேட்டிலைட் போனில் அழைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  அவரை சுற்றி நிலவும் மிக மோசமான வானிலையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஒரு தன்னலமற்ற மனிதரை நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும். அப்படி ஒரு மனிதரைப் பார்த்தால், அன்றே நான் அவரைத் திருமணம் செய்துகொள்வேன்.

எல்லாப் பிரிவுகளும் ஒவ்வொரு போரின் போதும் போர் முனைக்குச் செல்லமாட்டார்கள். கார்கில் போரின் போது பீரங்கிப் படையும் காலாட்படையும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி சுடும் வீரர்கள் பீரங்கிப் படையைச் சேர்ந்தவர்களே. மேஜர் சி.பி. த்விவேதி பெருமை மிக்க ஒரு துப்பாக்கி சுடும் வீரர். பீரங்கியைப் போன்ற பெரிய அளவிலான துப்பாக்கி ஒன்றின் முனையில் தைரியத்துடன் அமர்ந்து, பயமே இன்றி எதிரிகளை எதிர்கொண்டு, இரவில் இருந்து விடியும் வரை அவர்கள் மீது குண்டுகளைப் பொழிபவர் அவர். ஆம், இப்படித்தான் கார்கில் போர் நடந்தது. இரவுகளில் உலகமே நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தபோது, இந்திய ராணுவம் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.

மே 1999 14ம் தேதி அதிகாலை. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கார்கிலின் 325வது ரெஜிமெண்ட் ட்ராஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது. கார்கில் பிரச்சினை எங்கள் எல்லாருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்திய வரலாற்றில் அது யாரும் எதிர்பார்க்காத ஒரு போர். அப்போதுதான் கோடை விடுமுறையின்போது நானும் என் அம்மாவும் என் அக்காவும் அப்பாவைப் போய் பார்த்துவிட்டு வந்தோம். நாங்கள் அவருடன் 12 மணி நேரம் மட்டுமே இருக்க முடிந்தது. அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘மிகக் குறைந்த நேரமே பார்க்க முடிந்தது என்றாலும் 12 மணி நேரம்தான் பார்க்க முடிந்தது என்றாலும், உன்னைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் உங்களை சந்திக்கிறேன்.’

கொடூரமான நிஜம் என்னவென்றால், அதற்குப் பிறகு நாங்கள் அவரைப் பார்க்கவே இல்லை. அதுதான் நாங்கள் கடைசியாகப் பார்க்கப்போவது என்று தெரிந்திருந்தால், அந்த பன்னிரண்டு மணி நேரத்தை அரக்கபரக்க உணவு உண்பதில் செலவழித்திருக்காமல், வேறு வகைகளில் உருப்படியாகச் செலவழித்திருப்போம். என் அப்பா உண்மையில் ஒரு ரொமேண்டிக்கான மனிதர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். சில சமயம் சமைப்பார். நன்றாகச் சமைப்பார். உண்மையான அப்பா. அதெல்லாவற்றையும்விட உண்மையான வீரர். அவருடன் இருந்த ஜவான்கள் அவரை மிகவும் விரும்பியதற்குக் காரணம், போர்க்காலத்தின் போது அவரே மிகவும் உந்துசக்தியாக இருந்தார் என்பதற்காகவும்தான். அவர் 315வது ரெஜிமெண்ட்டில் இருந்தவரை, இந்தப் பிரிவு இரண்டே இரண்டு பேரை மட்டுமே கார்கில் போரில் இழந்தது.

போர் முகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் பீரங்கிப் படைப் பிரிவு 315வது ரெஜிமெண்ட்தான். அந்த நேரத்தில் அப்பா அந்தப் பிரிவின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆபரேஷன் விஜய் (கார்கில் போர்) உண்மையில் மிகவும் கடுமையான ஒரு போர். போதுமான தகவல்களே கிடைக்காதது, போருக்குத் தயாராகாத ராணுவம் மற்றும் பொதுமக்கள் என்ற போர்வையில் நம் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட கோழைகளின் திட்டமிட்ட நகர்வு – இவையெல்லாம்தான் காரணம்.

முதல்நாள் ரெஜிமெண்ட் ட்ராஸ் என்னும் இடத்தின் கீழ்மட்ட முகாமுக்கு வந்து சேர்ந்தது. அப்போது அவர்கள் மீது குண்டுமழை பொழிந்தது. என் மாமா கர்னல் உபாத்யாய் என் அப்பாவின் கடைசிக் காலங்களில் ஒவ்வொரு நொடியும் அவருடன் இருந்தவர். அவர் சொல்கிறார், எங்கே எதிரிகள் அமர்ந்திருந்தார்கள் என்றே தெரியவில்லை என்று. அன்றிரவு என் அப்பாவிடம் அவர் இப்படிச் சொன்னாராம்: ‘நாம் நிச்சயம் பெரிய அபாயத்தில் இருக்கிறோம்.’

எதிரிகள் எப்படிப் பரவி எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த யோசனையும் இன்றி ராணுவம் போர் முனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு பக்கம் டோலோலிங், மறு பக்கம் டைகர் ஹில்லும் 4875வது முனையும் இருக்க, ராணுவத்தினர் தீவிரமாகத் திட்டமிட்டார்கள்.

அப்பாவின் பிரிவான 315வது ரெஜிமெண்ட்க்கு, 1 நாகா, 8 சீக், 17 ஜாட் மற்றும் 16 க்ரீனடயர்ஸ்களின் நடவடிக்கைகளுக்கு உதவவேண்டிய பொறுப்பு இருந்தது. இவர்கள்தான் டோலோலிங், 5140வது முனை, ப்ளாக் டூத், டைகர் ஹில், 4875வது முனை (கன் ஹில்), மஹர் ரிஜ்ட் மற்றும் முஷ்கோ பள்ளத்தாக்கில் உள்ள ட்ராஸ்-இல் இருக்கும் சண்டோ டாப் ஆகிய இடங்களை மீட்கப் போனவர்கள். இரண்டாவது கமாண்டோ பொறுப்பில் இருந்த என் அப்பாதான், இந்த பீரங்கிப் படைப் பிரிவுகள் வருவதற்கான எல்லா விவரங்களையும் சேகரிக்கவேண்டும். எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து, நெடுஞ்சாலையைச் சுற்றி இருக்கும் காலி இடங்களை நோட்டமிடுவார். அப்போதுதான், வந்துகொண்டிருக்கும் பீரங்கிப் படைகளின் வண்டிகளை அங்கே நிறுத்தமுடியும். தேவையான வெடிகுண்டுகளைக் கொண்டு வருவது, சுடுவதற்கான ஒருங்கிணைப்பு, போரைப் பற்றிய சர்வே போன்ற எல்லா திட்டமிடல்களுக்கும் என் அப்பாதான் பொறுப்பு. மே 14 முதல் 31 வரையிலான காலகட்டம், இந்தப் பிரிவுக்கு மிகவும் மோசமான காலகட்டம். ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, உடனே அடுத்த இடத்துக்கு போக வேண்டி இருந்தது. அந்தச் சமயத்தில் இப்படி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.

மேப் முன்பு அமர்ந்துகொண்டு மறுநாள் என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடும் நேரம் மட்டுமே என் அப்பாவுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம்! அப்படி இருந்தும் அப்பா தொடரந்து கடிதம் எழுதினார். அதை மட்டும் அவர் மறக்கவே இல்லை.

காலாட்படைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தோளில் சுமந்துகொண்டிருந்த 315வது ரெஜிமெண்ட்டுக்கு இரவு வேளைகளில் இரண்டு தேர்வுகளே இருந்தன. ஒன்று, சுடுவதை நிறுத்திவிட்டு, மறுநாள் காலை வரை தங்கள் கூடாரங்களில் அல்லது பதுங்கு குழிகளில் காத்திருப்பது. அல்லது தொடந்து சுட்டுக்கொண்டே இருந்து காலாட்படைகளைப் பாதுகாப்பது. என் அப்பா பெரும்பாலும் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். பீரங்கிப் படைகளுக்குப் பதுங்கு குழிகள் கூட அங்கே இல்லை. அவர்கள் கூடாரங்களில்தான் தங்கி இருந்தார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சுடும்போது  மறைந்துகொள்ள முடியாது. ஏனென்றால் சுட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கியின் முனையில் உட்கார்ந்துகொண்டுதான் அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டார்கள். எதிரிகளை நேருக்கு நேர் பார்த்துச் சுடுவார்கள். அங்கேதான் என் அப்பா இருந்தார். துப்பாக்கி முனையின் உச்சியில். எந்த பயமும் இல்லாதவராக!

இந்திய விமானங்கள் கூட இந்த சமயத்தில் நிறுத்தப்பட்டன. இந்த சமயத்தில்தான் ஸ்க்வாட்ரன் தலைவர் அஜய் அஹுஜா மே 27, 1999 அன்று கொல்லப்பட்டார். இது இந்தியப் படைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதற்காக செய்தாகவேண்டியதை செய்யாமல் இருக்க முடியாது.

இன்னும் நினைவிருக்கிறது, நானும் என் அக்காவும் ஊடி-யில் ஒரு ஆப்பரேஷனை என் அப்பா கமாண்ட் செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த வருடம் என நினைவில்லை. எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவர் எங்கோ தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். ஒரு மலையின் உச்சியில் எங்களை உட்காரச் சொல்லி இருந்தார். அங்கிருந்து அவர் வேலை செய்வதை நாங்கள் பார்க்கவேண்டும். அப்பா தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, ஒரு உண்மையான வீரரைப் போலத் தன் சக வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தார். நாங்கள் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஆணை பிறப்பித்துக்கொண்டே அப்பா சும்மா நடந்துகொண்டிருக்கிறார்” என்று பேசிக்கொண்டோம்.

அவர் எப்பேற்பட்ட தலைவர் என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அன்று எங்களுக்கு இல்லை. அன்று அவர் உயிருடன் திரும்பி வந்ததற்குக் காரணம், எதிரிகள் அன்று அமைதியை வலியுறுத்தும் விதமாக வெள்ளைக் கொடியைக் காட்டியதால்தான். அப்பா என்றுமே வெற்றியாளராகவே இருந்தார்.

ஜூலை 2, 1999 மாலை. 315வது ரெஜிமெண்ட்டுக்கு இன்னொரு குழப்பம் வந்தது. சுடுவதைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா? ஆனால் சுடுவதை நிறுத்தினாலோ காலாட்படைகள் (18வது க்ரீனடயர் மற்றும் 9 சிக் பிரிவுகள்) மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்பா மீண்டும் சுடுவதைத் தொடரும் முடிவையே தேர்ந்தெடுத்தார். தன் கூடாரத்திலிருந்து வெளியே ஓடிய அப்பா, தன் சக வீரர்களை ஊக்குவித்தபடி, சுடுவதைத் தொடரச் சொன்னார். இதை வெற்றிகரமாக முடித்து மீள்வது என்பது எத்தனை கடினமானது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர் அந்தக் கடினமான முடிவை எடுக்கவேண்டி இருந்தது. ஒன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அல்லது ஒட்டுமொத்த பிரிவையும் பாதுகாப்பது – இந்த இரண்டில் அவர் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வீரனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் வெறி இது. நமக்கு இது புரியாது. அவர் வெறியுடனேதான் இருந்தார்.

அப்பா துப்பாக்கிச் சுடுபவரின் இடத்தில் அமர்ந்து, எதிரிகளை நோக்கிச் சுட்டார். அப்போது அவருக்கு வலப்பக்கம் ஒரு குண்டு வந்து விழுந்து வெடித்தது. அவரது முழங்கைகளில் காயம் ஏற்பட்டது. அதை அவர் உணர்ந்தார்தான். ஆனால், அவற்றில் சில, கைகளைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள்ளேயும் போய்விட்டது என்பதை அவர் உணரவில்லை. போரின் வேகத்தில் ஒரு வீரன் தன் வலியை உணர்வதில்லை என்பதுகூட ஒருவேளை காரணமாக இருந்திருக்கக்கூடும். அதனால் அவர் உடலுக்குள் பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆனால் தனது கைகளில்தான் காயம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார்.

அந்த குண்டு காரணமாக, அப்பாவும் நான்கு மற்ற துப்பாக்கி சுடும் வீரர்களும் மரணம் அடைந்தார்கள். கன் பொசிஷன் ஆஃபிஸரும் துருப்பின் தலைவரும் காயத்தோடு தப்பித்தார்கள்.

அப்பா அப்போது 2 ஐசி-யாகவே இருந்தார். பயங்கரமான போர் முகத்தில் தனியாளாகப் பல ஆப்பரேஷன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30க்கு ரெஜிமெண்ட் 315ன் வேலை நேரம் தொடங்கும். தங்கள் வண்டிகளில், ஹெட்லைட்டை அணைத்துவிட்டு மலைகளை அவர்கள் சுற்றி வருவார்கள். அப்படிப்பட்ட அபாயத்தில்தான் அவர்கள் இருந்தார்கள். 315ன் ஹீரோக்கள் இந்தியாவுக்கு வெற்றியைக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு கௌரவப் பட்டங்களும் தரப்பட்டன. ஆனால் இந்திய மக்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தரவில்லை. அந்த சமயத்தில் இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். கார்கிலில் ராணுவ வீரர்களே அந்த நேரத்தில் தங்கள் வாழ்க்கையை பணையமாக வைத்துப் போரிட்டார்கள். அவர்கள் போரின் முதுகெலும்பாக விளங்கினார்கள். ஆனால் அவர்கள் மக்களால் மீண்டும் நினைக்கப்படவே இல்லை.

டைகர் ஹில்தான் இந்தியப் படைக்கான இறுதிப் புள்ளி. அங்கே இந்திய மூவர்ணக் கொடி உயரப் பறந்ததை என் அப்பா பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்திருந்தாலும், அந்த வெற்றியை உணர்ந்திருப்பார் என்பது மட்டும் உறுதி. இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது. எந்த ஊடகமும் அதை என் அப்பாவிடமிருந்து பறித்துவிடமுடியாது.

ஜூலை 2, 1999. அந்தச் செய்தி வந்தபோது எங்கள் உலகம் தகர்ந்து போனது. என் அப்பாவுக்கு நாங்கள் குழந்தைகள் மட்டுமே. அம்மாவும் கூட அப்படித்தான். அப்போது அம்மாவுக்கு 34 வயதுதான். ஒவ்வொரு முறை நாங்கள் கீழே விழும்போதும் எதோ ஒரு வழியில் என் அப்பாவின் ஆன்மா எங்களைத் தூக்கிவிட்டது. இன்றோடு 16 வருடம் ஆகிறது.

இந்த கார்கில் தின வெற்றியின்போது, இழந்து போன இந்த மக்களின் உணர்வை தூண்ட நானும் என் அக்காவும் தொடர்ந்து போராடுகிறோம். இன்று இந்தியா உயிர்ப்புடன் இருக்க காரணமான அந்த ஒவ்வொருவருக்கும் என் வீர வணக்கங்கள்.

என் அப்பா, என் ஹீரோ. அவருக்கு ஒரு சல்யூட்.

தமிழில்: ஹரன் பிரசன்னா

நன்றி: ஒரேநாடு வலைத்தளம்

Share

கிரேஸி மோகன் – அஞ்சலி

கிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலுடன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.

ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.

மூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.

எனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.

நடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.

தேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.

தமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.

Share

பிரபஞ்சனுக்கு அஞ்சலி

பிரபஞ்சனுக்கு அஞ்சலி. வானம் வசப்படும் படித்த நாள்கள் நினைவுக்கு வருகின்றன. அவரது ஆர்ம்ப கால நாவல்கள் தந்த ஏமாற்றமெல்லாம் கொஞ்சநஞ்சமல்ல. அப்படியான நாவல்களுக்கும் வானம் வசப்படும் நாவலுக்கும் இடையே பெரிய பயணம் இருந்ததை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து அவர் எழுதிய பண்டைத் தமிழ் சார்ந்த உரைநடைகள் மிகவும் நன்றாக இருந்தன – படிக்க. கருத்து சார்ந்து அவர் மிகத் தெளிவாக இடதுசாரி முற்போக்கு மனப்பான்மையுடனேயே இருந்தார். மற்ற பெரும்பாலான இலக்கியவாதிகளையும் போல.

எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட மாத்தா ஹரி நாவலை அவர் வெளியிடவேண்டும் என்று அவரை அழைக்க நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நானும் சென்றிருந்தேன். என்னவெல்லாமோ பேசினார். நீண்ட நேரம் நடந்த சந்திப்பு அது. மேடையில் எழுத்தாளர்களுக்குப் பேச வராது என்பதை உடைத்தவர் அவர். மிகத் தெளிவாகவும் சுவையுடனும் பேசும் எழுத்தாளர். நேர்ப்பேச்சிலும் அப்படியே பேசினார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிய காஸிப்புகளுக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. அவர் சொன்னதில் இன்னும் குறிப்பாக நினைவில் நிற்பது, “… வலது காலில் விழுந்து கிடக்கிறார் அவர், இடது காலில் இவர், தமிழே என் காலுக்குக் கீழே” என்று அந்த அரசியல்வாதி சொன்னதாகச் சொன்னதுதான். அவர் சொன்ன எழுத்தாளர்களின் பெயரையும் அரசியல்வாதியின் பெயரையும் இங்கே சொல்ல விரும்பவில்லை. நானும் கொஞ்சம் மறந்துவிட்டேன்!

மாத்தா ஹரி நாவலை வெளியிட்டுப் பேசும்போது பாண்டிச்சேரியில் ஒரு தேவாலயத்தில் இரண்டு சாதியினர் தனித்தனியாக அமர நேர்ந்த வரலாற்றுக் குறிப்பை அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை மையமாக வைத்துச் சிறப்பாகப் பேசினார்.

பிரபஞ்சனுக்கு அஞ்சலி.

Share

வாஜ்பாயி – அஞ்சலி

நன்றி வாஜ்பாயி

கச்சத் தீவு பிரச்சினையில் அன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் கண்டித்த முதல் தலைவர் வாஜ்பாயி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழுரை தீட்டியிருக்கிறது. கொள்கையளவில் வேறுபட்டவர் என்றாலும் அனைவர் உள்ளங்களிலும் அங்கீகரிக்கத்தக்க ஒரு தலைவர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார் வாஜ்பாயி. இத்தனைக்கும் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் அரசியல் வெளியில் முற்றிலுமாக இல்லை.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை எது, எது அந்த மக்களின், இனத்தின் உணர்வுசார்ந்த உண்மையான பிரச்சினை என்பதையெல்லாம் வாஜ்பாயி அறிந்திருந்தார். மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் அவர் கலந்துகொண்டது இன்று வரை அனைவரையும் நினைவுகூர வைக்கிறது.

காங்கிரஸ் எத்தனையோ மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. ஆனால், எவ்வளவோ நெருக்கடியை ஜெயலலிதா உருவாக்கியபோதும், தன் வாழ்நாளில் தான் சந்தித்திருந்தாத சிறுமைகளைச் சந்திக்கவேண்டி வந்தபோதும், வாஜ்பாயி தமிழ்நாட்டில் திமுக அரசைக் கலைக்க மறுத்தார்.

1994ல் காஷ்மீர் பிரச்சினையை ஒட்டிய ஒரு தீர்மானத்தை ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வரவிருக்கிறது என்ற செய்தி இந்தியாவுக்குக் கிடைத்தது. இந்தியாவின் நிலையை ஐநாடில் உறுதிபட எடுத்துரைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் வாஜ்பாயி தலைமையில் ஒரு குழுவை ஜெனீவாவுக்கு அனுப்பினார். தனக்குத் தரப்பட்ட மிகப்பெரிய பொறுப்பைச் சாதித்தார் வாஜ்பாயி. தீர்மானம் வந்தால், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலை உறுதியாகிவிடும் என்று பயந்துபோன பாகிஸ்தான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவே இல்லை.

பொக்ரான் அணுகுண்டுச் சோதனை அனைத்து உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. இத்தனை பரந்து விரிந்த நாட்டில் ஒரு ரகசியத்தைக் காப்பாற்றி இத்தனை பெரிய நிகழ்வைச் சாதித்துவிட முடியும் என்று இந்தியாவின் சாதாரண மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் பெரியண்ணன் நாடும்கூட நம்பியிருக்கவில்லை. அப்படி ரகசியமாக புத்தர் சிரித்தபோது உலக நாடுகள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தன. ஒவ்வொரு இந்தியன் உள்ளத்தில் எதோ ஒரு பெருமிதம். இதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரத் தடைகளை எல்லாம் மீறி அனைவர் உள்ளத்திலும் என்னவோ தாங்களே சாதித்து விட்டது போன்ற உணர்ச்சி.

இந்த உணர்ச்சியின் உளவியல் முக்கியமானது. தொடர்ச்சியாக மிக பலவீனமான பிரதமர்களையே கண்டுவிட்ட இந்தியா, தன்னளவில் மிகவும் தன்னம்பிக்கையுள்ள, தேசத்தின் மீது பெரும் அபிமானமுள்ள, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் அக்கறையுள்ள ஒரு தலைவனைக் கண்டுகொண்டது என்ற உணர்ச்சிதான் அதன் உண்மையான காரணம்.

கார்கில் போரை வாஜ்பாயி அரசு கையாண்ட விதம் மிக முக்கியமானது. லாகூர் பயணத்துக்குப்பின் இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு பாகிஸ்தான் செய்த அநியாயத்துக்கு வாஜ்பாயி தக்க பதிலடி கொடுத்தார். சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றால் போர் என இந்தியா எதற்கும் தயார் என்ற செய்தி கார்கில் வெற்றி வழியே உலகிற்குச் சொல்லப்பட்டது.

நாற்கரச் சாலைத் திட்டம் இந்தியாவை சாலை வழியே ஒருங்கிணைத்தது. இன்றும் இச்சாலைகளில் பயணம் செய்பவர்கள் வாஜ்பாயி பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்கலாம். தொலை நோக்கு என்பது ஒரு அரசியல் தலைவரின் அடிப்படைத் தேவை. இது இல்லாத சமயங்களில்தான் இந்தியா தள்ளாடுகிறது. இந்தியாவின் இத்தள்ளாட்டத்தைப் போக்கிய பாரதத் தாயின் பிதாமகன் வாஜ்பாயி.

ஒப்பற்ற ஒரு தலைவரை, ஒரு மாபெரும் நிகழ்வை நாம் இழந்திருக்கிறோம். வாஜ்பாயி தனக்களிக்கப்பட்ட வாழ்வை மிக அர்த்தம் மிகுந்ததாக்கியிருக்கிறார். கட்சி ரீதியாகவும் சரி, ஒரு தலைவர் என்ற நிலையில் இந்தியாவுக்காகவும் சரி, அவர் செய்துவிட்டுச் சென்றிருக்கும் சாதனைகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. வாஜ்பாயி என்ற அந்த சாதனையாளருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி: குங்குமம் இதழ்

Share