Archive for கட்டுரை

பட்டம் – தினமலர்

வாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.

http://m.dinamalar.com/detail.php?id=1626970

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.

பட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…!

இன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.

* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.

* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.

* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.

* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.

* தொடரும்… கூடவே கூடாது.

* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.

* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.

* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.

* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.

* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது! மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.

* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்!

பள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.

வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.

இது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

Share

தள்ளுபடி அதிரடி

இந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

அதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள் 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)

இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும்? இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது?

இந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.

உண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘புத்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.

அடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும்? புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே!

மேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை? புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை? இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்!) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் விளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.

டிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா? விற்காது. இதுதான் பிரச்சினை.

தள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.

இன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது – அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.

பின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.

பின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: https://www.nhm.in/shop/discount/
 
பின்குறிப்பு 3:  என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :> வாங்க: https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html

Share

தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும்

சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் ‘பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்’ ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.

தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் ‘பத்து பேர் இருந்தா அதிகம்’ என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. ‘படத சம்ஸ்கிருதம்’ என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.

சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின்  ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.

சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.

சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.

இவை போக, சக ‘மாணவ நண்பர்கள்’ தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். ‘வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க’ என்றார். இன்னொருவர், ‘இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை’ என்றார்.

பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)

சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.

ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.

சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். “உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?

ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

நன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)

Share

பூனையின் உயிர்த்தெழுதல்

எத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.

ஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.

முதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.

ஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.

ஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.

ஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், ‘பூனை செத்துக் கிடக்குது.’

என் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் ‘என்னாச்சுப்பா’ என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு ‘செத்துப்போச்சா’ என்றான். என் மனைவி உடனே ‘சாகலை. நாளைக்கு வரும்’ என்று சொல்லி வைத்தாள்.

மறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் ‘அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே’ என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், ‘பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை’ என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் ‘ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத’ என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.

பின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.

லோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.

வீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.

நான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், ‘வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.’ அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். ‘அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க’ என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். ‘பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.’ ‘எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு’ என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

பூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.

வீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். ‘எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.

பூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் ‘பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.


நன்றி: பண்புடன் குழுமம்

Share

ராமையாவின் குடிசை – அணைக்க முடியாத நெருப்பு

நீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த ‘ராமையாவின் குடிசை’ என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.

ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.

தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.

01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்குப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.

04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.

05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.

06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.

07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘குருதிப்புனல்’ நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.

08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.

09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.

10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுடுவைப் பழி வாங்குகிறான்.

11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.

14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.

16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.

கீழ்வெண்மணி குறித்து ஞானக்கூத்தன் 1969ல் எழுதிய கவிதை ஒன்று.

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

நன்றி: பண்புடன் குழுமம்

Share

Good Bye Ganguly


இஷாந்த் சர்மாவும் ஹர்பஜனும் தோளில் தூக்கி வைத்து கங்குலியைக் கொண்டுவர இன்னொரு சடங்கு முடிந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்ப்ளேவிற்கு இந்தச் சடங்கை செய்திருந்தார்கள் இந்தியர்கள் என்பதினால் அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்திருக்கும். தோனி, கங்குலியின் கடைசி டெஸ்ட் என்பதால், ஆஸ்திரேலியா 9 விக்கட் இழந்தபின்பு அவரை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதுவும் முன்பு நடந்துகொண்டிருந்த சடங்குதானா அல்லது புதிய சடங்கு இப்போது தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

சவுரவ் கங்குலியின் முதல் ஆட்டத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர் இன்னும் இரண்டாண்டுகள் இந்தியாவிற்காக விளையாடியிருக்கலாம். திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து அதிர்ந்தேன். மிகச்சிறந்த வெளியேறுதலாக, அவர் வெளியேறும் டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தது குறித்து சந்தோஷமாக இருந்தது.

கங்குலியைப் போன்ற ஆட்டக்காரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்டத்தில், உள்ளொடுங்கிப் போயின கங்குலியின் சாதனைகள். ஒருநாள் ஆட்டத்தில் 22 சதங்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், அசாருதீன் மீது தவறுகள் இருந்த நிலையில், தொடர் தோல்வியால் சச்சின் தலைமைப் பொறுப்பை நிராகரித்த நிலையில், கங்குலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியவர் கங்குலி. அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் சக ஆட்டக்காரர்கள் மீது கோபத்தை, அட்டக்களத்தில் வெளிப்படுத்தியதில்லை. அசாருதீன் ஆட்டக்களத்தில் ஒரு கணவானாகவே நடந்துகொள்வார். அவர் தவறு செய்யும் சகவீரர் மீது ஆட்டக்களத்தில் கோபம் கொண்டது குறைவு. ஆனால் கங்குலி இவற்றையெல்லாம் ஏறக்கட்டினார். ஏதேனும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தவறு செய்யும்போது, அங்கேயே வெடித்தார். ‘தவறை அங்கே கண்டிக்காமல் எங்கே கண்டிப்பது’ என்று செய்தியாளர்களிடம் சீறினார். கங்குலியின் தலைமையின் கீழ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் விளையாடியதால் இந்தக் கோபமும் எடுபட்டது.

இந்திய அணியின் மிகப்பெரிய சாபம் அணிவீரர்களுக்குள் இருக்கும் ஈகோ. சச்சின் – திராவிட் – கங்குலி காலத்தில் இது மிகப்பெரிய அளவில் குறைந்தது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உரசல்கள் இவர்களுக்குள்ளே இருந்தபோதும், பெரும்பான்மை சமயங்களில் இவர்கள் இணைந்தே செயல்பட்டார்கள். முக்கியமாக அசாருதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து டெண்டுல்கல்கரின் தலைக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது ஏற்பட்ட தொடர் தோல்விகளின்போது, கங்குலியும் டிராவிட்டும் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் பற்றி இந்தியா டுடே அப்போது ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதேபோல் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்தக்கூட்டணி தொடர்ந்தது. ஓர் ஆட்டம் என்பது அக்ரெஸிவ்வானது, அதில் தவறில்லை என்கிற நிலையை இந்திய கிரிக்கெட்டில் நிலை நிறுத்தியவர் கங்குலியே. அவர் சட்டையைக் கழற்றி சுற்றிக் காண்பித்ததற்கு (இங்கிலாந்துடனான ஆட்டமா, நினைவில்லை) வரிந்து கட்டிக்கொண்டு அவரைப் போட்டுத் தாக்கின ஊடகங்கள்.

ஒரு செயலை இந்தியர்கள் (உள்ளிட்ட ஆசியாக்காரர்கள்) செய்யும்போதும், அதே செயலை ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் செய்யும்போதும் உலக ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ளும் நாம் அறிந்ததே. அந்த உலக ஊடகங்களை ஒட்டி இந்திய ஊடகங்கள் வால் பிடிப்பதும் புதியதல்ல. சட்டையைக் கழற்றி சுற்றிய விஷயத்திலும் அதுவே நடந்தது. எதிரணி அப்படி நடந்துகொண்டிருந்தாலும், இந்திய அணியின் தலைமை அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற உபதேசங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்டம் என்பது அக்ரெஸிவானது என்கிற எண்ணமுடைய கங்குலி இவற்றையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. நான் கங்குலியை மிகவும் ரசித்தது இதுபோன்ற தடாலடிகளிலேயே.

கங்குலியின் தலைமைப் பொறுப்பின்போது அவர் யாராலும் அண்டமுடியாத தீவாக மாறினார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தான் விரும்பாத ஓர் ஆட்டக்காரரை அணியில் சேர்த்துவிட்டால், அவரை ஒழித்துக்கட்டுவதற்குக் கங்கணம் கட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பெரும்பான்மை ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மையாக இருக்கலாம். இதற்கான தண்டனையை அவர் கிரெக் சேப்பல் மூலம் அனுபவித்தார். ஃபார்ம் என்பது எல்லா நேரத்திலும் ஒருவருக்கு இருக்கமுடியாது என்பதை மறந்திருந்த கங்குலி, சேப்பல் மூலம் அதை நினைவுபடுத்திக்கொண்டார். டால்மியாவின் ஆதரவில் அதிகமாகச் செயல்பட்ட கங்குலியின் தேவையற்ற செயல்கள் சேப்பலின் அதிரடியால் முடிவுக்கு வந்தன. ஓர் அதிரடி இன்னோர் அதிரடியை அடக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தச் சறுக்கல் இல்லாமல் இருந்திருந்தால் கங்குலி இன்னும் இரண்டாண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விளையாடியிருக்கமுடியும்.

இந்த மோதலுக்கு கங்குலி கொடுத்த விலை அதிகமானது. அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அதிகபட்ச முடிவு. இந்த முடிவு முட்டாள்தனமானது. கங்குலி போன்ற சிறந்த ஆட்டக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அரசியல் தரும் தொல்லைகள் எல்லை மீறியவை. டால்மியா மூலம் அரசியல் செய்த கங்குலி அதே அரசியலுக்குப் பலியானார். லக்ஷ்மண் சொன்னது போல, சீனியர் ஆட்டக்காரர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஓய்வெடுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதுமானது. எல்லா நேரத்திலும் லக்ஷ்மண் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஆட்டக்காரர்களுக்கு அது பொருந்தவே செய்கிறது.

கங்குலி சதமடிக்கும் தருணங்கள் மிகச் சிறப்பானவை. 45லிருந்து 6 அடித்து 50ஐக் கடக்கவும், 95லிருந்து 6 அடித்து சதம் கடக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணை கண்ணை முழித்துக் கொண்டு, பிட்ச்சில் பாதி ஏறி சிக்ஸ் அடிக்கும் அழகு இன்னும் கண்ணில் நிற்கிறது. ஒரு பந்து மேலே பட்டுவிட்டால் சுருண்டு உடனே விழுந்துவிடுவார் கங்குலி. நாங்கள் எல்லாரும் ‘சரியான சோளக் கொல்லை பொம்மையா இருக்கானே’ என்று சொல்லிச் சிரிப்போம். இனி அந்தக் காலங்கள் திரும்பி வராது. இன்னும் இரண்டு வருடங்கள் இருந்து ஆடியிருக்கவேண்டிய கங்குலியை ஒழித்துக்கட்டியது கிரிக்கெட் அரசியல். அரசியல் என்றாலே அது அரசியலாகத்தான் இருக்கும். கங்குலி வெளியேறும் இப்போதைய வருத்தத்தில் நிழலாடுகின்றன இரண்டு முகங்கள். சச்சின், டிராவிட். இன்னும் என்ன என்ன சோதனைகளோ இருவருக்கும்.

ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி என்கிற நிம்மதியோடு வெளியேறும் கங்குலியை என்றென்றும் இந்திய கிரிக்கெட்டும் உலக கிரிக்கெட்டும் மறக்காது.

(குறிப்பு: எவ்வித ஆதாரத்தையும் பார்க்காமல் நான் என் மனதில் இருந்த சித்திரங்களை மட்டும் வைத்து எழுதியது. மேலும் ஒருநாள் ஆட்டங்களை மனதில் வைத்தே எழுதியது. தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 🙂 )

Share

வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் – வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ் எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி, வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத் தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில், இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை. அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக, ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம் நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம் என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால் இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும் பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள் நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல் மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை. இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும் சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான் ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன் கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும் அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம் கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே ‘தமிழின் மரபை அறியாதவர்கள்’ என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் ‘சிறப்பாக’ இங்கு வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில் இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது, வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன் கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.] தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில் வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத் திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத் திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன் நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின் தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில் ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத் திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும் இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம். பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின் மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது. உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம் கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல் நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும் ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும் பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால் இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம் இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள் இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில் வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள் குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன் மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர் வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார் எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான் இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும் உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும் உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம் சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும். வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும் கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில் நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக் கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது, வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள் நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும் வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு, இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும் நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில் சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும். இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம். மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச் செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து, தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுக்களை ’15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்’ என்று சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும், அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது ‘செய்தி ஊடகம்’ என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம் மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.

சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால் பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/

பரவலான இணைய உலக பயன்பாடுகள்

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி

இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys) வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள் வலைப்பதிவுலகில் அடிக்கடி 🙂 :)) 😛 :> 🙁 :(( X-( 😀 போன்ற குறியீடுகளைச் சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள் இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

Share