Archive for கல்வி

National Insitute of Open Schooling and Tamilnadu Government jobs

NIOS எனப்படும் ‘தேசிய திறந்தவெளிப் பள்ளிகள்’ குறித்தும், இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் தமிழக அரசு முடிவெடுத்திருப்பது குறித்தும் மாரிதாஸ் தனக்கே உரிய கோபத்துடன் பேசி இருக்கிறார். முக்கியமான காணொளி. கட்டாயம் பாருங்கள்.

ஏன் திமுக அரசு இந்த முடிவெடுத்தது என்று தெரியவில்லை. இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எம் சி ஏ கூட தேவையில்லை, திறமையை நிரூபித்தால் போதும் என்று பல நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை மேம்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த வேளையில் இப்படி ஒரு நிலைப்பாட்டை ஸ்டாலின் அரசு எடுத்திருப்பது அர்த்தமற்றது.

ஏன் ஒரு மாணவன் திறந்தவெளிப் பள்ளிக்குப் போகிறான் என்பதையெல்லாம் மாரிதாஸ் விளக்கமாகவே தன் காணொளியில் சொல்லி இருக்கிறார். ஆட்டிஸம், குடும்பச் சூழல் உள்ளிட்ட பல காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவர் விட்டுவிட்ட முக்கியமான ஒன்று, பள்ளிகள் மீதான பயம்.

ஒரு மாணவனுக்கு ஒட்டுமொத்தப் பள்ளிகள் மீதான பயம் தேர்வினால் மட்டுமல்ல, அங்கே இருக்கும் ஆசிரியர்களால், பள்ளி மாணவர்களின் கிண்டலால், சில சமயங்களில் பாலியல் அத்துமீறலால் கூட வரலாம். இவர்களுக்கெல்லாம் கடைசித் தீர்வாக இருப்பது இந்த திறந்தநிலைப் பள்ளிகளே. இந்தப் பள்ளியில் பயின்று, மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முக்கியமான நிறுவனங்களில் நல்ல நிலையில் வேலைக்குச் சேர்ந்து, நன்றாக இருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். இந்த மாணவர்களுக்குத் தேவை, அந்தச் சமயத்தில் ஒரு சிறிய பிரேக் மட்டுமே. அதை எவ்வித இழப்பும் இன்றி ஏற்படுத்தித் தருபவை இந்தத் திறநிலைப் பள்ளிகள். இதில் படித்தால் அரசு வேலைவாய்ப்பு இல்லை என்பது சரியல்ல. அரசு இதை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.

அரசுத் தரப்பில் இதில் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள். ஃபிப்ரவரி 13, 2023ல் வெளியான டைம்ஸ் நவ் செய்தியின்படி, ஜெ.குமரகுருபரன் (பள்ளிக் கல்விச் செயலாளர்) சொல்வது, “இப்படி திறந்தநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேறியவர்கள் கல்லூரிகளில் மேற்படிப்படித் தொடரலாம், அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அப்படி கல்லூரியில் தேர்வு பெற்றாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்புக் கிடைக்காது’. இதெல்லாம் அநியாயம்.

ஜனவரி 1ம் தேதியே தமிழ் தி ஹிந்து இது பற்றிச் செய்தி வெளியிட்டிருக்கிறது. மாரிதாஸ் இதைப் பற்றிப் பேசி இருக்கவில்லை என்றால், நான் அறிந்திருக்கவே மாட்டேன்.

மாரிதாஸ் வீடியோ லின்க்: https://www.youtube.com/watch?v=JMNT5A4F8es&t=14s

தமிழ்த்திசை லின்க்: https://www.hindutamil.in/news/tamilnadu/1176659-national-open-school-class-10th-12th-certificate-is-not-suitable-for-govt-jobs.html

Share

எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்

அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் பெரும்பாலான வெகுஜன முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு, அதை ஆதரிக்கும் தீவிர இஸ்லாமியர்களைப் பற்றித் தனியே பேசி இருக்கவேண்டும். வெகுஜன முஸ்லிம்களும் அடிப்படைவாத முஸ்லிம்களும் வேறு என்ற தெளிவான வேறுபாட்டுடன் பேசி இருக்கவேண்டும். இந்த அடிப்படை நியாயம் இல்லாததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகளும் அடிபட்டுப் போகின்றன.

ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது, அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால், இங்கே இருக்கும் திக திமுக கம்யூனிஸ முற்போக்குக் கட்சிகள் அதை எப்படி அணுகுகின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். வாக்கு வங்கிக்காக அவர்கள் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதும் புதியதல்ல. தாஜா அரசியலுக்காகவே அவர்கள் அன்பு செலுத்துகிறார்கள். நாளையே இந்து வாக்கு வங்கி உருவானால் இவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதையும் இதே வெகுஜன இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.

பாடத்தில் இருந்து ஒரு பத்தியை வாசித்துக் காட்டிய பொன்முடி, (அவரது முழு பேட்டியை நான் பார்க்கவில்லை) அதற்கு முந்தைய பத்தியில் இந்து முன்னணியின் பெயரும் இருப்பதை வாசித்தாரா என்று தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தப் பாடத்தை புகுத்தி இருக்கிறது என்றால், ஏன் இந்து முன்னணியின் பெயரையும் பாஜக புகுத்தவேண்டும்? பாஜவைச் சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமே இல்லை! அதுமட்டுமல்ல, சங்பரிவாரம் மசூதியை உடைத்தது என்றும் அதனால் கலவரங்கள் நிகழ்ந்தன என்றும் இப்பாடப் பகுதி சொல்கிறது. அடுத்து, அதில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறது. இதை முற்போக்களர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஹிந்துக்களின் தாக்குதல் என்பது பதிலடி என்பது மிக முக்கியமான ஒன்றே. அதைப் பேசுவது ஏன் முக்கியமானதாகிறது என்றால், எந்த ஊடகமும், எந்த முற்போக்காளரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால்தான். அதை இந்தப் பாடப் பகுதி தெளிவாகச் சொல்லி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்தப் பாடத்திட்டத்தை எழுதியவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பொன்முடி சொல்கிறார். யார் அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எனத் தெரியவில்லை. துணைவேந்தர் யார் எனத் தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.

பாடத்திட்டத்தில் ஈவெராவை பெரியார் என்றும் தமிழர் தந்தை என்றும் வைக்கம் வீரர் என்றும், அண்ணாத்துரையை ஆஹோ ஓஹோ என்றும் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றும், கருணாநிதியை கலைஞர் என்றும் புகுத்தினால்; ஆரியர்கள் பறக்கும் குதிரையில் காற்றில் அவர்களின் தலைமுடி பின்னால் பறக்க படையெடுத்து திராவிடர்களை வேட்டையாடினார்கள் என்ற ஒரு கற்பனைச் சித்திரம் மனதில் பதியும் அளவுக்குப் பாடங்களை எழுதினால்; கண்ணில் படும் கடவுளர் சித்திரங்களை எல்லாம் நீக்கி, கடவுள் வாழ்த்தை நீக்கி, ஹிந்துப் பெயர்களை நீக்கி, புகைப்படங்களில் வரும் ஹிந்து மதச் சின்னங்களை நீக்கி பாடங்களை எழுதினால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தால், அடுத்தவனுக்கு வாய்ப்பு வரும்போது விரல் சூப்பிக் கொண்டிருக்க மாட்டான். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கங்கள் செய்த பாடத்திட்டத் திணிப்புப் புரட்டுகளுக்கு மத்தியில், இன்று பொன்முடி சொல்லும் பாடத் திட்டம், மிகச் சரியாகச் சொல்லப்படாத ஒன்றாகவே உள்ளதே அன்றி, முழுப் பொய்யாக இல்லை, புரட்டாக இல்லை.

நீங்கள் ஒரு கட்சியாக அரசாக என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதையே உங்களுக்கு மற்றவர்களுக்குச் செய்வார்கள்.

(பின்குறிப்பு: கிடைத்த நான்கு பக்கங்களை மட்டுமே படித்தேன். முழு புத்தகத்தையும் படிக்கவில்லை.)

Share

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் – கொரோனா காலம்

பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்தாமல் விட்டது சரியான முடிவல்ல. வேறு வகையான முடிவுகளை ஆராய்ந்திருக்கலாம்.

* ஐந்து கட்டங்களில் தேர்வுகளை நடத்தி இருக்கலாம். எந்த நாள் முடியுமோ அந்த நாளில் தேர்வுகளில் பங்கெடுக்க மாணவர்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம்.

* யாரேனும் இரண்டு முறை ஒரே தேர்வை எழுதினால் அதில் எந்த மதிப்பெண் அதிகமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாணவர் இரண்டு முறைக்கு மேல் எழுதக்கூடாது என்ற வரன்முறையையும் கொண்டு வரலாம்.

* இண்டர்னல் மதிப்பெண்களை முழுமையாக வழங்கலாம்.

* இண்டர்னல் போக 80 மதிப்பெண்களுக்குப் பதிலாக 40 மதிப்பெண்களுக்குத் தேர்வு வைக்கலாம். மிக எளிதாக மாணவர்கள் தேர்வு எழுதும்படியாக ஒரு வரி வினா விடையை அதிகமாகவும் மற்றவற்றைக் குறைவாகவும் வைக்கலாம். இதனால் தேர்வு நேரத்தை ஒரு மணி நேரமாகக் குறைக்கலாம்.

* ஒரு பள்ளி முழுக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுதப் போவதால் ஒரு வகுப்பில் ஒரு பென்ச்சில் ஒருவரை மட்டுமே அமரச் சொல்லி எழுதச் சொல்லலாம்.

* ஐந்து முறை தேர்வுகள் நடத்தப்படுவதால் நிச்சயம் மாணவர்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

* ஐந்து வேறு வேறு வினாத்தாள்கள் என்றால் எப்படி பொதுவாகக் கருதமுடியும் என்ற கேள்வி எழும். எதோ ஒரு வகையில் அனைத்து வினாத்தாள்களையும் எளிமையாகவே கேட்கலாம். இதன்மூலம் சுற்றி வளைத்து ஒரு பொதுவான தேர்வுப் பட்டியலைக் குறைந்தபட்சம் அடையலாம்.

* பாடத்தின் பின் பக்க கேள்விகளில் இருந்து 80% கேள்விகளும், உள்ளே இருந்து 20% கேள்விகளும் வரும் என்று சொல்லலாம். இது ஆவரேஜ் மற்றும் பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குப் பெரிய அளவில் உதவும்.

* ப்ளூ ப்ரிண்ட்டை மாற்றி அமைத்து எந்த எந்த பாடங்களை மாணவர்கள் படிக்காமல் விடலாம் என்று ஒரு சலுகை அளிக்கலாம்.

* அல்லது சில பாடங்களைக் குறைத்து அறிவிக்கலாம்.

* காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். வருகைப் பதிவேட்டின்படியும் கொஞ்சம் சலுகை மதிப்பெண் தரலாம். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்கிற நிலை மாறும். அதே சமயம் ஒட்டுமொத்தமாக எதோ ஒரு தரவரிசை கிடைக்கும். அதை வைத்து மேற்கொண்டு படிக்கப் போகும் துறையைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் உதவும்.

* பள்ளி ஆரம்பிப்பதற்கு பத்து நாள் முன்பாகக் கூட தேர்வுகளை நடத்தலாம். பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு போகும் மாணவர்களுக்குப் பாடச் சுமையைக் குறைத்து, பள்ளி நடக்காத இந்தக் காலத்தைச் சரி செய்யலாம். அதேபோல் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் செய்யவேண்டும்.

* எந்தப் பள்ளி மாணவரும் பக்கத்தில் இருக்கும் எந்தப் பள்ளியிலும் (தமிழகம் முழுக்க) தேர்வு எழுத அனுமதிக்கலாம். தேர்வு எழுத பள்ளியைத் தேர்ந்தெடுப்பது மாணவர்கள் உரிமை என்றாக்கலாம்.

* சான்றிதழில் கொரோனா காலம் என்று அச்சிட்டுத் தரலாம்.

* இந்த வருடம் படிக்கப் போகும் மாணவர்களுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்புகளையும் இப்போதே வெளியிடவேண்டும். பாடத்திட்டத்தை மறுவரையறை செய்யலாம்.

Share

கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு

தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.

கட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.

அம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?

முதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள்? இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.

இன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.

EWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.

ஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்? அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால்! இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள்? 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா? அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.

இப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.

8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.

க்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.

ஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.

  • ஹரன் பிரசன்னா

தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கம்:
https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215186778051424

Share

அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்

* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று நான் நினைப்பதால் அதை விட்டுவிட்டு மற்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

* நான் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல், மகாதேவன் சுயமான சிந்தனை உடையவர். இதன் எதிர்த்திசையில், யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காகவேகூட தீவிரமான சிந்தனை செய்பவரும்கூட என்பது என் அனுமானம். இப்படிச் சிந்திப்பவர்களால் சில சமயங்களில் தீவிரமான கருத்துப் பிரதிவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே கருத்தின் அடிப்படையில் மட்டுமே மகாதேவன் போன்றவர்களை அணுகுதல் நலம். இந்த இடுகையில் நான் சொல்லும் கருத்து, மகாதேவனின் அனைத்துக் கருத்துகளுக்குமான கருத்தல்ல.

* சிபிஎஸ்இ பள்ளிகளில் பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதையே நான் முதலில் ஏற்கவில்லை. பிராமணர்கள் உள்ளிட்ட மற்ற உயர்சாதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதனால்தான் அவர்கள் நன்றாக நடத்துகிறார்கள் என்பது அடிப்படையற்றது. இதேபோன்ற தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஹிந்து அல்லாத மற்ற மத ஆசிரியர்களும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் நடத்துவது கண்கூடு. எனவே தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளால்தான் இது சாத்தியமாகிறதே ஒழிய ஜாதியாலோ மதத்தாலோ அல்ல.

* சாதி மற்றும் மதத்தால் ஆசிரியர்களை பொதுப்படுத்துவது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கும். நேரிடையாக அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம், ஐயத்துக்கு இடமின்றி நடந்த ஒன்றைக் கேள்விப்பட்டதாகவும் இருக்கலாம்.

* 3ம் வகுப்பு முதல் கல்லூரி நான் படித்தவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளே. நான் படித்து முடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றெல்லாம் கல்வி நன்றாக இருந்தது என்பது முதல் பொய். நான் படித்தபோதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் லட்சணம் மிகக் கேவலமாக இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இன்று பல மடங்கு முன்னேறி இருக்கிறது. (இந்த முன்னேற்றம் உண்மையான, சரியான முன்னேற்றமா என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது.)

* 3 மற்றும் 4ம் வகுப்பில் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தேன். பாடம் நடத்தவே மாட்டார் ஆசிரியர். உண்மையில் அவருக்கு ஏதேனும் தெரியுமா என்பது எனக்கு இன்று வரை சந்தேகமாக உள்ளது. ஆனால் மாட்டடி அடிப்பார்கள். கூட்டமாக உட்கார்ந்து சொன்னதையே சொல்லி மனனம் செய்யச் சொல்வார்கள். அதிலும் ஆயிரம் பிழைகள் இருக்கும். அப்படியே மனனம் செய்யச் சொல்வார்கள். இந்த லட்சணத்தில்தான் அந்தப் பள்ளியில் படித்தேன். (பள்ளியின் பெயர் வேண்டாம் என்பதால் எந்தப் பள்ளியின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் சொல்லப் போவதில்லை.) ஆசிரியர்கள் அனைவருமே அபிராமணர்கள்.

* 5ம் வகுப்பு படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தண்டம். இதற்கு மேல் அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆசிரியர் பிராமணர். 30 வருடத்துக்கு முன்பாகவே இதுதான் நிலைமை, தரம்.

* 6,7 வகுப்பும் வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. ஜாதியின் வெறியாட்டத்தை உணர்த்தியது இந்தப் பள்ளிதான். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே பிராமணர்கள், அபிராமணர்கள் என்று பிரிந்துகிடந்தார்கள். காந்தியத்தை வளர்த்த பள்ளி திராவிடத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்தது. இந்தப் பள்ளியில் படித்ததையே நான் மறக்க நினைக்கிறேன். நான் முதல் ரேங்க் வாங்கவில்லை என்று ஒரு பிராமண ஆசிரியர், ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லி அடித்தார். நான் தொடர்ந்து 15 முறை (இரண்டு ஆண்டுகளில்) முதல் மதிப்பெண் பெற்றபோது, தேவையற்ற காரணங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அபிராமண ஆசிரியர் அடித்தார். இதில் தன்னை பிராமணச் சார்பு இல்லாதவராகக் காட்டிக்கொள்ளவேண்டிய பிராமண ஆசிரியர்களும் திட்டித் தீர்த்து எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த வெறி மோதல்களுக்கு இடையேதான் நான் ஏதோ படித்தேன். இதில் உள்ள ஆசிரியர்கள் – பிராமணர்களும் அபிராமணர்களும்!

* இப்பள்ளியில் நடந்தவையெல்லாம் அராஜகமானவை. ஒரு பெண் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆசிரியர் தன் பேனாவைக் கொண்டு அந்தப் பெண்ணை உந்தித் தள்ளினார். அந்தப் பேனாவின் நுனி பட்டது, எந்நேரத்திலும் வயதுக்கு வரப்போகும் பெண்ணின் மார்பகத்தில். அன்று முழுவதும் அந்தப் பெண் அந்த பேனா மையின் புள்ளியோடு கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். அதை எதைக் கொண்டு மறைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள். ஒருவரும் இதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. ஏன்? ஜாதி பயமாக இருக்கலாமோ என்னவோ. அன்று வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேறு உடை மாற்றிக்கொண்டு அப்படி அழுதாள். அந்த ஆசிரியர் அபிராமணர்.

* யாராவதுசரியாகப் பாடம் படிக்கவில்லை என்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மாணவிகள் மத்தியில் தூக்கிப் போடுவார். எங்கடா பட்டுச்சு என்று கேட்பார். அந்த ஆசிரியர் பிராமணர்.

* இந்தப் பள்ளியை விட்டுச் சென்றதே என் வாழ்க்கையின் விடுதலை என்று இப்போதும் நினைக்கிறேன். அடுத்து சென்றது இன்னொரு அரசு உதவி பெறும் பள்ளி. 8,9 மற்றும் 10வது படித்தேன். உண்மையான சுதந்திரத்தை இங்கே உணர்ந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுக்க முயன்றார்கள். வெகுசிலர் மட்டுமே மிகச் சிறப்பாக எடுத்தார்கள். அதில் ஒரு ஆசிரியரை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். கணித ஆசிரியர். அவர் கிறித்துவர்.

* இதே பள்ளியில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிறித்துவர். நல்லவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருநாள் திடீரென்று அனைவரிடமும் இன்று நம் வகுப்பில் ம்யூஸிக் கிளாஸ் நடக்கும் என்று சொன்னார். இசைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தோம். வந்தவர்கள் பெரிய பெரிய கிட்டார், ஸ்பீக்கர் என்றெல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக ஏசுவைப் பற்றிய பாடல்களைப் பாடினார்கள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எனக்கு வயது 14. வகுப்பாசிரியர் என் மீது மிகவும் பாசமாக இருப்பவர். அவரிடம் சொன்னேன், இது எனக்கு சரிவராது என்று. மனதுக்குள் எனக்குப் பிடித்தமான கடவுளான ராமரையோ ஆஞ்சநேயரையோ நினைத்துக்கொள்ளச் சொன்னார். அன்று அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இனி இப்படி என்னால் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். தலைமை ஆசிரியர் கிறித்துவர்! அரசு உதவி பெறு பள்ளி!!! இதுதான் லட்சணம். அங்கிருந்த பிராமண ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் யாரும் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இந்த லட்சணத்தில்தான் நம் பள்ளிகள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தன.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல் வீணாகப் பேசிக்கொண்டு இரட்டை அர்த்த ஜோக் அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர் அபிராமணர்.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல், மாணவர்களை ஹோட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டு, தூங்கி எழுந்து சென்ற ஆசிரியர் பிராமணர்.

* பின்பு +1, +2 வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே உருப்படியாகப் பாடம் நடத்திய ஒரே ஆசிரியர், என் வாழ்நாளில் நான் மறக்கவே கூடாத இன்னொரு ஆசிரியர், அபிராமணர். இவர் நடத்தும் தனிப்பயிற்சிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி, “ஏம்ல நீ இங்க வார? ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா? அங்கயும் இங்கயும் ஒண்ணுதாம்ல. நாளைக்கு இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிருவேம்ல” என்றார். கெஞ்சிக் கூத்தாடி ட்யூஷன் சேர்ந்தேன். உண்மையில் பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் நடத்தியக் காட்டியவர் இந்த ஆசிரியர். நமஸ்காரம் இவருக்கு.

* முதல் நாளே இன்னொரு ஆசிரியர் சொன்னார். மெதுவாக. ரொம்பமெதுவாக. மெல்லப் பேசினார். “என்னை நம்பாதீங்க. நான் முடிஞ்சதை நடத்துவேன். நல்ல மார்க் வேணும்னா ட்யூஷன் சேர்ந்து பொழச்சிக்கோங்க. பிராக்டிகல் மார்க் எப்படியாச்சும் வாங்கித் தரேன். நான் ஹார்ட் பேஷண்ட்.” இவர் பிராமணர்.

* இன்னொரு ஆசிரியர் எங்களையே வாசிக்கச் சொல்வார். அவ்வளவுதான் பாடம். அவர் அபிராமணர்.

* இவையெல்லாம் நடந்தது 11 மற்றும் 12ம் வகுப்பில். அதாவது எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் நடந்தவை. இதே போன்ற பிரச்சினைகளுடன் தான் இன்று வரை நம் அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்வியைத் தந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் லட்சணத்தையும், அதற்கான காரணங்களையும், இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தையுமே அன்றி, அவர்களின் சாதி மற்றும் மதத்தை அல்ல.

* அரசுப் பள்ளிகளைவிட கொஞ்சம் பரவாயில்லை அரசு உதவி பெறும் பள்ளிகள். இன்றையக் கல்வியில் இந்த அளவுக்கு ஜாதி மற்றும் மதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கக் காரணம், மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கமே. இவை இல்லை என்றால் மாணவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.

* இப்படி எல்லாம் சொல்வதால் அரசுப் பள்ளிகளில் நல்லவர்களே இல்லை என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மேலேயே மிக நல்ல ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொற்பம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாடம் நடத்துவதில் கில்லாடிகளாக இருக்கவேண்டும்.

* இன்று அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை நம்மால் கற்பனையில் கூட யோசிக்கமுடியாது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேதான் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களின் ஒரே மீட்சி அரசுப் பள்ளிகள்தான். அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக உதவுகிறார்கள். கால் நடக்க முடியாத பையனைத் தானே தூக்கிச் செல்லும் ஆசிரியர், வகுப்பில் வயதுக்கு வந்துவிட்ட பெண்ணை அழைத்துச் சென்று வேறு உடை தந்து புது ஆடை வாங்கிக் கொடுத்து, குங்குமம் மஞ்சள் கொடுத்து நெட்டி முறித்து வீடு வரை சென்று விட்டு வரும் ஆசிரியை, தன் கைக்காசைப் போட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இரவில் தங்கிப் படிப்பதற்காக உணவு தரும் ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமம். ஆனால் இவர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்றால், ஒரு ஆசிரியருக்குரிய தகுதி இல்லை என்றால், இவர்களை இவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டலாமே தவிர, ஒரு முழுமையான ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அரசுப் பள்ளிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இப்படியான ஈரமான ஆசிரியர்களின் தொண்டுகளையே முன் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை, இத்துடன் கூடிய சிறப்பான கல்வி. சிறப்பான கல்வி மட்டுமே ஒரு பள்ளியின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதை நோக்கியே ஆசிரியர்கள் உயரவேண்டும்.

* இந்த நிலை இன்றைய நிலையில் நம் அரசுப் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இல்லை. பணம் இருந்தால் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷனில் படிக்க வையுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புனிதர்கள் அல்ல. ஆனால் அரசுப் பள்ளிகள் அளவுக்கு மோசமானவையும் அல்ல. எனவே நிச்சயம் சேர்க்கலாம். அதேசமயம் மெட்ரிகுலேஷனில் சேர்த்துவிட்டால் பையன் நன்றாகப் படித்துவிடுவான் என்றெல்லாம் கனவு காணக்கூடாது. இது ஒரு சிக்கலான விஷயம். நாம் முயன்றால்தான் ஒரு பையனை சிறப்பாகப் படிக்க வைக்க முடியும். இது பல படிகளில் நிகழவேண்டியது. ஆசிரியர்கள் மட்டுமே ஒரு பையனை சிறப்பாக உருவாக்கிவிடமுடியாது. பல சூழல்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் மெட்ரிகுலேஷனைவிடப் பல மடங்கு சிறந்தவை சி பி எஸ் இ பள்ளிகள். ஆனால் அவை உண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருக்கவேண்டும். மெட்ரிக் வழிமுறையிலேயே நடத்தி பெயருக்கு சிபிஎஸ்இ என்று வைத்துக்கொள்ளும் பள்ளிகளாக இருக்கக்கூடாது. பணமும் இருந்து நல்ல பள்ளியும் இருந்தால் யோசிக்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேருங்கள். தமிழ்நாட்டுக் கூச்சல்களுக்கு மதி மயங்கி, முற்போக்காளர்களின் மூளைச் சலவையில் சிக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள்.

* ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்துங்கள். ஹிந்தி இல்லாவிட்டால் குடி மூழ்கிவிடாது. அதே சமயம் ஹிந்தி படிப்பதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடமாட்டார்கள் என்பதோடு பல வகைகளில் பின்னாளில் உதவவும் கூடும். எனவே நிச்சயம் படிக்கச் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் முதன்மை, ஹிந்தி அடுத்ததாக என்று இருக்கட்டும்.

* அரசுப் பள்ளிகளின் தரத்தை மாற்ற ஆசிரியர்களின் தரத்தை மாற்றவேண்டும். சும்மா பாடத்திட்டத்தை உயர்த்திவிட்டோம் என்று சொல்லிப் பெருமை பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழக அரசு இதைத்தான் எப்போதும் செய்துகொண்டுள்ளது. பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசும் முற்போக்காளர்கள் ஆசிரியர்கள் பற்றி மூச்சே விடமாட்டார்கள். இவர்களது ஒரே நோக்கம் இந்திய ரீதியிலான பாடத் திட்டத்தை முடக்குவதுதான். முதலில் இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களே இன்றைய கல்விக்கும் கல்வித் திட்டத்துக்கும் மாணவர்களுக்கும் முதல் எதிரி. இவர்களை எதிர்கொண்டால் நாம் முன்னேறிவிடலாம்.

* இறுதியாக: பி.ஆர். மகாதேவன் சொன்னதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அதேசமயம் அவர் சொன்னது இதுவரை யாரும் சொல்லி இராத கருத்தல்ல. இவராவது நிறைய விஷயங்களை யோசித்து ஒன்றாக்கி அதிலிருந்து இன்னொன்றை வந்தடைகிறார். மற்ற சிலர், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டால்தான் பள்ளிகள் மோசமாகின என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றைச் சொன்னவர்கள் பாஜக அபிமானிகள் அல்ல என்பதும் (குறிப்பு: பாஜக அபிமானிகள் இப்படிச் சொன்னதே இல்லை என்று நான் சொல்லவில்லை!), திராவிட சிந்தாத்தத்தை நம்புகிறவர்கள் என்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.

Share

நிலம் புதியது நீர் புதியது

1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக்காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே போய் பேருந்து பிடித்து சினிப்ரியா மின்ப்ரியா சுகப்ரியா காம்ப்ளெக்ஸுக்குப் போனால், ‘அஞ்சலி’ ஹவுஸ்ஃபுல், தர்மதுரைக்குப் பெரிய வரிசை. இத்தனைக்கும் படம் வந்து 90 நாள்களுக்கும் மேல் இருக்கும். ஆறேழு நண்பர்கள் மட்டுமே போயிருந்தோம். நான் கவுண்ட்டருக்குச் சென்று, ஸ்கூல் முடிச்சிட்டு வர்றோம்ண்ணே என்று சொல்லவும், கவுண்ட்டரில் இருந்தவர் சட்டென எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டார். கதிர்வேல், அழகேசன், ஜெ.குமரன், சுரேஷ்குமார், நான், இன்னும் ஒன்றிரண்டு பேர். எங்களுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷத்துடன் படம் பார்த்தோம்.

படம் முடிந்ததும் மீண்டும் பேருந்து பிடித்தோம். சிம்மக்கல் பக்கத்தில் சுரேஷ்குமார் இறங்கினான். பின்பு ஜெ.குமரன். பின்பு ஒவ்வொருவராகப் பிரிந்தோம். அன்றைக்குப் பிறகு சுரேஷ்குமார், ஜெ.குமரன் என்று யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. எங்கே இருக்கிறார்கள், என்னை நினைப்பார்களா – எதுவும் தெரியாது. மதுரையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைக்குப் போய்விட்டார்கள். அழகரடியில் குடி இருந்தோம். அங்கே போய்த் தேடியதில் சிலரைப் பிடிக்க முடிந்தது. ஆனால் பலரை இன்று வரை பார்க்கமுடியவில்லை. வீட்டு நண்பர்களாக இருந்தவர்களில் ராஜாவுடன் மட்டும் இன்றும் தொடர்பு இருக்கிறது. மற்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது. . மதிப்பெண் பட்டியல் வாங்கும்போதுகூட யாரையும் பார்க்கமுடியவில்லை. நான் சீக்கிரமே போய் வாங்கிக்கொண்டு திருநெல்வேலி வந்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் தொண்டையை அடைக்கும் துக்கம் அது. இன்றும்கூட திடீரென அழகரடி கனவில் வருவதுண்டு. ஃப்ரான்சிஸ், இன்பக்கந்தன், சரவணக்குமார், பாலாஜி என்று சிலரை ஃபேஸ்புக்கில் பிடிக்கமுடிந்தது. ஃப்ரான்சிஸுடன் எப்போதுமே கொஞ்சம் தொடர்பில் இருந்தேன்.

மகன் அபிராமை 9ம் வகுப்புக்கு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினேன். கொஞ்சம் ரிஸ்க்தான். பெரிய ரிஸ்க்காகக்கூட இருக்கலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் ஒரே பள்ளியில் படித்தவன் அபிராம். நான் எந்த ஒரு பள்ளியிலும் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து படித்ததில்லை. அதற்கே எனக்குப் பிரிவு அத்தனை வருத்தமாக இருந்தது. அபிராமுக்கும் இப்போது அதே மனநிலை. ஆனால் நான் இருந்ததைவிட கொஞ்சம் முதிர்ச்சியுடன் இருக்கிறான் என்றே தோன்றுகிறது. 1ம் வகுப்பிலிருந்து 2 வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற்றும்போது,  “என்னடா, ஃபிரண்ட்ஸை விட்டுப் போறோம்னு இருக்கா” என்று கேட்டதற்கு, “ஏன் அங்க ஃப்ரண்ட்ஸ் இருக்கமாட்டாங்களா” என்று கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று இதைக் கேட்கும் நிலையிலெல்லாம் இல்லை. விவரம் புரியத் தொடங்கிவிட்டது. இதுதான் நிஜம் என்று ஒரு பக்கம் புரிந்தாலும், வருத்தமாகத்தான் இருக்கிறான். கடைசி வரையில் எப்படியாவது இந்தப் பள்ளி மாற்றம் தடைபட்டுவிடும் என்று எதிர்பார்த்தான்.

நான் மதுரையில் பெரிய நண்பர்கள் படையைவிட்டுவிட்டு திருநெல்வேலி சென்றபோது, இனி அப்படி நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றே நம்பினேன். ஆனால் திருநெல்வேலி இன்னொரு நண்பர்படையுடன் என்னை உள்வாங்கிக்கொண்டது. இன்றளவும் தொடரும் நட்புகள் அவை. அதே தீவிரத்துடன் அதே நட்புடன் அதே உண்மையுடன். துபாய் சென்றபோது மீண்டும் அதே எண்ணம், ‘இனி அப்படி நட்பு அமையாது’ என்பதே. ஆனால் வாழ்க்கை இதையும் உடைத்துப் போட்டது. சென்னைக்கு வந்த பிறகும் இப்படிச் சில நண்பர்கள் அமைந்தார்கள். இனி அமைவார்களா? தெரியாது. ஆனால் அமையமாட்டார்கள் என்று நிச்சயம் சொல்லிவிடமுடியாது என்பதை காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

இன்று அபிராம் புதிய பள்ளிக்குச் செல்கிறான். நான் பத்தாம் வகுப்பில் என் நண்பர்களைப் பிரிந்தபோது அவர்களுடன் ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது அதற்கெல்லாம் வசதி இல்லை. இன்று மறக்காமல் நான் அபிராமுக்குச் செய்தேன். பள்ளியின் கடைசி நாளன்று அவன் பள்ளிக்குப் போய் அவனை அவன் நண்பர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். இதில் பல நண்பர்களை அபிராம் இனி பார்த்துப் பழகமுடியாமல் போகலாம். ஆனால் புதிய பள்ளி புதிய நண்பர்களுடன் நிச்சயம் காத்திருக்கும்.

Share

காவிக் கொடியும் அம்பேத்கரும்

பாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை! பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂

படம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.

கட்டுரை: அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை, ஸ்வராஜ்யா இதழில். https://swarajyamag.com/politics/guha-is-wrong-rss-never-had-any-shade-of-doubt-in-hoisting-the-tricolour

Share

7ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுதும் அறிவு – ஒரு சாம்பிள்

ஓர் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தாங்களே எழுதியது. 73 மாணவர்களில் (சந்திப் பிழையைக் கவனத்தில் கொள்ளாது) ஒரு வார்த்தை கூடப் பிழையின்றி எழுதியவர்கள் 7 பேர். 5 எழுத்துகளுக்கு மேலுள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே தவறாக எழுதியவர்கள் 15 பேருக்கும் மேல். பாதிக்கும் மேல் தவறாக எழுதியவர்கள் 40 பேருக்கும் மேல். கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் தவறாக எழுதியவர்கள் 6 பேர் இருக்கலாம்.

8ம் வகுப்பில் செய்யுட் பகுதியில் பெரிய வினா உண்டு, உரைநடைப் பகுதியிலும் உண்டு, கட்டுரை உண்டு. யோசித்துப் பாருங்கள்.

இது ஒரு பள்ளியின் நிலைதான். என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தமிழின் நிலையும் இதுவாகவே இருக்கக்கூடும்.

இதைத் தொடர்ந்து போகன் ஃபேஸ்புக்கில் எழுப்பிய கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்:

1. இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. அது தேவை. எனவே, மார்க் குறைந்தாலும் ஏன் வருகிறார்கள் என்ற கேள்வி எனக்கானதல்ல.

2. 10% புதிய ஓசி ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

3. காட்டாயத் தேர்ச்சி தவறு. மாணவர்களின் தரத்தை, ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

4. எதோ ஒரு வகையில் பொதுத் தேர்வு தேவை. முழுக்க மாநில அரசே வைத்துக்கொண்டாலும் சரி.

5. சாதிய ஆதரவில் பேச எனக்கு ஒரு முகாந்திரமும் இல்லை. பள்ளிகளின் மீதான அக்கறையிலேயே சொல்கிறேன். மற்ற “பிராமணர்கள்” கருத்துக்கு அவர்களே கருத்துச் சொல்ல வேண்டும்.

6. பிராமண வெறுப்பில்லை, ஆனால்‌ பிராமணர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதில், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிறர்களுக்கான விலக்கில் ஒரு நியாயமும் இல்லை. அதாவது, ஒரு சாரார் இப்படி யோசிக்கிறார்கள் என்பதையே நான் ஏற்கவில்லை. அது பிராமணக் காழ்ப்பாளர்களால் கட்டி ஏற்றப்படும் ஒன்று.

7. பள்ளிகளின் யதார்த்த நிலையைச் சொன்னால், அதையும் இட ஒதுக்கீடு, சாதியோடு புரிந்துகொள்வது, விளக்கம் கொடுத்த பின்பும் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், பழகிப் புளித்துப் போய்விட்டது. 

8. அரசுப் பள்ளிகளை அல்ல, ஒட்டுமொத்த பள்ளிகளின் தரமும் அதுதான் என்றே சொல்லி இருக்கிறேன். தனியார்ப் பள்ளிகளில் இட ஒதுக்கீடு இல்லை. அப்படியானால் இது பொதுக் கருத்து என்பது குழந்தைகளுக்கும் புரிந்திருக்கவேண்டும். சில குழந்தைகளுக்குப் புரியாதது, பிராமணக் காழ்ப்பு.

Share