Archive for கவிதை

கவிதை

பள்ளி முடிந்து ஓடிவரும்
ஆயிரம் குழந்தைகளில்
என் மகளைத் தேடும் போது
அனைவருமே
அவளாகத் தெரிகிறார்கள்

Share

தாய் (கவிதை)

தாய்

ஆற்று நீரின் மணல் காலில் பட்டதுமே
ஆங்காங்கே முளைத்துக்கொண்டன
நினைவுக் குடைகள்
நீரில் முங்கியதும்
மேலே பரவிய
காற்றுக் குமிழிகள்
உடையும்போதெல்லாம்
அம்மா அம்மா என்றே பரவின
நெளிந்து போன
டிஃபன் பாக்ஸில்
கெட்டியாக பிசைந்து கொடுத்த
மோர் சாத மாவடு வாசத்துடன் காற்றோடு வந்தவள்
‘முங்கும்போது மூக்க பிடிச்சிக்கில’ என்றாள்.
குளிப்பாட்டினாள்
நீரூட்டினாள்
தாமிரபரணியே தாயாக எழுந்து நின்றாள்
நீரோடு கலக்காத கண்ணீர்த் துளிகள்
ஒருவேளை இருந்திருந்தால்
தனித்தனியே தீவுக்கூட்டங்கள்
முளைத்திருக்கக்கூடும்.
கடைசிச் சொட்டு நீர் சொட்டும் வரை
கரையில் காற்று வாங்கி
சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து நின்றிருந்தபோது
‘நல்லா துவட்டுல’ என்று யாரோ ஒரு அம்மை
தன் மகனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்

Share

கவிதைகள்

அழகோவியம்

பஞ்சு விரல்களில்
கோலம் வரைகிறாள்
கண்ணில் விழும் தலைமுடியை
ஒதுக்கிக் கொண்டே இருக்கும்‌ சிறுமி
முயல் வரைந்து உச் கொட்டி அழிக்கிறாள்
மீன் வரைந்து முகம் சுழிக்கிறாள்
கன்று பாதி உருவாகி வரும்போதே நீரூற்றுகிறாள்
ரோஜாவை வரைந்து பார்க்கிறாள்
சூரியகாந்தியை வரையும்போதே
கோலத்தைக் காலால்‌ எத்திவிட்டு
கண்ணீருடன் வீட்டுக்குள் ஓடும்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் கழுத்துக்குப் பின்னே
அவள் வரைந்த
அனைத்து உயிரிகளும்
மலர்களும்
காத்திருந்ததை.

சொற்களை விட்டோடியவன்

அட்டைக் கத்தியால்
வானில்‌ சுழித்தபடி
அந்தக் கோட்டி
உதிர்த்த சொற்களைப்
பாதி பேர் கேட்கவில்லை
மீதி‌ பேருக்குப் புரியவில்லை.
வானத்தில்
தன் கத்தியால்
ஒரு கேள்வி இட்டான்.
சொல்ல சொல்ல
சொற்கள் குவிந்துகொண்டே சென்றன
சொற்களின் பீடம் மேலேறி
கேள்வியை முறைத்து நின்றவன்
கீழே நகரும் கூட்டத்தை
வாத்துக் கூட்டம் என்றான்.
சட்டெனப் புரிந்துவிட்டதால்
கல்லால் அடித்தார்கள்.
சொற்களை வாரி எடுத்துக்கொண்டு
காற்றில் மறைந்தான் அவன்.
எல்லோரும் நிம்மதியானார்கள்.
அவனோ
இன்னொருவனோ
வருவான் என
கேள்விக்குறி
தன் மழைக்காலத்துக்காகக்
காத்திருக்கிறது

நடைக்கோலம்

நீல வானில்
வெண்ணிற மேகங்கள்.
நடைப்பயிற்சி தொடங்கினேன்.
திக்கற்ற மனம்.
எங்கிருந்தோ தீம் திரனன தவழ்ந்து வந்தது.
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ.
எதிர்வீட்டு மொட்டைமாடியில்
தவமணி அக்கா மூச்சு வாங்க நடக்க வந்தாள்
என்னத்த, அத்தான் எங்க என்று கேட்க நினைத்து
பயந்து போய் அமைதியாக இருந்தேன்.
அவளே வானத்தைக் கைகாட்டி
இருபது நாளாச்சு என்றாள்.
கீழ் வீட்டுக்காரன் மொட்டை மாடிக்கு வரும்போதெல்லாம்
அந்த அத்தானைப் பார்த்துப் புன்னகைப்பான்.
அவன் போயும் இருபது நாளிருக்குமா?
அத்தானுக்குத் தெரியாது.
வானத்தைப் பார்த்தேன்.
எதிரெதிர் மேகத்திரளில்
அத்தானும் கீழ்வீட்டுக்காரனும்
ஒருவரை ஒருவர்
புன்னகைத்துக் கொண்டார்கள்.

Share

விலங்குச் சாலை (கவிதை)

விலங்குச் சாலை

தார் ரோட்டில்
சாலையோடு சாலையாக
அப்பிக் கிடக்கும்
நாயொன்றின் தோல் மீது
வண்டி ஏறி இறங்குகையில்
துணுக்குறும் மனத்துக்குள்ளே,
கொல்லாமல் விட்ட
மனிதர்களின் முகங்கள்
வேட்டையாடாமல் விட்ட
அழகிகளின் உடல்கள்
கண் மூடிக் கொண்ட
கடவுள்களின் சாத்தான் குணங்கள்
மண் மூடிக் கிடந்த
மிருகங்களின் விழிப்புகள்.
சாலைக்குக் குறுக்கே ஓடும் நாய்க்குட்டிகளே
இது விலங்குகள் விரையும் சாலை.

Share

கவிதை

விடியல்

பெரும் புழுதியில்
சூறைக் காற்றில்
ஒரு மல்லிகை மொட்டு
இலக்கற்று
பறந்துகொண்டிருந்த போது
பேரலையில்
பெரு வெள்ளத்தில்
ஒரு மரக்கலம்
திசையற்று
தடுமாறிக் கொண்டிருந்தபோது
பெரும் பிரளயத்தில்
பேரச்சத்தில்
அமைதியற்று
உயிரொன்று
அல்லாடிக் கொண்டிருந்தபோது
கொடு நெருப்பு
தன் விருப்பென
அனைத்தையும்
அணைத்துக் கொண்டபோது
கிழக்கே
வானம்
விடியத் தொடங்கியது
எப்போதும் ஒரு காலையைப் போல.

Share

கவிதை

சிறுமியின் சைக்கிள்

சுவரின் ஓரத்தில்
காற்றில்லாமல்
சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்
தன் சின்ன சைக்கிளுக்கு
வாய் வைத்து
காற்றடித்துப் பார்க்கிறாள்
சிறுமி.
மெல்ல சிணுங்கும் சைக்கிளை
ஒரு தட்டு தட்டுகிறாள்.
சைக்கிள் அமைதியாகிறது.
வீட்டைத் தாண்டிக் கடந்து போகும்
குப்பை வண்டிக்காரன்
சிறுமியைப் பார்த்துச் சிரிக்க,
பயத்துடன் சைக்கிளைக்
கட்டிக் கொள்கிறாள் அவள்.

Share

கவிதை

கடும் புழுக்கத்தில்
சிக்னலில்
வரிசையாக வண்டிகள் காத்திருக்க
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்
வேனிலிருந்து
வந்து விழுகின்றன
இரண்டு சாக்லெட் தாள்கள்
சட்டென
எங்கிருந்தோ பறந்து வரும்
இரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல.
சிக்னல் திறக்கவும்
வேன் மிதந்து மிதந்து செல்கிறது
ஒரு நத்தையைப் போல.
நெரிசல் தந்த கடுப்பில்
ஹாரன் சத்தத்தில்
புருவம் உயர்த்தி கண்கள் இடுக்கி
நகர்ந்து செல்லும்
கூட்டத்தின் எரிச்சலில்
அந்த வேனுக்குள்
சாரல்
அடிக்கத் தொடங்கி இருந்தது.

Share

மீட்பின் துளி

கால்சுவட்டில்
தேங்கும்
நீரில்
மிதக்கும்
வானத்தில்
பறக்கும்
பறவையின்
காலில்
உலவும்
உலகின்
பிடியில்
சிக்கிக்
கிடக்கும்
எண்ணத்தை
மீட்க
வருக
வருகவே
ஒரு
துளி

Share