Archive for குதலைக் குறிப்புகள்

குதலைக் குறிப்புகள் – 9

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் கடந்த ஆறு வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சியை லைவ்வாகக் கொண்டு செல்வது எத்தனை கஷ்டம் என்பது முகத்தில் அறைந்தாற்போல் புரியத் தொடங்குகிறது. நாம் மனதில் நினைத்திருக்கும் வடிவத்தில் 50% நிஜத்தில் வந்துவிட்டாலே பெரிய வெற்றிதான் போல. பங்கெடுக்கும் எழுத்தாளர்கள், மருத்துவர்கள் அவர்களின் அலைவரிசையிலேயே பேசுகிறார்கள் என்பதுதான் பொதுவான சவால். இதை மீறிவிட்டாலே பாதி வெற்றிதான்.

லிவிங் ஸ்மைல் வித்யாவின் நிகழ்ச்சி மிக நன்றாக வந்திருந்தது. (ஒலிவடிவம் இங்கே.) இதன் காரணங்கள் மிக எளிமையானவை. வித்யா நேரடியாக, எளிமையாக, யதார்த்தமாகப் பேசினார். வித்யாவின் மெச்சூரிட்டி இன்னொரு காரணம். வித்யாவின் வருகை, திருநங்கைகளின் மீதான, என்னைப் போன்ற வலைப்பதிவர்களின் பார்வையை வெகுவாக பாதித்துள்ளது போன்றே, வேறொரு நோக்கில் வித்யாவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் – பாஸிடிவ்வாக. அவரது கோபங்கள் மிக நேர்த்தியாக வெளிப்பட்டன. வித்யாவின் இந்த மெச்சூரிட்டி நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தையே அளித்துவிட்டது. அவரது ‘நான் – வித்யா’ புத்தகம் பல தளங்களில் மிக முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியதை உணரமுடிகிறது. திருநங்கைகளைப் போன்றே, உடலளவில் பெண்ணாகவும், உள்ளே ஆணாகவும் உணரும் வகையினரின் கஷ்டத்தை வித்யா சொன்னவிதம் வெகு நேர்த்தியாக இருந்தது.

-oOo-

கிழக்கு வெளியிட்ட சமீபத்திய மூன்று புத்தகங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சீனா – விலகும் திரை, இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு, சென்னை – மறுகண்டுபிடிப்பு ஆகிய இந்த மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் மிக முக்கியமானது. கிழக்கு பதிப்பகம் புதிய வாசகர்களை உருவாக்கும் அதே வேளையில், தனது வாசகர்களை மெல்ல இந்தப் புத்தகங்கள் பக்கம் கொண்டு செல்வதும் முக்கியமான ஒன்றாகும். அது இப்போது தீவிரமாக நடக்கத் தொடங்கியிருப்பது சந்தோஷம் தருகிறது.

வயதானவர்களின் மீதான என் பார்வை எப்போதுமே அனுதாபம் சார்ந்ததாகவே இருக்கும். நான் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட என் தாத்தா பாட்டி ஆகியோரின் உருவத்தையே ஒவ்வொரு வயதானவரிலும் பார்ப்பதால் இப்படி இருக்கலாம். இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு புத்தக வெளியீட்டில், புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.சாரதி (பாராவின் அப்பா) கலந்துகொண்டார். இந்த விழாவில் எல்லாரும் பேசியதை விட, அந்த வயதானவர் கொண்ட நெகிழ்ச்சியே முக்கியமானதாகப் பட்டது எனக்கு. அவர் மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவர் கொண்ட நெகிழ்ச்சியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் இன்ஃபார்மலாக நடக்கும் கிழக்கு கூட்டத்தில், நூலின் மூல ஆசிரியரான ராமசந்திர குஹாவுக்கு, அவர் ஒரு பொன்னாடையைப் போர்த்திய தருணத்தில், விழாவில் ஒரு பாரம்பரியத் தன்மை புகுந்துகொண்டதாக உணர்ந்தேன். நான் ரசித்த நல்ல தருணங்களுள் அதுவும் ஒன்று.

-oOo-

பிள்ளையார் சதுர்த்திக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிறைய பிள்ளையார் சிலைகள் முளைத்திருந்தன. எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு பணியிடத்துக்கு செல்லுமுன்பு கிட்டத்தட்ட 20 பிள்ளையார்களைப் பார்த்தேன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பைத்தியக்காரன் தன் பதிவில் பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார் என்று ஒரு பதிவு எழுதியுள்ளார். பிள்ளையாரை அரசியலுக்கு உரிய ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்போகிறார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார். இதில் திடீரென்று வருத்தப்பட ஒன்றுமில்லை. எப்படி இஸ்லாமிய, கிறித்துவ, ஹிந்து மதங்கள் தொடர்ந்து அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ, அதன் ஒரு அங்கமாக இதுவும் அமையும். நாம் ஒட்டுமொத்தமாக, தொடர்ச்சியாகக் கவலைப்படலாமே ஒழிய, இதற்காக தனியாக வருத்தப்படவேண்டியதில்லை. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழகத்துக்குப் பிள்ளையார் வந்தார் என்கிறார் பைத்தியக்காரன். 1400 வருட காலப் பழமையே போதுமானதற்கும் மேலான வலு என்ற எனது தனிப்பட்ட கருத்து ஒருபுறமிருக்க, சோ துக்ளக் இதழில் இதுகுறித்து, சில வருடங்களுக்கு முன்பு சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வழக்கம்போல கருணாநிதி ஏதோ சொல்லிவைக்க, அதற்கு பதில் சொல்லும் வகையில்தான் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. பைத்தியக்காரனுக்கு அதில் சில பதில்கள் கிடைக்கலாம். அதுபோக, ஜாவா குமார் சொல்லியுள்ள பதில்களும் முக்கியமானவை. அதற்கு பைத்தியக்காரன் பதில் சொல்வார் என எதிர்பார்க்கலாம். இதுபோக, எந்த எந்தக் கடவுளர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்போது தமிழ்கத்துக்கு வந்தார்கள் என எழுதவேண்டும். அப்போதுதான் பைத்தியக்காரன் பின்னூட்டங்களின் வலிமையையும், முற்போக்கின் மகத்துவத்தையும் அறிவார். 🙂

-oOo-

பிள்ளையாருக்கு இணையாக, தெருவெங்கும் மாலைகளுடன் காணப்பட்டார் ராஜசேகர ரெட்டி. அவர் மறைவுக்கு அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ஊடகங்கள் இந்தியாவெங்கும் ஒரு மாயையையும், பரபரப்பையும் உருவாக்கிவிடமுடியும் என்பதற்கு இவை சமீபத்திய உதாரணங்கள். ஆந்திராவின் ஏழைப் பங்களான், அகில இந்திய ரட்சகராக்கப்பட்டார். எதிர்பாராத, இரக்கம் தரும் விதமான மரணம் அன்றி, அவர் இந்த அளவுக்கு இந்தியாவெங்கும் கொண்டாடப்பட அதிக காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. இது ஆந்திராவில் நிகழ்வது குறித்து பிரச்சினையில்லை; ஏற்கக்கூடியதே. தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நடப்பது ஆச்சரியம். நல்லவேளை கேரளாவில் இத்தனை ஆர்ப்பாட்டம் இல்லை போலும். எப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் ரட்சகராகவும், கேரளாவில் மனிதராகவும் ஆகிப் போனார் எனத் தெரியவில்லை. எல்லாம் ஊடக மாயை. சர்வக்ஞர் சிலை திறப்பில் கிடைத்த உற்சாகத்தைத் தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவைப் பலப்படுத்துகிறேன் என்று, தேவையற்ற ஒரு விடுமுறையை அறிவித்தார் கருணாநிதி. இது அநாவசியமான விடுமுறை. கருணாநிதிதான் ஸ்டண்ட் அடிக்கிறார் என்றால், கர்நாடகமும் விடுமுறை அறிவித்து, திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக நின்றது இன்னொரு கொடுமை. எதற்கெடுத்தாலும் விடுமுறை என்று அறிவிக்கும் வழக்கத்தை கருணாநிதி கைவிடவேண்டும்.

ஹிந்துத்துவவாதிகள் ராஜசேகர ரெட்டியை ராஜசேகர சாமுவேல் ரெட்டி என்கிறார்கள். இதற்கான ஆதாரங்களைக் கேட்டால், வாய்வழி பரப்பப்பட்ட உண்மை என்கிறார்கள். இணையத்தில் தேடினால், சில தளங்கள் அவரை ராஜசேகர சாமுவேல் ரெட்டி என்று சொல்கின்றன. இவையெல்லாம், ரெட்டி மரணத்துக்கு முன்பே எழுதப்பட்டவை என்பது முக்கியமான விஷயம். அவர் சாமுவேல் ரெட்டியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் பிரச்சினையில்லை. இதையெல்லாம் மீறித்தான் அவர் ஆந்திராவில் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். உண்மையில் அவர் கிறித்துவராகவே மதம் மாறி இருந்தாலும் பிரச்சினையில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் என்பதுதான் கேள்வி. இரு மத அரசியல் ஆதாயங்களையும் பயன்படுத்த அவர் இப்படி நடந்துகொண்டாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

-oOo-

கந்தசாமி திரைப்படம் பார்த்தேன். முதல் நாள் முதல் ஷோ. ரஜினி, கமல் படமில்லாமல் இன்னொரு நடிகரின் படத்தை முதல் ஷோவில் பார்ப்பதே கேவலமாக இருந்தது. 🙂 இருந்தாலும் என்ன செய்ய, பார்க்கவேண்டிய கட்டாயம். ஓசி டிக்கட்!

ரிச்நெஸ் இல்லை படத்தில். கேமரா ஒரே எரிச்சல். எல்லா காட்சிகளிலும் மஞ்சள் ஷேட், ப்ளூ ஷேட் ஒரே கலர் ஜிங்கிச்சா.

இத்தனை ஹிட்டான பாடல்களையெல்லாம் எப்படி சொதப்பவேண்டும் என்று சுசி கணேசனிடம் கற்கலாம்.

ஸ்ரேயே பாதி மார்பு வெளித்தெரியும்படி வருகிறார். படம் முடியும் நேரத்தில் வில்லனுக்கு ஒரு குத்துப் போட்டு. சகித்துக்கொள்ள முடியவில்லை. அதில் ஆடும் ‘ஆப்பிள் நைஸா கடிச்சிக்கோ’ புகழ் நடிகை, கிட்டத்தட்ட மேலாடையே இல்லாமல் குதிக்கிறார். இதை மட்டும் சகித்துக்கொண்டேன். 🙂

இத்தனை எரிச்சலையும் மீறி…

படம் முழுக்க ஒரே அரோகராதான். எல்லாவற்றையும் அந்த கந்தசாமியே செய்கிறான்! கடவுள் பெயரால் ஆசாமி செய்கிறான் என்று போலிஸ் குறிவைத்துப் பிடிக்கிறது ஆசாமி கந்தசாமியை. இதிலெல்லாம் விஷேஷமில்லை…

ஒவ்வொருதடவை விகரம் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் அவர் முருகனை நினைத்து வழிபடுகிறார். ஒவ்வொருதடவையும் சிக்கலில் இருந்து மீள்கிறார். இதுதான் முக்கியம். சமீபத்தில் இப்படி கடவுள் நம்பிக்கைக்குக் காவடி எடுத்து ஒரு மாஸ் படம் வந்ததில்லை என நினைக்கிறேன். சரத்குமாரின் ‘ஏய்’ இந்த ரேஞ்சுக்கு இருந்தது நினைவுக்கு வருகிறது. மெக்ஸிகோவில் ஐந்து வில்லன்கள் துப்பாக்கி முனையில் கந்தசாமியைக் கொல்லப் போகிறார்கள். கடைசி நொடியில், இறக்கும்போது அவர் முருகனை நினைக்கிறார். எங்கிருந்தோ வரும் ஒரு கார் அவரைக் காப்பாற்றுகிறது.

மக்கள் எல்லாருமே முருகந்தான் கந்தசாமி என்று படம் முழுக்கச் சொல்கிறார்கள்.

பின்னணி இசைகூட ‘முருகா முருகா முருகா முருகா’தான்.

இது ஒரு ஹிந்துத்துவா படம் என்று கிளப்பிவிடலாம் என்றால், படத்தின் தரம் அதைச் சொல்லவே நாகூச வைக்கிறது.

இந்தப் படம் இத்தனை மோசமாக இருந்தாலும், ஃப்ளாப் ஆகாது, சூப்பர் ஹிட் ஆகவிட்டாலும், நஷ்டமில்லாமல் ஓடிவிடும் என நினைத்தேன். அதற்கான உழைப்பை விக்ரம் கொடுத்திருக்கிறார். சேவல் மாஸ்க் இலவசம் என்று சொன்னதும், மக்கள் கூட்டம் அதிகமாகி லாபம் வருகிறது என செய்திகள் பார்த்தேன். உண்மையா எனத் தெரியவில்லை. சேவல் போல வரும் விக்ரமை சிறுவர்கள் ரசிப்பார்கள் எனத்தான் நினைக்கிறேன்.

-oOo-

இப்போது டிவியில் ராமாயணம் ஓடிக்கொண்டிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ராமானந்த சாகரின் ராமாயணம் ஹிந்தியில் வந்தபோது, வீடு வீடாக அலைந்து டிவி பார்த்தது நினைவுக்கு வருகிறது. தினமலரில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுவார்கள். அதை முதலிலேயே படித்துவிட்டு, அதை ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்துகொள்வோம். இப்போது தமிழிலேயே வருகிறது.

இந்த ராமாயணத்தில், கோசலை, கைகேயி, சீதை எல்லாம் மிகவும் செக்ஸியாக வந்தார்கள். இவர்கள் ராமாயணத்தை உள்குத்தாகக் காண்பிக்கிறார்களோ என்றெல்லாம் தோன்றியது. எல்லார் வீட்டிலும் சிறுவர்கள் இந்த ராமாயணத்தை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். வயது வந்தவர்கள் தவிர, இந்த ராமாயணத்தை யாருமே பார்க்கமாட்டார்கள் என நினைத்திருந்தேன். ராமாயண நாடகத்தின் டைட்டில் பாட்டான ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கேட்டதும், சிறுவர்கள் ஓடி வந்து டிவி முன் உட்கார்கிறார்கள். எந்த சிறப்பு நிகழ்ச்சி வந்தாலும், ராமாயணத்தை நிறுத்தாமல் ஒளிபரப்பிவிடுகிறது சன் டிவி.

இப்படி பத்து வருடங்களுக்கு ஒருமுறை ராமாயணத்தையும், மகாபாரத்தையும் காண்பிப்பது நல்லது என்ற எண்ணம் வந்துவிட்டது! என்ன, கைகேயி, கோசலை, சீதைக்கெல்லாம் நல்ல மாராப்புத் துணியைக் கொடுத்து, இடுப்பை மறைத்துக்கொண்டு நடிக்கச் சொல்லித் தந்தால் நல்லது.

-oOo-

உதயா டிவியில் சில கன்னடப் படங்கள் பார்த்தேன். எல்லாப் படங்களுமே தமிழில் இருந்து சென்றவைதான். கன்னட ரமணாவிலும், நாட்டாமையிலும் விஷ்ணு வருத்தன். கன்னட ஆண்பாவத்திலும், எங்க சின்ன ராசாவிலும் ரவிச்சந்திரன். இன்று இரவு கன்னட முத்துவில் இருவருமே வரப்போகிறார்களாம்!

மலையாளத்திலும் தெலுங்கிலும் தசாவதாரம் பார்த்தேன். மலையாளத்தில் நாயுடு கமல் தெலுங்கு பேசுபவராகவே வந்துவிட்டார். தெலுங்கில் நாயுடு கமல் தமிழ் பேசுகிறார். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்’ என்று பாடுகிறது அவரது மொபைல். ‘தெலுகா’க்கு பதில் தமிழா என்கிறார். ‘இல்லை மலையாளி’ என்கிறார், தமிழில் கன்னடம் என்றும் மலையாளத்தில் கன்னடம் என்றும் சொல்லும் ஒரு நடிகர். தமிழ் நாயுடு கமல், தெலுங்குப் படத்தில், மலையாளத்துக்கும் தமிழுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட்தான் என்று தமிழில் சொல்கிறார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே குழப்புவதுபோல, தெலுங்கு, மலையாள தசாவதாரங்கள் நல்ல காமெடியாக இருந்தன.

-oOo-

சாரு நிவேதிதா…

… பற்றி நான் என்ன எழுதிவிடப் போகிறேன்..? அவர் நித்யானந்தர் வழியாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறார். வாழ்க நித்ய ஆனந்தத்துடன். :))

-oOo-

தோழமை வெளியீடாக ‘இருள் விலகும் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு – நிறைய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – வெளிவந்துள்ளது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டியது. இன்னும் நான் பார்க்கவில்லை. எனது கதை ஒன்றும் இதில் உள்ளது. புத்தகம் கைக்கு வந்ததும் சொல்கிறேன். எனது கதை இந்த சிறுகதை உலகை எப்படி மாற்றியமைக்கிறது என்பது பற்றி நாம் நிறையப் பேசலாம். 🙂

-oOo-

Share

குதலைக் குறிப்புகள் – 8 (குழந்தைப் பேறின்மை என்னும் பெரும்பூதம்)

‘அவன் அரண்டு போய் உட்கார்ந்திருந்தான். அவனது நடுமண்டையில் யாரோ நச்சென்று கத்தியால் குத்தியதைப் போன்றிருந்தது. அனிச்சையாகத் தலையைத் தடவிக்கொண்டான். எனக்கு ஏன் இப்படி? இதற்கு வாய்ப்பே இல்லையே. என் குடும்பத்தில் யாருக்கும் இப்படி இல்லையே’ – கிழக்கு ஸ்டைலில் இப்படி ஆரம்பிக்கலாம். இரண்டு மூன்று வரிகளில் அத்தனையும் புலப்பட்டுவிடும். ஒவ்வொரு குடும்பத்திலும் துரத்திக்கொண்டிருக்கும் குழந்தைப் பேறின்மையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

பெரும்பாலான குடும்பங்களில் இந்தப் பேச்சை நாம் கேட்டிருப்போம். ‘ஒரு மாசம்தான் தள்ளிப் போச்சு. முதல் மாசமே உண்டாயிட்டா.’ இப்படி நிகழாத வீட்டில் நிச்சயம் ‘நம்ப குடும்பத்துல இப்படி இல்லியே. புள்ளைகளுக்கா பஞ்சம்’ என்று அடுக்குவதைக் கேட்டிருக்கலாம். ஒருவகையில் கல்யாணம் ஆன முதல் மாதத்தில் கருத்தரித்துவிடுவது வீரமாக இங்கே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ’ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்த்தென்ன’ என்பதெல்லாம் இப்படி உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் பொதுப்புத்தியை உருவாக்கும் திரைப்படங்களில் இக்கருத்துருவாக்கம் இருப்பதை இன்றும் பார்க்கலாம். தனியறை கொடுத்து, பழம் கொடுத்து, பால் கொடுத்து, நறுமணம் கொடுத்து நடக்கும் ‘இரவு’களுக்குப் பின்னரும் கருத்தரிக்காது. ஆனால் ஓடும் ரயிலில் ஒரு வில்லன் ஒரு பெண்ணைக் கற்பழிப்பான். அவள் கருத்தரித்துவிடுவாள். இத்தனைக்கும் கடுமையாகக் கத்தி ஆர்பாட்டம் செய்திருப்பாள் ஹீரோயின். இப்படி ஒரு தொடுதலில் கருத்தரிப்பதை ஒரு பெருமையாகவும் வீரமாகவும் ஆக்கி வைத்திருக்கிறது நம் சமூகம். யதார்த்தத்தில் இதில் ஒரு எருமையும் கிடையாது என்பதே உண்மை.

இப்படி உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தில் பந்தாடப்படுபவர்கள் யார்? உயிரோசையில் எழுதிய கட்டுரையில் வாஸந்தி கேட்கிறார், ‘உடலுறவு என்பது குழந்தைப் பேறு என்னும் புனிதத்தை முன்னிறுத்தி என்றால் குழந்தைப் பேறில்லாத கணவனும் மனைவியும் உறவு கொள்வது புனிதமற்ற செயலா?’ என. (நினைவிலிருந்து சொல்கிறேன்.) வாஸந்தி எழுதிய கட்டுரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவானது. இதன் பின்னணியில் குழந்தைப் பேற்றின் புனிதத்தன்மை என்னும் ஒரு பிரதியையும் நாம் வாசிக்கலாம். நம் சமூகம் குழந்தைப் பேறுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த முக்கியத்துவம் தவறு என்பதல்ல. ஆனால் அந்த முக்கியத்துவத்துக்கு எதிராக எழும் மனோபாவம் உண்டாக்கும் பதற்றமும், முத்திரையும் அதிக விலையைக் கேட்டுவிடுகின்றன.

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் (குழந்தைகளைப் பற்றிப் பேசிவிட்டு இக்கு’ர’லைச் சொல்லாவிட்டால் எவன் மதிப்பான்?); அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அழாவிய கூழ் – இரண்டிலும் வள்ளுவேறு சும்மா இருக்காமல் அதிகம் தம்மடித்துவிட்டார். பிடித்துக்கொண்டார்கள் கலாசார உருவாக்கிகள். தம் மக்கள் என்பது சும்மாவா. ஒரு அறிஞர் தம் மக்கள் என்பது பெற்ற மக்களை மட்டும் அல்ல, வளர்த்த மக்களையும் சேர்த்தே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். யாரும் காதுகொடுக்கவில்லை. தம் மக்கள், தம் மக்களேதான் என்று தம்மை அழுத்திவிட்டார்கள் நம்-தம் மக்கள்.

குழந்தைப் பேறுக்கும் ஆண்மைக்கும் (இதில் பெண்களின் நிலையும் கொடுமையானதே. ஆனால் நான் ஆண்களைப் பற்றி மட்டுமே பேசப்போகிறேன்!) நம் சமூகம் கொடுத்திருக்கும் மதிப்பு கொஞ்சம் அதீதமானது. ஆண்மையும் வீரமும் ஒன்றல்ல. இங்கே வீரம் எப்போதும் ஆண்மையுடன் சம்பந்தப்படுத்தியே பார்க்கப்பட்டுள்ளது. ஒருவகையில் இது உலகம் முழுக்கவும் இப்படித்தான் இருக்கிறது.

நான் பதினேழு வயதாகும்போது குழந்தைப் பேறு பற்றிய பல்வேறு குழப்பத்திலும் பயத்திலும் இருந்தேன். நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கொண்டிருக்கும்போது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சீனியர் நண்பர் இன்னொரு நண்பரைப் பார்த்து ‘காச அமுக்காதல, சிவன் சொத்து குல நாசம் அப்புறம் புள்ள பொறக்காது’ என்றார். அதற்கு அந்த நண்பர் ‘திருடாட்டியும் குழந்தைப் பொறக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை’ என்றார். என்னைப் போலவே இப்பயம் எல்லாருக்குமே இருக்கிறது என்பதை நினைத்துக்கொண்டேன். இப்பயம் எனக்கு வந்த வயது பதினேழு. குழந்தை பெறாவிட்டால் எழும் ஒருவித பயத்தை எனது பதினேழு வயதில் நான் மனத்துக்குள் வைத்திருந்தேன்!

இதில் கல்யாணம் ஆன ஒன்றிரண்டு மாதங்கள் காமத்தின் பிடியில் காலம் கழிந்துவிடும்போது எல்லாமே இன்பமயம்தான். இரண்டு மாதங்கள் கழியும் நிலையில் ஒவ்வொரு வீட்டிலிருந்து கேள்விகள் வரத்தொடங்கும், என்ன விசேஷமா என்று. இந்த ‘என்ன விசேஷமா, சும்மாதான் இருக்காளா’ என்கிற கேள்விகள் எழுப்பும் விநோதமான எண்ணங்களைச் சொல்லில் வடிக்கமுடியாது. இப்படியே இன்னும் நான்கைந்து மாதங்கள் சென்றால், ஒருவிதமான உளப்பிரச்சினையும் உள்ளூர அரிக்கத் தொடங்கும்.

நமக்குப் பின்பு கல்யாணம் ஆன யாரேனும் ஒருவருக்கு ஒரு மாதத்திலெல்லாம் கருத்தரிப்பு நிகழ்ந்துவிட்டால், இந்த மனம் அடையும் உணர்வைச் சொல்லமுடியாது. அது சந்தோஷமா, கையாலாகாதத்தனமா, கோபமா, பொறாமையா – எதுவென்றே சொல்லமுடியாது. அதுவும் ஒரே வீட்டில் இது நடந்துவிட்டால் வரும் நெருக்கடி இன்னும் அதிகமானது. நெருக்கடி நெருக்கி அடி என்ற பஜனையெல்லாம் சுத்தமாக எடுபடாது.

இதைத் தவிர்க்க ஒருவகையில் நாம்தான் தயாராக இருக்கவேண்டும். குழந்தை என்பது நிச்சயம் தேவையான ஒன்றே. குழந்தையின் மூலம் நாம் அடையும் சந்தோஷமும் பெருமையும் சந்தேகமேயில்லாமல் மேன்மையானதே. ஆனால், நாம் நம் மனதை கொஞ்சம் பக்குவப்படுத்தவும் பழகிக்கொள்ளவேண்டும். என் கல்யாணத்துக்கு முன்பே, நமக்குக் குழந்தை இல்லையென்றால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். (ஒரு குழந்தை பிறந்தாலும் இன்னொரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இதில் நிகழ்ந்த பிரச்சினைகள் பெரிய கதை!) இதனை எல்லாருமே ஒரு முடிவாகக் கொள்ளலாம். என் நெருங்கிய சொந்தக்காரருக்கு குழந்தை இல்லை. எத்தனையோ பேசிப் பார்த்தும் அவரை ஒரு குழந்தையை தத்தெடுக்க சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. கேட்டால் விதவிதமான காரணங்கள் சொல்லுவார். ‘நம்மால ஒழுங்கா வளர்க்க முடியலைன்னா’ என்பார். உங்களுக்கே ஒரு குழந்தை பிறந்தால் எப்படி வளர்ப்பீர்க்ள் என்றால், அது நம்ம குழந்தைல என்பார். இன்னொரு சமயம் ‘நீங்கள்லாம் பின்னாடி அந்தக்க் குழந்தையை ஒதுக்கிட்டீங்கன்னா’ என்று பிரச்சினையை நம் பக்கம் திருப்புவார். கடைசியில் அவருக்கு கிட்டத்தட்ட 50 வயது ஆகியும்விட்டது. இப்போது குழந்தையைத் தத்து எடுத்தாலும் சரியாக வளர்க்கமுடியாது என்று பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.

இன்னும் சிலர் சொல்வார்கள், ‘எனக்குத் தெரிஞ்ச ஒருத்திக்கு 12 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு’ என்று. இதன் சதவீதம் எவ்வளவு என்று யோசிக்க மறுப்பார்கள். இன்னும் சிலர் குழந்தைக்காக லட்சம் லட்சமாகச் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். இது வெறும் சாத்தான் வேதும் ஓதமல்ல. நான் இரண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கலாம் எனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வீட்டில் இதற்கு சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் தோல்விதான். வீட்டில் என்றால், என் மனைவியல்ல. அவளுக்கு நான் சொல்லும் எதுவும் சம்மதமே. ஆனால் என் அம்மாவை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. அப்படி செஞ்சா நான் வீட்ல இருக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நேற்று பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் திடீரென்று சொன்னார், அவரது மகன் தத்துப் பையன் என்று. ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பிறந்த ஒரு பெண் உண்டு. இரண்டாவதாக ஒரு பையனைத் தத்தெடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு. இப்போது என் வீட்டில் நிகழந்தது போலவே அங்கேயும் பிரச்சினை. ஆனால் நண்பர் உறுதியாக இருந்துவிட்டார். குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரும்போது, மிகவும் ஆர்தடக்ஸான பாட்டி சொன்னதாம், ‘படியைத் தாண்டி ஆத்துக்கு வந்துடுச்சோன்னா இனிமே நம்ம கோந்தடா’ என்று. ஒரு சிறுகதையின் உன்னதமான உச்சகட்டத்தை வாசித்ததுபோலக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘என் பொண்ணையும் இப்படி செஞ்சிருக்கலாம்’ என்று ஜெயகாந்தனின் அம்மா கதாபாத்திரம் சொல்வதுபோல, ‘என் அம்மாவும் இப்படி ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்’ என்று தோன்றாமல் இல்லை.

குழந்தையை இப்படித் தத்து எடுப்பது என்பது மோசமானதோ, ஒத்துவராததோ அல்ல. ஒரு குழந்தையின் கள்ளமற்ற சிரிப்பு உண்மையான மனத்தை எளிதில் கரைத்துவிடக்கூடியதுதான் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் இதனை எப்படி என் உறவினர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் தெரியவில்லை. எனக்காவது முழங்காலில் பசி. என் நண்பன் ஒருவன் வீட்டில் மூன்று அண்ணன் தம்பிகள். அவர்களுக்கு சித்தி பையன்கள் மூன்று பேர். மொத்தம் ஆறு அண்ணன் தம்பிகள் எனச் சொல்லலாம். ஆறு பேருக்கும் பிள்ளையில்லை. ஆறு பேரும் இதுவரை ஒரு குழந்தையைத் தத்து எடுப்பது பற்றி யோசிக்கவில்லை. தத்து எடுப்பது மட்டுமல்ல, முன்னேறிய அறிவியல் உலகத்தில் இருக்கும் எந்த வித பயனையும் அவர்கள் விரும்பவில்லை. இயற்கையான கருத்தரிப்பு மூலம் பிறக்கும் பிள்ளை ஒன்றே நம் பிள்ளை என்கிற மனோபாவம் அவர்கள் குடும்பம் முழுதும் பரவிக் கிடக்கிறது. மிக நெருங்கிய நண்பர்களிடத்தில் சொல்லிப் பார்க்கலாம். மிக நெருங்கிய உறவினரிடத்தில் சொல்லிப் பார்க்கலாம். மற்றவர்களிடம் இதைச் சொல்லமுடியாது. எனக்குள்ளே பேசிக்கொள்ளவேண்டியதுதான் – இப்படி.

சில ப்ரிஸ்கிரிப்ஷன்கள்:

01. கல்யாணம் ஆன தம்பதிகள் யாரையேனும் பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதங்களுக்கு மேல் இருந்தால், ஏதாவது விசேஷமா, ப்ளானிங்கா என்று கேட்காமல் இருக்கவேண்டும்.

02. இதே விஷயத்தை நம் வீட்டில் இறைவன் படைத்து உலவவிட்டிருக்கும் கிழவிகளுக்கும் அத்தைகளுக்கும் சொல்லி வைக்கவேண்டும்.

03. நல்ல டாக்டரைப் பார்க்கலாமே என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பேசாமல் இருக்கவேண்டும். நிச்சயம் நல்ல டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

04. நீங்க ஏன் தத்தெடுக்கக்கூடாது என்கிற அட்வைஸெல்லாம் தேவையில்லை. தத்து எடுத்து வளர்ப்பது என்பது கடையில் காய்கறி வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு வருவது போன்றதல்ல. நிறைய உள்ளங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

05. குழந்தைப் பேறின்மை என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்கிற ஒரு பொதுவிவாதத்தைத் தொடர்ந்து நிகழ்த்தலாம். பெரிய பதற்றத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு இது இருக்க உதவும்.

06. ஸ்பெர்ம் டெஸ்ட் பண்ணியா, கஷ்டம்ல, எத்தனை கவுண்ட் இருக்கு என்றெல்லாம் படம் போடாமல் இருக்கவேண்டும்.

Share

குதலைக் குறிப்புகள் – 7

குதலையில் தெரு நாய்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி என்று முன்பே நினைத்திருக்கிறேன். ஆனால் நாய்களைப் பற்றி நினைத்தவுடனே எழுதிவிடமுடியாது என்பதை உணர்த்தினார் ஒரு நண்பர். காஞ்சிப் பெரியவர் நாய்களைப் பற்றி (நாயர் என்று மரியாதையாகத்தான் சொல்லவேண்டும். ஆனால் ஜாதிப்பிரச்சினையாகிவிடும் என்பதால் இப்போதைக்கு நாய்கள் என்றே இருக்கட்டும் என விட்டுவைக்கிறேன்) ‘அவை வேதஸ்வரூபம்’ என்று சொல்லியுள்ளார் என்று எடுத்துச்சொல்லி என் ஊனக் கண்ணைத் திறந்து வைத்தார் அந்நண்பர். இருந்தாலும் மீண்டும் ஊனக் கண் தோன்றாமலில்லை. போதாக்குறைக்கு என் இன்னொரு நண்பரும் இப்படி ஒரு மடல் அனுப்பி என்னை உசுப்பிவிட்டார்.

“தனித்து ஒரே ஒரு ஆளாகப் பார்க்கும்போது சோகம் ததும்பும், கருணை பொங்கும் இரக்கமே வடிவான உயிரினமாகத் தென்படும் வேதஸ்வரூபம், இரவில் ஒரு பத்துப்
பதினைந்து இதர வேதஸ்வரூபங்களைத் துணைக்கழைத்துக் கொண்டுவந்தவுடன், மெயின் கெம்ப் ஸ்வரூபமாக ஸ்வரூப மாற்றம் பெற்றுவிடுகிறது.

சென்ற வருடத்தில் ஒரே வாரத்தில் நான்கு குழந்தைகள் பகல் நேரத்திலேயே வேதஸ்வரூபங்களுக்கு பலியாகிவிட, ஊர் முழுவதும் வேதஸ்வரூபங்கள் வேட்டையாடப்பட்டன. இத்தனைக்கும் இந்த நான்கு குழந்தைகளில் இரண்டே இரண்டு
குழந்தைகள்தான் பாதுகாப்பற்ற சேரிக்குழந்தைகள். ஒரு குழந்தை நல்ல பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியில் வசித்த மத்திய வர்க்கத்துக் குடும்பத்துக் குழந்தை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது பத்து வேதஸ்வரூபங்கள் தூக்கிச்சென்றுவிட்டன. வே.ஸ்வ-க்கு பலியான இன்னொரு குழந்தை கட்டடத்தொழிலாளியின் குழந்தை. நான்கு தொழிலாளிகளின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது வேட்டையாடப்பட்டவை.

இதற்கு நாம் வேதஸ்வரூபங்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. உண்மையில் குற்றமே சொல்லக்கூடாது. அந்தந்த பகுதி மக்கள் வேதஸ்வரூபங்களை அன்போடு நடத்தாமல், அதேசமயம் மோசமாகவும் நடத்தாமல் விட்டேத்தியாக எல்லாம் பிரம்மம் என்றிருந்து விட்டார்கள். சில இறைச்சிக்கடைக்காரார்கள் இறைச்சி மிச்சங்களை அருகிலிருந்த குப்பைக்குழியில் மலை போல் குவித்து வைக்க,அவற்றை ருசி பார்த்துவிட்ட வேதஸ்வரூபங்களுக்கு இரத்தவாடை பிடித்துப்போய் குழந்தைகளை வேட்டையாடியதாகவும் காரணம் சொன்னார்கள்.

ஆனந்தவிகடன், நக்கீரன் இதெல்லாம் வே.ஸ்வரூபங்களும் படிக்கின்றனவா என்று தெரியாது. அவர்களுக்கும் இரவு நேரத்தில் வீடு திரும்பும் சாஃப்ட்வேர் மக்களை மிகவும் பிடிக்கும். பைக்கில் வீடு திரும்பும் ஆட்களை பத்துப்பதினைந்து வேதஸ்வரூபங்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு கொலை வெறியோடு துரத்தும். எல்லாம் பிரம்மமே என்று வண்டியோட்டிகளும் எந்தப் பதற்றமும் அடையாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும். அதிலும் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே விழுந்து வண்டியோட்டியை தலைகுப்புற விழச்செய்வது இந்த ஸ்வரூபங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இவர்கள் வண்டியில் அடிபட்டு விட்டாலும், உடம்பைப் பந்து போலாக்கித் தப்பித்துப் போவதில் ஸ்வரூபங்கள் கில்லாடிகள்.

நான் வேலைக்குச் சேர்ந்து ஒருவருடமிருக்கும். இருட்டுக்குப் பழகுவது போல அப்போதுதான் எனக்கு அந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக ஆரம்பித்திருந்தது. மேலும் இப்போது போலில்லாமல் அப்போது நிறைய நண்பர்கள் ஒன்றாக இருப்போம். கல்லூரியின் மிச்ச சொச்ச சந்தோஷமான நீட்சி நாட்கள் அவை. எனக்கு நிறைய வடஇந்திய நண்பர்களும் கிடைத்தார்கள். என் நண்பனின் நண்பன் ஒரு பிஹாரி. நண்பர்களுடனான பார்ட்டியில் அறிமுகமானவன். எனக்கும் நண்பனாகிப்போனான்.

அவன் புதிதாக வாங்கிய More smiles per hour டிவிஎஸ் விக்டரில் ஒரு நாள் பின்னிரவு அவனும், அவன் நண்பனும் வேலையிலிருந்து லேட்டாக வீடு திரும்பினார்கள். மெயின் ரோடிலிருந்து திரும்பியதும் பல வேதஸ்வரூபங்கள் அவனைத் துரத்தத் தொடங்கின. அவைகளிடமிருந்து தப்பித்த்டு வேகமாக ஓட்டிய அவன் ஒரு கல் தடுக்கி வண்டி தாறுமாறாக ஓடி நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்து கழுத்தில் பலத்த அடிபட்டு ஸ்பாட்டிலேயே பிரம்மத்துடன் கலந்துவிட்டான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் முகமெல்லாம் சிராய்க்கப்பட்டு, ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் குழியில் மயங்கிய நிலையில் அடுத்தநாள் கண்டெடுக்கப்பட்டான்.

பிஹாரிகளைப் பற்றிய ஒரு நட்பான உருவத்தை எனக்குள் உருவாக்கியவன் அந்த நண்பன். வார்த்தைக்கு வார்த்தை சாலா என அழைத்து செளத் இண்டியன் உணவு வகைகளைப் பற்றிய அபத்த சந்தேகங்களை எழுப்பிய அவன் எனக்கு சொல்லித்தந்த BSDK என்ற கெட்ட வார்த்தைய அநிச்சையாக இன்று காலை உச்சரித்தேன்.

சொல்ல மறந்துவிட்டேன். வேத ஸ்வரூபங்கள் பிரம்மத்துக்கு அனுப்பி வைத்த அவனுடைய பெற்றோருக்கு ஒரே பையன். அவர்கள் கதறிய கதறலைக் கேட்ட நண்பர்கள் நாங்கள் ஒருமாதம் வரை ஒரு வித சோகநிலையுடனே வழக்கமான உற்சாகங்கள் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தோம்.”

’இதைப் போல, நகைச்சுவை கலந்த சோகத்துடன், என் போல சிறப்பாக இல்லாவிட்டாலும் சுமாராகவாவது நீங்கள் வேதஸ்வரூபங்களைப் பற்றி எழுதவேண்டாமா’ என்று கேட்டதும், எனது ஞானக்கண் மறைந்து, ஊனக் கண் திறந்துகொண்ட நேரத்தில், இன்னொரு நண்பர் நமது பாரம்பரியம், கலாசாரம், பெருமை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி, மகாபாரதமே நாயில் தொடங்கி நாயில் முடிகிறது என்கிற ரேஞ்சுக்கு மிரட்டவும், எனது ஞானக்கண்ணை மீண்டும் திறந்துவைத்துக்கொண்டேன். இனி இந்நாய்களைப் பற்றி வாயே திறப்பதில்லை என்றெல்லாம் சபதம் எடுத்திருந்தேன். இருந்தாலும், வசூல்ராஜா எம் பி பி எஸ்ஸில் யாருக்கும் கண்ணடித்துவிட்டு கண்மூடிக்கொள்ளும் ஒரு நோயாளி போல, என்னுள் இந்த வேதஸ்வரூபம் பற்றிய கண் சிமிட்டல் இல்லாமல் இல்லை.

வேதஸ்வரூபங்களைப் பற்றி இலேசாகவும் நினைத்துவிடமுடியாது என்பது எனக்குத் தெரியும். நான் TACல் வேலை பார்க்கும்போது, தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அங்கு செல்லும் வழியில் ஒரு நாய் (வேதஸ்வரூபியை சிறிது நேரத்துக்கு நாய் என்று அழைக்கவேண்டியிருக்கிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும்!) என் வழியில் அடிக்கடி குறுக்கிட்டது. என்னைப் பார்த்து முன்னே வரும். சும்மா வந்தால் பரவாயில்லை. மிக மெல்லிய அடிக்குரலில் ஓர் உறுமல் கேட்டுக்கொண்டே இருக்கும். வாய் திறந்து, பற்கள் தெரிய, இரண்டு கடவாய்களிலும் நீர் வழிய கோபக் கண்களோடே எப்போதும் பார்க்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் பயந்து பயந்தே செல்வேன். இதிலிருந்து மீளும் வழியே தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, என்னுடன் இருந்த நண்பனுக்கும் இதே பிரச்சினை. அந்தவகையில் அந்த நாய் மீது எனக்கு மரியாதை இருந்தது. என்னை மட்டுமில்லாமல், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் நாயைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா என்ன? கிட்டத்தட்ட ஆறுமாதங்களாக இப்படியே மிரட்டல். ஆனால் என்னையும் என் நண்பனையும் கடிக்கவில்லை. ஒருதடவை என் கால் வரையில் வந்து முகர்ந்துபார்த்துவிட்டு, வாடை பிடித்துவிட்டதோ என்னவோ, கடிக்காமல் விட்டுவிட்டது. பிஸ்கெட் எல்லாம் போட்டுப் பார்த்தேன். தின்றுவிட்டு கொஞ்சம் தெம்புடன் குலைத்தது.

பின்பொருநாள் வெளியில் சாப்பிட்டுவிட்டு ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு வெறும் பாட்டிலைத் தட்டிக்கொண்டே வந்தேன். அது ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில். இப்போது அக்வாஃபினா வரும் பாட்டிலை ஒத்தது. லேசாகத் தட்டினாலே நல்ல சத்தம் கேட்கும். தட்டிக்கொண்டே வந்து என் வீட்டுப்பக்கம் திரும்பினேன். திடீரென்று ஒரு புதருக்குள் இருந்து அந்த நாய் பயந்து அலறி ஓடியது. ஏன் ஓடியது என்று தேடித் தேடிப் பார்த்தேன். நான் தட்டிய பாட்டில் எழுப்பிய ஒலிக்குப் பயந்துதான் ஓடியிருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் தட்டினேன். அது மீண்டும் ஓடியது. தூரத்தில் இருந்தே குலைத்தது. அட, இத்தனை பயந்தாங்கொள்ளி நாய்க்கா நாம் இவ்வளவு பயந்தோம் என்றே எனக்கு வெட்கமாகிவிட்டது. பின்பு அந்த நாயை விரட்டி லேசாக சத்தம் போட்டால் போதும் என்றாகிவிட்டது.

ஒருவகையில் எல்லா தெரு தேவஸ்வரூபங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஒரு மிரட்டு லேசாக மிரட்டினால் ஓடிவிடுகின்றன. ஆனால் ஒரு தெருவில் இரவில் நடந்துவரும்போது இருபது முப்பது ஸ்வரூபிகள் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே பயம் வந்துவிடுகிறது. நாம் விரட்டக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்வரூபிகள். இந்த நாய்களை விரட்டினால் ஓடிவிடும் என்று பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ தெரிவதில்லை. ஒருவித பயத்தோடு நடக்கும்போது ஏழறிவு கொண்ட வேதஸ்வரூபங்கள் கண்டுகொண்டுவிடுகின்றன, ‘இவன் நமக்கு அடிமைடா’ என்று. துரத்தத் தொடங்கிவிடுகின்றன. இந்த வேதஸ்வரூபங்களுக்கு நடப்பவரை விட, பைக்கில் வருபவர்களைக் கண்டால் மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரே விரட்டுதான்.

நேற்று காலையில் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பையனை ஒரு வேதஸ்வரூபி கடித்துவிட்டார். தெருவே அல்லோகலப்பட்டது. அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். கிட்டத்தட்ட மதியம்தான் அந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். தெருவே கூடி நிற்க, ஒரு வாளியில் நீரை வைத்து திருஷ்டி கழித்துக்கொண்டிருந்தார் அந்தப் பையனின் தாய். தூரத்தில் அவனைக் கடித்த ஸ்வரூபி, மேலே என் நண்பர் சொல்லியிருப்பது போல, அத்தனை சாதுவாக, பாவமான கண்களுடன், ‘என்னைப் பாத்தா கடிக்கிற மாதிரியா இருக்கு சொல்லுங்க’ என்று வாலாட்டிக்கொண்டு சாந்தஸ்வரூபியாக உட்கார்ந்திருந்தார்.

அந்தப் பையனைப் பார்த்தேன். நடு உச்சந்தலையில் ஒரு கடி. கழுத்தில் ஒரு கடி. கழுத்தைச் சுற்றிக் கட்டு. அது அப்படியே நீண்டு தலைவரையில் சென்றது. என் உடம்பில் ஓர் உதறல். என் ஞானக்கண் மறைந்து ஊனக்கண் ஒன்று திறந்துகொண்டது. ஓர் இலக்கியவாதி என்றால் அறச்சீற்றம் வேண்டாமா? சாரு – சிவரமான் சண்டையில்தான் கருத்துச் சொல்ல வக்கில்லை என்றாலும், இந்த ஸ்வரூபியின் அத்துமீறலைக் கண்டிக்கக்கூடவா தைரியம் கிடையாது?

அந்தப் பையனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ‘லீவு அன்னைக்கு ஏன் பையனை வெளியில் விட்ட’ என்று சிலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கேட்பதும் சரிதான். ஞாயிறு லீவு என்று வேதஸ்வரூபிகளுக்கு யாராவது சொல்லித் தந்தார்களா? இப்படி சமூக அக்கறையில்லாமல் வேதஸ்வரூபிகளைப் புறக்கணித்திருப்பது சமூகக் குற்றமல்லவா?

இந்த வேதஸ்வரூபிகள் கூட்டமாகச் சேர்ந்து செய்யும் தொல்லையும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு மாதத்துக்கு முன்னால் இரண்டு வேதஸ்வரூபிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்வரூபிகளின் உடலெங்கும் இரத்தம் வழிந்து ஓட, கம்யூனிஸ்டுகள் போல கடும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரு பெரிய கூட்டமே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது என்பதனை அறிந்துகொண்டு சண்டை போட்டார்களோ என்னவோ தெரியாது, சண்டை என்றால் உங்கவீட்டுச் சண்டை எங்க வீட்டுச் சண்டை இல்லை. கடுமையான சண்டை. கல்லைக் கொண்டு எறிந்தாலும் வேதஸ்வரூபிகள் சண்டை போடுவதை நிறுத்துவதில்லை. ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்ற பழமொழியெல்லாம் தெரிந்த மக்கள் ஓடிப்போய்விட்டார்கள். உண்மையில் இந்த வேதஸ்வரூபிகள் தங்கள் சண்டை வேகத்தில் நம்மைக் கடித்துவைத்தால் என்ன செய்வது என்று எனக்கும் திகிலாகத்தான் இருந்தது. அதான் கம்யூனிஸ்டுகள் போன்ற சண்டை என்றேனே, ஆழமான விவாதம்தான்.

எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒரு வேதஸ்வரூபி திரிந்துகொண்டிருப்பார். ஓர் எலி ஓடும் சத்தம் கேட்டாலும் அரண்டு போய் எங்காவது ஒளிந்துகொள்வார். நான் கையைத் தூக்கினாலே அடங்கி ஒடுங்கி ஈனஸ்வரத்தில் கத்துவார். அப்படிப்பட்ட பயந்த சுபாவமுடைய அவரும் ஒருநாள் ஒரு குழந்தையைக் கடிக்க இருந்தார். மயிரிழையில் தப்பித்தது அக்குழந்தை. இப்படி பயந்த சுபாவமுடைய வேதஸ்வரூபிகளே இப்படி என்றால், மற்ற விரமிகு வேதஸ்வரூபிகளைப் பற்றி என்ன சொல்ல?

எங்கள் பகுதி கவுன்சிலர் ரொம்ப நல்லவர். வேதஸ்வரூபிகள் என்று பெரியவர் சொன்னது அவருக்கும் தெரியுமோ என்னவோ, எத்தனை முறை சொல்லியும் அவர் இந்த வேதஸ்வரூபிகளை இல்லாமலாக்க எதையுமே செய்யவில்லை. ‘ஒரு மாசத்துல பெருகிடுதுங்க சார்’ என்பார்.

தினமும் பத்திரிகையில் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக ஒரு பையனையாவது ஒரு நாய் கடித்துவிடுவதைப் படிக்கிறோம். ஆனால் இதுகுறித்த கடுமையான நடவடிக்கையை எந்த ஓர் அரசும் எடுப்பதில்லை. மேனகா காந்தி கண்மூடித்தனமாக எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்கிறார். இப்படிப்பட்ட நாய்களை என்ன செய்வது? இவற்றுக்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்பது ஒரு குரல். இந்த நாய்களை என்ன செய்வது என்பது பற்றி ஏதும் பேசில்லை. எல்லா நாய்களையும் பாதுகாத்துப் போஷிக்கவும் முடியாது. கொன்றுவிடவேண்டியதுதான். இந்த நாய்களால் ஏற்படும் தொல்லைகளையும், உயிரிழப்பையும் பார்க்கும்போது, இவற்றைக் கொல்வதில் தப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்படி நாய்களைக் கொல்லலாம் என்று எழுதியதைக் கண்டு என் மீது ‘மனிதாபிமானற்றவன்’ என்கிற கண்டனங்கள் பாயக்கூடும். இருந்தாலும் என்ன செய்வது, வேறு வழியே இல்லை, இந்த வேதஸ்வரூபிகளைக் கொன்றுவிடவேண்டியதுதான்.

நான் முன்பு சொன்னதுபோல இன்றும் என் ஊனக்கண் திறந்துகொண்டுவிட்டதை உணர்கிறேன். இதை போஸ்ட் செய்துவிட்டு, பெரியவர் புகைப்படத்துக்கு நேராக சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடவேண்டியதுதான். வேதஸ்வரூபிகளைக் கொல்லச் சொன்னதற்கு அவர் மன்னிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் கொன்றுவிடுவதைத் தவிர வேறு வழியிருக்குமா என எனக்கும் தெரியவில்லை. ஒருதடவைக் கொன்றுவிட்டு, பின்பு அவை பெருகாமல் பார்த்துக்கொண்டுவிட்டால் பிரச்சினை கட்டுக்குள் வந்துவிடும். மனுக் கொடுக்கப் போகலாம் என்றால், அந்தத் தெரு முழுவதும் இதே பிரச்சினைதான் என்கிறார் கௌன்சிலர்.

Share

குதலைக் குறிப்புகள் – 6

நீண்ட நாள்கள் ஆயிற்று எவ்வித சிந்தனையுமின்றி கைபோன போக்கில் ஒரு பதிவு எழுதி. இதனை கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் பதிவுலகில் மொக்கை என்று அழைக்கிறார்கள். ‘பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அடிக்கிறது நானா இருக்கணும்’ என்ற அடிப்படையில் இன்றைய ‘குதலை மொக்கை’ மேலே செல்லப்போகிறது.

பள்ளிக்குச் செல்லுதல் பற்றி. சென்ற ஆண்டு என் மகன் ப்ரீகேஜியில் படித்தான். முதல்நாள் அவனைக் கொண்டு போய் சேர்த்தபோது, அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. இரண்டரை வயதான குழந்தைகளின் கூட்டம் விஜயதசமி அன்று அப்பள்ளியில் நிரம்பிக் கிடந்தது. ஆப்பிள்களால் அலங்கரிங்கப்பட்ட ஒரு வகுப்பறையில், ஒரு பீடத்தில் சரஸ்வதி அமர்ந்திருக்க, ஓர் ஆசிரியை எல்லாக் குழந்தைகளையும் கைப்பிடித்து அரிசியில் ஓம் என (தமிழில்!) எழுதி அக்ஷ்ராப்யாசம் செய்துவைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஹிந்துச்சூழல் நிறைந்த பள்ளியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது என் ஆர்வமாக இருந்தது. ஹிந்துச்சூழல் மிகுந்த பள்ளிகளில் என் மகனைச் சேர்க்க நான் கொடுக்கவேண்டிய தொகை ஹிந்துமதத்தின் ஆகிருதியைவிடப் பெரியதாக இருந்தது. இதில் ப்ரீகேஜிக்கே இந்த விலை. ப்ரீகேஜி, எல் கேஜி, யூகேஜி என்கிற விஷயங்களே இல்லாமல், நேரடியாக ஒன்றாம் வகுப்பு படித்து, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துகள் கற்றுக்கொண்டு, இன்று மேதைகளாகப் பலர் இருக்கிறார்கள்! அப்படியானால் ப்ரீகேஜிக்கே இந்தத் தொகை கொடுப்பது எதற்கு என்று புரியவில்லை. எனக்குக் கட்டுபடியாகக்கூடிய தொகையில், எனக்கேற்ற ஒரு பள்ளியைக் கண்டுபிடித்தேன்! இப்போதைக்கு இது போதும் என்று நினைத்துக்கொண்டு அங்கே சேர்த்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரேயரில் எல்லா மாணவர்களுக்கும் சந்தனம் வைத்துவிடுகிறார்கள். ஹிந்துமதமல்லாத மற்றக் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. பள்ளியும் அதைக் கட்டாயப்படுத்தவில்லை. பாராட்டவேண்டிய விஷயம். எல்லாம் நன்றாகவே இருக்கிறது படிப்பைத் தவிர என நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் இப்பள்ளி போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

இப்படி ப்ரீகேஜிக்கு போய்க்கொண்டிருந்த என் பையன் பள்ளியை ஒரு சீரியஸான விஷயமாக நினைக்கவில்லை. முதல் நாள் ராஜமரியாதையுடன் சென்று அக்ஷ்ராப்யாசம் செய்துவிட்டு கூடவே அழைத்துவந்துவிட்டோம். மறுநாள் பள்ளிக்குச் செல்ல அவனை ஆயத்தப்படுத்தியபோது மிக மகிழ்ச்சியாகக் கிளம்பினான். முதல்நாளைப் போலவே அன்றும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என நினைத்துவிட்டான் போல. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. அவனது சுதந்தரத்தில் எத்தனை பெரிய குறுக்கீடு. எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அழுது தீர்த்துவிட்டான். பள்ளிக்குச் செல்வதே அழுகை என்றாகிவிட்டது. ‘மழை வர்ற மாதிரி இருக்குல்ல,’ ‘வயித்த வலிக்குது’ எல்லாம் இரண்டரை வயது வாயில் வரத்தொடங்கிவிட்டன. கிளம்பும் வரை லீவு என்று சொல்லிவிட்டு, அந்த நேரம் வந்ததும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பள்ளிக்கு விட்டுவிட்டு வந்துவிடுவேன். ஒருவழியாகப் பள்ளி என்னும் தொல்லை தீர்ந்து, முழுத்தேர்வு கழிந்து விடுமுறை வந்தது.

மீண்டும் பள்ளிக்குச் செல்லும் காலமும் வந்தது. எல் கே ஜி. பெரியவனாகிவிட்டான். ஆனாலும் முதல்நாள் அதே அழுகை. இந்த அழுகை இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. அங்கே விளையாட நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். பள்ளியைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடுகிறான். தன்னை அழைத்துக்கொண்டு செல்ல சீக்கிரம் வந்துவிடாதே என்று தன் அம்மாவிடம் சண்டை போடுகிறான். ‘பசங்கள்லாம் ஒரே அழுகை’ என்று என்னிடம் தினமும் சொல்கிறன். ‘யாராது ஸ்கூலுக்குப் போக அழுவாங்களா’ என்கிறான்!

பள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தினம் ஒரு பையனுடன் வழக்கு. நான் சும்மா இல்லாமல் ‘உங்க ஸ்கூல்ல எப்பவும் அ ஆதான் சொல்லித்த்ருவாங்களா’ என்று கேட்க, அதையே அவனும் அவன் டீச்சரிடம் கேட்டுவைத்திருக்கிறான். இப்படியாகக் கழிகிறது இவனது பள்ளிக்காலம்.

பள்ளிக்காலம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இன்று கிழக்கு பதிப்பகத்தின் அலுவலக விஷயமாகப் பள்ளிகளுக்குச் செல்லும்போதெல்லாம், மாணவர்களைக் காணும்போதெல்லாம் நான் எதையோ இழந்துவிட்டது போன்ற நினைவுக்கு வருகிறது. இந்த சோகம் இதனால் மட்டுமே எழுந்த சோகமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லுவேன். மாணவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ அடிமைகளைக் காணுகிற சோகமும் உடன்சேர்ந்தே எழுவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மாணவர்கள் பள்ளியினாலும், பள்ளி ஆசிரியர்களாலும், பாடத்தினாலும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்கு டியூசன் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். இப்போதும் அதே பாடம்தான் என நினைக்கிறேன். நம் பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் புரிந்துகொள்ள, ஒரு நல்ல புத்திசாலியான மாணவனால் மட்டுமே முடியும். சராசரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாடத்திட்டத்தின் கடுமை அத்தகையது. நான் எத்தனையோ முறைகளில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தும், அந்த மாணவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உண்மையில் நான் அதை என் கல்லூரியில்தான் படித்தேன்! பாடத்திட்ட முன்னேற்றம் என்பதை கல்வியாளர்கள் கல்லூரியிலிருந்து பள்ளிக்கும், பள்ளி வகுப்புகளில் மேல் நிலையிலிருந்து உயர்நிலைக்கும் உயர்நிலையிலிருந்து இடைநிலைக்கும் மாற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபத்தமான கொள்கையினால் ஒரு கல்லூரி மாணவன் ஒரு காலத்தில் புரிந்துகொள்ள அவஸ்தைப் பட்டதை ஒரு மாணவன் பள்ளிகளிலேயே புரிந்துகொள்ளவேண்டிய அபத்தம் நேர்கிறது. பாடத்திட்டத்தை இந்த ஆசிரியர்கள் நடத்தும் முறையைப் போன்ற கேவலமான ஒன்றைக் காணவே முடியாது. எனக்கு பத்தாம் வகுப்பெடுத்த ரமணி டீச்சரும் சிரில் மேரி டீச்சரும் பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து அடிக்குரலில் இருந்து குரலை எழுப்பி கத்திக்கத்திச் சொல்லிக்கொடுத்துக் கொன்றார்கள். இன்றும் தவளையையும் கரப்பான்பூச்சியையும் பார்த்தாலே குலை நடுங்குகிறது எனக்கு. ஒரே நிமிடத்தில் கரப்பான் பூச்சியைக் கொன்றுவிடமுடியும். ஆனால் இந்தக் கரப்பான்பூச்சியின் உடலமைப்பைப் படிக்க நானடித்த குட்டிக்கரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி அதைப் பெயர்களாகச் சொல்வார்கள். பெரிப்ளானட்டா அமெரிக்கானா என்பதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பும்போது, இதே போன்ற ஆயிரம் பெயர்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். படிக்காமலும் விடமுடியாது. மதிப்பெண் போய்விடும்.

நல்ல மதிப்பெண்கள் பெறுவது எளிமையான விஷயமல்ல. காலையில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவேண்டும். ஒருநாள் எழாவிட்டாலும் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுவாள். அண்ணா ஓட ஓட அடித்தாலும் அடிப்பார். டிவி பார்க்கக்கூடாது. ஏதேனும் ஒரு பரிட்சையில் 75 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஏதோ ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டவனைப் பார்க்கும் பாவனையில் என் அக்கா ‘என்னது 80க்கு கீழயா?’ என்பார். இத்தனைக்கும் அவள் வாழ்நாளில் என் அக்கா 40ஐத் தாண்டியதே இல்லை. தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தன் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்று ஒரு மாணவன் சிந்திக்காமல் பள்ளி வாழ்க்கையைக் கழிக்கவே முடியாது. என்ன காரணம்? எல்லாம் மதிப்பெண்ணை மையமாக வைத்துச் சுற்றும் கல்விமுறை. 35 மதிப்பெண் பெற்ற ஒரு பையன் பாஸ். 29 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு பையன் பெயில். 97 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவன் முதலாமவன். 96 பெற்றுவிட்டவன் இரண்டாமவன். இருவரும் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கினால் பெரிய பெரிய அதிர்ச்சிகள் நமக்குக் கிடைக்கலாம்.

மதிப்பெண்ணை மையமாகக்கொண்ட தேர்வுமுறையில் பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இருக்கும் நேரத்தில் பாடமும் நடத்தி, கேள்வித்தாள் தயாரித்து, திருத்தி, மற்ற விஷயங்களிலும் மாணவர்களைப் பங்கெடுக்க வைத்து – எத்தனைதான் செய்வார் ஓர் ஆசிரியர்? இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் இன்னொரு ஆசிரியரை வேலைக்கு வைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. இருக்கும் ஆசிரியரே இந்த வேலையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் என்ன செய்வார்? படிக்காத மாணவர்களை மாடு போல சாத்துவார்.

மாடு போல சாத்துவார் என்பது உணர்ச்சி மதிப்பீட்டில் சொல்வது அல்ல. உண்மையாகவே ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை மாடு போலச் சாத்துவார்கள். அதுவும் மாடுகளை அடிக்க உதவும் அதே மணிப்பிரம்பு. அந்த மணிப்பிரம்பு வாங்கவும் மாணவர்களே காசு தரவேண்டும். தனது காசாலேயே தன்னை அடிக்கும் ஓர் அரசை ஒரு மாணவன் பள்ளியிலேயே கண்டுகொண்டுவிடுகிறான். இதில் மரத்துப்போகும் மாணவனுக்கு ஓர் அரசு இதனையே செய்யும்போது அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை போல. இப்படி கிட்டத்தட்ட பாடத்திட்டத்துக்கு, மதிப்பெண் தேர்வுமுறைக்கு, ஆசிரியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு மாணவனைப் பார்க்கும்போது, நான் இழந்த மாணவப்பருவம் தரும் சுகமான சோகத்தைவிட, தங்கள் சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு மாணவனின் சோகம் பெரியதாகத் தாக்குகிறது.

மாணவர்கள் செய்யும் துப்புரவு பற்றி வெங்கட் எழுதியிருக்கிறார். நான் இதைப் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். வெங்கட் சொல்வது மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்பது. இது சரிதான். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இந்த உயர்ந்த நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. நோக்கம் உயர்வாக இருந்து, மாணவர்கள் தூய்மை செய்யவேண்டிய பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளிகளில் கூட, இது மாணவர்களின் கடமையாக மாறி, அதற்கான தண்டனைகளிலெல்லாம் முடிந்திருக்கிறது. நான் படித்த பள்ளி ஒன்றில் நாங்களே துப்புரவு செய்யவேண்டும். அங்கு பள்ளிக்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்களோடு கூட ஒத்தாசைக்குச் செல்லும் மாணவர்கள் இந்தத் துப்புரவு வேலைக்கு வராமல் அவதிப்படுவதும், அதற்காகவே அவர்கள் மாடுபோல் அடிக்கப்படுவதெல்லாம் கொடுமை. சுற்றுப்புற விழிப்புணர்வு என்பது ஒருவித அழுத்தமாக மாறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்பள்ளியில் துப்புரவுக்கென்று பணியாளர்கள்கூட இருக்கமாட்டார்கள்! அப்படியே ஒன்றிரண்டு பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள். நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் படிக்கவே அன்றி இப்படி ஓர் அடிமைத்தனத்துக்கு வால்பிடிக்க அல்ல. என்னைத் துப்புரவு செய்யச் சொல்லி அடித்த வாத்திமார்களையெல்லாம் கல்லால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் நல்ல நடிப்பில்தான் இத்தகைய கொடுமைகள் எல்லாம் தொடங்குகின்றன. இதுமட்டுமல்ல. எப்போதேனும் ஆண்டுவிழாவோ மற்ற விழாவோ வந்துவிட்டால் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் செத்தான் என்றே சொல்லவேண்டும். துப்புரவு என்பது சுற்றுப்புறச்சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்கிற அழகான வரியில் அமிழ்ந்துவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே இருக்கும் எல்லா பெஞ்சுகளையும் வெளியில் வைத்து, அவற்றைக் கழுவி, வகுப்பறையைப் பெருக்கிக் கழுவி, மாணவிகள் கோலமிட்டு – பள்ளிகள் ஒருவருடத்தில் ஒரு பாடத்துக்கு இத்தனை வகுப்புகள் என்று ஒதுக்குகின்றன. அப்படி ஒதுக்கும் பள்ளிகள் இப்படி பாழாகும் வகுப்புகளுக்கும் சேர்த்தே நேரம் ஒதுக்குகின்றனவனா? அந்த நேரங்களில் நடத்தப்படாமல் விடப்படும் பாடங்களுக்கு யார் பொறுப்பு? நான் படித்த பள்ளிகளில் – நான் அரசுப்பள்ளிகளில் மட்டுமே படித்தேன் – எந்தப் பள்ளியிலும் என் பாடத்தை ஒழுங்காக யாருமே முடித்ததே இல்லை. ஏன் இந்த நிலை? எந்தப் பள்ளிக்கும், எந்த ஆசிரியருக்கும், எந்த அரசுக்கும் பொறுப்பே இல்லை. மாணவர்களை இவர்கள் ஏதோ சின்னப்புள்ளைங்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.

என் தனிப்பட்ட அளவில் நான் சாதியின் கொடுமைகளைக் கண்டதும் இப்பள்ளிகளிலேயே. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமண – அபிராமண ஆசிரியர்களுக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் என்னையும் பாதித்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காரணம் எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது. என்னுடன் படித்த, நன்றாகவே படிக்காத ஒரு பிராமண மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலகாரணம் ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய ஜாதிப் பிளவுகள்தான். ஆனாலும் மாணவர்களை இதில் பலிகடாவாக்குவது என்ன நியாயம். எனக்கு நேர்ந்த அவமானங்களைப் போலவே, எனக்கு ஆதரவாக சில அதிகார மீறல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இரண்டுக்குமே நான் பொறுப்பாளி அல்ல என்பதே இங்கே பிரச்சினை. ஒரு பிராமண ஆசிரியர் வெளிப்படையாகவே கல்லூரியில் என்னைப் பற்றி இன்னொரு பிராமண ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த செய்முறைத் தேர்வில் நான் நூறு சதம் வாங்கினேன். அவர் சொல்லியிருக்காவிட்டாலும் நான் நிச்சயம் நூறு சதம் வாங்கியிருப்பேன் என்றாலும், உடனிருந்த மாணவர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பள்ளிகளில் இலலாத ஒரு புரிந்துகொள்ளும் திறன் கல்லூரிப் பருவத்தில் வந்துவிட்டதால், என் நண்பர்களும் இதனை ஒரு சிரிப்பதற்குரிய நிகழ்வாகவே எடுத்துக்கொண்டார்கள். மேலும் திருநெல்வேலி பகுதிகளில் சாதிகளைச் சொல்லிப் பேசிக்கொள்வது வெகு இயல்பாகவே நடக்கும். இதனால் நண்பர்கள் இதனை சகஜமான ஒன்றாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஓர் உலகத்தையே திறந்துகாட்டவேண்டிய பள்ளிகள், தங்கள் பொறுப்பின்மையாலும், அர்ப்பணிப்பு உணர்வின்மையாலும், குழப்பமான பாடத்திட்டங்களாலும், மதிப்பெண்ணை மையமாக வைத்த தேர்வு முறைகளாலும் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் பள்ளிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமானது. கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மாணவர்களோடு போராடமுடியாமலேயே போய்விடக்கூடிய நிலை தொலைவில் இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற ஆசிரியர்களாலேயே முடியும். என் தாத்தா ஒரு ‘மாதிரி ஆசிரியர்.’ அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வை இன்றைய ஆசிரியர்களிடம் காண்பது அரிது. கடந்த தலைமுறையின் ஆசிரியர்களைப் போன்ற பொறுப்புணர்வு மிக்க ஆசிரியர்கள் உருவாகாவிட்டால், இந்த மாணவர்களின் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த அடிமைகளின் உருவாக்கத்தையும், என்ன படிக்கிறோம் என்று புரியாமல் எழுத்தை மனனம் செய்யும் ஒரு தலைமுறையையும் ஒன்றுமே செய்யமுடியாது.

Share

குதலைக் குறிப்புகள் – 5

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குதலையோடு வருகிறேன். 🙂 தொடர்ந்து ஏகப்பட்ட விசாரிப்புகள் ஏன் எழுதவில்லை என்று. வேண்டாம், விஷயத்துக்கு வருவோம்.

Kraurya என்று ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்தேன். லோக் சபா டிவி புண்ணியத்தில். கிரீஷ் காசரவள்ளி இயக்கத்தில் இப்படம் என் மனதை பாதித்தது. ஒரு கதை சொல்லியின் கதை. கிழவியாக வரும் ரேணுகாம்மாவின் நடிப்பு உலகத் தரத்தில் இருந்தது. அவரது தூரத்து உறவினராக வரும் தத்தாத்ரேயாவின் நடிப்பும் மிக யதார்த்தமாக இருந்தது. தத்தாத்ரேயாவின் நடிப்பை இன்னும் சில படங்களில் பார்த்தேன். எல்லாமே லோக் சபா சானல் உபயம்தான். எல்லாப் படங்களிலுமே தத்தாத்ரேயா மிக எளிமையாக, மிக யதார்த்தமாக, அற்புதமாக நடித்திருக்கிறார். நான் பார்த்த தத்தாத்ரேயாவின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு, நம்ம ஊர் டெல்லி கணேஷுடன் இவரை ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. டெல்லி கணேஷ் தனது எல்லை எதுவெனத் தெரிந்து நடிக்கும் ஒரு நடிகர். பிரகாஷ் ராஜ் போல எல்லா கதாபாத்திரங்களையும் ஒரே ரீதியில் அணுகும் நடிகர்களுக்கு மத்தியில், டெல்லி கணேஷ் போல, தத்தாத்ரேயா போல ஓரிருவரே எஞ்சுகிறார்கள். இதுபோன்ற திரைப்படங்கள் விஷயத்தில் லோக் சபா சானல் செய்து வரும் பணி மகத்தானது. காங்கிரஸ் கட்சியே உலகின் சிறந்த கட்சி என்று சுற்றி வளைத்து அறிவிக்கும் லோக்சபா சானலின் ஆகப் பெரிய குற்றத்தைக் கூட இது போன்ற திரைப்படங்களுக்காக மன்னிக்கலாம். மக்கள் தொலைக்காட்சி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஞாயிறு மதியம் ரஷ்யத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. இதுவரை பார்த்த ஒன்றிரண்டு படங்கள் என்னைக் கவரவில்லை. அதனால் தொடர்ந்து பார்ப்பதில்லை. இப்படி ஒரே வகையான படங்கள் என்று ஒளிபரப்பாமல், மக்கள் தொலைக்காட்சி உலகத் திரைப்படங்களை ஒளிபரப்புவது நல்லது. இன்றைய நிலையில், மக்கள் தொலைக்காட்சியைத் தவிர, வேறெந்த சானலும் இதைச் செய்துவிடமுடியாது. வால்ட் டிஸ்னியின் திரைப்படங்களை சன் டிவி ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. குழந்தைகல் குதூகலிக்கிறார்கள். படங்களின் தரமும் உச்சத்தில் இருப்பதால், யாரும் ரசிக்கத்தக்கவண்ணம் படங்கள் இருக்கின்றன. இந்தவாரம் தி வைல்டு படம் பார்த்தேன். சென்ற வாரத்தில் தி இன்கிரிடிபிள்ஸ். இரண்டுமே அசத்தலாக இருந்தன.

-oOo-

தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுவிட்டது. நான் அதிமுக+ 25 வெல்லும் என நினைத்திருந்தேன். மக்களோடு நெருங்கிப் பழங்குங்க பாஸ் என்ற அறிவுரை கிடைத்தது! இன்றைய நிலையில் ஊடகங்கள் மக்களிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்கிறார் லக்கிலுக். மக்களோடு நெருங்கிப் பழகி, அடுத்த் தேர்தலில் பிஜேபி 240 இடங்களில் வெல்லும் எனச் சொல்ல இப்போதே முடிவெடுத்திருக்கிறேன். ஆசையைத்தானே சொல்லமுடியும்! நான் TACல் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1998 நாடாளுமன்றத் தேர்தல். 1996ல் நடந்த படுதோல்விக்குப் பின்பு ஜெயலலிதா சந்திக்கும் தேர்தல். கிட்டத்தட்ட ஜெயலலிதா குற்றவாளியாகவே எல்லாரும் கருதப்பட்டார். அத்தேர்தல் முடிவு குறித்த கணிப்புகள் எல்லாவற்றிலும் அதிமுகவுக்கு 0 இடமே கிடைக்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது. எங்கள் கம்பெனியிலும் ஒரு சர்வே நடத்தினார்கள். ஒரு சீட்டில் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு என எழுதித் தரவேண்டும். நான் திமுகவுக்கு 40 எனவும், அதிமுகவுக்கு 0 எனவும் எழுதிக்கொடுத்தேன். கிட்டத்தட்ட 32 பேர் கலந்துகொண்ட அந்த கணிப்பில் 30 பேர் அதிமுகவுக்கு 0 எனச் சொல்லியிருந்தார்கள். ஒருவர் மட்டும் 1 இடம் அளித்திருந்தார். ஒருவர் மட்டும் அதிமுகவுக்கு 30, திமுகவுக்கு 10 என எழுதியிருந்தார். உடனே கண்டுபிடித்துவிட்டோம் அது யாராக இருக்கவேண்டுமென்று. கம்பெனியில் பிராமண ஆதரவாளர் என்றும், ஜெயலலிதா விசுவாசி என்றும் எல்லோராலும் கருதப்படும் கணேஷ் கார்த்திகேயனாகத்தான் இருக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார். எல்லோரும் சிரித்தோம். முடிவு வந்தது. அவர் ஹீரோவாகிவிட்டார். அப்போது அவர் சொன்னார், ‘மக்கள் பல்ஸ் பிடிக்கத் தெரியணும் பிரசன்னா’ என்று. அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் பல்ஸ் பிடிக்கத் தெரியவில்லை. ஆனால் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ அது அச்சு அசலாக மாறி வருகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 170ம் திமுகவுக்கு 60ம் கிடைக்கும் எனச் சொன்னேன். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 27ம், திமுகவுக்கு 13 எனவும் சொன்னேன். அடுத்தமுறை முதலில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு என்று சொல்லிவிட்டு, கட்சிகளின் இடத்தை மாற்றிவிட உத்தேசித்திருக்கிறேன். வாங்க நெருங்கிப் பழகலாம் மக்களே.

-oOo-

பாஜக கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. தோல்வி எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இத்தனை மோசமாகத் தோற்கும் என எதிர்பார்க்கவில்லை. முக்கியக் காரணம், பாஜக மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடாமல், கொள்கை ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே போராடுகிறது. அயோத்தியில் கோயில், சேது சமுத்திரத் திட்டம், மதமாற்றம் – இப்படி போராடியிருக்கும் கட்சி, கடைநிலை மனிதனின் சோற்றுக்காக வீதியில் வந்து போராடியிருக்கிறதா என்று யோசித்தால், ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் பாஜக எல்லாவற்றிலும் ஒரு ‘வெள்ளை காலர்’ அணுகுமுறையை மட்டுமே மேற்கொள்ளுகிறது. வெள்ளைக் காலர் அழுக்காகாமல் பதவி கிடைக்காது என்பதை பாஜக உணரவேண்டும். அத்வானியின் அரசியல் வாழ்க்கை பிரதமர் பதவியைக் காணாமலேயே முடியப்போகிறது. சர்தார் வல்லபா படேல் போல. சர்தார் வல்லபாய் படேலுக்கு நேரிடையான எதிரி இல்லை. அத்வானிக்கு திறமை குறைந்த ஒரு நேரிடையான எதிரி இருந்தும் அவரால் வெல்லமுடியவில்லை. தமிழக பிஜேபியைப் பற்றிப் பேசுவது நேர விரயம். இல கணேசன் யாருக்காகப் போட்டியிட்டார் என்பதே தெரியவில்லை. கோயமுத்தூரில் ஏன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவில்லை என்பதும் மர்மம். அத்வானி கன்னியாகுமரியிலும் திருச்சியிலும் பிரசாரம் செய்யாமல் ஏன் சென்னைக்கு வந்தார் என்பதெல்லாம் நல்ல காமெடியான விஷயங்கள். இவர்களின் அதிகபட்ச திறமையே இந்திய அளவில் நூறு இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளுவதுதான்.

-oOo-

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். இன்னும் சில வலைத்தளங்கள், சில நண்பர்கள் அவர் சாகவில்லை என்று நம்புகிறார்கள். நான் நிச்சயம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். சரணடையச் சென்ற இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற யூகமே எனக்கு ஏற்கத்தக்கதாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் வாழ்வில் இனியாவது அமைதி மலர இறைவன் அருளவேண்டும். நிறைய தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் வேறொன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

-oOo-

FM நிகழ்ச்சிகளை சில சமயம் கேட்பதுண்டு. நான் கேட்டவரை எல்லா நிகழ்ச்சிகளுமே திரைப்படப்பாடல்களோடு சம்பந்தப்பட்டவையே. நேரலை நிகழ்ச்சிகளில் நேயர்கள் பங்குபெறும்போது கூட, இடையிடையே பாடல்களையே ஒலிபரப்புகிறார்கள். திரைப்படம் என்பதன் சுவடே இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாவது இருக்குமா என்பது சந்தேகமே. இங்கேயும் மக்கள் தொலைக்காட்சி போல மக்கள் பண்பலை என்ற ஒன்று வந்தால்தான் உண்டு. நிச்சயம் வரவேண்டும். திரைப்படப் பாடல்களைத் தவிர எதையும் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற முடிவு ஆபத்தானது. இதை நிச்சயம் உடைக்கவேண்டும். ஒரு பண்பலையில் குறைந்தது 10 சதவீதமாகவது திரைப்படம் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும். இல்லையென்றால், அடுத்த தலைமுறை வெறும் திரைப்படப் பாடல்களால் நிரப்பப்பட்ட ஒரு பொதியாகவிடும். இப்போது நாம் இக்கட்டத்தை எட்டிவிட்டோம். அதுவே இதிலிருந்து மீளும் ஒரு உத்வேகத்தைத் தருமானால் அது மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். மக்கள் பண்பலையைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், அப்படி ஒன்று வருமா என்று!

-oOo-

கருணாநிதியைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல் எப்படி குதலையை முடிப்பது. கருணாநிதிக்கு வெற்றிக்கனி கிடைத்த ஒரே நாளில், அவரது அரசு மைனாரிட்டி அரசுதான் என்னும் – அவருக்கு மட்டும் தெரியாத, உலகத்துக்கே தெரிந்த – உண்மையை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் செய்திருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. இனிமேல் மைனாரிட்டி அரசு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் கருணாநிதி கேட்கமாட்டார் என நம்புவோம்.

Share

குதலைக் குறிப்புகள் – 4

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது வென்றிருக்கிறார். மிகப்பெரிய சாதனை. ஏ.ஆர். ரகுமான் தொடக்கத்தில் இசையமைக்கத் தொடங்கியபோது, இளையராஜாவின் தீவிர ரசிகனாக இருந்த நான், ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களையெல்லாம் ‘ஒன்றுக்கும் ஆகாது’ பட்டியலில் வைத்திருந்தேன். முன் அனுமானம். அவர் டூயட் படத்துக்கு இசையமைத்தபோது, ‘என்ன பாட்டு இதெல்லாம்’ என்று நண்பர்களுடன் பேசியது நினைவுக்கு வருகிறது. ஆனால் உள்ளூர, இளையராஜாவை வீழ்த்தி வளரும் ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்ட எழுச்சியைப் பற்றிய கலக்கம் இருந்தது. போகப் போக ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. ஏ.ஆர். ரகுமான் ரஜினியின் படத்துக்கு முதலில் இசையமைத்தபோது எழுந்த பல குற்றச்சாட்டுகளையும், அவர் தற்போது இசையமைத்த சிவாஜி படத்தின் பாட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ரஜினி ரசிகர்களை தன் இசைக்கு அவர் பழக்கபப்டுத்தியிருப்பது புரிகிறது. இப்படி உலகத்தையும் தன் இசைக்குப் பழக்கப்படுத்திவிட்டார். இளையராஜாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஏ.ஆர்.ரகுமானை ஒரே மேடையில் பாராட்டியிருப்பதும் நல்ல விஷயம்.

சில தோழர்களும் முற்போக்காளர்களும், ஏ.ஆர்.ரகுமான் விருது பெறும்போது இலங்கைத் தமிழர்களுக்காகவோ, உலகின் பல்வேறு இடங்களில் தீவிரவாதத்தால் இன்னலுறும் இஸ்லாமியர்களுக்காகவோ ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்ற ‘ஆழமான’ கோரிக்கை ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். மணிவண்ணன் போன்ற நடிகர்கள் அடிக்கும் கூத்துக்களில் இதுவும் ஒன்று. மணிவண்ணன் தோழர்கள் போல சிந்திக்கத் தொடங்கிவிட்டாரா அல்லது தோழர்கள் மணிவண்ணன் போல சிந்திக்கத் தொடங்கிவிட்டார்களா எனப் புரியவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக மணிவண்ணன் துறந்தவை எவை என்று அவர் முதலில் பட்டியலிடலாம். மேலும், இது இறந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் மீதான அனுதாபமா அல்லது புலிப்பாசமா என்பதையும் தெளிவுபடுத்தலாம்.

-oOo-

ரெசுல் பூக்குட்டி விருதுபெறும்போது, தான் ஓம் என்ற வார்த்தையை உலகுக்கு அளித்த நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். செக்யூலர்களுக்கு இந்த வரி பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மத எதிர்ப்பாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் ’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற ஏ.ஆர்.ரகுமானின் சமர்ப்பணத்தை மட்டும் எதிர்க்கமாட்டார்கள் என்பது அறிந்ததுதான்.

இதில் ஜெய்கோ பாடலை காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த உரிமம் பெற்றுவிட்டதாக அறிந்தேன். இது ஒரு காமெடி என்றால், இன்னொரு காமெடி, இப்பாடலை நரேந்திர மோடி தன் மேடையில் பயன்படுத்தியிருப்பதற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முயன்றிருப்பதுதான். நானும் இங்கே ஜெய்கோ என்று எழுதியிருக்கிறேன். ’குத்லை’க்குறிப்புகளின் மீது கேஸ் வருமா என்று ’நாக்கை’த் தொங்கப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ஜெய்கோ பாடலை அரசியலுக்குப் பயன்படுத்துவது கேவலமான உத்தி என்று குல்சார் சொல்லியிருக்கிறார். கேவலாமனதைத்தானே அரசியல் செய்யும்?

-oOo-

கருணாநிதிக்கும் காந்திக்குமான ‘ஐயோ தம்பி இப்படி மோசம் பண்ணிட்டியேப்பா’ ரக கடிதப் போக்குவரத்துகள் நல்ல சுவாரஸ்யம். அரசு யாரிடமும் கோராமல், கலந்தாலோசிக்காமல் நாட்டுடைமையை அறிவித்துவிடுமாம். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லை என்றால், அரசு கட்டாயப்படுத்தாதாம். இதுபோன்ற ஒரு நடைமுறையை அரசு கையாள்வது அறிவற்ற செயல். இது தேவையற்ற குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, கருணாநிதியின் கடிதம் இன்னும் மோசமானது. அதில் அவர் சொல்ல வரும் கருத்துக்கள் என்ன? ஒரு கோடி ரூபாய் அவர் நிதி அளித்தது தனி மனிதரை நம்பியா அல்லது பபாசி என்கிற அமைப்பை நம்பியா? விருது எழுத்தாளர்களுக்கு இல்லையா? அப்படியானால் விருது பெறும் எழுத்தாளர்கள் என்ன பொம்மைகளா? விருது பெறும் எழுத்தாளர்கள் பட்டியல் தன்க்குத் தெரியாது என்று இன்னொரு குற்றச்சாட்டு. உலகத்துக்கே தெரியும் விஷயம் கருணாநிதிக்குத் தெரியாமல் போயிருக்கிறது. பபாசியோ காந்தி கண்ணதாசனோ, தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களை கருணாநிதியிடம் சொல்லாமல் இருந்திருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை, தேர்ந்தெடுக்குமுன்பே சொல்லவேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருந்திருக்கலாம். இதை வெளிப்படையாகச் சொல்லமுடியுமா? சொல்லிவிட்டால், ‘எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் தலையிட்டதே இல்லை’ என்று எப்படி பின்னர் பெருமையடித்துக்கொள்ளமுடியும்? காந்தி கண்ணதாசனுக்கு இப்படி விழுந்து விழுந்து பதில் சொல்லியிருக்கும் கருணாநிதி, காலச்சுவடு கண்ணனுக்கு ஏன் பதில் சொல்லவில்லை. கருணாநிதி ஒரு பக்கம் பதில் சொன்னால், காலச்சுவடு கண்ணன் பத்து பக்கம் பதில் சொல்வார் என்பது கருணாநிதிக்குச் சொல்லபப்ட்டிருக்கும்.

காலச்சுவடு பதிப்பகத்தை ஒழித்துக்கட்டவே சுந்தர ராமசாமியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது என்று காலச்சுவடு கண்ணன் நினைப்பதற்குத் தேவையான காரணங்கள் உள்ளன. இதில் கனிமொழியின் பங்கு இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கண்ணன் நினைப்பது முற்றிலும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நூலகங்களுக்கு காலச்சுவடு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு இன்றுவரை என்ன காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன? கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி என்பதே தமிழ்நாட்டின் தேசியப்பாட்டு.

தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டார்கள். இனி இரண்டு மாதங்களுக்கு நல்ல ஜாலிதான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிக்கைகளைத் தவிர்த்தால் ஆயிரம் மரங்களாவது மிஞ்சலாம். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத ஒரு அரசு தமிழ்நாட்டில் அமையுமானால் நல்லது. ஆனால் அது நடக்கும் வாய்ப்பில்லை. தீவிரவாதப் பரிவு, ஹிந்துமதத்துவேஷம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுப்பாட்டின்மை எனப் பல்வேறு எரிச்சல்கள் இந்த ஆட்சியின் மீது எனக்கு இருக்கின்றன. ஆனால் இப்போதிருக்கும் அதே கூட்டணியை (திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள்) திமுக தக்க வைத்துக்கொள்ளுமானால், இக்கூட்டணியே நிறைய இடங்களை வெல்லும் எனத் தோன்றுகிறது. அப்படி வென்றால், ஆற்காடு வீராச்சாமிக்குக் கொண்டாட்டம்தான். இன்னும் வெட்டித் தள்ளலாம். (யாரும் பின்னூட்டமாக, கருணாநிதி ஜெயலலிதாவுக்கு மாற்றாக பிஜேபி வராதா என்றெல்லாம் எழுதாதீர்கள், ப்ளீஸ்.)

-oOo-

வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் பிரச்சினையில், காவல்துறையை மட்டுமே குற்றம் சாட்டி ஊடகங்கள் எழுதுகின்றன. யாருமே வழக்கறிஞர்களின் அநாகரிகத்தை முன்வைப்பதில்லை. காவல்துறையினரின் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது என்றால், வழக்கறிஞர்களின் அநாகரிகமான தாக்குதல் மிகவும் கண்டிக்கப்படவேண்டியது. பிரச்சினை சுப்ரமணிய சுவாமியின்மீது முட்டை எறிந்ததில் இருந்து தொடங்கியதால், இப்பிரச்சினையை ஜாதி பிரச்சினையாக மாற்றிவிட்டார்கள். ஈழத்தமிழர் ஆதரவு என்கிற விஷயத்தை மறந்துவிட்டார்கள். (இது குறித்த மாலனின் மிகச்சிறப்பான கட்டுரை, வழக்கறிஞர்களால் பதில் சொல்லமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது.) நான் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரி கேண்டீனில் போடும் வடையில் ஓட்டையின் அளவு பெரியதாகிவிட்டது என்று ஒரு ஸ்டிரைக் செய்தோம். பிரச்சினை பெரியதானதும், காவிரி பிரச்சினைக்கு ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததற்கு ஆதரவாகத்தான் ஸ்டிரைக் செய்ததாக ஒரு பெரிய பல்டி அடித்தார் எங்கள் VP. அரண்டு போனது கல்லூரி நிர்வாகம். இது இப்போது நினைவுக்கு வருகிறது.

எல்லாப் பிரச்சினைக்கும் பாப்பானே காரணம் என்பது எளிமையான பதில். (இந்த வார குமுதத்தில் வந்த ஒரு கேள்வி பதில். “ரஹ்மானைப் பாராட்டும்போதுகூட சிலர் இளையராஜாவை ஜாடைமாடையாகக் குத்துகிறார்களே?” “அது வேறு வெறுப்பு. இன்றும் தொடரும் ஆதிகால வெறுப்பு. திருத்த முடியாது.” – அதாவது இளையராஜா தாழ்த்தப்பட்ட ஜாதி என்னும் அர்த்தத்தில் இந்த பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முரண் என்னவென்றால், இளையராஜா பார்ப்பனிய வாழ்க்கை வாழ்கிறார் என்று முற்போக்காளர்கள் பலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் என்பதுதான.) சுப்ரமணிய சாமி ஜாதி சொல்லித் திட்டினார் என்பது இன்னும் எளிமையான குற்றச்சாட்டு. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த ஈழ உணர்வு தெருக் கிளர்ச்சியில், ‘சுப்ரமணிய சாமி பேசலை, ஜெயலலிதா பேசலை, ஏன் ஏன் பேசலை, பாப்பாந்தான் சாகலை, அதனால பேசலை’ என்று கோஷம் போட்டுக்கொண்டு சென்றார்கள். பாப்பான் சாவதாக வைத்துக்கொண்டால், திருமாவளவன், நெடுமாறன், வீரமணி, கருணாநிதி பேசியிருப்பார்களா என்ன?

-oOo-

கிழக்கு ப்திப்பகத்தின் எடிட்டோரியல் டீம், தமிழை எப்படி எளிமையாகவும் புரியும்படியும் எழுத வைப்பது என்பதற்காக மண்டையை போட்டு உடைத்துக்கொள்கிறது. அவர்களுக்கான ஒரு டிப்ஸ். கீழே கருணாநிதி எழுதியிருக்கும் அறிக்கையில் இருந்து ஒரு வரியைத் தந்துள்ளேன். இதுவே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது. படித்துத் தெளிவடையுங்கள். (அனுப்பிய நண்பருக்கு நன்றி!)

“அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் விவாதங்கள், வாதங்கள், போராட்டங்கள் இவற்றுக்கு இடையில் கூட- பிற கட்சி தலைவர்களை இது போன்ற வார்த்தைகளால் தாக்க கூடாதென்றும், அப்படி தவறுதலாக ஒருவேளை யாராவது தாக்கி பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் – அவர்களையே மன்னிப்பு கேட்க சொல்லியும் – அரசியலில் அன்று தொட்டு இன்றுவரை – அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நடந்து காட்டிய வழியிலேயே இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கின்ற கழகத்தின் தலைமை – மற்ற கட்சித்தலைவர்கள் ஒவ்வொருவரையும் – மற்ற கட்சிகளின் தியாகிகள் அனைவரையும் எந்த அளவிற்கு மனதில் நிறுத்தி மக்களிடையே நினைவுச் சின்னங்களாக அமைத்து- இந்த இயக்கம் வளர்க்கப்பட்ட விதத்தையும், வளர்ந்து வருகின்ற விதத்தையும் விரிவான வரலாறாக ஆக்கியிருக்கிறது என்பதையும், இனியும் அந்த அரசியல் நாகரிகம் இந்த இயக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் ஏனோ, தினமணி மறந்து விட்டு- தேவையற்ற திசை திருப்பங்களை செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறது”.

எடிட்டோரியல் டீமுக்கு இனிமேல் சந்தேகமே வராது என்று நினைக்கிறேன்.

Share

குதலைக் குறிப்புகள் – 3

‘தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என்கிற கையறு நிலை வாக்கியத்தைத் தொடர்ந்து, சீமான் இன்னொரு கையறு நிலை வாக்கியத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார். ‘வேசி மக்கள்.’ சீமான் வீறுகொண்டு எழுந்து சிறைக்குச் செல்வதும், இனி இதுபோல் பேசமாட்டேன் என்று கடிதம் எழுதிவிட்டு வீடு திரும்புவதும், மீண்டும் அப்படியே பேசுவதும் (வே)வாடிக்கையாகிவிட்டது. சீமானின் வீறுகொண்ட குரல் வெறும் அலட்டல் குரலாகவும், மேடை நாடகமாகவுமே தோற்றமளிக்கிறது. ஏதேனும் ஒரு கட்சியில் நாளை எம்.எல்.ஏ சீட் பெற அவர் முயல்கிறார் என்கிற எண்ணமே வலுக்கிறது. இவரைக் கைது செய்யும் அரசு, சரியான குற்றச்சாட்டுகளோடு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தாலும் பரவாயில்லை. மக்கள் அமைதியாகும்வரை சிறையில் வைப்பது, பின்பு வெளிவிடுவது என்கிற திட்டத்தோடு மட்டுமே சீமான் போன்றவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதனால் இவர்கள் வெளியில் வரும்போது ‘தியாகி’ பட்டத்தோடு வெளியில் வருகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டில் வேசி மக்களோடு வசிக்காமல், இலங்கை சென்று போராடி வெற்றியடைய சீமான் முயலவேண்டும். இன்று தினமலர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. புதுவை அரசு இவரைக் கைது செய்ய வந்ததாகவும், இவர் பயந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது தினமலர். தினமலரை நம்பமுடியாது. சீமான் சாதாரணமாக வெளியில் சென்றிருந்தாலும் இப்படி எழுதிவிடும். ஆனால் தன்னைக் கைது செய்ய காவலர்கள் வந்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் சீமான், உடனடியாக புதுவையில் சரணடைந்து தினமலரின் மூக்கை அறுக்கவேண்டும். யார் மூக்கை யார் அறுக்கிறார்கள் என்று பார்க்கலாம். எப்படியோ இன்னொரு ’சிறை சென்ற தியாகி’ பட்டம் சீமானுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது.

-oOo-

’நான் கடவுள்’ படத்தின் ஓம் சிவோகம் பாடலைப் பற்றி இன்னொரு முறை குறிப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது. படம் பார்ப்பதற்கு முன்பு சாதாரணமாகத் தோன்றிய இப்பாடல், படத்தோடு பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. தொடர்ந்து இருபது முறை இதே பாடலைக் கேட்டபோது, இப்பாடல் அப்படியே வேறு ஏதோ ஒரு தளத்திற்குச் சென்றுவிட்டது போலத் தோன்றுகிறது. இண்டர்லூடாக வரும் இசையெல்லாம் உடல் நரம்பை அதிர வைக்கிறது. ஹே ராம் படத்தில் வரும் ‘இசையில் தொடங்குதம்மா…’ பாடலுக்குப் பிறகு, இவ்வளவு பரவசத்தோடு நான் கேட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். ‘ஓம் சிவோகம்’ பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை யாராவது இணையத்தில் இட்டால் நல்லது.

-oOo-

காவல்கோட்டம் நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. கோபம் கொண்டு எஸ்ரா கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்ட விமர்சனத்தைப் படித்தேன். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருந்தது. காரணம், எஸ்ரா இத்தொனியில் எழுதி நான் வாசித்ததில்லை என்பதாக இருக்கலாம். நாவல் தனக்கு ஏன் பிடிக்கவில்லை என்கிற காரணங்களைப் பட்டியலிட்டிருக்கும் எஸ்ரா, அதற்கு முன்னதாக எழுதியிருக்கும் வரிகள் எல்லாம், ஒரு தேர்ந்த எழுத்தாளரதல்ல. நினைத்ததை எழுதும் ஒரு வலைப்பதிவு எழுத்தாளருடையது. இதை எப்படி எஸ்ரா தேர்ந்தெடுத்தார் என்பதுதான் என் ஆச்சரியத்துக்குக் காரணம். ஆயிரம் பக்கம் தந்த வலிதான் காரணம் என்றாலும், எஸ்ரா நாவலின் விமர்சனத்தை அதற்கான காரணங்களோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும், கடைசி வரியின் அங்கதத்தை ரசித்தேன். அதே சமயம் ‘ஆயிரம் பக்க அபத்தம்’ என்னும் தலைப்பு உணர்த்துவது என்ன என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

-oOo-

விஜயபாரதம் இதழில் தஸ்லிமா நஸ்ரினின் நேர்காணல் வாசித்தேன். வேறோர் ஆங்கில இதழில் வந்திருந்த நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம். தனது நாவலை வெளியிட எந்தஒரு பதிப்பகமும் முன்வர மறுக்கிறது என்ற தன் குமுறலை வெளியிட்டிருந்தார். கொல்கத்தாவை தன் தாய்நாடாகக் கருதும் தஸ்லிமா, தான் இந்தியாவை எவ்வளவு நேசிக்கிறேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார். மார்க்ஸிஸ்ட்டுகளே தனது இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்லும் தஸ்லிமாவின் பேச்சில், கோபத்தைவிட, எப்படியாவது மார்க்ஸிஸ்டுகள் தன்னை கொல்கத்தாவில் வாழ அனுமதி அளித்துவிடமாட்டார்களா என்கிற ஏக்கமே தெரிந்தது.

அதிலிருந்து இரண்டு கேள்வி பதில்கள்.

நீங்கள் தற்போது காதல் வயப்பட்டிருக்கிறீர்களா? திருமணம் சமீபத்தில் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளனவா? ஒரு தாயாகும் எண்ணமிருக்கிறதா?

காதல் வயப்பட்டால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் உங்கள் மூன்று கேள்விகளுக்கும் பதில் இல்லை… இல்லை… இல்லை… தான்.

உங்கள் பூனை எப்படி இருக்கிறது? நீங்கள் அதனை ரொம்பவும் இழந்துவிட்டதாக உணருகிறீர்களா?

கல்கத்தாவை விட்டு நான் வெளியேற வேண்டி வந்தபோது என் நண்பர்கள் அதனைப் பார்த்துக்கொள்ள முன்வந்தார்கள். என் ‘மினு’வை நான் ரொம்பவும் இழந்துவிட்டேன். ஆனால் என்ன செய்வது? இந்தியாவில் யாரும் அவளைப் பார்த்துக்கொள்ளவில்லை. என் சகோதரனுடன் டாக்காவிற்கு அனுப்பப்பட்டுவிட்டாள். அவள் (பூனை) ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனை. ஆனால் இப்போது விளையாடுவதில்லை. சாப்பிடுவதில்லை. கல்கத்தாவை நினைத்து ஏங்குகிறாள். என் அருகாமை அவளுக்கு இல்லை.

கல்கத்தாவில் தஸ்லிமா நஸ்ரினுக்கும் இடமில்லை. ஒரு பூனைக்கும் இடமில்லை. விஜயபாரதம் எந்த ஆங்கில இதழில் இப்பேட்டி வெளியாகியிருந்தது என்பதனையும் குறிப்பிட்டிருக்கலாம்.

-oOo-

இலங்கையைச் சேர்ந்த, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் இந்தியா வந்திருப்பதாகவும், சில தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்கள் கருணா ஆதரவாளர்கள் என்றும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களின்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். (சுட்டி: http://www.hindu.com/2009/02/15/stories/2009021560791000.htm) தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொன்ன அறிவாளிகளை நினைத்துக்கொள்கிறேன்.

-oOo-

அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் காலபைரவனின் ஒரு சிறுகதை வெளியாகியுள்ளது. காலபைரவனின் மற்ற சிறுகதைகளைப் போலல்லாமல், ஒருமுறை வாசித்தாலே புரிந்துவிடும் தன்மையோடு இக்கதை எழுதப்பட்டுள்ளது. ‘ஒருநாளும் நாம் திரும்பப்போவதில்லை’ என்ற அக்கதையில், அவர் உயிர்மை பதிப்பகத்தைப் பகடி செய்கிறார். சாரு நிவேதிதாவையோ எஸ்ராவையோ பகடி செய்கிறார். இவ்வளவு சொன்னால் போதாதா? இனி எல்லாரும் இக்கதையைப் படித்துவிடமாட்டீர்களா? கதையைவிட கதைக்குள்ளிருக்கும் கதை தரும் இன்பத்தை எது தந்துவிடமுடியும்? இதை நான் உணர்ந்தே சொல்கிறேன்!

இதே இதழில் ‘விளக்கு விருது’ அம்பைக்குத் தரப்பட்ட விழாவைப் பற்றி அழகிய சிருங்கர் எழுதியுள்ளார். விழா இன்னும் சிறப்பாக நடத்தப்படவேண்டும் என்கிற குமுறலை நான்கு வருடங்களுக்கு முன்பே அழகிய சிருங்கர் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தமுறை அழகிய ‘கொம்பர்’ சொல்வதோடு நிறுத்தாமல் ஒரு முட்டு முட்டியும்விட்டார். அதில் சில வரிகளை இங்கே வாசிக்கலாம்.

Share

குதலைக் குறிப்புகள் – 2

நடிகர் நாகேஷ் காலமான செய்தி வருத்தத்தைத் தந்தது. நல்ல நடிகர். தலை சிறந்த உலக நடிகர்களுள் ஒருவர் என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும், தமிழின் மிக முக்கியமான நடிகர்களுள் ஒருவர் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கே உரிய அதீத நடிப்பு இவரிடமும் இருந்தது என்றாலும், இவரது டைமிங்கும் உடல் மொழியும் ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகனிடம் மட்டுமே காணக் கிடைப்பவை. சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து தனது முக சேஷ்டைகளால் எரிச்சல் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும் மறுக்கமுடியாது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக அவர் நடித்தது கமல் செய்த கொடுமை. ஆனால் மகளிர் மட்டும் படத்தில் அவர் பிணமாக நடித்தது, அவர் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று. சந்திரோதயம், சாது மிரண்டால், திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, நான், இரு கோடுகள், மிஸ்டர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன. நாகேஷின் ஆத்மா சாந்தியடையட்டும்.

-oOo-

விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள். உதித் நாராயண் பத்மஸ்ரீ ஆகியிருக்கிறார். கூடவே ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷண் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஜெயகாந்தனைப் பாராட்டினால் அவரைக் கிண்டல் செய்வது போல ஆகிவிடும். யார் யாருக்கு விருது கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அதில் சரியானவரை நாமே தேர்வு செய்து அவரை மட்டும் பாராட்டவேண்டும். யாரையும் உடனே பாராட்டிவிடமுடியாது என்று உறுதியாகச் சொல்கிறது இந்திய அரசு. ஜெயகாந்தன் விருதுக்காக அலைபவர் அல்ல. விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. சமீப கால வீழ்ச்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஜெயகாந்தனை தமிழ் இலக்கிய உலகின் ஒரு நிகழ்வாகக் கருதலாம். யாரும் பேசத் தயங்கும் கருத்துகளை எவ்விதத் தயக்கமும் இன்றி, எல்லோரும் உணரும் வண்ணம் உரக்கப் பேசியவர் அவர். அவரது படைப்புகளும் அவரைப் போலவே வெளிப்படையானவை. இந்த பத்ம பூஷன் விருதுக்கு யாரின் சிபாரிசின் பேரில் அவருக்குக் கிடைத்திருந்தாலும், அவர் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியுடையவரே. விவேக்கிற்கு வரலாம். ஜெயகாந்தனை சிபாரிசு செய்தவர்களே விவேக்கையும் சிபாரிசு செய்திருப்பார்களோ என்ற எண்ணத்தைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. நல்லவேளை நாகேஷுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கவில்லை.

ராமாபுரம், சென்னை-89லிருந்து ஒரு ரசிகரும் கிட்டத்தட்ட இப்படி புலம்பியிருந்தார்.

’சிலுக்குக்கும் நமீதாவுக்கும் பத்மஸ்ரீ தராததை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிலுக்கின் சேவை மொழிகளைக் கடந்தது. அவர் திரையில் தோன்றி தன் மேலாடையைக் கழற்றிய நேரத்தில் கைதட்டாத ரசிகர்களே கிடையாது. இதில் கன்னடக்காரன், தமிழன், தெலுங்கன் என்கிற பேதமே இல்லை. அப்படிப்பட்ட சிலுக்குக்கு மரியாதை செய்யாத இத்தேசம் என்ன தேசமோ?’

திருநெல்வேலியில் திரையிடப்பட்ட ஒரு மேற்படி திரைப்படத்தில் சிலுக்கு நடித்திருந்தார். அவர் தனது மேலங்கியைக் கழட்டும் ஒரு காட்சிக்கு, திரை முழுவதும் சீரியல் செட் லைட்டுகளை ஓடவிட்டு குஷிப்படுத்தியது தியேட்டர் நிர்வாகம். திருநெல்வேலியில் ஒரு முக்கியமான காட்சியில் திரையைச் சுற்றி சீரியல் செட் லைட்டைப் போடும் கலாசாரம் வெகுவாக வேரூன்றியிருந்தது. செம்பருத்தி திரைப்படத்தில் பிரசாந்த் ஓடிவந்து பைக்கைத் தாண்டும்போது, குணா படத்தில் ‘இது அப்பன் கொடுத்த மூஞ்சி’ என கமல் சுற்றிச் சுற்றிப் பேசும்போது, ராக்கம்மா கையத் தட்டு பாடலின் துவக்கத்தின் போது என சீரியல் செட்டு சுற்றியடிக்க படம் பார்த்த நினைவுகள் வருகின்றன. கடைசியாக திருநெல்வேலியில் படம் பார்த்து 3 வருடங்கள் இருக்கலாம். அப்போதும் இந்த சீரியல் செட் கலாசாரம் இருந்தது. இப்போதும் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். நிறைய ஊர்க்காரர்கள் இது பற்றிக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்தப் புகழை அடைந்த ஒரே நடிகை சிலுக்காகத்தான் இருக்கமுடியும். அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்துவிடவேண்டியதுதான். சாரு நிவேதிதா ‘நேநோ’ புத்தகத்தை சிலுக்குவிற்கு சமர்ப்பணம் செய்திருப்பது கூடுதல் தகுதி.

-oOo-

முத்துக்குமாரின் மரணம் முட்டாள்தனமானது என்று சொன்னாலே ஈழத்தமிழர்களின் எதிரணி என்று ஒரேடியாக முடிவு கட்டிவிடக்கூடிய சூழலில்தான் இதை எழுதுகிறேன், முத்துக்குமாரின் மரணம் முட்டாள்தனமானது. வருத்தம் தரக்கூடியது. ஈழத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் நிச்சயம் உறுதி செய்யப்படவேண்டியதுதான். போர் நிறுத்தம் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கும் சமயம் புலிகளின் கை கீழிறங்கிய சமயமாக இருப்பதுதான் பல்வேறு சந்தேகங்களை வரவைக்கிறது. இலங்கை அரசைப் போர் நிறுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தும் எந்தத் தமிழுணர்வுத் தலைவரும் புலிகளைப் போர் நிறுத்தம் செய்யச் சொல்வதில்லை. கடந்த காலங்களில் புலிகள் அறிவித்திருந்த போர் நிறுத்தங்களும், அவர்கள் மீண்டும் போராடுவதற்குத் தேவையான இடைவெளிக் காலமாகத்தான் இருந்திருக்கின்றன. இப்படி புலிகள், இலங்கை அரசு, தமிழுணர்வுத் தலைவர்கள் மத்தியில் இறந்துகொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள் என்பதுதான் சோகம். இந்தச் சூழலில் முத்துக்குமாரின் மரணம். தமிழுணர்வுத் தலைவர்கள் எல்லாம் இதைத் தியாகம் என்று முடிவு செய்து அறிவித்துவிட்டார்கள். இந்தத் தியாகத்தைத் தொடர்ந்து பல தியாகங்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் பதறத் தோன்றியது. ஏதேனும் ஒரு கட்சியின் ஏதேனும் ஒரு தலைவனாவது தீக்குளிக்கும்வரை, எந்த ஒரு தொண்டனும் இனி தீக்குளிக்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டால் நன்றாக இருக்கும். முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

புலிகள் – இலங்கை அரசு பிரச்சினையை ஒட்டி, தமிழ்நாடெங்கும் தமிழுணர்வு கொளுந்துவிட்டு எரிவதாக ஒரு பாவனை வலைப்பதிவுகளில் மட்டுமே காணக் கிடைக்கிறது. எனக்குத் தெரிந்து பெரிய அளவில் இந்த உணர்வு நாடெங்கும், தெருவெங்கும் கனன்று கொண்டிருக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. ஊடகங்கள் இவற்றைப் பற்றி அதிகம் எழுதவில்லை. வலைப்பதிவுகளில் தமிழுணர்வு நிறைந்தவர்கள் அதிகம் இருப்பதால் இப்படி நிகழ்ந்திருக்கலாம். தமிழ்நாடெங்கும் இந்த உணர்வு ஆழமாகப் பரவியிருக்கிறது என்றுதான் நிறைய பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா, அவர்களது ஆவலா என்பது தெரியவில்லை. இன்னும் சில தினங்களில் தெரியலாம். சில கட்சிகள் அறிவித்திருந்த கடையடைப்பிற்கு கிடைக்காத ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, இந்த உணர்வு வலைப்பதிவுகளில் அதீதமாகக் காட்டப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது.

-oOo-

பா. திருச்செந்தாழையின் ‘வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்’ புத்தகத்தில் சில சிறுகதைகளை வாசிக்க முயன்றேன். எல்லாம் தலைக்கு மேலே ஓடுகின்றன.

‘அவநம்பிக்கை கொண்டவனாகவும் துல்லிய முடிவெடுக்கவியலாதவனாகவும் என்னை அறிந்துகொண்ட பிறகு குற்ற உணர்வுகளையும் கழிவிரக்க முனகல்களையும் எழுத்தாக்கத் துவங்கிய ஆரம்பித்தில் முதல் உரையாடல்காரரான ஹவியிடமிருந்து நான் எடுத்துக்கொண்டு பதியனிட்ட தானியச்சொற்களில் பச்சையம் பூக்கும் பருவத்தில் எங்களின் நடுவே காலம் அமர்ந்தபடியிருக்கிறது.’

முன்னுரையில் இருந்த வரிகள் இவை. இவற்றைப் போன்ற வரிகள் நிறைய வருகின்றன. கோணங்கியின் இடத்தை இலகுவாக அடையலாம் திருச்செந்தாழை என்று தோன்றியது. ஆனாலும் இச்சிறுகதைத் தொகுப்பை படித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

-oOo-

மு. ஹரி கிருஷ்ணன் ஆசிரியராக இருக்கும் மணல் வீடு சிற்றிதழ் வாசித்தேன். ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்கிற பத்தியைப் பார்த்தேன். காளமேகப் புலவர் அல்குலுக்கும் ஓடத்திற்கும் பாடிய சிலேடைப் பாடலைப் பற்றிய விவாதம் இருந்தது. தொடர்ந்து சதவிகரம் என்னும் வார்த்தை பற்றிய ஆராய்ச்சி இருந்தது. அந்த இரண்டு பாடல்கள்.

பலகை யடுமுள்ளே பருமாணி தைக்கும்
சலமிறைக்கும் ஆளேறித் தள்ளும் – உலகறிய
ஓடமும் ஒன்றே உலகநாதன் பெண்டீர்
மாடமும் ஒன்றே மதி.

வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும்
கோலமுடி மன்னர் குறைந்ததுவும் – சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவும் ஐயோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு.

மற்ற விஷயங்களை மணல் வீடு புத்தகத்தில் வாசிக்கவும்.

-oOo-

Share