Archive for குறுங்கதை

அந்நியன்

முனியப்பன் என்கிற வெங்கடேஷ் திருநெல்வேலியின் பஸ் ஸ்டாண்டில் கதிர்வேலைப் பார்த்தபோது, இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் அப்படியே தூக்கி வீசப்பட்டான். தன்னை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, கதிவேலைப் பார்த்து ஒரு நொடி சிரித்து, இவன் வெங்கடேஷ் அவன் அடுத்த நொடியில் கண்டுபிடித்து அவனும் சிரித்து, ‘நீ எங்கல இங்க?’ என்ற கேள்விக்கு வெங்கடேஷ் சொன்ன பதில், ‘சீராளன் நம்பர் இருக்கால உன்கிட்ட?’ சீராளன் பள்ளியின் சூப்பர் ஸ்டார். ஆங்கிலம் பொளந்து கட்டுவான். கதிர்வேல் சொன்னான், ‘அமெரிக்கால இருக்கானாம்.’

தானும் சீராளனும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் ஒவ்வொன்றாக வெங்கடேஷுக்கு நினைவுக்கு வந்தன. உயிரியியல் வாத்தியார் வரும் முன் அவரைக் கரப்பான் பூச்சி போல வரைந்து வைத்தது, ஒரு சிட்டிகை போட்டால் நூறு முறை தும்மும் பொடியை எல்லாருக்கும் கொடுத்து தமிழ் வாத்தியார் வரும்போது ஒவ்வொருவரும் நூறு முறை தும்மி அவரை அலறி ஓட்ச வைத்தது, மாஸ் கட் அடித்துவிட்டு கலைவாணி தியேட்டருக்கு ஓடியது, நாடோடித் தென்றல் படத்துக்குப் போய் ‘ஒரு கணம் ஒரு யுகமாக’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்டு ராயல் தியேட்டரில் சண்டை போட்டது, பெண்ணின் படம் வரைந்து பாகங்களைக் குறித்து வைத்தது..

உணர்ச்சிப் பெருக்கில் வெங்கடேஷ் கண்ணீர் துளிர்க்க சீராளனுக்கு வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான். ‘யார்னு தெரியுதால?’ ஐந்து நிமிடம் காத்திருந்தான். பதில் இல்லை. ‘வெங்கடேஷ்ல’ என்று அனுப்பினான். அதற்கும் பதில் இல்லை. தான் அனுப்பிய மெசேஜை சீராளன் படித்துவிட்டதாக வாட்ஸப் சொல்லியது. தன்னை மறந்துவிட்டானோ என்று வெங்கடேஷுக்குத் தோன்றியது. மீண்டும் தெளிவாக ‘வெங்கடேஷ், ப்ளஸ் டூல ஒண்ணா படிச்சோம்’ என்று மெசேஜ் அனுப்பினான். அப்போதும் பதில் இல்லை. வெங்கடேஷால் நம்பவே முடியவில்லை. சீராளனா இப்படி? இருக்காது என்று நினைத்து அவனை போனில் அழைத்தான். அழைப்பு கட் செய்யப்பட்டது. உடனே வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் வந்தது. ‘பிஸி.’ வேலையாக இருப்பான் போல என அமைதியாகக் காத்திருந்தான். அவனதுநினைவுகள் அவன் படித்த பள்ளியையே சுற்றி சுற்றி வந்தன.

அன்று முழுவதும் சீராளன் அழைக்கவோ மெசேஜ் அனுப்பவோ இல்லை. அன்று இரவு முழுவதும் சீராளன் நினைவாகவே இருந்தது வெங்கடேஷுக்கு. மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாக அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் வெங்கடேஷ். ‘ஃபீரியால?’ சீராளனிடம் இருந்து எந்தப் பதில் இல்லை. பத்து நிமிடம் காத்திருந்துவிட்டு, மீண்டும் போனில் அழைத்தான். அந்த அழைப்பையும் சீராளன் கட் செய்தான். உடனே வாட்ஸப்பில் இன்னொரு மெசேஜ் அவனிடம் இருந்து வந்தது. ‘பிஸி.’

இவன் எப்பவுமே இப்படி பிஸியாத்தான் இருப்பானா என்கிற எண்ணம் வந்தது வெங்கடேஷுக்கு. அவன் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த மெசேஜை சீராளன் அனுப்பி இருந்தான். ‘விஜயலட்சுமி நம்பர் இருந்தா அனுப்பி வை.’ வெங்கடேஷுக்குள் இருந்த முனியப்பன் அடுத்த மெசேஜை அனுப்பினான். ‘நீ பிஸின்னா தாயோளி நான் என்ன இங்க செரச்சிக்கிட்டால இருக்கேன்? நானும் பிஸி மயிருதான்.’

Share

பிண்டம்

ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையில் ஆரம்பித்தால் அடுத்த மூன்று மாதத்துக்கு உட்காரவே முடியாது என்று பத்மநாபனின் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். வரிசையாகப் பண்டிகைகள். ஆனால் இன்று அப்படிச் சொல்ல அந்த அம்மா இல்லை. அவள் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் அந்த வசனத்தை பத்மநாபன் சொல்ல ஆரம்பித்திருந்தார். முன் தலையில் ஒரு முடி வெள்ளையாகிவிட்டிருந்தது.

ஆடி அமாவாசைக்கு முதல்நாளே வேண்டிய எல்லா சாமான்களையும் வாங்கி வைத்துக்கொண்டார். ‘இலை வாங்கிட்டியாடா? உன் பொண்டாட்டி எதையும் ஞாபகப்படுத்த மாட்டா. இலை உங்க பையன் வாங்கிட்டு வரலைன்னா நான் என்ன பண்றதுன்னு சொல்லிக் காட்டுவா. அதோட நீங்களாவது ஞாபகப்படுத்திருக்கலாமே அத்தைம்பா’ என்று அம்மா பேசுவதைப் போலவே பத்மநாபனுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. கடைத் தெருவில் முதலில் இலையைத்தான் வாங்கினார்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை செய்துவிட்டு, தர்ப்பணம் விட்டுவிட்டு, பிண்டம் வைக்கத் தயாரானார். வீட்டில் செய்த அனைத்தையும் ஒரு இலையில் வைத்து, கொஞ்சம் எள்ளையும் சேர்த்துக் கொடுத்தாள் அவரது மனைவி. ‘நானும் கூட வரேன்ப்பா’ என்ற ஏழு வயது மகனிடம், ‘நீயெல்லாம் எதுக்கு? அவர் மட்டும் போகட்டும்’ என்று சொல்லிவிட்டாள் அவள். ஒரு கையில் தட்டு, அதன் மேல் இலையில் பிண்டம். இன்னொரு கையில் ஒரு செம்பில் நீருடனும், மொட்டை மாடிக்குப் போனார்.

மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி, அதன் மேல் பிண்டம் இருக்கும் இலையைத் தட்டுடன் வைத்து, பிண்டத்தை இரண்டாகப் பரப்பி வைத்தார். அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று. இலை பறக்காமல் இருக்க, அங்கே கிடந்த இரண்டு செங்கல்லையும் இலையின் மேல் ஓரமாக வைத்தார். கா கா என்று நான்கைந்து முறை கத்தினார். பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். பூணூலுடன் சட்டை போடாமல் ஒரு துண்டுடன் மட்டும் வந்தது அப்போதுதான் அவருக்கு உறைத்தது. மீண்டும் கா கா என்று கத்தினார். ஒரு காக்காயும் வரவில்லை. ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, மொட்டைமாடிக் கதவைத் தாழிட்டுவிட்டுக் கீழே வந்துவிட்டார். சாப்பிட்டார். உறங்கிப் போனார்.

ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று அம்மாவின் குரல் கேட்கவும் சட்டென விழித்தார். மணி ஐந்தரை ஆகி இருந்தது. காப்பி குடித்தார். அம்மா இருந்திருந்தால், மதியம் செய்த சித்ரான்னத்தையும் ஆமவடையையும், நமத்துப் போன அப்பளத்தையும், பாயாசத்தையும் கொண்டு வந்து தருவாள். பண்டிகை அன்று மாலைக் காப்பி கிடையாது. அந்த நினைவுடனேயே மொட்டை மாடிக்குப் போனார். கூடவே அவரது மகனும் வந்தான்.

தாழ்ப்பாளைத் திறந்து மொட்டைமாடிக்குப் போனவர் முதலில் பிண்டம் வைத்த தட்டைத்தான் பார்த்தார். அதில் ஒரு பருக்கை கூட இல்லை. அவருக்கு ஆச்சரியமாகிப் போனது. ஒரு பருக்கையைக் கூட விடாமல் அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டுவிட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார். மகனிடம் அதே சந்தோஷத்தில் சொன்னார். மகன் ‘தாத்தா பாட்டியாப்பா’ என்றான். ‘ஏம்ப்பா இவ்ளோ தூரம் வந்துட்டு கீழ வரலை’ என்று கேட்டவனை அப்படியே கட்டிக்கொண்டார். மகன் கேட்டான், ‘எங்கப்பா இலையைக் காணோம்? அதையுமா சாப்ட்டாங்க?’ என்றான். அப்போதுதான் கவனித்தார். தட்டின் மேல் இலை இல்லை. இலை பறக்காமல் இருப்பதற்காக அவர் வைத்த இரண்டு செங்கற்கள் மட்டும் இருந்தன. ஆடி மாதக் காற்றில் இலை பறந்திருக்குமோ என்று சுற்றிலும் பார்த்தார். எங்கேயும் இலை இல்லை. சுத்தமாகக் காற்றும் இல்லை. யாரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நொடி யோசித்தவர், ‘வாடா போகலாம்’ என்று பையனைக் கூட்டிக்கொண்டு விடுவிடுவெனக் கீழே வந்தார். மகன், ‘என்னப்பா?’ என்றான். ‘ஒண்ணுமில்லை’ என்றார்.

Share

திருமலை

பீட்டர் பாலாஜி என்று அவன் பெயரைச் சொல்லும்போது எல்லாருமே துணுக்குறுவார்கள். அது பீப்பாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவன் பீட்டர் பாலாஜி என்ற பீப்பாவாகி இரண்டு வருடங்கள் இருக்கும். உடம்பும்தான். மனதோடு சேர்ந்து உடலும் ரட்சிக்கப்பட்டுவிட்டது. ஏன் ஏன் என்று யார் கேட்டாலும் அவன் ஒரு மாதம் வாயே திறக்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்கும் மேரிக்கும் கல்யாணம் ஆனது. பீப்பாவின் வீட்டுப் பக்கத்தில் இருந்து ஒரு ஈ காக்காய் கூட வரவில்லை. தான் செத்தாலும் தன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று பாலாஜியின் அம்மா போட்ட சாபத்தில் உண்மையில் பீப்பா கொஞ்சம் நிம்மதியானான் என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்த  மூன்று மாதங்களில் குரோம்பேட்டையில் மூன்று அறை ஃப்ளாட் ஒன்று வாங்கிக் குடியேறினான். கேட்டட் கம்யூனிட்டி. மொட்டை மாடிக்குக் கூட்டிக்கொண்டு போன ப்ரோக்கர் அங்கே இருந்து தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைக் காண்பித்தான். பீப்பாவின் உள்ளம் நெகிழ்ந்தது. அந்த மலையில்தான் அவன் ரட்சிக்கப்பட்டான். அங்கேதான் அவன் முதன்முதலாக மேரியைப் பார்த்தான். மொட்டை மாடியிலேயே தேவாலயத்தின் மணி அவன் மனதுக்குள் கேட்டது. அந்த வீடுதான் என முடிவு செய்தான். வாழ்க்கை மாறியது. பழைய பழக்கங்கள், தொடர்புகள் என எல்லாவற்றையும் எளிதாக மறந்தான். புதிய வீட்டுக்குக் குடியேறினான். புது மனைவி. புதிய வாழ்க்கை.

தினம் தினம் மொட்டை மாடிக்கு வந்து தாமஸ் மவுண்ட்டை அங்கிருந்தபடியே பார்ப்பான். தாமஸ் கையில் ஜபமாலையுடன் அங்கும் இங்கும் திரிவதாகக் கற்பனை செய்துகொள்வான். ஒருநாளைப் போல ஒருநாள் மொட்டை மாடிக்கு வந்து தாமஸைப் பார்க்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. எல்லாமே அற்புதம்தான். அவ்வப்போது வந்து தொந்தரவு செய்யும் அம்மாவின் முகத்தைத் தவிர. ஒருநாள் அவளும் செத்துப் போனாள். ஷவரின் கீழே நின்று அரை மணி நேரம் குளித்ததில் பழைய எதுவும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளவில்லை என்று நிம்மதியானான். இரண்டு வருடங்களில் இரண்டு குழந்தைகள். வாழ்க்கை இத்தனை சுவாரஸ்யமானதா? அன்றுதான் திடீரென திருமலை அவன் வீட்டுக் கதவைத் தட்டினான். ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். எரிச்சலானான். லேசாகச் சிரித்தான்.

மேரி சிரிக்கக்கூட இல்லை. உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு “ம்” என்றாள். திருமலை அவர் வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பீப்பாவுக்கு ஒட்டவே இல்லை. அவனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனான். திருமலை லொட லொடவென பேசிக்கொண்டே இருந்தான். பீப்பா தலையைக் கூட அசைக்கவில்லை. அவன் போனால் போதுமென்று இருந்தது.

திருமலையைக் கவனிக்காமல் தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைப் பார்க்க ஆரம்பித்தான். மனதுக்குள் மணியோசை கேட்டது. தன் நெஞ்சில் இருந்த சிலுவையைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றான். திருமலை, “உன்கிட்டதான்டா பேசிக்கிட்டே இருக்கேன்” என்று சத்தமாகச் சொன்னபோதுதான் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தான். இவன் இன்னும் போகவில்லையா? பீப்பா சொன்னான், “என்ன சொன்ன?” திருமலை, “என்ன அங்க பாத்து நின்னுக்கிட்டு இருக்க?” பீப்பா சொன்னான், “தாமஸ் மவுண்ட். புனித தாமஸ். உனக்கெல்லாம் புரியாது.” திருமலை மலையைத் திரும்பிப் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். மலையைப் பார்த்தபடியே சொன்னான், “இதுவா? தாமஸ் மவுண்ட்டா? இந்தப் பக்கம் எப்படிடா தாமஸ் மவுண்ட்டு? இது திருநீர் மலைடா.”

தொப்பென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோதுதான் பீப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு பீப்பாயைப் போலச் சரிந்து விழுந்து கிடந்தது திருமலைக்குத் தெரிந்தது.

Share

கனவுகள்

விதவிதமான கனவுகள். அந்த அளவுக்கு இருந்தாலும் பரவாயில்லை. கலவரமூட்டும் கனவுகள். ராமநாதனுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பயம் இல்லை, ஆனால் என்னவோ ஒரு சின்ன நெருடல். தினம் தினம் கனவா? அந்தக் கனவுகளுக்குள் என்னவோ இருப்பதாகத் தேடினான். எங்கோ ஒரு திருப்பத்தில் எதோ ஒரு பிணம் என்பதாகக் கனவு வரும். பக்கத்தில் போய்ப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருக்கும். சுற்றி இருப்பவர்களைப் பார்த்தால் எல்லாருமே உறவினர்கள் போல இருக்கும். விழிப்பு வந்துவிடும். இன்னொரு நாள் கனவில் எதோ ஒரு விபத்து என்று வரும். சுற்றிலும் உறவினர்கள் நிற்பார்கள். இவன் அருகில் நெருங்கிப் போகவும் விழிப்பு வந்துவிடும்.

இப்படி வகை வகையான கனவுகள், கொஞ்சம் நெருடலூட்டும் கனவுகள். மனைவியிடம் சொல்லலாம். உடனே அவளுக்கு நெற்றியில் வேர்க்கும். லேசாக மூச்சு வாங்கும். அப்படியே சாய்ந்துவிடுவாள். எனவே யோசித்தான்.

மலையாள மாந்த்ரீகரிடம் போனான். அவர் பிரசன்னம் பார்த்தார். மறைக்காமல் சொன்னார். “என்னவோ நடக்கப் போகிறது. எதோ ஒன்று துரத்துகிறது. முடிந்த வரை ஓடு. ஆனால் தப்பிப்பது கஷ்டம். கவனம்.”

ராமநாதன் தன் மகன் மகளிடம் சொல்லலாமா என்று யோசித்தார். காலேஜுக்குப் போகும் வயசில் இது எதற்கு அவர்களுக்கு? வேறு வழியில்லை, மனைவியிடம் சொல்லி விட வேண்டியதுதான். பக்குவமாக. மிகப் பக்குவமாக.

மனைவியை அழைத்து சூடாக ஒரு டீ கொடுத்தார். உடல்நிலையை விசாரித்தார். புதிய கணவனைப் பார்த்தது போல் அவள் கலவரத்துடன் “என்னங்க?” என்றாள். அவள் நெற்றியில் லேசாக வியர்வை. ராமநாதன் சொன்னார், “ரிலாக்ஸ். ரிலாக்ஸ். கூல்.” ஏசியை பதினெட்டில் வைத்தார். அவள் குளிர்ந்தாள்.

மெல்ல மெல்லச் சொன்னார். மூன்று மாதக் கனவுகளைச் சொன்னார். அவள் கண்கள் அகல விரிந்தன. கனவுகளின் வசீகரத்தில் அவளுக்கு வேர்க்கவில்லையோ. நிம்மதியானார். கடைசியாகச் சொன்னார், “ஒவ்வொரு கனவுலயும் என்னமோ நடக்குது. நம்ம உறவுக்காரங்க சுத்தி நிக்கறாங்க.” அவளது கண்களையே பார்த்தார்.

அவள் ஆச்சரியத்தோடு சொன்னாள், “எனக்கும் இதே கனவுங்க. அப்படியே டிட்டோ. அதே மூணு மாசமா. என்னால நம்பவே முடியலைங்க. எப்படிங்க இது? அடிபட்டு கிடக்கிறது, ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கிறது ஆம்பளைக் கால்ங்க.” ஏசியை மீறி ராமநாதனுக்கு நெற்றியில் வேர்த்தது.

Share

கணிகன்

தென்கரைமுத்து எப்போதாவதுதான் என் அலுவலகத்துக்கு வருவான். சென்னையின் மிகப் பிரபலமான வண்ணத்துப் பூச்சி மேம்பாலத்துக்கு அருகே உள்ள ஒரு பழைய கட்டடத்தில் அலுவலகம். தேசலான காகிதம் காற்றில் மிதந்து வருவதுபோல வரும் தென்கரைமுத்து எங்கள் அலுவலகத்தில் டீ கொண்டு வந்து தரும் பெண்ணையே பார்த்துக்கொண்டிருப்பான். அவள் ஆயிரம் கஷ்டங்களில் அலைந்தபடி இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாள். அவள் மதிக்காததை இவன் மதிக்கவே மாட்டான். அவளையே பார்த்தபடி இருப்பான்.

இன்று தென்கரைமுத்து வந்திருந்தான். கூடவே கருத்த கோடு போல ஒரு பையனும் வந்தான். தென்கரைமுத்து நேரே என் அறைக்கு வந்து எனக்கு எதிரே உட்கார்ந்துகொண்டான். கூட வந்த பையன் கையைக் கட்டி நின்றுகொண்டிருந்தான். “டீ சொல்லவால?” என்ற கேள்வியை தென்கரை கண்டுகொள்ளவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது.

பக்கத்தில் இருக்கும் பையனைக் காட்டி, “இவன் ஜோசியம் சொல்வானாம்” என்றான். ஜோதிடமெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பது தென்கரைக்குத் தெரியும். “எல்லாம் பித்தலாட்டம்” என்று சொல்ல வாயெடுத்தவன், அருகில் நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்து அமைதியானேன். தென்கரை சொன்னான், “பித்தலாட்டம்னுதான சொல்ல வார? அவனுக்கு காது கேக்காது, வாயும் பேச வராது. நீ என்ன வேணா சொல்லலாம்.”

ஆச்சரியமாக அவனைப் பார்த்தேன். பிறகு எப்படி ஜோசியம் சொல்வான்? ஆர்வமாக எங்கள் கண்களையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“எங்க ஆஃபிஸ்ல நாலஞ்சு பேருக்கு பாத்தான். அப்படியே நேர்ல பாத்தாமாரி சொல்லுதாம்ல. அதான் இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். ஜோசியம் பாக்க காசே வேண்டாங்கான். ஒரு டீ போதுங்கான்” என்றான். சிரித்தபடியே, “இப்படித்தாம்ல ஆரம்பிப்பானுவொ. பின்னாடி பரிகாரம்பான், செய்வினைம்பான், எடுக்கணும்பான்” என்றேன். “அப்படி சொன்னா கூட்டி வருவேனால?” என்று தென்கரை சொன்னதும் அந்தப் பையனை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தேன். அதிகபட்சம் 20 வயது இருக்கலாம். கருத்து மெலிந்து கைகளைக் கட்டிப் பணிவாக நின்றவன் ஆர்வமாக எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“மொதல்ல நான் பாக்கேன். எங்க ஆஃபிஸ்ல வெச்சி பாத்து இவன் எதாவது ஏடாகூடமா சொல்லிட்டா பிரச்சினைன்னுதான் இங்க கூட்டியாந்தேன்” என்றவன், தன் கையை அந்தப் பையனிடம் நீட்டினான்.

அந்தப் பையன் அவன் கைகளைக் கூர்ந்து நோக்கிவிட்டு, சைகையில் சொல்ல ஆரம்பித்தான். தென்கரையின் அப்பா கண்டக்டராக இருந்தவர். அம்மாவுக்கு தீராத வியாதி. இவன் ஒரு பையன் மட்டுமே. இவனுக்கும் ஒரு பையன் மட்டுமே. பையனுக்கு எதிர்காலம் கணினி துறையில். எல்லாவற்றையும் சொன்னவன், தென்கரைக்குப் பெண்கள் மேல் இருந்த தீரா மயக்கத்தையும் சொல்ல ஆரம்பித்தான். பெண்கள் போல் சைகை செய்தவன் அவனைப் பார்த்து 4 விரல்களைக் காண்பித்து பின்னர் நான்கு நான்கு விரல்களாக நான்கைந்து முறை காண்பிக்கவும் தென்கரை சொன்னான், “சரிடே.. நிறுத்துடே” என்றவன் என்னைப் பார்த்து, “தாயலி.. கூட இருந்து பாத்த மாதிரியே சொல்லுதானே.”

தென்கரை என் கையைக் காட்டச் சொன்னான். “படுத்தாத.. இதெல்லாம் ஃப்ராடு” என்றேன். “புட்டு புட்டு வைக்கான் கண்ணு முன்னாடியே.. பணம் வேண்டாங்கான். இதுல என்னல ப்ராடு?” என்றவன் என் கையை இழுத்து அவனிடம் நீட்டினான். அந்தப் பையன் என் கைகளைக் கூர்ந்து நோக்கினான். பின்னர் என் கண்களைக் கூர்ந்து நோக்கினான். உடனே பெண் போல சைகை செய்து, கழுத்தில் தாலி கட்டுவது போலவும் சைகை செய்து, ரெண்டு ரெண்டு என்று விரல்களைக் காட்டினான். தென்கரை என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான், “அடப் பக்கி.. ஃப்ராடு நீதாம்ல.”

அவனிடம் இருந்து கைகளை உதறிக்கொண்ட நான், உடனே என் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து, கையெடுத்துக் கும்பிட்டு அவனைப் போகச் சொன்னேன். “எதுக்குல இவ்ளோ பணம்?” என்று சொன்ன தென்கரையை நான் பொருட்படுத்தவே இல்லை. பணத்தை வாங்கிக்கொண்ட அந்தப் பையன் என் கண்களையே கூர்ந்து பார்த்துவிட்டு வெளியே போனான். அவன் போனதும் தென்கரை சொன்னான், “எதுக்குல இவ்ளோ பணம் கொடுத்த? ஏன் இப்படி பதர்ற? உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் சொல்லிட்டா ஆச்சா?”” நான் சொன்னேன், “அவன் ரெண்டு பொண்டாட்டின்னு சொன்னதே கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு மக்கா. அதான்.”

Share

வார்த்தை விளையாட்டு

பக்கத்து வீட்டுக்காரர் அவர். முதல்முறை அவர் பேசியபோது ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்து இரண்டு மூன்று நாள்களில், என்னைப் பார்த்து அவர் சொன்னது இதுதான். ‘பக்கத்து வீட்ல யாரும் திருடலை.’ சிரித்துக்கொண்டே உள்ளே போனார். ஆள் தொளதொளவென கதர்ச் சட்டைதான் அணிவார். ஒரு முடி விடாமல் அனைத்தும் நரைத்திருந்தது. சோடா புட்டி கண்ணாடி அணிந்திருந்தார். முன்னே தெரிந்த இரண்டு பற்கள் பெரிய புளியங்கொட்டை சைஸில் இருந்தன. அதே நிறத்திலும். தலையை நடுவாக வகிடெடுத்துச் சீவி இருந்தார். மொத்தத்தில் எந்த வகைக்குள்ளும் சிக்காதவராக இருந்தார். அன்றுதான் முதலில் அவரைப் பார்க்கிறேன். அவர் பாட்டுக்கு ‘பக்கத்து வீட்ல யாரும் திருடலை’ என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குள் போய்விட்டார். யார் இவர், என்ன சொல்கிறார், யார் வீட்டில் திருடவில்லை, இது என்ன கதை என எதுவும் பிடிபடவில்லை.

பின்னர் கண்டுபிடித்தேன். அவர் எல்லாவற்றையும் வேண்டுமென்றே மாற்றி மாற்றிப் பேசுவாராம். அது ஒரு விளையாட்டு அவருக்கு. திருடி விட்டார்கள் என்றால் திருடலை என்பாராம். திடீரென ‘இன்னும் போஸ்ட் எரியலை’ என்பாராம். அதாவது தெருவில் உள்ள பொது விளக்கை ஈபிக்காரன் அணைக்கவில்லை, இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம். அவர் வீட்டில் இருந்து ஒரு குட்டிப் பெண்ணிடம் பேசிக் கண்டுபிடித்த கதை இதுவெல்லாம்.

எனக்கு வயது 40க்கு மேல். அவருக்கு 65 இருக்கலாம். நான் என்ன சின்ன பையனா என்னிடம் இப்படி விளையாட என்று தோன்றியது. பிறகு இப்படியும் ஒரு கேரக்டரா என்ற சுவாரசியம் வந்துவிட்டது.

அடிக்கடி எதாவது சொல்வார். கரண்ட்டு வந்துட்டு என்பார். கரண்ட் போயிருக்கும். கரண்ட் போயிட்டு என்பார், கரண்ட் வந்திருக்கும். ரசித்துப் பாடிக்கொண்டே ‘பாட்டு சகிக்கலை’ என்பார். மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி என்பார். ‘பத்தினி அவ’ என்பார். எப்படிப் புரிந்துகொள்வது என எனக்குத் திக்கென்று இருக்கும். ‘எங்க வீட்டு கிரண்டர் செமயா ஓடுது, உங்க வீட்ல ஓடலையா?’ என்பார். அதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடம் ஆகும். ஒருமுறை ‘நீங்க ரொம்ப ஒல்லி. நல்லா சாப்பிடுங்க’ என்றார். பதிலுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதையெல்லாம் கவனிக்கக் கூட மாட்டார்.

ஒருதடவை அவரது வீட்டுக் குட்டிப் பெண் என்னிடம் சொன்னாள், ‘ஏந்தான் எங்க அப்பா எல்லாத்தையும் இப்படி மாத்தி மாத்தி பேசுதோ?’ நான் அதிர்ச்சியுடன் கேட்டேன், ‘உங்க அப்பாவா?’ அந்தக் குட்டிப் பெண் சொன்னாள், ‘தாத்தாதான். ஆனா அப்பான்னு சொல்வேன். அவர மாதிரியே’ என்றது அந்த ஆறு வயசுப் பிசாசு. கடுப்பாகிவிட்டேன். குடும்பத்திலேயே எதோ பிரச்சினை போல என நினைத்துக்கொண்டேன்.

நேற்று அதிகாலை அவர்கள் வீட்டில் எதோ சத்தம். அவர்கள் வீட்டில் சத்தம் என்றால் எங்கள் வீட்டில் தெளிவாகக் கேட்கும். ஆனால் இந்த முறை தெளிவில்லாமல் இருந்தது. ஓடிப் போய்ப் பார்த்தேன். அந்தப் பெரியவரின் மனைவியை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு நினைவே இல்லை. பாவமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இன்னும் யாருடனும் அத்தனை பழகவில்லை என்பதால் என்ன ஏது என்று கேட்க கூச்சமாக இருந்தது.

இன்று காலை அவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தேன். வீட்டைப் பூட்டிக்கொண்டு அந்தப் பெரியவர் வேர்க்க விறுவிறுக்க வெளியே வந்துகொண்டிருந்தார். மருத்துவமனைக்குப் போகிறார் போல. அவரிடம் “வீட்ல எப்படி இருக்காங்க?” என்று வாய் தவறிக் கேட்டுவிட்டேன். அவர் பதில் சொல்வதற்குள் பதறியடித்து என்  வீட்டுக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டேன்.

#குறுங்கதை

Share

மாய விளையாட்டு

இப்படி அத்தை வந்து என்னைப் பிடித்துக்கொள்வாள் என்று நான் நினைக்கவே இல்லை. எதோ ஆவி விளையாட்டு, ஆவியுடன் பேசலாம் என்று ஆரம்பிக்கப் போய், நான் பார்த்தே இராத, நான் பிறப்பதற்கு முன்பே செத்துப் போய்விட்ட என் அத்தை வந்து என்னைப் பிடித்துக்கொண்டாள். மனைவி பிரசவத்துக்காக ஊர் போயிருந்த நேரத்தில் அத்தை தினம் தினம் வந்து அன்பாக மிரட்டுவாள், ‘தாயம் விளையாட வா.’

செத்துப் போன அத்தையின் மாமாவை நன்றாகத் தெரியும். அவர் அத்தையின் துராங்காரத்தைப் பற்றிப் பல தடவை சொல்லி இருக்கிறார். இப்போது அத்தை பேயாகவும் ஆகிவிட்டதால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தினமும் இரவு பத்து மணிக்கு அத்தையுடன் தாயம் விளையாடவேண்டும். மூன்று மாதமாக இந்தக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. யார் வீட்டில் என்ன நடந்தாலும் அத்தைக்குக் கவலை இல்லை. இனி முடியாது என்று மெல்ல அத்தையிடம் சொன்னபோது அவளது நிஜ முகத்தைக் காட்டினாள். பயந்து போய்விட்டேன். செத்துப் போன அம்மாவைப் பிடித்து, ‘இது என்னம்மா அத்தை இப்படி படுத்துது?’ என்று கேட்டேன், ‘அவளை ஒண்ணும் பண்ண முடியாதுடா… தாயம்தான விளையாடச் சொல்றா? விளையாடு’ என்று சொல்லிவிட்டாள்.

தாயக்கட்டை ஆட்டத்தில் எனக்குத் தெரியாததே இல்லை என்றாகிவிட்டது. தாயம், பன்னிரண்டு, ஆறு, ஈரஞ்சு, மூணு என்றால் ஒரு காய் எந்தக் கட்டத்தில் இருந்து எங்கே போகும் என்பதை அத்தைப் பேய் சொல்வதற்கு முன்பாக நான் சொல்லிவிடுவேன். தனக்கு நிகராக தாயம் ஆடத் தெரிந்த ஒரே ஆள் நான்தான் என்று அத்தைப் பேய் பாராட்டினாள்.

ஒரு கட்டத்தில் ஆட்டம் சலித்துப் போனது. எரிச்சலாக வந்தது. விடுபடவும் வழி தெரியவில்லை. அம்மா வந்து ‘மாமாவை கேட்டுப் பாருடா’ என்று சொல்லிவிட்டுப் போனாள். மாமா செத்துப் போய் பத்து வருடம் இருக்கும். எப்படியோ மாமாவைப் பிடித்தேன். பாசமாகப் பேசினார். முதலில் ‘நீ வேணா அத்தைகிட்ட உன் பொண்டாட்டிய பேசச் சொல்லி பாரேன்’ என்றார். ‘ஐயோ.. மாசமா இருக்கா.. வாயில்லாப் பூச்சி மாமா’ என்றேன். அத்தைப் பேயின் தாய விளையாட்டு அட்டகாசத்தைச் சொல்லவும், தான் உதவுவதாகச் சொன்னார். கொஞ்சம் பயந்துகொண்டேதான் சொன்னார்.

மாமா பேயை அத்தைப் பேய் எதிர்பார்க்கவில்லை. மாமாவைப் பார்த்ததும் அத்தையின் முகம் மாறிப் போனது. உக்கிரமானது. ‘உன்னை யார் வரச் சொன்னா?’ என்றாள். ‘நீயெல்லாம் ஒரு பொம்பளையா? மருமவன ஏன் இந்தப் பாடு படுத்துத?’ என்று கேட்ட மறு நொடி, மாமாவின் செவுளிலேயே அத்தை விட்ட அறையைப் பார்த்ததும் என் அடி வயிறு கலங்கிப் போனது. மாமா அவமானத்துடன் உட்கார்ந்திருந்தார். மெல்ல சமாளித்துக்கொண்டு, ‘எனக்கும் அடிக்கத் தெரியும். ஆனா வேண்டாம்னு பாக்கேன். தாயம் தாயம்னு அவன போட்டு உசிர எடுக்கியே.. என் கூட ஆடி ஜெயிச்சு காட்டு பாப்பம்’ என்றார். அத்தை வீடதிரச் சிரித்தாள்.

மாமா முதலிலேயே என்னிடம் சொல்லிவைத்த திட்டம்தான் அது. அத்தை வீராவேசமாக ஒப்புக்கொண்டாள். மாமா பத்து எண்களைச் சொல்வாள். அத்தை சரியாக அதை வீசவேண்டும். வீசிவிட்டால் மாமா தோற்றார். இல்லையென்றால் அத்தை தோற்றுவிட்டாள்.

மாமா சொல்ல ஆரம்பித்தார். ‘தாயம்.’ சரியாகத் தாயம் விழுந்தது. அத்தை சிரிக்கவே இல்லை. மாமா அடுத்து சொன்னார், ‘ஈரஞ்சு.’ அத்தை தாயத்தை இடதுகையில் உருட்டினாள். விழுந்தது. ‘பன்னெண்டு ஈராறு தாயம் அஞ்சு மூணு’ என்றார் மாமா. அத்தனையும் வரிசையாக விழுந்தது. அடுத்து மாமா என்னைப் பார்த்தபடியே சொன்னார், ‘ஏழு.’

அத்தை கடுப்பாகி மீண்டும் மாமாவை அறையப் போகும்போது நான் கத்தினேன். ‘இதெல்லாம் மொதல்லயே நீ யோசிச்சிருக்கணும். கை நீட்டத் தெரியுதுல்ல?’ என்றேன். அத்தை கடுப்போடு சொன்னாள், ‘கள்ளாட்ட இது.’ மாமா சொன்னார், ‘போடுதியா? ஓடுதியா?’ அத்தை மௌனமாக உட்கார்ந்திருந்தாள். தோல்வி என்று இதை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மாமா நீண்ட காலப் பழியைத் தீர்த்துவிட்ட பெருமிதத்தில் இருந்தார். நான் அமைதியாக இருந்தேன். அத்தை தாயக்கட்டையை இடது கையில் உருட்டினாள். ஏழு விழுந்தது.

அந்த அறையை விட்டு அலறிக்கொண்டே நான் வெளியே ஓடினேன். அத்தை அடித்த அடியில் மாமா நிச்சயம் மீண்டும் செத்திருப்பார். அதன்பின்பு அத்தையின் தொல்லை இல்லை. மாமாதான் என்னிடம் பேசவேண்டும் என்று துடியாய்த் துடித்தார். நான் பிடிகொடுக்கவே இல்லை. ஒரே ஒரு தடவை என்று கெஞ்சியதால் சம்மதித்தேன். ஒன்று மட்டும் சொன்னார். ‘மருமவனே, அத்தை கல்யாணம் ஆகி வந்தப்ப வாயில்லாப் பூச்சியாத்தாண்டா இருந்தா.’

Share

இரண்டு தோட்டாக்கள்

ஒரு இரவு மட்டும் துப்பாக்கி கிடைக்கும். போலிஸின் துப்பாக்கி. குண்டுகள் தனியே தரப்படும். யாரைச் சொல்கிறார்களோ அவர்களைக் கொலை செய்யவேண்டும். மீதி குண்டுகளையும் துப்பாக்கியையும் ஒழுங்காக போலிஸிடம் கொடுத்துவிடவேண்டும். மற்றதை எல்லாம் போலிஸ் பார்த்துக் கொள்ளும். எளிய வேலை. தல குணாதான் நம்பர் 1 ஆள். நம்பகமானவன். அடுத்து டமால் குமார். அன்று ஒரு துப்பாக்கியும் இரண்டு குண்டுகளும் தல குணாவுக்குத் தரப்பட்டன. ஆனால் பட்சி பறந்துவிட்டது. போலிஸுக்குச் சொல்லிவிட்டு துப்பாக்கியுடன் குடிக்கப் போனான். அங்கே டமால் குமார் குடித்துக்கொண்டிருந்தான். இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பேசத் தொடங்கினார்கள். போதையில் குமார் புலம்பத் தொடங்கினான். ஒரே ஒப்பாரி. கோபம். காறி காறித் துப்பினான்.

‘பொம்பளைங்கள நம்பக்கூடாதுரா குணா. நல்லா தெரியும் குணா, அவளுக்கு இன்னொருத்தன் கூட தொடர்பு இருக்குன்னு. ஒவ்வொரு நாளும் துப்பாக்கியோட அவள போட்ரணும்னுதான் போவேன். ஆனா முடில. நெஜமா லவ் பண்ணேன் குணா அவள. துரோகம் பண்ணிட்டா.. இன்னைக்கி விட மாட்டேன். இன்னையோட முடிஞ்சது அவ கதை. அவ கண்ணை பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு எரியுது. ஒண்ணுமே நடக்காத மாதிரி அப்படியே அவ விரலால என் உடம்பெல்லாம் வருடுவா பாரு. ச்சை தூ.. ஒரு மாச போராட்டம் இன்னைக்கு முடியப் போகுது குணா.. இன்னைக்கு போடறேன். உன்கிட்ட பேசினதும் இன்னும் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருக்கு. ஓத்தா.. நாளைக்கு அவ செத்தா. ஆம்பளைக்கு துரோகம் பண்ற பொம்பளைகிட்ட என்னடா கருணை?’ என்றான்.

குணா அமைதியாக இருந்தான். தன் வீட்டுக்குப் போனான். தன் மனைவியின் கண்ணைப் பார்த்தான். அவனை வருடும் விரல்களைப் பார்த்தான். அவன் உடல் பற்றிக்கொண்டு வந்தது. குமார் சொன்னது காதில் ஒலித்தது. ‘சாவுடி.’ கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டான். ஒரு குண்டில் அவள் பொத்தெனச் சரிந்தாள். அப்படியே அடங்கிப் போனாள். அவள் அருகே உட்கார்ந்து கொண்டு அழுதான். ‘எப்படி லவ் பண்ணேண்டி உன்ன.. ஙொம்மாள..’ துப்பாக்கியுடன் குமாரைப் பார்க்க ஓடினான்.

குணாவைப் பார்த்ததும் குமார் சொன்னான், “முடில தல. ரொம்ப லவ் பண்ட்டேனா.. நாம மட்டும் என்ன ஒழுங்கா சொல்லு? ஏரியால எவள‌ விட்டுவெச்சோம் சொல்லு? என்னவோ நேரம் தப்பு பண்ணிட்டா.. சொன்னா கேட்டுக்கப் போறா… ஏன் அவள போடணும்? அவனை போட்டுட்டா? என்னன்ற? எனக்காக அவனை நீயே போடு குணா. நீதான் தல போட்ற” என்றான்.

அதற்குப் பின் டமால் குமார் பேசவே இல்லை. போலிஸிடம் வெற்றுத் துப்பாக்கியை மட்டும் குணா கொடுத்தான்.

இரட்டைத் தோட்டாக்கள் கதைச் சுருக்கத்தைப் படித்து முடித்தார் தரணீதரன். சாராய பிஸினஸ். அரசியல் செல்வாக்கு. ஆள் பலம். சுற்றி எப்போதும் ரௌடிகள். திரைப்படத் தயாரிப்பாளர். தன் மேஜை ட்ராயரில் இருந்து துப்பாக்கியை எடுத்து அதில் இருக்கும் குண்டுகளை எல்லாம் அன்லோட் செய்து குப்பைக் கூடையில் போட்டார். ‘தாயோளிங்க, வீட்டுக்குள்ள இருந்து பாத்த மாதிரியே ஸ்க்ரிப்ட் எழுதுறானுங்க.. மொதல்ல இவனுங்களை போடணும்’ என்றார்.

Share