Archive for தொலைக்காட்சி

ஜனம் டிவி

ஜனம் தொலைக்காட்சி (மலையாளம்) – தென்னிந்திய அளவில் இது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு. இந்திய அளவில்கூட இருக்கலாம். ரிபப்ளிக் தொலைக்காட்சியையும் விட ஒரு படி மேல். ரிபப்ளிக்கை முழுமையாக நம்பிவிட முடியாது என்னும் சந்தேகம் எப்போதும் எனக்குண்டு. ஜனம் டிவியில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஆதரவாகக் குரல்கள் தீவிரமாகக் காதில் விழும்போது ஆச்சரியமாக உள்ளது. திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனின் தொலைக்காட்சி இது.

தமிழில் இப்படி ஒரு தொலைக்காட்சி அவசியம். அனைத்துச் செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வலதுசாரிக்கு எதிராக இருக்கும்போது ஆதரவுக் குரல் ஒன்றாவது வேண்டும்.

இன்று புதிய தொலைக்காட்சி ஆரம்பிப்பவர்கள் மீண்டும் வலதுசாரி எதிர்ப்புக் குழுவில் ஐக்கியமாகி, தங்களுக்கென்று ஒரு பார்வையாளர் கூட்டத்தை உருவாக்கத் திணறுகிறார்கள். ஓர் உருப்படியான வலதுசாரித் தொலைக்காட்சி வருமானால் எடுத்த எடுப்பில் 20 சதவீதப் பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். ஜனம் டிவி ஓர் உதாரணம். ஆனால் அப்படி ஆரம்பிக்க முடியாத அளவுக்கு இங்கே கருத்து ரீதியான ஆதிக்கம் நிலவுகிறது. இதை எதிர்த்த ஒற்றை வெடிப்பு போதும். அதை நிகழ்த்தும் தொலைக்காட்சிக்கு, முதலாவது என்னும் தகுதி தரும் செல்வாக்கு எப்போதும் நீடிக்கும். அதை அறுவடை செய்யப்போகும் புதிய வரவு எது?

Share

தொலைக்காட்சி சானல்களுக்கு தனித்தனி விலை

ஒவ்வொரு சானல்களுக்கும் தனித்தனி விலை நிர்ணயம் என்பதால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியவில்லை. முதலில் கேபிள் வழியே பார்த்தபோது மாதமே 100 ரூ வரைதான் ஆனது. டிஷ் வழி பார்க்க ஆரம்பித்தபோது 170 ரூ முதல் 250 வரை ஆனது. இப்போது இப்படி ஒவ்வொரு சானலுக்கும் ஒரு தனி விலை என்றால் பல சானல்களைக் கை கழுவவேண்டியதுதான். ஏன் இந்த விதி என்பதற்கு ட்ராய் என்ன சொல்கிறது? இப்படிச் செய்வதன் மூலம் போலியான பரப்புரைகளைக் குறைக்கலாம் என்றா? எந்த சானல்களை எடுப்பது, விடுப்பது என்று குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளருக்கு ஏற்படும்.

நான் வீட்டில் டிவியை இப்படியாகப் பார்க்கிறேன். ஆங்கில செய்தி சானல்கள், தமிழ்ச் செய்தி சானல்கள் எப்போதாவது, மீதி நேரம் பெரும்பாலும் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பது குழந்தைகளுக்கான சானல். கிரிக்கெட் 50 ஓவர் மேட்ச் இருந்தால் அதைப் பார்ப்பேன். ஆதித்யா மற்றும் சிரிப்பொலி அடிக்கடி கொஞ்சம் நேரம் பார்ப்பேன். மற்றபடி டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருநிமிடம் கூடப் பார்ப்பது இல்லை. ஆனால் இதையே அடிப்படையாக வைத்து எல்லாத் தமிழ் சானல்களையும் சப்ஸ்க்ரைப் செய்யாமல் இருந்துவிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மலையாள சானல்களும் தேவை! அப்படியானால் என்ன செய்வது?

சன் டிவிக்குத் தனியே 25 ரூ என்பதெல்லாம் தண்டம். விஜய் டிவியின் சானலுக்கு 25 ரூ என்பது இன்னொரு தண்டம். சன் டிவியின் சான்லகளில் எதாவது தேவை என்றால் சன் நெக்ஸ்ட்டில் பார்த்துக்கொள்ளலாம். விஜய் டிவியில் எதுவுமே பார்ப்பது இல்லை என்பதால் அது தேவையில்லை.

ஒருவழியாகத் தொகுத்தால்:

* குழந்தைகளுக்கான சானல்கள் எதாவது இரண்டு.
* ஆதித்யா மற்றும் சிரிப்பொலி
* புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 18, நியூஸ் 7, பாலிமர் செய்திகள்.
* என் டி டிவி, டைம்ஸ் நௌ, ரிபப்ளிக், இண்டியா டுடே.
* ஏஸியா நெட், சூர்யா, ஏஸியாநெட் முவீஸ், ஜனம் டிவி.

தலைல துண்டுதான் போடணும் போலயே.

Share

சன் டிவியும் சனிக்கிழமையும்

சன் டிவியிடம் தோற்றுவிட்டேன். கையேந்தி மடிப்பிச்சைதான் கேட்கவேண்டியிருக்கிறது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும்தான் நிம்மதியாக இருந்தோம். கடந்த இரண்டு நாள்களாக நிம்மதியில் விழுந்தது இடி. இனி சனி அன்றும் மெகா தொடர்கள் உண்டாம். ஒவ்வொரு சீரியலிலும் நடிகர்கள் வந்து, நாங்க சனிக்கிழமையும் வருவோமே பெப்பே என்கிறார்கள். மிரண்டு போயிருக்கிறேன்.

இருப்பது சிங்கிள் பெட்ரூம் வீட்டில். எனவே மெகா தொடர்கள் பார்ப்பவர்கள் பார்க்கட்டும் என்று வேறு எங்கும் செல்லவும் முடியாது. என் அம்மாவை அடக்கி வைக்கவும் முடியாது. ’காசு கொடுத்துதான் எங்கயும் போகமுடியாது. வீட்ல நேரம் போகப் பார்க்கறதும் ஒனக்கு பொறுக்கலையா?’

என் மாமாவுக்கு காது கேக்காது. எனவே அவர் வீட்டில் அவர் மெகா சீரியல் பார்க்கும்போது டிவி சத்தத்தை மினிம் 70ல் வைத்துத்தான் கேட்பார். அந்தத் தெருவே ம்யூட் செய்துவிட்டு இந்த வசனத்தைக் கேட்டுக்கொண்டே அவரவர்கள் வீட்டில் அதே சீரியலைப் பார்க்கலாம். 

இதிலெல்லாம் இருந்து விடுபடுவது சனிக்கிழமைகளில்தான். அதற்கும் உலை வைக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். தயவுசெய்து இந்தக் கொலை முயற்சியை உடனே கைவிடுங்கள். இது நல்லதல்ல. ப்ளீஸ். இதற்குமேல் அழுதுடுவேன்.

Share

நாதஸ்வரம் – மெகா தொடர்

தேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.

சன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.

திடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது? இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே!

இப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.

தன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமும் போய்ச் சேர்ந்துவிடும்.

இசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும்.

திருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்?

ஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்?

இது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல!) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.

இனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Share

டெல்லி கணேஷ் செய்யும் கொடுமை

டெல்லி கணேஷ் தமிழின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். பழங்கால துணை நடிகர்கள் போல, இக்காலத்தில் பெரிய நடிகர் பட்டாளம் இல்லை என்றாலும், அக்காலத்தில் மிக சிறப்பாக நடித்த பல்வேறு நடிகர்களுக்கு இணையாக மெச்சத்தக்க ஒரு நடிகர் டெல்லி கணேஷ். அவர் நடித்த எத்தனையோ படங்களில் அவரது அட்டகாசமான, யதார்த்தமான நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். இப்போது அவர் மெகா சீரியலில் நடிக்கும்போதும், அவர் மட்டும் தனித்துத் தெரிவதைப் பார்த்திருக்கிறேன். திருப்பாவை, கஸ்தூரி, செல்லமே என எல்லாத் தொடர்களிலும் இவரது நடிப்பு மட்டும் தனிப்பட்ட பாதையில் யதார்த்தமாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

நமக்கு ஒருவரை இத்தனை பிடித்துவிட்டால் கடவுளுக்குப் பொறுக்காது போல.

விஜய் டிவியில் ஞாயிறு காலை பத்து மணிக்கு வாங்க பேசலாம் என்றொரு நிகழ்ச்சி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை நான் தவிர்த்துவிடுவேன். ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு தடவை பார்த்து நொந்து போயிருந்தேன். சரி, டெல்லி கணேஷுக்கு இது ஒரு திருஷ்டிப் பொட்டு என நினைத்துக்கொண்டு மறந்துவிட்டேன். இன்று மீண்டும் அதே நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.

ஒய்.ஜி. மகேந்திராவின் பேட்டி. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் டெல்லி கணேஷும் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்). புஷ்பவனம் குப்புசாமி என்னவோ முதலில் பாடுகிறார். ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார்தாசன், புஷ்பவனம் குப்புசாமி மூவருமே அலட்டல் மன்னர்கள் என்பது நாம் அறிந்ததே. இதில் பெரியார் தாசன் இப்படி எல்லாம் பேசிவிட்டு எப்படி பேராசிரியர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறார் என்பது தெரியவில்லை. சரி, அவருக்கு முடிகிறது சொல்லிக்கொள்கிறார். புஷ்பவனம் எப்போதுமே அலட்டல் என்பதால் அதிலும் பிரச்சினையில்லை. ஒய்.ஜி. மகேந்திரா என்றைக்குமே அதீத நடிப்பையும், அசிங்கமான முகபாவத்தையும், அலட்டலான பேச்சையும் கலை என்று நினைத்துக்கொண்டு வளர்ந்தவர். சிவாஜி கணேசன் எனக்கு குரு என்று சொல்லி அவரையும் கேவலப்படுத்துபவர். தான் கமலைவிட சிறந்த கலைஞன் என்று தனக்குத் தானே நினைத்துக்கொள்பவர். அவரைப் பற்றிப் பேச எனக்கு ஒனறுமே இல்லை.

ஆனால் இந்த டெல்லி கணேஷ்?

ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார் தாசன், புஷ்பவனம் மூவருமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக அவர் அலட்டும் அலட்டல் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எப்பேற்பட்ட கலைஞனின் வீழ்ச்சி இது? அதிலும் மிகவும் அசிங்கமாக சில சமயங்களில் அவர் பேசும்போது, அதை நகைச்சுவை என நினைத்துக்கொண்டு மற்றவர்கள் சிரித்து அந்தக் காட்சிக்கு நடிக்கும்போது பெரும் குமட்டல் ஏற்படுகிறது.

ஐபிஎல் பற்றிப் பேசும்போது, நடிகைகளைக் கட்டிப் பிடித்து உம்மா கொடுக்கலாம் என்றெல்லாம் டெல்லி கணேஷ் பேசுகிறார். முதலிலேயே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு நடிப்பதாக அவருக்குத் தோன்றலாம். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு நேர்காணலாகத்தான் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் டெல்லி கணேஷ் சொல்லும் ஆபாசமான வார்த்தைகள், கமெண்ட்டுகளெல்லாம் எத்தனை அருவருப்பாக உணரப்படுகிறது என்பதனை அவர் தெரிந்துகொள்ளவில்லை போல.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ஒய்.ஜி. மகேந்திரா சரோஜாதேவியுடனான பேட்டியில், இதே போல மிக ஆபாசமாகப் பேசினார். ஏதோ ஒரு படத்தில் மலைப்பாம்பு சரோஜா தேவியைப் பிண்ணிப் பிணைவதாக ஒரு காட்சி. அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சரோஜாதேவி. சம்பந்தமே இல்லாமல் ஒய்.ஜி. மகேந்திரா, ஐயோ அந்த மலைப்பாம்பாக நான் இருந்திருக்கக் கூடாதா என்று சொன்னார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அந்தப் பேரிளம்பெண் சரோஜா தேவி அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். அதே ஒய்.ஜி இன்று பேட்டி கொடுக்கிறார். அவரிடம் கேள்வி கேட்கும் டெல்லி கணேஷ் இதே அளவுக்கு கேள்வி கேட்கிறார் நகைச்சுவை என நினைத்துக்கொண்டு. பின்பு அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும்?

அதில் ஒய்.ஜி தன் அப்பாவைப் பற்றிச் சொல்லும் செய்திகளும், அதற்கு ஒத்து ஊதிக்கொண்டு டெல்லி கணேஷ் சொல்லும் செய்திகளும், மற்றவர்களால் மிக எளிதாக, ‘ஜாதித் திமிர்’ என்று சொல்லக்கூடிய அளவில்தான் உள்ளது என்பதையாவது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. மற்றவர்களின் பெயரைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இவர்களே அவர்களை மீண்டும் ஜாதியக் கூண்டில் அடைத்துவிடுவார்கள் போல.

செல்லமே – ராதிகாவின் மெகா தொடரில் டெல்லி கணேஷ் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த துக்ளக் இதழில் டெல்லி கணேஷ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் வில்லனாக நடிப்பது பலருக்குப் பிடிக்கவில்லை என்றும், இனிமேல் அதைச் செய்யமாட்டேன் என்றும் எழுதியிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. டெல்லி கணேஷ் இப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வில்லனாக நடிப்பது அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளக்கூடியதா என்ன? இப்போது அவர் செல்லமே நாடகத்தில் வருகிறாரா இல்லையா எனத் தெரியவில்லை.

இப்படி சறுக்கிக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ், தனது நடிப்பின் தரத்தைப் பற்றித் தானே அறிந்திருக்கவில்லையோ என்று பரிதாபப்படத் தோன்றுகிறது. அவரது நடிப்பு தமிழ் உலகம் கொண்டாடவேண்டிய ஒன்று. இது போன்ற சறுக்கல்களில் இருந்து விலகி, அவர் தனது நடிப்பில் கவனம் செலுத்துவது அவருக்கும், தமிழ் திரை உலகுக்கும் நல்லது.

http://www.youtube.com/watch?v=gPOrTmpul0s
இந்த சுட்டியில் சில வாங்க பேசலாம் நிகழ்ச்சிகளின் ஒளித்துண்டுகள் உள்ளன. தலையில் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் இதனைப் பார்க்கலாம்.

Share

மக்கள் தொலைக்காட்சியில் பரன் – இரானியத் திரைப்படம்

க்கள் தொலைக்காட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. உலகத் திரைப்படங்கள் வரிசையில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. எந்த திரைப்படங்கள் என்று ஒளிப்பாகிறது என்று கண்டறிவது பெரிய சங்கடமாக இருக்கிறது. தொலைபேசியில் கேட்டால் ‘மக்கள் பாருங்க, அதுல படம் எப்ப போடுவோம்னு சொல்லுவோம்’ என்கிறார்கள். இதனால் முக்கியமான இந்தப் படங்களைப் பார்க்காமல் போக நேரிடுகிறது. நேற்று சங்கப்பலகை பார்த்தபோது இந்தப் படம் பற்றிய அறிவிப்பைச் செய்தார்கள். பகிர்ந்துகொள்கிறேன்.

25-ஆம் தேதி இரவு 8மணிக்கு (கிறிஸ்துமஸ் அன்று) மஜித் மஜிதியின் பரன் திரைப்படம் தமிழ் சப்-டைட்டிலோடு ஒளிபரப்பாகிறது.

நான் பரன் படம் பற்றி எழுதிய ஒரு பார்வை – http://nizhalkal.blogspot.com/2007/11/majid-majidis-baran-iranian-movie.html

Share

ஏக் தின் அச்சானக் – ஒருநாள் திடீரென்று

மக்கள் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் நேற்று மிகச்சிறப்பான ஒரு திரைப்படத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நேற்று மதியம் தற்செயலாக மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘ஏக் தின் அச்சானக்’ திரைப்படம் பற்றிய முன்னறிவிப்பு கண்ணில்பட்டது. அப்போதே திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். என்னால் அத்திரைப்படத்தை இருபது பேர் பார்த்திருப்பார்கள்.

ரு மழைநாளில் வெள்ளம் மிகுந்த சூழ்நிலையில் பேராசிரியர் (ஸ்ரீராம் லகூ) ஒருவர் வீட்டை விட்டுப் போகிறார். அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் அவரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அவரைத் தேடுகிறார்கள். அந்தப் பேராசிரியர் அன்றிரவு மட்டுமல்ல, பின் வீடு திரும்பவே இல்லை. அப்படியான சூழலில், வீட்டிலிருக்கும் பேராசிரியரின் மனைவி (உத்தரா போக்கர், இவருக்கு இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது,) மகன், மகள்கள் மீண்டும் மீண்டும் பேராசிரியரை நினைப்பதன் மூலமும் அவரைப் பற்றி தர்க்கிப்பதன் மூலமும் அவரை மறு உருவாக்கம் செய்கிறார்கள். பேராசிரியரைப் பற்றி அவர்களின் மதிப்பீடுகள் மாறுகின்றன அல்லது உறுதி செய்யப்படுகின்றன. சில நாள்களில் தந்தையின் நினைவு தினசரி நிகழ்ச்சியாகிவிட, அப்பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள். அவரவர்கள் அவரவர்களின் யதார்த்த உலகுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். பேராசிரியரின் மனைவியால் அத்தனை சீக்கிரம் அவரின் நினைவிலிருந்து மீளமுடியவில்லை. எப்போதும் பேராசிரியரின் நினைவோடே இருக்கிறாள்.
Thanks:mrinalsen.orgபேராசிரியரின் புத்தக அலமாரியிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பில், அவர் ‘அபர்ணா அபர்ணா’ என்று கிறுக்கியிருப்பது தெரியவருகிறது. அபர்ணா (அபர்ணா சென்) பேராசிரியரின் மாணவி. மிகுந்த புத்திசாலியான பெண்மணி என்று பேராசிரியர் பலமுறை அவளைப் பாராட்டியிருக்கிறார். பேராசிரியரின் மனைவியின் எண்ணங்கள் தறிகெட்டு ஓட, பேராசிரியர் காணாமல் போனதற்கு இதுவே காரணம் என்கிற ஓர் எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றுவிடுகிறது. பேராசிரியரின் புத்தகங்கள் பல ஒரு கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படுகிறது. அபர்ணா ஒருசமயம் வீட்டுக்கு வர, தன் மீது படிந்திருக்கும் சந்தேக நிழலை நினைத்து வருந்தி, தான் அத்தகையவள் அல்ல என்று சொல்லி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பேராசிரியரின் மனைவிக்குக் குழப்பம் மிகுகிறது. இதற்குள்ளாக அடுத்த ஆண்டின் மழை பெய்யத் தொடங்குகிறது. தங்களது தந்தை வீட்டைவிட்டுச் சென்று ஓராண்டு கழிந்துவிட்டதை நினைத்துக் கொள்கிறார்கள் அவரின் மகனும் மகள்களும். அப்போது தங்கள் தந்தை மீதான தங்கள் எண்ணங்கள் எவ்வளவு உண்மையானவை என்று மீண்டும் உறுதிசெய்கிறார்கள். அந்தநேரத்தில், பேராசிரியரின் மனைவி, பேராசிரியர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக அவளிடம் சொன்னதைச் சொல்கிறார்: ‘வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையை மீண்டும் வாழமுடியாது என்பதே.’

பேராசிரியர் ஏன் காணாமல் போனார் என்பது பற்றிய சரியான தீர்வு படத்தில் சொல்லப்படவில்லை. இதுவே படத்தை யதார்த்ததிற்கு மிக அருகில் கொண்டுவருகிறது. தன் தந்தையைப் பற்றி நீதா (பேராசிரியரின் மூத்த மகள், ஷபனா ஆஸ்மி) ஒரு காட்சியில் கடுமையான விமர்சனத்தை வைக்கிறாள். தந்தையின் எண்ணத்தில் கழிந்துகொண்டிருக்கும் நாள்களிலிருந்து மீண்டு, அவள் தன் காதலுடனும் படத்திற்குச் செல்கிறாள். அன்றைய இரவு, அவள் தந்தையின் மீதான கடுமையான விமர்சனத்தை வைக்கிறாள். பேராசிரியரான தந்தை சாதாரண மனிதர் மட்டுமே என்றும் அவரைத் தாங்கள்தான் வித்தியாசமானவர் என எண்ணச் செய்துவிட்டோம் என்று கூறுகிறாள். அடுத்த நொடியிலேயே தன் தந்தையைப் பற்றி இப்படி மதிப்பிட்டுவிட்டதற்காக அழுகிறாள். உண்மையில் தந்தையின் நினைவுகளை மீறி இயல்பான வாழ்க்கையில் கலந்துவிட்டது அவளுக்கு ஒரு குறுகுறுப்பைத் தந்துவிடுகிறது. அதன்வழியேதான் அவள் அவளது தந்தையைப் பற்றிய உண்மையான பிம்பத்தை அடைய முயற்சி செய்கிறாள். அது அவளை மேலும் அதிர்ச்சியடையச் செய்கிறது.

பேராசிரியர் தனது மகன் மிகப்பெரிய ஒரு ஆளாக வருவான் என்றும் தன்னைப் பின்பற்றி வாழ்வான் என்றும் எதிர்பார்க்கிறார். நிகழ்வில் அவரது மகன் படிப்பில் ஆர்வமற்றவனாகவும் வியாபாரத்தில் நாட்டம் உள்ளவனாகவும் இருக்க, பெரிய ஏமாற்றத்திற்குள்ளாகிறார் பேராசிரியர். அவரது மகன் அமர் கேட்கும் தொகையைத் தருவதற்கு முன்பாக அவர் பேசும் பேச்சில் எரிச்சலடையும் மகன் தனக்குப் பேராசிரியரின் பணம் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறான். அதைக் காணும் பேராசிரியரின் மனைவி கடும் கோபத்தில் பேராசிரியரிடம் அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறாள். இது பெரிய அளவில் பேராசிரியரைத் தகர்க்கிறது. குடும்பத்திற்கெனவும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றியும் பேராசிரியர் என்றைக்குமே அக்கறை கொண்டதில்லை என்கிற குற்றச்சாட்டு அவரை மிகவும் கலவரப்படுத்துகிறது.

பேராசிரியரைப் பற்றி அவரது மூத்த மகளும் அவரது மனைவியும் வைக்கும் விமர்சனங்களே மிகமுக்கியமானவை. ஏனென்றால் அவர்கள் இருவர் மட்டுமே பேராசிரியருடன் நெருக்கமான ஒரு பிணைப்பைக் கொண்டிருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

அபர்ணா பேராசிரியரின் மாணவி. எப்போதும் படிப்பு, எழுத்து எனக் கிடக்கும் பேராசிரியர் ஒரு புத்திசாலி மாணவியிடம் ஈர்ப்புக் கொள்கிறார். இந்த ஈர்ப்பு தவறான கண்ணோட்டத்தில் எழுவதல்ல. ஒரு பேராசிரியருக்கும் மாணவிக்குமான ஈர்ப்பு. அபர்ணா பின்னிரவுகளில் கூட பேராசிரியரை அழைத்துப் பேசுகிறாள். ஒரு காட்சியில் பேராசிரியர் எழுதிய கட்டுரைக்கு எழும் எதிர்வினை குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பேசிக்கொள்கிறார்கள். இப்படிப் போகும் இவர்கள் உறவு, பேராசிரியர் கிறுக்கியிருக்கும் “அபர்ணா அபர்ணா” என்ற குறிப்பின் வழியே பல சந்தேகங்களை எழுப்பிவைக்கிறது. யோசித்துப் பார்த்தால், பேராசிரியருக்கு அபர்ணாவின் மீது ஏதோ ஒரு வகையான இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதைக் கவனிக்கலாம். அது காமம் என்றோ அன்பு என்றோ குறுகலான ஒரு அடைப்பில் அடைபடக்கூடியதல்ல. அதையும் தாண்டிய ஈர்ப்பு அது. பேராசிரியரியரின் மனைவி, தன்னிடம் பேராசிரியர் சொன்னதாகக் கடைசியில் சொல்லும் வாக்கியங்கள், இந்த ஈர்ப்பைப் பற்றி அதிகம் யோசிக்கவைக்கின்றன.

சாதுக்களிடம் மக்கள் கொள்ளும் ஈர்ப்புப் பற்றியும் மிக மேலோட்டமான விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குநர். ஒரு சாதுவைப் பார்க்கக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒரு நோயாளிக்கு உடல்நலம் மேலும் மோசமாகிறது. இக்காட்சி சாதுக்களின் மீதான முட்டாள்தனமான நம்பிக்கையைப் பற்றிக் கேலி செய்கிறது. அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒரு மனிதர் காணாமல் போவதும் அவரைப் பற்றிய நினைவுகளும் எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்துப் பார்க்கலாம். ஒரு கட்டத்தில், இனி பேராசிரியர் திரும்பி வரமாட்டார் என முடிவு கட்டி, அவரது புத்தகங்களை ஏதேனும் கல்லூரிக்குக் கொடுத்துவிட்டால் அது சிறந்த முடிவாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்று நினைத்து அவரது புத்தகங்களைக் கல்லூரிக்குக் கொடுக்கிறார்கள். அப்போது பேராசிரியரின் மனைவி மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறார், “இனி நான் யாருடன் வாழ்வேன்? எதனுடன் வாழ்வேன்?” உண்மையில் பேராசிரியரின் மனைவியின் வாழ்க்கைப்பிடிப்பிற்கு அப்புத்தகங்கள் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அல்லது பேராசிரியர் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. பேராசிரியர் இல்லாத நிலையில் அப்புத்தங்களுடனான அவளது பரிவு தேவையான ஒன்றாகிறது. ஆனாலும் கடைசியில் புத்தகங்களைக் கல்லூரிக்குத் தரச் சம்மதிக்கிறாள்.

பேராசிரியர் காணாமல் போய் சில தினங்கள் கழித்து, அவளது மூத்த மகள் மாடியிறங்கி வரும்போது, எதிர்ப்படும் ஒரு கிழவர் கேட்கிறார், “எதாவது விஷயம் தெரிஞ்சதா?” அவருக்கு அவரது இயல்பான வாழ்க்கையில் ஒன்றாகிறது இக்கேள்வி. அதுமட்டுமில்லாமல், அவரது மூத்த மகள் இன்னொரு காட்சியில் சொல்கிறாள், “அப்பா காணாமல் போனதற்கு நாம்தான் காரணம் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்.” சமூகத்தின் தெளிவான வரைபடம் இது. இதை ஒன்றிரண்டு காட்சிகளிலும் மிகக் கூர்மையான வசனங்களிலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார் மிருணாள் சென்.

வசனங்கள் மிகக் குறைவாகவும் ஆழமாகவும் அமைந்து படத்திற்கு அழகு சேர்க்கின்றன. பேராசிரியரின் மனைவியும் அவரது மகனும் சொல்லும் வசனங்கள் பேராசிரியரின் பிம்பத்தை வெகு சீக்கிரத்தில் கட்டமைத்துவிடுகின்றன. “என்னைக்கு சொல்லிட்டுப் போனார் இன்னைக்கு சொல்லிட்டுப் போறதுக்கு” என்கிறாள் பேராசிரியரின் மனைவி. மகன் அமர், “அவர் என்னைக்குமே நம்மைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை” என்கிறான். மூத்தமகள் நிதா கூட தந்தையைப் பற்றிப் புது விமர்சனம் ஒன்றை – அதற்காக அவள் வருத்தப்பட்டாலும் – கண்டடைகிறாள். இவை எல்லாமே மிகச் சொற்பான வசன பிரயோகங்களில் நிழந்துவிடுகின்றன.

நினைவோடை உத்தியில் கட்டமைக்கப்படும் பேராசிரியரின் பாத்திரம் எவ்விதச் சிக்கலுமில்லாமல் நேர்த்தியாகக் கட்டமைப்படுகிறது. நினைவோடை உத்தியை எங்குத் தொடங்கி எப்படி முடிக்கவேண்டும் என்பதில் இயக்குநரின் மேதமை தெரிகிறது. இசையும் ஒளிப்பதிவும் எவ்வித இடையூற்றையும் ஏற்படுத்தாமல் படத்தோடு ஒன்றாகப் பயணிக்கின்றன.

இரண்டு விஷயங்கள் தெளிவில்லாமல் விடப்பட்டுள்ளன. தந்தை காணாமல் போன மறுநாள் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரோ கதவைத் தட்டுகிறார்கள். மூத்த மகள் நிதா சென்று கதவைத் திறக்கிறாள். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் என்ன, என்ன ஆச்சு என்று பதறுகிறார்கள். கதவை மூடிவிட்டு உள்ளே வரும் நிதா, “நான் எதையாவது உங்க கிட்ட மறைக்கிறேனா, என்கிட்ட ஏன் சொல்லலை” என்கிறாள். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பது புரியவில்லை. இன்னொன்று, பேராசிரியரின் மாணவி அபர்ணா சம்பந்தப்பட்டது. பின்னிரவுகளில் கூட பேராசிரியரை அழைத்து அவருடன் பேசும் இயல்புள்ளவள் அபர்ணா. பேராசிரியர் காணாமல் போன பிறகு, அவள் ஏன் அவரைத் தொடர்புகொள்ளவே இல்லை என்பது தெளிவாக்கப்படவில்லை. இத்தனைக்கும் அபர்ணாவுக்குச் சிறப்பான வேலை கிடைக்கிறது. வேலை நிமித்தமாக இடம் பெயர்கிறாள். திருமணமும் நடந்துவிடுகிறது. இவ்வளவு முக்கியமான விஷயங்கள் அபர்ணா வாழ்க்கையில் நடந்திருக்க, அவள் ஏன் பேராசிரியரைச் சந்திக்க வரவே இல்லை என்பது தெளிவாக்கப்படவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே வருகிறாள். அவள் எடுத்திருக்கும் புகைப்படங்களைத் தந்துவிட்டுப் போகிறாள். அதன்பின் ஏன் அவள் பேராசிரியரைப் பார்க்க முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகக் காட்டப்படவில்லை.

ஒரு சிறந்த படத்தைத் தந்ததற்காக மக்கள் தொலைக்காட்சியை மீண்டும் பாராட்டவேண்டியிருக்கிறது. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி.

ஹிந்தி படத்திற்குப் போடப்பட்ட சப்-டைட்டில்கள் சில சரியான விளக்கங்களைத் தாங்கியதாக இல்லை. இன்னும் கவனம் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த முயற்சியே பெரிதும் பாராட்டப்படவேண்டியது என்பதில் இரண்டாம் கருத்தில்லை.

[இந்தப் படம் பற்றிய எனது முந்தைய பதிவு மிருணாள் சென்னின் “ஏக் தின் அச்சானக்” – மக்கள் தொலைக்காட்சி அந்தப் பதிவு திடீரென்று காணாமல் போகிறது. எனது ப்ளாக்கரிலும் வருவதில்லை. அதனால் அது இங்கே சேமிக்கப்படுகிறது.]

இன்றிரவு 8.00 (26.11.2006) மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஏக் தின் அச்சானக் என்கிற ஹிந்தித் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இயக்கியவர் மிருணாள் சென்.

தமிழ்த் தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் வணிகப் படங்களையே தந்து கொண்டிருக்க (இன்று எத்தனையாவது முறையாகவோ சன் டிவி தில் திரைப்படத்தைத் திரையிடுகிறது), முன்பெல்லாம் தூர்தர்ஷனில் பார்க்கக் கிடைத்துக்கொண்டிருந்த கலைப்படங்கள் மற்றும் விருதுப் படங்கள் காணக் கிடைக்காததாகின. இப்போது தூர்தர்ஷனில் எத்தனை மணிக்கு மாநில மொழித் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்கிற விவரங்கள் கூடத் தெரிவதில்லை. சன் டிவியோ மற்ற லாபகரமான தொலைக்காட்சிகளோ இதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமற்றவர்களாகவும் லாபம் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, எல்லாத் தமிழ் ஒளிபரப்புகளையும் மிஞ்சி முதன்மை இடத்திலிருக்கும் சன் டிவி தனது லாபத்தில் ஒரு சிறு பங்கை விட்டுக்கொடுத்து, இதுபோன்ற கலைப்படங்களை ஒளிபரப்பியிருக்கலாம். அது பற்றிய எண்ணமே அவர்களுக்கில்லை என்பது கடந்த 14 ஆண்டுகளில் நமக்குப் புரிந்திருக்கும்.

இந்நிலையில் திரைப்படங்கள் என்கிற ஒன்றில்லாமலேயே ஒரு சானலை நடத்தலாம் என்கிற எண்ணம் வந்ததே பெரிய சாதனை. அதை மக்கள் தொலைக்காட்சி நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதன் அரசியல் செயல்பாடுகள், அரசியல் நிர்ப்பந்தகள் என்னவாக இருந்தபோதிலும், அதன் செயல்பாடு நிச்சயம் பாராட்டுதலுக்குரியதே.

இனி எப்போதும் காணவேமுடியாது என்று நான் முடிவுகட்டிவிட்ட படங்களில் (டெரரிஸ்ட், மல்லி, ஆயிஷா, குட்டி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், குடிசை, நண்பா நண்பா, சங்கநாதம், உன்னைப் போல் ஒருவன்) ஒன்றான மல்லி திரைப்படத்தை கடந்த 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. எனக்கு சந்தோஷமான ஆச்சரியம். நிச்சயம் இது ஒரு சாதனை என்பதே என் எண்ணம். இதுபோன்ற திரைப்படங்களை இனி காணவே முடியாது என்கிற என் எண்ணம் உடைவது என்னை உணர்ச்சிவசப்பட்ட சந்தோஷத்தில் ஆழ்த்துவதைக் காணமுடிகிறது.

சுள்ளான் போன்ற வணிகப்படங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உரிமம் வாங்கும் தொலைக்காட்சிகள், அதில் ஒரு சிறுபங்கை மட்டும் செலவழித்து, சிறந்த பிறமொழிப்படங்களை அதன் தமிழ்மொழி சேர்ப்புடன் (சப் டைட்டிலுடன்) போடலாம் என்று என் நண்பரிடம் சென்ற வாரம் சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்காகத் தொலைக்காட்சிகள் தங்களது ப்ரைம் டைம் ஒதுக்கி அதிகம் நஷ்டப்படத் தேவையில்லை. பின்னிரவுகளில் ஒளிபரப்பியிருக்கலாம். ஆனால் இதுபற்றிய எண்ணமே எந்தவொரு தொலைக்காட்சிக்கும் இல்லை என்னும்போது இதைப்பற்றிப் பேசியே பிரயோஜனமில்லை. அந்நிலையை மாற்ற முயன்றுகொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மிகவும் சந்தோஷத்திற்குரிய விஷயம்.

மக்கள் தொலைக்காட்சி திரைப்பட வாசனையே ஆகாது என்றிருந்தபோது, திரைப்படங்கள் அப்படி ஒதுக்கப்படவேண்டியவை அல்ல என்கிற எண்ணம் எனக்கிருந்தது. நல்ல கலைப்படங்களை ஒளிபரப்பினால் அதில் தவறில்லை என்கிற என் எண்ணத்தை ஈடேற்றத் துவங்கியிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

அதன் செய்திகளில் சன் டிவி போலவோ ஜெயா டிவி போலவோ கேவலமான அரசியல் செய்யப்படுவதில்லை. அதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இலங்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் காண்பிக்கிறார்கள், ஒரு பிரசார நெடியுடன். அதேபோல் ஆட்டோ சங்கர் தொடரின் உருவாக்கம். சதாம் பற்றிய செய்திகளில் காணப்படும் பிரசாரம். இதெல்லாம் மக்கள் தொலைக்காட்சியில் அரசியல் நம்பிக்கை மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்கள்; விவாதத்திற்குரியவை. இவையின்றிச் செயல்படும் என்று மக்கள் தொலைக்காட்சியை நாம் எதிர்பார்க்கமுடியாது. அதைவிடுத்துப் பார்த்தால் மக்கள் தொலைக்காட்சி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இன்றிரவு மிருணாள் சென்னின் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதற்கான முன்னோட்டத்தில் தமிழ் சப்டைட்டில் காண்பித்தார்கள். படம் முழுவதும் தமிழ் சப்டைட்டில் வரும் என்று நினைக்கிறேன். வராவிட்டாலும் பரவாயில்லை, இதுபோன்ற திரைப்படங்களை வாரம் ஒன்றாக மக்கள் தொலைக்காட்சி அவசியம் ஒளிபரப்பவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். தமிழ், கன்னட, மலையாள, ஹிந்தி, பிறமொழிக் கலைப்படங்களை சிறுபத்திரிகைகள் மூலமாக மட்டுமே வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டுகிறது. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பங்களை மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து வழங்குமானால் அறிவுலகில் மக்கள் தொலைக்காட்சிக்கு சிறந்த பெயர் கிடைக்கும். இதனால் அவர்கள் அடையப்போகும் லாபம் ஒன்றே ஒன்றுதான். கலைப் பிரக்ஞை வளர்ச்சிக்கு சில முயற்சிகளை நல்குவது. இதைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சி செய்யுமென எதிர்பார்க்கிறேன்.

மிருணாள் சென்னின் பெயரை சிறுபத்திரிகைகளில் மட்டுமே கண்டு பழகிய எனக்கு இன்று அவர் திரைப்படத்தைக் காணப்போகிறோம் என்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. பார்க்கலாம். படத்தைப் பற்றிய தகவல்களுக்கு: http://mrinalsen.org/ekdin_achanak.htm

மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.

Share

P.K.Sivakumar’s Interview in Jaya TV, Kalai malar program

P.K.Sivakumar’s interview will be telecasted tomorrow morning at 7.30 in Jaya TV-kaalai malar Program. He talks about anyindian.com in the program. Your comments are highly appreciated.

On behalf of Sivakumar,
Prasanna

Share