Archive for நாடகம்

பல கதைகளில் ஒரு விதை

சன் டிவியில் மகாபாரதம் இன்று முதல் தொடராக வரத் தொடங்கியிருக்கிறது. பிரபஞ்சன் கதையாக்கம் என்றதும் ஒரு ஹிந்துவாகவும், உயர் இலக்கியப் பிரதி ஒன்றின் வாசகனாகவும் கடும் வருத்தம் மேலிட்டது. என்னதான் மகாபாரதத்தை ஒருவர் வெறும் இலக்கியப் பிரதியாக மட்டுமே அடைய நினைத்தாலும், ஹிந்து மத வெறுப்பாளர் ஒருவரின் பார்வையில் எப்படி சரியான நியாயமான மகாபாரதத்தைக் கொண்டுவர இயலும் என எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சனின் ஹிந்துமதக் கருத்துகள் நானறிந்தவரை, கடும் சாய்வைக் கொண்டவை, ஹிந்து மதத்துக்கு எதிரானவை.  எனவே அவர், இந்த மகாபாரதத்தைத் தனது இலக்கிய முற்போக்குத்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாதிருக்கவேண்டும். அதேபோல் மகாபாரதம் என்னும் தூய இலக்கியப் பிரதியும் வேதவியாசரின் தூய்மையும் பிரபஞ்சனின் மனத்துக்குள் ஒளிந்துகிடக்கும் நியாய ஹிந்துமதத்தை வெளிக்கொண்டு வராதவாறும் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இன்றைய நிலையில் இதுவரை அவர் காத்து கடத்திக் கொண்டுவந்த முற்போக்கும் முகம் என்னாவது! பல ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த ஒரு கொள்கையை ஒரே நாளில் உண்மையின் பொருட்டாகத் துறக்கவும் ஒரு நேர்மைத் துணிவு வேண்டும்.

sun tv mahabaratham

சன் டிவி மகாபாரதத்தின் இயக்கம் சுரேஷ் கண்ணா என்பது இரண்டாவது அதிர்ச்சி. கிருஷ்ணனை பாஷாவாக்காமல் இருக்கவேண்டும். (நேற்றைய தி ஹிந்து பேட்டியில், தனக்கு கிருஷ்ணர், பாண்டவ, கௌரவர் என்கிற பெயர்களைத் தவிர ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.)

முதல் வாரம் பார்த்தேன். ஒரே ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டு கருத்துச் சொல்வது அநியாயம் என்றாலும், ஒரு வாரத்துக்கான கருத்தாக மட்டும் இதைத் தெரிவிக்கலாம். என்னதான் சிலர் கழுவேற்றுவார்கள் என்றாலும், கட்டற்ற இணையவெளி தந்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படிச் சரியாகும்!

மகாபாரத்தின் முதல் வாரத்தில் வசனங்கள் (வேட்டை பெருமாள்) காற்றில் அலைகின்றன. யார் யாரோ என்ன என்னவோ பேசுகிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தத்துவம் பேசினால் தாங்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதையாக்கத்தோடு பிரஞ்சன் நின்றது, சுரேஷ் கிருஷ்ணா தி ஹிந்து பேட்டியில் சொல்வது போல், கிருஷ்ண பகவானின் டைரக்‌ஷனாகவே இருக்கவேண்டும்.

மொத்தத்தில், பிரபஞ்சனுக்கு மகாபாரதம் பழகவும் நமக்குப் பிரபஞ்சன் பழகவும் நாளாகலாம். ஆனால் பிரபஞ்சனின் குடும்பப் பெண்ணிய நாவல்களின் தரம் வந்து என்னைப் பயமுறுத்துவதை நான் மறைக்க விரும்பவில்லை. அவரது உயிர்மை, காலச்சுவடு போன்ற கட்டுரைகளே கொஞ்சம் நம்பிக்கையைத் தருகின்றன. அந்தக் கட்டுரைகளின் அரசியலை நான் ஏற்காதபோதும், அவை விவாதத்துக்கு உகந்தவை என்றே நினைக்கிறேன். மகாபாரதத்தைப் பொருத்தவரை,  அவரது கருத்துச் சுமையுடன் எப்படி மகாபாரதத்தை அணுகப்போகிறார் என்பதைக் காண ஆவலாக (பயந்தும்) இருக்கிறேன். ஆறேழு வாரங்கள் பார்க்கலாம் என்றிருக்கிறேன். சன் டிவியில் பேசிய பிரபஞ்சன், தமிழில் மகாபாரதத்தை எடுப்பதால் தமிழ்த்தன்மையுடன் இருக்கும் என்றார். மகாபாரதம் ஏன் தமிழ்த்தன்மையுடன் இருக்கவேண்டும் எனப் புரியவில்லை. இதுவரை வந்த மகாபாரதங்கள் சந்தனுவில் இருந்து ஆரம்பித்ததில்லை என்று என்னவோ சொன்னார். நான் பார்த்த சோப்ராவின் மகாபாரதம் சந்தனுவின் பிறப்பில் இருந்து தொடங்கியதாகவே நினைவு.

chopra mahabarathபடமாக்கலின் தரத்தைப் பற்றிச் சொன்னால் – மிகக் கொடுமையாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இது முதல் ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டுச் சொல்வது. ஏற்கெனவே சோப்ராவின் மகாபாரதம் ஒரு பென்ச் மார்க் ஆகிவிட்ட நிலையில், இந்த மகாபாரதத்தை அதனோடு ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது. அதன் பிரம்மாண்டம் இதில் இல்லை. அதில் இருந்த அமைதியும் பொறுமையும் இதில் இல்லை. இனி வரும் வாரங்களில் சுரேஷ் கண்ணா விழித்துக்கொள்வது நல்லது.

நடிகர்களையெல்லாம் பார்த்தால் முதலில் சிரிப்பு வந்துவிடுகிறது. ஏனென்றே தெரியவில்லை. அவர்கள் வசனம் பேசும் விதம் நம்மை மிரட்டுகிறது. எத்தனை செயற்கையாக நடிக்கமுடியுமோ அத்தனை செயற்கையாக நடிக்கிறார்கள். அதிலும் ஒரு முனிவர் வீராவேசமாக நடந்துவந்த காட்சியில், என் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு நான் வெளியே ஓடிவிட நினைத்தேன். ஒரு திரைப்படத்தில் மிகக்குறிப்பிட்ட பாத்திரங்களைக் கையாண்ட ஒரு திரைப்பட இயக்குநருக்கு இந்த மகாபாரதத்தில் வரும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் பெரிய சவாலாக விளங்குவார்கள். எந்த கதாபாத்திரத்தையும் ஒதுக்கவோ குறைவாக மதிப்பிடவோ முடியாது என்பதே மகாபாரதத்தின் ஆகப் பெரிய சவால்.

ஒட்டுமொத்த மகாபாரதத்தின் பிரம்மாண்டத்துக்குள் சிக்கிக்கொண்டுவிட்டால், எழுத்தாளரும் சரி, இயக்குநரும் சரி, அதன் உள்ளே கொட்டிக்கிடக்கும் பல நுண்மைகள் தரும் பிரம்மாண்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளே ஒளிந்துகிடக்கும் நுண்மைகளின் பிரம்மாண்டம் வழியே மகாபாரத்தை நோக்கினால், ஒரு கலைடாஸ்கோப் தரும் எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற தத்த்துவப் பின்னணியில் அவர்கள் மகாபாரதத்தைக் காண்பார்கள். சுரேஷ் கண்ணாவோ பிரபஞ்சனோ இந்த தரிசனத்தை அடைவார்கள் என நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் மகாபாரதம் என்னும் பிரம்மாண்டத்தைக் கேவலப்படுத்தாமலாவது இருக்க அவர்கள் நினைத்தால் அவர்களைக் கிருஷ்ணன் காப்பான்.

சோப்ராவின் மகாபாரதம் தமிழில் வந்தபோது அதன் எழுத்துப் பாடல் இப்படி வரும். ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளில் ஒரு விதை. இந்த ஒரு விதையையும் பல கதைகளையும் ஒரே போல் பிடித்துக்கொள்வதுதான் சவால்.

Share

ஆப்புக்கு ஆப்பு

திடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.

அம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.

முக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ்! கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.

இரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.

ஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை – இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.

நீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.

ஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம்? அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.

நாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்!) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா!

Share

நாதஸ்வரம் – மெகா தொடர்

தேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.

சன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.

திடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது? இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே!

இப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.

தன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமும் போய்ச் சேர்ந்துவிடும்.

இசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும்.

திருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்?

ஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்?

இது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல!) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.

இனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Share

வெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் – அறிவிப்பு

நாடக வெளி வழங்கும் தமிழ் நாடகம்

ஊழிக்கூத்து

எழுத்து, இயக்கம்: வெளி ரங்கராஜன்

30.03.2008
ஞாயிறு மாலை 7 மணி
அலையான்ஸ் ப்ரான்சேஸ் அரங்கம்
24, காலேஜ் ரோடு, சென்னை – 6.

Share

அறிவிப்பு: ‘வெளி’ ரங்கராஜனின் ‘மாதவி’ நாடகம்

Share

நாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் (‘ஓ போடு’ ஞாநி) அழைப்பு

பரீக்ஷா (‘ஓ போடு’ ஞாநி) ஆர்குட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகவும். ஞாநியின் அனுமதியுடன் இம்மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நன்றி.

dear friends i will be directing the new play sandaikkarigal for our group pareeksha next month. the play is to be performed either on august 5 or august 12. rehearsals have to begin from july 1.this is a play with large cast, needing atleast ten to twelve women and equal number of men. the play is a hisgtorical bnarrative of how lives of women in our society has been changing thanks to women who chose to fight for it. i have earlier produced this play with a group of WCC girls in a workshop at their college. it is a play that entertains aswell as as enlightens.i request all of you to inform women and men, girls and boys known to you, who are iliving in chennai and nterested in meaningful theatre activity to come forward to participate.our group is meeting at 10 am on sunday july 1 for script reading. those interested in participating in the play can contact me over my mobile phone and know the venue. my no. 9444024947.

ஞாநியின் ஆர்குட் முகவரி: http://www.orkut.com/Profile.aspx?uid=14559894980100451739

அவரது மின்னஞ்சல் முகவரி: gnanisankaran@hotmail.com
Share