Archive for நையாண்டி

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

* அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் உடைக்கப்படும் பஸ்கள் மற்றும் ரயில்களுக்கான சேதாரத்தை அந்தக் கட்சியிடமிருந்து வசூலிக்கவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் அந்தக் கட்சியைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. கடைக்காரரே உடைத்துக்கொண்டார் என்றால் அதை கட்சியே நிரூபிக்கவேண்டும். நிரூபிக்க முடியாதே என்றால் போராட்டம் நடத்தக்கூடாது. இது பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, அதிமுக, திமுக என எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதென்பதறிக.

* அரசியல் கட்சிகள் அல்லாத அமைப்புகள் போராட்டம் நடத்தி அதனால் ஏற்படும் நஷ்டங்களை அந்த அமைப்பு தரவேண்டும். இல்லையென்றால் அந்த அமைப்பைத் தடை செய்யவேண்டும். இது ஆர் எஸ் எஸ் உட்பட்ட எல்லா அமைப்புக்கும் பொருந்துமென்பதறிக.

* பரிட்சை நடக்கும் நாளில் எவ்விதப் போராட்டமும் நடக்கக்கூடாது. அப்படி அல்லாமல் ஏதேனும் கட்சியோ அமைப்போ போராட்டத்தை அறிவிக்குமானால் அந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், அந்தக் கட்சி தேர்தலில் பங்கேற்பதை ஒரு தடவை தடை செய்யவேண்டும். அமைப்பை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவேண்டும்.

* உண்ணாவிரதம் என்பதே குறைந்தது மூன்று நாள் உண்ணாவிரதமாக இருக்கவேண்டும். காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரையிலான டுபாக்கூர் உண்ணாவிரதத்தை உடனே தடை செய்யவேண்டும். மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து, முதல் ஒரு மணி நேரத்திலேயே உண்ணாவிரதத்தின் காரணம் சரியானால்கூட, மூன்று நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவேண்டும். அப்படி ஒருவேளை, தெரியாத்தனமா இருந்துட்டேன் என்று உண்ணாவிரதம் இருப்பவர் கதறினால், பொதுவில் இனி ஒருநாளும் என் வாழ்நாளில் உண்ணாவிரதம் இருக்கமாட்டேன் என்று அவரைச் சொல்லச் சொல்லி அதை லைவ் வீடியோவாக ஒளிபரப்பவும் வேண்டும். பின்னர் மட்டுமே அவர் அந்த உண்ணாவிரதத்தைக் கைவிடலாம். கருணாநிதி தொடங்கி ஜீயர் வரை அனைவருக்கும் இவ்விதி பொருந்துமென்றறிக.

* வெள்ளிக் கிழமையோ திங்கள் கிழமையோ அல்லது இரண்டு விடுமுறைகள் வரும் நாளுக்கு முதல் நாளோ மறுநாளோ பந்தோ கடையடைப்போ நடத்தக்கூடாது.

* எந்தத் தொலைக்காட்சியும் பந்தை நேரடியாக அரை மணி நேரத்துக்கு மேல் ஒளிபரப்பக்கூடாது. கலவரம் என்றால் நிச்சயம் ஒளிபரப்பக்கூடாது. இரண்டு நாள் கழித்து கொஞ்சம் வேகம் அடங்கியதும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிக்கொள்ளலாம்.

நிபந்தனைக்குட்பட்டு நீங்க போராட்டம் நடத்தி எங்களுக்கு நல்லது செஞ்சா போதும்.

#மனம் நதிநீர் போல அமைதியாக இருக்கும்போது எழுதிய பதிவு இது.

Share

வொய் ப்ளட், ஸேம் ப்ளட்

“இன்னைக்காவது பாட ஆள் கிடைச்சாங்களா?”

“இண்டஸ்ட்ரியே அலறுது சார். உங்க பாட்டை பாடறதுன்னா சும்மாவா?”

“ஐ டோண்ட் லைக் திஸ் மஸ்கா அண்ட் ஆல்… ஆள் கிடைச்சாச்சா இல்லியா? இல்ல யூ நீட் மி டூ சிங் திஸ் டூ?”

“இன்னைக்கு ஒருத்தன் வர்றேன்றுக்கான் சார். சீனியர் சிங்கர்ஸ்ல ஜெயிச்ச பையனாம், பாவம்.”

“என்ன பாவம்?”

“ஒண்ணுமில்ல சார். இதோ பையன் வந்துட்டான்.”

“கெட் ரெடி ஃபாஸ்ட். போய் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க.”

“சார், ரொம்ப திணர்றான் பையன்.”

“என்னய்யா இது. தமிழ்நாட்டுல என் பாட்டை பாட ஆள் இல்லியா?”

“ஆனா இவன் பாடிருவான் போல இருக்கு…”

“இஸிட்?”

“ஆமா, ரொம்ப ட்ரை பண்றான். ரெண்டு தடவை வாந்திகூட வந்திடுச்சு..”

“வாட், வாந்தி வந்திடுச்சா? யூ மஸ்ட் கீப் மீ இன்ஃபார்ம்ட் திஸ்…”

“இல்ல சார், இப்பதான் சார் வாயலெடுத்தான், அதான் ஓடி வந்தேன்.”

“வா பையனைப் பார்க்கலாம்.”

“வாந்தி வந்திடுச்சாமே?”

“ஆமா சார், ஸாரி ஸார்.”

“நோ நோ. இட்ஸ் ரியலி குட். பெர்ஃபெக்ட் ரூட் யூ நோ… ஜஸ்ட் ட்ராவல்… டொண்ட் கிவப்…”

“சார்…”

“யெஸ், என் பாட்டு பாடறது சும்மா இல்லை… அப்படியே அடி வயித்துல இருந்து எக்கிப் பாடணும்…”

“ஆமா சார், ஒரு தடவை வயித்தை பிடிச்சிக்கிச்சு.”

“தட்ஸ் தி ஃபர்ஸ்ட் ஸெட்ப் யூ நோ. பிடிச்சிக்கிட்டு இருக்கும்போது வலியோட அப்படியே சத்தமா உரக்க ரொம்ப சத்தமா பாடினா…”

“ரத்தம் வந்திடும்…”

“எக்ஸாட்லி. யூ ப்ரேவோ மேன்.”

“ரெண்டு வாட்டி வாந்தி வந்திருக்கு சார், இன்னும் ரத்தம் வரலை சார். ஆனா வந்திரும் சார், எனக்கு நம்பிக்கை இருக்கு”

“டோண்ட் கிவ் அப் மேன். தட்ஸ் பேஸ்ஸன். சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ். கீப் ராக்கிங். ஜஸ்ட் லௌட்லி. டோண்ட் கிவ் அப். ஹேவ் கர்ச்சீஃப்?”

“நாலஞ்சு கொடுத்திருக்காங்க சார்…”

“கைல வெச்சிக்கோ. மைக் என்ன ஆனாலும் பிரச்சினை இல்லை. குரல் குரல் குரல் அதுல மட்டுமே கவனம். சுதி சேரலை அது இதுன்னு நோ இமாஜினேஷன். எல்லாம் ஹம்பக். பித்தலாட்டாம்.  ஜஸ்ட் தின்க் அவுட் ஆஃப் தி பாக்ஸ். கத்து. எனர்ஜி இஸ் தி சீக்ரெட்…”

“ஓகே சார்…”

“எங்க கத்து…”

“ஓகேவா சார்…”

“இல்ல. ஐ நீட் நீட் ஸம்வாட் மோர்… யூ ஸி, ப்ளட் வரலை. ஸோ சம்திங் மிஸ்ஸிங்.”

“இப்பவும் வாந்தி வருது சார்…”

“லுக்கிங் கிரேட். பட் என்னவோ ஒண்ணு… ஐ டொண்ட் நோ… தடுக்குது… ஸீ, ப்ளட் அது வரணும்…”

“இன்னொரு தடவை பாடினா வந்திடும் சார்…”

“அப்ரிஷியேடட். அகைன், கமான்…”

“ஆனா சார்…”

“நோ செகண்ட் தின்கிங் ப்ளீஸ். ஐ டோண்ட் லைக் இட். நெவர் எவர் கிவப்…”

“இல்ல சார், இந்த முதல் பாட்டே கடைசி பாட்டாயிடுமோம்னு…”

“ஸோ வாட் மேன்… ஒரே பாட்டுல வெர்ல்ட் ஃபேமஸ் யூ நோ… வாட் எல்ஸ் யூ ஆர் லுக்கிங் ஃபார்?”

“ஓ…”

“யெஸ் மேன். இந்தப் பாட்டு பாட ஆள் கிடைக்காம இல்லை. நானே பாடுவேன். ஃபக்கிங் சிம்பிள் சாங் யூ நோ. பாடவா பாடவா பாக்கிரியா? ஒன்றரை டன் வெயிட் வாய்ஸ்… யூ வாண்ட் டு ஹியர்?”

“இல்ல சார்…”

“ஓ மை காட். எவ்ரிதிங் ஐ நீட் ஃப்ரெஷ். தினமும் ஃப்ரெஷ் வாய்ஸுக்காக ஐ புட் மி இன் ஃபையர் யூ நோ. ஒவ்வொரு பாட்டும் ஒரு விதம்… யூ ஃபர்ஸ்ட் அண்டர்ஸ்டாண்ட் தட்…”

“ஓகே சார்…”

“ஓகே. கமான். இட்ஸ் வெரி ஈஸி. ஜஸ்ட் ஒன் டைம் ப்ளட். அடி வயித்துல இருந்து உன் குடலெல்லாம் பிச்சி வாய் வழியா வெளிய வர்றதா நினைச்சுட்டு கத்து மேன். கமான். கெட் ரெடி. இட்ஸ் ரியல்லி அ ஃபண்டாஸ்டிக் மெலோடி. இதுக்கே திணரியேப்பா…”

“ஐம் ரெடி ஸார்…”

“தட்ஸ் தி ஸ்பிரிட். ஆல் ரெடி. ஸ்டார்ட்… எங்க பாடு… வேலையில்லாஆஆஆஆ…. பட்ட தாரீஈஈஈஈஈஈ….”

Share

Fire for books

"ஹலோ ஃபயர் பார் புக்ஸா?”

“இல்லைங்க, டயல் ஃபார் புக்ஸ்.”

“ஓ, ஸாரிங்க. தப்பா கூப்பிட்டுட்டேன்.”

“சொல்லுங்க சார், என்ன புத்தகம் வேணும்.”

“இல்லை, அவசரமா ஒரு புத்தகத்தை எரிக்கணும். அதுக்கு ஒரு புத்தகம் வேணும்.”

“சார், நாங்க புத்தகத்தை விப்போம். அவ்ளோதான். எரிக்கணும்னா…”

“எரிக்கணும்னா எரிக்கணும். அவ்ளோதான். சரி, சட்டுன்னு ஒரு புத்தகம் சொல்லுங்க.”

“நீங்கதான் என்ன புத்தகம்னு கேக்கணும். எங்ககிட்ட 20,000க்கும் மேல புத்தகம் இருக்கு. சட்டுன்னு சொல்லுங்கன்னா என்ன சொல்றது?”

“இருபதினாயிரத்தையும் எரிக்க முடியாது. வசதியில்லை. ஒண்ணு மட்டும் சொல்லுங்க.”

“சார், என்ன புத்தகம் வேணும்னு சொல்லுங்க. நிறைய கஸ்டமர்ஸ் லைன்ல இருக்காங்க.”

“அவ்ளோ பேர் எரிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?”

“ஹலோ. உங்களுக்கு வேணும்ன்ற புத்தகத்தை சொல்லுங்க.”

“சரி, இப்ப பரபரப்பா நிறைய எழுதுற ஆள் பேர் யாராவது சொல்லுங்க.”

“ஜெயமோகன். அவர் புத்தகம் வேணுமா?”

“ஆமா, அவரையே எரிப்போம்.”

“சார், என்ன சொல்றீங்க.”

“அவர் புத்தகத்தைத்தான் சொன்னேன். எதாவது புத்தகம் 10 காப்பி அனுப்புங்க.”

“சார், நாங்க விக்கிறது மட்டும்தான் செய்யறோம். எரிக்கிறதெல்லாம் சரியா வராது.”

“அதான் அதை நான் பாத்துக்கறேன். நீங்க பத்து காப்பி அனுப்புங்க.”

“வண்ணக்கடல்னு ஒரு புத்தகம். ஒரு காப்பி 1500 ரூ. பத்து காப்பி 15,0000 ரூபாய். தபால் செலவு கிடையாது. சர் சார்ஜ் உண்டு…”

“என்னது பதினஞ்சாயிரமா? ஏன் இருபது ரூபா முப்பது ரூபாய்க்கெல்லாம் எழுதுறதில்லையா அவரு?”

“இருக்கு சார். உலோகம்னு இருக்கு. 50 ரூபாய்தான். அதுல பத்து காப்பி?”

“உலோகம்ன்றீங்க. எரிக்க முடியுமா?”

“சார், நாங்க எரிக்க அனுப்பலை. நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

“நானும் திரும்ப திரும்ப சொன்னேனே.”

“சார் இது சரிப்பட்டு வராது.”

“என்ன சரிப்பட்டு வராது? சொல்லாம வாங்கி எரிச்சா நல்லவன். சொல்லிட்டு செஞ்சா கெட்டவனா?”

“நீங்க என்னமோ செய்ங்க, சொல்லாதீங்கன்னு சொல்றேன்.”

“சரி விடுங்க. பத்து காப்பி, புத்தகம் பேர் என்ன சொன்னீங்க? இரும்பா? செம்பா? அதை அனுப்புங்க.”

“உலோகம் சார்…”

“ஏன் இரும்பு உலோகம் இல்லையா?”

“அனுப்பறேன் சார். போஸ்ட்மேன் கிட்ட பணம் கொடுத்துட்டு புத்தகம் வாங்கிக்கோங்க.”

“ஓ போஸ்ட்மேன் வேற வருவாரா? உடனே போய்டுவார்ல? இல்லை அவர் முன்னாடியே எரிக்கலாமா?”

“சார், உங்க ஆர்டரை எடுத்துக்கறோம். உங்கள் வீடு தேடி புத்தகம் வரும்.”

“போஸ்ட்மேன் எத்தனை மணிக்கு வருவார்னு சரியா சொல்லுங்க.”

“அது சொல்லமுடியாது சார். எப்ப வேணா வருவார்.”

“என்னங்க பொறுப்பே இல்லாம சொல்றீங்க. போட்டோகிராபர் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும், நிறைய வேலை இருக்கு. சரியா எப்ப வருவார்னு சொல்லுங்க.”

“அதை சொல்லமுடியாது சார். அது உங்க வேலை. உங்க ஆர்டருக்கு நன்றி. புத்தகம் வீடு தேடி வரும்.”

“வரலைன்னா நான் அங்க தேடி வருவேன். சரி, அந்த புத்தகம் எழுதுனவர் பேர் என்ன்? நடிகர் மோகனா?”

“சார், ஜெயமோகன்.”

“கூட வேற யார் புத்தகம் இருந்தாலும் அனுப்புங்க.”

“நீங்கதான் சொல்லணும் யார் புத்தகம் வேணும்னு.”

“நின்னு எரியணும். யார் இதா இருந்தா என்ன?”

“ஜெயமோகன் புத்தகத்தை ஏற்கெனவே எரிச்சிருக்காங்க. நின்னு எரிஞ்சதாத்தான் பேச்சு.”

“என்னது ஏற்கெனவே எரிச்சுருக்காங்களா? நல்லவேளை சொன்னீங்க. அப்ப அவர் வேண்டாம். வேற சொல்லுங்க. நேரமாச்சு. நீங்க புத்தகம் எழுதிருந்தா அதைக்கூட அனுப்பலாம்.”

“சார்… சார்…”

“ஏன் திடீர்னு ரகசியமா பேசறீங்க?”

“இல்லை, நானும் ஒரு புத்தகம் எழுதிருக்கேன். பத்து நூறு காப்பி விக்காம அப்படியே இருக்கு.”

“மொதல்லயே சொல்லிருக்கலாம்ல. சரி விலை என்ன? 20 ரூபாய்ல இருக்கா?”

“புத்தக விலை 90 ரூபாய் சார். பத்து காப்பி வாங்கினா நான் 10% டிஸ்கவுண்ட் தர்றேன். யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.”

“நான் ஏன் சொல்லப்போறேன்?”

“உங்க அட்ரஸ் சொல்லுங்க, இப்பவே அனுப்பறேன்.”

“உங்க புத்தகம் என்னத்த பத்தினது?”

“கவிதை சார்…”

“கவிதையா? அப்ப வேண்டாம். எரிக்கது கஷ்டம்.”

“என்ன சார் சொல்றீங்க. 20% டிஸ்கவுண்ட்கூட தர்றேன் சார்.”

“அடுத்த தடவை பார்க்கலாம். வேற யாராவது இருந்தா சொல்லுங்க.”

“இப்படி சட்டுன்னு கேட்டா?… பா.ராகவன்னு ஒருத்தர்… இல்லை, மருதன்… வேணாம் சொக்கன். ஹ்ம்ம்ம் இருங்க, அரவிந்தன் நீலகண்டன்னு ஒருத்தர்… இல்லை முகில்… இருங்க சார்… மகாதேவன்னு ஒருத்தர்… நிறைய இருக்கா சட்டுன்னு குழப்புது சார், சாரி.”

“அப்பம் ஒண்ணு செய்ங்க. ஒரு லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்புங்க. ஒவ்வொண்ணா எரிக்கேன். அப்பம் இப்பம் போனை வைக்கேன்.”

“சார்.. ஹலோ… சார்… சார்… போனை வெச்சிட்டீங்களா?”

Share

என் இன்னுமொரு முகம்

mellinam_April_2012_final.pmd

mellinam_April_2012_final.pmd

mellinam_dec_2011.pmd

mellinam_dec_2011.pmd

mellinam_sep_2011

jokes _013

jokes _012

jokes _011

jokes _010

jokes _009

mellinam_jan_2012.pmd

mellinam_jan_2012.pmd

mellinam_jan_2012.pmd

mellinam_jan_2012.pmd

mellinam_April_2012_final.pmd

Jokes

 

🙂 இவையும் ஒரு வருடத்துக்கு முன்பு கிறுக்கியவை.

படங்கள் வரைந்தவர் நண்பர் ஜீவானந்தம்.

Share

என் இன்னொரு சிறு கதைமுகம்

நான் மறக்க விரும்பும் இன்னொரு முகம் இங்கே. 🙂 இதில் கட்டுடைப்புகள், இதுதான் நான் எழுதியவற்றிலேயே சிறந்த கதைகள் எனப் பாராட்டுகளைச் செய்து என்னை வெறுப்பேற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். ,முக்கியமான குறிப்பு – இவையெல்லாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை. 🙂

உயிர்

“ஐயா, நம்ம வீட்டுக்கு போலிஸ்காரங்க வந்திருக்காங்க” என்று டாக்டர் சிவாவை எழுப்பினான் வேலைக்காரன்.

சிவா பதற்றத்துடன் வெளியில் வந்தான். இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.

“வளசரவாக்கத்துல ஒரு கார்ல குண்டு வெடிச்சிருக்கு. விசாரணைல அது உங்க கார்னு தெரிஞ்சது டாக்டர். காரை ஓட்டிக்கிட்டுப் போனவர் ஸ்பாட்லயே அவுட்.”

சிவாவுக்கு கை காலெல்லாம் நடுங்கியது. “என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர். நேத்து நைட் என் பிரண்டு ஜீவன் காரை எடுத்துக்கிட்டுப் போனான்.”

இன்ஸ்பெக்டர், “சரி, எங்களுக்கு எதாவது தகவல் தேவைப்பட்டா உங்களை கூப்பிடறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சிவா வீட்டுக்குள் சென்று நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தான். படபடப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

முதல் நாள் இரவு ஜீவன் வீட்டுக்கு வந்ததிருந்தான். கையில் வைத்திருந்த ஃபோட்டோக்களையெல்லாம் காட்டினான். சிவா பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த நிர்வாணப் புகைப்படங்கள். சிவாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்ப நான் அனுப்பின மெயில் பாக்கலையா” – ஜீவன் கேட்டான்.

“இல்லையே…”

“ஓ, சரி. நேர்லயே சொல்றேன். ஜஸ்ட் ஒரு கோடி. உன்கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது. இதெல்லாம் நெட்ல வந்தா என்னவாகும்னு நினைச்சுப் பாரு. நீ ஒரு பெரிய டாக்டர், உங்கம்மா, அப்பா, உன் மனைவி எல்லாருமே டாக்டர்கள். இந்த ஒரு கோடியை ஒரு மாசத்துல சம்பாதிச்சிடலாம்” என்றான் ஜீவன்.

“கூடவே இருந்துட்டு இப்படி துரோகம் பண்றியேடா” என்றான் சிவா.

“உன் கூடவேதான் இருந்தேன், ஆனா உன் கூட சரிசமமா இல்லையே. என்கிட்ட பைக்கே இல்லை, உங்கிட்ட காரே இருக்கு. நானும் எப்பதாண்டா பெரியாளாறது?”

சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து ஜீவன் தலையில் ஓங்கி அடிக்க, ஜீவன் மயக்கமாகிவிட்டான். சட்டென டாக்டர் சிவாவின் மூளை யோசித்தது.

ஜீவனுக்கு ஒரு மயக்க ஊசி. யார் யாருக்கோ ஃபோன். பத்து நிமிடத்தில் நான்கைந்து பேர் வந்து அவன் காரில் குண்டு வைத்துவிட்டு, கேள்வி கேட்காமல், பணம் மட்டும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

ஜீவனைக் காரில் வைத்து, வளசரவாக்கத்தில் ஒதுக்குப்புறத்தில் காரை வைத்துவிட்டு வந்துவிட்டான். காலையில் கார் வெடித்துச் சிதறும்போது  ஜீவனும் சிதறியிருப்பான்.

எல்லாமே கச்சிதமாக நடந்துவிட்டது. சிவா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான். கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான். ஜீவனிடமிருந்து மெயில் வந்திருக்கிறது என்றது கம்ப்யூட்டர். ஜீவன் இதுபற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“சிவா, நான் கேட்கிறது ஜஸ்ட் ஒரு கோடி. இன்னைக்குள்ள தரலை, நாளை காலையில உன் ஃபோட்டோ எல்லாம் நெட்ல வரும். ஆட்டோமேட்டிக்கா வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். நீ பணம் கொடுத்துட்டா, அதை டெலிட் பண்ணிடுவேன். இல்லைன்னா அது தானா நெட்ல வரும்.”

சிவாவுக்கு தலை சுற்றியது.

 

கிரிக்கெட்

ஜஸ்ட் ரெண்டே ரெண்டு பந்து. 47.1ஆவது ஓவரில் ஒரே ஒரு வைட் வீசவேண்டும். அடுத்து 49.4ஆவது ஓவரில் ஒரு நோபால். அவ்வளவுதான். சில கோடிகள் கைக்கு வரும்.

அனுஷனுக்கு படபடப்பாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியில் கலந்துகொள்ளப்போகும் 18 வயசுப் பையன். ரஞ்சி போட்டிகளில் ஓர் இன்னிங்கிஸில் 9 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்து நேரடியாக இந்திய அணிக்குள் வந்தவன் அனுஷன்.
முதல் போட்டியிலேயே இப்படியா! புக்கிகள் என்றார்கள். பணம் என்றார்கள். தனக்கு முதல் போட்டி இது என்றும், இந்தியா தன் தேசம் என்றும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தான். விடாப்பிடியாக இருந்தார்கள். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவனது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று மிரட்டினார்கள்.

அனுஷனுக்கு தன் அண்ணன் தனுஷனின் நினைவு வந்தது. தனுஷன் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதைத் தன் கனவாகக் கொண்டிருந்தவன். 15 வயதில் அவனும் அனுஷனும் திருச்சி பஸ்டாண்டில் ஒரு டிவியில் சச்சின் 100 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதை பட்டப்பகலில் வெயிலில் நின்று பார்த்தவர்கள்.

தனுஷன் சொல்லுவான். நானும் இதை மாதிரி இந்தியாவை ஜெயிக்க வைப்பேண்டா என்று. ஓர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியற அன்று தனுஷன் தூங்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தான்.

தலைவலி என்று ஆஸ்பத்திரிக்கு போனவனுக்கு தலையில் கட்டி என்றார்கள். ஆபரேஷன் என்றார்கள். ஒருநாள் ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டுப் போனார்கள். அனுஷனாவது கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும் என்று கடைசி நிமிடங்களில் அவன் புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தபோது அனுஷனுக்குக் கண்களில் நீர் வழிந்தது.
ஆனால் முதல் போட்டியிலேயே பெட்டிங். மர்ம ஃபோன் ஒன்று, ‘நீ நாங்க சொன்னபடி செய்யலைன்னா, இனிமே என்னைக்கும் நீ

இந்தியாவுக்கு ஆடமுடியாது’ என்றது. அனுஷனுக்கு ஏன் கிரிக்கெட் விளையாட வந்தோம் என்றிருந்தது.

இந்தியா 210 ரன்கள் எடுத்து 47வது ஓவரில் ஆல் அவுட்டாகியது. நியூஸிலாந்து பேட்டிங். 192 ரன்களுக்கு 9 விக்கெட். இன்னும் 18 பந்துகள் பாக்கி. 19 ரன்கள் எடுத்தால் நியூஸிலாந்து ஜெயித்துவிடும். சரியாக 48வது ஓவரை வீச அனுஷனை அழைத்தான் கேப்டன். அனுஷனுக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது.

அரங்கமே நிசப்தத்தில் இருந்தது. சின்ன பையன், அதுவும் முதல் மேட்ச், இவனைப் போய் இந்த நேரத்துல என்று ஸ்டேடியமே முணுமுணுத்தது. அனுஷன் கடவுளையும் தனுஷனையும் நினைத்துக்கொண்டான். ஓடிவந்து கடும் வேகத்தில் கடும் கோபத்தோடு பந்தை வீசினான். சரியான யார்க்கர். பேட்ஸ்மேன் முழித்துக்கொண்டு நிற்க, ஸ்டம்ப் மூன்றும் அந்தரத்தில் பறந்தது. ஸ்டேடியமே ஆர்ப்பரித்தது. அனுஷன் வானத்தில் தனுஷனைத் தேடினான். ‘என் கேரியர் போனாலும் போகட்டும், இந்தியா ஜெயிச்சிடுச்சு இன்னைக்கு, இதுபோதும்’ என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

 

கடவுள்

பிச்சை எடுப்பதுதான் அவனுக்குப் பிழைப்பு. என்ன பெயர் என்றுகூட அவனுக்கு நினைவிருக்காது. ஏன் பிச்சையெடுக்கிறான் என்று கேட்டால் சிரிப்பான். முடிஞ்சா காசு போடு, இல்லைன்னா போ என்றெல்லாம் பதில் சொல்லியிருக்கிறான். கந்தல் ஆடை உடுத்திக்கொண்டு, கையில் ஒரு துணி மூடையைத் தூக்கிக்கொண்டு, பரட்டைத் தலையுடன், கண்கள் எங்கோ அலைமோத, என்னவோ உளறிக்கொண்டு செல்லும் அவனுக்கு இந்த ஊர் வைத்த பெயர் பிச்சைக்காரன்.

நல்ல மதிய வெயில். கடுமையான பசி அவனுக்கு. சோதனையாக யாருமே இன்று காசு போடவில்லை. எங்கே போய் சாப்பிடுவதென்று தெரியவில்லை. கோவிலில் போய் எதாவது சாப்பிடலாமென்றால், இவனை உள்ளேயே விடமாட்டார்கள். ஹோட்டல் பக்கம் போனான்.

சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது. பசி ஹோவென்று சோற்றுக்காக ஏங்கியது. சோறும் குழம்பும்போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே போதை தந்தது. வெளியில் நின்று, வருவோர் போவோர்களிடம் ஐயா பிச்சை என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

யாரோ ஒருவர் நின்று,  ‘பிச்சைனு காசு தரமாட்டேன், ஆனா சோறு வாங்கித் தர்றேன், துன்றியா’ என்றார். விதவிதமான பிச்சைகள். சிலர் காசு தர மறுத்து சோறு வாங்கித் தருவார்கள். ஏற்கெனவே பசியில் இருந்த அவனுக்கு கடவுளே நேரில் வந்து பிச்சை போடுவதுபோலத் தோன்றியது. ‘சரிங்க சாமி’ என்றான்.

அவனை ஹோட்டலுக்குள் விடவில்லை. வந்தவர் சர்வரிடம் சொல்லி ஒரு இலையில் சோறும் குழம்பும் காயும் போட்டுத் தரச் சொன்னார். காசு தந்துவிடுவதாகவும் சொன்னார். சர்வர் நிறைய சோறும் குழும்பும் காயும் போட்டு எடுத்துக்கொண்டுவந்து வெளியில் நின்றுகொண்டிருந்த அவனுக்குக் கொடுத்தான்.

சோற்றைக் கண்டதும் அப்படியே அவுக் அவுக்கென்று தின்றான். தண்ணீர் குடிக்கக்கூடத் தோன்றவில்லை. யாரேனும் சோற்றைப் பிடுங்கிவிடுவார்களோ என்ற அவசரம் தெரிந்தது அவன் வேகத்தில். சோறு வாங்கிக் கொடுத்தவர் அங்கே இருந்து பார்த்தார். அவர் தன்னைப் பார்க்கிறார் என்றதும், மீதிச் சோற்றை எடுத்துக்கொண்டு ஓடினான் அவன்.

நன்றாகத் தின்றுவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கப் போனான். நன்றாக சாப்பிட்டதன் மகிழ்ச்சி உடல் முழுதும். எதிரே வந்தவரிடம் பிச்சை கேட்டான். அவர் உடனே ஐம்பது ரூபாய் பிச்சை போட்டார். அவனுக்கு அதிசயமாக இருந்தது.

கொஞ்ச தூரத்தில் ஒரு பையன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும் சிரித்தான். என்னடா சிரிக்கற என்றான் இவன். இல்லண்ணா, பசிக்குதுண்ணா, சோறே துன்னு நாலு நாளாச்சுண்ணா என்றான். சட்டென்று அவன், ‘வாடா நான் சோறு வாங்கித் தரேன், ஆனா காசு தரமாட்டேன்’ என்று சொல்லி அவனையும் சேர்த்துக்கொண்டு நடந்தான்.

 

அப்பா

இன்று அப்பாவை மேடையில் எல்லார் முன்னாலேயும் கேள்வி கேட்டுவிடவேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவர் வெறும் அப்பா இல்லை, தமிழ்நாடே கொண்டாடும் எழுத்தாளர்.

இன்று அவருக்கு வாழ்நாள் விருது. எல்லாமே சுத்த ஹம்பக் என்று நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவனுக்குத் தெரிந்து அவனது அப்பா என்றைக்குமே அவனது அம்மாவை மதித்துப் பேசியதில்லை. அம்மா என்றாலே அப்பாவுக்குக்

கிள்ளுக்கீரைதான். அம்மாவும் பூம்பூம் மாடு மாதிரி அப்பா எது சொன்னாலும் தலையாட்டுவாள். இவனுக்கு அதைப் பார்த்தாலே பத்திக்கொண்டு வரும்.

ஆனால் ஊரிலோ அப்பாவுக்கு பெரிய எழுத்தாளர் என்று பெயர். பெண்களைக் கொண்டாடுபவர் என்பார்கள். பெண்ணியப் புயல் என்று பட்டம் வேறு!

என்ன ஒரு ஹிபோகிரஸி! இன்று அவர் விருது வாங்கியதும் மேடைக்குச் சென்று மைக்கைப் பிடித்து… அவனுக்குள் ஒரு வெறியே மூண்டது.

அரங்கமே ஆர்ப்பரித்தது. என்ன என்னவோ பாராட்டிப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் எழுத்தாளர் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல, ‘பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுதியதைவிட நம் பெண்ணியப் புயல் எழுதியது அதிகம்’ என்று சொன்னார். சாம்பாரில் ஒருநாள் உப்பு கூடிவிட்டால் இந்தப் பெண்ணியப் புயல் அம்மாவிடம் எப்படிக் கரையைக் கடக்கும் என்று தனக்குத்தானே தெரியும் என நினைத்துக்கொண்டான் கண்ணன்.

இன்னொரு எழுத்தாளர் அப்பாவை, ‘தமிழகத்தின் முன்னோடி பெண்ணிய எழுத்தாளர்’ என்று புகழ்மாலை சூட்டினார். அதனால்தான் எல்லாப் பெண்களும் அவரை விழுந்து விழுந்து படிப்பதாகச் சொன்னார். இன்றோடு எல்லாப் பெண் ரசிகைகளும் காலி என்று கண்ணன் நினைத்துக்கொண்டபோது அவனுக்குள் ஒரு குரூர மகிழ்ச்சி பரவியது.

விருதைப் பெற்றுக்கொண்டார் எழுத்தாளர். கைத்தட்டு விண்ணைப் பிளந்தது. இதுதான் கடைசி கைத்தட்டு என்பதுபோல கண்ணனும் கைத்தட்டினான். எழுத்தாளர் பேசப் போனார்.

கண்ணன் அடுத்தது தான் பேசவேண்டும் என்பதற்கு வசதியாக, முன்வரிசையில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

எழுத்தாளர் பேசினார். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தொடக்கத்திலேயே தன் மனைவியைப் பற்றிப் பேசினார். ‘அவள் இல்லையென்றால் நான் இன்று உங்கள்முன் ஒரு மனிதனாகவே நின்றிருக்கமுடியாது. நாயினும் கேவலமான ஒரு மிருமாகவே அலைந்துகொண்டிருப்பேன்’ என்றார். கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவர் இன்னும் சொன்னார். ‘என் மனைவி யாரை கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் இதைவிட நன்றாக இருந்திருப்பாள். ஆனால் நான் என் மனைவியைத் தவிர யாரைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் சீரழிந்து போயிருப்பேன்… நான் விருது வாங்கும்போது என் மனைவியும் மேடையில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்…’

அதற்குமேல் கண்ணனால் அங்கு இருக்கமுடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியில் வந்தான். அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

மொபைலை எடுத்து அப்பாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினான்.  ‘அப்பா, ஐ லவ் யூ சோ மச்.’

 

மனை

நம்ம சக்திக்கு பக்கத்துல இருக்கிற காரவீட்டைக் கூட வாங்க முடியலையே என்று சலித்துக்கொண்டான் குப்புசாமி. திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கிற கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் தனக்கு, தன் வாடகை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாழடைந்துபோன காரவீட்டைக் கூட வாங்க வக்கில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

மாரி அவனை கேலி பேசினாள். ‘உங்களை கட்டிக்கிட்டு வந்து நான் வாழ்ந்து…’ என்றாள். அவள் இப்படி பேசுவது இது முதல்முறை அல்ல.
எப்படியாவது இந்த இடத்தையும் உடைஞ்சு கிடக்கிற வீட்டையும் வாங்கிடணும் என்று நினைத்துக்கொண்டான். கேட்டவுடன் வீட்டுக்காரன் சலாம் போட்டுக்கொண்டு கொடுப்பான் என்று அவன் நினைத்தது தவறாகப் போனது.

‘காரவீடு இடிஞ்சு பல வருஷமா கிடக்குன்னாலும், இடம் பொன்னுல்லடே’ என்றான் வீட்டுக்காரன். ‘கூடவே பழகினவன் கேக்க, 60,000 ரூபாய்க்குத் தாரேன்’ என்றான். குப்புசாமிக்கு இந்த இடத்தை எப்படியாவது 20,000 ரூபாய்க்கு முடித்துவிட ஆசை. ஆனால் அது இப்போது நிறைவேறாது என்று புரிந்துவிட்டது.

வீட்டுக்காரனிடம் வீராப்பாகப் பேசினான். ‘இந்த இடத்துக்கு எதுக்கு அம்புட்டு ரூவா? எவனும் வாங்கமாட்டான்’ என்றான். வீட்டுக்காரனும் அதை அறுபது ரூபாய்க்கு விற்றுக் காண்பிப்பதாக சவால் விட்டுவிட்டுப் போய்விட்டான்.

எங்கிருந்தோ ஆள்களைக் கூட்டிக்கொண்டுவந்து வீட்டைக் காண்பித்தான் வீட்டுக்காரன். அறுபது ரூபாய்க்கு வாங்கிப் போட்டால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் என்று வந்தவர்கள் பேசிக்கொண்டது குப்புசாமி காதில் விழுந்தது. அவனுக்கு வயிறு எரிந்தது.

வீட்டுக்காரன் போனதும் குப்புசாமி பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினான். அங்கே வீடு பார்க்க வந்தவர்கள் நின்றிருந்தார்கள். எப்படி என்ன பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ஆரம்பித்தான்.

‘வீடு பாக்க வந்தீங்களா?’

‘ஆமாங்க. நீங்க?’

‘நான் அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். நீங்க பாத்தது நல்ல வீடுதான்…’ என்று இழுத்தான்.

வந்தவன் கொஞ்சம் நெற்றியைச் சுருக்கினான்.

‘நல்ல வீடுதான்னா…?’

‘இல்லை, பாத்தா பாவப்பட்ட ஆளுங்களாத் தெரியறீங்க.’

‘விஷயத்தை சொல்லுங்க அண்ணாச்சி’ என்றான் வந்தவன்.

அண்ணாச்சி என்று அழைத்ததைக் கேட்டதும், நம்மிடம் வந்தவன் மாட்டிக்கொண்டான் என்று புரிந்து போயிற்று குப்புசாமிக்கு.

என்னென்னவோ பேசினான். வீடு அத்தனை விலை பெறாது அது இது என்று. ஆனால் வந்தவன் இதற்கெல்லாம் மசியவில்லை.

‘இவ்ளோதானா, நாகூட என்னவோ ஏதோன்னு பதறிட்டேன்’ என்றான்.

‘அது மட்டுமில்லைங்க, இந்த இடத்துல பேய் இருக்குன்னு ஒரு பேச்சு’ என்றான் குப்புசாமி. ஏன் அப்படிச் சொன்னோம் என்பது குப்புசாமிக்கே விளங்கவில்லை.

வந்தவன் பதறிவிட்டான்.

‘என்னது பேயா…’ வாயைத் திறந்தவன் மூடவே இல்லை.

குப்புசாமிக்கு சந்தோஷமாக இருந்தது.

‘ஆமாங்க, சொல்லவேணாம்னு பாத்தேன். ஆனா நீங்களும் நம்மள மாதிரிதான். பணக்காரங்க இல்லை. இருக்கட்டும்னு வாங்குறீங்க. அதை நல்லதா வாங்கவேணாமா? அந்த வீட்டுக்குள்ள என்னவோ ஒரு உருவம் அங்க நிக்கி இங்கன நிக்கின்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு. பலவங்க பாத்ததா சொல்றாங்க. அதாம் வீடு இத்தன நாள் மூடிக்கெடக்கு’ என்றான்.

அவன் மட்டுமல்ல, அதற்குப் பின் வந்த பலருக்கும் இதே போன்ற செய்தி சொல்லப்பட்டது. வீட்டுக்காரன் எத்தனையோ சொல்லியும் அங்கே பேய் இல்லை என்பதை யாருமே நம்பவில்லை.

ஊர் முழுக்க இந்த காரவீட்டில் பேய் இருக்கும் பேச்சு அடிபடத் தொடங்கியது.

குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, ‘என்ன அண்ணாச்சி இது, பேய்க்கு இருக்கவா இடமில்ல, உங்க வீட்டுல வந்து இந்த ஆட்டம் ஆடுதே’ என்பான். வீட்டுக்காரன் ‘எல்லாம் தலையெழுத்து’ என்று சொல்லிக்கொண்டே போய்விடுவான். அவன் தலை மறைந்ததும் இடி விழுந்தது போலச் சிரிப்பான் குப்புசாமி.

மாரி இவனைத் திட்டுவாள். ‘ஒனக்கு அந்த இடத்தை வாங்க வக்கில்லைன்னா விடு. ஏன் அடுத்தவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிற’ என்பாள். இவன் கண்டுகொள்ளவே மாட்டான்.

திடீரென்று ஒருநாள் குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்த்துப் பேசப் போனான்.

‘அண்ணாச்சி, எனக்கு இந்தப் பேய் பிசாசுங்க மேல நம்பிக்கை இல்லை. நீங்க சரின்னா நானே இந்த இடத்தை வாங்கிக்கறேன்’ என்றான்.
வீட்டுக்காரனுக்கும் எப்படியாவது இந்த வீட்டை விற்றால் போதும் என்று இருந்தது. அந்த வீட்டில் பேய் இருந்தாலும் இருக்குமென்றே அவனும் நம்பினான். அதை மறைத்துக்கொண்டு, ‘சரி, உங்களுக்குத் தராம யாருக்குத் தரப்போறேன்’ என்றான்.

‘ஆனா 20,000 ரூபாய்தான் தரமுடியும்.’

‘உங்க மனசுப் போல’ என்றான். ஒருவழியாகப் பேரம் முடிந்தது. வீடும் பணமும் கைமாறியது.

காரவீட்டுக்குள் சந்தோஷமாகக் காலடி எடுத்து வைத்தான் குப்புசாமி.

மாரியிடம் சொன்னான். ‘என்னவோ சொன்னியே… ஒரே வருஷம், நான் நினைச்ச விலைக்கு வாங்கினேன்ல’ என்றான். உடைந்த வீட்டுக்குள் சென்று அங்குமிங்கும் ஓடினான். மாரி தலையில் அடித்துக்கொண்டு வெளியே போனாள்.

வீட்டின் ஒவ்வொரு மூலையில் நின்றும் ஓ என்று கத்தினான். எதிரொலி கேட்டது. மீண்டும் கத்தினான். இந்த முறை இன்னொரு ஓ என்ற சத்தம் கேட்டது. ஆனால் அது எதிரொலி இல்லை. குப்புசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘யார் கத்தினது’ என்றான். பதிலே இல்லை. மீண்டும் ஓ என்று கத்தினான். மீண்டும் ஓ என்ற ஓர் அலறல் கேட்டது. குப்புசாமிக்குப் பயம் வயிற்றைக் கவ்வியது. சரேலென்று ஓர் உருவம் அவன் பின்னாலிருந்து சென்றது போல் இருந்தது. குப்புசாமிக்கு தலை சுற்றத் தொடங்கியது.

 

அப்பா மனசு

“இல்ல சரசு, ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆயிடுச்சுன்னாலே கல்யாணம் பண்ணிரணும்.”

தன் கணவர் கனகலிங்கம் இன்று அவர் சீரியஸாகப் பேசுவது சரசுவுக்குப் புரிந்தது.

“இல்லைங்க நிறைய படிக்கணும்னு நம்ம பொண்ணு ஆசைப்படுது…” அவளும் பேசினாள்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும். நானே படிக்க வைக்கிறேன்.”

“அது எப்படிங்க முடியும்? கல்யாணம் ஆகி புள்ள குட்டின்னு ஆயிட்டா இது எப்படிங்க படிக்கும்?”

“இல்லம்மா, ஒனக்கு நான் சொல்றது புரியலை. பக்கத்து வீட்டுல இருந்த ரோஹிணி என்ன பண்ணா? அவள எத்தன தடவ உன் வாயாலேயே நல்ல பொண்ணுன்னு சொல்லிருப்ப? திடீர்னு ஒருநாள் ஓடிப்போகலயா?”

“அத மாதிரியாங்க நம்ம பொண்ணு?”

“நீ இப்படிக் கேப்பேன்னு தெரியும். நம்ம பொண்ணு நிச்சயம் இப்படி இல்லைதான். ஆனா வயசுன்னு ஒண்ணு இருக்கு பாரு, அது பொல்லாததும்மா… ரோஹிணிக்கு 18 வயசுல கல்யாணம் ஆயிருந்தா, இப்படி வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தனோட ஓடிப் போயிருப்பாளா?”

“அவ மாதிரில்லாம் எம் பொண்ணு செய்யாதுங்க.”

“நீ என்னை மாத்த பாக்காத. இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ண வேண்டியதுதான்.”

தன் கணவனின் வார்த்தைகளில் இருந்த உறுதியைப் பார்த்து அமைதியாகிவிட்டாள் சரசு.

ரூமுக்குள் படித்துக்கொண்டிருந்த செல்வியின் காதுகளில் அத்தனையும் தெளிவாகவே விழுந்தது. அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

“என்னம்மா படிக்கலையா?” என்றார் கனகலிங்கம்.

“அப்பா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு இருந்தேன்பா” என்றாள் செல்வி.

“சொல்லும்மா…”

“என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் டைப் ரைட்டிங் படிக்கப் போற இடத்துல செல்வன்னு ஒருத்தர் இருக்காரு. ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறாரு.  நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்மா. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவர் சொல்லியிருக்கார்பா.”

கனகலிங்கத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்னம்மா சொல்ற? உனக்கு 18 வயசுதாம்மா ஆகுது. முடிவெடுக்கிற பக்குவம் எல்லாம் உனக்கு இருக்கவே இருக்காதும்மா… நீ ஒரு குழந்தைதான் இன்னும். அதைப் புரிஞ்சுக்கோ மொதல்ல. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியாதா…” கனகலிங்கம் படபடவென்று பேசினார்.

செல்வி அவரை நிறுத்தி, “கூல்ப்பா கூல். அது எப்படிப்பா நீங்களே எனக்கு கல்யாணம் செஞ்சா 18 வயசு சரியான வயசாயிடுது. நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணா தப்பான வயசாயிடுது” என்று கேட்டாள்.

கனகலிங்கத்துக்கு வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

“சரிப்பா, நான் உண்மையை சொல்லிடறேன். எனக்கும் செல்வத்துக்கும் எந்த  லவ்வும் இல்லை. நான் உங்க பொண்ணுப்பா. ஆனா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்ப்பா. நல்லா படிச்சு ஒரு வேலைக்குப்போனப்புறம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா” என்று சொல்லிவிட்டு

ரூமுக்குள் போய்விட்டாள்.

கனகலிங்கம் அப்படியே சிலைபோல நின்றிருந்தார்.

 

நட்பு

‘ஏட்டி, தெனோமும் சத்துணவு தின்னுட்டு எங்கட்டி போற?’ என்றான் சமையன். சங்கி என்ற சங்கர கோமதி தினமும் மதியம் எங்கே போகிறாள் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது சமையனுக்கு.

அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் பெரிய தோப்பு போன்ற பகுதியில் இருந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட வேப்ப மரங்கள். படிப்பில் அவளுக்கும் இவனுக்கும்தான் போட்டி. மாறி மாறி முதல் ரேங்க் எடுப்பார்கள். இருவருக்கும் இடையில் எல்லாவற்றிலுமே ஒரு போட்டி நிலவியது.

வரிசையில் நின்று சத்துணவு வாங்கிச் சாப்பிட்டதும் சமையன் உள்ளிட்ட எல்லா மாணவர்களுமே வகுப்பில் உட்கார்ந்து எதைப் பற்றியாவது அரட்டை அடிப்பார்கள். ‘ஏழாம் அறிவுல சூர்யா பின்னிட்டாம்லல…’ ‘வேலாயுதம்தாம்ல காமெடியா இருக்கு. ஏழாம் அறிவு அறுக்குல’. ‘டெண்டுல்கர் நூறு எப்பம்ல அடிப்பாம்?’ ஆனால் சங்கி மட்டும் அங்கே இருக்கமாட்டாள். வகுப்பு தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னே ஓடி வந்து உட்காருவாள். இவ்வளவு நேரம் எங்கே இருந்தாள்? யாருக்கும் தெரியாது.

இன்று சங்கிக்குத் தெரியாமல் அவள் எங்கே போகிறாள் என்பதைப் பார்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் சமையன். அவளுக்குத் தெரியாமல் அவளுக்குப் பின்னே போனான். வகுப்பிலிருந்து கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்று, அங்கே இருந்த இன்னொரு தோப்புக்குள் சென்றாள் சங்கி.

சோலை போல இருந்த அந்த இடத்தில் ஏகப்பட்ட வேப்ப மரங்கள் இருந்தன. அந்த மரங்களுக்குக் கீழே வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். பறவைகள் சூப்பிப் போட்ட வேப்ப முத்துகளும் இருக்கும். அவற்றையெல்லாம் சங்கி பொறுக்குவதை சமையன்  பார்த்தான்.

‘என்னத்தட்டி பொறுக்கிக்கிட்டு இருக்க?’

சங்கி திடுக்கிட்டுப் போனாள். இப்படி வேப்பமுத்து பொறுக்குவதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கிவிடுவானோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

‘ஏல, யார்கிட்டயும் சொல்லிடாதல. இதை விலைக்கு போட்டா காசு தருவாங்க. அதை வெச்சு நான் நோட்ஸ் வாங்குவேம்ல. எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கல, ப்ளீஸ்ல’ என்று அழாத குறையாகக் கெஞ்சினாள்.

‘மாட்டினியாட்டி நீ, எல்லார்கிட்டயும் சொல்லுதெம் பாரு’ என்று சொல்லிவிட்டு ஓடினான் சமையன்.

அன்று மதியம் வகுப்பு தொடங்கியதும் சற்று தாமதமாக வந்தாள் சங்கி. உடனே அறிவியல் டீச்சர், ‘ஏண்ட்டி லேட்டு, எங்கன சுத்திட்டு வார’ என்றார். சட்டென்று சமையன் எழுந்தான். சங்கிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அழுகை வந்தது. சமையன், ‘டீச்சர், அவங்க பாட்டிக்கு ஒடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு பாக்க போனா, உங்ககிட்ட சொல்லச் சொன்னா, நாந்தான் மறந்துட்டேன்’ என்றான்.

சங்கி கண்களாலேயே அவனுக்கு நன்றி சொன்னாள்.

(என் சுயசரிதையில் மட்டுமே இந்நிகழ்வுகளைக் குறிப்பிட எண்ணியிருந்தேன். ஆனாலும் ஒரு பக்கக் கதை எழுதும் சமூகம் என் கதைகளின் வழியே பயனடையட்டும் எனக் கருதி இப்போது வெளியிட்டுள்ளேன். நாளை அடுத்த பாம்.)

Share

தமிழில் உலகத் திரைப்படங்கள் வரிசை – பகடி மற்றும் மகுடி

 

”படம் பார்த்துட்டீங்களா? நல்லா இருக்கா?”

“படம் பார்க்கும்போதே பாதிலயே ஃபேஸ்புக்ல மெசேஜ் போட்டிருந்தேனே. படம் செம மொக்கைன்னு.”

“ஓ ஸ்டேட்டஸ் மெசேஜ் நான் பார்க்கலை. அவ்ளோ மொக்கையாவா இருக்கு?”

“பகடி படத்தைதான கேக்குறீங்க? செம மொக்கைங்க. இடைவேளை வரை உட்கார முடியலை. அதுக்கு பின்னாடி நிக்கக்கூட முடியலை. ஓடித்தான் வெளிய வந்தேன்.”

“ஒருவேளை உங்களுக்கு புரியலையோ?’

“என்னங்க புரியலை? படம் மொக்கைன்றேன். சரி, இந்தப் படத்துல புரியறதுக்கு என்ன இருக்கு? ஒரே சினிமாத்தானம். சகிக்க முடியலை. எப்ப பாரு காதல் காதல்னு. சுதந்திரத்துக்கு முன்னாடி நடக்கற படமாம், அப்பவும் காதலைத்தான் காமிப்பாங்களாம். கருமம்.”

“உங்களுக்கு புரியலையோன்னுதான் தோணுது. உதாரணமா ஒரு சீன் வரும் பாருங்க. கதாநாயகனும் கதாநாயகியும் முதல்ல பார்க்கிற சீன். வாவ், கிளாசிக் இல்ல?”

“என்ன கிளாசிக்? நேரடியா பார்க்கவேண்டியதுதான? அதென்ன கீழ கிடக்கிற மழைத்தண்ணில பார்க்கிறது? சரிங்க, அதுக்கு எதுக்கு அஞ்சு நிமிஷம்? இப்படித்தாங்க படம் முழுக்க மெல்லா போவுது.”

“இல்லைங்க, அது மழைத்தண்ணி. கிட்டத்தட்ட சாக்கடை. அதுல ஹீரோவுக்கு ஹீரோயின் முகம் தெரியுது. ஹீரோயினுக்கு ஹீரோ முகம் தெரியுது. சாக்கடைல மலர்ந்த செந்தாமரை மாதிரி.”

“அடக்க்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை? அது ஒரு குறியீடுங்க. அப்ப மழைத்தண்ணில ஒரு பூ விழுது பார்த்தீங்களா? அது இன்னொரு குறியீடு.”

“என்னங்க இது குறியீடுன்னு சொல்றீங்க? அதுவும் வெறும் குறியீடா வருதே, சாதா சீனே வராதா?”

“முழுசா கேளுங்க, கடவுளே அந்தக் காதலை ஆதரிச்ச மாதிரியான ஃபிரேம்ங்க அது.”

“டைரக்டருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நினைச்சேனே.”

“அஃப்கோர்ஸ். அதான் மழைன்னு இயற்கையை வெச்சார். உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல, ஸோ அது உங்களுக்கு கடவுள்.”

“ஓ, இதெல்லாம் நாமளா வெச்சிக்கிறதுதான் இல்ல?”

“நோ நோ, படத்தோட குறியீடு சொல்ற சங்கதி அது. அந்த சீன்ல, பூ விழுந்த உடனே, தேங்கிக் கிடக்கிற மழைத்தண்ணி லேசா அசைஞ்சு திரும்பவும் ரெண்டு பேரோட முகமும் தெரியுது பாருங்க, ஒரு பெண் ஒரு பூ. அவ வரவும் சலனம். அவளுக்குன்னா, ஒரு ஆடவன் பூ தர்றவன். அவன் வரவும் சலனம். கிளாஸ் இல்லை? அதுமட்டுமில்லை, பின்னாடி வரபோற கஷ்டங்களெல்லாம் தெளிஞ்சு அவஙக் நல்லா வாழ்வாங்கன்னு சொல்ற மாதிரி இல்லை?”

“அப்ப அந்த சீனோட படம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்களா? நான் இது தெரியாம கடைசி வரை இருந்து முழுப்படத்தையும் பார்த்துட்டேனே.”

“சே சே. டைரக்டர் எவ்ளோ ரசிச்சி எடுத்திருக்கான் பாருங்கன்னு சொல்லவந்தேன்.”

“படம் நாம ரசிச்சு எடுக்கத்தான எடுக்கணும்? சரி, அதுக்கும் எதாவது சொல்வீங்க.”

“கதையாவது உங்களுக்குப் புரியுதா?”

“என்னங்க புரிய இருக்கு? ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான். அப்ப சுதந்திரப் போராட்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி அதை எதிர்க்கிறான். ஏன்னா அவனுக்கு இவ மேல ஒரு கண்ணு. இவன் அவனை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறான். இதுல என்ன புரியாம இருக்கு?”

“இல்லைங்க, அப்படி நேரடியா பார்க்கக்கூடாது.”

“படம் பார்க்கும்போது நான் கொஞ்சம் கோணலா தலையை சாச்சுத்தான் பார்ப்பேன். வீட்டுலயே கிண்டல் பண்ணுவாங்க.”

“அதைச் சொல்லலை. ஒரு படத்தை படமா பார்க்கக்கூடாது.”

“ஐயையோ. 30 வருஷமா அப்படித்தானே பார்த்துட்டேன்.”

“அதுதான் உங்க பிரச்சினையே. இப்ப பாருங்க. ஹீரோ ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறதை சும்மா காதலுக்காக எதிர்க்கிறான்னு நினைக்கக்கூடாது. இந்தியனைப் பொருத்தவரை பொண்ணுதான் மண்ணு. மண்ணுதான் நாடு. எனவே அவன் நாட்டுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறான்னு பாக்கணும்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை. அப்படித்தாங்க படத்தை பார்க்கணும்.”

“ஆனா படத்துல அதை சொல்லவே இல்லையேங்க.”

“சொல்லமாட்டாங்க. படம்னா அது கேக்கிறதுக்கு இல்லை. பாக்கிறதுக்கு.”

“என்னங்க மொதல்ல நேரா பாக்ககூடாதுன்னீங்க, இப்ப கேக்கக்கூடாதுன்றீங்க. தியேட்டருக்கு போய் என்னதான் பண்றது?”

“கிண்டல் பண்ணாதீங்க சார்.”

“யாரு நானா?”

“சரி விடுங்க, இப்ப பாருங்க அது வெறும் காதல் கதையாவா தோணுது? ஏன் அதை சுதந்திரக் காலத்துல வெச்சான்னு யோசிங்க. காதல்ங்கிறது ஒரு குறியீடு இங்க.”

“இந்த குறியீடுன்றதுதாங்க எனக்கு புரியலை. படத்துல பாட்டு வருது, ஃபைட்டு வருது, அதெல்லாமேவும் குறியீடுதான்றீங்களா?”

“சே சே. அதெல்லாம் சும்மா சீனுங்க.”

“ஏங்க எப்ப குறியீடு வருது எப்ப சாதா சீன் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஏன் இந்த டைரக்டர் குறியீடு வர்ற சீனெல்லாம் ஒரு ப்ளஸ் சிம்பல் போட்டுக் காமிக்கக்கூடாது?”

“இப்பத்தானே சொன்னேன், படம்ங்கிறது கேக்கிறது இல்லை, பார்க்கிறதுன்னு. நீங்களா யோசிக்கணும் சார்.”

“இல்லைங்க, நானும் ப்ளஸ் சிம்பலை காட்டத்தான் சொன்னேன், ப்ளஸ்னு சொல்லச் சொல்லலை.”

“கிண்டல் பண்ணாதீங்க சார். இன்னும் இது மாதிரி நிறைய சீன் இந்தப் படத்துல இருக்கு. ஒரு சீன்ல பாருங்க, அந்தப் பொண்ணோட அப்பா தற்கொலை பண்ணிக்கிற சீன்ல வெறும் கயிறு மட்டும் ஆடிக்கிட்டே இருக்கு பார்த்தீங்களா?”

“என்னது அவங்க அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரா?”

“ஏன் அதிர்ச்சியாகறீங்க? அவங்க அப்பாதானே?”

“அது இல்லைங்க, அந்த கயிறு ஆடற சீன்ல நானும் அப்படித்தான் நினைச்சேன். நினைச்சேனா. அடுத்த சீன் வந்தது. வந்ததா. அதுல பார்த்தீங்கன்னா அவங்க அப்பா உயிரோட வாரான். அப்பாடின்னு எனக்கு அப்பதான் உசிரே வந்தது.”

“தப்புங்க, உசிரே போயிருக்கணும்.”

“அது படம் முடியும்போது நடந்ததுன்னு வைங்க.”

“சே, நான் அதைச் சொல்லலைங்க. அந்த கயிறு ஆடும்போது அவன் செத்தான்னு நினைச்சீங்களா? அதுவரைக்கும் சரி. அடுத்த சீன்ல அவன் ஏன் உயிரோட வர்றான்? அதுக்குப் பிறகும் ஏன் கயிறு ஆடிக்கிட்டே இருக்கு? ஏன்னா அவன் செத்த பொணமா நடமாடறான்னு அர்த்தம்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை இருக்கு. கயிறு ஏன் ஆடிக்கிட்டே இருக்கு, வீட்டுல அதை யாருமே அவுத்து எறியலையான்னு தோணுனா நீங்க சாதாரணமா பார்க்கிறீங்கன்னு அர்த்தம். ஆனா பாருங்க, அந்த வீட்டுல கயிறே இல்லை. கயிறுன்றது உங்க கற்பனை.”

“ஐயையோ இது பேய்ப்படமா அப்ப?”

“விளையாடாதீங்க சார். உண்மைல உங்க மூலமா படத்தை இயக்குநர் பார்க்கிறார். உங்களுக்கு அவன் செத்துட்டான்னு தோணனும்னு சொல்ல வர்றார். ஆனா பாருங்க அவன் சாகலை. அதாவது படத்தைப் பொருத்தவரைக்கும் சாகலை.”

“புரியலைங்க சார்.”

“இல்லைங்க இது ஒரு உத்தி.”

“மொதல்ல குறியீடுன்னு சொன்னீங்களே, அது மாதிரியா சார்?”

“இல்லைங்க அது குறியீடு. இது உத்தி.”

“ஓ.”

“இப்ப புரியுதா! என்ன உத்தின்னா, படத்தை படமாவும் பார்க்கணும். நீங்களாவும் பார்க்கணும். படத்துல உங்களுக்கே இடம் தர்றது.”

“இல்லைங்க, எனக்கு நடிப்பெல்லாம் வராது.”

“இல்லைங்க, பார்வையாளனா இடம் தர்றது. இது ஒரு உத்தி.”

“அந்நியன் படம் பார்க்கும்போதே நான் இப்படி பார்க்கலையேங்க.”

“அந்நியனெல்லாம் கேக்கிற படம். இது பார்க்கிற படம்.”

“அப்புறம் எதுக்குங்க இந்த படத்துல ம்யூசிக், பாட்டு, வசனமெல்லாம்.”

“குட் கொஸின். உண்மைல சொல்லப்போனா நீங்க ம்யூசிக், பாட்டு, வசனத்தையெல்லாம் கூட பார்க்கணும்.”

“என்ன சார் பயமுறுத்துறீங்க.”

“ஐமீன், அப்ர்சவ் பண்ணனும்னு சொல்லவந்தேன்.”

“அப்சர்வேஷனா? என்னங்க இது பேஷண்ட்டை ஐசியூல சேர்த்திருக்கிற மாதிரி சொல்றீங்க. வெறும் படம்தானே இது.”

“என்னங்க வெறும் படம்னு சொல்லிட்டீங்க. படம் முழுக்க குறியீடு உத்தின்னு கலக்கியிருக்காங்க. பின்நவீனத்துவப் படம். சாதா படத்தை பார்க்கிற கண்ணோட இதையும் பார்க்காதீங்க.”

“காதையும் கழட்டிட்டு கண்ணையும் கழட்டிட்டு நான் என்னத்தைங்க பார்க்கிறது.”

“வித்தியாசமான கண் ஐ மீன் கண்ணோட்டத்தோட பாருங்க. உங்களையும் ஒரு பிரதிக்குள்ள வெச்சிப் பார்க்க வைக்கிற படம் தமிழ்ல இதுதான் முதல்ல வந்திருக்கு. அதான் உங்க குழப்பமே.”

“பின் நவீனத்துவப் படம்னு என்னவோ சொன்னீங்களே, அப்படி ஒரு படம் வந்திருக்கா?”

“அது படம் பேரு இல்லைங்க. அது ஒரு உத்திங்க.”

“அதுவுமா?”

“பின்ன, ஒரு படம்னா சும்மா இல்லைங்க.”

“நான் நெஜமாவே சும்மான்னு நினைச்சுட்டேங்க.”

“அப்படி நினைக்காதீங்க. நீங்க வெறும் 60 ரூபாய் கொடுத்து பார்த்துடறதால உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வருது. இதுவே 6000 ரூபாய் கொடுத்து பார்த்தா இப்படி தோணுமா, யோசிச்சு பாருங்க.”

“ஐயையோ ஒரு படத்துக்கு 6000மா? நினைக்கவே நடுங்குதே. படம் நல்லா இல்லைன்னாகூட நான்லாம் நல்லா இருக்குன்னுதான் சொல்வேங்க.”

“எக்ஸாட்லி.”

“இன்னொரு சீன்ல ஒரு டவுட் எனக்கு. கேக்கவே ஒரு மாதிரி இருக்கு. ஆனாலும் உங்ககிட்ட கேளுங்க.”

“குட் குட் கமான். படத்தை இப்படி பேசிப் பேசித்தான் பார்க்கணும்.”

“தாயோளி, எங்க வீட்ல படம் பார்க்கும்போது பேசாத பேசாதன்னே வளர்த்துட்டானுங்க.”

“கூல், சரி, உங்க டவுட்டை கேளுங்க.”

“படத்துல கடைசி சீன்ல எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஏங்க பொண்ணோட அப்பா அழற மாதிரி வருது? நெஜமாவே புரியலை. நான்கூட அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சேன்.”

“இல்லைங்க, ஒரு படைப்பு முடியும்போதுதான் தொடங்கணும்.”

“என்னங்க இது, முடியும்போது முடிஞ்சாத்தான படம் முடியும். தொடர்ந்தா எப்பத்தான் படம் முடியும்.”

“யூ ஸீ, நீங்க அப்ப வேறாளாயிடறீங்க. நீங்க படத்துல இல்லை. வெளியில இருக்கிறீங்க. படம் என்னவோ திரைல முடிஞ்சிடுது. ஆனா உங்க மனசுல உங்களுக்கு நீங்களே எடுக்கிற படம் முடியறதே இல்லை.”

“நான் படம்லாம் எடுக்கிறதில்லைங்க.”

“நோ நோ, அதைச் சொல்லலை. உண்மைல ஒவ்வொருத்தன்குள்ளையும் ஒரு படம் இருக்கு. ஒரே படம்தான், ஆனா ஒவ்வொருத்தர்குள்ளையும் ஒவ்வொரு மாதிரி இருக்குன்றேன்.”

“புரியலைங்க, ஆனா கேக்க நல்லா இருக்கு.”

“புரியும். அவன் ஏன் அழறான்னு நீங்க யோசிக்கும்போது உங்களுக்கு பல காரணங்கள் வரலாம். இன்னொருத்தருக்கு இன்னும் பல காரணங்கள் வரலாம். அப்ப ஒவ்வொருத்தர் குள்ளையும் பல விதமா படம் தொடருது. அதுக்குத்தான் டைரக்டர் அப்படி அந்த சீனை வெச்சிருக்கார்.”

“அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சதை யோசிச்சா எனக்கே கேவலமா இருக்கு சார். எனக்கெல்லாம் பத்தாது சார். சரி சார், நீங்க யோசிச்சீங்களா சார், உங்களுக்கு என்ன என்ன காரணம்லாம் வந்தது?”

“ஸாரிங்க, நான் ரொம்ப வேலையா இருந்துட்டேன், யோசிக்கலை, ஆனா காரணம் இருக்கும்னு மட்டும் யோசிச்சிக்கிட்டேன். நீங்க சும்மாதானே இருக்கீங்க, யோசிச்சுப் பாருங்க.”

“ஆமா சார், நான்லாம் ரொம்ப வளரணும். இது தெரியாம பகடி படத்தை மொக்கைன்னு சொல்லிட்டேன். திரும்பப் போய் நல்லா இருக்குன்னு சொல்லவும் வெக்கமா இருக்கு.”

“நோ நோ, இதெல்லாம் இலக்கிய உலகத்தில் சாதாரணம்.”

“ஓ அப்படி ஒரு உலகம் இருக்கா சார். என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருக்கு சார்.”

“ஒரு படைப்பை முதல்ல நல்லா இல்லைன்னு சொல்லிட்டு, பின்னாடி அதுதான் உலகத் தரம்னு சொல்றதெல்லாம் இங்கே சகஜம். அதை மீள் பார்வை பண்ணனும். அவ்ளோதான்.”

“ஓ மீள் பார்வை இல்ல? நான் இன்னொரு தடவை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டேன். படைப்பு இல்ல? சே, நான் படம்னு நினைச்சுட்டேன்.”

“வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியா வரும். மொத்தத்துல பகடி ஒரு உலகத் திரைப்படம்.”

“உலகத் திரைப்படமா? டைரக்டர் இதையாவது படத்துல சொல்லிருக்கலாம். நான் ஏதோ குன்னத்தூர் பொட்டைல இருக்கிற ஒருத்தன்ல  கல்லுப்பட்டில இருக்கிற பொண்ணுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கான்னு நினைச்சுட்டேன்.”

“உலகத் திரைப்படம்னு சொல்லமாட்டாங்க. நாம்தான் அதை உலகத் திரைப்படம்னு புரிஞ்சிக்கணும். ஏற்கெனவே சொன்னேனே, ஒரு படம் அது படம் அதோட அது உங்க படம்னு.”

“ஆமா, சொன்னீங்கள்ல. உலக திரைப்படம்னா என்ன சார்.”

“உலகத் திரைப்படம்னா… வெல்… வாட் ஐ கேன் ஸே இஸ்… வெல். ஐ கேன் ஸே இட் அ வேர்ல்ட் மூவி. பிரிஸைஸ்லி வேர்ல்ட் சினிமா”

“வேல்ர்ட் சினிமான்னா?”

“வாட் டூ சே, யெஸ், எக்ஸாட்லி, வேர்ல்ட் கிளாஸ் சினிமா.”

“ஓ. நான் உலக திரைப்படமெல்லாம் பார்த்ததில்லைன்றதால எனக்கு சட்டுன்னு பிடிபடலை. இப்ப கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருக்கு.”

“ஒரு படம் உலகத் திரைப்படமான்னு சொல்றதுக்கு நீங்க உலகத் திரைப்படமே பார்த்திருக்கவேண்டியதில்லைன்றதுதான் இதுல இருக்கிற ஐரனி.”

“ஓ ஐரனி. நாம இன்னும் நிறைய பேசணும் சார்.”

“பேசலாம் இல்லை பிரதர், விவாதிக்கணும். விவாதம். சரியா சொல்லணும், சரியா?”

“சரிங்க, நாம விவாதிப்போம்.”

“சரிங்க, இன்னொரு நாள் பார்ப்போம்.”

.

.

.

“என்ன சார் எப்படி இருக்கீங்க.”

“நீங்க சொன்னதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு நேத்தும் ஒரு படம் பார்த்தீங்க.”

“ப்ரில்லியண்ட். என்ன படம்.”

“மகுடின்னு ஒண்ணு வந்திருக்கே அது.”

“ஓ அதுவா, செம மொக்கையாச்சே.”

“அப்படித்தாங்க நானும் நினைச்சேன். ஆனா விடலை. கண்ணை மூடி கொஞ்ச நேரம், காதைப் பொத்தி கொஞ்ச நேரம், யோசிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம், படம் போனதே தெரியலைங்க. சட்டுன்னு முடிஞ்சிட்டு. செம விறுவிறுப்பு.”

“அடச்சே, அது செம மொக்கை படங்க. அதுல என்ன இருக்குன்னு சொல்றீங்க?”

“என்ன சார் இது. வில்லன் ஹீரோவை அடிக்கிறான். ஹீரோ தோத்துடறான். முந்தாநாள் வரை எனக்கும் இது சப்புன்னுதான் இருந்திருக்கும். ஆனா நீங்கதான் சார் ஒரு படத்தை பார்க்கச் சொல்லிக்கொடுத்தீங்க. தெய்வம் சார் நீங்க. ஹீரோ சேரிலேர்ந்து வர்றான். வில்லன் சிட்டி. சிட்டிக்காரன் சேரியை அடிக்கிறானான்னு யோசிச்சேன் பாருங்க, என் ரத்தமெல்லாம் பொங்கிட்டு. டைரக்டரை நினைச்சுக்கிட்டு ஒரு புல்லரிப்போட அப்படியே கையைத் தட்டுனேன் பாருங்க. பக்கத்துல இருக்கிறவனெல்லாம் மெர்சலாயிட்டான். நல்லவேளை, ஒண்ணு ரெண்டு பேர்தான் இருந்தான்னு வைங்க.”

“இல்லைங்க, இது நீங்களா யோசிக்கிறது. இதுல என்ன குறியீடு இருக்கின்றீங்க.”

“ஆமாங்க, சட்டுன்னு அந்த வார்த்தை ஞாபகத்துக்கு வரலை. குறியீடு. மனசுல வெச்சிக்கணும். என்னா குறியீடு இல்லை?!”

“இல்லைங்க, இதுல குறியீடே இல்லை. எல்லாப் படத்துலயும்தான இப்படி வருது?”

“ஏன், எல்லாப் படத்துலயும் குறியீடு வரக்கூடாதா சார்?”

“அப்படீன்னா அது கிளிஷே.”

“அது யாரு கிளிஷே? அதை நீங்க அன்னைக்கு சொல்லலியே.”

“இல்லைங்க, அது வேற சங்கதி. ஆனா இந்த மகுடி மரண மொக்கைங்க. பகடி மாதிரி வராது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இல்லைங்க, நீங்க அந்தப் படத்தோட டைரக்டர் யாருன்னு பார்த்துட்டுதான் குறியீடா கிளிஷேவான்னு பார்க்கணும்.”

“ஓ அப்படி வேற இருக்கா?”

“ஆமா, நீங்க நாளைக்கு வாங்க, நான் ஒரு லிஸ்ட் தர்றேன், அவங்க படத்துல மட்டும் நீங்க குறியீடு உத்தி பின்நவீனத்துவம் பார்த்தா போதும். மத்த படங்களெல்லாம் கிளிஷே.”

“இது கொஞ்சம் பெட்டரா இருக்குங்க.”

“நவ் யூ அர் கிளியர் ஐ கெஸ்.”

“ஆமாங்க.”

“இப்படியே பார்த்துப் பழகிட்டீங்க நீங்க என்னைவிடப் பெரியாளாயிடுவீங்க.”

“ரொம்ப சந்தோஷம் சார், ரொம்ப தேங்க்ஸ். லிஸ்ட்டை மறந்துடாதீங்க ப்ளீஸ்.”

[ஆப்த நண்பர் ஒருவர் கடல் திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது, சாத்தான் தலைகீழாகத் தொங்கும்போது தேவன் தலைகீழாகத் தெரிகிறார் என்று எழுதியிருந்தார். அதை இன்னொரு ஆப்த நண்பரும் சிலாகித்திருந்தார். அப்போது ஏற்பட்ட கடும் மனநெருக்கடியின்போது எழுதியது இது. அந்த இரு நண்பர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். :>]

Share

செக்யூலரிசம் ஓர் எளிய அறிமுகம்

http://www.tamilhindu.com/2010/05/secularism-an-simple-introduction/

* ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.

* அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம்.

* ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி அரசியல் மேடைகளில் கடுமையாக முழங்குவார்கள். ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பார்கள். ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ கடவுளர்கள் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதுவே செக்யூலரிசம்.

* அல்லா, நபி, ஏசு பற்றி ஏதேனும் கேள்விகளை ஹிந்துத்துவவாதிகள் எழுப்பினால், ‘இது காலம் காலமாகச் சொல்லப்படும் மோசடி’ என்று பதில் சொல்லவேண்டும். இதெல்லாம் பிற்போக்குக் கூச்சல் என்று சொல்லவேண்டும். மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்லவேண்டும். இதுவும் செக்யூலரிசமே.

* கருப்புச்சட்டைக்கு ஆதரவான நடிகர் என்று சொல்லிக்கொண்டு, படத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை கிறித்துவ ஊழியர்களாகக் காட்டவேண்டும். வில்லன்களை ஹிந்துக்களாகக் காட்டவேண்டும். இது செக்யூலரிசத்தின் இன்னொரு விளக்கம்.

*ஹிந்து மதத்தைச் சாடும் திரைப்படம் வந்தால் ஹிந்துத்துவவாதிகள் அதனைத் தடை செய்யப் போராடும்போது, நீங்கள் கலைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடவேண்டும். இது பாதி செக்யூலரிசம். அதுவே மற்ற மதங்களைச் சாடும் படம் வந்தால், கலையையும் அடிப்படை உரிமையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்படுகிறதே என்று அவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும். இது முழு செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். உலகெங்கும் இருக்கும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும்போது, நினைவாக பிராமணர்களை ஒதுக்கிவிடுவார். இதுதான் செக்யூலரிசம்.

* தீர்க்கமுடியாத பிரச்சினை வந்தால், இது பிராமணியத்தின் சதி என்றோ ஹிந்து மதத்தின் சதி என்றோ சொல்லிவிட்டால், நீங்கள் செக்யூலர்.

* மிகப் பெரிய இலக்கியவாதியாக இருப்பார். உலகெங்குமுள்ள நல்ல எழுத்துகளை, புராணங்களைத் தேடிப் படிப்பார். ஹிந்து மத சாஸ்திரங்களை மட்டும் நிந்திப்பார். இந்தப் பிழைக்கத் தெரிந்த வழியின் பெயரும் செக்யூலரிசமே.

* ஊர் ஊராகக் கோவிலுக்குப் போவார்கள். வீட்டில் உள்ள நஞ்சு குஞ்செல்லாம் சாமி கும்பிடும். ஆனால் அவர் பெரிய பகுத்தறிவாளராகத் தன்னைக் காண்பித்துக்கொள்வார். பெரியாரிஸ்டுகளைவிட அதிகமாகப் பெரியாரை மேற்கோள் காண்பிப்பார். இது செக்யூலரிசத்தின் முக்கிய பாடங்களுள் ஒன்றே.

* புராதன ஹிந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் பேசுவதெல்லாம் ’பகுத்தறிவுத்தனமாக’ இருக்கும். மறக்காமல், தனது திருமணத்தையோ, மகள் கல்யாணத்தையோ, ஜாதி பார்த்து, மதம் பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து நடத்திக்கொள்வார். இவரே நம் நாட்டின் சிறந்த செக்யூலர். மற்ற செக்யூலர்களும் இந்த செக்யூலரைப் பார்த்துத் தலையாட்டும்.

* கடவுளே இல்லை என்பார். நோன்புக் கஞ்சி குடிப்பார். ‘நான் பிழைத்தது எல்லாம் வல்ல இயற்கையின் சக்தி’ என்று சொல்லிவிட்டு, இயற்கையை வழிபடுவர்களைக் கிண்டல் செய்வார். இவரும் செக்யூலரே.

* புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்.

* ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

* தமிழுணர்வையும் தமிழனைப் பற்றியும் மேடையாக மேடையாக முழங்கவேண்டும். ஊரில் உள்ள வடமொழிப் பெயர்களையெல்லாம் மாற்றித் தரவேண்டும். உங்கள் பெயரை மாற்றக்கூடாது. இது தமிழுணர்வுதானே என நினைப்பீர்கள். தமிழுணர்விலிருந்து பக்தி வழியாக ஹிந்து மதத்துக்கு வந்து அதனை சாடிவிட்டால், நீங்கள் செக்யூலர்தான்.

* சங்ககாலத் தமிழனுக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பக்கம் சொல்லவேண்டும். ஆனால் அவன் சிந்தித்த ஹிந்து மத பக்தியை இகழவேண்டும். இதை முக்கியமான வேலையாகச் செய்யக்கூடாது. எப்போதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும். இது செக்யூலரிஸத்தின் பிற்சேர்க்கைகளில் ஒன்று.

* ஊரிலுள்ள எல்லாக் கோவிலுக்கும் செல்லவேண்டும். ஏனென்றால் ஒரு செக்யூலரின் மனைவி நிச்சயம் கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருப்பார். ஆனாலும் அசரக்கூடாது. கோவிலுக்குச் செல்வதே அங்கிருக்கும் சிலைகளைப் பார்க்கத்தான் என்ற பாவத்துடன் செல்லவேண்டும். என்னே தமிழனின் கைவண்ணம் என்று பேட்டியும் கொடுக்க உங்களுக்கு வக்கிருக்குமானால், உங்களுக்கு செக்யூலர் மாலைதான். (காலையில் சாப்பிடும்போது இட்லிக்கு உங்களுக்குப் பிடித்த வெங்காய சட்னிக்கு பதிலாக தனக்குப் பிடித்த தேங்காய் சட்னி செய்துவிட்ட மனைவியை கண்டமேனிக்குத் திட்டியதை சுத்தமாக மறந்துவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்தவர் சுந்தந்திரத்தை மனதில் வைத்து கோவிலுக்குச் சென்றேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இதுவும் செக்யூலர் இமேஜையேதான் தரும்.)

விதி 1: இத்தனை விதிகளில் பாதியைக் கடைப்பிடித்தால், நீங்கள் முற்போக்காளர். நான் மிகவும் போராடி இந்த இடத்துக்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்.

விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

Share

துக்ளக்கில் வெளியான கருத்துப்படம் (கார்டூன்)

08.08.2007 இதழில் வெளியான இந்த கார்டூனைப் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கருத்துப்படம் துக்ளக் சத்யாவினுடையது.

Thanks:Thuglak

Share