Archive for பத்திரிகை

காலம் 50வது இதழ்

காலம் 50 வது இதழ். ஒரு சிற்றிதழ், அதிலும் தீவிரமான சிற்றிதழ், 50வது இதழ் என்னும் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்வது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. யாரோ ஒருவரின் அர்ப்பணிப்பும் தியாகமும் இன்றி இச்சாதனை சாத்தியமே இல்லை. இந்த ஒருவருக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் நிச்சயம் உதவி இருப்பார்கள். அவர்களும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்களே. செல்வம் என்ற பெயரே எனக்கு காலம் செல்வம் என்றுதான் பரிட்சயம். காலம் இதழைத் தொடர்ந்து கொண்டு வரும் காலம் செல்வம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

காலம் இதழ் 50 – நிச்சயம் வாசிக்கவேண்டிய இதழ். 176 பக்கங்களில் 150 ரூபாய்க்கு வெளியாகி இருக்கும் இந்த இதழைத் தவற விட்டுவிடாதீர்கள்.

மரிய சேவியர் அடிகளாரின் பேட்டி முக்கியமான ஒன்று. என் கொள்கைச் சாய்வுகளில் வைத்துப் பார்த்தால், என் நண்பர்கள் இதில் கற்கவேண்டியது அதிகம் உள்ளது என்றே சொல்வேன். கிறித்துவம் எப்படி மக்களுடன் இயங்கி கலையினூடாக மக்களைத் தன் வசமாக்குகிறது என்பதை இதில் பார்க்கலாம். என் கொள்கைக்கு எதிர்ச்சார்பு கொண்டவர்கள் இக்கருத்தை நிச்சயம் எதிர்ப்பார்கள். அவர்களுக்கும் இப்பேட்டி ஒரு பொக்கிஷமே.

ஐயர் ஒரு அரிய வகை மனிதர் கட்டுரை – பத்மநாப ஐயருக்கு செய்யப்பட்டிருக்கும் மரியாதை.

தீரன் நௌஷாத்தின் கட்டுரை பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறது. பலருக்கு இக்குறிப்புகள் பின்னாட்களில் உதவலாம். 🙂

காயா – ஷோபா சக்தியின் சிறுகதை. இன்றைய காலங்களில் மிகக் காத்திரமான சிறுகதைகளில் எழுதுபவர்களில் முதன்மையானவர் ஷோபா சக்தி. அக்கதைகளின் வரிசையில் உள்ள கதை அல்ல இது. இது வேறு ஒரு வகையான கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு மனரீதியாக ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அன்று இரவு முழுவதும் இக்கதை என் நினைவில் சுற்றிக்கொண்டே இருந்தது. மிக தொந்தரவு செய்யும் கதை. இத்தொகுப்பின் சிறந்த படைப்பு இது என்பதே என் தனிப்பட்ட ரசனை.

நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு என்ற ஒரு சிறுகதையை அசோகமித்திரன் அவரது நினைவிடுக்குகளில் இருந்து தேடி எழுதி இருக்கிறார்.

அமெரிக்க கடற்படையில் அன்னபூரணி அம்மாள் என்னும் கட்டுரை, அன்னபூரணி என்னும் கப்பலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை. 1930ல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட கப்பல் இது. மிக முக்கியமான கட்டுரை.

பொன்னையா கருணாகரமூர்த்தியின் Donner Wetter கதை, இரண்டு மனிதர்களின் அனுபவங்களை அவர்களுக்கிடையேயான கிண்டல்களைப் படம்பிடிக்கிறது. கதை முழுக்க ஒரு மெல்லிய புன்னகையும் இரு மனிதர்களின் ஈகோவும் பிணைந்து வருகின்றன.

திரைப்பட விழாக்கள் – அன்றும் இன்றும் என்ற கட்டுரை சொர்ணவேல் எழுதியது. பல தகவல்களைத் தரும் முக்கியமான கட்டுரை.

நாஞ்சில் நாடனின் ‘கூற்றம் குதித்தல்’ கட்டுரை வழக்கம்போல நாஞ்சில் நாடனின் தமிழ்த்திறமையை பறைசாற்றுவது.

சிறில் அலெக்ஸின் தீண்டுமை கட்டுரை, தொடுதல் பற்றிய அறிவியல் உண்மைகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மிக நல்ல கட்டுரை.

இவை போக இன்னும் சில கதைகளும் (எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழவன்) கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் கதைகளும் பல கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

காலம் 50 வது இதழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு எண் 635 மற்றும் அந்திமழை அரங்கு எண் 299லும் கிடைக்கிறது.

Share

ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக

லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன. 

நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.

சிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார். 

இன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.

தமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. 

இந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன? ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும். 

சில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.

அ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம்! ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார்! விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

மதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.

இன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.

தமிழறிஞ்சர்களின் எதிர்வினை இங்கே.

ஜெயமோகனின் கட்டுரை இங்கே.

ஜெயமோகனின் எதிர்வினை இங்கே.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.

Share

என் இன்னொரு சிறு கதைமுகம்

நான் மறக்க விரும்பும் இன்னொரு முகம் இங்கே. 🙂 இதில் கட்டுடைப்புகள், இதுதான் நான் எழுதியவற்றிலேயே சிறந்த கதைகள் எனப் பாராட்டுகளைச் செய்து என்னை வெறுப்பேற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். ,முக்கியமான குறிப்பு – இவையெல்லாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை. 🙂

உயிர்

“ஐயா, நம்ம வீட்டுக்கு போலிஸ்காரங்க வந்திருக்காங்க” என்று டாக்டர் சிவாவை எழுப்பினான் வேலைக்காரன்.

சிவா பதற்றத்துடன் வெளியில் வந்தான். இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.

“வளசரவாக்கத்துல ஒரு கார்ல குண்டு வெடிச்சிருக்கு. விசாரணைல அது உங்க கார்னு தெரிஞ்சது டாக்டர். காரை ஓட்டிக்கிட்டுப் போனவர் ஸ்பாட்லயே அவுட்.”

சிவாவுக்கு கை காலெல்லாம் நடுங்கியது. “என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர். நேத்து நைட் என் பிரண்டு ஜீவன் காரை எடுத்துக்கிட்டுப் போனான்.”

இன்ஸ்பெக்டர், “சரி, எங்களுக்கு எதாவது தகவல் தேவைப்பட்டா உங்களை கூப்பிடறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சிவா வீட்டுக்குள் சென்று நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தான். படபடப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

முதல் நாள் இரவு ஜீவன் வீட்டுக்கு வந்ததிருந்தான். கையில் வைத்திருந்த ஃபோட்டோக்களையெல்லாம் காட்டினான். சிவா பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த நிர்வாணப் புகைப்படங்கள். சிவாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்ப நான் அனுப்பின மெயில் பாக்கலையா” – ஜீவன் கேட்டான்.

“இல்லையே…”

“ஓ, சரி. நேர்லயே சொல்றேன். ஜஸ்ட் ஒரு கோடி. உன்கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது. இதெல்லாம் நெட்ல வந்தா என்னவாகும்னு நினைச்சுப் பாரு. நீ ஒரு பெரிய டாக்டர், உங்கம்மா, அப்பா, உன் மனைவி எல்லாருமே டாக்டர்கள். இந்த ஒரு கோடியை ஒரு மாசத்துல சம்பாதிச்சிடலாம்” என்றான் ஜீவன்.

“கூடவே இருந்துட்டு இப்படி துரோகம் பண்றியேடா” என்றான் சிவா.

“உன் கூடவேதான் இருந்தேன், ஆனா உன் கூட சரிசமமா இல்லையே. என்கிட்ட பைக்கே இல்லை, உங்கிட்ட காரே இருக்கு. நானும் எப்பதாண்டா பெரியாளாறது?”

சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து ஜீவன் தலையில் ஓங்கி அடிக்க, ஜீவன் மயக்கமாகிவிட்டான். சட்டென டாக்டர் சிவாவின் மூளை யோசித்தது.

ஜீவனுக்கு ஒரு மயக்க ஊசி. யார் யாருக்கோ ஃபோன். பத்து நிமிடத்தில் நான்கைந்து பேர் வந்து அவன் காரில் குண்டு வைத்துவிட்டு, கேள்வி கேட்காமல், பணம் மட்டும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

ஜீவனைக் காரில் வைத்து, வளசரவாக்கத்தில் ஒதுக்குப்புறத்தில் காரை வைத்துவிட்டு வந்துவிட்டான். காலையில் கார் வெடித்துச் சிதறும்போது  ஜீவனும் சிதறியிருப்பான்.

எல்லாமே கச்சிதமாக நடந்துவிட்டது. சிவா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான். கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான். ஜீவனிடமிருந்து மெயில் வந்திருக்கிறது என்றது கம்ப்யூட்டர். ஜீவன் இதுபற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“சிவா, நான் கேட்கிறது ஜஸ்ட் ஒரு கோடி. இன்னைக்குள்ள தரலை, நாளை காலையில உன் ஃபோட்டோ எல்லாம் நெட்ல வரும். ஆட்டோமேட்டிக்கா வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். நீ பணம் கொடுத்துட்டா, அதை டெலிட் பண்ணிடுவேன். இல்லைன்னா அது தானா நெட்ல வரும்.”

சிவாவுக்கு தலை சுற்றியது.

 

கிரிக்கெட்

ஜஸ்ட் ரெண்டே ரெண்டு பந்து. 47.1ஆவது ஓவரில் ஒரே ஒரு வைட் வீசவேண்டும். அடுத்து 49.4ஆவது ஓவரில் ஒரு நோபால். அவ்வளவுதான். சில கோடிகள் கைக்கு வரும்.

அனுஷனுக்கு படபடப்பாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியில் கலந்துகொள்ளப்போகும் 18 வயசுப் பையன். ரஞ்சி போட்டிகளில் ஓர் இன்னிங்கிஸில் 9 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்து நேரடியாக இந்திய அணிக்குள் வந்தவன் அனுஷன்.
முதல் போட்டியிலேயே இப்படியா! புக்கிகள் என்றார்கள். பணம் என்றார்கள். தனக்கு முதல் போட்டி இது என்றும், இந்தியா தன் தேசம் என்றும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தான். விடாப்பிடியாக இருந்தார்கள். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவனது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று மிரட்டினார்கள்.

அனுஷனுக்கு தன் அண்ணன் தனுஷனின் நினைவு வந்தது. தனுஷன் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதைத் தன் கனவாகக் கொண்டிருந்தவன். 15 வயதில் அவனும் அனுஷனும் திருச்சி பஸ்டாண்டில் ஒரு டிவியில் சச்சின் 100 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதை பட்டப்பகலில் வெயிலில் நின்று பார்த்தவர்கள்.

தனுஷன் சொல்லுவான். நானும் இதை மாதிரி இந்தியாவை ஜெயிக்க வைப்பேண்டா என்று. ஓர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியற அன்று தனுஷன் தூங்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தான்.

தலைவலி என்று ஆஸ்பத்திரிக்கு போனவனுக்கு தலையில் கட்டி என்றார்கள். ஆபரேஷன் என்றார்கள். ஒருநாள் ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டுப் போனார்கள். அனுஷனாவது கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும் என்று கடைசி நிமிடங்களில் அவன் புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தபோது அனுஷனுக்குக் கண்களில் நீர் வழிந்தது.
ஆனால் முதல் போட்டியிலேயே பெட்டிங். மர்ம ஃபோன் ஒன்று, ‘நீ நாங்க சொன்னபடி செய்யலைன்னா, இனிமே என்னைக்கும் நீ

இந்தியாவுக்கு ஆடமுடியாது’ என்றது. அனுஷனுக்கு ஏன் கிரிக்கெட் விளையாட வந்தோம் என்றிருந்தது.

இந்தியா 210 ரன்கள் எடுத்து 47வது ஓவரில் ஆல் அவுட்டாகியது. நியூஸிலாந்து பேட்டிங். 192 ரன்களுக்கு 9 விக்கெட். இன்னும் 18 பந்துகள் பாக்கி. 19 ரன்கள் எடுத்தால் நியூஸிலாந்து ஜெயித்துவிடும். சரியாக 48வது ஓவரை வீச அனுஷனை அழைத்தான் கேப்டன். அனுஷனுக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது.

அரங்கமே நிசப்தத்தில் இருந்தது. சின்ன பையன், அதுவும் முதல் மேட்ச், இவனைப் போய் இந்த நேரத்துல என்று ஸ்டேடியமே முணுமுணுத்தது. அனுஷன் கடவுளையும் தனுஷனையும் நினைத்துக்கொண்டான். ஓடிவந்து கடும் வேகத்தில் கடும் கோபத்தோடு பந்தை வீசினான். சரியான யார்க்கர். பேட்ஸ்மேன் முழித்துக்கொண்டு நிற்க, ஸ்டம்ப் மூன்றும் அந்தரத்தில் பறந்தது. ஸ்டேடியமே ஆர்ப்பரித்தது. அனுஷன் வானத்தில் தனுஷனைத் தேடினான். ‘என் கேரியர் போனாலும் போகட்டும், இந்தியா ஜெயிச்சிடுச்சு இன்னைக்கு, இதுபோதும்’ என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

 

கடவுள்

பிச்சை எடுப்பதுதான் அவனுக்குப் பிழைப்பு. என்ன பெயர் என்றுகூட அவனுக்கு நினைவிருக்காது. ஏன் பிச்சையெடுக்கிறான் என்று கேட்டால் சிரிப்பான். முடிஞ்சா காசு போடு, இல்லைன்னா போ என்றெல்லாம் பதில் சொல்லியிருக்கிறான். கந்தல் ஆடை உடுத்திக்கொண்டு, கையில் ஒரு துணி மூடையைத் தூக்கிக்கொண்டு, பரட்டைத் தலையுடன், கண்கள் எங்கோ அலைமோத, என்னவோ உளறிக்கொண்டு செல்லும் அவனுக்கு இந்த ஊர் வைத்த பெயர் பிச்சைக்காரன்.

நல்ல மதிய வெயில். கடுமையான பசி அவனுக்கு. சோதனையாக யாருமே இன்று காசு போடவில்லை. எங்கே போய் சாப்பிடுவதென்று தெரியவில்லை. கோவிலில் போய் எதாவது சாப்பிடலாமென்றால், இவனை உள்ளேயே விடமாட்டார்கள். ஹோட்டல் பக்கம் போனான்.

சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது. பசி ஹோவென்று சோற்றுக்காக ஏங்கியது. சோறும் குழம்பும்போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே போதை தந்தது. வெளியில் நின்று, வருவோர் போவோர்களிடம் ஐயா பிச்சை என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

யாரோ ஒருவர் நின்று,  ‘பிச்சைனு காசு தரமாட்டேன், ஆனா சோறு வாங்கித் தர்றேன், துன்றியா’ என்றார். விதவிதமான பிச்சைகள். சிலர் காசு தர மறுத்து சோறு வாங்கித் தருவார்கள். ஏற்கெனவே பசியில் இருந்த அவனுக்கு கடவுளே நேரில் வந்து பிச்சை போடுவதுபோலத் தோன்றியது. ‘சரிங்க சாமி’ என்றான்.

அவனை ஹோட்டலுக்குள் விடவில்லை. வந்தவர் சர்வரிடம் சொல்லி ஒரு இலையில் சோறும் குழம்பும் காயும் போட்டுத் தரச் சொன்னார். காசு தந்துவிடுவதாகவும் சொன்னார். சர்வர் நிறைய சோறும் குழும்பும் காயும் போட்டு எடுத்துக்கொண்டுவந்து வெளியில் நின்றுகொண்டிருந்த அவனுக்குக் கொடுத்தான்.

சோற்றைக் கண்டதும் அப்படியே அவுக் அவுக்கென்று தின்றான். தண்ணீர் குடிக்கக்கூடத் தோன்றவில்லை. யாரேனும் சோற்றைப் பிடுங்கிவிடுவார்களோ என்ற அவசரம் தெரிந்தது அவன் வேகத்தில். சோறு வாங்கிக் கொடுத்தவர் அங்கே இருந்து பார்த்தார். அவர் தன்னைப் பார்க்கிறார் என்றதும், மீதிச் சோற்றை எடுத்துக்கொண்டு ஓடினான் அவன்.

நன்றாகத் தின்றுவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கப் போனான். நன்றாக சாப்பிட்டதன் மகிழ்ச்சி உடல் முழுதும். எதிரே வந்தவரிடம் பிச்சை கேட்டான். அவர் உடனே ஐம்பது ரூபாய் பிச்சை போட்டார். அவனுக்கு அதிசயமாக இருந்தது.

கொஞ்ச தூரத்தில் ஒரு பையன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும் சிரித்தான். என்னடா சிரிக்கற என்றான் இவன். இல்லண்ணா, பசிக்குதுண்ணா, சோறே துன்னு நாலு நாளாச்சுண்ணா என்றான். சட்டென்று அவன், ‘வாடா நான் சோறு வாங்கித் தரேன், ஆனா காசு தரமாட்டேன்’ என்று சொல்லி அவனையும் சேர்த்துக்கொண்டு நடந்தான்.

 

அப்பா

இன்று அப்பாவை மேடையில் எல்லார் முன்னாலேயும் கேள்வி கேட்டுவிடவேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவர் வெறும் அப்பா இல்லை, தமிழ்நாடே கொண்டாடும் எழுத்தாளர்.

இன்று அவருக்கு வாழ்நாள் விருது. எல்லாமே சுத்த ஹம்பக் என்று நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவனுக்குத் தெரிந்து அவனது அப்பா என்றைக்குமே அவனது அம்மாவை மதித்துப் பேசியதில்லை. அம்மா என்றாலே அப்பாவுக்குக்

கிள்ளுக்கீரைதான். அம்மாவும் பூம்பூம் மாடு மாதிரி அப்பா எது சொன்னாலும் தலையாட்டுவாள். இவனுக்கு அதைப் பார்த்தாலே பத்திக்கொண்டு வரும்.

ஆனால் ஊரிலோ அப்பாவுக்கு பெரிய எழுத்தாளர் என்று பெயர். பெண்களைக் கொண்டாடுபவர் என்பார்கள். பெண்ணியப் புயல் என்று பட்டம் வேறு!

என்ன ஒரு ஹிபோகிரஸி! இன்று அவர் விருது வாங்கியதும் மேடைக்குச் சென்று மைக்கைப் பிடித்து… அவனுக்குள் ஒரு வெறியே மூண்டது.

அரங்கமே ஆர்ப்பரித்தது. என்ன என்னவோ பாராட்டிப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் எழுத்தாளர் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல, ‘பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுதியதைவிட நம் பெண்ணியப் புயல் எழுதியது அதிகம்’ என்று சொன்னார். சாம்பாரில் ஒருநாள் உப்பு கூடிவிட்டால் இந்தப் பெண்ணியப் புயல் அம்மாவிடம் எப்படிக் கரையைக் கடக்கும் என்று தனக்குத்தானே தெரியும் என நினைத்துக்கொண்டான் கண்ணன்.

இன்னொரு எழுத்தாளர் அப்பாவை, ‘தமிழகத்தின் முன்னோடி பெண்ணிய எழுத்தாளர்’ என்று புகழ்மாலை சூட்டினார். அதனால்தான் எல்லாப் பெண்களும் அவரை விழுந்து விழுந்து படிப்பதாகச் சொன்னார். இன்றோடு எல்லாப் பெண் ரசிகைகளும் காலி என்று கண்ணன் நினைத்துக்கொண்டபோது அவனுக்குள் ஒரு குரூர மகிழ்ச்சி பரவியது.

விருதைப் பெற்றுக்கொண்டார் எழுத்தாளர். கைத்தட்டு விண்ணைப் பிளந்தது. இதுதான் கடைசி கைத்தட்டு என்பதுபோல கண்ணனும் கைத்தட்டினான். எழுத்தாளர் பேசப் போனார்.

கண்ணன் அடுத்தது தான் பேசவேண்டும் என்பதற்கு வசதியாக, முன்வரிசையில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

எழுத்தாளர் பேசினார். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தொடக்கத்திலேயே தன் மனைவியைப் பற்றிப் பேசினார். ‘அவள் இல்லையென்றால் நான் இன்று உங்கள்முன் ஒரு மனிதனாகவே நின்றிருக்கமுடியாது. நாயினும் கேவலமான ஒரு மிருமாகவே அலைந்துகொண்டிருப்பேன்’ என்றார். கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவர் இன்னும் சொன்னார். ‘என் மனைவி யாரை கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் இதைவிட நன்றாக இருந்திருப்பாள். ஆனால் நான் என் மனைவியைத் தவிர யாரைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் சீரழிந்து போயிருப்பேன்… நான் விருது வாங்கும்போது என் மனைவியும் மேடையில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்…’

அதற்குமேல் கண்ணனால் அங்கு இருக்கமுடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியில் வந்தான். அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

மொபைலை எடுத்து அப்பாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினான்.  ‘அப்பா, ஐ லவ் யூ சோ மச்.’

 

மனை

நம்ம சக்திக்கு பக்கத்துல இருக்கிற காரவீட்டைக் கூட வாங்க முடியலையே என்று சலித்துக்கொண்டான் குப்புசாமி. திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கிற கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் தனக்கு, தன் வாடகை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாழடைந்துபோன காரவீட்டைக் கூட வாங்க வக்கில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

மாரி அவனை கேலி பேசினாள். ‘உங்களை கட்டிக்கிட்டு வந்து நான் வாழ்ந்து…’ என்றாள். அவள் இப்படி பேசுவது இது முதல்முறை அல்ல.
எப்படியாவது இந்த இடத்தையும் உடைஞ்சு கிடக்கிற வீட்டையும் வாங்கிடணும் என்று நினைத்துக்கொண்டான். கேட்டவுடன் வீட்டுக்காரன் சலாம் போட்டுக்கொண்டு கொடுப்பான் என்று அவன் நினைத்தது தவறாகப் போனது.

‘காரவீடு இடிஞ்சு பல வருஷமா கிடக்குன்னாலும், இடம் பொன்னுல்லடே’ என்றான் வீட்டுக்காரன். ‘கூடவே பழகினவன் கேக்க, 60,000 ரூபாய்க்குத் தாரேன்’ என்றான். குப்புசாமிக்கு இந்த இடத்தை எப்படியாவது 20,000 ரூபாய்க்கு முடித்துவிட ஆசை. ஆனால் அது இப்போது நிறைவேறாது என்று புரிந்துவிட்டது.

வீட்டுக்காரனிடம் வீராப்பாகப் பேசினான். ‘இந்த இடத்துக்கு எதுக்கு அம்புட்டு ரூவா? எவனும் வாங்கமாட்டான்’ என்றான். வீட்டுக்காரனும் அதை அறுபது ரூபாய்க்கு விற்றுக் காண்பிப்பதாக சவால் விட்டுவிட்டுப் போய்விட்டான்.

எங்கிருந்தோ ஆள்களைக் கூட்டிக்கொண்டுவந்து வீட்டைக் காண்பித்தான் வீட்டுக்காரன். அறுபது ரூபாய்க்கு வாங்கிப் போட்டால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் என்று வந்தவர்கள் பேசிக்கொண்டது குப்புசாமி காதில் விழுந்தது. அவனுக்கு வயிறு எரிந்தது.

வீட்டுக்காரன் போனதும் குப்புசாமி பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினான். அங்கே வீடு பார்க்க வந்தவர்கள் நின்றிருந்தார்கள். எப்படி என்ன பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ஆரம்பித்தான்.

‘வீடு பாக்க வந்தீங்களா?’

‘ஆமாங்க. நீங்க?’

‘நான் அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். நீங்க பாத்தது நல்ல வீடுதான்…’ என்று இழுத்தான்.

வந்தவன் கொஞ்சம் நெற்றியைச் சுருக்கினான்.

‘நல்ல வீடுதான்னா…?’

‘இல்லை, பாத்தா பாவப்பட்ட ஆளுங்களாத் தெரியறீங்க.’

‘விஷயத்தை சொல்லுங்க அண்ணாச்சி’ என்றான் வந்தவன்.

அண்ணாச்சி என்று அழைத்ததைக் கேட்டதும், நம்மிடம் வந்தவன் மாட்டிக்கொண்டான் என்று புரிந்து போயிற்று குப்புசாமிக்கு.

என்னென்னவோ பேசினான். வீடு அத்தனை விலை பெறாது அது இது என்று. ஆனால் வந்தவன் இதற்கெல்லாம் மசியவில்லை.

‘இவ்ளோதானா, நாகூட என்னவோ ஏதோன்னு பதறிட்டேன்’ என்றான்.

‘அது மட்டுமில்லைங்க, இந்த இடத்துல பேய் இருக்குன்னு ஒரு பேச்சு’ என்றான் குப்புசாமி. ஏன் அப்படிச் சொன்னோம் என்பது குப்புசாமிக்கே விளங்கவில்லை.

வந்தவன் பதறிவிட்டான்.

‘என்னது பேயா…’ வாயைத் திறந்தவன் மூடவே இல்லை.

குப்புசாமிக்கு சந்தோஷமாக இருந்தது.

‘ஆமாங்க, சொல்லவேணாம்னு பாத்தேன். ஆனா நீங்களும் நம்மள மாதிரிதான். பணக்காரங்க இல்லை. இருக்கட்டும்னு வாங்குறீங்க. அதை நல்லதா வாங்கவேணாமா? அந்த வீட்டுக்குள்ள என்னவோ ஒரு உருவம் அங்க நிக்கி இங்கன நிக்கின்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு. பலவங்க பாத்ததா சொல்றாங்க. அதாம் வீடு இத்தன நாள் மூடிக்கெடக்கு’ என்றான்.

அவன் மட்டுமல்ல, அதற்குப் பின் வந்த பலருக்கும் இதே போன்ற செய்தி சொல்லப்பட்டது. வீட்டுக்காரன் எத்தனையோ சொல்லியும் அங்கே பேய் இல்லை என்பதை யாருமே நம்பவில்லை.

ஊர் முழுக்க இந்த காரவீட்டில் பேய் இருக்கும் பேச்சு அடிபடத் தொடங்கியது.

குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, ‘என்ன அண்ணாச்சி இது, பேய்க்கு இருக்கவா இடமில்ல, உங்க வீட்டுல வந்து இந்த ஆட்டம் ஆடுதே’ என்பான். வீட்டுக்காரன் ‘எல்லாம் தலையெழுத்து’ என்று சொல்லிக்கொண்டே போய்விடுவான். அவன் தலை மறைந்ததும் இடி விழுந்தது போலச் சிரிப்பான் குப்புசாமி.

மாரி இவனைத் திட்டுவாள். ‘ஒனக்கு அந்த இடத்தை வாங்க வக்கில்லைன்னா விடு. ஏன் அடுத்தவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிற’ என்பாள். இவன் கண்டுகொள்ளவே மாட்டான்.

திடீரென்று ஒருநாள் குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்த்துப் பேசப் போனான்.

‘அண்ணாச்சி, எனக்கு இந்தப் பேய் பிசாசுங்க மேல நம்பிக்கை இல்லை. நீங்க சரின்னா நானே இந்த இடத்தை வாங்கிக்கறேன்’ என்றான்.
வீட்டுக்காரனுக்கும் எப்படியாவது இந்த வீட்டை விற்றால் போதும் என்று இருந்தது. அந்த வீட்டில் பேய் இருந்தாலும் இருக்குமென்றே அவனும் நம்பினான். அதை மறைத்துக்கொண்டு, ‘சரி, உங்களுக்குத் தராம யாருக்குத் தரப்போறேன்’ என்றான்.

‘ஆனா 20,000 ரூபாய்தான் தரமுடியும்.’

‘உங்க மனசுப் போல’ என்றான். ஒருவழியாகப் பேரம் முடிந்தது. வீடும் பணமும் கைமாறியது.

காரவீட்டுக்குள் சந்தோஷமாகக் காலடி எடுத்து வைத்தான் குப்புசாமி.

மாரியிடம் சொன்னான். ‘என்னவோ சொன்னியே… ஒரே வருஷம், நான் நினைச்ச விலைக்கு வாங்கினேன்ல’ என்றான். உடைந்த வீட்டுக்குள் சென்று அங்குமிங்கும் ஓடினான். மாரி தலையில் அடித்துக்கொண்டு வெளியே போனாள்.

வீட்டின் ஒவ்வொரு மூலையில் நின்றும் ஓ என்று கத்தினான். எதிரொலி கேட்டது. மீண்டும் கத்தினான். இந்த முறை இன்னொரு ஓ என்ற சத்தம் கேட்டது. ஆனால் அது எதிரொலி இல்லை. குப்புசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘யார் கத்தினது’ என்றான். பதிலே இல்லை. மீண்டும் ஓ என்று கத்தினான். மீண்டும் ஓ என்ற ஓர் அலறல் கேட்டது. குப்புசாமிக்குப் பயம் வயிற்றைக் கவ்வியது. சரேலென்று ஓர் உருவம் அவன் பின்னாலிருந்து சென்றது போல் இருந்தது. குப்புசாமிக்கு தலை சுற்றத் தொடங்கியது.

 

அப்பா மனசு

“இல்ல சரசு, ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆயிடுச்சுன்னாலே கல்யாணம் பண்ணிரணும்.”

தன் கணவர் கனகலிங்கம் இன்று அவர் சீரியஸாகப் பேசுவது சரசுவுக்குப் புரிந்தது.

“இல்லைங்க நிறைய படிக்கணும்னு நம்ம பொண்ணு ஆசைப்படுது…” அவளும் பேசினாள்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும். நானே படிக்க வைக்கிறேன்.”

“அது எப்படிங்க முடியும்? கல்யாணம் ஆகி புள்ள குட்டின்னு ஆயிட்டா இது எப்படிங்க படிக்கும்?”

“இல்லம்மா, ஒனக்கு நான் சொல்றது புரியலை. பக்கத்து வீட்டுல இருந்த ரோஹிணி என்ன பண்ணா? அவள எத்தன தடவ உன் வாயாலேயே நல்ல பொண்ணுன்னு சொல்லிருப்ப? திடீர்னு ஒருநாள் ஓடிப்போகலயா?”

“அத மாதிரியாங்க நம்ம பொண்ணு?”

“நீ இப்படிக் கேப்பேன்னு தெரியும். நம்ம பொண்ணு நிச்சயம் இப்படி இல்லைதான். ஆனா வயசுன்னு ஒண்ணு இருக்கு பாரு, அது பொல்லாததும்மா… ரோஹிணிக்கு 18 வயசுல கல்யாணம் ஆயிருந்தா, இப்படி வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தனோட ஓடிப் போயிருப்பாளா?”

“அவ மாதிரில்லாம் எம் பொண்ணு செய்யாதுங்க.”

“நீ என்னை மாத்த பாக்காத. இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ண வேண்டியதுதான்.”

தன் கணவனின் வார்த்தைகளில் இருந்த உறுதியைப் பார்த்து அமைதியாகிவிட்டாள் சரசு.

ரூமுக்குள் படித்துக்கொண்டிருந்த செல்வியின் காதுகளில் அத்தனையும் தெளிவாகவே விழுந்தது. அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

“என்னம்மா படிக்கலையா?” என்றார் கனகலிங்கம்.

“அப்பா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு இருந்தேன்பா” என்றாள் செல்வி.

“சொல்லும்மா…”

“என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் டைப் ரைட்டிங் படிக்கப் போற இடத்துல செல்வன்னு ஒருத்தர் இருக்காரு. ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறாரு.  நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்மா. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவர் சொல்லியிருக்கார்பா.”

கனகலிங்கத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்னம்மா சொல்ற? உனக்கு 18 வயசுதாம்மா ஆகுது. முடிவெடுக்கிற பக்குவம் எல்லாம் உனக்கு இருக்கவே இருக்காதும்மா… நீ ஒரு குழந்தைதான் இன்னும். அதைப் புரிஞ்சுக்கோ மொதல்ல. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியாதா…” கனகலிங்கம் படபடவென்று பேசினார்.

செல்வி அவரை நிறுத்தி, “கூல்ப்பா கூல். அது எப்படிப்பா நீங்களே எனக்கு கல்யாணம் செஞ்சா 18 வயசு சரியான வயசாயிடுது. நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணா தப்பான வயசாயிடுது” என்று கேட்டாள்.

கனகலிங்கத்துக்கு வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

“சரிப்பா, நான் உண்மையை சொல்லிடறேன். எனக்கும் செல்வத்துக்கும் எந்த  லவ்வும் இல்லை. நான் உங்க பொண்ணுப்பா. ஆனா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்ப்பா. நல்லா படிச்சு ஒரு வேலைக்குப்போனப்புறம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா” என்று சொல்லிவிட்டு

ரூமுக்குள் போய்விட்டாள்.

கனகலிங்கம் அப்படியே சிலைபோல நின்றிருந்தார்.

 

நட்பு

‘ஏட்டி, தெனோமும் சத்துணவு தின்னுட்டு எங்கட்டி போற?’ என்றான் சமையன். சங்கி என்ற சங்கர கோமதி தினமும் மதியம் எங்கே போகிறாள் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது சமையனுக்கு.

அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் பெரிய தோப்பு போன்ற பகுதியில் இருந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட வேப்ப மரங்கள். படிப்பில் அவளுக்கும் இவனுக்கும்தான் போட்டி. மாறி மாறி முதல் ரேங்க் எடுப்பார்கள். இருவருக்கும் இடையில் எல்லாவற்றிலுமே ஒரு போட்டி நிலவியது.

வரிசையில் நின்று சத்துணவு வாங்கிச் சாப்பிட்டதும் சமையன் உள்ளிட்ட எல்லா மாணவர்களுமே வகுப்பில் உட்கார்ந்து எதைப் பற்றியாவது அரட்டை அடிப்பார்கள். ‘ஏழாம் அறிவுல சூர்யா பின்னிட்டாம்லல…’ ‘வேலாயுதம்தாம்ல காமெடியா இருக்கு. ஏழாம் அறிவு அறுக்குல’. ‘டெண்டுல்கர் நூறு எப்பம்ல அடிப்பாம்?’ ஆனால் சங்கி மட்டும் அங்கே இருக்கமாட்டாள். வகுப்பு தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னே ஓடி வந்து உட்காருவாள். இவ்வளவு நேரம் எங்கே இருந்தாள்? யாருக்கும் தெரியாது.

இன்று சங்கிக்குத் தெரியாமல் அவள் எங்கே போகிறாள் என்பதைப் பார்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் சமையன். அவளுக்குத் தெரியாமல் அவளுக்குப் பின்னே போனான். வகுப்பிலிருந்து கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்று, அங்கே இருந்த இன்னொரு தோப்புக்குள் சென்றாள் சங்கி.

சோலை போல இருந்த அந்த இடத்தில் ஏகப்பட்ட வேப்ப மரங்கள் இருந்தன. அந்த மரங்களுக்குக் கீழே வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். பறவைகள் சூப்பிப் போட்ட வேப்ப முத்துகளும் இருக்கும். அவற்றையெல்லாம் சங்கி பொறுக்குவதை சமையன்  பார்த்தான்.

‘என்னத்தட்டி பொறுக்கிக்கிட்டு இருக்க?’

சங்கி திடுக்கிட்டுப் போனாள். இப்படி வேப்பமுத்து பொறுக்குவதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கிவிடுவானோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

‘ஏல, யார்கிட்டயும் சொல்லிடாதல. இதை விலைக்கு போட்டா காசு தருவாங்க. அதை வெச்சு நான் நோட்ஸ் வாங்குவேம்ல. எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கல, ப்ளீஸ்ல’ என்று அழாத குறையாகக் கெஞ்சினாள்.

‘மாட்டினியாட்டி நீ, எல்லார்கிட்டயும் சொல்லுதெம் பாரு’ என்று சொல்லிவிட்டு ஓடினான் சமையன்.

அன்று மதியம் வகுப்பு தொடங்கியதும் சற்று தாமதமாக வந்தாள் சங்கி. உடனே அறிவியல் டீச்சர், ‘ஏண்ட்டி லேட்டு, எங்கன சுத்திட்டு வார’ என்றார். சட்டென்று சமையன் எழுந்தான். சங்கிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அழுகை வந்தது. சமையன், ‘டீச்சர், அவங்க பாட்டிக்கு ஒடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு பாக்க போனா, உங்ககிட்ட சொல்லச் சொன்னா, நாந்தான் மறந்துட்டேன்’ என்றான்.

சங்கி கண்களாலேயே அவனுக்கு நன்றி சொன்னாள்.

(என் சுயசரிதையில் மட்டுமே இந்நிகழ்வுகளைக் குறிப்பிட எண்ணியிருந்தேன். ஆனாலும் ஒரு பக்கக் கதை எழுதும் சமூகம் என் கதைகளின் வழியே பயனடையட்டும் எனக் கருதி இப்போது வெளியிட்டுள்ளேன். நாளை அடுத்த பாம்.)

Share

அம்புலிமாமா, துளிர்

அம்புலிமாமா: கடந்த மூன்று மாதங்களாக அம்புலிமாமா வாசித்துவருகிறேன். அபிராமுக்காக அரவிந்தன் நீலகண்டன் சந்தா செலுத்தியிருந்தார். அதிலிருக்கும் கதைகளை அபிராமை வாசிக்கச் சொல்வதும், நான் அதை வாசித்து அபிராமுக்குக் கதை சொல்வதுமே நோக்கம். தமிழில் குழந்தைகளுக்கென நல்ல நூல்கள் வருவதாகத் தெரியவில்லை. எந்த வயதினருக்கு என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கத் தரவேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நிலையில், நம் முன்னே புத்தகங்கள் தமிழில் கொட்டிக் கிடக்கவில்லை. அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றை நான் சின்ன வயதில், நூலகங்களிலும், அதை வாங்கும் நண்பர்கள் வீட்டிலும் காத்திருந்து வாசித்திருக்கிறேன். இன்று பாலமித்ரா வருகிறதா எனத் தெரியவில்லை. முதன்முதலில் சிறுவர் மலர் வந்தபோது அருமையான படக்கதைகள் வந்தன. இதற்காகவே வெள்ளி காலை எழுந்ததும் என் நண்பன் வீட்டுக்கு ஓடுவேன். எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் பேப்பரே வாங்கமாட்டார்கள். அவ்வளவு கஷ்டம். அப்போது எனக்கு 10 வயது இருக்கலாம்.

பின்பு கல்லுப்பட்டியில் படிக்கும்போது அங்கே இருக்கும் நூலகத்துக்குச் சென்று படிப்பேன். சரியாக இந்த அம்புலிமாமா, பாலமித்ராவை யாராவது எங்காவது ஒளித்து வைத்திருப்பார்கள். அதை நாம் கண்டுபிடித்து படித்துவிட்டு அடுத்தமுறை வந்ததும் படிக்க மீண்டும் அதை ஒளித்துவைத்துவிட்டு வரவேண்டும். மதுரையில் அழகரடியில் உள்ள நூலகத்திலும் அம்புலிமாமா, பாலமித்ராவுக்கு ஒரு பெரிய வரிசையே இருக்கும். கையில் கிடைப்பதே பெரிய விஷயம். 

இப்போதைய அம்புலிமாமாவைப் படிக்கும்போது இப்படி பழைய ஞாபகங்கள் வருகின்றன. ஹிந்து தர்மம் நோக்கிலான சிறுவர் கதைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே என் நோக்கம். அம்புலிமாமாதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு. 

மூன்று இதழ்கள் வாசித்ததில் இருந்து எனக்கு உருவான கருத்துகள். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தரத்தை அப்படியே காத்து வைத்திருப்பது ஒரு பெரிய சாதனை. சந்தேகமேயில்லை. அதிலும் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதையைப் படிக்கும்போது, முதல் சில வரிகளும், கடைசி சில வரிகளும் அப்படியே உள்ளதைப் பார்க்கும்போது, சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று அபிராமில் பார்க்கிறேன். இரண்டாவது இதழ் வாசிக்கும்போது, போன மாசம் வந்த அதே கதைதாம்ப்பா என்று சொல்லிவிட்டான். பின்பு நான் விளக்கியதும்தான், ஆரம்ப வரிகள் ஒன்றாகவும், பிறகு கதை மாறியும் வரும் என அவனுக்குப் புரிந்தது. விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் இப்போது டிவியில் அச்சுபிச்சுத்தனமாக வருகின்றன. அதைப் பார்த்துப் பழக்கப்பட்ட சிறியவர்களுக்கு, இக்கதைகள் பிடிக்குமா அல்லது வெறுக்குமா எனச் சொல்லத் தெரியவில்லை. அபிராமுக்கு ஓரளவு பிடித்திருந்தது என்றே நினைக்கிறேன். கதைகள் கொஞ்சம் நீளம் என்றே நினைக்கிறான்.

ஒன்றிரண்டு ஒரு பக்கக் கதைகள் வருகின்றன. அவற்றை உடனே படித்துவிடுகிறான். இந்த ஒரு பக்கக் கதைகளின் பிரச்சினை, வரிகளை உடைக்காமல் நீளமாக எழுதுவது. கமா போட்டு எழுதிக்கொண்டே போய்விடுகிறார்கள். ஐந்திலிருந்து எட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பது நல்லது. என்ன ஆரம்பித்தோம், எங்கே முடிகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதில் ஏழு வயது அபிராமுக்குச் சிக்கல் உள்ளது. படிக்க படிக்க சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒரு பக்கக் கதைகளை இன்னும் அதிகம் தந்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள நான்கைந்து பக்கக் கதைகளை படித்துவிடுகிறான். அதில் சிக்கல் வருவதில்லை. பள்ளியில் தரப்பட்ட பயிற்சி காரணமாக இருக்கலாம். பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றிருந்தபோது, பல நல்ல சிறுவர் ஆங்கில நூல்கள் 50% தள்ளுபடியில் கிடைத்தன. அள்ளிக்கொண்டு வந்தேன். சிறிய அழகான புத்தகமாக, நான்கைந்து பக்கங்களில் ஒரு கதைகள். இப்படி 10 கதைகள் அடங்கிய ஒரு புத்தகம். இதுபோல 20 புத்தகங்களாவது வாங்கியிருப்பேன். ராமாயணம், மகாபாரதம் படக்கதைகள் கிடைத்தன. வாங்கவில்லை. அடுத்தமுறை வாங்கவேண்டும். படக்கதைகள் போல சிறுவர்களுக்குப் பிடித்துப்போவது வேறொன்றில்லை. புத்தகத்தைப் படிப்பது மகிழ்ச்சி தருவது என்பதைவிட, நாம் புத்தகம் படிக்கிறோம் என்ற கர்வமே அபிராமுக்கு அதிகம் உள்ளது. 🙂

அம்புலிமாமாவின் இன்னொரு பயன், இதிலிருக்கும் கதைகளைப் படித்துவிட்டு கலந்துகட்டி நாமாக ஒரு கதையை உருவாக்கி தினம் சொல்லிவிடலாம். அந்த வகையில் அம்புலிமாமாவுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

படக்கதைகள் அபாரம். படக்கதைகளில் உள்ள வரிகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கிறார்கள் போல. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். 

அம்புலிமமாவின் இதழ் வடிவம் மாறியிருக்கிறது. கல்கி தந்த கலாசாரா ஷாக்கெல்லாம் இல்லை. பெரிய சைஸிலும் இதழ் நன்றாகவே உள்ளது. ஒரு முக்கியமான சௌகர்யம், எழுத்துரு கொஞ்சம் பெரிதாக உள்ளது. சிறுவர்கள் படிக்க ஏதுவாக இருக்கிறது. ஜனவரி சிறப்பிதழ் மட்டுமே வடிவம் மாற்றப்பட்டுள்ளதா, முழுக்கவே இதழ் வடிவம் மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை. ஃபிப்ரவரி இதழ் இன்னும் வரவில்லை. இதழ் எப்போது கைக்குக் கிடைக்கும் என்றே தெரிவதில்லை. இது ஒரு குறை.

நகைச்சுவைத் துணுக்குகள் வருகின்றன. சில துணுக்குகள் அபாரம். சில புளித்துப்போனவை. ஆனாலும் சிறுவர்களுக்கு புன்னகையைப் பூக்க வைக்கும் என்பது நிச்சயம்.

ஆங்கிலத்தில் சந்தாமா ஜூனியரை அபிராமுக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆன்லைனில் சந்தா செலுத்த: www.chandamamashop.com. சந்தா செலுத்துபவர்கள் கவனத்துக்கு, 40 முதல் 45 நாள்கள் ஆகுமாம் முதல் இதழைப் பெற.

துளிர். நான் 8ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு துளிர் அறிமுகமாகியது. மதுரையில் என் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ஓர் இதழை இலவசமாகக் கொடுத்தார்கள். அந்த இதழ் நல்ல இதழ் என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். அதற்குப் பின்பு துளிர் இதழைப் படித்ததில்லை. அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன் துளிர் என்ற பெயரை. ஆனாலும் இதழ் பற்றிய ஒரு நல்ல எண்ணம் மனத்தில் இருந்தது. சரி, அதையும் வாங்குவோம் என்று அபிராமுக்காக சந்தா செலுத்தினேன். ஏண்டா வாங்கினோம் என்ற எண்ணத்தைத் தந்திருக்கிறது துளிர். யாருக்காக இதழ் வருகிறது, என்ன பேசுகிறோம், என்ன நோக்கம் என எல்லாவற்றிலும் குழப்பமே எஞ்சுகிறது. இது எந்த வயதினருக்கு என்பதை இன்னும் என்னாலேயே யூகிக்கமுடியவில்லை. இதையும் 3 இதழ்கள்தான் படித்திருக்கிறேன். இன்னும் 3 இதழ்கள் பார்த்துவிட்டு மேலே சொல்கிறேன். முதல் 3 இதழ்கள் தந்த அனுபவம் அத்தனை நன்றாக இல்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன். இத்துடன் சேர்த்து ஓர் ஆங்கில இதழுக்கும் சந்தா செலுத்தினேன். அது குப்பை.

Share

எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம்

எக்ஸைல் நாவலுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் வந்து ஓய வேண்டிய நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா பற்றிய கட்டுரையா என்ற ஜெர்க் ஆகவேண்டாம். இதை எழுதி மாதங்கள் ஆகின்றன.

கிழக்கு ‘ஆழம்’ என்று ஒரு மாத இதழைக் கொண்டு வர இருக்கிறது. 

அதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஓர் இதழைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யவேண்டிய ஆயத்த வேலைகளில் ஏற்பட்ட எதிர்பாராத தாமத்தினால் இதழ் கொஞ்சம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இந்த இதழ் எப்போதிலிருந்து வாசகர்கள் கைகளில் கிடைக்கும் என்பதைப் பற்றி பத்ரி தனியே எழுதுவார். இப்போதைக்கு ‘ஆழம்’ இதழில் வெளியான என் கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ‘ஆழம்’ இதழில் சில எடிட்டிங்குடன் வெளியானது.

என் கட்டுரையை வெளியிட்ட ‘ஆழம்’ பத்திரிகைக்கும், அதன் பதிப்பாளர்-ஆசிரியர் பத்ரிக்கும் பொறுப்பாசிரியர் மருதனுக்கும் என் நன்றி. 

மரபுகள் கலைக்கப்படும் தருணம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல், டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. சாருவின் நாவல்கள் எவ்விதக் கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் வெளியேறத் துடிப்பவை. சாரு சிறப்புக் கவனம் எடுத்து இதனைச் செய்கிறாரா அல்லது அவரது இயல்பான நாவல் வடிவமே கட்டுக்குள் அடங்காமல் திமிறுவதுதானா என்ற விவாதம் எப்போதும் தமிழ் இலக்கிய உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்களும் நாவல் வெளியீடுகளும், காதும் காதும் வைத்தமாதிரி ரகசியக் கூட்டங்கள் நடைபெறுவது போல் நடந்தால்தான் இலக்கியத்தன்மையைப் பெறும். ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு மூன்று இலக்கங்களில் பார்வையாளர்கள் வந்துவிட்டால் உண்மையில் அது தீவிர இலக்கியக்  கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே தீவிர இலக்கிய ஆர்வலர்களின் துணிபு. சாரு இதனையும் உடைக்கவேண்டியவராகிறார்.

இலக்கிய கூட்டத்தின் ஒலிபெருக்கிகள் ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறிடி’ என்று அலறுவதைக் கேட்க ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும். அராபியப் பாடல் ஒலிக்க வாலி பேச ஓர் இலக்கியக் கூட்டத்தின் மரபுகள் அத்தனையும் காமராஜர் அரங்கத்தில் கலைத்துப் போடப்பட்டன. ஜோல்னாப் பை இல்லாமல் கோட் சூட் போட்டு மேடையேறினார் சாரு. இதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அது நமக்குத் தேவையற்றதே. விஷயம், சாரு மேடை மரபுகளைக் கலைக்கிறார் என்பதே. 

சாருவே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியின் ஆற்றொழுக்கைக் குலைத்து குலைத்து, இது ஒரு மரபுகளற்ற மேடை என்பதை நிறுவுவதில் குறியாக இருந்தார். இப்படி மரபுகள் கலைக்கப்படும்போதெல்லாம் சாருவின் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினார்கள். வொய் திஸ் கொலைவெறி பாடல் ஒலிபரப்பட்ட நோக்கம் அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு இடைவெளியிலும் சீழ்க்கையின் வழியே பரவிய தருணம் அது.

இலக்கியக் கூட்டத்தின் இன்னொரு புதுமையாக, எக்ஸைல் நாவலின் முதல் பிரதி 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் மேடைக்கு வரவில்லை. மற்ற சில கொலைவெறித் தற்கொலைப் படை சாருவின் ரசிகர்களும் அவரவர்க்கு ஏற்ற சக்தியில் ஏலம் எடுத்திருந்தார்கள் என்னும் செய்தியும் சொல்லப்பட்டது. நெடுங்கால இலக்கிய மரம் விதையூன்றப்பட்ட நிமிடம் அது என உவப்பானார்கள் சாருவின் ரசிகர்கள்.

தான் ஏன் புத்தகத்தை வெளியிட வாலியை அழைத்தேன் என்பதற்கு சாரு வெளிப்படையாகச் சொன்ன காரணம், தன் இலக்கிய வாழ்வில் தன்னைப் புகழ்ந்த ஒரே வெகுஜன விஐபி வாலி மட்டும்தான் என்பதே. ஆனந்த விகடனில் வாலி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ தொடரில் வாலி சாருவைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். வாலி இதுவரை தன் வாழ்நாளில் எதற்கும் சமரசமே செய்ததில்லை என்னும் வாலிக்கே தெரியாத ரகசியத்தைச் சொன்னார் சாரு. ஆனால் அதே ‘நினைவு நாடாக்கள்’ தொடரில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’ என்று எழுதிய வரியை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிர்ப்பந்ததுக்கு இணங்க ‘கைதொழும் தேவதை அம்மா’ என்று மாற்றி எழுதியதை எரிச்சலுடன் பதிவு செய்திருந்தார் வாலி. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வாலியும் மேடையில் பேசும்போது தனக்கு சமரசம் செய்து பழக்கமில்லை என்ற அர்த்தத்தில் ‘எந்த இசையமைப்பாளரின் கருணையும் எனக்குத் தேவையில்லை’ என்றார். 80 வயதில் முழங்குவது எளிது. சாருவின் வெளிப்படைத் தன்மையைப் பற்றிப் பேசிய வாலி, தான் இந்த விழாவுக்கு வந்ததே சாருவின் புகழ் உலகறியவேண்டும் என்பதற்காகவே என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியும் சமரசம் செய்ததில்லை என்றார் சாரு. தன் புத்தகத்தை வெளியிட வரும் விருந்தினர்கள் சமரசமற்றவர்கள் என்று சொல்வதில் சாரு எடுத்துக்கொண்ட கவனம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

ஏன் செக்ஸைப் பற்றி எழுதக்கூடாது என்பதே இபாவின் ஒட்டுமொத்தப் பேச்சின் ஒருவரி சாராம்சமாக இருந்தது. டெல்லியில் வாழ்ந்த காலங்களில் என்றெல்லாம் எங்கெங்கோ அலைபாய்ந்து மீண்டும் சாருவின் எக்ஸைல் நாவலில் செக்ஸ் இருந்தால் என்ன தவறு என்ற புள்ளிக்கு வந்து சேர்ந்தார் இபா. இது சாஃப்ட் போர்னோ அல்ல, ஹார்ட் போர்னோ என்றார். செக்ஸைக் குற்றவுணர்ச்சியோடு அணுகுபவர்கள் படிக்கக்கூடாத நாவல் என்றார். என்ன தோன்றியதோ இபாவுக்கு, திடீரென்று, இப்படியெல்லாம் சொல்வதால் நான் இப்படித்தான் என்று அர்த்தமல்ல என்றார். இதேபோன்று தற்காப்புக் கலையை இரண்டு இடங்களில் பயன்படுத்தினார். இவருக்கும் 80 வயது. 80 வயது மூத்த எழுத்தாளர்கூட மேடையில் தான் இப்படி அல்ல என்கிற டிஸ்கிளெய்மரோடு பேசவேண்டியிருக்கிறது. அதுவும் சாருவின் கூட்டத்தில். என்னவொரு முரண்நகை!

விழாவுக்கு வந்திருந்த மதனைப் பேச அழைத்தார் சாரு. மதன் தன்னை நாவலில் பாதித்த விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்திருக்கும் அம்சங்கள் பற்றியும் தெளிவாகப் பேசினார். உலக எழுத்துகளைப் படித்திருக்கும் தன்னால், சந்தேகமே இல்லாமல் இந்நாவல் ஓர் உலகத்தரமான நாவல் என்று சொல்லமுடியும் என்றார். இந்திரா பார்த்தசாரதியும் வாலியும் பேசியிருந்தாலும், மதனின் பேச்சே சாருவின் நாவலை மிகச் சரியாகத் தொட்டுப் பேசக்கூடியதாக அமைந்தது. 

சாரு தன் வலைத்தளத்தில், முகநூலில் தன் வாசகர் வட்டத்திலும் இந்நூலுக்கு தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓர் எழுத்தாளன் தன்னை ஏன் இப்படி மார்க்கெட்டிங் செய்துகொள்ளவேண்டும் என்ற இலக்கியக் கேள்வி ஒருபுறம். ஓர் எழுத்தாளன் தனது புத்தகங்களை விற்க தன்னால் இயன்றதை ஏன் செய்யக்கூடாது என்னும் உலக நிர்ப்பந்தம் மறுபுறம். எப்போதும் மரபுகளைக் கலைத்துப்போட விரும்பும் சாரு இலக்கிய மரபின் பக்கம் நிற்காததே யதார்த்தம். இல்லையென்றால், எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் விசிலடிக்கும் ரசிகர்களையோ, விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே கர்ம சிரத்தையாக எக்ஸைலின் ஒரு பிரதியை வாங்குவதைக் கடமையாகக்கொண்ட வாசகர்களையோ நாம் பார்க்கவே முடியாது. 

சாருவின் ரசிகர்கள் இந்நாவலை வாங்கலாமா வேண்டாமா அல்லது ஏன் வாங்கவேண்டும் என்னும் உளச்சிக்கல்களுக்குள் இறங்குவதே இல்லை. சாருவின் நாவல் என்பதே தாங்கள் வாங்கத்தான் என்ற தோரணையில் சாருவின் ரசிகர்கள் நாவலை வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. இது இலக்கியத்தின் போக்குக்கு உகந்ததா அல்லது இலக்கியத்திலிருந்து முற்றிலும் பிரித்தறியப்படவேண்டியதா என்பது தனிக்கேள்வி. இக்கேள்விகூட இலக்கியவாதிகளுக்கு உரியதே அன்றி, அவரது ரசிகர்கள் ஒருபோதும் இக்கேள்வியை எண்ணிப் பார்க்கப்போவதுகூட இல்லை. ரசிகர்களின் உடனடிக் கேள்விகளெல்லாம், திருவிழாவுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று சாரு அறிவிக்கப்போகிறார் என்பதில் மட்டுமே.

ஆனால் சாருவைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது கட்டாயமாகிறது. இதுவரை சாரு என்பவர் தன் வழியை தன் கர்வத்தால் நிர்ணயிப்பவராகவும், அவரது வாசகர்கள் அவரது வழியை ஏற்றுக்கொள்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். சாருவே தொடக்கப்புள்ளி. அவரது வாசகர்கள் தொடர்புள்ளிகளே. ஆனால் இப்போதைய சாருவிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இணையம் சாருவைப் பாதித்திருக்கும் விதம் ஆய்வுக்கு உரியது. சாரு தன் ரசிகர்களின் கட்டாயங்களுக்கேற்ப இயங்குவது போன்ற தோற்றம் வலுவடைகிறது. வாசகர்கள் என்பவர்கள் ரசிகர்களாகும் ரசவாதத்தை சாரு ரசிக்கிறாரோ என்கிற எண்ணம் வலுப்படுகிறது. சாரு என்னும் ஓர் முன்னாள் இலக்கியவாதியின் இந்தத் தடம்பெயர்வு ரசிக்கத்தக்கதல்ல. நீண்டகால நோக்கில் இலக்கியம் என்னும் ஆதார விழுமியத்துக்கு இது கேட்டையே விளைவிக்கும். சாரு தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் கேள்விகளை டிசம்பர் 6ல் உருவாக்கி அமைதியானது காமராஜர் கலையரங்கம்.

எக்ஸைல் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க Dial For Books 94459 01234 | 9445 97 97 97

Share

துக்ளக் பிடித்த பதிலும் கார்ட்டூனும்

இந்த வார துக்ளக் படித்ததில் பிடித்த பதிலும் கார்ட்டூனும்.

Image hosting by Photobucket

பதிலுள்ள நகைச்சுவைக்காகப் பிடித்தது. அதிலும் கடைசிவரியில் அதிகம் சிரித்துவிட்டேன்.

-oOo-

Image hosting by Photobucket

கார்டூனுக்காகப் பிடித்தது.

நன்றி: துக்ளக்

Share