Archive for புத்தகக் கண்காட்சி

Swasam Subscription Scheme – SSS

சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme

தினந்தோறும் புத்தகத் திருவிழா

எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா?

இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS

மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.)

இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

• இத்திட்டத்தில் சேர நுழைவுக் கட்டணம் ரூ 299. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் இந்தச் சந்தாவைப் புதுப்பிக்கவேண்டும். (இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் இந்த 299 ரூபாய் மதிப்பிற்கும் நீங்கள் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.)

• நீங்கள் சந்தாதாரர் ஆனதும் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் எங்களிடம் தள்ளுபடியுடன் புத்தகம் வாங்கலாம்.

• 500 ரூபாய் வரை புத்தகம் வாங்கினால் 15% தள்ளுபடி. 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் 20% தள்ளுபடி.

• சுவாசம் பதிப்பகம் மட்டுமின்றி வேறு எந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கினாலும் இந்தத் தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கும்.

• 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால், இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் இந்தியா முழுமைக்கும் இலவசமாக உங்களுக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். கொரியர் மூலம் புத்தகத்தைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் கொரியருக்கான பணத்தைத் தரவேண்டும்.

• இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசம் நேரடியாகப் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் நீங்கள் இச்சலுகையைப் பெறலாம்.

• சுவாசத்தின் நேரடிப் புத்தகக் கடைகளிலும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசத்தின் சமூக ஊடகங்கள் அதாவது வாட்ஸப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், திரெட், டிவிட்டர் மூலமும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

• வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் பங்குபெறலாம். புத்தகம் அனுப்புவதற்கான செலவை நீங்கள் ஏற்கவேண்டும்.

• எங்களிடம் கிடைக்காத புத்தகங்கள் இருந்தால், அவற்றை வாங்கித் தர இயன்ற அளவுக்கு முயல்வோம். அப்படி வாங்க முடியாத பட்சத்தில் உங்களிடம் சொல்லிவிடுவோம்.

• சுவாசம் விற்பனை செய்யாத பதிப்பகமே இல்லை என்பதால், இத்திட்டம் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

• புத்தக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் ஏற்ற அருமையான திட்டம் இது. (**பள்ளிப் புத்தகங்களுக்கும் கைடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது**.)

• எங்களிடம் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பது உங்களுக்குக் கூடுதல் சலுகை.

• எங்களிடம் கிடைக்கும் புத்தகங்களை எங்கள் வலைத்தளம் www.SwasamBookart.comல் பார்க்கலாம். இதில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களும் ஸ்டாக்கில் இருக்கும் என்று சொலல முடியாது. ஆனால் இப்புத்தகங்கள் பதிப்பாளரிடம் ஸ்டாக்கில் இருக்குமானால் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாங்கித் தருவோம்.

இத்திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இன்றே இதில் இணைவீர்.

கூகிள் ஃபார்ம் லின்க்: https://forms.gle/3RvHUbZ8YVixGhey9

Share

சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியாக மாறி இருப்பது மிகவும் முக்கியமான முன்னெடுப்பு. இதைச் செய்த அரசுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

டெல்லி புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலும் பிசினஸ் டூ பிசினஸ் என்பதாகவே விற்பனை இருக்கும். அதில் இப்படி காப்புரிமை வாங்கி பல மொழிகளில் மொழிபெயர்க்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். இன்றைய பதிப்புலகம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விவாதங்களும் கருத்தரங்கங்களும் நடந்துகொண்டே இருக்கும். பல மொழிகளைச் சேர்ந்த பல முன்னணி பதிப்பாளர்கள் பேசுவார்கள். அதிலிருந்து ஓர் ஒட்டுமொத்தச் சித்திரம் கிடைக்கும்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இதை இந்த ஆண்டுதான் தொடங்கி இருக்கிறார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இவையெல்லாம் இன்னும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். அப்போது நம் பதிப்புலகம் சார்ந்த இந்திய மற்றும் உலக அளவிலான பார்வை விரிவு பெறும். இது சென்னைக்கு எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். சரி, இப்போதாவது தொடங்கி இருக்கிறதே என மகிழ்ச்சியடையலாம். அரங்கு அனைவருக்கும் ஒதுக்குவதில் இருந்து, அரங்கைப் பதிப்பகங்கள் தங்கள் வசதிப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பது வரை இந்தப் பார்வை விரிவடைய வேண்டும்.

இந்தியப் புத்தகக் கண்காட்சிகளில் பிஸினஸ் டூ கஸ்டமர் எனப்படும் வியாபாரத்தில், எனக்குத் தெரிந்து சென்னை முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் புத்தகக் கண்காட்சிக்குத் திரளும் மக்கள் வெள்ளம் நிஜமான ஒரு சாதனை. 40 வருடங்களுக்கும் மேலாக இதை வளர்த்திருக்கிறார்கள். இந்நேரம் இது உலகப் புத்தகக் கண்காட்சியாகவும் முதலிடத்துக்கு வந்திருக்கவேண்டும். நம் விரிவான பார்வைக் குறைபாட்டால் இதை இத்தனை நாள் தவற விட்டிருக்கிறோம்.

இன்று பல பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்கள் பல மொழிகளுக்கும் செல்வதையும், பல மொழிகளில் இருந்து தமிழுக்குப் புத்தகங்கள் வருவதையும் குறிப்பிட்டுப் பதிவிட்டு மகிழ்கிறார்கள். எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. இன்றைய மகிழ்ச்சி என்பது, ஒரு தொடக்கத்தின் மகிழ்ச்சி மட்டுமே. பல படிகள் தாண்டியே ஒரு புத்தகம் இன்னொரு மொழியில் வெளி வரும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் புத்தகங்கள் கொண்டு வந்து நாம் பழகிவிட்டோம். எனவே அதே போல் எல்லா மொழிகளிலும் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. பெரிய வேலை இது. 1700 ஒப்பந்தங்கள் போடப்பட்டால் அதில் 100 புத்தகங்கள் ஆங்கிலம் அல்லாத வேற்று மொழியில் வந்துவிட்டாலே அது சாதனைதான்.

எனவே ஒப்பந்த மகிழ்ச்சியோடு நின்றுவிடாமல், அதைத் தொடர்ந்து செயல்படுத்திக் காண்பிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. பிற மொழிகளில் வரும்வரை தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட சக பதிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

Share

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான்கு நாள்கள் இருந்ததில் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்தும் என் தனிப்பட்ட புரிதல்கள். உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் புத்தகத் தொழிலைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். நன்மைகளும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. பெரிய பதிப்பகங்களைப் பொறுத்தவரை இந்த பிஓடி ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் போடவேண்டிய முதலீட்டைக் குறைத்திருக்கிறது. பெரிய அளவிலான புத்தகத் தேக்கமே இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

* சிறிய பதிப்பகங்களைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் அடித்துக்கொள்ளலாம் என்ற ஆசுவாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பிஓடி அதன் உச்சத்தில் இருக்கிறது.

* இன்று ஒருவர் பிஓடி அச்சகத் தொழிலைத் தொடங்கி மார்க்கெட்டில் நிலவுவதைவிடக் கொஞ்சம் குறைவாகக் கொடுத்தாலும் போதும், பெரிய அளவில் வெற்றி பெறலாம். புத்தக அச்சுக்கு பிஓடி அத்தனை தேவையானதாக மாறி இருக்கிறது. பெரிய தேவை, ஆனால் நிறைவேற்றித் தர குறைவான பிஓடி அச்சகங்கள் என்ற நிலை நிலவுகிறது.

* பிஓடி தொழில்நுட்பத்தால் எந்த ஒரு எழுத்தாளரும் தன் புத்தகத்தைப் பதிப்பிக்க முடிகிறது. இதன் பாதகம் என்று பார்த்தால், குவிந்து கிடக்கும் புத்தகங்களில் யார் எந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தது என்று நினைவில் வைக்க முடிவதில்லை. எந்த எழுத்தாளர் எழுதியது என்பதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடிவதில்லை. ஒரு பதிப்பாளர் மூலம் வரும்போது இந்தச் சிக்கல் குறைவாக இருந்தது.

* இதனாலேயே இன்று ஒரு பதிப்பாளரை விட ஒரு விற்பனையாளர் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவாகிறது. ஒரு பதிப்பாளருக்குத் தெரிந்திருக்கும் ஒரு புத்தகத்தைவிட ஒரு விற்பனையாளருக்கு அதைப் பற்றித் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

* ஒப்பீட்டளவில், கொரோனாவுக்கு முன்பிருந்த விற்பனை இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. என்னிடம் பேசிய அனைத்துப் பதிப்பாளர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். புத்தகங்கள் பரவலாகப் பல பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களில் சுய உருவாக்கம் மூலம் வருவதால் விற்பனையும் பிரிந்து போயிருக்கலாம். ஆன்லைன் மூலம் வாங்குவது அதிகரித்திருப்பதாலும் இருக்கலாம்.

* தொடர்ச்சியாக 16 நாள்கள் புத்தகக் கண்காட்சி என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அலுப்பைத் தரும் விஷயம் இது. ஒவ்வொரு முறையும் 11 நாள்கள் போதும் என்று பேசினாலும், புத்தகக் கண்காட்சி நடத்தும்போது 16 நாள்களில் வந்து முடிந்துவிடுகிறது. இன்னொரு கோணத்தில் யோசித்தால், இந்த நாள்களில் இத்தனை விற்பனை கூட சாதாரணமாக ஒரு கடையிலோ அல்லது பதிப்பகத்திலோ இருப்பதில்லை என்பதால், 16 நாள்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்றும் சொல்லலாம்.

* பொங்கலை ஒட்டிய சனி ஞாயிறுகளில், பொங்கல் அல்லாத சனி ஞாயிறு அளவுக்குக் கூட்டம் இருக்காது. இந்த முறையும் அப்படியே. பலர் ஊருக்குப் போயிருப்பார்கள். எனவே அடுத்த சனி ஞாயிறு இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சியின் ஒட்டுமொத்த விற்பனையை இறுதி செய்யும் நாள்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே பதிப்பாளர்களின் விற்பனை குறித்த கருத்து இறுதி வடிவம் பெறுவது, எதிர்வரும் சனி ஞாயிறு விற்பனையைப் பொறுத்தே அமையும்.

* நடிகர்கள் மட்டுமே செலிபிரிட்டி என்கிற நிலை மாறி, யூ ட்யூப் சானல்களில் வருபவர்களும் செலிபிரிட்டியாகி இருக்கிறார்கள். மக்கள் இவர்களுடன் ஆர்வமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

* சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மெனக்கெட்டு வந்து மக்கள் புத்தகங்களை வாங்கக் குவிவது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான ஒன்றுதான். புத்தகம் வாங்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. எப்படியும் நமக்குத் தெரிந்த அல்லது நாம் முடிவுசெய்துவிட்ட புத்தகங்களைத்தான் வாங்கப் போகிறோம். இருந்தாலும் மக்கள் இத்தனை வெயிலில், இத்தனை வியர்வைக்கிடையில் புத்தகம் வாங்க வருகிறார்கள். இந்த வகையில் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒரு மாபெரும் சாதனைதான்.

* பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நல்ல முயற்சி இது. சரியாகத் திட்டமிட்டால் பத்து வருடங்களுக்குள் இது மாபெரும் சாதனையாக மாறும் வாய்ப்பிருக்கிறது. இந்த மூன்று நாள்களோடு இந்தப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை மறந்துவிடாமல், தொடர்ந்து இதைப் பற்றி யோசித்து, செயலாற்றி வருவதும் முக்கியம். நீண்ட கால நோக்கில் பதிப்பாளர்கள் பலருக்கு இது பயனுள்ளதாக அமையும்.

Share

Book fair thoughts

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நகைச்சுவையாக ஃபேஸ்புக்கில் எழுதிய தெறிப்புகளின் தொகுப்பு! #நகைச்சுவை

”சார்.. எனக்கு டிஸ்கவுண்ட்டே வேண்டாம். சொன்னா கேளுங்க..”
“ஐயையோ.. அதெப்படிங்க? புத்தகக் கண்காட்சில 10% டிஸ்கவுண்ட் குடுத்தே ஆவணும்..”
“இல்ல சார். டிஸ்கவுண்ட்டோடதான் நான் புத்தகம் வாங்கணும்னா எனக்கு அப்படி ஒரு புத்தகமே வேணாம்! புத்தகத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்!”
“டிஸ்கவுண்ட் இல்லாமத்தான் நான் புத்தகம் விக்கணும்னா அப்படி விக்கவே வேணாம். புத்தகக் கண்காட்சிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்..”
*
நைட்டெல்லாம் இதோட ஒரே ரோதனை. தள்ளிப் படுங்க! நிம்மதியா தூங்க முடியுதா?


சார், பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு புக் பாத்தேன் சார். யார் எழுதினதுன்னு ஞாபகம் இல்ல. யார் போட்டதுன்னும் மறந்துட்டேன். அட்டை சேப்பு கலர்ல இருக்கும் சார். நாவலா சிறுகதையா கட்டுரையான்னு சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது. அந்தப் புத்தகம் கிடைக்குமா சார்?

நேத்து பத்து புத்தகம் வாங்கினேன். வீட்ல போய் பாத்தா பதினொன்னு இருக்கு சார். இந்தாங்க சார்.
உங்களை போல வாசகர்கள் இருக்கிறதாலதான்..
ரெண்டு பக்கம் படிச்சிப் பாத்தேன். தப்புன்னு தோணிச்சி சார்.

வாசகர்: போன வருஷம் வாங்கின புக்ஸையே படிச்சி முடிக்கல. அதான்..

பதிப்பாளர்: போன வருஷம்‌ போட்ட புக்ஸையே வித்து முடிக்கல. நாங்க புது புக் போடலியா? கூச்சப்படாம வாங்குங்க சார்.

மனசே சரியில்லை சார்.
என் புத்தகத்தைப் படிங்க..
அதுக்கப்புறம்தான் சார்..

‘தூரம் போகும் பறவைகள்’ நாவல் பேரை அடுத்த ப்ரிண்ட்லயாவது ‘தூரமாகப் போகும் பறவைகள்’னு மாத்திருங்க சார், ப்ளீஸ்.

சார்.. புத்தக அட்டை பிரமாதம்.
தேங்க்ஸ் சார்.
அட்டை மட்டும் தனியா கிடைக்குமா சார்? பத்து ரூபா வேணா குடுத்துர்ரேன்..

ஆடியோ புக் என்ற பெயரில் ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் சிடி விற்பனை செய்தவருக்கு போலீஸார் எச்சரிக்கை.

என்ன சார் தமிழ் இது. ஒரு வரி கூட புரியலை. நானும் கடைசி வரை ஒரு வரி விடாம படிச்சி பாத்துட்டேன். எப்படி சார் இதையெல்லாம் ப்ரிண்ட் பண்றீங்க?”

“படிக்காமதான் சார்”

ட்ரைன்ல ஏறினா அடுத்து இறங்குறதுக்குள்ள படிச்சி முடிக்கணும். அப்படி எதுனா இருக்கா சார் உங்க ஸ்டால்ல?
நாங்க ட்ரைன் டிக்கெட் விக்கிறதில்லைங்க.

சார், உங்க புத்தகமெல்லாம் விலை கூடிக்கிட்டே போகுது..
இதுவே சினிமாக்குன்னா.. ஹோட்டலுக்குன்னா..
அதில்ல சார். விலை எவ்ளோ வேணா வெச்சிக்கோங்க. புத்தகம்‌ பத்து பக்கத்துக்குள்ள இருந்தா நல்லருக்கும்.

வாசகர்: நேத்து வாங்குன உங்க நாவல்ல பத்து பக்கம் ப்ரிண்ட்டே ஆகாம வெள்ளையா இருக்கு சார்.
ஹரன் பிரசன்னா: ஸாரி சார். ப்ரிண்ட்டிங் மிஸ்டேக். மாத்தி குடுத்துடறேன் சார்.
வாசகர்: நோ நோ. அந்தப்‌ பத்துப் பக்கம்தான் க்ளாஸ். அதுவே இருக்கட்டும்.

பின் நவீனத்துவ நாவல் என்று சொல்லி புத்தக விலைப்பட்டியலை விற்க முயன்றவரால் புத்தகக் காட்சியில் பரபரப்பு.

கொரானாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற நூலால் கொரானா பரவுமா என்று கேட்ட அப்பாவியை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வரலாற்றைத் திறந்த மனதுடன் அணுகி அதைத் திருகலின்றிப் பதிவு செய்யவேண்டும்.

– ஒரு கம்யூனிஸ்ட்டின் வெளிப்படையான ரகசியக் குறிப்பிலிருந்து.

சார், நல்ல புக்ஸ் நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.
இப்படி கேட்டீங்கன்னா நான் எழுதின எல்லா புத்தகத்தையுமே உங்களுக்கு சொல்ல வேண்டி வரும்.
அதில்ல சார்.. நல்ல புக்ஸா நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.

எழுத்தாளரின் ஆன்மா: என் எல்லா‌ புத்தகமும் ஸ்டால்ல இருக்கா?
பதிப்ப்பாளரின் ஆன்மா: ப்ரின்ட்ல இருக்கு சார். எப்ப வேணா வரலாம்.

சார், புத்தகத்தை எடுத்தா கீழ வைக்க முடியக் கூடாது. அப்படி ஒரு புக் வேணும்!
அதுக்கு நீங்க பைண்டிங் ஆஃபிஸ்க்குத்தான் போகணும். அங்கதான் பசை ஒட்டி காய வெச்சிருப்பாங்க.

புத்தகத்துக்கு 10% டிஸ்கவுண்ட் ஒரு தடவையா இரண்டு தடவையா என்று கேட்ட நபரை‌ பதிப்பாளர்கள் விரட்டியடித்தனர்.

“பில்லிங் க்ளோஸ் பண்ணிட்டோம் சார்..”
“சார்.. தாம்பரத்துல இருந்து வரேன் சார்! எங்கல்லாம் தேடினேன் சார் இந்த புக்கை! என்னா ட்ராஃபிக்.. அதான் லேட்டாயிடுச்சு சார்.. இந்த ஒரு‌ புக் மட்டும் பில்‌ போட்ருங்க சார்.. ப்ளீஸ் சார்.”
அவர் கையில் இருந்த பொன்னியின் செல்வனைப் பார்த்த பதிப்பாளர் மயக்கமடித்தார். அடுத்த வருடம்தான் மயக்கம் தெளியும்.

புத்தகக் கண்காட்சியில் இரண்டு பதிப்பாளர்கள் சந்தித்துக்கொண்ட போது –
“உங்களுக்கு ஃபர்ஸ்ட் ரோ-லயே கடை. எங்களுக்கு உள்ள மாட்டிக்கிச்சு சார். கூட்டமே இல்லை.”
“உங்களுக்கு சொல்லிக்க ஒரு காரணமாவது இருக்கு சார்!”

அப்பளக்கடைக்காரர் தன் மகனிடம்: தம்பி, கூட்டமா வர்றாங்கள்ல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும். ஒவ்வொருத்தரையும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. அவங்க பொறாமைப்பட்டு வாய் வெச்சி வெச்சித்தான் நம்ம சேல்ஸும் குறைய ஆரம்பிச்சிருச்சி. நீ வளர்ந்து பெரியாளாகி ஒரு புத்தகம் எழுதி அதை அவங்களயே விக்க வெச்சி நீ பழி வாங்கணும். இதுதாண்டா என் வாழ்நாள் ஆசை!

“சார்.. போன வருஷம் இந்த புக் உங்க கடைலதான் வாங்கினேன்.. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..”
“தம்பி இங்க‌ வாங்க. அதோ நிக்கிறார் பாத்தீங்களா.. அவர் நாலு வருஷம் முன்னாடி வாங்குனவரு..”

எழுத்தாளர் அவரது நண்பருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது-
“சார்.. பன்மைத்துவம் வேணும் சார். எங்களை பாருங்க.. நான் மார்க்ஸிஸ்ட். அவரு சோஷியலிஸ்ட். அவங்க எக்ஸ் நக்ஸல். இவங்க மாலெ. அதோ அவங்க சோஷியலிஸ்டிக் மாவோயிஸ்ட். இவங்க சிபிஎம். அவங்க சிபிஐ. இதுதான் சார் முக்கியம்.”

இரண்டு எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக்கொண்ட போது –
“உங்க புக் அட்டை‌ பிரமாதம் சார்!”
“நானும் சொல்லணும்னு நெனச்சேன். உங்க புக் அட்டையும் அட்டகாசம் சார். டிசைனர் பின்னிட்டான்!”

“எழுத்தாளர் முத்தத்துல இருக்கார்ன்னா ‘எழுத்தாளர் முற்றம்’ அரங்கில் இருக்கிறார்னு அர்த்தம்யா.. யதார்த்தமா இருங்கய்யா..”

இரண்டு வாசக நண்பர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்ட போது –
“கம்யூனிஸம் பத்தி புக் வாங்கிருக்கேன் மச்சி”
“அட.. நானும்தான் மச்சி”
“மூலதனத்தை அடிப்படையா வெச்சி எளிமையான தமிழ்ல…”
“அட நானும்தான் மச்சி!”
“புக் பேரு கம்யூனிச சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து.”
“ஓ! நான் வாங்குன புக் பேரு கம்யூனிசச் சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து. ச் இருக்கு. நாம எக்ஸேஞ் பண்ணி படிச்சிக்கலாம்!”

பதிப்பாளர்: லீவ் நாள்ன்னு பேரு. ஆனா சுத்தமா கூட்டமே இல்ல.
வாசகர்: ஆமா சார். எனக்கு டிக்கெட் நேத்தே கிடைச்சி படமும் பாத்துட்டேன்.

எழுத்தாளர்: ரொம்ப டீட்டெய்ல்டா ஆழமா விரிவா எல்லா கோணங்கள்லயும் சிந்திச்சி இதுவரை வராத மாதிரி ஒரு புக் எழுதணும்..
பதிப்பாளர்: நீங்க எதுனா எழுதுங்க சார், போட்ரலாம்.

‘புக் ஃபேர் முழுக்க சுத்தி பாத்துட்டேன்.. பெரியார், கம்யூனிஸம் புக்ஸெல்லாம் அவ்ளோ இல்லியே ப்ரொ?’
‘ப்ரொ… ப்ரொ.. எந்திரிங்க ப்ரொ!’

பித்தகக் கண்காட்சிக்கு போகசொல்லோ ஒரே குருவிங்கோ!

டெரரிஸ்ட் மாரி மூஞ்சி கை எல்லாம் மூடிக்கினு இருக்குமே!

ஆமா.. ஆனா குருவிங்கோ முத்தம் குடுத்துகினு இருந்திச்சுங்கோ.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2019

நேற்று பொங்கல் நாளன்று ஒரு பார்வையாளனாகப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெற்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டதால் எப்போதுமே தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமே கண்ணில் படும். இந்தமுறை அபிராமுக்காக ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் போனேன். உண்மையில் அங்கே குவிந்திருக்கும் இத்தனை ஆங்கிலப் புத்தகங்களில் எதை எடுப்பது விடுப்பது என்றே தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகங்களில் அதிக பரிட்சயம் இல்லை என்பதால் எதைப் பரிந்துரைப்பது, எதை வேண்டாம் என்று சொல்வது என்றே விளங்கவில்லை.

தமிழ்ப் பதிப்பகங்கள் கடை போட்டிருப்பதால் அங்கிருக்கும் புத்தகங்களைப் பற்றி எதாவது கேட்டால் நான்கு பேருக்கு ஒருவராவது அதைப் பற்றிச் சொல்வார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் வழியாக விற்பதால் அங்கிருப்பவர்களுக்கு, அரங்கினுள்ளே குவிந்திருக்கும் புத்தகங்கள் பற்றித் துளியும் தெரிந்திருக்கவில்லை. எழுத்தாளர்கள் பற்றி எந்தக் குறிப்பும் அவர்களுக்குத் தெரியவில்லை.

எதை எடுத்தாலும் 100 ரூ புத்தகக் கடையில் இருக்கும் புத்தகங்கள்தான் என்ன, அவை ஏன் இப்படி யாரும் எடுப்பாரற்று அங்கே வந்தன, அவற்றுள் நமக்குத் தேவையானவற்றைத் தேடி எப்படி எடுப்பது – ம்ஹூம். ஒரு துப்பும் இல்லை. இந்நிலை ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், ஆங்கிலப் புத்தகங்களின் விலைக்கு யானையை வாங்கிக் கட்டி மேய்த்துவிடலாம். சாணித் தாளில் அச்சடித்துப் பளபள அட்டை போட்டுக் கூசாமல் 699 ரூ என்கிறார்கள். அதிலும் கொஞ்சம் பிரபலமான புத்தகங்கள் என்றால், பக்கத்திலேயே போகத் தேவையில்லை. கிட்டத்தட்ட ஷாக் அடிக்கிறது.

கடைசியில் Selected Ghost Stories மட்டும் 100 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வந்தான் அபிராம். அதில் என்ன இருக்கிறது என்று மேய்ந்துவிட்டுப் படிக்கக் கொடுக்கவேண்டும். ஆங்கிலப் புத்தகங்களுக்கு கிண்டில், கூகிள் புக்ஸ்தான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பாதி விலையிலும், கிண்டில் அன்லிமிடெட்டில் இலவசமாகவும் கிடைக்கும் புத்தகங்களைப் படித்து அறிவை இப்போதைக்கு வளர்த்துக்கொண்டால் போதும்.

பதிப்பாளராகப் புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கும் பார்வையாளனாகப் பார்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அத்தனை பெரிய பிரமாண்ட அநாவசியப் புத்தகக் கண்காட்சியில் உட்கார இடம் இல்லை. வெளியே அரங்கில் பேச்சாளர்கள் பேசும்போது உட்கார இடம் கிடைப்பதும் கிடைக்காததும் பேசுபவரைப் பொருத்தது. நன்றாகப் பேசினால் நமக்கு உட்காரம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்தால் யாரோ பேசுவதைக் கேட்க சகிக்காது. ரொம்ப டெலிகேட் சிச்சுவேஷன்.

புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகள் ஒப்பீட்டளவில் இந்தமுறை பரவாயில்லை. இன்னும் பல மைல் தூரம் முன்னேற வேண்டும் என்றாலும், இதுவே ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம்.

வெளி கேட்-டில் இருந்து உள்ளே புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் வர ஒரு கிலோமீட்டராவது இருக்கும். ஏன் ஒருவர் இத்தனை தூரம் நடந்து வந்து புத்தகம் வாங்கவேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பபாஸி கடந்த சில தினங்களாக இலவசப் பேருந்து வசதியை அறிவித்துள்ளது. அது எங்கே நின்று எந்த நேரத்தில் வரும் போகும் என்பது ரகசியம். ஒரு பேருந்து முழுக்க ஆள் ஏறினால்தான் எடுப்பார்கள் போல. நாம் நேரம்கெட்ட நேரத்தில் ஏறினால், அதிலேயே ஒரு நெடுந்தூக்கம் போட்டுவிடலாம். நானும் மனைவியும் குழந்தைகளும் அரை மணி நேரம் காத்திருந்தும் வண்டியைக் காணவில்லை. வேறு வழியின்றி ஓலா புக் செய்து ஆட்டோக்காரரிடம் விடாமல் வழி சொல்லி ஒருவழியாக கண்காட்சியை விட்டு வெளியே வந்தோம்.

ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் 100 ரூ தள்ளுபடி. இந்த நூறு ரூபாய்க்கு யாராவது 500 ரூபாய் செலவழித்து வருவார்களா? 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினாலே 300 ரூபாய்தான் தள்ளுபடி. புத்தகக் கண்காட்சியில் 10% பேர்கூட 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கமாட்டார்கள். ஒரே இடத்தில் புத்தகங்கள் குவிந்து கிடப்பதைப் பார்த்து அதிலிருந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருகிறார்களா? தேவைக்கு அதிகமாகக் குவிந்திருக்கும் ஓரிடத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்யவே முடியாது என்பதே யதார்த்தம். கிடைக்காத புத்தகங்களை வாங்கவா? இது ஒரு மாயை. கிடைக்காத புத்தகங்கள் எங்கேயும் கிடைக்காது. 🙂 ஒருவேளை இங்கே கிடைக்கத் தொடங்கினால் பின்பு எங்கேயும் கிடைத்துவிடும்.

இன்றைய நிலையில் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை வாங்க ஆயிரம் வழிகள் உள்ளன. எத்தனையோ இணையக் கடைகள் வந்துவிட்டன. அலைச்சல் இல்லாமல் பொறுமையாகப் பார்த்து வாங்கலாம். தள்ளுபடி கிடைக்காது. கொரியர் செலவு கூடுதல் ஆகும். ஆனால் ஒருவர் தன் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்து செல்ல ஆகும் செலவைவிடக் குறைவாகவே ஆகும். ஆனாலும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். எழுத்தாளர்களுடன் பேசலாம் என்பதற்காகவா? இதற்காக வருபவர்கள் குறைவே. விற்கும் புத்தகங்களில் 5% எழுத்தாளர்களை இவர்களுக்குத் தெரிந்திருந்தாலே அதிகம் என நினைக்கிறேன். எப்படியோ சென்னை புத்தகக் கண்காட்சி பெரிய ஒரு பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. ஒரு வகையில் இது மகிழ்ச்சிதான். பெரிய சாதனைதான். ஆனாலும் எனக்கு இதற்கான விடைதான் கிடைக்கவில்லை.

ஒன்றே ஒன்று சொல்லலாம். இத்தனை பெரிய புத்தகக் கண்காட்சியில் அலைந்து, எளிதாக எங்கேயும் கிடைத்துவிடும் இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு மனநிறைவுடன் சென்றாலும்கூட அது ஒருவகையில் தோல்வியே. அரிய புத்தகங்களைத் தேடி வாங்கிக்கொண்டால் புத்தகக் கண்காட்சியின் பயன் முழுமையாகக் கிடைக்கலாம். எளிதாகக் கிடைக்கும் புத்தகங்களை எங்கேயும் பிறகு வாங்கிவிடலாம். இன்னொரு தேவை, குழந்தைகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துவது. அப்போதும் புத்தகம் வாங்கும் பழக்கமும், அதற்குப் பின் ஒருவேளை அதைப் படிக்கும் வழக்கமும் வரலாம். இதுவே புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியத் தேவை என்று நினைக்கிறேன்.

புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. நம் நேரம், பணம் என எதையும் வீணாக்கமல் பயன்படுத்த யோசித்துச் செயல்படவேண்டும்.

Share

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல்

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350

விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன்.

சீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தை நினைவூட்டியது. ஒரு மண் சார்ந்த எழுத்து என்பதாக என் மனம் ஒப்பீடு செய்திருக்கலாம் என யூகிக்கிறேன். முத்துசாமியின் எழுத்தைப் படிக்கும்போது ஒருவித உவர்ப்புத் தன்மையை உணரமுடியும். வாக்கியங்களின் தெறிப்பு உருவாக்கும் ஒரு உலகம் அது. அதை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறார் சீ.முத்துசாமி.

தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் மக்களின் வலி, அவர்களின் பரம்பரை பரம்பரையான பயணம், அங்கே நிகழும் புரட்சி, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளே நாவல். சொர்க்க பூமி புக்கிட் செம்பிலான் என்று சொல்லி அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அங்கே காத்திருப்பது காடும் மலையும்.

ரப்பர் மரங்களின் நிரையில் தங்கும் மனிதர்களின் அவல வாழ்வைப் படிக்கும்போது அதன் வலியை வெறுமையை நமக்குள் கடத்துவதில் இந்நாவல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகப் புரட்சி செய்யும் இளைஞன் காணாமல் போகிறான். மலைக்காட்டு முனியில் இருந்து ஆள்கொல்லிப் புலி வரை தேடல் நீள்கிறது. அந்த இளைஞனை காட்டுக்குள் அனுப்பி வைத்த யூனியன் தலைவரின் குற்ற உணர்ச்சியும், அவனை இழந்து தவிக்கும் தாய்மையின் கொந்தளிப்பும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சீன அதிகாரிக்கு பெண்ணை அனுப்ப கங்காணி கதறும் காட்சி மிக முக்கியமானது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு உண்டு, ஆனாலும் அவள் வர மறுக்கிறாள் என்பதை கங்காணியால் ஏற்கவே முடிவதில்லை.

மலைக்காடு முனியைப் பற்றி சித்திரம் மிக அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எல்லாருக்குள்ளும் இந்த முனி குறித்த பயமும் கடவுள் என்கிற உருவமும் உள்ளது. எதோ ஒரு தருணத்தில் அது அவர்களுடன் உரையாடவும் துவங்குகிறது. மலைக்காடு நாவலின் ஒட்டுமொத்த உருவகமே மலைக்காட்டு முனிதான்.

மலேசியப் புரட்சியின் பின்னணியில் இந்நாவல் சில வரலாற்றுக் குறிப்புகளுடன் ஊடாடி நகர்கிறது. அதுவே உச்சகாட்சியில் நாவலின் முடிவாகவும் அமைகிறது.

காட்டுக்குள் சென்ற இளைஞனைத் தேடும் புள்ளியைச் சுற்றி, பல்வேறு வரலாற்றுத் திறப்புகளையும், அவனது காதலையும், அவன் வாயிலாக நிகழந்த ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது நாவல். நாவலின் மறக்கமுடியாத இரண்டு இடங்கள், குட்டியப்பனின் அம்மாவின் சித்திரமும், பெண்ணை அதிரிகாரியுடன் இரவு தங்க அழைக்கும் கங்காணியின் சித்திரமும்தான்.

நாவல் முழுக்க மீண்டும் மீண்டும் வருவது நாய்களின் மீதான சக மனிதர்களின் பாசம். இதை சீ.முத்துசாயின் பாசமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நாய்க்கு உணவு வைப்பதில் இந்நாவல் கொண்டிருக்கும் மோகம் அசாத்தியமானது. பெரிய அதிகாரியும் சரி, மிக ஏழ்மையான கூலித் தொழிலாளியும் சரி, நாயிடம் உருகுகிறார்கள். அவை தெருநாய்கள். தெரு நாய்களின் சித்திரம் உருவாகி வரும் விதம் அபாரமானது.

நமக்குப் பரிச்சயமற்ற உலகை, தன் விவரணையின் மூலம் கண்முன்னே கொண்டு வருகிறார் சீ.முத்துசாமி. மலேசியத் தமிழர்களின் வாழ்வில் புழங்கும் பல வட்டாரச் சொற்களை இந்நாவலில் தெரிந்துகொள்ள முடிந்தது.

கடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் பழைய பாணியிலான திரைப்பட சாகசக் காட்சிகள் வந்துவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். நாவலின் முடிவு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதற்கா இத்தனை போராட்டம்? இந்த ஆச்சரியத்துக்கு இரண்டு காரணங்கள், மலேசியத் தமிழர்களின் வரலாறு எனக்குத் தெரியாதது, இன்னொன்று, என் கொள்கை ரீதியிலான பார்வை. ஆனால் நாவலின் வரலாற்றுப் பின்னணியின்படி இந்த முடிவு மட்டுமே இருக்கமுடியும் என்பது புரிந்தது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939392.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

தற்கொலை குறுங்கதையும் பிரேக்கப்பும் – அராத்து

அராத்து எழுதிய நூல் தற்கொலை குறுங்கதைகள். அராத்து ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக எழுதிய தற்கொலை குறுங்கதைகளின் தொகுப்பு. ஃபேஸ்புக்கில் இல்லாத கதைகளும் இப்போது வெளியாகி இருக்கும் தொகுப்பில் உள்ளன என்று நினைக்கிறேன்.

அராத்துவின் பிரேக் அப் குறுங்கதைகளே எனக்குப் பிடித்திருந்தது. தற்கொலை குறுங்கதைகளைவிட ஒரு படி மேல் என்பது என் எண்ணம். இரண்டாவது புத்தகம் என்பதால் ஏற்பட்ட அனுபவம், விழிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் அராத்து இதை மறுக்கக்கூடும். எப்போதும் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவதே அவரது பாணி எனக்கூடும்.

தற்கொலை குறுங்கதைகள் நூலுக்கு சாரு நிவேதிதா எழுதியிருக்கும் முன்னுரை – வாய்ப்பே இல்லை. உயிர்மை வெளியீடாக தற்கொலை குறுங்கதைகள் வெளிவந்தபோது அந்த நூலுக்கு சாரு எழுதிய முன்னுரை, இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. சில முன்னுரைகளை மறக்கவேமுடியாது. முன்பு இரா.முருகன் எழுதிய அக்கம்மாதேவி பற்றிய ஒரு முன்னுரை அத்தனை அட்டகாசமாக இருந்தது. இப்போதும் அதை நினைத்துக்கொள்கிறேன். சாருவின் இந்த முன்னுரை, புத்தகத்தை எங்கோ கொண்டு போகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புத்தகத்தை மீறி நிற்கிறது.

முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. முதலில் பதில் சொல்ல ஒப்புக்கொண்டவர் ஜெயமோகன். கேள்விகள் எத்தரத்தில் இருந்தாலும் சரி, தன் பதிலின் மூலம் அக்கேள்வியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றார் ஜெயமோகன். (இக்கேள்வி பதில்கள் எதிர்முகம் என்ற தொகுப்பாக தமிழினி வெளியீடாக வெளிவந்தது.)

முன்பு சுரேஷ் கண்ணன் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இளையராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் படம் தள்ளாடுகிறது என்ற ரீதியில் எழுதி இருந்தார். ஆனால் முதலில் படம்தான் எடுப்பார்கள், பின்னர்தான் இசையமைப்பார்கள் என்றொரு பஞ்சாயத்தை வைத்தேன்.

இந்த இரண்டுக்கும் தற்கொலை குறுங்கதைகளுக்கும் உள்ள தொடர்பு – சாரு எழுதியிருக்கும் முன்னுரை தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.

தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை (பிரேக் அப் குறுங்கதைகள் தொகுப்பையும்!) வாசிக்கும்போது யார் யாரை எப்போது எதை அவிழ்ப்பார்கள் என்ற அச்சத்துடன் படிக்கவேண்டி இருக்கிறது என்பது மட்டும் ஒரு எச்சரிக்கை. என்னைப் போன்ற அடிப்படைவாதிகள் மறந்தும் ஒதுங்கக்கூடாத புத்தகம் இது என்பதும் இன்னுமொரு எச்சரிக்கை! மற்றபடி சாருவின் முன்னுரைக்காகவாவது தற்கொலை குறுங்கதைகளை நிச்சயம் வாசிக்கவேண்டும்.

Share