Archive for புத்தகப் பார்வை

Swasam Subscription Scheme – SSS

சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme

தினந்தோறும் புத்தகத் திருவிழா

எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா?

இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS

மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.)

இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

• இத்திட்டத்தில் சேர நுழைவுக் கட்டணம் ரூ 299. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் இந்தச் சந்தாவைப் புதுப்பிக்கவேண்டும். (இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் இந்த 299 ரூபாய் மதிப்பிற்கும் நீங்கள் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.)

• நீங்கள் சந்தாதாரர் ஆனதும் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் எங்களிடம் தள்ளுபடியுடன் புத்தகம் வாங்கலாம்.

• 500 ரூபாய் வரை புத்தகம் வாங்கினால் 15% தள்ளுபடி. 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் 20% தள்ளுபடி.

• சுவாசம் பதிப்பகம் மட்டுமின்றி வேறு எந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கினாலும் இந்தத் தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கும்.

• 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால், இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் இந்தியா முழுமைக்கும் இலவசமாக உங்களுக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். கொரியர் மூலம் புத்தகத்தைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் கொரியருக்கான பணத்தைத் தரவேண்டும்.

• இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசம் நேரடியாகப் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் நீங்கள் இச்சலுகையைப் பெறலாம்.

• சுவாசத்தின் நேரடிப் புத்தகக் கடைகளிலும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசத்தின் சமூக ஊடகங்கள் அதாவது வாட்ஸப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், திரெட், டிவிட்டர் மூலமும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

• வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் பங்குபெறலாம். புத்தகம் அனுப்புவதற்கான செலவை நீங்கள் ஏற்கவேண்டும்.

• எங்களிடம் கிடைக்காத புத்தகங்கள் இருந்தால், அவற்றை வாங்கித் தர இயன்ற அளவுக்கு முயல்வோம். அப்படி வாங்க முடியாத பட்சத்தில் உங்களிடம் சொல்லிவிடுவோம்.

• சுவாசம் விற்பனை செய்யாத பதிப்பகமே இல்லை என்பதால், இத்திட்டம் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

• புத்தக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் ஏற்ற அருமையான திட்டம் இது. (**பள்ளிப் புத்தகங்களுக்கும் கைடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது**.)

• எங்களிடம் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பது உங்களுக்குக் கூடுதல் சலுகை.

• எங்களிடம் கிடைக்கும் புத்தகங்களை எங்கள் வலைத்தளம் www.SwasamBookart.comல் பார்க்கலாம். இதில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களும் ஸ்டாக்கில் இருக்கும் என்று சொலல முடியாது. ஆனால் இப்புத்தகங்கள் பதிப்பாளரிடம் ஸ்டாக்கில் இருக்குமானால் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாங்கித் தருவோம்.

இத்திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இன்றே இதில் இணைவீர்.

கூகிள் ஃபார்ம் லின்க்: https://forms.gle/3RvHUbZ8YVixGhey9

Share

பிரபல கொலை வழக்குகள் – பாகம் 2

பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பாகம் வாசித்தேன். சிறிய நூல். இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடலாம். இதற்கேற்ற இலகுவான நடை. எடுத்தால் கீழே வைக்க முடியாது என்னும் அளவுக்கான வேகம். அந்தக் கால வழக்குகள் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டம் கடுமையான பின்பு, கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம் பயன்படத் தொடங்கிய பின்பு, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று புரிந்துகொள்ளலாம். கூடவே கல்வியும், ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியும், எதற்கெடுத்தாலும் கொல் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் வழக்குகள் நடைபெற்றாலும், இந்தியர்களுக்கு மட்டுமே தண்டனை என்கிற நிலை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டுவிட்டால் லண்டனில் பிரிவி கவுன்ஸிலில் மேல் முறையீடுக்குப் போகவேண்டுமாம். பணம் இருந்தவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே தண்டனையைக் குறைத்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

நரசம்மா கொலை வழக்கில், எப்படிச் செய்திருந்தால் கிராமணி தப்பித்திருக்கலாம் என்று நூலாசிரியர் எஸ்பி சொக்கலிங்கம் சொல்லும் இறுதி வரியை ரசித்தேன்! சூலூர் சுப்பாராவ் வழக்கில் திருப்பத்துக்கு மேல் திருப்பம். வழக்கைச் சொன்னதோடு அந்தக் காலத்தில் இந்த வழக்குகளைப் பற்றி எப்படிப் பேசிக்கொண்டார்கள் என்பதையும் தந்திருப்பது சிறப்பு. ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு நமக்கு நன்கு பரிச்சயமானவையே என்றாலும், நாவரசு வழக்கை படித்தபோது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி என்றால், வழக்கு நடந்தபோது இவ்வழக்கு தமிழ்நாட்டை உலுக்கியதில் ஆச்சரியமில்லை.

பில்லா ரங்கா வழக்கு – படிக்கும்போதே ஒரு பதற்றத்தை வரவழைத்தது. இந்தியா முழுக்க இவ்வழக்கு பேசப்பட்டதில் விந்தையில்லை.

கொலை வழக்கில் கொல்லப்பட்ட உடல் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று நான் யோசித்ததே இல்லை. இப்புத்தகத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

இந்நூல் முழுக்கவே பல கொலைகளும் பாலியல் அத்துமீறல்களும் விவரிக்கப்பட்டுள்ளன. படிக்கும்போது படபடப்பு இல்லாமல் படிக்க முடியாது. அதற்கேற்ற நடை, அதற்கேற்ற வேகம், தேவையான தகவல்களை மட்டும் தந்தால் போதும் என்கிற தெளிவு இப்புத்தகம் முழுக்க சீராகக் கையாளப்பட்டுள்ளது.

எஸ்பி சொக்கலிங்கத்திடம் சில வருடங்கள் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்குகள் என்றே ஒரு புத்தகம் கொண்டு வரலாம் என்றேன். பாலியல் வழக்குகள் என்பதில் சொக்கலிங்கம் அவர்களுக்கு உடன்பாடில்லையோ என்று எனக்குத் தோன்றியது. இப்போதும் இந்தியாவை (தமிழ்நாட்டை) உலுக்கிய பாலியல் வழக்குகள் என்று ஒரு புத்தகம் வருமானால், அது முக்கியமான புத்தகமாகவே இருக்கும்.

பின்னட்டை வாசகம்:

மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம்.
சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல்.

நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும்
படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார்.

வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.

Share

2020

2020ல் என்ன என்ன செய்தேன்?

கொரோனா என்ற ஒரு பெரிய அச்சுறுத்தல் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்யவில்லை. தினம் தினம் படம், தாய விளையாட்டு, சீட்டாட்டம், நல்ல உணவு இப்படியே போயின நாள்கள். ஒரு வரி கூட படிக்க மனம் வரவில்லை. இழுத்துப் பிடித்து வைத்து ஒரு நாவல் எழுதினேன். நான் எதிர்பாராத அளவுக்கு அது பேசப்பட்டது. மாயப் பெரு நதி மறக்க முடியாத நாவல்.

சில குறுங்கதைகளையும் மூன்று சிறுகதைகளையும் எழுதினேன். பன்னிரண்டு வலம் இதழ்கள் வெளியாகின. தடம் பதிப்பகம் சார்பாக சில புத்தகங்களைக் கொண்டு வர முடிந்தது. நரசிம்மனின் சிறகு முளைத்தது, நெல்லை கணேஷின் பாரதி என் காதலன், எஸ்.ஜி.சூர்யாவின் பாஜக வடகிழக்கை வென்றது எப்படி, எனது மாயப் பெரு நதி மற்றும் நடுநிலைமை அற்றவனின் சில தமிழ்சினிமா குறிப்புகள்.

வேலை சார்ந்து ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் கிழக்கில் என்ன செய்யப் போகிறோம், கிழக்கு என்ன செய்யப் போகிறது என்ற குழப்பமே எஞ்சி இருந்தது. ஜூலையில் மீண்டும் வேலைக்கு வந்து, எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து ஓரளவுக்கு விற்பனையைத் தொடங்க முடிந்தது. இந்த டிசம்பரில் ஏதோ கொஞ்சம் விற்பனை பரவாயில்லை என்ற இடத்துக்கு வந்திருக்கிறோம்.

ஜனவரியில் புத்தகக் கண்காட்சி இருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் புத்தகக் கண்காட்சியை நடத்திவிட பெரிய முயற்சிகள் நடக்கின்றன. நல்லதுதான், நடக்கட்டும். எல்லாப் பதிப்பாளர்களுமே விற்பனைச் சிக்கலில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு மெகா சீரியலுக்கு வசனம் எழுதத் தொடங்கினேன். மெகா சீரியலைக் குறித்து செய்த கிண்டல்கள், நக்கல்கள் எல்லாம் என் அம்மா உருவில் எனக்கெதிராகவே நின்று என்னை கேலி செய்கின்றன.

மகா நடிகன் என்றொரு சத்யராஜ் படம். அதில் சத்யராஜ் பெரிய நடிகர். ஏகப்பட்ட பந்தா செய்வார். ஒரு துணை நடிகை நடிக்க வருவார். சத்யராஜ் அந்த நடிகையை, டிவி நடிகைதான என்று கிண்டலாகப் பேசுவார். எரிச்சலாகும் அந்த நடிகை சத்யராஜைப் பார்த்துச் சொல்வார், ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க, நீங்களும் ஒருநாள் டிவிக்குத்தான் வரணும் என்று. இதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

கொரோனா தந்த பயத்தையும் எதிர்கால வாழ்க்கைக் குழப்பத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 2020 ஓரளவுக்கு நல்ல வருடமே. ஆனால் கொரோனா இந்த 2020 நினைவுகளே வேண்டாம் என்றே சொல்கிறது. 2021 வளமான ஆண்டாக இருக்கட்டும். அனுபவத்திலும் செழிப்பிலும்.

சென்ற மார்கழியில் பெருமாள் கோவிலுக்குச் சென்ற வண்ணம் இருந்தேன். இந்த மார்கழியில் கோவில் பக்கம் கூடப் போகவில்லை. வைகுண்ட ஏகாதஸிக்குக் கூட. 🙁 இப்படி ஒரு ஆண்டு இனி வேண்டாம்.மாயப் பெரு நதி நாவலும், சூரரைப் போற்று மற்றும் கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்பட விமர்சனங்களும் அதிக அளவில் பேசப்பட்டதில் 2020க்கு நன்றி.

இன்னும் நிறைய படித்திருக்கலாம். எழுதி இருக்கலாம். ஆனால் ஜூலை வரை கொரோனா மன நெருக்கடி. பின்பு நேரமில்லை. எப்போதும் இப்படி நேரமில்லை என்று சொல்லும்படியே இறைவன் வைத்திருக்கட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

படித்த புத்தகங்கள்:

புகார் நகரத்துப் பெருவணிகன், பிரபாரகன்

ராமோஜியம், இரா. முருகன்

வீரப்பன் வேட்டை, விஜய்குமார்

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் (கிழக்கு, ம.வெங்கடேசன், விரைவில் வெளியாகும்)

ஒரு இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து, வேலூர் இப்ராஹிம்

புதிய கல்விக் கொள்கை – ரங்கராஜ் பாண்டே

கடலுக்கு அப்பால், ப.சிங்காரம்

Alchemist (Tamil)

Who killed Sastri – Vivek Agnihotri

1984 – India’s guilty secret – Pav Singh

RSS 360 – Ratan Sharda

Our Moon has blood clots – Rahul Pandita

பார்த்த திரைப்படங்கள்:

சூரரைப் போற்று

கணவர் பெயர் ரணசிங்கம்

Samskara (Ka)

Kaanoru Heggadati (Ka)

Hamsa Geete (Ka)

Kaadu (Ka)

Phaniyamma (Ka)

Face to Face (Ka)

Neuron (Ka)

Geetha (Ka)

Sankashtakara Ganapathi (Ka)

Pathinettam padi (Ma)

Love Mocktail (Ka)

D/O Parvathamma

வானம் கொட்டட்டும்

Section 375 (Hi)

Law (Ka)

Striker (Ka)

Ottam (Ma)

Jack & Daniel (Ma)

Mundina Nildana (Ka)

Ayushmanbhava (Ka)

C U Soon (Ma)

Kannad Kothilla (Ka)

Paapam Cheyyadavar Kalleriyatte (Ma)

Sufiyum Sujathayum (Ma)

Alidu Uluduvaru (Ka)

பெண் க்வின்

Aakala Ratri (Ka)

Eeda (Ma)

Nalpathiyonnu (Ma)

Anjaam Pathira (Ma)

Forensic (Ma)

Kappela (Ma)

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

சுட்டுப் பிடிக்க உத்தரவு

ஆர்.கே.நகர்

செத்தும் ஆயிரம் பொன்

சைக்கோ

Chola (Ma)

பொன்மகள் வந்தாள்

99 (Ka)

Kapata Nataka Patradari (Ka)

Parasite

Android Kunjappan 5.25

தாராள பிரபு

வி1 மர்டர் கேஸ்

Kettiyolanu ente Malaka (Ma)

Shikara (Hi)

Trance (Ma)

பாரம்

திரௌபதி

Nanna prakara (Ka)

Knock Knock

Vettah (Ma)

Ayyappanum Koshiyum (Ma)

Avane Sriman Narayana (Ka)

Virus (Ma)

Thallana (Ka)

Before the Rains

Hero

Driving Lisence (Ma)

Puss in the Boots

Dia (Ka)

Porinji Mariyam Jose (Ma)

Helen (Ma)

Padmavat

பக்ரீத்

Jallikkattu (Ma)

Ea.Ma.Yu (Ma)

Gantumoote (Ka)

அருவம்

தர்பார்

Share

புகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்

சில நாவல்களைப் படிக்கும்போது ஒரு புல்லரிப்பு ஏற்படும். அது சில சமயம் வெகுஜன நாவலாக இருக்கும். சில சமயம் தீவிர இலக்கிய நாவலாக இருக்கும். எதனால் புல்லரிப்பு ஏற்படுகிறது என்பது நாம் என்ன படிக்கிறோம், நம் மனநிலை என்ன, நம் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பொருத்தது. இன்று சமூக ஊடகங்களில் எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் தொடர்ச்சியாகச் சொல்வதன் மூலம் அதைக் கேலிச் சொல்லாடலாக மாற்றிவிடலாம். எல்லையில் வீரர்கள் என்பதைச் சொல்லலாம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதைச் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றமாதிரிதான் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்தக் கேலிச் சொல்லாடல் அதன் நிஜமான நோக்கத்துடன் சொல்லப்படுவதில்லை.

ஒரு நாவல் முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்படங்களில் பன்ச் வசனம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதற்காகப் படம் முழுக்க பன்ச்சாக இருந்தால்? பிடிக்காது என்றுதானே நினைக்கிறீர்கள்? உண்மைதான். ஒருவேளை, அதாவது ஒருவேளை அப்படிப் படம் முழுக்க பன்ச்சாக இருந்து, அதுவும் மிகவும் நன்றாக இருந்துவிட்டால்? அது ஒரு கற்பனைத் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கனவு நாவல்தான் புகார் நகரத்துப் பெரு வணிகன்.

உண்மையில் இது ஒரு பழிவாங்கும் படலம் உள்ள நாவல். பழி வாங்கும் படலம் நான்கு வரிகள் என்றால் நாலாயிரம் வரிக்குச் சொல்லப்படுபவை எல்லாம் தமிழனின் பெருமைகளே. கவனியுங்கள். தமிழின் பெருமை அல்ல. அதுவும் இருக்கிறது. ஆனால் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்படுவது தமிழனின் பெருமைதான். அதுவும் ஆதாரத்தோடு. அதுவும் விளக்கமாக. மிக முக்கியமாக எந்த ஒரு இனத்தின் மீதும் எந்த ஒரு பகுதியின் மீதும் வெறுப்பைத் தூவாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இது கனவு நாவல் என்று புரிகிறதா?

எந்த ஒன்றைப் பற்றியும் விரிவான, மிக மிக மிக விரிவான செய்திகளைப் பட்டியலிட்டே தீருவது என்ற முடிவோடு நாவலை எழுதி இருக்கிறார் பா.பிரபாகரன். இவர் எழுதிய முதல் நூலான ‘குமரிக் கண்டமும் சுமேரியமும்’ ஒரு சூப்பர் ஹிட் புத்தகம். இந்த நூலில் பிரபாகரன் திகைக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், ‘சாமி போதும்’ என்று அவரை அழைத்து வந்து காலில் விழுந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. படிக்கும் நமக்கு மூச்சு வாங்குகிறது. ஆனால் பிரபாகரன் அசருவதே இல்லை. விட்டால் இன்னும் ஆயிரம் பக்கங்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை அள்ளித் தெளித்துப் போய்க்கொண்டே இருப்பார் போல.

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்று சொன்னேன் இல்லையா? அது மிகைப்படுத்திச் சொன்னது அல்ல. சும்மா நானாக என் கற்பனையில் ஒரு உதாரணம் சொல்கிறேன். கப்பலில் பயணித்தார்கள். காற்று அடித்தது. திசையைப் பார்த்தார்கள். கப்பலோடி யோசித்தான். இந்த நான்கு வரிகளைச் சொல்ல வேண்டும் என்றால் பிரபாகரன் என்ன செய்கிறார் தெரியுமா? கப்பல் என்றால் அதில் எத்தனை வகை, என்ன என்ன வகை, ஒவ்வொன்றின் பெயர் என்ன என்று சொல்கிறார். பயணம் என்றால் எப்படிப்பட்ட பயணம் என்று ஒரு விளக்கம். காற்று என்றால் எத்தனை வகையான காற்று, எத்தனை வகையான திசை என்றெல்லாம் ஒரு பட்டியல். திசை என்றால் எத்தனை திசை என்று பட்டியல். கப்பலோடி என்றால், எத்தனை வகையான கப்பலோடிகள், ஒவ்வொருவரின் பெயர் என்ன, அவர்களுக்கு என்ன என்ன வேலை இப்படியான பட்டியல். நான் சொன்னது 1% கூட இல்லை! இப்போது யோசித்துப் பாருங்கள். நானூறு பக்க நாவலில் எத்தனை விளக்கங்கள் இருக்கும் என்று. எத்தனை பட்டியல் இருக்கும் என்று. கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியாவையே கையில் தந்துவிட்டார் பிரபாகரன். சேலை என்றாலும் பட்டியல், உணவு என்றாலும் பட்டியல், முலைக்கச்சை என்றால்கூட பட்டியல்தான். அவர் என்ன என்ன பட்டியல் இட்டிருக்கிறார் என்பதைத் தனியே தொகுத்தால் அவையே இருநூறு பக்கங்கள் வரும்.

ஈழம், சீனா என்றெல்லாம் செல்லும் நாவல், சீனாவைக் கொஞ்சம் நெருக்கமாகவே காட்டுகிறது. அதுவும் அந்தக் கால சீனா, அவர்களின் வணிகம், அவர்களின் வாழ்க்கை முறை என்று கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. பட்டியலும் விளக்கமும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, சீனர்களுக்கும் உண்டு!

தவறவிட்டுவிடக் கூடாத நாவல். தமிழர்களின் பெருமைக்கு மகுடம் தந்திருக்கிறார் பிரபாகரன். அதிலும் எந்த ஒரு மொழியையும் இகழாமல், இந்தியாவை வெறுக்காமல், நிஜமான தமிழ் உணர்வுடன் கூடிய நாவல் இது. இதற்காகவே இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்படவேண்டும். அத்தனை முக்கியமான நாவல் இது. Dont miss it.

ஆன்லைனில் அச்சுப் புத்தகமும், இபுத்தகமும் கிடைக்கும். அமேஸான், ஃப்ளிப்கார்ட், டயல் ஃபார் புக்ஸில் தேடிப் பாருங்கள்.

Share

செவிக்குணவு கேட்டல்

பொதுவாக யூடியூப் பார்ப்பது என்பது எனக்கு எரிச்சல் தரும் விஷயம். வீடியோக்களை தேவை ஏற்பட்டால் ஒழிய பார்க்கவே மாட்டேன். சில வீடியோக்களை பார்த்தால் மட்டும்தான் புரியும். தமிழ் ஹெரிடேஜ் வீடியோக்கள் போல. இப்படி இல்லாமல் கேட்டாலே புரியும் வீடியோக்கள் யூ டியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்கிங் போக ஆரம்பித்தபோது முதலில் இளையராஜா பாடல்களைக் கேட்டேன். பின்பு ஊத்துக்காடு பாடல்கள். பின்பு பித்துக்குளி முருகதாஸ். பின்பு சகஸரநாமம். ஒரு கட்டத்தில் இவை எல்லாமே சலிப்பேற்படுத்த, யூ டியூப் வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக டவுன்லோட் செய்து கேட்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஏன்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேட்கலாம். ஒரே விஷயம் தரும் சலிப்பு இதில் இருக்காது. முதலிலேயே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதால் இணையம் கிடைக்குமா என்கிற பிரச்சினை கிடையாது. பின்பு சில நாள் பாட்காஸ்ட் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த சமயத்தில்தான் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஆடியோ புக்கில் வருவது போல நின்று நிதானித்து துக்கப்பட்டு சிரித்து உணர்வுடன் வாசிப்பதைக் கேட்பது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. முன்பெல்லாம் ரேடியோவில் வரும் உரைச் சித்திரங்களை, நாடகங்களைக் கூடக் கேட்கமாட்டேன். எனவே என் தேவை ஆடியோ புத்தகம் அல்ல. புத்தகத்தை சாதாரணமாக வாசிப்பது போன்ற ஆடியோ மட்டுமே. எளிதாகக் கிடைத்தது பொன்னியின் செல்வன். யார் யாரெல்லாமோ அப்படியே பொன்னியின் செல்வனை வாசித்து வைத்திருந்தார்கள். லகர ளகர ழகர ரகர றகரக் கொலைகளுடன்! ஆனாலும் விடாமல் கேட்டேன். ஐம்பது அத்தியாயங்கள் கேட்டிருப்பேன். யூட்யூப்பின் சிக்கல் என்ன? ஆன்லைனில் கேட்கவேண்டும் என்றால், யூட்யூப் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவேண்டும். வேறு விண்டோவுக்குப் போக முடியாது. இணைய இணைப்பு வேண்டும். முதலிலெயே டவுன்லோட் வைத்துக்கொண்டால் நல்லது. இல்லையென்றால் சிக்கல். தினமும் டவுன்லோட் செய்வது எரிச்சலான விஷயம். அப்போதுதான் யூட்யூப்வான்ஸ்ட் என்றொரு செயலி அறிமுகம் கிடைத்தது. அட்டகாசமான ஆப். இன்றுவரை இதையே பயன்படுத்துகிறேன். ப்ளே செய்துவிட்டு, மொபைலை தூக்கத்தில் (ஸ்லீப் மோடில்) போட்டுவிடலாம். யூட்யூப் போலப் படுத்தாது. இதில்தான் அத்தனை டிவி விவாதங்களையும் கேட்பேன். கேட்கிறேன். நேர்காணல் உட்பட. இதில்தான் அல்கெமிஸ்ட் (தமிழில்) புத்தகம் கேட்டேன்.

தற்செயலாக கூகிள் ப்ளே புக்ஸில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஆங்கிலப் புத்தகத்தை இப்படிக் கேட்கும் வசதி இருப்பதைக் கவனித்தேன். இந்திய ஆங்கில உச்சரிப்பில் கேட்கலாம். ஆங்கிலப் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 40 நிமிடம் நடையில் 40 பக்கங்கள் கேட்டால், ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தைக் கேட்டு முடித்துவிடலாம். முக்கியமான மூன்று புத்தகங்களை இரண்டு மாதங்களில் கேட்டு முடித்தேன். ஆங்கிலத்தில் இருக்கிறது, தமிழில் இருக்காதா என்று தேடியதில், அப்டேப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் தமிழிலும் அது பேச ஆரம்பித்தது. தமிழ்ப் புத்தகங்கள் கேட்க ஆரம்பித்தேன். நமக்குத் தேவையான அளவுக்கு வேகத்தையும் pitchஐயும் வைத்துக்கொள்ளும் வசதி ஆண்ட்ராய்டில் இருக்கிறது. யூ ட்யூப்பிலும் இந்த வசதி உண்டு. எனவே எளிதாகக் கேட்க முடிந்தது. சில உச்சரிப்புப் பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். — என்று இருந்தால் அடிக்கோடு அடிக்கோடு அடிக்கோடு என்று வாசிக்கும். 🙂 புள்ளி வந்தால் ஒரு நொடி நிறுத்தி வாசிக்கும். இனிஷியலுக்குப் பிறகு வரும் புள்ளியாக இருந்தாலும்! சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண் கொடுக்கப்பட்டிருந்தால், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அந்த எண்ணையும் வாசிக்கும்! இத்தனையையும் மீறி 90% அட்டகாசமாக இருக்கும். நிறைய கேட்க ஆரம்பித்தேன்.

கூகிள் ப்ளே புக்ஸில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. கிண்டிலில் ஐபேடில் உள்ளது, ஆண்ட்ராய்டில் இல்லை. ஆண்ட்ராய்டில் கிண்டில் புத்தகங்களைக் கேட்க சுற்றி வளைத்து ஒரு வழி உள்ளது. ஆக்ஸெஸபிளிட்டி மூலம். அதையும் செய்து பார்த்தேன். ஆனால் அது தொல்லை பிடித்ததாக இருக்கிறது. கூகிள் ப்ளே புக்ஸ் போல் வசதியாக இல்லை. சீக்கிரமே கிண்டிலில் read aloud வரும். அப்போது இது அடுத்த கட்டத்துக்குப் போகும்.

இதில் என்னவெல்லாம் நடக்கலாம்? இப்போதைக்கு பிடிஎஃப் தமிழை எந்தச் செயலியும் வாசிப்பதில்லை. இது நடந்தால் அடுத்த பாய்ச்சல் நிகழும். இப்போதைகு ஒவ்வொரு வரியாக வாசித்து வாசித்துச் சொல்கிறது. இது கொஞ்சம் அடுத்த கட்டத்துக்குப் போய், ஒரு புத்தகத்தையே உள்ளிட்டுவிட்டால், அதுவே வாய்ஸ் ஃபைலாக மாற்றித் தந்துவிடும் தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் வரலாம். இப்போது கூட வந்திருக்கலாம். இது நிகழ்ந்தால் அடுத்த பாய்ச்சல். எந்த ஒரு புத்தகத்தையும் கேட்டுவிட முடியும். இன்னொரு பக்கம் கூகிள் text to voiceஐ இன்னும் மெருகேற்றினால் போதும். எந்த ஒரு புத்தகத்தையும், அது வேர்ட் ஃபைலாக இருந்தாலும், இபப் அல்லது மொபி ஃபைலாக இருந்தாலும், பிடிஎஃபாக இருந்தலாலும் கேட்க முடியும். இது கூடிய விரைவில் நடக்கத்தான் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டே கேட்கலாம். படுத்துக்கொண்டு கேட்கலாம். ஆடியோ புக் என்கிற செயற்கைத்தனத்தை விரும்பாதவர்களுக்கு இந்த இயல்பான வாசிப்பு ஆடியோ புக் ஒரு வரப்பிரசாதம். தினமும் இரண்டு மணி நேரம் வேலைக்கு வண்டியில் பயணப்படுபவர்கள் ஒரு வருடத்தில் நாற்பது புத்தகங்களையாவது கேட்டு முடித்திருக்கலாம். ஆண்ட்ராய்ட் வாசிப்பில் கேட்கும் பெண் குரலும் ஆண்குரலும் என் நண்பர்களாகிவிட்டார்கள். இன்னும் சிறிது நாளில் அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு!

இதன் பிரச்சினைகள் என்ன? பைரஸி இன்னும் உச்சத்துக்குப் போகும். இப்போதே மின்னூல் போலிப் பதிப்புகளையே பதிப்பகங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதோடு இதுவும் சேர்ந்து கொள்ளும். கிண்டிலில் ஒரு புத்தகத்தைப் போட்ட மறுநாள் அதே புத்தகத்தை எதோ ஒரு யுவதியோ யுவனோ வாசித்து அது யூட்யூப்பில் கிடைக்கும். 🙂

பின்குறிப்பு: தலைப்பை ஏன் இப்படி வைத்திருக்கிறேன் என்றால், சொல்வனம் வலைத்தளத்தை சிறிது நேரம் வாசித்துக் கொண்டிருந்தேன்.

Share

இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்

நாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக மாற்றி விட்டிருக்கிறார். அதே சமயம் அந்த ஒரு மனிதனையே அவனது முன்தொடர்ச்சியாக எழுதிய வகையில் அசரடித்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால், யூகிக்கவே முடியாத ஒரு பெரும் அனுபவ அலைக்குள் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு.

வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம். இரா. முருகன் மொழிபெயர்த்த ‘பீரங்கிப் பாடல்கள்’ என்ற புத்தக வெளியீட்டில் மாலன் மிக அருமையாகப் பேசினார். மேக்ரோ எலிமெண்ட்டுகளைவிட மைக்ரோ எலிமெண்ட்டுகள் ஒரு புத்தகத்தில் விரிந்திருக்குமானால் அந்தப் புத்தகம் தரும் அனுபவம் பற்றிய குறிப்பு ஒன்றைச் சொன்னார். அதைத் தமிழில் செய்து காட்டி இருக்கிறது இரா.முருகனின் ராமோஜியம்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சென்னையின் மீது குண்டு வீசப்படலாம் என்கிற அச்சம் நிலவும் சூழலில் சென்னை எப்படி இருந்திருக்கும் என்ற களத்துடன் தொடங்குகிறது நாவல். இன்றைய கொரோனா காலக்கட்டத்தில், அன்றைய போர்ச் சூழலின்போதான சென்னையை எளிதாக உணர முடிகிறது. கொரோனா என்பது கூட நம் மீது இயற்கை தொடுத்திருக்கும் ஒரு போர்தான். அன்று பெட்ரோல் வாங்கக் கூட ரேஷன். ராமோஜி ராவுக்கும் அவன் மனைவி ரத்னாவுக்குமான வாழ்க்கையை விவரிக்கும் நாவல், தெளக்ஸ் புவனாவின் வருகையுடன் அடுத்த கட்டத்துக்குப் போகிறது. அதன் பிறகான, இந்தக் கால ராமோஜிக்கும் முந்தைய ராமோஜி, ரத்னா, புவனாக்களுடன் நாம் யூகிக்கவே முடியாத தளத்துக்குப் போய்விடுகிறது. இறுதி அத்தியாயம் ஒரு சிறுகதைக்கான கச்சிதமான முடிவு. ஒரு நாவலுக்கு எப்படி சிறுகதைக்கான முடிவு வலுவானதாக இருக்க முடியும் என்று யோசித்திருக்கிறேன். லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கானகன்’ இப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. இப்போது இந்த நாவல். நெகிழ வைக்கும் இறுதி அத்தியாயம்.

நாவல் முழுக்க விரவிக் கிடக்கும் தகவல் களஞ்சியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேனால், இன்னொரு நாவல்தான் எழுதவேண்டி இருக்கும். அத்தனை தகவல்கள். எதுவுமே உறுத்தாத அளவுக்கு, வேண்டுமென்றே திணிக்கப்படாத மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பஸ்தனின் இருத்தலியல் பிரச்சினைதான் நாவல் என்பதால், இது மிக எளிதாகவே சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தைக் கொண்டு வருவது என்பது சாமானியமான விஷயமா என்ன? அந்தக் காலத்தில் நாம் வாழ்வது போல என்போமே, கிட்டத்தட்ட இன்று க்ளிஷேவாகிவிட்டாலும், அதை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இரா.முருகன். உண்மையில் அசரடிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நான் சொல்வது நாவலை வாசித்தால்தான் உங்களுக்குப் புரியும். அதுவும் முழுக்க வாசித்தால்தான் புரியும்.

நாவலின் அடிநாதமாக வருபவை நான்கு விஷயங்கள். முதலில், உணவு. நாவல் முழுக்க குறிப்பாகச் சொல்லப்படும் உணவு வகைகளைப் பட்டியல் இட்டால், அதுவே ஐம்பது பக்கங்களுக்கு வருமோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது! ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தினமும் உண்பவற்றை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டே வந்து, அவனது இறுதிக் காலத்தில் அதைப் படித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன். எந்த ஒரு மனிதனுக்கும் உணவின் மேல் இருக்கும் முக்கியத்துவமும் ஈர்ப்பும் அலாதியானது. நாம் அதை உணராவிட்டாலும் கூட, அது என்றுமே நம்முடனே இருந்துகொண்டே இருப்பது.

இரண்டாவது விஷயம், நாவல் முழுக்க வரும் சங்கீதம் பற்றிய குறிப்புகள். இரா.முருகன் கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் உள்ளவர். எனவே இவற்றையெல்லாம் மிக அழகாக எழுதிச் செல்கிறார். அதுவும் 1940களின் உலகத்தில் இதைப் பொருத்துவதையெல்லாம் அநாயசமாகச் செய்கிறார்.

மூன்றாவது, சினிமா. 1930களில் என்ன சினிமா வந்திருக்கும்? யார் நடிகைகள்? இந்தப் புத்தகத்தைப் படித்தால் இதிலிருந்தே நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டுவிட முடியும். நடிகர்களையும் படங்களையும் போகிற போக்கில் சொல்லிவிட்டால் என்ன இருக்கிறது? அவர்களையும் நாவலின் கதாபாத்திரம் ஆக்கியதில்தான் சுவாரஸ்யம். காளிங்க ரத்னமும் தெலக்ஸ் புவனாவும்  மறக்க முடியாத கதாபாத்திரமாகிறார்கள். சபாபதி என்ற படம் வந்தது எனக்குத் தெரியும். அதில் ராமசந்திரன் நடித்திருந்தார். இந்த நாவலில் தசாபதி என்ற ஒரு திரைப்படம் பற்றிச் சொல்லப்படுகிறது. தெலக்ஸ் புவனா என்றொரு நடிகை. தெலக்ஸ் என்ற சோப்பு விளம்பரத்தில் நடித்துப் புகழ்பெற்று, அதன் பின்னர் அவர் நடிக்கும் படம் பரபரப்பாக ஓடி, அவர் பெயர் தெலக்ஸ் புவனா என்றாகிறது. யார் இந்த தெலக்ஸ் புவனா? இது என்ன படம் தசாபதி? யாராவது இப்படி எதுவும் இல்லை என்று என்னிடம் இப்போது சொன்னால், நான் நம்பமாட்டேன். அந்த அளவுக்கு இந்த நாவலில் இவை விவரிக்கப்படுகின்றன. இந்தக் கற்பனையெல்லாம் எப்படித் தோன்றின என்று இரா.முருகன் பேசினால் அது இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும் என்பது நிச்சயம்.

நான்காவதாக, நாவல் முழுக்க வரும் நகைச்சுவையான வசனங்கள். நகைச்சுவை என்றால், எடுத்துக் கூட்டிச் சொல்லும் நகைச்சுவை அல்ல. போகிற போக்கில் தெறித்து விழும் சொல்லாடல்கள். இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நான் சத்தம் போட்டுச் சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம். ஒரு தீவிரமான நாவலில் சமீபத்தில் இத்தனை சிரித்த மாதிரி எனக்கு நினைவில்லை.

ராமோஜி ராவின் மூதாதையர்களின் ராமோஜிக்களையும் நாவலில் கொண்டு வந்து பிணைத்தது மிகச் சிறந்த உத்தி. வாழ்க்கையில் எல்லாமே திரும்ப திரும்ப நடக்கிறது, எல்லாமே எழுதி வைக்கப்பட்டது என்கிற கற்பனை ஒரு காவியம் என்றே நான் நினைப்பதுண்டு. ராமோஜிக்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அந்தக் காவியத்தைக் கொஞ்சம் நெருங்குவதைப் போலத் தோன்றியது. அதிலும் தாசியான புவனாவின் கடித அத்தியாயம் இந்நாவலின் உச்சம் என்றே சொல்லவெண்டும்.

நாவல் திடும்திடுமென மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்து மகாராணிக்கு இந்தியர் எழுதும் கடிதம், திடீரென தெலக்ஸ் புவனா, திடீரென அனந்த ரங்கம் பிள்ளை ஒரு கதாபாத்திரமாக வருவது, கூடவே அருணாசலக் கவிராயர் வருவது, திடீரென டெல்லி பயணம் இப்படி. இந்த மாற்றம் தரும் ஒரு அலுப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த அத்தியாயங்களுக்குள் விவரிக்கப்படும் வாழ்க்கை, இந்த அலுப்பை முற்றிலும் போக்கச் செய்துவிடுகிறது. நீண்ட ரயில் பயணத்தின் விவரிப்பில் ஒரு மொட்டைப்பாட்டி வந்து அந்த அலுப்பைப் போக்கி விடுகிறாள். இங்கிலாந்துக்கு எழுதும் கடிதத்தில் சொல்லப்படும் கிண்டலும் கேலியுமான தாக்குதல்கள் சிரிக்க வைக்கின்றன. கப்பலோடியாக வரும் ராமோஜி ராவின் தாசிக் காதல் அசரடிக்கிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதே சவால். அதை நாவலுக்குள் கட்டி எழுப்புவதெல்லாம் மிகவும் கடினம். இன்னும் சொல்லப் போனால், அரசர் காலத்துக் கற்பனைக் களத்தைக் கூடக் கட்டி எழுப்பி விடலாம். மிக அதிக கடந்த காலம் ஆகிவிடாத, சமீபத்தைய கடந்த காலமான 1940களைக் கண் முன் கொண்டு வருவது மிகப் பெரிய சவால். இந்தப் புத்தகம் அந்த அளவில் தமிழில் ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். அந்தக் கால அரசியல், அந்தக் கால சினிமா, அந்தக் கால ரேடியோ, அந்தக் காலப் பயணம், அந்தக் கால வாழ்க்கை, அந்தக் கால சங்கீதம் என்ற எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. மறக்கவே முடியாத அனுபவத்தைத் தரும், தவறவிடக் கூடாத நாவல்.

பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை இரா.முருகன் எழுதி இருக்கிறார். அவற்றில் நான்கு நாவல்களை நான் படித்திருக்கிறேன். நான் படித்தவற்றில் இந்த நாவல் ஒரு மாஸ்டர் பீஸ். மிளகு என்றொரு நாவலை எழுதப் போவதாக இரா.முருகன் சொல்லி இருந்தார். இந்த நாவலைப் படித்ததும் தோன்றியது, மிளகு நாவல் வந்தால் அது இன்னொரு மைல்கல்லாக இருக்கும் என்பதுதான். இரா.முருகனுக்கு வாழ்த்துகள்.

குறிப்பு: இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அச்சுப் புத்தகம் விரைவில் வெளியாகும். கிண்டிலில் வாங்கிப் படிக்க: https://www.amazon.in/dp/B08G16WC44

Share

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

பதிப்பகத் தொழிலாளிகள் இருவர்

சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து இரவு பைக்கை எடுத்துக்கொண்டு வரும்போது ஒருவர் ட்ராப் கேட்டுக் கை காட்டினார். வயதானவராகத் தெரிந்தார். ஏற்றிக்கொண்டேன். நான் கிண்டி வழியாகத்தான் போவேன் என்பதால் கிண்டி ரயில்வே நிலையத்தில் இறக்கிவிடுவதாகச் சொன்னேன். சந்தோஷப்பட்டார். அன்று சீக்கிரமே வீட்டுக்குப் போய்விடலாம் என்றார். அவரது வீடு இருப்பது மறைமலைநகரில்.

கிண்டி போகும் வரை எதாவது பேசலாமே என்று கேட்க ஆரம்பித்தேன். அவரது கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அவருக்கு இப்போது வயது 65 இருக்கலாம். பதிப்பகத்துறையில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆன்மிகப் பதிப்பகத்தில் வேலை செய்கிறார். முதல் நாள் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேரும்போது அவருக்குச் சம்பளம் 30 ரூபாயோ என்னவோ சொன்னார். அவரது 58வது வயதில் அந்தப் பதிப்பகம் அவரை ஓய்வு பெறச் சொல்லிவிட்டது. அப்போது அவர் வாங்கிய சம்பளம் பனிரெண்டாயிரம் ரூபாய் வரை இருக்கலாம். அவர் பதிப்பகத்தின் கடை விற்பனையில் உதவியாளராக இருந்து ஓய்வுபெறுகிறார். பின்னர் அவரை மீண்டும் பணிக்கு எடுத்துக்கொண்டது அதே பதிப்பகம். சம்பளம் மாதத்துக்குப் பத்தாயிரம். பிடித்தம் அது இது எதுவும் கிடையாது. காண்ட்ராக்ட்டில் வேலை. அவர் வேலை செய்த 30+ வருடங்களுக்குமாகச் சேர்த்து அவர் ஓய்வு பெறும்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அந்தப் பதிப்பகம் கொடுத்திருக்கிறது. அதை வைத்து அவரது மகனின் படிப்பைச் சமாளித்துவிட்டார் இவர். பையன் டிப்ளமோ முடுக்க, பதிப்பகத்தின் முதலாளியே பையனுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். பதிப்பகத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார் இவர். அந்தப் பதிப்பகம் பழங்கால நடைமுறையில் உள்ள சிறிய பதிப்பகம். முதலாளி – தொழிலாளி வித்தியாசம் எல்லாம் அப்படியே இன்னும் இருக்கும் ஒரு பதிப்பகம். இவருக்கு அதிலெல்லாம் பெரிய புகார்கள் இல்லை. இத்தனை செய்ததே அவருக்குப் பெரிய உதவியாக்த் தெரிகிறது. அதிலும் குறிப்பாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டதைச் சொல்லிக்கொண்டே வந்தார். போக வர பஸ்ஸுக்குப் பணமும் டீக்கு காசும் கொடுத்துவிடுவார்கள் என்றார். அந்தப் பதிப்பகத்தை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

கிண்டியில் இறங்கிக்கொண்டவரின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அத்தனை போக்குவரத்து நெரிசல். நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

இது நடந்து இன்னும் சிறிது நாள் கழித்து இன்னொருவரைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர் ஒரு கம்யூனிஸ சிந்தனையுள்ள பதிப்பகத்தில் வேலை பார்த்தவர். கிட்டத்தட்ட 25 வருடங்களாக. மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘ஒரே நாள்ல தூக்கிட்டாங்க சார்’ என்று. என்ன காரணம் என்பதெல்லாம் இங்கே வேண்டாம். என்னவோ கருத்து வேறுபாடு. இவரும் மிகவும் அடிமட்டத் தொழிலாளியே. ’25 வருஷம் வேலை பாத்ததுக்கு எதாவது தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கேன்’ என்றார். அவரால் ஒரே நாளில் தான் தூக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாவமாக இருந்தது. அவருக்கு செட்டில்மெண்ட் ஆனதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயம் ஆகி இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த இரண்டும் ஒரு உதாரணம் மட்டுமே. இதனால் கம்யூனிஸப் பதிப்பகங்கள் மிக மோசம் என்றோ, முதலாளி மனப்பான்மை உள்ள பதிப்பகங்கள் மிகவும் யோக்கியம் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுவது போல முதலாளி பதிப்பகமெல்லாம் மோசம், கம்யூனிஸப் பதிப்பகம் என்றால் யோக்கியம் என்பதுவும் உண்மை அல்ல என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். ஒரு வியாபாரம் என்பதற்குள் வந்துவிட்டால் கொள்கை எல்லாம் எப்படி ஓடி விடும் என்பதற்காகவே சொன்னேன். பதிப்பகத்துறை என்றல்ல, எல்லா வியாபாரத்திலும் இதுதான் நிலைமை.

வண்டி வண்டியாக கம்யூனிஸப் பாடம் எடுப்பார். அவர் தனது வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ தொழிலாளிகளிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை யாராலும் சொல்ல முடியாது. உண்மையிலேயே கோட்பாட்டின்படியே நடந்துகொள்பவர்களும் உண்டு. இது இது இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.

Share