Archive for Post

திருநெல்வேலி எஃப் எம்

எங்க இருந்து கூப்படறீங்க, உங்க பேரைச் சொல்லுங்க.

நா கிருஷ்ணாபுரத்துல கூப்புடுதென் மேடம். பேரு ..

என்ன ஜோக் சொல்லப் போறீங்க?

ரெண்டு ஜோக் மேடம்.

சொல்லுங்க.

மாமியாக்காரி மாடில இருந்து விழுந்துட்டா. ஏட்டி தூக்குட்டின்னு சொல்லுதா. ஆனா மருமவ தூக்கமாட்டெங்கா. ஏன்?

ஏன்? தெரியலையே..

என்ன வெய்ட் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கன்னு சொல்லுதா.

ஓ.. எம்மாடி..

இன்னொரு ஜோக் சொல்லுதென். ஒரு வாத்தியாரும் ப்ரொசரும் ஒரு ஸ்கூலுக்கு செக் செய்ய போறாங்க.

ரெண்டும் ஒருத்தர்தானே..

இல்ல மேடம்.. ஒருத்தர் அட்மினு..

போம்போதெ சொல்லுதாங்க எல்லாரும். ஸ்கூல் ரொம்ப விவகாரமானதுன்னு. அங்க போய் பையனுவ கிட்ட பேர கேக்காரு ப்ரொபாச்ரு.. உம் பேர் என்னல? பளனி. அப்பா பேரு? பளனியப்பன். எலேய், உம் பேரு? காசி. உங்கப்பா பேரு? காசியப்பன். ஆத்தாடின்னு ஓடி வந்துட்டாங்க மேடம்.

ஓ! எப்படி இருக்காங்க பாருங்க நம்ம ஆளுங்க.

ஆமா மேடம்.

சரி, நேயர்களே அடுத்த பாடல் அருள் படத்தில் இருந்து ஒட்டியாணம் செஞ்சி தாரேன் வாரியா பாடல் ஒலிபரப்பாகிறது.

பாட்டு ஒலிபரப்பாகிறது.

அடுத்த நேயர்.

வணக்கம் மேடம். நல்லா இருக்கீங்கலா?

நலமா இருக்கேன் சொல்லுங்க. என்ன ஜோக் சொல்லப் போறீங்க?

ஒருத்தன் டாக்டர பாக்க போறான். நூறு வயசு வாளனும் சார். என்ன செய்யணும்னு கேக்கான். டாக்டர் கேக்காரு.. கல்யாணம் ஆயிட்டான்னு.. அடுத்த வாரம் கல்யாணங்கான். கல்யாணம் ஆன பின்னாடி வாடேன்னு சொல்லி அனுப்பிடுதாரு. ஏன்?

ஏன்?

டாக்டர் சொல்லுதாரு, அப்புறம் நீ வந்து நூறு வயசு வாழணும்னு கேக்கமாட்டங்காரு..

ஓ.. விவரமான டாக்டரா இருக்காரே.

நேயர்களே உங்களுக்கான அடுத்த பாடல் மதுர படத்தில் இருந்து. பம்பரக் கண்ணு பச்ச மொளகாய் பாட்டு ஒலிபரப்பாகிறது.

அடுத்த நேயர்.

மேடம்.. ஜோக் சொல்லட்டா.. ஒருத்தர் டாக்டர்கிட்ட போறான். (இவரும் இரண்டு டாக்டர் ஜோக்ஸ் சொல்கிறார்! மறந்துவிட்டது)

ஏன் எல்லாரும் டாக்டர் ஜோக்கா சொல்றீங்க இன்னைக்கு? தெறிக்க விடுதாங்களே நம்ம ஆள்கள். நேயர்களே உங்களுக்கான அடுத்த பாடல்..

**

இவையெல்லாம் முந்தாநாள் திருநெல்வேலி பண்பலையில் கேட்ட நிகழ்ச்சியில் காதில் விழுந்தவை. இருபது வருடத்துக்கு முந்தைய திருநெல்வேலியை அங்குலம் கூட மாறாமல் அப்படியே பாதுகாத்து வெச்சிருக்கீங்களேடே! I am blown away!

Share

அமுதனின் கதை!

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

*

அவன் பெயர் வசதிக்காக அமுதன் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா! அமுதன் என்னுடன் கல்லூரியில் படித்தான். நான் மற்ற நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது அமுதனும் வருவான். அங்கே அமுதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் இந்த அமுதனுக்கு தூரத்துக்கு உறவு. இது அமுதனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்கு அமுதா மேல் காதல் வந்துவிட்டது. அமுதாவின் வீட்டுக்காரர்கள் அமுதன் தங்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் ஓவராக அவனுக்காக உருகினார்கள். தினமும் காஃபிதான் வடைதான். இவனும் அடிக்கடி வருவான் போவான். அந்தப் பெண்ணுக்கும் இவனை உள்ளூரப் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் பரஸ்பரம் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இப்படியே காதலை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். என்னிடம் மட்டும் அமுதன் அமுதாவைப் பற்றி அப்படி இப்படி என்றெல்லாம் பேசி பெரிய அறுவையைப் போடுவான். தலையெழுத்தே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். நாங்களெல்லாம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் பார்க்கும் வேகத்தில் இருக்க, இவன் அறுபதுகளின் காதலை எங்கள் காதில் ஓதி கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தான். அமுதா அப்படி சிரித்தாள், அமுதா அப்படி பார்த்தாள், அமுதா வேண்டுமென்றே பார்க்காமல் போனாள், அமுதா அப்படிச் செய்தால் அதன் அர்த்தம் அவங்க அம்மாப்பாவுக்குக் கூடத் தெரியாது, தனக்குத்தான் தெரியும் இத்யாதி இத்யாதி. ஒருநாள் அமுதா என்ற பெயரை ஒரு பேப்பரில் ரத்தத்தில் எழுதிக்கொண்டு வந்து பெருமையாகக் காண்பித்தான். அடதாயளி என்பதே என் அதிகபட்ச ரீயாக்‌ஷனாக இருக்கவும் நொந்து போனான். அந்த பேப்பரை நாலாக எட்டாக மடித்து ஒரு முத்தம் கொடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டு, ‘வாழ்க்கை முழுக்க இது என் கூட இருக்கும் மக்கா’ என்றான். வாக்தேவி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள். அந்த பேப்பர் மட்டுமே நிலைத்தது. அமுதாவின் வீட்டில், ‘சொந்தமெல்லாம் சரிதான், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அதே மனநிலையில் அமுதனின் வீடும் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் அமுதாவுக்கு வேறொரு தடியனுடன் கல்யாணம் ஆனது. கல்யாணத்துக்கு போய் பந்தி பரிமாறி மொய் வைத்துச் சிறப்பித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்தான் அமுதன். நாங்களும் போயிருந்தோம்!

அன்றிரவு முழுக்க அமுதன் அரற்றிக்கொண்டே இருந்தான். கூட இருந்த பையனெல்லாம் சும்மா இல்லாமல், எல இப்ப என்னல ஆயிருக்கும் என்றெல்லாம் கேட்டு வைக்க அமுதன் அழுவதா சிரிப்பதா எரிந்து விழுவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் சொன்னான், ‘அதுக்குத்தான் அன்னைக்கே டெக் போடும்போது கூப்பிட்டேன். அதுமட்டும்தாம்ல நெஜம்’ என்று சொல்லி வைத்தான்.

அமுதன் அழகாக இருப்பான். நன்றாகப் படிப்பான். அவனை ஏன் அமுதாவின் குடும்பம் விட்டுக்கொடுத்தது என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. அமுதன் இன்னும் படித்து வெளிநாடு போய் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனபோது அவனுக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு அமுதா என்றெல்லாம் பெயர் வைக்காமல் தந்திரமாகத் தன் மனைவியிடம் இருந்து தப்பித்துக்கொண்டான். இடையிடையே என்னுடன் பேசுவான். வாட்சப் புண்ணியத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி.

இதற்கிடையில் அமுதாவின் சொந்தக்காரர்கள் மூலம் அந்தப் பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்றறிந்தேன்.

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா பாட்டு. அதுதான் அமுதன் அமுதாவின் ஃபேவரைட் பாட்டு. இந்தப் பாட்டு காதில் விழவும் அமுதனின் ஞாபகம் வர, கூடவே அமுதாவின் மகள் பெரியவளான செய்தியும் வர, உடனே அமுதனை அழைத்தேன்.

“எல, அமுதாவோட பொண்ணு வயசுக்கு வந்துட்டாம்ல” என்றேன்.

“எவல அவ?” என்றான்.

Share

Pondicherry Literary Festival 2019

It was a lovely experience at PondyLitFest2019. Well organized, better planned compared to last year, many excellent sessions and had great interactions with many friends and writers. Most of the attendees expressed their concern in so many ways just about how we are going to take our tradition to the next generation. Many many questions were asked again and again in so many ways to express this concern only. Everybody attended had a great urge to protect and hand over our dharma to the future, but puzzled it seems how to achieve it. This fest either might have enlightened them or confused more, whichever is good. 😊 A session on economy (‘Economy: Is $5 Trillion a Mirage?’) registered so many doubts, questions, concerns, criticisms and ideas with Sanjeev Sanyal (Principal Economic Adviser in the Ministry of Finance) which we can never expect to have happened in any other government other than this current BJP government. Arif Muhammad Khan’s session was the best one I would say. Aravindan Neelakandan’s chaired many sessions, he was received a superstar there, I must say all his sessions were very good, in particular the session in which Jataayu and Ganesh participated, ‘Indigenous Traditions: Beyond conservation’. ‘What good, digging up the past?’ session was so informative that I must watch it again to get the whole data submitted there. The past two days were very insightful. Thanks #PLF2019.

Share

சிசிடிவி கேமராக்களின் தொல்லை

சிசிடிவி கேமராக்களினால் இன்று மிகப்பெரிய நன்மை வந்துள்ளது. பல வழக்குகளை விரைந்து முடிக்க இவை உதவி உள்ளன. ஆனால் எனக்கு வேறு மாதிரியான பிரச்சினை. என்னைப் போன்றே பலர் கோடிக்கணக்கில் இருப்பார்கள் என்பது உறுதி. எதிர்பாராத நேரத்தில் யாரோ எப்படியோ செத்துப்போன அல்லது கொலை செய்யப்படும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் வீடியோக்களைப் பார்க்க நேர்ந்து விடுகிறது. இதனால் ஏற்படும் பதற்றம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுவும் வாட்ஸப் வந்தபிறகு இந்த மாதிரி வீடியோக்கள் கொட்டுகின்றன.

பொதுவாகவே எனக்கு நல்ல வீடியோக்கள் உள்ளிட்ட எந்த வீடியோவையும் முழுவதுமாகப் பார்க்க பெரிய எரிச்சலாக இருக்கும். படிப்பதுதான் எளிதானது. ஆனால் இது வீடியோக்களின் காலம். எனவே பல முக்கியமான தகவல்களைத் தவற விடக்கூடாது என்பதற்காக வீடியோக்களைப் பார்த்தே ஆகவேண்டிய தேவை உள்ளது. அதற்கிடையில் இதுபோன்ற கொடூரமான வீடியோக்கள் தரும் எரிச்சலைச் சொல்லி முடியாது.

இருபது வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒரு வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. எதோ செய்தி என்று பார்த்தால், ஒரு கோவில் குளத்தில் ஒரு மனநிலை சரியில்லாத நபர் தன்னைக் காப்பாற்ற வந்தவரை நீரோடு முக்கிக் கொல்லும் வீடியோ! அந்த வீடியோ தந்த அச்சம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதேபோல் ஒரு யானை தன் பாகனை விரட்டி விரட்டிக் கொல்லும் வீடியோவையும் சன் டிவி ஒளிபரப்பியது. அதிலிருந்தே இது போன்ற வீடியோக்கள் மீது பெரிய அச்சம் எனக்கு.

சமீப காலமாக சிசிடிவியில் பதிவாகும் அனைத்துக் கொலைகளையும் தற்கொலைகளையும் உடனே எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகிறார்கள். அது வாட்ஸப்பில் வருகிறது. ஃபேஸ்புக்கில் பரப்பப்படுகிறது. இவற்றிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. காலையில் எழுந்ததும் சாதாரணமாக செய்திகளைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சிகளில் பார்த்தால் இதுபோன்ற கொடூரமான வீடியோக்களைத் தொடர்ச்சியாக ஒளிபரப்புவார்கள். எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் இதுதான் வேலை என்றாலும், பாலிமர் நியூஸ் இதைச் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யும். இன்று காலைகூட அப்படி ஒரு செய்தி. (இது பாலிமரில் அல்ல!) பேருந்தின் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஒரு இளைஞர்! நல்லவேளை, அவர் உயிர்தப்பிவிட்டார். சில வீடியோக்களில் மனிதன் மண்ணால் பிசைந்த பொம்மை போல நசுங்கிப் போவதையெல்லாம் காண்பிப்பார்கள்.

இன்னும் சில வீடியோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கொடூரமானவையாக இருக்கும். சில நொடிகளுக்குள் அது ஓடி முடிந்துவிடும். எனக்குத்தான் பல மணி நேரம் பதற்றம் நிற்காது. எத்தனை முறை சொன்னாலும் யாராவது ஒருவர் இப்படியான வீடியோக்களைப் பார்த்துவிட்டு சரியாக நமக்கு அனுப்பித் தொலைவார்கள். இவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றே தெரியவில்லை.

இப்போதெல்லாம் எதாவது வீடியோ வந்தால், உடனே அதை அப்படியே ஃபார்வேட் செய்து கடைசி சில நொடிகளைப் பார்ப்பேன். ஒன்றும் பிரச்சினை இல்லை என்றால் மட்டுமே, முழுவதுமாக முதலில் இருந்து பார்ப்பேன். இத்தனை தவிர்த்தும், நான் சமீபத்தில் பார்க்க வைக்கப்பட்ட இதைப் போன்ற வீடியோக்கள் ஐந்தாவது இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படி இந்த வீடியோக்களை எல்லாரும் சாதாரணமாகப் பார்த்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள் என்றே தெரியவில்லை.

Share

ப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க

நான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.

* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.

* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான்! ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.

* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.

* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,

* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.

* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.

* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.

* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.

* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.

* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.

* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்தக்கூடாது.

* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.

* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.

* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.

* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.

* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.

இப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.

ஏ பி சி டி
உங்கப்பந்தாடி
வந்தா வாடி
வராட்டி போடி

என்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Share

Vaali – Some thoughts

தொடக்கக் குறிப்பு: இது வாலியைப் பற்றிய ஆய்வு அல்ல. எனவே ஒத்திசைவு ராமசாமிகள் (http://othisaivu.wordpress.com/2012/03/10/post-100/) கொஞ்சம் விலகி நிற்கவும். 😉

இரண்டாம் குறிப்பு: நான் இங்கே வாலி எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் சில வாலி எழுதாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை ஒரு புள்ளி விவரப் பிழை என்று மட்டும் கொள்ளவும். உண்மையில் பல திரையிசைப் பாடல்களை யார் எழுதியது என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாக இருந்தது. அதோடு வாலியும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் நினைவில் வந்து அருவிபோல் கொட்டுகின்றன. (வார்த்தைகள் முட்டுகின்றன! வாலி!) ஒரு பாடலை நினைக்குபோது அதிலிருந்து அதிலிருந்து என பலப்பல பாடல்கள். ஆய்வுக் கட்டுரை அல்ல என்று சொல்லிவிட்டதாலும் என் மனத்திலிருந்து எழுதுவதாலும் நினைவிலிருந்த வரிகளை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

மூன்றாம் குறிப்பு: நான் வாலியை வந்தடைந்தது இளையராஜாவின் வழியாகத்தான். எனவே நான் எழுதப்போகும் இந்தப் பதிவு தொடர்ச்சியாக இளையாராஜவைப் பற்றியும், எனவே வைரமுத்துவைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்டு. எம் எஸ் வி மற்றும் கேவி மகாதேவன் இசையில் வாலி பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். நல்ல பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் பற்றித் தெரியாததால் நான் அவற்றைத் தொடவில்லை. 1976லிருந்து 2000 வரை என வைத்துக்கொண்டாலும், 24 வருடங்களில் வாலியை வரையறுத்தாலே அதன் முன்பின்னாக நாம் நீட்டித்துக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

Share

Mahabharatham – Kumbakonam edition – Announcement

தமிழில் மஹாபாரதம் என்றாலே அது கும்பகோணப் பதிப்பு வெளியிட்ட மஹாபாரதம்தான். அசாதாரணமான உழைப்பில், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பில் வந்த புத்தகம் அது. அத்தகைய மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில் இல்லை.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவரே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் வெளியிடப்பட்டது.

குறைந்தது நூறு பேர் முன்பதிவு செய்தால், இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு நான்கைந்து மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன். 

விலை ரூ.5,000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்புத்தகம் விலை மதிப்பற்ற பொக்கிஷம்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் வெங்கட்ராமணனைத் தொடர்புகொள்ள: 098946 61259. மின்னஞ்சல்: venkat.srichakra6@gmail.com

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரைப் பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தை வெளியிடுவார். எவ்வளவு பணம், எப்படிச் செலுத்தவேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share

ஞாநியும் சாதியும் (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தொடர்பாக)

ஞாநி போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் இது:

https://www.facebook.com/gnani.sankaran/posts/10200867431320770

//இன்றைய உடனடித் தேவை சுயசாதி மறுப்பாள்ர்களே. " நான் பிறப்பால் வன்னியன் என்றார்கள். ஆனால் நான் சாதியற்றவன். சாதிக் கலப்பையும் சமத்துவத்தையும் ஆதரிப்பவன். எல்லா சாதி வெறியையும் எதிர்ப்பேன்" என்று ஒவ்வொரு சாதியிலிருந்தும் குரல் வரவேண்டும். குரல் கொடுப்போர் இங்கு வந்து பதிய அழைக்கிறேன். முதல் குரல் என்னுடையது. நான் பிரந்த பார்ப்பன சாதியை நான் உதறிவிட்டேன். பார்ப்பபன சாதி வெறி உட்பட எல்லா சாதி வெறியர்களையும் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். சாதிக் கலப்பை ஆதரிப்பேன். இங்கே வந்து பதிவு செய்யும்படி முதன்மையாக வன்னியராகப் பிறக்க நேர்ந்த சாதி மறுப்பாளர்களை அழைக்கிறேன்.//

இதில் உள்ள மறுமொழிகளைப் படித்துவிடவும். இது தொடர்பாக என் கருத்து முதலில்:

இப்போதைக்கு எனக்கு ஜாதிய எண்ணம் இல்லை என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பூணூல் அணிவதில்லை. இதனால் ஜாதி எண்ணம் ஒழிந்துவிட்டதா என்றால் தெரியவில்லை என்றே சொல்லுவேன். ஏனென்றால் என் குடும்ப வழக்கம் எல்லாவற்றிலும் ஜாதியின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது. நான் ஜாதியைப் புறக்கணிக்க வேண்டுமானால் முதலில் என் சொந்தங்களை என் கொள்கையை முன்வைத்து மறுக்கவேண்டும். என்னால் அது இயலவே இயலாது. எனவே நான் முற்றும் ஜாதியைத் துறந்துவிடவில்லை என்பதே உண்மையாகிறது.

நாளை என் மகனுக்கு உபநயனம் செய்விக்காமல் இருப்பேன் என்று என்னால் உறுதி கூற முடியாது. என் அம்மா, என் உறவினர் அனைவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை விளைவிக்கும். அவர்களை எதிர்க்க எனக்கு உறுதி இல்லை. இது ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொல்லலாம். சொல்லிக்கொள்ளட்டும். 

நானே முன் வந்து என் மகனுக்கோ மகளுக்கோ வேறு சாதியில் வரன் பார்த்துத் திருமணம் செய்விப்பேன் என்று இன்றைய நிலையில் என்னால் நிச்சயம் உறுதி கூற முடியாது. அதையும் இப்போதே சொல்லி வைக்கிறேன். ஆனால் என் மகனோ மகளோ அவர்களாக வேறு ஒரு சாதியில் யாரையேனும் விரும்பினால் (ஹிந்து மதம் தவிர வேறெந்த மதத்தையும் ஏற்கமாட்டேன்) அவர்கள் குடும்பமும் அந்த வரனும் நல்ல விதமாக எனக்குத் தோன்றினால் நிச்சயம் மணம் செய்து வைப்பேன். அதேபோல் அவர்களாகவே விரும்புவது இன்னொரு பிராமண வரன் என்றால், அந்த வரனோ அக்குடும்பமோ நல்ல விதமாக இல்லை என்றால் நிச்சயம் திருமணம் செய்விக்க மாட்டேன். இதுவே என் இன்றைய நிலை.

நான் முதலில் இதைச் சொல்லிவிடுவதன் நோக்கம், ஞாநியின் ஸ்டேட்டஸ் குறித்து ஐயங்களை எழுப்பத்தான்.

01. முதலில் இங்கே வந்து நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொல்பவர்களெல்லாம் (பெரும்பாலும்) ஹிப்போகிரஸியை வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சும்மா வாய் வார்த்தை சொல்வது எந்த வகையில் சரி? இவர்கள் இதை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்?

02. பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டு பேசுவது நம் அனைவருக்குமே உரிய ஒன்று. இளவரசனின் மரணம் தந்த உளைச்சல் யாவருக்கும் உரியதே. எனக்கும் கடுமையாகவே இருந்தது. அவர் குடித்துவிட்டு செத்துக் கிடக்கிறார் என்று சொன்னவர்களை என் ஃபேஸ்புக்கில் அன்று நான் ப்ளாக் செய்தேன். எனக்கு ஒரு மகிழ்ச்சி இப்படி ப்ளாக் செய்வதில். அதே உணர்ச்சி வேகத்தில் நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொன்னால், அதை எப்படி காலாகாலத்துக்கும் கடைப்பிடிப்பது என்று இவர்கள் யோசித்தார்களா இல்லையா?

03. மிக முக்கியமான கேள்வி, இப்படி ஜாதியை கைவிட்டுவிட்டவர்கள் ரிசர்வேஷன் அடிப்படையில் எச்சலுகையையும் கோரி பெறமாட்டார்களா? இதைப் பற்றி ஞாநியும் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.

04. இந்திய நாட்டில் ஜாதி என்ற ஒன்று நிஜமாகவே வெறும் மோசம் செய்ய  மட்டும்தான் இருக்கின்றதா? எத்தனை எத்தனை ஜாதிகள். நம் வரையறையில் கொஞ்சம் கூட் யோசிக்க முடியாத அளவுக்கு ஜாதிகளும் அதன் பழக்கங்களும் அதன் பாரம்பரியமும் உள்ளனவே. இவைதானே பன்மைத்துவத்தின் உச்சம். ஒற்றை செயல் அடிப்படையில் இவற்றை எல்லாம் நாம் கை கழுவினால், என்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் நாம் விவாதித்திருக்கிறோமா?

இவற்றுக்கெல்லாம் பதில் சொன்னால்தான் ஜாதியைக் கைவிடுபவர்களைப் பற்றி நேர்மையாக என்னால் யோசிக்கமுடியும்.

பின்குறிப்பு: நான் ஜாதி வெறியன் என்று சொல்லப்போகிறவர்களுக்கு – நான் ஜாதி வெறியன் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும். அதை என்னால் நிரூபிக்கமுடியாது என்று ஒப்புக்கொள்கிறேன். இப்போதைக்கு என் நிலை இதுதான் என்பதை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்லிக்கொள்வது தேவை என்று கருதி இதைச் சொல்கிறேன். நன்றி. 

பின்குறிப்பு 2: நான் இதை ஞாநியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலேயே கேட்கமுடியும். விவாதம் திசை திரும்பிவிடும் என்பதற்காக மட்டுமே தனியாகப் பதிகிறேன்.

Share