Archive for Uncategorized

பெயர் சொல்லி அழைத்தல்

ஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.

ஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா? சம வயதே என்றாலும் அழைப்போமா? பெண்களை அழைப்போமா? அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர்களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்மை இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.

இன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.

கருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.

நேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.

எனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.

நன்றி ராகுல் ஜி!

Share

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு

நடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது!) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.

பொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.

5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன்? இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.

இதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.

பொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.

இந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும்! ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.

கட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.

மிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல! இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.

நன்றி: https://oreindianews.com/?p=3463

Share

டூ லெட்: வாடகை உலகம்

செழியனின் திரைப்படம். எவ்வித அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான மொழியில் பிரச்சினையை மட்டும் பேசும் செறிவான ஒரு திரைப்படம். சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்படத்தில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளையோ அல்லது எல்லாவற்றையுமோ எதிர்கொண்டிருப்பார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் என் வீட்டிலேயே எனக்குத் தனிப்பட்டு நிகழ்ந்தவை. இப்படி ஒவ்வொருவரும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்படம் டூ லெட். படத்தின் தொடக்கத்தில் இப்படம் இதுவரை திரையிடப்பட்டிருக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. தமிழில் அரிதிலும் அரிதாக வெளிவரும் மாற்றுத் திரைப்பட முயற்சிகளை நாம் ஆதரிக்கவேண்டியது அவசியம். அப்படி ஒரு திரைப்படம் டூ லெட். ஒளிப்பதிவாளர் / இயக்குநர் செழியனுக்கு வாழ்த்துகள்.

வீடு கட்டுதல் பற்றிய பிரச்சினைகளை யதார்த்தமாக ஆழமாக முன்வைத்த திரைப்படம் வீடு. தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதன்மையானது இது. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸின் வீடு கட்டும் கனவை இனி இப்படத்தின் சாயல் இல்லாமல் எடுக்கமுடியாது என்னும் அளவுக்குப் பேசிய படம். அந்த முதியவர் ஒரு குடையைத் தொலைத்துவிடும்போது, இந்த வீடு கட்டமுடியாமல் போனால் அவருக்கு என்ன ஆகும் என்ற கேள்வி பூதாகரமாக எழுவது. ஒரு வீட்டைக் கட்டுவதில்/வாங்குவதில் அது நிறைவடையும் வரை ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. வாங்கிய பின்னரும்கூட!

சென்னையில் வீடு வாடகைக்கு இருப்பது போன்ற பிரச்சினை இன்னொன்றில்லை. நீங்கள் மிடில் கிளாஸாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், வீட்டுக்காரர் தரும் விநோதமான தொல்லைகள் உங்களைத் துரத்தி அடிக்கும். இங்கே மிக முக்கியமாகச் சொல்லவேண்டியது, இந்த வீட்டுக்காரர்கள் யாருமே மோசமானவர்கள் இல்லை என்பதைத்தான். எல்லோரும் நல்லவர்களே. ஆனால் இப்படி இருக்கும்படியாகத்தான் ஆகிவிடுகிறது. ஏனென்றால் குடித்தனக்காரரும் நம்மில் ஒருவரே. யாரும் புனிதரல்ல.

நான் வீடு வாடகைக்கு இருந்த இடங்களில் பெரிய பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் சிறிய சிறிய சீண்டல்கள் இல்லாமல் இருந்ததுமில்லை. என் திருமணத்தின்போது ஏற்கெனவே திருமணமான பெண் என் மனைவியிடம் சொன்னது காதில் விழுந்தது, ‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா வெக்கம் மானம் சூடு சுரணை எதுவும் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடாது’ என்று. இன்றளவும் என் காதில் ஒலிக்கும் ஞானத்தின் குரல் இது. வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க வந்துவிட்டாலும் இப்படித்தான். இவற்றில் எதாவது ஒன்று எதாவது ஒரு சமயத்தில் இருந்துவிட்டாலும் நீங்கள் வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும்.

வீடு மாற்றும்போதெல்லாம் ஏன் இப்படி அலைகிறோம் என்ற பதிலில்லாக் கேள்வி எரிச்சலைத் தரும். இந்த எரிச்சல் மிகும்போதெல்லாம் இதைப் பற்றி எழுத நினைப்பேன். வீட்டு உரிமையாளர் படித்துவிட்டுத் தவறாக நினைப்பாரோ என்றொரு மிடில்கிளாஸ் எண்ணம் எழுந்துவரும். ஒருதடவை எழுதியே தீருவது என்று முடிவெடுத்த நாளில், பிரபு காளிதாஸ் (புகைப்படக் கலைஞர்) ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். என்னை அசைத்துப் பார்த்த பதிவுகளில் ஒன்று அது. நான் எழுத நினைத்தவற்றையும், அதைவிடப் பல விஷயங்களையும் எழுதி இருந்தார் அவர். அன்று நான் எழுத நினைத்த அனைத்தும் உறைந்து நின்றது. நான் எழுதவில்லை. (அந்தப் பதிவின் லின்க் கிடைத்தால் சேர்க்கிறேன்.) அவர் எழுதி 4 வருடங்கள் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.

அதற்குப் பிறகும் வீடு மாற்றவேண்டிய தேவைகள் தினம் தினம் வந்துகொண்டே இருந்தன. அப்போதெல்லாம் ஒரு வேகம் எழும். அப்படி ஒரு வேகத்தில் இன்னொருமுறை ஒரு பதிவு எழுத நினைத்தபோது, ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. வீடு வாடகைக்கு எடுக்கும் காட்சிகள் இருபது நிமிடங்களே வந்தாலும் மிகப்பெரிய பிரச்சினையை நகைச்சுவையாகக் கையாண்டதில் அசந்துபோய்விட்டேன். நாம் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியதால் மீண்டும் எழுதுவதைக் கைவிட்டேன்.

இதற்கிடையில் இனி வீடு வாடகைக்குப் பார்த்து அலையவேண்டியதில்லை என்ற ஒரு தருணத்தில் டூ லெட் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் வரும் பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன். மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள். இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பார்கள். வீடு முழுக்க கிறுக்கி வைக்கும் குழந்தை. வீட்டு உரிமையாளர் அதைப் பார்க்கும் பார்வை. அட்வான்ஸ் தொகையில் கழித்துவிடுவாரோ என்கிற பதைபதைப்பு. இவற்றை வைத்து ஒரு சிறுகதையையும் நான் எழுதினேன். நான் எழுதிய கதைகளில் மிக மெலிதான கதை கொண்ட எளிய கதை இதுவே. சொந்த வீட்டுக்குப் போனாலும் நாம் குழந்தைகளைக் கிறுக்க விடமாட்டோம் என்பது இதன் மறுபக்கம்.

இன்னொரு சம்பவம், படபடவெனப் போய் வீட்டு உரிமையாளருடன் சண்டை போட எழும் வேகம். ஒருநாளும் இது நடக்காது. அப்படி நடக்கப்போகும் அந்த நொடியில் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருக்கமாட்டார். ‘வீட்டைக் காலி பண்ணிக்கிறேன்’ என்று கோபத்துடன் வீட்டு உரிமையாளரிடம் நான் சொல்லப் போனபோது வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை. அதற்கு பிறகு 2 வருடம் அதே வீட்டில் இருந்தேன்! மானம் சூடு சுரணையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது.

இந்தப் படம் கணக்கில் எடுக்காத, எனக்கு நிகழ்ந்த சம்பவம், ஒரு வீட்டின் உரிமையாளர் என் கண்முன்னே, அவர் குடி வைத்திருக்கும் குடித்தனக்காரரிடம் கேட்ட கேள்விதான், “ஏன் மாடில நைட்ல கட்டில் சத்தம் அத்தனை கேக்குது?” பெரிய நடுக்கும் ஏற்பட்டது எனக்கு. அவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். கட்டில் சத்தம் கேட்டது இரவில் அவர்கள் கட்டிலை வேறு எதற்காகவோ அங்கும் இங்கும் நகட்டியதால்தான். ஆனால் கேள்வியின் குவிப்பு வேறொன்றில் இருந்தது. அப்படியே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

இன்னொரு வீட்டின் உரிமையாளர் என்னிடம் மிக சீரியஸாகவே சொன்னார், ‘பக்கத்து வீட்டுக்காரங்க கூட நாங்க பேச மாட்டோம், நீங்களும் பேசிக்கவேண்டாம்’ என்று.

மீண்டும் சொல்லவேண்டியது, இவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள் என்பதைத்தான். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் துணை நின்றிருக்கிறார்கள். உதவி இருக்கிறார்கள். பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் கூடவே இருக்கிறது.

டூ லெட் படம் இந்த இரண்டாவது கோணத்தைக் கைக்கொள்ளத் தவறிவிட்டது. வீட்டு உரிமையாளர்களின் கோர முகத்தை மட்டுமே காட்டுகிறது. இதில் தவறில்லை. ஆனால் ஒரு மாற்றுத் திரைப்படம் இதையும் கொஞ்சம் முன்னிறுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் (கவிஞர் விக்கிரமாதித்யனின் மகன்) நடிகை ஷீலாவும் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்படி ஒரு இயல்பான நடிப்பை அபூர்வமாகவே பார்க்கமுடியும். இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். சந்தோஷ் நேரில் சின்ன பையன் போல இருக்கிறார். கண்டுபிடிக்கவே முடியவில்லை. படத்தில் அசாத்தியமான மாற்றம்.

படத்தில் பல நுணுக்கமான சித்திரிப்புகள் உள்ளன. முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருள்கள் ஓர் உதாரணம். ஒரு வீடு இயல்பில் அப்படித்தான் இருக்கும். ரிமோட்டைக் கொண்டு டிவியை அணைக்கும்போது அதைத் தட்டிக்கொள்வது இன்னொரு உதாரணம். கிரைண்டரை இருக்கும் இடத்தில் வைத்து அரைப்பது இன்னுமொரு உதாரணம். சில நுணுக்கச் சித்திரிப்புகளில் கருத்தரசியலும் உள்ளது. மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்கும் சேட்டுகளுக்கும் சொந்த வீடு இருக்கிறது, ஆனால் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழனுக்கு வாடகைக்குக் கூட வீடு கிடைப்பதில்லை என்ற ஒன்றை நான் கவனித்தேன். நான் இதை ஏற்கவில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள் எச்சாதி என்றாலும் அவர்கள் ஒரே சாதிதான். வீட்டு வாடகைக்காரர்களுக்கும் இது பொருந்தும்!

இன்றளவும் வீடு வாடகைக்குக் கிடைப்பதில் பெரிய அளவு தாக்கம் செலுத்துவது பொருளாதார ரீதியான வேறுபாடே. 2007ல் பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் பெருகியதால் இப்படி ஆனது என்ற கருத்தை ஓரளவுக்கு மட்டுமே ஏற்கமுடியும், முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. இந்தக் காரணத்தைச் சொல்லாமலேயே கூட இப்படம் முழுமை பெறுகிறது என்னும் நிலையில் இதைத் தவிர்த்திருக்கலாம். முஸ்லீமா என்ற கேள்வி ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அது முஸ்லீமா என்றுதான் வாயசைப்பில் தெரிகிறது. ஒரு பிராமணர் கேட்கும் கேள்வி சட்டெனப் புரியவில்லை. பிராமணர்களா என்று கேட்டாரா அல்லது வெஜிடேரியனா என்று கேட்டாரா என்பது தெரியவில்லை.

படம் முழுக்க கிறித்துவச் சித்திரிப்புகள் வருகின்றன. ஆனால் வேற்று மதங்களைக் கிண்டல் செய்வதில்லை. ஆனால், இதிலும் ஒரு நடப்பு அரசியல் இருக்கிறது. படத்தின் பாதியில்தான் அது எனக்குப் புரிந்தது. படத்தின் நாயகனும் நாயகியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாயகன் ஹிந்து என்பதுவும் எனக்குப் பாதியில்தான் தெரிந்தது. நாயகி மாதாவைக் கும்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். மகனுக்கும் தொட்டுக் கும்பிட்டு வைக்கிறாள். மகன் பெயர் சித்தார்த். நாயகன் கருப்புச் சட்டைக்காரன். ஈவெராயிஸ்ட் என்ற அளவுக்குக் காட்டவில்லை என்றாலும், அவர் எந்த மதக் கடவுளையும் கும்பிடுவதில்லை. வீட்டில் மாதாவின் உருவம் தவிர எதுவும் என் கண்ணில் படவில்லை. வீடு பார்க்கப் போகும்போது வ.உ.சி. படம் போட்ட காலண்டரைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளர் பிள்ளைமார் என்று தெரிந்துகொண்டு, வீடு வாடகைக்குக் கேட்பவரும் பிள்ளைமார்தான் என்று சொல்கிறார்கள். பிள்ளைமார் ம்யூட் செய்யப்படவில்லை என்பது ஆறுதல்.

இப்படம் கவனத்தில் கொள்ளாதவை என்று இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். வீடு மாற்றுவது என்பதும் வாடகை வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் என்பதும் நிச்சயம் எரிச்சலானவையே. ஆனால் அதற்காக எந்த ஒரு வீட்டு வாடகையாளரும் வீட்டு உரிமையாளரின் முன்னே அடிமை போல் நிற்பதில்லை. இங்கே இந்தப் பெண் ஏன் கூனிக் குறுகி ஒவ்வொரு காட்சியிலும் அப்படி நிற்கிறார் என்பது புரியவில்லை. தினம் தினம் அழுவதில்லை. ஏன் இங்கே அந்தப் பெண் கிட்டத்தட்ட எப்போதும் அழுதவண்ணம் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. வீடு மாறுவது என்று முடிவாகிவிட்டால் வீட்டு வாடகைக்காரருக்குச் சட்டென ஒரு தைரியமும் எதிர்ப்புணர்வும் திமிரும் வந்துவிடும். அதை இப்பெண்ணிடம் கடைசிவரை எதிர்பார்த்து ஏமாந்தேன். இரண்டாவது, அந்த ஊரை விட்டே போகலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, பொதுவாக எல்லோரும் எடுக்கும் இன்னொரு முடிவு, ஏன் இத்தனை பணம் கட்டிப் பையனைப் படிக்க வைக்கவேண்டும், அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே என்பது. இதைக் கோடிட்டாவது காட்டி இருக்கலாம். பொதுவாகவே வீடு வாடகை ஒரு சுமையாவது, நம் குழந்தைகளுக்கு நாம் தர விரும்பும் சிறந்த கல்வியின் மூலமாகவே. எனவே வீட்டு வாடகையும் குழந்தைகளின் கல்வியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான்.

எனக்குள்ள இன்னொரு பிரச்சினை, இத்திரைப்படம் குறித்தானதல்ல, பொதுவானது, மாற்றுத் திரைப்படங்கள் ஏன் இன்றும் இருபது வருடங்களுக்கு முன்பான படங்கள் போலவே நகர்கின்றன என்பதுதான். படம் மெல்ல நகர்வதைச் சொல்லவில்லை. காட்சி ரீதியாகச் சொல்கிறேன். விளக்கமாக எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. சொல்லும் மொழியில் வீடு திரைப்படம் போன்றே இத்திரைப்படமும் இருக்கிறது. சமீபத்தில் வந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் இப்படித்தான் இருந்தது. இவற்றை மீறிய ஒரு மொழி சாத்தியமில்லையா? அல்லது இதுபோன்ற கதைகளுக்கு இப்படி உறைந்து நகரும் புகைப்படக் காட்சிகள்தான் சரியானவையா?

இப்படத்தின் மிகப்பெரிய பலம், நம் வீட்டுக்குள் நிகழ்வதைப் போன்ற காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் நடிகர்களின் நடிப்பும். இதற்காகவும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையை எவ்வித அலைபாய்தலுமின்றிக் கையாண்டதற்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.

நன்றி: https://oreindianews.com/?p=3421

Share

குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை

பத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போதே மிகச் சிறப்பாக உள்ளரங்க அமைப்புகள் இருந்தன. ஆனால் அளவில் சிறியதாக இருந்த நினைவு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். ஆனால் இன்று நான்கு மணி நேரமாவது தேவைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

எவ்வித வேறுபாடும் இன்று ஒரே குடைக்குள் அனைத்து அமைப்புகளின் அரங்குகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரங்க அமைப்புகள் மற்றும் மனித உதவிகள் எல்லாமே தன்னார்வலர்களால் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம். உண்மையில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு உதவுகிறார்கள். அரங்கத்துக் காரர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம். உணவு உறைவிடம் உட்பட. பாராட்டப்படவேண்டிய அம்சம் இது.

இந்த முறை கண்காட்சி நாட்டுப்பற்றை மையமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. நான்கைந்து டெம்போக்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பாதகைகளுடன் வருவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எதாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று யோசித்து இந்த முறை அந்தமான் சிறையின் அட்டைப்பட மாதிரியை சாவர்க்கருடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த இடத்தின் மாதிரியையும் அமைத்திருக்கிறார்கள். அதோடு ஒலி-ஒளி அமைப்பும் இருக்கிறது. இரண்டு மூன்று ஒலி ஒளி அமைப்புகள். தீரன் சின்னமலை, பகத் சிங் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்களை ஒலி-ஒளியாக வடித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் ஒலி ஒளி அமைப்பு தரும் அனுபவம் அத்தனை நன்றாக இல்லை. அடுத்தமுறை மெருகேற்றுவார்கள் என நினைக்கிறேன்.

ஒளிவில்லை அரங்கங்கள் (விஷுவல் ஸ்லைட் ஸ்டால்) அமைத்து அங்கே பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்பிக்கிறார்கள். பாரத மாதா ஆலயம், கோ ரக்‌ஷா பகுதி என்றெல்லாம் அமைத்திருக்கிறார்கள். பாரத மாதா கோவிலில் நிஜ யானை பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது.

அரங்கத்துக்குள் நுழையும் முன்பே பல கோவில்களின் மாதிரிகள் தென்படுகின்றன. பூஜை உண்டு. முக்கியமாகப் பிரசாதம் உண்டு. அரங்கத்துக்குள்ளேயும் பல ஸ்டால்களில் பிரசாதமாக சுண்டலெல்லாம் தருகிறார்கள்! ருத்ராட்சம் இலவசம், விபூதி குங்குமத்தோடு பெற்றுக்கொள்ளலாம். திடீர் திடீரென மணிச் சத்தத்துடன் பூஜையும் நடக்கிறது. ஊதுபத்தியை கொளுத்திவிட்டு உடனே அணைத்து வைக்குமாறு அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். விழுப்புரம் தங்கக் கோவில் அம்மா அரங்கத்தைக் கோவில் போலவே வைத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் சில கோவில்கள் உள்ளன.

அந்தமான் சிறை மற்றும் ஜாலியன் வாலா பாக் மாதிரியை வடிவமைத்தவர் விட்டல் என்று சொன்னார் எழுத்தாளர் ரமணன். இந்த ரமணன்தான், ஒளிவில்லைக் காட்சிக்கும் அந்தமான் சிறைக்கான ஒலிப்பதிவுக்கும் மற்றும் அங்கிருக்கும் பல தலைவர்களின் தட்டிகளுக்குமான குறிப்புகளை எழுதியவர். விட்டலும் ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்.

வலம் அரங்கு இருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையில் உள்ள ஓர் அரங்கில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லி, கூடவே குருஜி கோல்வல்கரின் ஞான கங்கையில் இருந்து ஒரு வரியைச் சொல்கிறார்கள். அந்த அரங்கைத் தேடிச் சென்று, ஞான கங்கையின் ஆடியோ கிடைக்குமா என்று கேட்டேன். ஞான கங்கையில் இருந்து சில வரிகளைத் தானே தேடி ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்ததாகச் சொன்னார் அந்த அரங்கின் உரிமையாளர். அந்த அரங்கில் சிவராஜ்ஜியம் நிச்சயம், சிவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் எதோ ஒரு வாசகம் கண்ணில் பட்டது! சரியான வரிகள் நினைவில்லை.

இன்று வேலை நாளாக இருந்தாலும் மாணவர்கள் நிறைய பேர் பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள். ஒரு ஆசிரியர் நிறைய மாணவர்களை உட்கார வைத்து, ஒளிவில்லை அரங்கில் காண்பிக்கப்பட்ட பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்தக் கண்காட்சிக்குக் கூட்டிக்கொண்டு வருவதால் பெரிய அளவுக்கு நமக்கு அனுபவமோ அறிவோ ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் நம் எதிர்கால சந்ததி ஹிந்துவாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டியது அவசியம். ஹிந்து ஒற்றுமை என்பது நிச்சயம் தேவை என்ற எண்ணத்தை இந்தக் கண்காட்சி நிச்சயம் உருவாக்கும்.

இந்தக் கண்காட்சியின் ஒரே குறை, ஹிந்து அறிவியக்க ரீதியிலான வெளிப்பாடு மிக மிகக் குறைவாக உள்ளது. ஹிந்து அமைப்புகள் என்றாலே ஆன்மிக மற்றும் சேவை என்கிற இரண்டு எண்ணங்கள் மட்டுமே பொதுவாகத் தோன்றுவிடுகின்றன போலும். அறிவியக்க ரீதியாக ஹிந்து இயக்கங்கள் விழிப்புக் கொள்ளாதவரை ஹிந்து அமைப்புகள் கருத்தை உருவாக்கும் இடத்துக்குச் செல்வது மெல்லவே நிகழும். இனிவரும் காலங்களில் இதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளுக்கு வேறு ஒரு தளத்தில் முக்கியத்துவத்தை அதிகமாக்கும்.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்

Share

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு பதில்

மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார், என்னுடைய வேலை எழுத்தாளர்களைக் கடத்தி வருவது என்று. பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். இவர் எழுதும் இதே வெளியில்தான் நான் கடத்தி வருவதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களும் இதைப் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நான் பொய் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. மேலும் ஒரு பதிப்பாளர் எழுத்தாளர் உறவின் சிக்கல்களை, அன்னியோன்னியத்தை வெளியில் சொல்வதுமில்லை. ஆனால் இதைப் படிக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் தெரியும், கடத்தப்பட்டு வந்தார்களா இல்லையா என்பது.

உயிர்மையில் சாரு இருந்தபோது சாரு எழுதிய பதிவுகளே உதாரணம். தனியே எதற்கு இன்னொருவர் சொல்லவேண்டும்?

இன்னும் இன்றும் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து முன்னாள் உயிர்மை எழுத்தாளர்களின் பதிவுகள் மட்டும் மனுஷ்யபுத்திரனுக்கு மறந்துவிடும் அல்லது கண்ணுக்குப் படாது. பழி மட்டும் இன்னொருவர் மேல்.

இலக்கிய அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை, திறமையும் இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றபடி சாருவின் இலக்கியப் பங்களிப்புக்குப் பக்கத்தில்கூட நான் இல்லை. அதை மனுஷ்யபுத்திரன் வலிந்து சொல்லவேண்டியதுமில்லை. ஏனென்றால் நான் அதை க்ளெய்ம் செய்யவே இல்லை. ஒருவகையில் மனுஷ்யபுத்திரனே இந்த ஒப்பீட்டைத் தொடங்கி வைக்கிறார்!

சாதாரணமாக ஒரு பதிவு எழுதப்போய் அது இப்படியெல்லாம் போவது சுவாரஸ்யம்தான்.

இன்னும் என்னவெல்லாம் வருகிறது எனப் பார்க்கலாம்.

Share

Cinemakkaararkal by Jeyabarathi

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், 150 ரூ.

(இந்த நூலைப் பற்றிய சிறு குறிப்பை வாசிப்பதற்கு முன்பாக, ஜெயபாரதி எழுதிய ‘இங்கே எதற்காக’ புத்தகத்தைப் பற்றி நான் எழுதியதை வாசித்துவிடுங்கள். அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன் என்று எடுத்துக்கொள்ளவும்.)

ஜெயபாரதியின் சினிமாக்காரர்கள் புத்தகம், திரையுலகம் எப்படி தொழில்நுட்ப ரீதியாகவும் தினசரி வேலைகள் ரீதியாகவும் இயங்கியது என்பதைச் சொல்கிறது. ஆம், இயங்கியது என்பதையே சொல்கிறதே அன்றி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. ஜெயபாரதியின் அனுபவங்கள் நேற்றைக்கானவை. இன்று ஒட்டுமொத்த சினிமா உலகமும் மாறிவிட்டிருக்கிறது. அதை ஜெயபாரதியே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகிறார்.

மேலும் இப்புத்தகத்தில் இவர் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் இன்று அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்தவையே. சில டெக்னிகல் பெயர்கள், சில டெக்னிகல் சாதனங்கள் தவிர எல்லாமே அனைவருக்குமே தெரிந்தவை. எப்படி செட்-களில் இருந்து திரைப்படம் தெருவுக்கு வந்ததோ அதேபோல் திரை மறைவுக்குப் பின்னிருந்த திரைப்பட நுணுக்கங்கள் எல்லாமே இன்று வீதிக்கு வந்துவிட்டிருக்கின்றன. அப்படியானால் இந்தப் புத்தகத்தில் நமக்கு என்னதான் கிடைக்கும்?

அன்று எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சில சுவாரஸ்யமான சங்கதிகளை நூலில் சொல்கிறார் ஜெயபாரதி.

* கடைசி கறுப்பு வெள்ளை திரைப்படம் உச்சிவெயில் என்று ‘இங்கே ஏன் எதற்காக’ என்ற புத்தகத்தில் படித்த நினைவு. இப்புத்தகத்தில் குடிசை என்கிறார் ஜெயபாரதி.

* செட்-களில் இருந்து கிராமத்துக்கு வந்த முதல் படம் பதினாறு வயதினிலே அல்ல, குடிசை என்கிறார் ஜெயபாரதி.

* ஹாலிவுட்டில், கோடைக்காலத்தில் பேய்ப் படங்களும் குளிர்காலத்தில் காதல் படங்களும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்கிறார்.

* காந்தி திரைப்படத்துக்கு மூன்று பேர் திரைக்கதை எழுத அதில் ஒன்றைதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார் அட்டன்பரோ.

* விகடன் நாவல் போட்டியில் வென்ற கதை நடைபாதை. ஆனால் அதை எழுதியவரின் முகவரி அதில் இல்லை. அந்தத் தொடரை, அதை எழுதிய இதயன் அலுவலகத்துக்கு வரவும் என்ற குறிப்புடன் வெளியிடுகிறார்கள். இதயன் வருகிறார். ஏன் முகவரி இல்லை என்றால், அவர் நடைபாதையில் வசிப்பவர்! அவரது அனுபவமே நாவல்.

* பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிளியோபாட்ராவில் எலிசபத் டெய்லர் அணிந்த நடித்த உடை தங்கத்தால் ஆனது. (இதேபோல் ராசுக்குட்டியில் ஐஸ்வர்யா அணிந்து நடித்த உடை ஒரு லட்ச ரூபாய் என்று அந்தப் படம் வந்த சமயத்தில் பெரிய பேச்சாக இருந்தது.)

* நாகேஷ் அணிந்து நடித்த சட்டையை அணிந்துகொண்டு வரும் ஜெயபாரதியின் பள்ளித் தோழன்.

* எந்தத் தாவரத்தில் எந்தப் பூ பூக்கும் என்றெல்லாம் பார்க்காமல் எதையோ ஒட்டி வைக்கும் திரையுலகம்.

* ஒளிப்பதிவு நிவாஸ் என்று திரையில் வரும்போது கைதட்டிய மக்கள். (பதினாறு வயதினிலே ஒளிப்பதிவாளர்.)
இப்படிச் சில சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே. மற்றபடி கடந்த காலத் திரையுலகம் எப்படி இயங்கியது என்பதன் அனுபவப் பதிவாக மட்டுமே இப்புத்தகத்தைக் கொள்ள முடியும். ‘ஊஞ்சல்’ நாடகம் போல.

தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) வாங்கும் விதம் குறித்து அழகாக எழுதி இருக்கிறார். இதில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகம், யூ, ஏ என்ற சான்றிதழ் வாங்குவதில் ஏன் இந்தியாவில் இத்தனை ஆர்ப்பாட்டம்? வெளிநாட்டில் இந்தச் சான்றிதழ்கள்தான் முக்கிய ஆவணம் என்பதாலா? இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களுக்குத் தனித்தனி கட்டணம் என்று ஏதேனும் உள்ளதா? பொதுவாக இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு அதற்கேற்றாற் போல் மக்களை திரையரங்கில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. (மால்களைத் தவிர.) அப்படி இருக்கும்போது ஏன் இயக்குநர்கள் யூ சான்றிதழ் வாங்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்?

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789386737465.html

Share

பேட்ட

* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.

* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.

* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.

* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.

* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.

* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.

* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.

* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.

* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.

* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.

” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.

இனி அரசியல்:

விஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.

ரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.

தமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.

Share

சென்று வருக 2018 (திரைப்படப் பதிவு)

சிறந்த திரைப்படம்: வடசென்னை

முக்கியமான திரைப்படங்கள்: பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை

சிறந்த நடிகர்: யாருமில்லை

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (2.0)

சிறந்த இசையமைப்பாளர்: செக்கச் சிவந்த வானம் (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த பாடல்கள்: நீல மலைச்சாரல் (செக்கச் சிவந்த வானம்), யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா (சந்தோஷ் நாராயண், காலா), சி ஈ ஓ இன் தி ஹவுஸ் (சர்க்கார்),

நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: அசுரவதம், ப்யார் ப்ரேமா காதல், டிக் டிக் டிக்.

சிறந்த குழந்தைகள் திரைப்படம்: 2.0

சிறந்த வணிகத் திரைப்படம்: ராட்சசன்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: 2.0

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோலமாவு கோகிலா)

சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை

சிறந்த ஒளிப்பதிவாளர்: தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: கலகலப்பு 2, சர்க்கார், மெர்க்குரி, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், காற்றின் மொழி, படைவீரன்

படு மோசமான படம்: கஜினிகாந்த்

அளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட திரைப்படம்: 96

இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தடக் (ஹிந்தி), ஹிச்கி (ஹிந்தி), துமாரி சுலு (ஹிந்தி)

Share