Avengers: End game

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்

மிக ‘எளிமையான கதை’. ஒரே நொடியில் உலகின் மக்கள்தொகையில் பாதியை அழித்துவிட்ட தானோசை அழித்து, ஆறு இன்ஃபினிட்டி கற்களையும் மீளக் கண்டடைந்து, அழிந்தவர்களையும் அழிந்த சூப்பர் பவர்களையும் மீண்டும் உலகுக்குக் கொண்டு வர ஆயத்தமாகிறார்கள் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ப்ளாக் விடோ, ஆண்ட் மேன், வார்மெஷின், கேப்டன் மார்வெல் போன்ற பல மிச்சமிருக்கும் சூப்பர் பவர்ஸ் எல்லாரும் சேர்ந்து, காலச் சக்கரத்தில் க்வாண்டம் தியரி மூலம் பயணிக்கிறார்கள். ஐயர்ன் மேனை ஐயர்ன்மேனே பார்க்கிறார். கேப்டன் அமெரிக்காவும் கேப்டன் அமெரிக்காவும் மோதுகிறார்கள். நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் மோதல். காலவிளையாட்டு அதன் உச்சத்தில். நிகழ்கால ப்ளாக் விடோ கடந்த காலத்தில் இறந்து போகிறார். நிகழ்கால நெபுலாவின் நினைவைக் கடந்தகால தானோஸ் படித்து, தன் இறுதிக்காலத்தைப் பார்த்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வருகிறார். அதற்குள் ஆறு இனிஃபினிட்டி கற்களையும் வைத்து ஹல்க் கடந்தகாலத்தில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கிறார். மீண்டும் பெரும் சண்டை. அனைத்து சூப்பர் பவர்களும் திரும்ப வர, தானோஸ் கையில் கற்கள் கிடைக்காமல் இருக்க ஐயர்ன் மேன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார். கேப்டன் அமெரிக்கா மீண்டும் கற்களை வைக்கப் போய் வயதாகித் திரும்புகிறார். நிகழ்கால 5 நொடிகள் க்வாண்டம் தியரியிலான காலச் சக்கரத்தில் பல வருடங்கள்! அந்த வருடங்களில் அங்கேயே தன் துணையுடன் வாழ்கிறார். வயதான எதிர்கால நிகழ்காலத்தில் தன் கவசத்தை சாம்-இடம் ஒப்படைக்கிறார். இதையெல்லாம் மண்டையை முட்டி மோதி, என் பக்கத்தில் இருந்த என் பையனிடமும் பெண்ணிடமும் வெட்கத்தை விட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டவை. இந்தப் படம் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போகவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கி இருந்தான் அபிராம். இப்படம் புரியவேண்டும் என்றால், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதை நான் பீலா என்றே நினைத்தேன். ஆனால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. அப்படி இல்லை என்றால், என்னைப் போல் பக்கத்திலிருக்கும் பையன்களிடம் வெட்கப்படாமல் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.

கற்பனைக்கெட்டாத கதைப்பரப்பு. காலத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள். இனிஃபினிட்டி வார் போல சண்டைகள் அதிகம் இல்லை. 3 மணி நேரத்தில் 20 நிமிடங்கள் சண்டை வந்தாலே அதிகபட்சம். ஆனால் அந்த இருபது நிமிடத்தையும் அசரடிக்கிறார்கள்.

தமிழில் இதுபோன்ற தொடர்ந்து கைத்தட்டு பெறும் படங்களைப் பார்க்கவே முடியாது. ரஜினி விஜய் அஜித் என யார் படங்களிலும் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு அவெஞ்சர் வரும்போதும், ஒவ்வொருமுறை அவர்களுக்கு சக்தி வரும்போது கைத்தட்டு காதைப் பிளக்கிறது. அதிலும் அந்த 20 நிமிடச் சண்டையில் இப்படித் தொடர்ச்சியாகக் கைத்தட்டை தமிழ்நாட்டில் எந்தப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்கமுடியாது.

கால விளையாட்டின் போதான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பழைய மார்வெல்ஸ் படங்கள் பார்த்திருந்தால் மிக நன்றாகப் புரியும். இல்லையென்றால் திருவிழாவில் ஆட்டைத் தொலைத்தவன் போலத்தான் விழிக்கவேண்டி இருக்கும். ஐயர்ன்மேனும் அவரது அப்பாவும் சந்திக்கும் இடங்கள், தோரும் அவரது அம்மாவும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். இன்று நேற்று நாளை என்ற நம்மூர்ப் படத்தில் பார்த்த கற்பனையை அதன் உச்சத்துக்குச் சென்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், கற்பனை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும். இசை, கிராஃபிக்ஸ், கேமரா என ஒவ்வொன்றும் அற்புதம்.

மொத்தத்தில் ஒரு மிரட்டல்.

திருஷ்டிப் பொட்டு, தமிழில் வசனங்களும் விஜய் சேதுபதியின் கொடூரமான பின்னணிக் குரலும். தாங்கமுடியவில்லை. ஐயர்ன் மேன் இவராலேயே பாதி செத்தார், மீதி கதையிலும் செத்தார். நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியைப் போட்டு நம்மை நடுங்க வைத்திருப்பார்கள்.

Share

பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share

யாருக்கு வாக்களிப்பது – 2019 நாடாளுமன்றத் தேர்தல்

* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.

* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.

* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.

* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.

* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.

* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.

* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.

* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Share

மணிகர்னிகா

மணிகர்னிகா – அட்டகாசமான கமர்ஷியல் சிறுவர் திரைப்படம். சிறுவர் திரைப்படம், அவ்வளவே. உலகளவில் அதிகமாக ஹர்ஹர் மகாதேவ் என்ற விளி வரும் படம் இதுவாகவே இருக்கும். கங்கனா மிக அழகாக இருக்கிறார், ராணி என்பதையும் தாண்டி! கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ? நான்தான் வளர வேண்டுமோ? பின்னணி இசையும் ஒளிப்பதிவும் செட்டிங்க்ஸும் கங்கனாவின் நடிப்பும் அட்டகாசம். கிராபிக்ஸ் சுமார். இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்.

பிகு: என்க்கு ஈநாட் மேலே ம்ர்யாதெ இல்லே ரக பறங்கியர்த் தமிழ் வசனங்கள் இன்னுமாய்யா? ஹிந்தில எப்படி இருந்ததோ!

Share

கள நிலவரம் என்னும் கலவரம்

1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய தோல்வி கண்டது. வரலாறு காணாத தோல்வி அது. எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் கூட. 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றே கருதினார்கள். ஒட்டுமொத்த தேர்தல் கணிப்புகளும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. பல ஊடகங்கள் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றே எழுதின. அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று கூட மக்கள் சொல்ல கூச்சப்பட்ட நேரம் அது. ஆனால் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியே ஜெயலலிதாவுக்கு மீட்சியாக அமைந்தது என்று சொன்னாலும் மிகையில்லை.

2006 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வெல்லும் என்றே நான் கருதினேன். ஆனால் சிலர் நிச்சயம் அக்கூட்டணி தோற்கும் என்று சொன்னார்கள். நான் எப்படி பாஜக ஆதரவாளனோ, அப்படியே அந்தச் சிலர் திமுக ஆதரவாளர்கள். எனவே நான் அவர்கள் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதுதான் அந்த வார்த்தையை அவர்கள் சொன்னார்கள். கள நிலவரம்! எனக்குக் கள நிலவரம் எதுவும் தெரியவில்லை என்று அவர்கள் சொன்னதில் தவறேதுமில்லை. அதேசமயம் தங்களுக்குக் கள நிலவரத்தின் நாடி கச்சிதமாகத் தெரியும் என்றார்கள். தேர்தல் முடிவு நான் சொன்னபடி இருக்கவில்லை. அவர்கள் ஆரூடம் சொன்னபடித்தான் அமைந்தது.

2011 தேர்தலில் அதே சிலர் கள நிலவரத்தின்படி மீண்டும் திமுகவே வெல்லும் என்றார்கள். நான் நிச்சயம் அதிமுக வெல்லும் என்றேன். எனக்குக் கள நிலவரம் தெரியவில்லை என்று மீண்டும் சொன்னார்கள். கள நிலவரம் என்ற அந்த வார்த்தை எனக்குள் பெரிய கலவரத்தைக் கொண்டு வந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டேன். தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மை பெற்றது. 2006ல் கள நிலவரத்தைச் சொன்ன திமுக ஆதரவாளர்களின் கூற்றுப்படி அது தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது தனிக்கதை. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும், திமுக தனிப் பெரும்பான்மை பெறாத சிறுபான்மை அரசாகவே அமைந்தது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி நிச்சயம் வெல்ல வாய்ப்பில்லை என்று களநிலவரக்காரர்கள் சொன்னார்கள். நிச்சயம் மோடி வெல்வார் என்று நான் சொன்னேன். குறைந்தது 250 சீட்டுகள் வெல்லும் என்றும், கூடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரப்படி அப்படி இல்லை என்றார்கள். எல்லாக் கள நிலவரத்தையும் தவிடுபொடியாக்கி தேசிய ஜனநாயக் கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்தது.

2016ல் மீண்டும் அதிமுக கூட்டணி வெல்லும் என்று நான் சொன்னேன். மக்கள் நலக்கூட்டணி 7%க்கு மேல் வாக்குகளைப் பெறாது என்றும், அது ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரக்காரர்கள் அடித்துச் சொன்னார்கள். திமுகவே நிச்சயம் வெல்லும் என்றார்கள். என் மேல் மீண்டும் அதே கள நிலவரப் புகார். ஆனால் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்று, எம்ஜியாருக்குப் பின்னர் ஜெயலலிதா புதிய வரலாற்றைப் படைத்தார்.

இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று நான் நம்புகிறேன். இப்போதும் அதே நண்பர்கள் கையில் களநிலவரக் குண்டாந்தடியுடன் வருகிறார்கள். தங்களது முந்தைய கள நிலவரங்கள் பிசுபிசுத்துப் போனதில் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. இந்தியாவெங்கும் கள நிலவரம் நிச்சயம் பாஜகவுக்கு எதிராக இருக்கிறது என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள். தேர்தல் முடிவின்போது களநிலவரம் புரிந்துவிடும்.

கள நிலவரம் என்பது ஒரு மாயை. அது யாருக்கு எப்படிப் பார்க்கப் பிடிக்கிறதோ அப்படி முகம் காட்டும். முடிவில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் நாங்கள் அன்றே கள நிலவரத்தைச் சொன்னோம் என்று பெருமை பட்டுக் கொள்வார்கள். தோற்றவர்களோ, ஒரு மாய அலை இருந்ததைக் கணிக்கமுடியவில்லை என்பார்கள்.

ஒவ்வொரு தேர்தல் கணிப்பிலும் இந்த கிரண்வுட் ரியாலிட்டி என்னும் கள நிலவரம் என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். அறிவியல் ரீதியாக நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் கணிப்புகள் தோற்கக் காரணம் என்ன? கள நிலவரம் என்ற சொல் பொய்த்துப் போவது ஏன்? இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் கணிப்புகளை ஓரளவுக்குத்தான் சொல்லமுடியும். அவை நிச்சயம் வெல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தக் கணிப்புகள் ஏன் குறைபாடுள்ளது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. இவர்கள் குறைபாடுகளை மறந்துவிட்டு, கணிப்புகளை மட்டும் நம்புவார்கள்.

உண்மையில் வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் உண்மைத்தன்மையை அப்படியே வெளிப்படையாகக் கணிப்புகளில் சொல்வதில்லை. முன்பெல்லாம் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குச்சாவடிக் கணிப்புகள் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது இவையும் சரியாகக் கணிப்புகளைச் சொல்வதில்லை. காரணம், மக்கள் தங்கள் வாக்கைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். அதிமுகவுக்கு வாக்களித்தோம் என்று சொல்லக் கூச்சப்படலாம். பாஜகவுக்கு வாக்களித்ததைச் சொன்னால் மதவாதி என்ற முத்திரை கிடைக்கலாம் என நினைக்கலாம். ஜாதிக்கட்சிக்கு வாக்களித்ததைச் சொல்ல அஞ்சலாம். இப்படிப் பல காரணங்கள். எனவே கள நிலவரத்தை நம்பி மட்டுமே நாம் முடிவைக் கணித்துவிடமுடியாது. 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் தமிழ்நாட்டு முடிவுகளே இதற்குச் சரியான உதாரணம்.

அதேசமயம் இந்தக் கணிப்புகள் சுவாரஸ்யமான விளையாட்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. இரண்டு மாதங்கள் ஊடகங்களுக்கு இவை பெரிய உற்சாகத்தையும் செய்திகளையும் தருகின்றன. மற்ற பொருளற்ற பயனற்ற விளையாட்டைப் போல இது இல்லாமல், பயனுள்ளதாக இருக்கிறது என்பதாலேயே, கள நிலவரத்தை ஒரு பொருட்படுத்தத்தக்க விளையாட்டாகக் கருதி விளையாடலாம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 330 இடங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். அல்லது விரும்புகிறேன்! தமிழ்நாட்டில் என்ன ஆகும்?
அதிமுக கூட்டணி 15 இடங்கள் வரை வெல்லலாம். திமுக ஹிந்துக்களை மட்டுமே சீண்டுகிறது என்ற எண்ணம் இன்று பெரிய அளவில் பரவி இருக்கிறது. அது இன்னும் பொதுமக்கள் மத்தியில் கூடுதலாகப்‌ பரவி, ஹிந்து வாக்கு வங்கி என்பதன் முதற்படியை ஒருவேளை அடைந்தால் தேர்தல் முடிவின்போது திமுகவுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கும்.

Share

சிகை

சிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:

* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.

* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.

* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.

* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.

* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.

* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.

* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.

* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.

கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.

Share

சில உணவனுபவங்கள்

* முதன்முதலில் அந்த உணவின் பெயரைக் கேள்விப்பட்டபோது ச்சை என்றிருந்தது. புழுக்கு. இன்னைக்கு எங்காத்துல புழுக்காக்கும் என்று கேட்டபோது, காதில் சரியாகத்தான் விழுந்ததா என்றிருந்தது. எல்கேஏ மலம் ரேஞ்சுக்கு அந்த இருபது வயதில் திரும்ப திரும்பக் கேட்டேன். சிரிப்பு ஒரு பக்கம், அருவருப்பு ஒரு பக்கம். பாலக்காட்டு பிராமணர்களின் உணவு போல. அதைக் கொண்டு வந்து அந்த நண்பர் தந்தபோது அதைத் தொடவே இல்லை. அடுத்த முறை பெயரை மாற்றிச் சொல்லிக் கொடுத்தார். உண்ட பின்பு சொன்னார், அதுதான் புழுக்கு என்று.

* கடந்த வாரம் அப்பாவின் திதியின்போது மடிப்பாக்கம் நவபிருந்தாவன மடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே நிவேதனம் வித்தியாசமாகவும் சுவையானதாகவும் இருந்தது. மக்காச்சோளம், மாதுளம் பழம், தேங்காய், ஜீனி கலந்த பிரசாதம். அவர்கள் பரிமாறும்போது அசுவாரஸ்யமாகக் கொஞ்சம் போதும் என்று சொல்லிவிட்டேன். சுவைத்தால் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் கேட்கவும் முடியவில்லை. மறுநாளே வீட்டில் செய்து உண்டோம்.

* சீராளன் கறி என்றொரு நண்பர் சொன்னார். என்னது அது என்று கேட்டபோது, அதன் கதையைச் சொன்னார். வெள்ளாளர்களின் சிறப்புக் கறி போல. அதன் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டதும் அந்தப் பெயரை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. பிள்ளைக் கறி கேட்ட நினைவில் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல. புழுக்கு ச்சை என்றிருந்தது என்றால், சீராளன் கறி என்ற பெயர் பதற வைத்துவிட்டது. இப்போதும்.

* எத்தனையோ ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குப் பிடித்ததில்லை. அந்த கம்பெனி பெட்டர், இது பெட்டர் என்பார்கள். அதிலிருக்கும் வினிகர் மனம் எனக்குச் சுத்தமாக ஆகாது. வினிகர் இல்லாத ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்காது. திருநெல்வேலியில் குரு ஊறுகாய் என்று ஒன்று உண்டு. அதில் கடாரங்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். இதே கம்பெனியின் மற்ற ஊறுகாய்கள் அத்தனை சுவையாக இருக்காது. இந்த இரண்டு மட்டும் நன்றாக இருக்கும். இந்த ஊறுகாய் சென்னையில் கிடைப்பதில்லை. மதுரை, திருச்சியில் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. திருநெல்வேலியிலிருந்து யாராவது வாங்கி வந்தால்தான் உண்டு.

* சென்னையில் மாரிஸ் ஹோட்டல் என்று ஒன்று உண்டு. இந்தக் கடையைப் போல் காய்கறி பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை. எப்போதும் நான்கு காய்கறிகள் உண்டு. அதனுடன் வெங்காய சம்பலும் தனியாகத் தருவார்கள். சில சமயம் கீரைக் கூட்டும் இருக்கும். தமிழ்நாடு முழுக்க எந்தக் கடையிலும் இந்தக் கடை போலப் பரிமாறி நான் பார்த்ததில்லை. முதல்முறை வைக்கும்போதே நிறைய வைப்பார்கள். நிறைய என்றால் நிறைய. இன்றும் சென்னையில் பல கடைகளில் ஸ்பூனில் பரிமாறுவார்கள். சரவண பவன் பார்சலில் காய்கறி எல்லாம் ஸ்பூன் அளவுக்குத்தான் இருக்கும். அதிகம் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு அது உத்திரிணி அளவுக்கே தெரியும். மாரிஸ் கடையில் அப்படியெல்லாம் இல்லை. இரண்டாவது முறை கேட்டால் முதல்முறையைவிட அதிகம் பரிமாறுவார்கள். பேலியோ பற்றித் தெரிந்துகொண்டு அதிகம் காய் உண்ண ஆரம்பித்தபின்பு ஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் பொரியல் கூட்டு கூடுதலாகக் கேட்க அவமானமாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அவர்களும் சளைக்காமல் ஒரு சொட்டு மட்டுமே பரிமாறுவார்கள். ஆனால் சாதம் மட்டும் கொட்டுவார்கள். எனக்குத் தெரிந்து இத்தனை விதமான காய்கறிகளை இந்த அளவுக்குப் பரிமாறும் ஒரே கடை சென்னையின் மாரிஸ் கடைதான். ராயப்பேட்டையில் விஐபி கடை என்று ஒன்று. ஒப்பீட்டளவில் இங்கேயும் காய்கறி நிறையவே பரிமாறுவார்கள். ஆனால் சுவையிலும் அளவிலும் மாரிஸுக்குப் பக்கத்தில்கூட வரமுடியாது. மாரிஸின் சுவை அதீத சுவையல்ல. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுக்காத மாதிரியான சுவை. நினைக்கும்போதே சென்று உண்ண ஆசையைத் தரும் இடம் மாரிஸ்.

Share

செண்பகப் பெருமாளின் நேர்காணல் – யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவும்

செண்பகப் பெருமாள் எழுதிய ‘யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவம்’ புத்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சனத்தையும் பெற்றது. என்னளவில் இந்தப் புத்தகம் கிறித்துவம் தொடர்பான பல விஷயங்களை மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும்படியும் சொன்னது. கிறித்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு, செண்பகப் பெருமாள் என்ன குற்றச்சாட்டை வைக்க வருகிறார் என்பதை உணரமுடியும். இதுவே புத்தகத்தின் பலம். ஒரு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பது போல இப்புத்தகம் மெல்ல மெல்லப் படிப்படியாக பவுலின் கிறித்துவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. புறஜாதியாருக்குமான கிறிஸ்துவாக ஏசு எப்போது மாற்றப்பட்டார் என்பதை செண்பகப் பெருமாள் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

இப்புத்தகம் வந்தபோது யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் புத்தகத்துக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமானது.


மேலே உள்ள நேர்காணலில், இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைத் தொட்டுப் பேசுகிறார் செண்பகப் பெருமாள். இப்புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். பத்ரி சேஷாத்ரியின் கேள்விகளுக்கு எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் செண்பகப் பெருமாள் பதில் சொல்லும் விதம், இத்துறையில் அவருக்குள்ள ஞானத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

செண்பகப் பெருமாள் ஹிந்துத்துவ ஆதரவாளர். ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளர் தனது எதிர்த்தரப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பேட்டி ஒரு முன்மாதிரி. ஹிந்துத்துவத் தரப்பு மட்டுமல்ல, தன் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் யாருக்குமேதான்.

Share