படிக்க வேண்டியவை

<< >>

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம்.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது. மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும்,

Share

7ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுதும் அறிவு – ஒரு சாம்பிள்

ஓர் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தாங்களே எழுதியது. 73 மாணவர்களில் (சந்திப் பிழையைக் கவனத்தில் கொள்ளாது) ஒரு வார்த்தை கூடப் பிழையின்றி எழுதியவர்கள் 7 பேர். 5 எழுத்துகளுக்கு மேலுள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே தவறாக எழுதியவர்கள் 15 பேருக்கும் மேல். பாதிக்கும் மேல் தவறாக எழுதியவர்கள் 40 பேருக்கும் மேல். கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் தவறாக எழுதியவர்கள் 6 பேர் இருக்கலாம்.

8ம் வகுப்பில் செய்யுட் பகுதியில் பெரிய வினா உண்டு, உரைநடைப் பகுதியிலும் உண்டு, கட்டுரை உண்டு. யோசித்துப் பாருங்கள்.

இது ஒரு பள்ளியின் நிலைதான். என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தமிழின் நிலையும் இதுவாகவே இருக்கக்கூடும்.

இதைத் தொடர்ந்து போகன் ஃபேஸ்புக்கில் எழுப்பிய கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்:

1. இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. அது தேவை. எனவே, மார்க் குறைந்தாலும் ஏன் வருகிறார்கள் என்ற கேள்வி எனக்கானதல்ல.

2. 10% புதிய ஓசி ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

3. காட்டாயத் தேர்ச்சி தவறு. மாணவர்களின் தரத்தை, ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

4. எதோ ஒரு வகையில் பொதுத் தேர்வு தேவை. முழுக்க மாநில அரசே வைத்துக்கொண்டாலும் சரி.

5. சாதிய ஆதரவில் பேச எனக்கு ஒரு முகாந்திரமும் இல்லை. பள்ளிகளின் மீதான அக்கறையிலேயே சொல்கிறேன். மற்ற “பிராமணர்கள்” கருத்துக்கு அவர்களே கருத்துச் சொல்ல வேண்டும்.

6. பிராமண வெறுப்பில்லை, ஆனால்‌ பிராமணர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதில், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிறர்களுக்கான விலக்கில் ஒரு நியாயமும் இல்லை. அதாவது, ஒரு சாரார் இப்படி யோசிக்கிறார்கள் என்பதையே நான் ஏற்கவில்லை. அது பிராமணக் காழ்ப்பாளர்களால் கட்டி ஏற்றப்படும் ஒன்று.

7. பள்ளிகளின் யதார்த்த நிலையைச் சொன்னால், அதையும் இட ஒதுக்கீடு, சாதியோடு புரிந்துகொள்வது, விளக்கம் கொடுத்த பின்பும் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், பழகிப் புளித்துப் போய்விட்டது. 

8. அரசுப் பள்ளிகளை அல்ல, ஒட்டுமொத்த பள்ளிகளின் தரமும் அதுதான் என்றே சொல்லி இருக்கிறேன். தனியார்ப் பள்ளிகளில் இட ஒதுக்கீடு இல்லை. அப்படியானால் இது பொதுக் கருத்து என்பது குழந்தைகளுக்கும் புரிந்திருக்கவேண்டும். சில குழந்தைகளுக்குப் புரியாதது, பிராமணக் காழ்ப்பு.

Share

முகிலனைக் காணவில்லை

முகிலன் என்பவரைக் காணவில்லை என்ற விஷயத்தை அரசு இத்தனை மெத்தனமாகக் கையாள்கிறதா அல்லது நமக்கு எதுவும் விஷயங்கள் சொல்லப்படுவதில்லையா என்று தெரியவில்லை. ஸ்டெரிலைட் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடரபான விவகாரத்தில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இவரைக் காணவில்லை. பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் ஒரு பிரஸ் மீட் நடத்தி சில காவலர்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் அதன்பிறகு எக்மோர் ரயில்வே நிலையத்தில் வண்டி ஏறியவரைக் காணவில்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா தெரிவிக்கிறது.

முகிலன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்/ஆதரிப்பவர் என்பதெல்லாம் தேவையற்ற விஷயம். அவரை யார் கடத்தியது, அதன் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. உண்மையிலேயே அவர் ஸ்டெரிலைட் தரப்பால் அலல்து அரசுத் தரப்பால் அல்லது அதிகாரிகள் தரப்பால்தான் அபாயத்துக்குள்ளானாரா என்பதை அரசுதான் தெளிவுபடுத்தவேண்டும்.

ஒருவரைக் காணவில்லை என்னும் போக்கை, அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் ஆதரிக்கவோ கண்டும் காணாமல் போகவோ கூடாது. இதன் பின்னான உண்மையைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேசமயம் ஹிந்து அமைப்பினர் கொல்லப்பட்டாலும்கூட மிக அமைதியாகக் கடந்து செல்பவர்களையும் நாம் இந்நேரத்தில் நினைவுகொள்ளுதல் வேண்டும்.

Share

தேமுதிக கூட்டணி

பாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.

அதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.

தேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.

2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

Share

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு

நடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது!) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.

பொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.

5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன்? இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.

இதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.

பொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.

இந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும்! ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.

கட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.

மிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல! இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.

நன்றி: https://oreindianews.com/?p=3463

Share

டூ லெட்: வாடகை உலகம்

செழியனின் திரைப்படம். எவ்வித அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான மொழியில் பிரச்சினையை மட்டும் பேசும் செறிவான ஒரு திரைப்படம். சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்படத்தில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளையோ அல்லது எல்லாவற்றையுமோ எதிர்கொண்டிருப்பார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் என் வீட்டிலேயே எனக்குத் தனிப்பட்டு நிகழ்ந்தவை. இப்படி ஒவ்வொருவரும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்படம் டூ லெட். படத்தின் தொடக்கத்தில் இப்படம் இதுவரை திரையிடப்பட்டிருக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. தமிழில் அரிதிலும் அரிதாக வெளிவரும் மாற்றுத் திரைப்பட முயற்சிகளை நாம் ஆதரிக்கவேண்டியது அவசியம். அப்படி ஒரு திரைப்படம் டூ லெட். ஒளிப்பதிவாளர் / இயக்குநர் செழியனுக்கு வாழ்த்துகள்.

வீடு கட்டுதல் பற்றிய பிரச்சினைகளை யதார்த்தமாக ஆழமாக முன்வைத்த திரைப்படம் வீடு. தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதன்மையானது இது. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸின் வீடு கட்டும் கனவை இனி இப்படத்தின் சாயல் இல்லாமல் எடுக்கமுடியாது என்னும் அளவுக்குப் பேசிய படம். அந்த முதியவர் ஒரு குடையைத் தொலைத்துவிடும்போது, இந்த வீடு கட்டமுடியாமல் போனால் அவருக்கு என்ன ஆகும் என்ற கேள்வி பூதாகரமாக எழுவது. ஒரு வீட்டைக் கட்டுவதில்/வாங்குவதில் அது நிறைவடையும் வரை ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. வாங்கிய பின்னரும்கூட!

சென்னையில் வீடு வாடகைக்கு இருப்பது போன்ற பிரச்சினை இன்னொன்றில்லை. நீங்கள் மிடில் கிளாஸாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், வீட்டுக்காரர் தரும் விநோதமான தொல்லைகள் உங்களைத் துரத்தி அடிக்கும். இங்கே மிக முக்கியமாகச் சொல்லவேண்டியது, இந்த வீட்டுக்காரர்கள் யாருமே மோசமானவர்கள் இல்லை என்பதைத்தான். எல்லோரும் நல்லவர்களே. ஆனால் இப்படி இருக்கும்படியாகத்தான் ஆகிவிடுகிறது. ஏனென்றால் குடித்தனக்காரரும் நம்மில் ஒருவரே. யாரும் புனிதரல்ல.

நான் வீடு வாடகைக்கு இருந்த இடங்களில் பெரிய பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் சிறிய சிறிய சீண்டல்கள் இல்லாமல் இருந்ததுமில்லை. என் திருமணத்தின்போது ஏற்கெனவே திருமணமான பெண் என் மனைவியிடம் சொன்னது காதில் விழுந்தது, ‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா வெக்கம் மானம் சூடு சுரணை எதுவும் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடாது’ என்று. இன்றளவும் என் காதில் ஒலிக்கும் ஞானத்தின் குரல் இது. வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க வந்துவிட்டாலும் இப்படித்தான். இவற்றில் எதாவது ஒன்று எதாவது ஒரு சமயத்தில் இருந்துவிட்டாலும் நீங்கள் வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும்.

வீடு மாற்றும்போதெல்லாம் ஏன் இப்படி அலைகிறோம் என்ற பதிலில்லாக் கேள்வி எரிச்சலைத் தரும். இந்த எரிச்சல் மிகும்போதெல்லாம் இதைப் பற்றி எழுத நினைப்பேன். வீட்டு உரிமையாளர் படித்துவிட்டுத் தவறாக நினைப்பாரோ என்றொரு மிடில்கிளாஸ் எண்ணம் எழுந்துவரும். ஒருதடவை எழுதியே தீருவது என்று முடிவெடுத்த நாளில், பிரபு காளிதாஸ் (புகைப்படக் கலைஞர்) ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். என்னை அசைத்துப் பார்த்த பதிவுகளில் ஒன்று அது. நான் எழுத நினைத்தவற்றையும், அதைவிடப் பல விஷயங்களையும் எழுதி இருந்தார் அவர். அன்று நான் எழுத நினைத்த அனைத்தும் உறைந்து நின்றது. நான் எழுதவில்லை. (அந்தப் பதிவின் லின்க் கிடைத்தால் சேர்க்கிறேன்.) அவர் எழுதி 4 வருடங்கள் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.

அதற்குப் பிறகும் வீடு மாற்றவேண்டிய தேவைகள் தினம் தினம் வந்துகொண்டே இருந்தன. அப்போதெல்லாம் ஒரு வேகம் எழும். அப்படி ஒரு வேகத்தில் இன்னொருமுறை ஒரு பதிவு எழுத நினைத்தபோது, ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. வீடு வாடகைக்கு எடுக்கும் காட்சிகள் இருபது நிமிடங்களே வந்தாலும் மிகப்பெரிய பிரச்சினையை நகைச்சுவையாகக் கையாண்டதில் அசந்துபோய்விட்டேன். நாம் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியதால் மீண்டும் எழுதுவதைக் கைவிட்டேன்.

இதற்கிடையில் இனி வீடு வாடகைக்குப் பார்த்து அலையவேண்டியதில்லை என்ற ஒரு தருணத்தில் டூ லெட் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் வரும் பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன். மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள். இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பார்கள். வீடு முழுக்க கிறுக்கி வைக்கும் குழந்தை. வீட்டு உரிமையாளர் அதைப் பார்க்கும் பார்வை. அட்வான்ஸ் தொகையில் கழித்துவிடுவாரோ என்கிற பதைபதைப்பு. இவற்றை வைத்து ஒரு சிறுகதையையும் நான் எழுதினேன். நான் எழுதிய கதைகளில் மிக மெலிதான கதை கொண்ட எளிய கதை இதுவே. சொந்த வீட்டுக்குப் போனாலும் நாம் குழந்தைகளைக் கிறுக்க விடமாட்டோம் என்பது இதன் மறுபக்கம்.

இன்னொரு சம்பவம், படபடவெனப் போய் வீட்டு உரிமையாளருடன் சண்டை போட எழும் வேகம். ஒருநாளும் இது நடக்காது. அப்படி நடக்கப்போகும் அந்த நொடியில் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருக்கமாட்டார். ‘வீட்டைக் காலி பண்ணிக்கிறேன்’ என்று கோபத்துடன் வீட்டு உரிமையாளரிடம் நான் சொல்லப் போனபோது வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை. அதற்கு பிறகு 2 வருடம் அதே வீட்டில் இருந்தேன்! மானம் சூடு சுரணையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது.

இந்தப் படம் கணக்கில் எடுக்காத, எனக்கு நிகழ்ந்த சம்பவம், ஒரு வீட்டின் உரிமையாளர் என் கண்முன்னே, அவர் குடி வைத்திருக்கும் குடித்தனக்காரரிடம் கேட்ட கேள்விதான், “ஏன் மாடில நைட்ல கட்டில் சத்தம் அத்தனை கேக்குது?” பெரிய நடுக்கும் ஏற்பட்டது எனக்கு. அவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். கட்டில் சத்தம் கேட்டது இரவில் அவர்கள் கட்டிலை வேறு எதற்காகவோ அங்கும் இங்கும் நகட்டியதால்தான். ஆனால் கேள்வியின் குவிப்பு வேறொன்றில் இருந்தது. அப்படியே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

இன்னொரு வீட்டின் உரிமையாளர் என்னிடம் மிக சீரியஸாகவே சொன்னார், ‘பக்கத்து வீட்டுக்காரங்க கூட நாங்க பேச மாட்டோம், நீங்களும் பேசிக்கவேண்டாம்’ என்று.

மீண்டும் சொல்லவேண்டியது, இவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள் என்பதைத்தான். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் துணை நின்றிருக்கிறார்கள். உதவி இருக்கிறார்கள். பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் கூடவே இருக்கிறது.

டூ லெட் படம் இந்த இரண்டாவது கோணத்தைக் கைக்கொள்ளத் தவறிவிட்டது. வீட்டு உரிமையாளர்களின் கோர முகத்தை மட்டுமே காட்டுகிறது. இதில் தவறில்லை. ஆனால் ஒரு மாற்றுத் திரைப்படம் இதையும் கொஞ்சம் முன்னிறுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் (கவிஞர் விக்கிரமாதித்யனின் மகன்) நடிகை ஷீலாவும் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்படி ஒரு இயல்பான நடிப்பை அபூர்வமாகவே பார்க்கமுடியும். இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். சந்தோஷ் நேரில் சின்ன பையன் போல இருக்கிறார். கண்டுபிடிக்கவே முடியவில்லை. படத்தில் அசாத்தியமான மாற்றம்.

படத்தில் பல நுணுக்கமான சித்திரிப்புகள் உள்ளன. முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருள்கள் ஓர் உதாரணம். ஒரு வீடு இயல்பில் அப்படித்தான் இருக்கும். ரிமோட்டைக் கொண்டு டிவியை அணைக்கும்போது அதைத் தட்டிக்கொள்வது இன்னொரு உதாரணம். கிரைண்டரை இருக்கும் இடத்தில் வைத்து அரைப்பது இன்னுமொரு உதாரணம். சில நுணுக்கச் சித்திரிப்புகளில் கருத்தரசியலும் உள்ளது. மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்கும் சேட்டுகளுக்கும் சொந்த வீடு இருக்கிறது, ஆனால் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழனுக்கு வாடகைக்குக் கூட வீடு கிடைப்பதில்லை என்ற ஒன்றை நான் கவனித்தேன். நான் இதை ஏற்கவில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள் எச்சாதி என்றாலும் அவர்கள் ஒரே சாதிதான். வீட்டு வாடகைக்காரர்களுக்கும் இது பொருந்தும்!

இன்றளவும் வீடு வாடகைக்குக் கிடைப்பதில் பெரிய அளவு தாக்கம் செலுத்துவது பொருளாதார ரீதியான வேறுபாடே. 2007ல் பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் பெருகியதால் இப்படி ஆனது என்ற கருத்தை ஓரளவுக்கு மட்டுமே ஏற்கமுடியும், முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. இந்தக் காரணத்தைச் சொல்லாமலேயே கூட இப்படம் முழுமை பெறுகிறது என்னும் நிலையில் இதைத் தவிர்த்திருக்கலாம். முஸ்லீமா என்ற கேள்வி ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அது முஸ்லீமா என்றுதான் வாயசைப்பில் தெரிகிறது. ஒரு பிராமணர் கேட்கும் கேள்வி சட்டெனப் புரியவில்லை. பிராமணர்களா என்று கேட்டாரா அல்லது வெஜிடேரியனா என்று கேட்டாரா என்பது தெரியவில்லை.

படம் முழுக்க கிறித்துவச் சித்திரிப்புகள் வருகின்றன. ஆனால் வேற்று மதங்களைக் கிண்டல் செய்வதில்லை. ஆனால், இதிலும் ஒரு நடப்பு அரசியல் இருக்கிறது. படத்தின் பாதியில்தான் அது எனக்குப் புரிந்தது. படத்தின் நாயகனும் நாயகியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாயகன் ஹிந்து என்பதுவும் எனக்குப் பாதியில்தான் தெரிந்தது. நாயகி மாதாவைக் கும்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். மகனுக்கும் தொட்டுக் கும்பிட்டு வைக்கிறாள். மகன் பெயர் சித்தார்த். நாயகன் கருப்புச் சட்டைக்காரன். ஈவெராயிஸ்ட் என்ற அளவுக்குக் காட்டவில்லை என்றாலும், அவர் எந்த மதக் கடவுளையும் கும்பிடுவதில்லை. வீட்டில் மாதாவின் உருவம் தவிர எதுவும் என் கண்ணில் படவில்லை. வீடு பார்க்கப் போகும்போது வ.உ.சி. படம் போட்ட காலண்டரைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளர் பிள்ளைமார் என்று தெரிந்துகொண்டு, வீடு வாடகைக்குக் கேட்பவரும் பிள்ளைமார்தான் என்று சொல்கிறார்கள். பிள்ளைமார் ம்யூட் செய்யப்படவில்லை என்பது ஆறுதல்.

இப்படம் கவனத்தில் கொள்ளாதவை என்று இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். வீடு மாற்றுவது என்பதும் வாடகை வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் என்பதும் நிச்சயம் எரிச்சலானவையே. ஆனால் அதற்காக எந்த ஒரு வீட்டு வாடகையாளரும் வீட்டு உரிமையாளரின் முன்னே அடிமை போல் நிற்பதில்லை. இங்கே இந்தப் பெண் ஏன் கூனிக் குறுகி ஒவ்வொரு காட்சியிலும் அப்படி நிற்கிறார் என்பது புரியவில்லை. தினம் தினம் அழுவதில்லை. ஏன் இங்கே அந்தப் பெண் கிட்டத்தட்ட எப்போதும் அழுதவண்ணம் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. வீடு மாறுவது என்று முடிவாகிவிட்டால் வீட்டு வாடகைக்காரருக்குச் சட்டென ஒரு தைரியமும் எதிர்ப்புணர்வும் திமிரும் வந்துவிடும். அதை இப்பெண்ணிடம் கடைசிவரை எதிர்பார்த்து ஏமாந்தேன். இரண்டாவது, அந்த ஊரை விட்டே போகலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, பொதுவாக எல்லோரும் எடுக்கும் இன்னொரு முடிவு, ஏன் இத்தனை பணம் கட்டிப் பையனைப் படிக்க வைக்கவேண்டும், அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே என்பது. இதைக் கோடிட்டாவது காட்டி இருக்கலாம். பொதுவாகவே வீடு வாடகை ஒரு சுமையாவது, நம் குழந்தைகளுக்கு நாம் தர விரும்பும் சிறந்த கல்வியின் மூலமாகவே. எனவே வீட்டு வாடகையும் குழந்தைகளின் கல்வியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான்.

எனக்குள்ள இன்னொரு பிரச்சினை, இத்திரைப்படம் குறித்தானதல்ல, பொதுவானது, மாற்றுத் திரைப்படங்கள் ஏன் இன்றும் இருபது வருடங்களுக்கு முன்பான படங்கள் போலவே நகர்கின்றன என்பதுதான். படம் மெல்ல நகர்வதைச் சொல்லவில்லை. காட்சி ரீதியாகச் சொல்கிறேன். விளக்கமாக எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. சொல்லும் மொழியில் வீடு திரைப்படம் போன்றே இத்திரைப்படமும் இருக்கிறது. சமீபத்தில் வந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் இப்படித்தான் இருந்தது. இவற்றை மீறிய ஒரு மொழி சாத்தியமில்லையா? அல்லது இதுபோன்ற கதைகளுக்கு இப்படி உறைந்து நகரும் புகைப்படக் காட்சிகள்தான் சரியானவையா?

இப்படத்தின் மிகப்பெரிய பலம், நம் வீட்டுக்குள் நிகழ்வதைப் போன்ற காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் நடிகர்களின் நடிப்பும். இதற்காகவும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையை எவ்வித அலைபாய்தலுமின்றிக் கையாண்டதற்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.

நன்றி: https://oreindianews.com/?p=3421

Share

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

நம் சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மதிப்பு என்பது மிக உயர்ந்தது. தொன்றுதொட்டே அவர்கள் குருவென மதிக்கப்பட்டு தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்பட்டவர்கள். குரு என்பவர் எத்தகைய ஒருவராகவும் இருக்கமுடியும். நம் இன்றைய சமூகத்தில் நாம் குரு என்று நினைப்பது நம் ஆசிரியர்களையே. ஒவ்வொரு தனி நபரும் தன் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமுடியாத ஆசிரியர் என்று குறைந்தபட்சம் ஒருவரையோ அல்லது பலரையோ நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு எவ்வித பேதங்களும் தெரியாத வயதில் நம்முடன் இணைந்துகொள்ளும் ஆசிரியர்கள் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக உருக்கொள்வதில் வியப்பேதுமில்லை. இன்றும் நம் சிறுவயதில் நமக்குக் கற்பித்த குரு ஒருவரை நினைக்கும்போது நமக்கு எழும் எண்ணங்கள் நிகரற்றவை. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு இதுவாகவே இருக்கிறது. இதனாலேயே ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட சிறிய வீழ்ச்சி கூட மிகப் பெரிய சமூக வீழ்ச்சியாகவே விவாதிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த மனநிலைக்குப் பின்னே வைத்தே நாம் பார்க்கவேண்டியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம், அதிலும் இன்னும் சில நாள்களில் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம், பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததற்கு, ஆசிரியர்களின் மீதான இந்த ஒட்டுமொத்த மதிப்பீடும் ஒரு காரணம். இந்த மதிப்பீடு சரியா தவறா, தேவைதானா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதங்கள். யதார்த்தத்தில் இப்படியான ஒரு பொதுப்புத்தி நிச்சயம் இருக்கவே செய்கிறது.

ஜேக்டோ (பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) மற்றும் ஜியோ (அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இவற்றில் உள்ள ஒன்றிரண்டு கோரிக்கைகள் மிக முக்கியமானவையே. குறிப்பாக, இவர்களது ஓய்வூதியப் பணம் என்ன ஆனது என்பது பொதுவில் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அரசு இதற்கு ஒரு பதில் அளித்தது. இவர்கள் இப்படிப் போராட்டம் செய்திருக்காவிட்டால் அரசு நிச்சயம் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் இதனைப் பல காலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புமாறு அரசை நிர்ப்பந்திப்பது, நிச்சயம் செயல்படுத்த முடியாத ஒன்று.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, சுருக்கமாகச் சொன்னால், அரசு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது பெறும் சம்பளத்தில் பாதியை வாழ்நாள் முழுமைக்கும் (அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் வாழ்நாள் முழுமைக்கும்) மாதா மாதம் பெறுவது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (2003ல் இருந்து), அரசு ஆசிரியரின் (அனைத்து அரசு ஊழியர்களின்) சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை (12%) அரசும் ஊழியரும் ஓய்வூதியப் பணமாக செலுத்துவது; அதைப் பங்குச் சந்தையில் அரசே முதலீடு செய்வது; ஓய்வின்போது ஒட்டுமொத்த பணமாக அரசு ஊழியர் பெற்றுக்கொள்வது. மாதாமாதம் ஓய்வூதியமெல்லாம் இல்லை.

2003 முதல் வேலைக்குச் சேர்ந்தவர்கள் இதனை ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும்வரை அதற்காகப் போராடுவதும், சேர்ந்த பின்பு வேறு வகையில் போராடுவதும் சரியா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்விதான். அதேசமயம், இதைத் தவிர்க்கமுடியாது என்பதும் மிக மிக முக்கியமானதே. எனவே வேலைக்குச் சேர்ந்த பின்பு எப்படிப் போராடலாம் என்பதை விட்டுவிடலாம். அரசுக்கும் இதில் பெரிய பொறுப்பு உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இருந்த பல சலுகைகள் இப்போது இல்லை; அல்லது பெறுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ஓய்வூதியப் பணத்தில் இருந்து கடன் (லோன்) பெறுவது. அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் காலதாமதம். இவையெல்லாம் அரசுத் தரப்பில் இருக்கும் எப்போதைக்குமான சிக்கல்கள். ஆனால் அரசு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்வது இல்லை. அரசு ஊழியர்கள் சொன்னாலும், பொது மக்கள் எப்போதுமே ஒரு எரிச்சலில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அணுகுவதால், இதைக் கவனிப்பதோ ஏற்பதோ இல்லை.

எனவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டுமொத்தமாகத் தவறு என்றோ தேவையற்றது என்றோ சொல்லிவிட முடியாது.

அதேசமயம், அரசு ஊழியர்களின் போராட்டம் நிச்சயம் அவர்களது பணித் திறமையோடு நிச்சயம் சேர்த்தே பார்க்கப்படும். 30-01-2019 தேதியிட்ட தமிழ் தி ஹிந்து இதழில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்த வேலை நிறுத்தத்த்தின் போது அரசு ஊழியர்களின் செயல்பாடுகளைச் சொல்வ்வது வேலை நிறுத்தத்தைத் திசை திருப்புவது என்று சொல்லி இருக்கிறார். இதை நிச்சயம் ஏற்கமுடியாது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றுக்கு எதிராக அவர்கள் செய்யும் பணி, ஒப்பீட்டளவில் மற்றவர்களது வேலை மற்றும் சம்பளம் என எல்லாமும் விவாதிக்கப்படுவது நிகழவே செய்யும். விவாதிக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும் தாங்கள் எப்பேற்பட்ட ஒரு வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும். இதனால் பயன் இல்லாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.

ஒரு அரசு ஆசிரியர் ஆவேசமாகப் பேசும் வீடியோ ஒன்றை அனைவரும் பார்த்திருக்கலாம். நாங்கள் ஏன் வேறு பணிகளைச் செய்யவேண்டும், நாங்கள் ஏன் வேலைக்குச் சேர்ந்த பின்னரும் தேர்வெழுதி வெல்லவேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். வேறு பணிகளைச் செய்வது அரசுக்கு நிச்சயம் தேவை. இதைத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் அரசின் ஓர் அங்கம். பொதுத் தேர்வுகளின் போது நீண்ட நாள் விடுப்பு கிடைக்கும் ஒரே துறை அது. அப்படியானால் அவர்கள் பயன்படுத்தப்படவே செய்வார்கள். ஏன் மீண்டும் மீண்டும் தேர்வெழுதவேண்டும் என்பது கொஞ்சம்கூடப் பொருட்படுத்த முடியாத கேள்வி. ஒவ்வொரு ஆசிரியருக்கும் (அரசு ஆசிரியர், தனியார்ப் பள்ளி ஆசிரியர் என்ற பேதமில்லாமல்) தெரியும், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எத்தனை சதவீதம் பேர் சராசரிக்கு மேல் தேறுவார்கள் என்று. உண்மையில் ஆசிரியர்களின் தகுதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதே என்னுடைய மனப்பதிவு.

தமிழ்நாட்டுக் கல்வியைக் குறித்த ஆய்வின் படி, கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமையைக் குறித்த புள்ளிவிவரம்:

  • ஐந்தாம் வகுப்பில் வார்த்தையை வாசிக்கத் தெரியாதவர்கள் தோராயமாக 32% பேர்.
  • ஆறாம் வகுப்பில் 23% பேர், ஏழாம் வகுப்பில் 15%, எட்டாம் வகுப்பில், 9% பேர்.
  • ஐந்தாம் வகுப்பில் கழித்தல் தெரியாதவர்கள் தோராயமாக 39% பேர்.

இன்னும் கூட்டல், பெருக்கல், வகுத்தல், வட்டிக் கணக்கு, செய்யுள் படித்தல், ஆங்கிலம் அறிவியல் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் தோராயமாக 37%. அரசு உதவி பெறும் பள்ளிகள் 19%. மீதி தனியார்ப் பள்ளிகள்.

ஜேக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தின்போது அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்களும் பங்குகொள்ளவேண்டும் என்றாலும், அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியோ ஆணையின்படியோ இவர்கள் நடந்துகொள்வார்கள். அதேசமயம் ஜேக்டோ அமைப்புக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். அப்படியானால் முழுக்க முழுக்கப் பங்கேற்றது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே. அதாவது, கிராப்புறங்களில் இருக்கும் மாணவர்களே இப்போராட்டத்தின் பலி.

பொதுவாகவே நம் கல்வி அமைப்பு என்பது, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளின் கல்வி அமைப்பு, முழுக்க முழுக்க ஆசிரியர்களைச் சார்ந்தது. பல்வேறு சமூக மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அரசுப் பள்ளி ஒன்றையே தனது விடுதலைக்கான வழி என்று நம்பி வரும் மாணவர்களே இப்பள்ளிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களைக் கையில் எடுத்து நல்ல கல்வி தரவேண்டிய பொறுப்பே அரசு ஆசிரியர்களின் முதன்மையான வேலை. நம் கல்வி அமைப்பின் இன்னொரு பிரச்சினை, தேர்வு நேரங்களில் மட்டுமே பொறுப்பாகப் படிப்பது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே காரணம். எனவே இந்தத் தேர்வு நேரத்தில் இப்படியான அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இதனால் பாதிப்படையப் போகும் கிராமப்புற மக்களுக்கு அரசு ஆசிரியர்களின் என்ன பதில் உள்ளது?

இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், பாதிக்கப்படப் போவது கிராமப்புற மக்கள் என்பதாலேயே அரசு ஊழியர்களுக்குப் பொது மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்பதுதான். இது கொடுமை என்றாலும், பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் படிப்பதால், இவர்களது பெற்றோர்கள் அரசுத் தரப்பையும் சரி, அரசு ஆசிரியர்கள் தரப்பையும் சரி, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் யாருக்கும் ஒரு ஆதரவோ எதிர்ப்போ பெரிய அளவில் உருவாகிவரவில்லை. அதேசமயம் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள், பொது மக்களின் மனதில், இவர்கள் இன்னும் சம்பளம் கூடுதலாகப் பெறவே போராடுகிறார்கள் என்ற எளிய எண்ணத்தை மட்டும் விதைத்துவிட்டது. இது அரசுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. போராட்டமும் பிசுபிசுத்துவிட்டது.

பத்து வருடம் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒரு அரசு ஆசிரியரின் தோராயமான சம்பளம் நிச்சயம் 65,000 ரூபாய் இருக்கலாம். தலைமை ஆசிரியரின் சம்பளம் 85 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கலாம். எப்போதெல்லாம் மத்திய அரசு பே கமிஷனை நியமிக்கிறதோ அப்பொதெல்லாம் கூடுமான வரையில் தமிழக அரசும் அதை ஒட்டிய சம்பளத்தை அறிவித்துவிடுகிறது. காலதாமதமானாலும் முன்கூட்டிய தேதியிட்டு அறிவித்து ஈடுகட்டுவிடுகிறது. இந்நிலையில் போராட்டத்தில் சம்பள உயர்வையும் (அல்லது வேறுபாடுகளைக் களைவது) சேர்த்துக்கொண்டிருப்பது பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது.

3000க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் தேவையற்றதே. இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் குறைந்துவரும் நிலையில், தமிழ்வழிக் கல்வியின் ஆர்வம் குறைந்துவரும் நிலையில், பள்ளிகளை மூடுவது என்பது தவிர்க்கமுடியாதது. 35% பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றால் எப்படி அந்தப் பள்ளிகளில் சேர முன்வருவார்கள்? இந்த புள்ளிவிவரம் தனியார்ப் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் இது அரசுப் பள்ளிகளில்தான் அதிகம் என்பது வெளிப்படை. இந்நிலையில் மாணவர்களே இல்லாத அல்லது மாணவர்கள் குறைந்த பள்ளிகளை மூடுவது, குறைவான அளவில் உள்ள மாணவர்களை இன்னொரு பள்ளியோடு இணைப்பது எல்லாம் நிகழவே செய்யும்.

இதற்கான தீர்வு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதிலேயே உள்ளது. அரசு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதிலேயும் இருக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர்களோ, எங்களுக்கு ஏன் இன்னொரு தேர்வு என்று அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசுக்கு தன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை. பாடத்திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முனைப்பு, அரசுப் பள்ளிகளை ஆயத்தப்படுத்துவதில் இல்லை. மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி என்கிற மாயை.

மாணவர்களின் தரக் குறைப்பாட்டுக்கு அரசும் நிச்சயம் ஒரு காரணமே. ஆனால் தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தம் அராஜகம் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படும் என்று அரசு சொன்னதுமே பிசுபிசுத்துப் போய்விட்டது இந்தப் போராட்டம். தங்கள் வசதி என்று வந்ததும் ஆசிரியர்கள் உடனே வேலைக்கு வந்துவிட்டார்கள். இதில் கிண்டலுக்கு ஒன்றுமில்லை என்றாலும்கூட, மாணவர்களைக் குறித்தும் இவர்கள் யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் வலுப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

இந்தக் கூத்துக்கு இடையில் இன்னொன்றும் நிகழ்ந்தது. எனக்கு (நமக்கு!) அது இன்னமும் முக்கியமானது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணங்களில் ஒன்று, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன் நீதிபதி பரந்தாமன் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை நீதிமன்றம் பாகுபாடு காட்டாமல் அணுகவேண்டும் என்று மட்டும் சொல்லி, இப்போராட்டத்தில் சபரிமலை விவகாரம் தேவையற்றது என்று சொல்லவில்லை? கம்யூனிஸம். அரசு ஆசிரியர் சங்கங்களில் ஒன்று முற்போக்காளர்களின் சங்கம் என்ற பெயரில் இந்தக் கோரிக்கையை நுழைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அல்ல இது. எங்கே இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நுழைத்துவிடுவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். அனுபவம் மிக்கவர்கள். நல்லவேளையாக ஹிந்து ஆதரவு ஆசிரியர் சங்கம் ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது. ஒருவழியாக சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விஷயத்திலான கோரிக்கையைப் பொதுவில் பெரிய அளவில் ஜேக்டோ கொண்டு செல்லவில்லை என்பது ஆறுதல்.

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான நியாயமான கோரிக்கைகளை அரசு ஆராயவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ப்ரீகேஜி வகுப்புகளுக்குச் செல்வதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அளவில் இது எனக்குப் பெரிய விஷயமில்லை என்பதையும் சொல்கிறேன். ஆனால் ஆசிரியர்களின் உணர்வுக்கு மரியாதை அளிக்கவேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி தேர்ச்சி போதுமானது என்று மத்திய அரசின் வழிகாட்டும் குழு சொல்லி இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி தேர்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த வகுப்புகளுக்குச் செல்வதை ஏற்காதது நியாயமே. இந்த வருடம்தான் இது தொடங்கி இருக்கிறது என்பதால், எதிர்வரும் வருடங்களில் அரசு இப்பிரச்சினையைச் சரி செய்யும் என்றே தோன்றுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே சரியானது. அப்போதுதான் அடுத்த நகர்வாக அரசு ஆசிரியர்களின் தர மேம்படுத்துதலை மேற்கொள்ள முடியும்.

பொதுவாகவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் மிகவும் அரிதான காலங்களில் நடப்பது நல்லது. அதாவது வேலை நிறுத்தமே கூடாது என்ற வகையில் இருந்துவிடுவது இனி அவர்களுக்கு நல்லது. காலம் மாறி இருக்கிறது. வேலை நிறுத்தத்தை பொதுமக்கள் கொண்டாடின அல்லது ஏற்றுக்கொண்ட காலம் போய்விட்டது. நீதிமன்றமும் சரி, மக்களும் சரி, எந்த ஒரு அரசுத் தரப்பின் போராட்டத்தையும் இனி சட்டென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனடிப்படையில் தங்கள் தேவையை அரசுத் தரப்போடு பேசியோ, நீதிமன்றத்தை அணுகியோ அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்வது நல்லது. நீதிமன்றத்தின் தலையீடு என்பது அரசு நிகழ்வதற்கு சில பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆனால் அது குறித்துக் கவலை கொள்ளவேண்டியது அரசுதானே ஒழிய, அரசு ஊழியர்கள் அல்ல.

நன்றி: வலம் மாத இதழ்

Share

நினைக்கிறேன், என்று தோன்றுகிறது…

நினைக்கிறேன், என்றே தோன்றுகிறது பதிவு:

இணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன்.

ஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.

பாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம்.

அதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி! :))] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா?!) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.

எப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது. இல்லையென்றால் லட்டு மாதிரி திமுக வென்று தொலைத்திருக்கும். எடப்பாடி, ஓபிஎஸ் – நிதர்சனத்தைப் புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியவர்கள்

இன்றைய நிலையில்:

பாஜக அதிமுக தேமுதிக பாமக, புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால்: 10 இடங்களில் வெல்லும்.
திமுக 20 இடங்களில் வெல்லும்.
மற்றவை இழுபறி

என்று தோன்றுகிறது. ஆனால் உச்சகட்ட பிரசாரத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் முந்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Share

KGF

பரிந்துரைத்திருந்தால்கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதில்லையா, வாழ்க்கைல பாதி போச்சு என்ற அளவுக்கு ஏத்திவிட்ட அந்த விஷமிகள் சில நாள்களுக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. அவ்வளவு நல்ல கன்னடப் படமா, என்னடா இது ஆக்ஸிமோரனாக இருக்கிறதே என்று பார்த்தேன்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஒரு பில்டப் கொடுத்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்று ரஜினி சொல்லும்போது ஜிவ்வென்று ஏறுமே… ரஜினி ஸ்லோமோஷனில் நடக்க பின்னணியில் இசை ஒலிக்க… நான் ஒரு தடவை சொன்னா என்ற பஞ்ச்… ரஜினி அடிபம்ப்பை பிடுங்கி அடிக்க ஒருத்தன் ஒன்றரை கிலோமீட்டர் பறந்து விழ… இதெல்லாம் ஒரு படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இவருக்கு என்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும்? அந்தக் கருமம்தான் கே ஜி எஃப்.

தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா எங்கோ இருக்க இப்போதுதான் கன்னட உலகம் மெல்ல விழிக்கிறது போலும். அதற்கே ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொள்வார்கள் போல. பல காட்சிகள் ஏனோ தானோவென்று இருக்கின்றன. ஆளாளாளுக்கு ஹீரோ பற்றிய பில்டப்பை கிளைமாக்ஸ் வரை தருகிறார்கள். தோல் விடைத்து ரோமம் சிலிர்த்து ரத்தமெல்லாம் வெளியே பீய்ச்சி அடிக்கும் நிலை வந்தபோதும் இந்த ஹீரோவைப் புகழ்வதை நிறுத்தவே இல்லை. வயிற்றுக்குள் இருக்கும் கரு மட்டும்தான் ஹீரோவைப் புகழவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கண்றாவியில் அவருக்குக் காதல் வேறு வருகிறது. ஏனென்றே தெரியாமல் ஒரு பெண்ணும் காதலிக்கிறார். இந்தக் கொடுமைக்குள் இன்னொரு கொடுமையாக, சிறுத்தை, அந்தப்புரம் போன்ற படங்களில் வரும் கொடூரமான பகுதியில் தங்கி அங்கே தங்க வயல்களில் கட்டாயத்தின் பேரிலும் மிரட்டலின் பேரிலும் வேலை பார்ப்பவர்களைக் காப்பாற்றி… ரொம்ப கூலாக கிருஷ்ணா சொல்கிறார், இது பார்ட் 1 தான் பேபி, பார்ட் 2 இருக்கு, இப்பதான் ஆரம்பம் என்று. ஆள விடுங்கடா சாமிகளா என்று கதற வைக்கிறார்கள்.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எல்லாரும் பன்ச் டயலாக் மட்டுமே பேசிய படம் என்ற வகையில், பன்ச் டயலாக் தவிர வேறு வசனங்களே கிடையாது என்ற வகையில், ஹீரோ ஸ்லோமோஷனில் வரும் காட்சிகளையெல்லாம் சாதாரணமாக எடுத்திருந்தால் ஒரு முக்கால் மணி நேரம் கம்மியாகி இருக்கும் என்ற வகையில், ஒரு ஹீரோ நாற்பது பேரை அடிப்பதெல்லாம் சும்மா 400 பேரை அடிப்பார் என்ற வகையில், கிளைமாக்ஸ் வரை என்னென்னவோ காட்சிகள் மாறி மாறி வந்த வகையில் இப்படம் ரொம்ப புதுசு என்றால், பிரதமர் ‘இந்திரா’வே இந்த வில்லனிஷ்ஹீரோவைப் பிடிக்க ஒரு படையையே அனுப்பிய வகையில்.. இதுக்கு மேல முடியலைங்க.

Share