படிக்க வேண்டியவை

<< >>

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம்.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது. மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும்,

Share

எந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.

படம் – சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.

படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.

Share

செக்யூலரிசம் ஓர் எளிய அறிமுகம்

http://www.tamilhindu.com/2010/05/secularism-an-simple-introduction/

* ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.

* அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம்.

* ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி அரசியல் மேடைகளில் கடுமையாக முழங்குவார்கள். ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பார்கள். ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ கடவுளர்கள் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதுவே செக்யூலரிசம்.

* அல்லா, நபி, ஏசு பற்றி ஏதேனும் கேள்விகளை ஹிந்துத்துவவாதிகள் எழுப்பினால், ‘இது காலம் காலமாகச் சொல்லப்படும் மோசடி’ என்று பதில் சொல்லவேண்டும். இதெல்லாம் பிற்போக்குக் கூச்சல் என்று சொல்லவேண்டும். மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்லவேண்டும். இதுவும் செக்யூலரிசமே.

* கருப்புச்சட்டைக்கு ஆதரவான நடிகர் என்று சொல்லிக்கொண்டு, படத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை கிறித்துவ ஊழியர்களாகக் காட்டவேண்டும். வில்லன்களை ஹிந்துக்களாகக் காட்டவேண்டும். இது செக்யூலரிசத்தின் இன்னொரு விளக்கம்.

*ஹிந்து மதத்தைச் சாடும் திரைப்படம் வந்தால் ஹிந்துத்துவவாதிகள் அதனைத் தடை செய்யப் போராடும்போது, நீங்கள் கலைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடவேண்டும். இது பாதி செக்யூலரிசம். அதுவே மற்ற மதங்களைச் சாடும் படம் வந்தால், கலையையும் அடிப்படை உரிமையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்படுகிறதே என்று அவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும். இது முழு செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். உலகெங்கும் இருக்கும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும்போது, நினைவாக பிராமணர்களை ஒதுக்கிவிடுவார். இதுதான் செக்யூலரிசம்.

* தீர்க்கமுடியாத பிரச்சினை வந்தால், இது பிராமணியத்தின் சதி என்றோ ஹிந்து மதத்தின் சதி என்றோ சொல்லிவிட்டால், நீங்கள் செக்யூலர்.

* மிகப் பெரிய இலக்கியவாதியாக இருப்பார். உலகெங்குமுள்ள நல்ல எழுத்துகளை, புராணங்களைத் தேடிப் படிப்பார். ஹிந்து மத சாஸ்திரங்களை மட்டும் நிந்திப்பார். இந்தப் பிழைக்கத் தெரிந்த வழியின் பெயரும் செக்யூலரிசமே.

* ஊர் ஊராகக் கோவிலுக்குப் போவார்கள். வீட்டில் உள்ள நஞ்சு குஞ்செல்லாம் சாமி கும்பிடும். ஆனால் அவர் பெரிய பகுத்தறிவாளராகத் தன்னைக் காண்பித்துக்கொள்வார். பெரியாரிஸ்டுகளைவிட அதிகமாகப் பெரியாரை மேற்கோள் காண்பிப்பார். இது செக்யூலரிசத்தின் முக்கிய பாடங்களுள் ஒன்றே.

* புராதன ஹிந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் பேசுவதெல்லாம் ’பகுத்தறிவுத்தனமாக’ இருக்கும். மறக்காமல், தனது திருமணத்தையோ, மகள் கல்யாணத்தையோ, ஜாதி பார்த்து, மதம் பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து நடத்திக்கொள்வார். இவரே நம் நாட்டின் சிறந்த செக்யூலர். மற்ற செக்யூலர்களும் இந்த செக்யூலரைப் பார்த்துத் தலையாட்டும்.

* கடவுளே இல்லை என்பார். நோன்புக் கஞ்சி குடிப்பார். ‘நான் பிழைத்தது எல்லாம் வல்ல இயற்கையின் சக்தி’ என்று சொல்லிவிட்டு, இயற்கையை வழிபடுவர்களைக் கிண்டல் செய்வார். இவரும் செக்யூலரே.

* புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்.

* ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

* தமிழுணர்வையும் தமிழனைப் பற்றியும் மேடையாக மேடையாக முழங்கவேண்டும். ஊரில் உள்ள வடமொழிப் பெயர்களையெல்லாம் மாற்றித் தரவேண்டும். உங்கள் பெயரை மாற்றக்கூடாது. இது தமிழுணர்வுதானே என நினைப்பீர்கள். தமிழுணர்விலிருந்து பக்தி வழியாக ஹிந்து மதத்துக்கு வந்து அதனை சாடிவிட்டால், நீங்கள் செக்யூலர்தான்.

* சங்ககாலத் தமிழனுக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பக்கம் சொல்லவேண்டும். ஆனால் அவன் சிந்தித்த ஹிந்து மத பக்தியை இகழவேண்டும். இதை முக்கியமான வேலையாகச் செய்யக்கூடாது. எப்போதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும். இது செக்யூலரிஸத்தின் பிற்சேர்க்கைகளில் ஒன்று.

* ஊரிலுள்ள எல்லாக் கோவிலுக்கும் செல்லவேண்டும். ஏனென்றால் ஒரு செக்யூலரின் மனைவி நிச்சயம் கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருப்பார். ஆனாலும் அசரக்கூடாது. கோவிலுக்குச் செல்வதே அங்கிருக்கும் சிலைகளைப் பார்க்கத்தான் என்ற பாவத்துடன் செல்லவேண்டும். என்னே தமிழனின் கைவண்ணம் என்று பேட்டியும் கொடுக்க உங்களுக்கு வக்கிருக்குமானால், உங்களுக்கு செக்யூலர் மாலைதான். (காலையில் சாப்பிடும்போது இட்லிக்கு உங்களுக்குப் பிடித்த வெங்காய சட்னிக்கு பதிலாக தனக்குப் பிடித்த தேங்காய் சட்னி செய்துவிட்ட மனைவியை கண்டமேனிக்குத் திட்டியதை சுத்தமாக மறந்துவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்தவர் சுந்தந்திரத்தை மனதில் வைத்து கோவிலுக்குச் சென்றேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இதுவும் செக்யூலர் இமேஜையேதான் தரும்.)

விதி 1: இத்தனை விதிகளில் பாதியைக் கடைப்பிடித்தால், நீங்கள் முற்போக்காளர். நான் மிகவும் போராடி இந்த இடத்துக்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்.

விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

Share

டெல்லி கணேஷ் செய்யும் கொடுமை

டெல்லி கணேஷ் தமிழின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். பழங்கால துணை நடிகர்கள் போல, இக்காலத்தில் பெரிய நடிகர் பட்டாளம் இல்லை என்றாலும், அக்காலத்தில் மிக சிறப்பாக நடித்த பல்வேறு நடிகர்களுக்கு இணையாக மெச்சத்தக்க ஒரு நடிகர் டெல்லி கணேஷ். அவர் நடித்த எத்தனையோ படங்களில் அவரது அட்டகாசமான, யதார்த்தமான நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். இப்போது அவர் மெகா சீரியலில் நடிக்கும்போதும், அவர் மட்டும் தனித்துத் தெரிவதைப் பார்த்திருக்கிறேன். திருப்பாவை, கஸ்தூரி, செல்லமே என எல்லாத் தொடர்களிலும் இவரது நடிப்பு மட்டும் தனிப்பட்ட பாதையில் யதார்த்தமாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

நமக்கு ஒருவரை இத்தனை பிடித்துவிட்டால் கடவுளுக்குப் பொறுக்காது போல.

விஜய் டிவியில் ஞாயிறு காலை பத்து மணிக்கு வாங்க பேசலாம் என்றொரு நிகழ்ச்சி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை நான் தவிர்த்துவிடுவேன். ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு தடவை பார்த்து நொந்து போயிருந்தேன். சரி, டெல்லி கணேஷுக்கு இது ஒரு திருஷ்டிப் பொட்டு என நினைத்துக்கொண்டு மறந்துவிட்டேன். இன்று மீண்டும் அதே நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.

ஒய்.ஜி. மகேந்திராவின் பேட்டி. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் டெல்லி கணேஷும் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்). புஷ்பவனம் குப்புசாமி என்னவோ முதலில் பாடுகிறார். ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார்தாசன், புஷ்பவனம் குப்புசாமி மூவருமே அலட்டல் மன்னர்கள் என்பது நாம் அறிந்ததே. இதில் பெரியார் தாசன் இப்படி எல்லாம் பேசிவிட்டு எப்படி பேராசிரியர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறார் என்பது தெரியவில்லை. சரி, அவருக்கு முடிகிறது சொல்லிக்கொள்கிறார். புஷ்பவனம் எப்போதுமே அலட்டல் என்பதால் அதிலும் பிரச்சினையில்லை. ஒய்.ஜி. மகேந்திரா என்றைக்குமே அதீத நடிப்பையும், அசிங்கமான முகபாவத்தையும், அலட்டலான பேச்சையும் கலை என்று நினைத்துக்கொண்டு வளர்ந்தவர். சிவாஜி கணேசன் எனக்கு குரு என்று சொல்லி அவரையும் கேவலப்படுத்துபவர். தான் கமலைவிட சிறந்த கலைஞன் என்று தனக்குத் தானே நினைத்துக்கொள்பவர். அவரைப் பற்றிப் பேச எனக்கு ஒனறுமே இல்லை.

ஆனால் இந்த டெல்லி கணேஷ்?

ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார் தாசன், புஷ்பவனம் மூவருமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக அவர் அலட்டும் அலட்டல் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எப்பேற்பட்ட கலைஞனின் வீழ்ச்சி இது? அதிலும் மிகவும் அசிங்கமாக சில சமயங்களில் அவர் பேசும்போது, அதை நகைச்சுவை என நினைத்துக்கொண்டு மற்றவர்கள் சிரித்து அந்தக் காட்சிக்கு நடிக்கும்போது பெரும் குமட்டல் ஏற்படுகிறது.

ஐபிஎல் பற்றிப் பேசும்போது, நடிகைகளைக் கட்டிப் பிடித்து உம்மா கொடுக்கலாம் என்றெல்லாம் டெல்லி கணேஷ் பேசுகிறார். முதலிலேயே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு நடிப்பதாக அவருக்குத் தோன்றலாம். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு நேர்காணலாகத்தான் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் டெல்லி கணேஷ் சொல்லும் ஆபாசமான வார்த்தைகள், கமெண்ட்டுகளெல்லாம் எத்தனை அருவருப்பாக உணரப்படுகிறது என்பதனை அவர் தெரிந்துகொள்ளவில்லை போல.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ஒய்.ஜி. மகேந்திரா சரோஜாதேவியுடனான பேட்டியில், இதே போல மிக ஆபாசமாகப் பேசினார். ஏதோ ஒரு படத்தில் மலைப்பாம்பு சரோஜா தேவியைப் பிண்ணிப் பிணைவதாக ஒரு காட்சி. அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சரோஜாதேவி. சம்பந்தமே இல்லாமல் ஒய்.ஜி. மகேந்திரா, ஐயோ அந்த மலைப்பாம்பாக நான் இருந்திருக்கக் கூடாதா என்று சொன்னார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அந்தப் பேரிளம்பெண் சரோஜா தேவி அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். அதே ஒய்.ஜி இன்று பேட்டி கொடுக்கிறார். அவரிடம் கேள்வி கேட்கும் டெல்லி கணேஷ் இதே அளவுக்கு கேள்வி கேட்கிறார் நகைச்சுவை என நினைத்துக்கொண்டு. பின்பு அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும்?

அதில் ஒய்.ஜி தன் அப்பாவைப் பற்றிச் சொல்லும் செய்திகளும், அதற்கு ஒத்து ஊதிக்கொண்டு டெல்லி கணேஷ் சொல்லும் செய்திகளும், மற்றவர்களால் மிக எளிதாக, ‘ஜாதித் திமிர்’ என்று சொல்லக்கூடிய அளவில்தான் உள்ளது என்பதையாவது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. மற்றவர்களின் பெயரைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இவர்களே அவர்களை மீண்டும் ஜாதியக் கூண்டில் அடைத்துவிடுவார்கள் போல.

செல்லமே – ராதிகாவின் மெகா தொடரில் டெல்லி கணேஷ் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த துக்ளக் இதழில் டெல்லி கணேஷ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் வில்லனாக நடிப்பது பலருக்குப் பிடிக்கவில்லை என்றும், இனிமேல் அதைச் செய்யமாட்டேன் என்றும் எழுதியிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. டெல்லி கணேஷ் இப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வில்லனாக நடிப்பது அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளக்கூடியதா என்ன? இப்போது அவர் செல்லமே நாடகத்தில் வருகிறாரா இல்லையா எனத் தெரியவில்லை.

இப்படி சறுக்கிக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ், தனது நடிப்பின் தரத்தைப் பற்றித் தானே அறிந்திருக்கவில்லையோ என்று பரிதாபப்படத் தோன்றுகிறது. அவரது நடிப்பு தமிழ் உலகம் கொண்டாடவேண்டிய ஒன்று. இது போன்ற சறுக்கல்களில் இருந்து விலகி, அவர் தனது நடிப்பில் கவனம் செலுத்துவது அவருக்கும், தமிழ் திரை உலகுக்கும் நல்லது.

http://www.youtube.com/watch?v=gPOrTmpul0s
இந்த சுட்டியில் சில வாங்க பேசலாம் நிகழ்ச்சிகளின் ஒளித்துண்டுகள் உள்ளன. தலையில் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் இதனைப் பார்க்கலாம்.

Share

முகம் – சிறுகதை

எனது முகம் சிறுகதை வடக்கு வாசல் ஏப்ரல் 2010 இதழில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி: வடக்குவாசல்

நீண்டுகிடக்கும்
தாழ்வாரத்துக்கு வெளியே
ஓடும் தெருவில் திரியும்
பல்வேறு நினைவுகளைக் கடந்து
புகையில் தெரியும் நிலவென
தூரத்தில் தெரியும் முகம்
என் கைகள் ஜில்லிட
-நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை இது.

* * * *

பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள் தெரிந்தார்கள். எனக்கெனத் தனியாகத் திரையிடப்படும் ஒரு திரைப்படம் போன்றகாட்சி அது. நான் எதிர்பாராத ஒரு தருணத்தில் அப்புறத்தில் இருந்து ஒருவர் மிக அருகில் வந்து, நான் பார்த்துக் கொண்டிருந்த துளையின் வழியே தன் கண்ணை வைத்துப் பார்த்தார்.

நெருங்கி வந்த நிழல் மெல்ல மூடி முழு இருட்டு ஆகிவிடுவது போல் அப்புறத்தில் ஒன்றும் தெரியாமல் மறைந்து போனது. மனிதர்களின் சத்தம் மட்டும் லேசாகக் கேட்டது. மிக அருகில் நெருங்கி வந்த அந்த மனிதனின் முகம் என்னுடைய கண்ணுக்குள் நுழைந்து என்னுள்ளே இறங்கிக் கொண்டது போலிருந்தது; பரவி வரும் நிழல் கீழே உள்ள சகலத்தையும் போர்த்திக் கொண்டுவிடுவது போல.

அந்த முகம் யாரோ ஒருவருடையது போலிருந்தது. மிகத் தனித்துவமான முகமாகவும் தோன்றியது. மூக்கின் மேலே லேசான ரோமங்கள் இருந்தன. இரண்டு புருவங்களுக்கு மத்தியில் லேசான புடைப்பு இருந்தது. மீசை மெல்லக் காற்றில் ஆடியது. யாரோ அப்பக்கம் இருந்து பார்க்கிறார்கள் என்கிற யோசனையுடன் அம்முகம் அத்துளையைப் பார்த்திருக்க வேண்டும்.

அன்றிலிருந்துதான் நான் முகங்களை உற்று நோக்குவதாக நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்துக் கொள்வது என் பழக்கத்துக்கு ஒரு வயதை நிர்ணயித்தது. ஆனால் நான் மிகச் சிறிய வயதில் எப்போதோ பார்த்த முகங்கள் கூட புதுத் தெளிவு பெற்று வலம் வரத் தொடங்கின என்பதும் உண்மைதான்.

இரவில் மெல்ல நகரும் பேருந்தில் ஏறிக்கொண்டபோது இந்த முகங்களைப் பற்றி யோசிக்கவே கூடாது என நினைத்துக் கொண்டேன். முதலில் கண்ணில் பட்டது கண்டக்டரின் முகம். அதிவேகத்தில் சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் அதே வேகத்தில் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டன முகங்கள் பற்றிய நினைவுகள்.

ஒவ்வொரு மனிதனின் முகமும் ஒவ்வொன்றாகக் காட்சி தருவதை நினைக்கும் போதெல்லாம், ஒருவிதக் கிளர்ச்சி மனதுக்குள் வியாபிப்பதைப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் அசிங்கமாக இருந்தது. நான் இப்படி மிக அந்தரங்கமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, தலையில் எஞ்சியிருந்த ஒன்றிரண்டு முடியை கண்டக்டர் சீவிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்ணுக்குக் கீழே கருவளையம் ஒன்று உருவாகி வந்திருந்தது. மீசையில்லா முகங்களைக் காணும்போது ஏற்படும் ஒருவித எரிச்சல். அவனது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஓர் உள்ளுணர்வு சொன்னது, இவன் எதையாவது பேசிக் கொண்டே இருக்கப் போகிறான் என.

தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளில் ஒருவரை எழுப்பி அந்த மனிதர் ஐந்து ரூபாய் குறைவாகக் கொடுத்துவிட்டதாக அரை மணி நேரம் சண்டையிட்டதைப் பின்பு பார்த்தேன்.

மனிதர்களின் முகங்கள் நிச்சயம் வெவ்வேறானவை. ஆனால் தொடர்ந்து முகங்களைப் பார்ப்பதன் மூலம் அவற்றையாரும் மெல்ல வாசித்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் வளர்ந்திருந்தது. அந்தப் பயணி ஐந்து ரூபாய் தரமுடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். கண்டக்டர் கோபத்துடன் தனக்குள், “அவனப் பாத்தா ஏமாத்தறஆளு மாதிரியா இருக்கு,’ என்று சொல்லிக்கொண்டே போனார். “ஜன்னல சாத்துயா, காத்து பலமா அடிக்குதுல்ல,’ என்று முன்னாலிருந்த வேறொரு பயணியை நோக்கிப் போனார். அந்த இரண்டு பயணிகளையும் பார்க்க எழுந்த ஆவலை அடக்கிக் கொள்ள முயற்சித்தபோது, உடலுக்குள்ளே லேசான கிளர்ச்சியை உணர்ந்தேன்.

தூக்கத்தில் என் மேல் வழிந்து விழுந்துகொண்டிருந்தான் பக்கத்திலிருந்தவன். தோராயமாக இருபது வயதிருக்கலாம். சவரம் செய்யவேண்டிய தேவை இல்லாத மாதிரியாக லேசாக ஒன்றிரண்டு ரோமங்கள் தாடைக்குக் கீழே வளர்ந்திருந்தன. எனக்கெல்லாம் இருபது வயதிலேயே கன்னமெங்கும் கருகருவென ரோமங்கள் வளர்ந்துவிட்டன. அதுவே ஒருவித ஆண் தன்மையை எனக்குத் தந்தது என்று என் நண்பர்கள் சொல்வார்கள். பக்கத்தில் இருந்த பையன் முகத்தில் எவ்விதச் சலனமுமில்லை. மெல்லிய மீசையுடன் தூக்கமே சிறந்த யோகம் என்பதாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மெல்ல என் கண் வழியே அவனது முகம் நுழைவதைப் பார்த்தேன். சிலரின் முகங்கள் இப்படி சில நிமிடங்களில் நுழைந்துவிடுகின்றன; இரு புருவங்களுக்கு மத்தியில் மெல்லிய புடைப்பைக் கொண்ட ஒருவனது முகம் தகரச் சுவற்றில் இருந்த சிறு துளையின் வழியே என்னுள்ளே நுழைந்ததைப் போல.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மூடியிருந்த இமைக்குள் கருவிழி புடைத்து வெளியில் தெரிந்தது. அவனது தொண்டைக் குழியும் அப்படியே புடைத்திருந்தது. அவனது கேராவின் வழியே வியர்வை வழிந்து ஒரு கோடாகக் காட்சி தந்தது. பலமான காற்று என்று சொன்ன கண்டக்டர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். டிரைவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவரது முகம் என் கண்ணுக்குள்ளே ஏன் நுழையவில்லை என்பது குறித்து தனியே யோசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அவன் இன்னும் என் மேல் நன்றாகச் சாய்ந்தான். அவனது வயதில் நான் இத்தனை கவலைகள் இல்லாமல் இருந்தேனா என்பது எனக்குச் சந்தேகமாக இருந்தது. என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது வெறும் குழப்பமே மிஞ்சுகிறது. இன்றைய என் முகம் கூட சட்டென நினைவுக்கு வர மறுப்பது விநோதம்தான். நான் சிறுவயதில் எப்படி இருப்பேன் என்று பார்க்க என் பர்ஸில் இருந்த என் பழைய புகைப்படம் ஒன்றைஎடுத்துப் பார்த்தேன்.

இன்றைய என் முகத்தோடு ஒப்பிடும்போது அது நிச்சயம் பால்வடியும் முகம்தான். நான் திருடிய ஒரு புத்தகம் பற்றிய விசாரணை வந்தபோது, என் ஆசிரியர் நிச்சயம் நான் திருடியிருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்து என்னை எதுவும் கேட்காமலேயே அனுப்பியதை நினைத்துக் கொண்டேன். அந்த ஆசிரியரின் முகம் ஓர் ஏமாளியின் முகம்தான். ஒருவித சப்பட்டையான முகம். கண், மூக்கு, தாடை எல்லாமே உள்ளடங்கிப் போய்க் கிடக்கும் முகம். அவரது மனைவியைப் பார்த்தாலே அவர் நடுங்குவார் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் மனைவியின் முகம் பருத்த முகமாகவும், விகாரமானதாகவும் இருந்தே தீரும் என்று நினைத்தேன். அந்த வருட ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அந்த ஆசிரியர் தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். நான் வரைந்து வைத்திருந்த முகத்தைத் தன் கழுத்தில் தாங்கிக் கொண்டு அவள் வந்திருந்தாள்.

தகரச் சுவற்றின் துளைகளின் வழியே நுழைந்த மனித முகத்திலிருந்து இன்று வரை இந்த பதினெட்டு வருடங்களில் இப்படி எத்தனை முகங்கள் என்னை ஆக்கிரமித்தன என யோசிக்கத் தொடங்கினேன்.

ஒரு பாடலைக் கேட்டதும் அப்பாடலின் சூழலுக்குள் நம்மை அறியாமலேயே அமிழும் மனம் போல், என்னை அறியாமல் பலவித முகங்களும், சூழலும் என்னை அலைக்கழித்தன.

பலாக்கொட்டையைப் போன்ற மொழு மொழு முகத்தைக் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்தேன். அன்றே அவள் என்னுள் என் எதிர்ப்பையெல்லாம் மீறி இறங்கினாள். இது சாதாரண முகம் பார்த்தல் அல்ல என்று தோன்றியது. மெல்லிய வெண்ணிலா வெளிச்சத்தில் என் மாமா வீட்டு மொட்டை மாடியில் நான் அவளை வெறியுடன் கலைத்தேன். இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று நினைத்த நேரத்தில் மின்னலென காயத்ரியின் முகம் தோன்றி மறைந்தது.

காயத்ரியைத் தான் கல்யாணம் செய்து கொண்டேன். என் மாமனாரின் முகமும் மாமியாரின் முகமும் ஏதோ ஒரு தருணத்தில் எரிச்சல் தருவதாக என்னுள்ளே பதிந்துபோனது. அன்றிலிருந்து இறுவரை நாங்கள் பரஸ்பரம் மரியாதையாகப் பேசிக் கொண்டு, உள்ளுக்குள்ளே பெரிய எரிச்சலைப் பொத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி எத்தனை எத்தனை முகங்கள். ராங் சைடில் வந்து என் காலில் மோதிவிட்டு, என்னைப் பார்த்துச் சிரித்து, “சாரி பிரதர்” என்று சொன்னவனின் முகம். அவனுக்குப் பின்னே மரணம் செல்கிறதோ என்று தோன்றியது. அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

“இதெல்லாம் என்ன நோட்டுன்னு குடுக்குறீங்க?!” என்று என்னை அதட்டிக் கேட்ட பேங்க் மேனேஜரின் முகம். அந்த ஆள் நிச்சயம் கடுமையானவர் அல்ல என்று நினைத்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில், “எதுக்குச் சொல்றேன்னா” என்று ஆரம்பித்தார்.

இப்படி முகங்கள் என்னைக் கடந்து கொண்டே இருக்கின்றன. நான் அவற்றைச் சாதாரணமாக மீறிப் போகமுடியாமல் ஏதோ ஒரு நோய்க்குள் விழுந்து கொண்டிருக்கிறேன் என்பது உறுதியாகத் தெரிந்தது. ஒருநாள் ஒரு டாக்டரைச் சென்று பார்த்தேன். அவர் ஏதேதோ சொன்னார். இதெல்லாம் உங்க கற்பனை என்று அவர் சொன்ன தருணத்தில் அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். கடைசி வரியைத் தவிர அவர் என்னவெல்லாம் சொன்னார் என்பதே நினைவில் இல்லை. அவரது முகம்தான் அப்படியே பதிந்து போயிருந்தது. அவரது மனைவி நிச்சயம் அமைதியானவளாகவும் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என ஓர் எண்ணம் ஓடியது. சென்று கேக்கலாமா என்று ஒரு கணம் நினைத்து, அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். அக்கேள்வியின் வழியே நிச்சயம் என் முகம் அவருக்குள் ஆழ இறங்கிப் போவதை நான் விரும்பவில்லை.

என் மேலே சாய்ந்திருந்த பையனின் வாய் ஓரத்திலிருந்து நீர் வடிந்தது. பொறாமை என்னை உந்த அவனைப் பார்த்தேன். எவ்விதச் சங்கடங்களும் இல்லாமல் அவன் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவனது முகத்தில் சீராக மூச்சு ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு அடுத்து தாடி வைத்த மனிதர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மீசையும் தாடியும் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருந்தது. ஏதோ சங்கடத்தில் தூங்குபவர் போலத் தோன்றியது. மேற்கொண்டு எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு என் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பையனைப் பார்க்கத் தொடங்கினேன். இப்படி கவலைகள் இல்லாமல் உறங்கி எத்தனை நாளாகியிருக்கும்.

பஸ் திடீரென நின்றது. தூக்கத்தில் இருந்த அனைவரும் உலுக்கி எழுப்பப்பட்டார்கள். பக்கத்தில் இருந்த பையன் எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கேட்டான். “அருப்புக் கோட்டையா?’

“இல்லயே, மதுரை.”
“அருப்புக் கோட்டை போயிடுச்சா…”
“ஆமா, அங்கதான் இறங்கணுமா?”

“ஆமா’ என்றான் எவ்விதப் பதட்டமும் இல்லாமல். அவனது முகம் அமைதிக்கான முகம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எதிரே நேராக முட்டிக் கொள்வது போல வந்த பஸ் கொஞ்சம் வழிவிடவும், எங்கள் பஸ் மீண்டும் கிளம்பியது. என் பக்கத்தில் இருந்த பையன் எழுந்து, தாடிக்காரரைத் தாண்டி கண்டக்டரை நோக்கிப் போனான். கீழே இறங்குவதற்கு வண்டியை நிறுத்தச் சொல்லிக் கேட்கப் போகிறான் என நினைத்த நேரத்தில், வேகமாக ஓடும் பஸ்ஸிலிருந்து தாவிக் குதித்தான். பக்கத்தில் எங்களை முந்திக் கொண்டிருந்த பேருந்து அவனை மோதித் தூக்கி எறிந்தது. ஒன்றிரண்டு பேர் ஐயோ என்று கத்தினார்கள். என் வயிற்றுக்குள் ஒரு கத்தி இறங்கியது. அடுத்தடுத்து எல்லாப் பேருந்துகளும் அங்கே நிறுத்தப்பட்டன. எங்கள் பேருந்தின் டிரைவர் வண்டியை மெல்ல ஓரம் கட்டினார். அவரது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

ஜன்னல் வழியே எட்டி சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனது முகத்தைப் பார்த்தேன். அமைதியான முகத்துடன் ஆயிரம் கேள்விகளுடன் அவனது முகம் மட்டும் என்னுள்ளே ஆவேசமாக மீண்டும் இறங்கியது. அதுவரை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அமைதியான முகத்தைக் கலைத்துப் போட்டது. இரண்டு நெற்றிப் புருவங்களிடையே புடைப்பைக் கொண்ட மனிதன் சிரித்துக் கொண்டே மெல்ல விலகிக் கொள்ள, ரத்தத்தில் தோய்ந்த முகத்துடன், வேறொரு பேருந்துக்காகத் தெருவில் காத்துக் கொண்டு நிற்கிறேன்.

Share

ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும்

இந்த சிறிய விஷயத்தை ஒரு பதிவாகப் போடுவதற்கே அசிங்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் பதிந்து வைப்போம் என்பதற்காக இதனைப் போட்டு வைக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி உதயம் என்ற வலைப்பதிவில் (http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html) வெளிவந்திருந்தது. வாசித்துவிட்டு, நேற்று முன் தினம் நான் ஒரு சிறிய கமெண்ட்டைப் போட்டேன். பேட்டி குறித்த நெகடிவ் கமெண்ட் அது. அது அங்கு வெளியிடப்படவில்லை. அந்த கமெண்ட்டைப் போய் ஏன் நிறுத்தப் போகிறார்கள் என்று நினைத்து நேற்று மீண்டும் இன்னொரு கமெண்ட் போட்டேன், எனது கமெண்ட் ஏன் வரவில்லை ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்று கேட்டு. அதுவும் இதுவரை வெளிவரவில்லை.

நான் போட்ட கமெண்ட்டுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. நான் போட்ட முதல் கமெண்ட் இப்படி இருந்தது.

நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேட்டி கொடுத்து இதுவரை நான் பார்த்ததில்லை.

//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும்.//

சரி, கேட்டுக்கிட்டோம்.


இதுதான் நான் போட்ட முதல் கமெண்ட், ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது.

இரண்டாவதாக நான் போட்ட கமெண்ட், ஏறக்குறைய இப்படி.

நான் போட்ட கமெண்ட் வெளிவரவில்லை. ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?


இதுவும் வெளிவரவில்லை.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி மீது வைக்கப்படும் மிக மேலோட்டமான குற்றச்சாட்டுக்கூட வெளியிடப்படாமல் ஏன் இருக்கவேண்டும்? அந்த அளவுகூட எதிர்ப்பை விரும்பவில்லை பதிவர் என்பது தெரியவில்லை. திரைத்துறையில் இருப்பதால் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறாரோ என்னவோ. அல்லது பாராட்டுகள் மட்டும் காதில் கேட்டால் போதும் என்கிற எண்ணமா எனத் தெரியவில்லை.

எல்லாம் அவன் செயல்!

Share

அங்காடித் தெரு – நாம் வாழும் தெரு

வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.

ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.

கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு – தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.

பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி – அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.

நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.

இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன – காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.

(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)

Share

சொல்வனத்தில் எனது கவிதைகள்

சொல்வனம்.காம் வலைத்தளத்தில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. சொல்வனத்துக்கு எனது நன்றி. கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

ஆங்கென் நட்பு

சட்டெனத் தோன்றி மறைந்தது
திடீரென்று ஒரு குரல்
ரொம்ப பழகிய
ஒருவனுடையது என்பது நிச்சயம்
அவனாயிருக்குமோ இவனாயிருக்குமோ என
நினைத்துப் பார்த்ததில்
மறந்து போன எல்லா நண்பர்களும்
ஞாபகம் வந்து போனார்கள்
யாரென்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இன்னும்.

பசும் புல்வெளியில் சுற்றும் சக்கரம்

எங்கேயிருந்தும்
ஒளி கசிய முடியாத
இருள் அறை முழுதும்
சுற்றிப் படந்திருக்கின்றன
என் நினைவுகள்
வழியில் திரும்பும்
பஸ்ஸொன்றிலிருந்து
கண நேரம் பார்த்த முகம் முதல்
ஆழ்ந்து அமிழ்ந்துபோன
நிர்வாணத்தின் தலைவரை
இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன
சுவரில் மோதிய வண்ணம்
கசிவைத் தேடியவண்ணம்
மெல்ல பசியத் தொடங்குகிறது அறை
புல்வெளியின் மணத்தோடும்
பசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்

தெருவோரம் நடப்பவன்

வீட்டுக்குள்ளே இருந்து
தெருவில் நடப்பவனைப் பற்றிய
சித்திரங்களை உருவாக்கி வைத்திருந்தேன்.
கந்தல் துணியை நிரடியபடி நடந்தபோது
அவனுக்காக நான் பரிதாபப்பட்டிருந்தேன்
அக்குள் சொறிந்து முகர்ந்தபோது
அருவருப்படைந்திருந்தேன்
ஒன்றுமில்லாத வெளியைப் பார்த்துச் சிரித்தபோது
ஆச்சரியப்பட்டிருந்தேன்
இன்று இதோ அவன் வருகிறான்
இன்றைய சித்திரம்
அவன் என்னை எப்போதும்போல் பார்த்து
கடப்பதாக இருக்கிறது.

Share

ரகோத்தமனுடன் ஒருநாள்

ராஜிவ் காந்தி எத்தனை முறைதான் கொல்லப்படுவார் என்று நீங்கள் கேட்கலாம். நேற்று ரகோத்தமன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகிறேன். இவையெல்லாம் அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் இல்லை என்பதால் இதனை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக, கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் ரகோத்தமன் ஒரு விருந்து கொடுத்தார். அதில் அவராகச் சொன்னவையும், நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலாகச் சொன்னவையும்.

* சிவராசன் கைதாவதற்கு முன்பாக சிவராசனைப் போன்ற ஒருவரை சைதாப்பாட்டையில் கைது செய்தனர் போலிஸார். அவர் அப்போதுதான் திருமணம் ஆனவர், தேன் நிலவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர். அவரைப் பார்த்ததுமே ரகோத்தமன் சொல்லிவிட்டார், அவர் சிவராசன் இல்லை என. அவரும் ரகோதமனிடம், தான் சிவராசன் அல்ல என்று ஒரு கடிதம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்! அதற்கு ரகோத்தமன், ‘உங்கள் தேன் நிலவை தள்ளிப் போடுவது நல்லது. அல்லது நீங்கள் எங்கே போனாலும் உங்களை மக்களே அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தரும் கடித்தத்தையெல்லாம் ஒருவர் பார்க்கக்கூட மாட்டார், அதற்கு முன்பே அடி விழுந்துவிடும்’ என்றாராம். சிவராசன் இறந்த பின்பு, அந்த மனிதர் மீண்டும் ரகோத்தமனைச் சந்தித்து, ‘இப்ப நான் ஹனி மூன் போலாமா’ எனக் கேட்டாராம்.

* சிவராசன் தேடுதல் வேட்டை உச்சத்தில் இருந்தபோது, யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், ‘சார், இந்த மாதிரி இடத்துல சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருக்கிற மாதிரி இருக்கு’ என்று தகவல் கொடுத்துவிடுவார்களாம்.

* ஒரு பெண்மணி ஜோதிடம் மூலம் சிவராசனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஜோதிடத்தில் அவர் எங்கோ கடலோரத்தில் மறைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி உடனே, ‘சிவராசனை பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன்’ என்று புகார் தந்துவிட்டாராம். போலிஸ் இந்தப் பெண்மணியுடன் இரண்டு நாள்கள் சிவராசனைத் தேடி பெசண்ட் நகர் பீச்சில் சுற்றியிருக்கிறது. (அந்த பீச்சில் சுண்டல் கூட கிடைக்காதே என நினைத்துக்கொண்டேன்!)

* வழக்கு விசாரணையின் போது, நளினி குழந்தையைப் பெற்றெடுத்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் போலிஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ ஓரிடத்துக்குப் போக முயன்றிருக்கிறார். அவர் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்று அலெர்ட் ஆன போலிஸ் அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. ‘இத்தனை நாள் அமைதியாக இருக்கும் முருகன் ஏன் திடீரென்று வயலெண்ட் ஆகவேண்டும்’ என நினைத்த ரகோத்தமன் அதனை முருகனிடமே கேட்டிருக்கிறார். தன் குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டார்களா எனக் கேட்டிருக்கிறார் முருகன். அதற்குத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்ன ரகோத்தமன், குழந்தையைப் பார்க்க முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை கையில் வைத்திருந்த பாட்டி, குழந்தையிடம் ரகோத்தமனைச் சுட்டிக்காட்டி, ‘இங்க பாரு மாமா வந்திருக்காங்க’ என்றாராம். ரகோத்தமன் தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த முருகன் கண் கலங்கி ரகோத்தமன் காலிலேயே விழுந்துவிட்டாராம்.

* நளினியின் காதல் ராஜிவ் கொலையில் பிரசித்தம் என்றால், இன்னொரு காதலும் அங்கே பிரசித்தமாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆண்களும் பெண்களும் ஒரே போல் வரிசையில் உட்கார வைப்படுவார்களாம். ஒருவருடன் இன்னொரு பேச அனுமதியில்லை. அப்போது காதல் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் போல. ஆதிரைக்கு விக்னேஷ்வரனும் கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்களாம்.

* மல்லிகையில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்களுக்கு இரவில் தடபுடலாக விருந்து நடக்குமாம். கிட்டத்தட்ட நூறு பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். எல்லாருக்குமே ராயல் டிரீட்மெண்ட்தானாம். இதிலேயே பலருக்கு உடல் பருத்துவிட்டதாம்.

* சுபா சுந்தரம் கனத்த உடல் உடையவராம். அவரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு ஒரு கட்டிலும் நாற்காலியும் வழங்கப்பட்டிருந்ததாம்.

* ஒரு கான்ஸ்டபிள் ஒருநாள் எதையோ மறைத்து எடுத்து வந்து சுபா சுந்தரத்துக்குக் கொடுத்திருக்கிறார். உஷாரான போலிஸ் அதனைப் பார்த்ததில், அதில் அசைவ உணவு இருந்ததாம். அந்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சுபா சுந்தரம் தாந்தான் அதனைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அசைவம் இல்லாமல் தங்களால் சாப்பிடமுடியாது என்றும் சொன்னாராம். ‘இனிமேல் ஏதேனும் தேவையென்றால் என்னிடமே கேட்கலாம்’ என்று சொன்ன ரகோத்தமன் அன்றே அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்தாராம். வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.

* சுபா சுந்தரத்துடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயகுமார். அவர் கொடுத்த துப்பின் பேரில் கொடுங்கையூரில் இருந்த அவரது வீட்டிலிருந்து, சிவராசன் புதைத்து வைத்திருந்த பல பொருள்கள் தோண்டி கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த தடித்த ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி. அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். பிஸ்டலை அதில் வைத்துவிட்டு, அகராதியை மூடிவிட்டால் அது பார்க்க புத்தகம் போலவேதான் இருக்குமாம்.

* விசாரணையில் இருந்த அனைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் வழங்கப்பட்டதாம்.

* நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் திடீரென்று எழுந்து நின்று, தான் நீதிபதியின் அருகில் சென்று பேசவேண்டும் என்றாராம். அலெர்ட்டான காவல்துறை கொஞ்சம் யோசிக்க, ரகோத்தமன் அவரை முன்னே வருமாறு அழைத்தாராம். ரகோத்தமன் அருகில் வந்த அவர், தான் நீதிபதியிடம் அருகில் சென்று பேசவேண்டும் என்று மீண்டும் சொன்னாராம். இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், நீதிபதியின் அருகில் சென்று, இரண்டு கைகளையும் தூக்கி, ‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்றிருக்கிறார். எல்லாரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, ‘எனக்கு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்துனக்கப்புறம் என்னால நல்லா நடக்கமுடியாது, ஊன்றுகோலே வேண்டாம்’ என்றாராம். அப்போதுதான் ஒட்டுமொத்த நீதிமன்றமே அவர் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து வந்ததைக் கவனித்ததாம். அனைவரும் டென்ஷனிலிருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்தார்களாம்.

* வழக்கு விசாரணையின்போது முதல்கட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்திக். அவரது உதவியாளர் ஒரு பிராமணராம். சித்திக் நல்ல நேரம், ராகு காலம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராம். அவரது உதவியாளர் சித்திக்குக்காக ஜோதிடம் பார்த்து வந்தாராம். அதன்படி, சித்திக் இந்த வழக்கின் தீர்ப்பை எழுதமாட்டார் என்று சொன்னாராம். அதேபோல சித்திக்குக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகச் சென்றுவிட்டாராம். வேறொரு நீதிபதிதான் ராஜிவ் கொலை வழக்குக்கு தீர்ப்பு எழுதினாராம்!

* போலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் ரகோத்தமனிடம் தனக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை என்றாராம். இதுவரை அவர் அப்படி சொன்னதில்லையே என்று ரகோத்தமன் கேட்டதற்கு அவர், ‘இதுவரை காவலில் இருந்த போலிஸ் நல்லா தூங்கிடுவார், நானும் தூங்கிடுவேன். இப்ப இருக்கிறவர் தூங்காம என்னயே கவனிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ என்றாராம். அன்றே அந்த போலிஸை வெளியில் காவலிருக்கச் சொன்னாராம் ரகோத்தமன். மீண்டும் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தூக்கத்தைத் தொடர்ந்தாராம்.

* ராஜிவ் கொலை செய்யப்பட்ட மறுநாள் இரவு சிவராசன் தங்கியிருந்த வீட்டில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாயாசம் செய்வதற்கு அரிசி வெல்லம் எதுவுமே இல்லை. பக்கத்து வீட்டில் அரிசி வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் டிவியில் ராஜிவ் கொலை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, இவர்களும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்து உண்டிருக்கிறார்கள்!

இனி நான் கேட்ட சில கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் வருவோம்.

* சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியைச் சந்தித்தேன். ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி தன்னுடைய கருத்துகளைச் சொன்னார். (அவரது கருத்துகளைப் பற்றி அவர் நிச்சயம் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) அதில் முக்கியமானது: ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய ஆவணமான போட்டோ, ஹிந்து கையில் கிடைத்த பின்புதான் போலிஸுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி ரகோத்தமன் எழுதியிருக்கிறார். ஆனால், சிவராசன் விபி சிங் விழா ஒன்றில் செய்த ஆயத்தம் குறித்த வீடியோ எப்படி ரகோத்தமனுக்குக் கிடைத்தது என்பது பற்றி எழுதவில்லை. அதைக் கொடுத்து ஞாநி. அப்போது ஞாநி ஃப்ரண்ட் லைனில் இருந்தார். ஒரு பத்திரிகையின் தவறான செயல்பாட்டைச் சொல்லும்போது, அதே போன்ற இன்னொரு பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டைச் சொல்லவேண்டும். இதுதான் ஞாநியின் வாதமாக நான் புரிந்துகொண்டது. இதில் நிச்சயம் உண்மை உள்ளது. ராஜிவ் புத்தகத்தில் நல்லது செய்யும் ஒவ்வொரு போலிஸின் பெயரும் வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ரகோத்தமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர், ‘ஆமா, ஞாநி (அதாவது ஞாநி என்.ராமிடம் கொடுத்து, என். ராம் ரகோத்தமனிடம்)கொடுத்தார். யார் மூலமாகக் கொடுத்தால் என்ன, அதைப் பற்றி நிச்சயம் அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். ஜெனியுன் கொஸ்டின்’ என்றார்.

* அடுத்து நான் கேட்டது – ரகோத்தமன் காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம், அது வாழப்பாடியாக இருக்கட்டும், மரகதம் சந்திரசேகராக இருக்கட்டும், ஒருவித நல்ல பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மீது யூகம் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால் வைகோவை யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் – என்பது தொடர்பானது. இதை அடிப்படையிலேயே மறுத்தார் ரகோத்தமன். வைகோவின் ‘புலிகளின் குகை’ பேச்சை நீங்களெல்லாம் கேட்டிருந்தால் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல, நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது. நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்திருப்பேன் என்றார். அவரது கருத்து, அவரது புத்தகத்தில் உள்ளதுபோலவே, அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் சொன்னதுபோலவே, மிகவும் உறுதியாக இருந்தது.

* அடுத்த கேள்வி ஒன்றை பா.ராகவன் கேட்டார். ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்ததைப் பற்றிப் பேசும் நீங்கள், ஜெயலலிதாவின் கூட்டம் ரத்து செய்வதைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது தொடர்பானது. ‘இப்படி நிறையச் சொல்வாங்க. ஆனா உண்மையைத்தான் நாங்க பேசமுடியும். மரகதம் சந்திரசேகர் நடத்தும் கூட்டத்துக்கோ சிதம்பரம் நடத்தும் கூட்டத்துக்கோ ஜெயலலிதா வரவே விரும்பவில்லை. அவர் வருவதாகச் சொன்னது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு. அதுவும் முடிந்தால் வருவேன் என்பது போன்ற ஒன்று. திட்டமெல்லாம் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முதல்நாளே ராஜிவ் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அதைப் போன்றதல்ல’ என்றார்.

* நான் கேட்ட இன்னொரு கேள்வி – சிவராசனைப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரைப் பார்த்த கணத்தில் அவர் இல்லை என்று உங்களால் சொல்லிவிடமுடிந்தது. அதற்குக் காரணமாக நீங்கள் சொன்னது, சிவராசனது புகைப்படம் உங்கள் மனதில் ஊறிவிட்டது என்பது. ஆனால் அதேபோல் சின்ன சாந்தன் உண்மையாகவே கைது செய்யப்பட்டபோது, ராஜிவ் கொலைக்கு சில நிமிடங்கள் முன்பாக ராஜிவுக்கு மாலையிடும் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது. அதற்கு, ‘சின்ன சாந்தனைக் கைது செய்தது வேறொரு குழு. சின்ன சாந்தன் திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப, தான் வரதராஜ பெருமாளைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்லவும், அது குறித்த விசாரணை என்ற கோணத்தில் போய்விட்டது. மேலும் இப்போது உள்ளது போன்ற ரிலாக்ஸான நேரத்தில் யோசனை செய்வது போன்றதல்ல அப்போதுள்ள நிலை. எப்போதும் ஒரு ஸ்டிரஸ் இருக்கும். சின்ன சாந்தன் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் புகைப்படத்தில் உள்ளது தாந்தான் என்று சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட போலிஸ் என்னிடம் சொன்னது. அப்போதுதான் எனக்கே சட்டென பிடிபட்டது அந்தப் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று. இது நடந்தது ராஜிவ் கொலை நடந்து 12 வருடங்களுக்குப் பின்பு! அந்தப் புகைப்படத்தில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். அதே முகச்சாயலில் உள்ள நான்கைந்து பேரை விசாரித்தும் இருக்கிறேன்’ என்றார்.

இப்படி பல செய்திகளைச் சொன்னார் ரகோத்தமன். இதில் ஏதேனும் பெயர்ப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் இருக்குமானால், அது என்னுடையதே அன்றி ரகோத்தமனுடையது அல்ல. அவர் தேதி முதற்கொண்டு மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு அவரது ரத்தத்திலேயே கலந்துவிட்டது!

அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்!

Share