படிக்க வேண்டியவை

<< >>

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம்.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது. மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும்,

Share

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஆனால் யாருக்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவரை நினைத்துப் பாவமாக இருக்கிறது. இது போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் ஒரு பிடிவாதம் வேண்டும். தான் எடுக்கும் படங்கள் மீதான நம்பிக்கை வேண்டும். இரண்டுமே மணிகண்டனிடம் இருக்கிறது, அதற்காகப் பாராட்டுகள்.

கடைசி விவசாயி என்ற பெயர் ஒரு வகையில் இப்படத்துக்குத் தவறான பெயரோ என்று இப்போது யோசிக்கிறேன். குற்றமே தண்டனையில் ‘ஜி-ன்னு கேட்டாலே எரிச்சல் வருது’ என்றொரு வசனம் வரும். இது போன்ற புதிய அலை இயக்குநர்கள் (மணிகண்டன் புதிய அலையில் வருவாரா என்பது தனியே விவாதத்துக்குரியது) எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இந்திய – ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது வழக்கம் என்பது ஒரு பக்கம். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் விவசாயம் என்பதைத் அதீதப் புனிதமாக்கி, எங்கெல்லாம் திரைக்கதை எழுத முடியவில்லையோ அங்கெல்லாம் புனித விவசாயத்தைப் புகுத்தி, விவசாயம் என்றாலே பார்வையாளர்கள் ஓடிவிடும் அளவுக்கு ஆக்கி வைத்திருப்பது ஒரு பக்கம். இதனால்தான், இப்படத்தின் பெயர் கடைசி விவசாயி எனவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் மணிகண்டன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏன்? முதல் பாராவை வாசிக்கவும். அந்த நம்பிக்கையில் இப்படத்துக்குப் போனேன்.

முதல் 50 நிமிடம் ரொம்பவே சோதித்துவிட்டார் இயக்குநர். கதைக்குள் எடுத்த எடுப்பிலேயே வந்திருக்கலாம். ஆனால் என்னவெல்லாமோ காண்பித்துப் பாடாகப் படுத்திவிட்டார். அதிலும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படத்துடன் எங்கேயும் ஒட்டாமல் எப்படியோ அலைபாய்கின்றன. கேள்வியை எதாவது கேட்டுவிட்டு அதற்கு எதாவது ஒரு பதில் சொல்லி, அதைத் தத்துவ பன்ச் என்று நினைத்து அவர்களாக ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. வெளியே போய்விடலாமா என்று நினைக்கும்போதுதான் அந்த நீதிமன்றக் காட்சி ஆரம்பிக்கிறது.

அதற்குப் பிறகு படம் நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியை எங்கே எப்படி வைப்பது என்பதிலும் மணிகண்டனுக்குக் குழப்பம் போல. இழுஇழு என்று இழுத்து எப்படியோ முடித்து வைக்கிறார். நவீன விவசாயத்தின் மீதான அவநம்பிக்கை படத்தில் ஒவ்வொரு காட்சியில் தெரிந்தாலும், கதையின் மையம் அதுவல்ல என்பது என் எண்ணம். இன்னொரு கோணத்தில் கதையின் மையம் அதுவே என்று சிலர் சொல்லக் கூடும். இயற்கை விவசாயம் என்பதை யாரால் முடியுமோ அவர்கள் செய்துகொள்ளலாம். ஆனால் நவீன வேளாண்மை என்ற ஒன்று இல்லாவிட்டால், பூச்சி மருந்துகள் என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகம் முழுக்க ஊஊஊஊதான் என்பதை எல்லாரும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. என் பார்வையில் இப்படம் ஒட்டுமொத்த விவசாயமே கேள்விக்குறியாகிறது என்பதைப் பற்றியே பேசுகிறது என்றே நினைக்கிறேன். ஆனால், கடைசிக் காட்சியில் மயில் நடனமாட, மழையும் பெய்கிறது! அப்படியானால் மழைதான் பிரச்சினையா? ‘குற்றமே தண்டனை’யிலும் இதே போல் மணிகண்டனுக்குப் பிரச்சினைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது. ரொம்ப யோசித்துத் தத்துவச் சிக்கலுக்குள் மூழ்கும்போது திரைக்கதை எழுதுவாரோ? 🙂

படம் எப்போதெல்லாம் நம்மை சோதிக்கிறது என்றால், விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் வரும்போது! இந்த இரண்டு பேரும் ஏன் இந்தப் படத்துக்குத் தேவை என்பதே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சி மட்டுமன்றி, கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறேன் என்று, படத்தோடு ஒட்டமுடியாத, ஆனால் காட்சியாக நல்ல காட்சிகளும் பல உண்டு.

விவசாயியாக நடித்திருப்பவர் மட்டுமல்ல, பல நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். க்ளிஷேவாக அல்ல, நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களையே காட்சிக்கேற்றார் போல் வசனம் பேசச் சொல்லிவிட்டார் போல இயக்குநர். பல வசனங்கள் நாம் வீட்டில், தெருவில் பேசிக்கொள்வது போல அப்படியே வருகின்றன. திக்குவது, தவறாகச் சொல்லிப் பின்னர் சரியாகச் சொல்வது, எதாவது பேசுவது என எல்லாமே அப்படியே வருகின்றன. துல்லியமான மதுரைப் பேச்சு வழக்கில். இதில் சொதப்புவர்கள் யாரென்றால், பெயர் பெற்றுவிட்ட விஜய்சேதுபதி போன்றவர்கள்தான். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியெல்லாம், எத்தனை இயல்பாக இருக்கிறது என்றால், இப்படித் தமிழ்ப்படங்களில் பார்த்ததே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக இருக்கிறது. பெரிய சாதனை இது. இதற்காக மணிகண்டன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்.

நீதிபதியாக வரும் பெண்ணின் நடிப்பு மிக அருமை. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே பெரிய பலம்.

விஜய் சேதுபதி தான் இத்தனை நாள் நடித்த படங்களிலும் இனி நடிக்கப் போகும் படங்களிலும் ஹிந்து மதத்தைத் தாக்கியதற்காக ஒரு பெரிய பிராயசித்தமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் போல. தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஹிந்து மதச் சின்னங்கள்தான். ஆனால் பைத்தியம். எல்லாப் படங்களிலும் இவர் பேசுவது இப்படித்தான் இருக்கிறது என்பதால், நமக்கு இதில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை.

எழுத்து போடும் காட்சியில் ஒலிக்கும் டி எம் எஸ்ஸின் முருகன் பாடல் தொடங்கி இறுதிக் காட்சி வரை முருகன், பிள்ளையார், குலசாமி, அய்யனார் என பக்தி மயம்தான். படத்தின் முதல் சட்டகமே ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, பாட்டன் முருகனுக்கும் அவனது அடியார்களுக்கும்’ என்றெல்லாம் வந்தது. ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று கூட நினைத்தேன். இல்லை, உண்மையிலேயே பக்தியாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 🙂

சந்தோஷ் நாராயன் இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. இளையராஜா இசையமைத்த டிரைலர் இன்னும் காதில் ஒலிக்கிறது. நமக்குக் கொடுப்பினை இல்லை. வேறென்ன சொல்ல!

மணிகண்டனின் படங்கள் மெல்ல நகரும் என்பது தெரிந்ததுதான். இப்படம் மெல்ல ஆனால் நகரவே இல்லை என்பதுதான் பிரச்சினை. சில காட்சிகள் மிக இயற்கையாக இருக்கின்றன, சில காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து, திரைக்கதையில் கவனம் செலுத்தி, விஜய் சேதுபதி + யோகி பாபுவை மொத்தமாக நீக்கி இருந்தால், இப்போது மயிலின் அகவலாகத் தேங்கி இருக்கும் படம், மயிலின் நடனமாக . மணிகண்டன் தவறவிட்டுவிட்டார்.

இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, மணிகண்டன் யாரை நம்பி இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறார் என்பதுதான். ரசிகர்களை நம்பி என்று தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும். இன்று நான் தியேட்டரில் பார்த்தபோது 20 பேர் இருந்தால் அதிகம். நல்லவேளை, ஓ.டி.டி என்ற ஒன்று இருக்கிறது. அதில் வரும்போது இன்னும் சில லட்சம் பேர் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்? மணிகண்டன் யோசிக்கவேண்டும். மணிகண்டன் திறமையான இயக்குநர் என்பதில் ஐயமே இல்லை. அந்தத் திறமையைப் பறைசாற்றும் திரைப்படங்களை அவர் தரட்டும். அந்த முருகன் அவருக்கு பிழைக்கும் புத்தியைத் தரட்டும்.

பின்குறிப்பு: படத்தில் ஒரு கவித்துவமான காட்சி. யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். அந்த யானைக்கு கொசு வலை போட்டு உறங்க வைப்பார். அந்தக் காட்சியில் யோகி பாபுவின் உதவியாளர் படுத்திருக்கும் யானைக்குக் கால் அமுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார். ❤ எனக்கு மிகவும் பிடித்துப் போன காட்சி.

Share

ஹிஜாப்பும் காவித் துண்டும்

நீண்ட பதிவு, பொறுமையாகப் படிக்கவும். ஜெய் ஸ்ரீராம். 🙂

பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாகியது. கிடைத்தது வாய்ப்பென்று தமிழ் எழுத்தாள முற்போக்காளர்கள் இத்தனை நாள் திரைமறைவில் இருந்தது போதும் என்று உடனே தங்கள் கொந்தளிப்புகளை, ஹிந்துத்துவ அரசியல் தரும் அபாயங்களை எல்லாம் பட்டியலிடத் தொடங்கிவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி இவர்கள் ஒரு மூச்சு கூட விடவில்லை. ஆனால் கர்நாடகாவில் ஒரு பள்ளியில் பிரச்சினை என்றவுடன் கம்ப்யூட்டரில் தட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இவர்கள் போதாதென்று, அரைகுறை ஹிந்துக்களாக ஃபேஸ்புக்கில் வலம் வந்து சரியான நேரத்தில் தவறான கருத்தைச் சொல்லி உயிரெடுக்கும் அரை மண்டையர்கள் இன்னொரு புறம். இவர்கள் பல விதங்களில் பேசுகிறார்கள். முதல் விஷயம், வீடியோவைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் தைரியத்தைப் போற்றுகிறேன் என்பது. இதில் இருப்பது தைரியம் அல்ல, அசட்டுத் தைரியம். இன்னும் சொல்லப் போனால் தேவையற்ற பல அபாயங்களை இந்திய அளவில் உருவாக்கி இருக்கக் கூடிய அனாவசியமான தைரியம். உண்மையில், அந்த நேரத்தில் கும்பல்-மனப்பான்மைக்குள் போகாமல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று குரல் எழுப்பிவிட்டு அமைதியாக அந்தப் பெண்ணைப் போக விட்ட மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இரண்டாம் விதம், மாணவர்கள் காவிக்கொடி ஏற்றியது தொடர்பானது. வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது, ஒரு மாணவன் தன் கையில் இருக்கும் காவி கொடியைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில் ஏற்றுகிறான். அந்தக் காட்சியைப் பார்த்ததும், அடுத்தடுத்து சில செய்திகள் உடனே பரபரப்பபட்டன. அங்கே பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியைக் கழற்றிவிட்டு மாணவர்கள் காவிக் கொடி ஏற்றினார்கள் என. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவர்களைத் தேசத் துரோகிகள் என்றே அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்து, ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன். ஒன்றிலும் தேசியக் கொடி கண்ணில் படவே இல்லை. எந்த மாணவன் கையிலும் தேசியக் கொடி இல்லை. ஆனால் இந்தியா டுடே உள்ளிட்ட தளங்கள் தெளிவாக இதே கருத்தைப் பரப்பின. டிவி9 கன்னடச் செய்திச் சேனலில் ஒருவர் பொறிபறக்கப் பேசினார், தேசியக் கொடியைக் கழற்றிய இந்த மாணவர்கள் தேசத் துரோகிகள் என. அதாவது, தேசியக் கொடி கழற்றப்பட்டதாக இவர் முடிவுக்கே வந்துவிட்டார். (ஒரு ஆறுதல், இவர் எந்தத் தரப்பையும் எடுக்காமல் இரண்டு தரப்பையும் திட்டினார்!) ஆனால் ஏஸியாநெட் ஸ்வர்ணா செய்திச் சானல் தெளிவாகச் சொன்னது, அங்கே தேசியக் கொடி இல்லவே இல்லை என. (இப்போதும் சொல்கிறேன், நாளையே மாணவர்கள் தேசியக் கொடியைக் கழற்றிவிட்டி காவிக் கொடியை ஏற்றிய வீடியோ வெளியானால், சந்தேகமே இன்று இந்த மாணவர்கள் தேசத் துரோகிகளே.)

அங்கே தேசியக் கொடி இல்லை என்பதுவே உண்மை என்று தெரிந்துகொண்ட நம் திடீர் உணர்ச்சிப் போராளி ஹிந்துக்கள் என்ன சொல்லி இருக்கவேண்டும்? வழக்கம்போல ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதானே? அவர்கள் இன்னொரு உளறலை ஆரம்பித்தார்கள். அதாவது அந்தக் கம்பம் தேசியக் கொடி ஏற்றிட வைக்கப்பட்டிருந்த கம்பமாம். அதில் காவிக் கொடி ஏற்றியது தவறாம். இவர்களை எல்லாம் என்ன சொல்ல? தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றி இருந்தால் மட்டுமே அது தவறு. வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில், தேசியக் கொடிக்கான கம்பமாக இருந்தாலுமே, அதில் காவிக்கொடி ஏற்றுவதில் தவறே இல்லை. அதுவும் இது போன்ற ஒரு கும்பல்-மனப்பான்மையிலும் கூட, மாணவர்கள் தங்கள் மூளையை அடகுவைக்காமல் நடந்துகொண்டிருக்கிறார்கள். காவிக் கொடி என்பது இந்திய ஆன்மாவின் கொடி. காவிக் கொடி இந்திய ஒருமைப்பாட்டுக்கான கொடி. இங்கே காவிக் கொடி ஏற்றப்பட்டது கூட, ஹிஜாப் அணிந்து வந்து பிரச்சினையை சில மாணவர்கள் துவக்கி அதன் எதிர்வினையாகத்தான் ஏற்றப்பட்டதே ஒழிய, ஹிந்து மாணவர்கள் போராட்டத்தைக் காவிக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கவில்லை. எவ்விதப் பிரச்சினையும் இல்லாத சமயத்தில் தேவையே இல்லாமல் மாணவர்கள் காவிக் கொடி ஏற்றி இருந்தால், அதுதான் அராஜகம், அநியாயம். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. ஒரு தூண்டல் இருந்திருக்கிறது, தொடர்ந்து மாணவர்கள் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

அடுத்து பெண்ணிய கோஷ்டிகள். இத்தனை நாள் பெண்ணியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், செலக்டிவ் அம்னீஷியாவால் பீடிக்கப்பட்டு, ஹிஜாப் அணிவது பெண்ணின் உரிமை என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படித் தலைகீழ் மாற்றம் கொள்ள இவர்கள் என்றுமே வெட்கப்பட்டதில்லை. ஹிஜாப்பும் சரி, பர்காவும் சரி, நிச்சயம் பெண்ணிய சுதந்திரத்துக்கு எதிரானதுதான். ஆனால் ஒரு முஸ்லிம் பெண் அதை விரும்பி அணிந்தால் அது அவளது சுதந்திரம். இதில் மாற்றமே இல்லை. நாம் போய் அந்த பர்காவை நீக்கு என்று சொல்லும் சுதந்திரம் யாருக்கும் இல்லை, அது பள்ளியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில். பள்ளியில் இந்த சுதந்திரம் கிடையாது. பள்ளியில் பள்ளி சொல்லும் சீருடையில் வரவேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை. இதே பெண் முஸ்கான் 2021ல் பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு வருவேன் என்று பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்தும் இட்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. இதே பெண், மற்ற பொதுவிடங்களில் ஹிஜாப் இல்லாமல் வந்திருக்கிறார் என்று புகைப்படங்களும் பகிரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பெண்ணும் பர்கா அணிந்து பள்ளிக்கு வந்த மாணவியும் ஒருவரேதானா என்று என்னால் உறுதி செய்ய முடியாததால் அதைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒருவேளை இரண்டு பெண்களும் ஒருவரே என்றால், பள்ளிக்கு மட்டும் பர்கா அணிந்து ஏன் வரவேண்டும் என்கிற பதில் சொல்ல முடியாத கேள்வி எழவே செய்யும்.

பர்கா அணிவதும் ஹிஜாப் அணிவதும் முஸ்லிம் பெண்களின் உரிமை என்று பொதுவாகச் சொல்லி, வழக்கம் போல இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். ஒரு ஹிந்துக் கல்யாணம் நடக்கிறது, அங்கே ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வந்தால், அதைத் தடுத்தால், அது அராஜகம் என்று சொல்வதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒரு பள்ளிக்கு ஒரு பெண் வரும்போது பள்ளி சொன்ன சீருடையில் வரவேண்டியது முக்கியம். பள்ளி சொன்ன சீருடையில் வராமல் இருப்பதும், உள்நோக்கத்துடன் பிரச்சினையை உருவாக்கும் பொருட்டு திடீரென்று சில மாணவர்கள் மட்டும் வேண்டுமென்றே வேறு ஒரு உடையில் வருவதும் தவறுதான்.

இப்படி யோசிப்போம். தமிழ்நாட்டில் ஒரு தனியார் ஹிந்துப் பள்ளியில் ஒரு பிராமணப் பையன் (அல்லது தனிப்பட்ட உடை அணியும் எதோ ஒரு சாதியைச் சேர்ந்த பையன்), பள்ளிச் சீருடையில் வரமாட்டேன், பஞ்ச கச்சை அணிந்து, பூணூல் வெளியே தெரிய, உத்தரியம் மட்டும் அணிந்து வருவேன் என்று சொன்னால், ஏற்பீர்களா? கொஞ்சமாவது மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள். இன்று ஃபேஸ்புக்கில் உளறித் திரியும் ஹிந்துக்கள்தான் முதலில் யோசிக்கவேண்டியவர்கள். இன்று பெண்ணின் உடை அவளது உரிமை என்று பேசும் எந்த முற்போக்கு எழுத்தாளர்களும் பிராமணச் சிறுவனின் உடைக்கு ஆதரவாக வாயைத் திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அப்படி உன் உடை முக்கியம் என்றால் மணியாட்டப் போ வாய் கூசாமல் சொல்வார்கள். தமிழ்நாட்டில் கூட இது நடந்திருக்கவேண்டாம், இந்தியாவில் எங்கு நடந்தாலும் இதையே இவர்கள் சொல்வார்கள். இதே விஷயம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு என்று வரவும், அவள் உடை அவள் உரிமை என்று பேசத் துணிந்துவிட்டார்கள். இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் ஃபேஸ்புக் திடீர் ஹிந்துகள் உணர்ச்சிவசப்பட்டு உளறித் திரிகிறார்கள்.

ஒரு பிராமணப் பையன் இப்படி ஒரு உடையுடன் பள்ளிக்கு வந்தால் என் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ‘உன் உடை உன் உரிமை என்றால், அதற்கேற்ற பள்ளிக்குப் போ, உடன் படிக்கும் மாணவர்களின் சூழலைப் பாழாக்காதே. இதே பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்றால், அப்பள்ளி சொல்லும் சீருடையை ஏற்றுக்கொள்ளவேண்டியது உன் கடமை. பள்ளி முடிந்து பொது வாழ்க்கை வந்ததும், உன் இஷ்டம் போல் இரு. பள்ளியில் மதச் சின்னங்களை அணிந்து கொள்ள உனக்கு உரிமை உண்டு, ஆனால் சீருடைக்குப் பங்கம் வரக்கூடாது.’

ஒரு அரசுப் பள்ளியில் பெரும்பான்மை ஹிந்து மாணவன் மட்டும் சீருடையில் வரவேண்டும், ஆனால் சிறும்பான்மையினர் அவரவர்கள் மத உடையில் வரலாம் என்றால், அதை மாற்றுவதற்கு இந்தப் பிரச்சினை ஒரு தொடக்கமாக இருந்தால், அது நல்லதுதான். இதனால்தான் சில ஹிந்து இயக்கங்கள் தங்கள் நிறுவனங்களை சமயத்தின் அடிப்படையில் சிறுபான்மை என்றே அழைக்கவேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று வாய் கிழியப் பேசும் முற்போக்கு வாய்ச்சவடால்காரர்களின் இன்னொரு அசிங்கமான பக்கத்தையும் பார்ப்போம். பள்ளியில் அல்ல, பொதுவெளியில் பிராமணர்கள் பூணூலுடன் போவதை எல்லாம் எத்தனை அசிங்கமாக எழுதி இருக்கிறார்கள்? உன் உடலை செக்ஸியாகக் காட்டுகிறாயா என்று கேட்டு நக்கலாக எழுதிய முற்போக்காளர்களை எனக்குத் தெரியும். குடுமியைக் கிண்டலாக எழுதி, மணியாட்டிப் பிழைக்கிறான் என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும். இதைவிடக் கொடுமை, பூணூல் அறுக்கும் போராட்டமும், பன்றிக்குப் பூணூல் அணிவிக்கும் போராட்டமும் இதே மண்ணில் நடந்திருக்கிறது. அன்றெல்லாம் இதே முற்போக்காளர்கள் வாயே திறக்கவில்லை. திக, திமுக சம்பந்தட்ட எந்த ஒன்றையும் இவர்கள் மறந்தும் கண்டித்துவிடமாட்டார்கள். ஏன்? பிழைப்பரசியல். வாய்ப்பரசியல். இந்த பிழைப்பரசியல்காரர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் மற்ற மதத்துக்காரர்களின் உண்மையான உரிமைக்காகப் பேசவில்லை, ஹிந்துக்களுக்கு எதிரான ஒன்று என்பதால் மட்டுமே பேசுகிறார்கள் என்று.

உடுப்பிப் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஹிந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்திருக்கிறார்கள். ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று சொல்லி இருந்தால் இந்தப் பிரச்சினை இங்கே முடிந்திருக்கும். அல்லது, காவித் துண்டு அணிந்து வரலாம் என்று சொல்லி இருந்தாலாவது, அநியாயத்துக்குள் ஒரு நியாயம் இருந்திருக்கும். இரண்டும் இல்லை. ஹிஜாப் அணிந்து வரலாம், ஆனால் காவித் துண்டு கண்ணை உறுத்துகிறது என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒரு வரியில் இருக்கிறது, யாராக இருந்தாலும், நாளை ஹிந்துக்களே எங்கள் மத உடையில் வருவோம் என்று சொன்னாலும், அதெல்லாம் முடியாது, ஒழுங்காகப் பள்ளிச் சீருடையில் வா என்று சொல்வதுதான் அந்தத் தீர்வு. இல்லை என்றால், இப்படிப் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. இன்று தீர்ப்பு வரலாமோ என்னமோ. எப்படியும் பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவித் துண்டு அணிவதற்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லாமல் தீர்ப்பு வேறு மாதிரி இருக்குமானால், கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் வரை இப்பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும். பெரும்பான்மை மாணவர்களுக்கு மட்டும் எதிராக இருக்கும் சட்டத்தை மாற்ற இந்த பாஜக அரசு முயலவேண்டும். இதற்குள், இந்திய எதிர்ப்பாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்குக் கெட்ட பெயர் வராமல் இருப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.

Share

சில கன்னடத் திரைப்படங்களும் மலையாளத் திரைப்படங்களும்

சர்க்காரி ஹிரிய ப்ரதமிகெ ஷாலே, காஸர்கோடு – கொடுகெ: ராமண்ணா ராய் – படத்தின் பெயர் இது. தோராயமாக மொழிபெயர்த்தால்: அரசு உயர்நிலைப்பள்ளி, காஸர்கோடு – உபயம்: ராமண்ணா ராய் என்று சொல்லலாம். இது என்ன என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடங்கள் ஆகியது. ஒரு திரைப்படம் வந்துவிட்டால் அது தொடர்பான வார்த்தைக்கு கூகிளில் பொருள் கண்டுபிடிப்பது என்பது மலையைப் புரட்டி எலியைப் பிடிப்பது போலத்தான். ஹிரிய ப்ரதமிகெ ஷாலே என்றால் நடுநிலைப்பள்ளியா உயர்நிலைப்பள்ளியா என்று இன்னும் பிடிபடவில்லை. கன்னடம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ராமண்ணா ராய் என்பவர் காஸர்கோட்டில் இருந்து 80களில் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொழிவாரி பிரிக்கப்படும்போது 1956ல் காஸர்கோடு கேரளாவுடன் இணைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர் என்று தெரிகிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை என்றால் நம்ம ஊர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் வகையல்ல. இது ஒரு மென் நகைச்சுவைத் திரைப்படம். கூடவே, சிறுவர்களுக்கான படம் என்றும் சொல்லலாம். காஸர்கோட்டின் கர்நாடக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் கன்னடம்வழி கற்பிக்கும் பள்ளி கேரள அரசின் கீழ் உள்ளது. ஐம்பது பேர் மட்டுமே படிக்கும் இப்பள்ளிக்கு மலையாளியான கணக்கு வாத்தியாரை அரசு அனுப்புகிறது. இவருக்கு கன்னடம் தெரியாது. மலையாளத்தில் கணிதம் சொல்லித் தருகிறார். இங்கிருக்கும் கன்னடர்கள் அதை எதிர்க்க, அந்த மலையாளி ஆசிரியர் பயந்து ஓடிப் போகிறார். இனியும் இப்பள்ளியை நடத்துவது தேவையற்றது என்று ஊழல்வாதியான கேரளக் கல்வி அதிகாரி முடிவெடுக்கிறார். ஆனால் பள்ளி தலைமையாசிரியரான மலையாள நம்பூதிரியோ கன்னடப் பள்ளியும் அதில் படிக்கும் கன்னட மாணவர்களும் பாவம் என்று தன்னால் முடிந்த அளவுக்குப் போராடுகிறார். மாணவர்கள் போராடி, மைசூரிலிருந்து ஒருவரை அழைத்து வந்து அவரை வைத்துச் சட்டப் போராட்டம் நடத்தி எப்படிப் பள்ளியை மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

இந்த அளவுக்கு சீரியஸ் கதையை இத்தனை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருப்பது ஆச்சரியம். எப்போதும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் தவழ்ந்தபடி இருக்கிறது. சில காட்சிகள் நல்ல நகைச்சுவை. சில கொஞ்சம் டல். ஒவ்வொரு நடிகரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். (கன்னட வெறியராக வரும் ப்ரமோத் ஷெட்டி தவிர!) பள்ளி மூடப்பட்டு அங்கே படிக்கும் ஏழை மாணவர்கள் தத்தம் தொழிலுக்குப் போகும் காட்சியைக் கூட உணர்ச்சிவசப்பட வைக்காமல் மிகவும் ஜாலியாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும் நமக்கு மட்டுமே அம்மாணவர்களின் எதிர்காலம் குறித்த வருத்தம் வருகிறது. அத்தனை தெளிவாகத் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

அழகி திரைப்படத்தில் பள்ளி சார்ந்த காட்சிகளை நாம் திரையில் பார்த்தபோது எப்படிச் சில்லரையை சிதற விட்டோமோ அப்படி படம் முழுக்கக் காட்சிகள் இருக்கின்றன. நம்மை பழங்காலத்துக்குக் கொண்டு போகும் காட்சிகள். காஸர்கோட்டில் மலையாளம் கலந்து கன்னடம் பேசும் சிறுவர்கள், மம்மூட்டி மோகன்லாலைக் கொண்டாடும் கன்னடச் சிறுவர்கள் என்று இயல்பாக நகர்கிறது படம்.

2001ல் துபாயில் நான் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் சூத்ரதாரன். அப்போது எனக்கு மலையாளம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. தியேட்டரில் பாண்டவபுர காட்சிகள் வந்தபோது அதில் சிலர் கன்னடம் பேச, ஆஹா நமக்குப் புரிந்த ஒரு மொழி என்ற ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. அதேபோல் இத்திரைப்படத்தில் பல இடங்களில் மலையாளம் பேசப்படுகிறது. காஸர்கோட்டில் இத்திரைப்படம் ஓரளவுக்கு ஓடி இருக்கிறது. இப்படம் 2018ல் வெளி வந்திருக்கிறது. 2020ல் கூட காஸர்கோட்டில் ஒரு கன்னட மீடியம் பள்ளியில் மலையாள கணக்கு ஆசிரியை நியமிக்கப்பட்டு பிரச்சினை ஆகி இருக்கிறது. அதாவது இன்று வரை இப்பிரச்சினை இன்னும் அங்கே இருக்கிறது.

பள்ளியை மாணவர்கள் ஆனந்த்நாக் மூலம் மீட்பதெல்லாம் கொஞ்சம் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளே. ஆனால் தாய்மொழியில் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லி புல்லரிக்க வைத்துவிட்டார்கள். பதினைந்து வயதில் ஒரு பையனுக்கும் உடன் படிக்கும் ஒரு மாணவிக்கும் வரும் எதிர்பாலினக் குறுகுறுப்பைப் படம் முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், எல்லை தாண்டாமல்.

கன்னட நகைச்சுவைப் படங்கள், மற்ற கன்னடப் படங்களைப் போலவே, பார்க்கவே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் இத்திரைப்படம் நல்ல ஃபீல் குட் முவீயாக வந்திருக்கிறது. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ஆன்லைனில் எம் எக்ஸ் ப்ளேயரில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதே பிரச்சினையை அப்படியே தமிழுக்கு மையப்படுத்திக் கொண்டு வந்தால், புல்லரிக்க வைக்கும் தமிழ்வழிக் கல்வி தொடர்பான ஒரு உருப்படியான படத்தைக் கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது இத்திரைப்படம்.

*

பாப்கார்ன் மன்க்கி டைகர் என்றொரு படம். தனஞ்செய் நடித்தது. ரத்னன் ப்ரபஞ்ச பார்த்துப் பிடித்துப் போய் தனஞ்செய்யின் இந்தப் படத்தைப் பார்த்தேன். கன்னடத்தின் சிறந்த நவீன படமாக நான் நினைப்பது, உலிதவரு கண்டெந்தெ. (தமிழில் ரிச்சி!) ரக்‌ஷித் ஷெட்டி இயக்கி நடித்தது. சமீபத்தில் கருட கமனா வ்ருஷப வாகனா என்றொரு படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்தது. ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்து இதற்கு டிக்கெட் வாங்கப் போகும்போது, எதோ ஜெர்க்காகிப் பார்த்தால், இது ராஜ் ஷெட்டியின் படம். பின் எப்படி ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்தேன்? பின்னர் நினைவுக்கு வந்தது, இப்படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி தன் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ராஜ் பி ஷெட்டியின் படம் என்று தெரிந்ததும் டிக்கெட் வாங்கவில்லை. இவரது படமான ஒரு மொட்டயின் கதா-வை ஆஹா ஓஹோ என்று பலர் கொண்டாடினாலும் எனக்குப் பிடிக்கவில்லை. ராஜ் ஷெட்டியின் படங்களில் எனக்கு உறுத்துவது எதோ ஒரு தேக்கம். ஆனால் கருட கமனா அப்படி இல்லை. படம் நன்றாகவே இருந்தது. எல்லாரும் ராஜ் பி ஷெட்டியைப் புகழ, அவரை விட எனக்கு ரிஷப் செட்டியின் நடிப்பு பிடித்துப் போனது. வழக்கமான கன்னடப் படம் போலல்லாமல் நவீன மலையாளத் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, சில காட்சிகளில் அதையும் தாண்டி நன்றாகவே இருந்தது கருட கமனா. தமிழ்ப் படங்களின் மேக்கிங் தரத்துடன்! ஆனாலும் உலிதவரு கண்டெந்தே இதைவிடப் பல மடங்கு நல்ல படம்.

இப்படி ஒரு பின்னணியில் பாப்கார்ன் மன்க்கி டைகர் பார்த்தேன் – என்ன சொல்ல! உலிதவரு கண்டெந்தெ போல மிகச் சிறப்பான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், சந்தேகமே இல்லாமல் மிக வித்தியாசமான படம். முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை ரத்தம், வன்முறை, கொலைதான். ரிவர்ஸ் க்ரொனாலஜிகல் முறையில் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூகிள் சொல்கிறது. படம் முழுக்க அப்படி இல்லை. ஆனால் நிறைய காட்சிகள் அப்படித்தான். படம் முடிந்தாலும் கூட, இத்தனை நேரம் என்ன பார்த்தோம், ஏன் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் புரிவதே இல்லை. அல்லது எதோ ஒரு குழப்பம். பின்பு நீண்ட நேரம் யோசித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. படம் வெளிவந்தபோது (2020) தியேட்டரில் கதறிக்கொண்டேதான் பலர் போயிருக்கிறார்கள். விஸ்வரூபம் பலருக்குப் புரியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படம் அதைப் போல பத்து மடங்கு புரியாது. படம் பார்த்துவிட்டு யூ ட்யூப்பில் பல வீடியோக்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து, நான் நினைத்தது சரியா என்று உறுதிப்படுத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே பலருக்குப் புரியாத படமாகவும், சிலருக்கு மிகவும் முக்கியமான படமாகவும் ஆகிவிட்டிருக்கிறது இத்திரைப்படம்.

இப்படி புதிர் போன்ற ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், மூளைக்கு வேலை வைக்கும் திரைப்படத்தைப் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் தவறவிடக் கூடாத படம் இது. இப்படத்தில் வரும், குழந்தை காணாமல் போகும் தொடர் காட்சிகள் பதற வைக்கும் சோகக் கவிதை என்றே சொல்லவேண்டும். இடைவேளையின் போது அக்குழந்தை அழுதுகொண்டிருக்கும் அந்தச் சட்டகம் என்றும் மறக்கமுடியாத ஒன்று. அதே போல் டைகர் சீனு கதாபாத்திரத்துடன் இணையும் நான்கு பெண் பாத்திரமும் மிகவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மனைவியின் கதாபாத்திரம் மிக அருமை.

நேரம் இருப்பவர்கள், பொறுமை இருந்தால் மட்டும், இப்படத்தைப் பாருங்கள். நான் ஸீ5ல் பார்த்தேன்.

*

ரத்னன் ப்ரபஞ்ச (க)

முன்பின் தெரியாத ஒரு திரைப்படத்தை ஏன் பார்க்கிறோம் என்பதே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். நேற்றிரவு தூக்கம் வராத நேரத்தில் பார்த்த கன்னடத் திரைப்படம் ரத்னன் ப்ரபஞ்ச. (ரத்னனின் உலகம்) இதன் டிரைலர் தற்செயலாகக் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வசவுச் சொற்கள். போளி மகனே, திக்கா முச்கொண்டிருத்தீரா, முள்ஹந்திமுண்டேகண்டி என்றெல்லாம் காதில் விழவும், ஆர்வமாகப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். போளி மகனே டப்பிங்கில் தட்டி மகனே ஆகிவிட்டது. திக்கா வரவே இல்லை. ஆனாலும் படத்தை முழுக்கப் பார்த்தேன்.

திணிக்கப்பட்ட கதை. ஹீரோவின் அம்மாவின் அதீத நடிப்பு. இதைப் பொறுத்துக்கொண்டால், கன்னடம் கொஞ்சமேனும் தெரியும் என்றால், முழுக்கப் பார்த்துவிடலாம். காஷ்மீரில் நடக்கும் காட்சிகளில், கதாநாயகியின் அம்மா என ஒரு transgenderஐ அறிமுகப்படுத்த, அந்த 2 நிமிடக் காட்சிகள் இனிமை.

அதைத் தொடர்ந்து வரும் உத்ர கர்நாடகக் காட்சிகள் இத்தனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நல்லவேளை, தவறவிடாமல் பார்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நன்றாக இருந்தது. குறிப்பாக உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்கு. உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்குக்காகவே பற்பல வீடியோக்களை தேடி தேடிப் பார்த்திருக்கிறேன். இப்படத்திலும் என்ன அழகு! ஹீரோவின் தம்பியாக வரும் நடிகரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. ஹீரோ தனஞ்சயாவின் நடிப்பும் அருமை.

இறுதிக் காட்சிகளில் நெஞ்சை நக்க வைத்து, வளர்ப்புத் தாயை நினைத்து மகன் ஏங்குவதோடு சுபமாக முடித்து வைக்கிறார்கள். பெற்றால் மட்டுமே அம்மா அல்ல என்பதை மூன்று பகுதிகளாக ஆழ உழுதிருக்கிறார்கள்.

உத்ர கர்நாடகக் காட்சிகளுக்காகவும், படம் முழுக்க உடன் வரும் சொக்க வைக்கும் ஒளிப்பதிவுக்காகவும், நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். பிராமணப் பையனின் அக்கா முஸ்லீமாக இருந்தும் எவ்வித மதப் பிரச்சினைகள், வம்புகளுக்குள் போகாமல், அது அதை அப்படியே காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவலுக்காக.

*

நீண்ட நாள்கள் கழித்து இரண்டு மலையாளப் படங்கள் பார்த்தேன். கடந்த 8 மாதங்களில் நான் இன்னும் பார்க்காத பல தமிழ்ப்படங்கள் அப்படியே இருக்கின்றன. என்னவோ ஒரு மனவிலகல். இப்போது பார்த்த இரண்டு மலையாளப் படங்கள் பீமண்டெ வழி மற்றும் மின்னல் முரளி.

பீமண்டெ வழி – வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கும் மலையாளப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டே பார்க்க ஆரம்பித்தேன். படம் சுமார். அரை மணி நேரத்தில் எடுத்து முடித்திருக்கவேண்டியதை இழு இழு என்று இழுத்து, ஒரு வழியாய் முடித்து வைத்தார்கள். ஜினு ஜோசப்பின் நடிப்பு மிரட்டல்! கடைசி காட்சியில் ஜினு ஜோசப்பை அந்த குண்டுப் பெண் தூக்கி அடிக்கும் காட்சியில் வாய் விட்டுச் சிரித்தேன். மற்றபடி சிரிக்க ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

மின்னல் முரளி – ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் மிரட்டல். சூப்பர் மேன் படங்கள் வந்து குவிந்து விட்டிருக்க, அதே பாணியில் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பாகவும் அட்டகாசமான திரைக்கதையுடனும் எடுக்கவேண்டுமென்றால், அது எத்தனை கஷ்டம்? ஆனால் இதை மிக எளிதாகத் தாண்டி இருக்கிறார்கள். குரு சோம சுந்தரத்தின் நடிப்பு அற்புதம். தமிழனைக் கொன்று மலையாளி கடவுள் ஆகிறான் என்றெல்லாம் யாரும் வரப்புத் தகராறுக்குப் போகாமல் இருந்ததன் காரணம், கள படத்தில் தமிழன் மலையாளியை ஓட ஓட விரட்டி அடித்தாலோ என்னவோ. டொவினோ தாமஸ் எத்தனை நடித்தாலும் எனக்கு ஏனோ ஓட்டவே ஒட்டாது. ஆனால் மின்னல் முரளியில் கலக்கிவிட்டார். தவறவிடக் கூடாத படம் இது.

Share

மணிக்கொடி சினிமா – புத்தகம்

மணிக்கொடி சினிமா | Buy Tamil & English Books Online | CommonFolks
மணிக்கொடி சினிமா, பதிகம் பதிப்பகம், கடற்கரய், விலை ரூ 125, போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 9445901234

மணிக்கொடி சினிமா – ஆய்வுப் புத்தகமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமான புத்தகம். கடற்கரய்-யின் நீண்ட கட்டுரையும், அது தொடர்பான மணிக்கொடி காலத்து திரைப்படக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1935களின் சினிமாவுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இன்றுவரை நாம் அதையேதான் செய்துகொண்டிருக்கிறோம்.

மனத்தைக் கவர்ந்தவை இரண்டு முக்கிய விஷயங்கள். 1935களில் எழுதப்பட்ட விமர்சனங்களின் நடை இன்றும் மிக இலகுவாகப் படிக்கும்படி இருக்கிறது. அந்தக் காலத்துக்கே உரிய சில வார்த்தைப் பயன்பாடுகளைத் தாண்டி எவ்வித நெருடலும் இல்லாமல் வாசிக்க முடிகிறது. அதிலும் கலாரஸிகன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனம் நேற்று எழுதியது போல் இருக்கிறது. சஞ்சயன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனங்களில் சில அந்தக்கால பிரத்யேக வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது. அன்றும் இன்றைப் போலவே தமிழ் சினிமாவைத் திட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.

“இதுவரையில் நாம் கண்ட தமிழ்ப்படங்களில் ஏதாவது ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ஏதோ தனித்தனியாக நான்கைந்து கதைகள் பார்த்ததாகத் தோன்றும்.”

“இதுவரையில் ஹாஸ்யப் படம் என்றால் ஆபாசம் நிறைந்த கதைகள், விரசமான சம்பாஷணைகள்தான் என்று என்னும்படி இருந்தது.” (அம்மாஞ்சி பட விமர்சனம்.)

“முதல்முதலில் தமிழ்ப் பேசும்படம் ஆரம்பித்தபோதே, நமது வேத காலத்தில் ஆரம்பிக்கவில்லையென்றாலும், புராண இதிகாஸ காலங்களிலேயிருந்து ஆரம்பித்தது.” 🙂

இப்படி சில நறுக்குத் தெறிப்புகள். அதுவும் 1935களில்! நூறு வருடமாக ஒரே வட்டத்துக்குள்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் போல.

அச்சுத கன்யா-வின் கதை கொஞ்சம் ஆச்சரியம். பறையர் பெண்ணை ஒரு பிராமணன் காதலிக்கும் கதை. இருவரும் திருமணம் செய்துகொண்டு புரட்சி எல்லாம் நடக்கவில்லை என்றாலும், 90 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. எந்த மொழி என்று தெரியவில்லை. இந்த நூலின் பெரிய குறை, எந்தப் படம் தமிழ்ப்படம் எந்தப் படம் வேற்று மொழிப் படம் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இயக்குநர், நடிகர்களின் பெயரை வைத்தே யூகிக்க வேண்டி இருக்கிறது.

கோடீஸ்வரன் என்ற (தமிழ்ப்படமா என்று தெரியவில்லை) ஒரு திரைப்படத்தின் கதை, திடீரென ஒரு பெண் நடிகையாக, அவளை காதலிக்கும் ஒருத்தன் குதிரை ரேஸில் ஜெயித்துப் பெரிய பணக்காரனாகி அவளைக் கை பிடிக்கப் போகும் நேரத்தில், ஹீரோவின் அம்மா அந்த நடிகையிடம் தற்செயலாகச் சொல்கிறாள், தன் பையனை ஒரு நடிகைக்கு எந்நாளும் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன், குடும்பப் பெண்ணுக்குத்தான் கட்டி வைப்பேன் என்று. மனம் உடைந்து போகும் நடிகை ஹீரோவின் வாழ்க்கையை விட்டு விலக, ஹீரோ தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைக்க, மருத்துவர்கள் வந்து அவனைக் காப்பாற்ற முயல, அப்போதுதான் தெரிகிறது அவன் இன்னும் விஷமே குடிக்கவில்லை என்று. சுபம்.

இன்றளவும் இதே கதையைத்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்? கடைந்த பத்து வருடப் பாய்ச்சல் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்காவிட்டால், 90% தமிழ் சினிமாக்கள் 90 வருடங்களாக ஒரே போலவேதான் யோசித்துக்கொண்டு இருந்திருக்கின்றன என்று சொல்லிவிடலாம்.

Share

ஜகமே தந்திரம் – முற்போக்குத் தந்திரம்

ஜகமே தந்திரம் (Spoilers ahead) – பக்கா கேங்ஸ்டர் படமாக வந்திருக்கவேண்டியது, தேவையற்ற அலைச்சல்களில் வீணாகிறது. துரோகம், துரோகத்துக்கு துரோகம் என்பதால் அதுவே நியாயம் என்று அலைபாய்கிறது திரைப்படம். தமிழின் முக்கிய இயக்குநர்கள் அனைவருமே தங்கள் வீர தீர இந்திய எதிர்ப்பு முற்போக்கு அரசியலில் காணாமல் போகப் போகிறார்கள். இதற்கு முன்பும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இனியும் பட்டியல் நீளும். இன்று கார்த்திக் சுப்புராஜ்.

ஜோஜு ஜோர்ஜ் மிக நன்றாக நடித்திருக்கிறார். அவரும் பிரிட்டன் வில்லனும் தனுஸும் மோதிக்கொள்ளும் இடங்கள் அனைத்துமே பட்டாசு. அப்படியே கலக்கலாகப் போயிருக்கவேண்டிய படம், ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்குள் போய், இன்ன்னொரு திருப்பத்தையும், அதிலிருந்து இன்னொரு திருப்பத்தையும் எடுத்துக்கொண்டு, அதுவரை எப்படியோ தக்க வைத்துக்கொண்டிருந்த விறுவிறுப்பை விட்டுவிடுகிறது. தமிழ்நாட்டில் வாழும் சேட்டுகள் மீது எரிச்சல் காண்பிக்கும் வசனங்கள் ஆரம்பத்தில் வர, எரிச்சலான எனக்கு, பிற்பாதியில் இயக்குநர் ஒரு நியாயம் செய்தது சந்தோஷம். ஆனால், யார் எங்கே வந்து பிழைக்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் இயக்குநர், அதேபோல் மற்ற ஊர்களுக்குப் பிழைக்கப் போகும் பிற நாட்டுக்காரர்கள் செய்யும் ரௌடியிஸத்தைப் பற்றிப் பேசவே இல்லை. ஏனென்றால் தனுஷின் கதாபத்திரமே அப்படிப்பட்ட ஒன்றுதான்.

ஜோஜு ஜார்ஜின் கதாபாத்திரத்தை பிரபாகரன் என்று கொண்டால், தனுஷின் துரோகத்தை இந்தியாவின் துரோகம் என்று கொண்டால், இந்தியாவே மீண்டும் உதவவேண்டும் என்று சொல்ல வருகிறார் என்றும் பார்க்கலாம். அப்படியானால், ஈழத்துக்கு ஆதரவாக இந்தியாவை உதவச் சொல்லும் குரல்கள் எல்லாம் நியாயமாக எந்தப் பக்கம் இருந்து ஒலிக்கவேண்டும்? இந்திய தேசியத்தின் பக்கம்தானே? ஆனால் தமிழ்நாட்டில் ஒலிக்கும் இந்தக் குரல்கள் எல்லாம் இந்திய எதிர்ப்புக் குரல்களாகவே இருக்கின்றன. இது தற்செயல் அல்ல. இவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் வரை இந்தக் குரல்களோடு சேர்ந்து ஒலிக்கும் நியாயமான குரல்களுக்கும் நியாயம் கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்துகொள்வதில்தான் ஈழத்துக்காக ஒலிக்கும் குரல்களின் வெற்றி இருக்கிறது.

படம் முதலில் அரை மணி நேரம் நோகடித்துவிட்டது. தொடர்ந்து பார்க்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் தோன்றியது. ஆனால், அதற்கடுத்த ஒரு மணி நேரம், குறிப்பாக ஜோஜு ஜார்ஜ் கொல்லப்படும் வரை, அதகளம். (லாஜிக் சுத்தமாக இல்லை என்பதைத் தாண்டி ஒரு மாயம் நிகழ்கிறது.) தனுஷ் அப்படியே ரஜினியை பிரதியெடுக்கிறார். இன்னும் கொஞ்சம் கவனமாக திரைக்கதையை எழுதி இருந்தால், தலைவன் நிச்சயம் மீண்டும் வருவான், நாங்கள் நம்புகிறோம் என்றெல்லாம் எதையாவது எழுதி யாரையாவது ஏமாற்றும் திரைக்கதையை எல்லாம் தவிர்த்து இருந்தால், இன்னும் தீவிரமான கேங்வார் படமாக வந்திருக்கும்.

எந்த ஒரு அரசியலையும் அதன் ஆழத்துக்குள் சென்று பேசாமல், ஃப்ளாஷ் பேக்குக்காகத் தொட்டுக்கொண்டால் அந்தப் படம் அரசியல் படமாகிவிடாது. இயக்குநரின் அரசியல் சார்பு தெரியலாம், அதைத் தவிர வேறு பலன் எதுவும் இருக்காது. இந்தப் படமும் இயக்குநரின் அரசியல் சார்பைச் சொல்வதோடு நின்று விட்டிருக்கிறது. மக்களுக்கு எதைப் பிடிக்குமோ அதைச் சொல்லும் பாதுகாப்பு அரசியலைப் போல, மக்களுக்கு எதைப் பிடிக்குமோ அதை மட்டும் காட்டித் தப்பித்துக்கொள்ளும் படங்கள்தான் இன்றைய ட்ரெண்ட். இது தப்பித்துக் கொள்ளுதல் மட்டும் அல்ல, அதைத் தாண்டிய ஆதாரங்களும் கிடைக்குமோ என்னவோ. கடவுளுக்கே வெளிச்சம்.

ஈழப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை உணர்வுரீதியான ஒரு தொடர்பு மட்டுமே அன்றி தினசரி அரசியல் பிரச்சினை அல்ல. இதுதான் யதார்த்தம். ஆனால் என்னவோ தமிழக மக்கள் அனைவரும் ஈழப் பிரச்சினைக்காக இன ரீதியாக உயிரையே தரத் தயாராக இருப்பதாக இயக்குநர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தீராதவரை ஈழ மக்களின் நிஜ அரசியல் திரைப்படம் தமிழ்நாட்டில் வர வாய்ப்பே இல்லை. நான் தமிழன் நான் தமிழன் என்று ஒரு ஐடி கார்டாக ஒரு படம் அதன் இயக்குநருக்கு உதவலாம். அதுதான் நோக்கமே என்றால் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்யும் மிகப் பெரிய உதவி, இப்படி அரைகுறையாக எதையாவது சொல்லாமல் இருப்பதுதான். இந்தப் படத்தைப் பார்க்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு பிரிட்டனில் ஈழத் தமிழர்கள் ரௌடிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கவேண்டும். இதையே ஃபேமிலிமேன் போன்ற ஒரு தொடரில் காட்டி இருந்தால் தமிழர்கள் என்ற முற்போக்க்காளர்கள் தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். நல்லவேளை, ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தை நல்ல கேங்க்ஸ்டராக்கி தப்பித்துக் கொண்டார் இயக்குநர். இந்த புத்திசாலித்தனமே ஒரு நியாயமான படத்துக்கான எதிரி!

பின்குறிப்பு: பிரிட்டன் வில்லனுக்கு ஆங்கில வசனம் எழுதியது யார் என்று தெரியவில்லை. சப்டைட்டிலிலும் கூடப் புரியாது. இரண்டு முறை படிக்க வேண்டி இருக்கிறது. அத்தனை லோக்கல், அத்தனை தீவிரம்!

(படம் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.)

Share

பிரியாணி – மலையாளத் திரைப்படம்

18+

பிரியாணி (ம) – இதைப் பற்றி எழுதாமல் கடப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன்.

21+ திரைப்படம் என்று சொல்லலாம். எனவே குடும்பத்துடன் பார்க்கவே பார்க்காதீர்கள். இனியும் இதைப் பற்றிப் படிக்கவேண்டுமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 🙂

மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது ஏன் அந்தத் திரைப்படங்களில் ஹிந்து மதம் சித்தரிக்கப்படும் விதம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான், தமிழைப் போல அங்கே கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிக்கும் படங்கள் வராமல் இருப்பதில்லை. இந்தப் படம் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் எனக்கு ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்குப் போய்விட்ட ஒரு பையனின் குடும்பம் கேரளாவில் சந்திக்கும் பிரச்சினையே கதை. படம் அந்தப் பையனின் அக்காவின் பார்வையில் நகர்கிறது. அவளே கதாநாயகி. தன் மகன் வருவான் என்று காத்திருக்கும் பைத்தியக்கார அம்மா, தன் மகன் இந்தியாவின் தீவிரவாத வேட்டையில் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் உயிரை விடுகிறாள். விவாகரத்து பெற்ற அக்கா பாலியல் தொழிலாளியாகிறாள். பின்பு தன் ஊர்க்காரர்களுக்கு பிரியாணி செய்து தருகிறாள். ஊரில் அனைவருக்கும் பிரியாணி செய்து போட வேண்டும் என்பது அம்மாவின் கனவு. ஆனால் இவள் செய்யும் பிரியாணி, ஐயோ, உவ்வேக் ரக கொடுமை.

படத்தின் கதைக்கும் நிகழும் சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே கதாநாயகியை உடலுறவில் முழுமை பெறாதவளாகக் காண்பிக்கிறார்கள். அவள் ஏன் பாலியல் தொழிலாளியாக வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அடங்காத உடல் வேட்கை என்றால் படத்தின் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று குழப்புகிறது. பின்பு எல்லாம் விட்டு, குழந்தை உண்டாக, காவல்துறையின் பயங்கரத்தால் அந்த குழந்தையும் கருவிலேயே கலைகிறது.

இந்தக் கொடுமையை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், பல முக்கியமான பதிவுகள் உள்ளன.

ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் ஏஜெண்ட், இந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தாலே சந்தேகப்படுவார்கள் என்கிறான். ஆனால் அவனே ஐ எஸ் அமைப்புக்கு ஏஜெண்ட்டாக இருக்கிறான்.

ஐ எஸ் அமைப்புக்குப் பையன் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஜமாத் அமைப்பு அவர்களது குடும்பத்தை தள்ளி வைக்கிறது. மறைமுகமாக உதவுவதெல்லாம் இல்லை.

ஐ எஸ் ஏஜெண்ட்டே அந்தப் பெண்ணுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஜமாத் மூலம் உதவ ஏற்பாடு செய்துவிட்டு, தலைமறைவாகிறான்.

தன் மனைவி ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பெண் என்று தெரிந்ததும் கணவன் முத்தலாக் சொல்கிறான்.

இப்படிப் பல யதார்த்தமான பதிவுகள் உள்ளன.

ஆனால் விவாகரத்தான கணவனுடன் அவள் மீண்டும் உறவு கொள்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அவனோ இவள் எதிர்பார்க்கும் அளவுக்கானவன் அல்ல. பின்னர் ஏன்? ஒரு பழிதீர்த்தல் என்றா புரிந்துகொள்வது? என்ன கொடுமை என்றால், நெளிய வைக்கும் பழி தீர்த்தலுக்குப் பிறகு இந்த உறவு வருகிறது!

பழிதீர்க்கும் பிரியாணிக்கு போலிஸை, தன்னை அவமானப்படுத்தியவர்களை அழைத்தது சரி. ஏன் தனக்கு உதவிய பத்திரிகையாளரையும் அழைக்கவேண்டும்? ஏன் தான் விரும்பியே உறவு கொண்ட ஒருவனை அழைக்கவேண்டும்? இப்படி பல கேள்விகள்.

ஆனாலும் ஏன் முக்கியமான படமாகிறது? ஒன்று, யாரும் தொடத் தயங்கும் விஷயத்தை தைரியமாக எடுத்திருப்பதால். உலகத் திரைப்படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகள் படம் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் வருவதால். கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் புதிர் நிறைந்த முகபாவத்தால். உலகத் திரைப்படங்களைப் போலவே எந்த நொடியிலும் எப்படியும் நகரும் தன்மை கொண்டிருப்பதால். எவ்விதக் கட்டுக்களுக்குள்ளும் சிக்காததால். இப்படிப் பல ஆச்சரியங்கள் படம் நெடுக.

சென்சார் கத்தரிகளுக்குத் தப்பித்த பிரதி ஓடிடியில் கிடைக்கிறது என்று பார்த்தேன். சென்சார் கத்தரிகளுக்குத் தப்பிக்காத பிரதியில் எந்தக் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், முதல் காட்சியிலேயே 21+ காட்சிகளுக்குத் தயாராகுங்கள். எல்லா வகையிலும் இப்படி அதிர வைக்கும் ஒரு திரைப்படம், இதே பிரிவில் இதே உருவாக்கத்தில் உலகத் திரைப்படத்துக்கு இணையான ஒரு திரைப்படம், மலையாளத்தில் இதற்கு முன்பு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

(இதற்கு முன்பு இன்னொரு மலையாளப் படம் பார்த்தேன். மூன்று வருடங்கள் இருக்கலாம். கணவனுக்கு நான்கு மனைவி என்றால் ஏன் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவன் இருக்கக் கூடாது என்று ஒரு பெண் கேள்வி கேட்பாள். அந்தப் படத்தின் பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லவும்.)

Share

தி இண்டியன் கிச்சன் – வெற்றுச் சமையல்

MMM (Malayala Movie Mafia)க்களும் பெண்ணியவாதிகளும் இந்த அற்பனை மன்னித்துவிடுங்கள்.

தி இண்டியன் கிச்சன் படம் பார்த்தேன். இருபது நிமிடத்தில் எடுத்திருக்கவேண்டிய அசல் முற்போக்கு பெண்ணிய குடும்ப எதிர்ப்பு குறும்படம். அதை இரண்டு மணி நேரமாக எடுத்திருக்கிறார்கள். தினமும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவது, வீடு துடைப்பது என எல்லாவற்றையும் இன்ச் இன்சாகக் காட்டுகிறார்கள். பொதுவாக மலையாளப் படத்தில் ஒரு முதியவர் மெல்ல நடந்து போய் ஒரு மரத்துக்கு அருகே நின்று சிறுநீர் கழித்துவிட்டு (அதன் சத்தம் காதை அடைக்கும்) மீண்டும் நடந்து வருவதைக் காண்பிப்பார்கள். நல்லவேளை அப்படியெல்லாம் இல்லை. ஒரு கட்டத்தில் என்னல்லாம் சமைக்கிறாங்க, எப்படில்லாம் சமைக்கிறாங்க என்று பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அந்தப் பெண் கஷ்டப்படுவது போய் அடுத்து அவள் என்ன சமைப்பாள் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. பூரி மட்டும் வரவில்லை. மற்ற எல்லாம் வந்துவிட்டது.

இப்படியே போகும் படத்தில் சட்டென இல்லறத்தில் பெண்ணுக்கு திருப்தி இல்லாதது மற்றும் ஐயப்பன் பூஜையை சாமர்த்தியமாகச் செருகிறார் இயக்குநர். இந்த இரண்டும் இல்லாவிட்டாலும், இன்னும் சொல்லப் போனால், இல்லாமல் இருந்திருந்தால்தான் சரியான படமாக இருந்திருக்கும். ஆனால் இயக்குநர் முற்போக்காளர். இந்த பெண்ணிய முற்போக்காளர்களுக்கு குடும்பம் என்கிற அமைப்பில் இருக்கும் போதாமைகளைக் களைவதை விட, குடும்பம் என்கிற அமைப்பைச் சிதைப்பதிலேயே ஆர்வம் அதிகம் இருக்கிறது. இது தற்செயல் அல்ல. குடும்ப அமைப்பே இந்தியாவின் ஆதார சுருதி. அதனால்தான் இதில் கவனம் கொள்கிறார்கள்.

குடும்ப அமைப்பில் பெண்கள் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார்கள் என்று நான் உளறமாட்டேன். நிச்சயம் அவர்களுக்கே பெரும் சுமை இருக்கிறது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதையே பெரும் அவமானமாக நினைக்கிறார்கள். இவை எல்லாமே மாற வேண்டும். ஆனால் அதை ஐயப்ப பூஜையோடு முடிச்சி போட்டிருப்பதெல்லாம் பயங்கர ஐடியா. எந்த ஒரு முஸ்லிம் வீட்டிலும், இந்த ஒரு கிறித்துவ வீட்டிலும் அடுப்பாங்கரை இப்படித்தான் இருக்கும். ஒரு சந்தேகமும் வேண்டாம்.

படத்தில் என்ன காட்டுகிறார்களோ அதை வைத்துப் பார்த்தாலும் கூட, அந்தப் பெண் மூன்று நாள் ஒதுங்கி இருக்கும்போது உதவ ஒருவர் வருகிறார். அதாவது ஐயப்பனுக்கு மாலை போடுவதற்கு முன்பாகவே இது நடக்கிறது. மூன்று நாள் தீட்டு என்பது நிறைய சமூகத்தில் உள்ளதுதான். படித்த ஒரு பெண்ணுக்கு இந்த அறிவு கூடவா இருக்காது? ஐயப்ப சாமிமார் டீ கேட்டால் பாத்திரம் கழுவிய நீரைத் தருவது அந்தப் பெண்ணின் திமிரையும் கிறுக்குத்தனத்தையும்தான் காட்டுகிறது. கேட்டால், அவள் அடக்கி வைத்திருந்த கோபம் அப்படி வெளிப்படுகிறது என்று சொல்வார்கள். அறிவு இருப்பவள் அன்று அமைதியாக டீ போட்டுக் கொடுத்துவிட்டு மறுநாள் வெடித்திருப்பாள். ஆனால் இந்தக் கதாபாத்திரம் ஒரு அறிவற்ற கதாபாத்திரம்.

கதாநாயகன் தெளிவாக கதாநாயகியிடம் சொல்கிறான். இப்போதைக்கு வேலை வேண்டாம், கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று. இதில் ஒரு தவறும் இல்லை. அவள் வேண்டுமென்றே அப்போதே வேலைக்கு மனு போடுகிறாள். தூரமாக இருக்கும்போது துளசி மாடத்தில் இருக்கும் துளசியைப் பறித்து உண்ணுகிறாள். இப்படிப்பட்ட பெண் திருமணத்துக்கு முன்பே தன் தேவை என்ன என்று பேசி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பேசவில்லை. அதைவிட ஆச்சரியம் என்ன என்றால், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக் கூடாது என்பதை கதாநாயகன் முதலிலேயே பெண் வீட்டில் சொல்லிவிடுவதாகவும் ஒரு வசனம் வருகிறது. அப்படியானால் அந்தப் பெண் பாத்திரம் கழுவிய நீரை யார் முகத்தில் கொட்ட வேண்டும்? அவளது அப்பா அம்மா முகத்தில்தானே? ஆனால் ஐயப்ப சாமிமார் முகத்தில் கொட்டுகிறாள். ஏனென்றால் அப்போதுதான் முற்போக்குப் பெண்ணியப் படம் எடுக்கமுடியும்.

இறுதிக் காட்சிகள்தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. திருமண அமைப்பில் இருந்து கதாநாயகி விலகி தனக்குப் பிடித்த துறைக்குப் போகிறாள். இந்தக் கருமத்தை அவள் திருமணத்துக்கு முன்பே சொல்லித் தொலைத்திருக்கலாம். ஆனால் ஐயப்பன் தன் பக்தர்களைக் கைவிடவில்லை. கதாநாயகனுக்கு ஏற்ற, அவன் குடும்பத்துக்கு ஏற்ற பெண் அமைகிறாள். வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் பெண்ணுக்கு மரியாதை என்பது மேற்கத்திய கலாசாரம் கற்றுத் தரும் பொய். அதற்கு இணையான மேம்பட்ட ஒன்று, குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணின் நிலை. கூடவே, பெண் வேலைக்குப் போய் ஆண் குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டுமே இழிவில்லை. யார் யாருக்கு எது சரியாக வருமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் ஒரு தவறுமில்லை.

திருமணத்துக்கு முன்பு பெண்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. அப்படி உரிமை இல்லாத பெண்ணாக இந்தக் கதாநாயகி படைக்கப்படவில்லை. எனவே முற்றிலும் கிறுக்குத்தனமாகவே இப்படம் எடுக்கபட்டிருக்கிறது.

தன் வீட்டில் தன் தம்பி அம்மாவை தண்ணீர் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்கும்போது கதாநாயகி எரிந்து விழுகிறாள். இதுதான் ஒரே உருப்படியான காட்சி. இதையே நாம் நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கும் செய்யவேண்டியது. மற்றபடி எல்லாமே இப்படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. என்ன பிரச்சினை என்றால், அத்தனை இயற்கையாக நடிக்கிறார்கள் அனைவரும். ஒரு வீட்டுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் கேமராவை வைத்துவிட்டு வந்துவிட்டது போல. அத்தனை இயல்பு. இப்படித்தான் ஒரு படைப்பு அதன் ஆதார நோக்கத்தையும் தாண்டி சாமானியர்களின் மனதுக்குள் அவர்கள் அறியாமலேயே இதுதான் சரி என்று நுழைந்துவிடுகிறது.

Share

கவிதைகள்

அழகோவியம்

பஞ்சு விரல்களில்
கோலம் வரைகிறாள்
கண்ணில் விழும் தலைமுடியை
ஒதுக்கிக் கொண்டே இருக்கும்‌ சிறுமி
முயல் வரைந்து உச் கொட்டி அழிக்கிறாள்
மீன் வரைந்து முகம் சுழிக்கிறாள்
கன்று பாதி உருவாகி வரும்போதே நீரூற்றுகிறாள்
ரோஜாவை வரைந்து பார்க்கிறாள்
சூரியகாந்தியை வரையும்போதே
கோலத்தைக் காலால்‌ எத்திவிட்டு
கண்ணீருடன் வீட்டுக்குள் ஓடும்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் கழுத்துக்குப் பின்னே
அவள் வரைந்த
அனைத்து உயிரிகளும்
மலர்களும்
காத்திருந்ததை.

சொற்களை விட்டோடியவன்

அட்டைக் கத்தியால்
வானில்‌ சுழித்தபடி
அந்தக் கோட்டி
உதிர்த்த சொற்களைப்
பாதி பேர் கேட்கவில்லை
மீதி‌ பேருக்குப் புரியவில்லை.
வானத்தில்
தன் கத்தியால்
ஒரு கேள்வி இட்டான்.
சொல்ல சொல்ல
சொற்கள் குவிந்துகொண்டே சென்றன
சொற்களின் பீடம் மேலேறி
கேள்வியை முறைத்து நின்றவன்
கீழே நகரும் கூட்டத்தை
வாத்துக் கூட்டம் என்றான்.
சட்டெனப் புரிந்துவிட்டதால்
கல்லால் அடித்தார்கள்.
சொற்களை வாரி எடுத்துக்கொண்டு
காற்றில் மறைந்தான் அவன்.
எல்லோரும் நிம்மதியானார்கள்.
அவனோ
இன்னொருவனோ
வருவான் என
கேள்விக்குறி
தன் மழைக்காலத்துக்காகக்
காத்திருக்கிறது

நடைக்கோலம்

நீல வானில்
வெண்ணிற மேகங்கள்.
நடைப்பயிற்சி தொடங்கினேன்.
திக்கற்ற மனம்.
எங்கிருந்தோ தீம் திரனன தவழ்ந்து வந்தது.
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ.
எதிர்வீட்டு மொட்டைமாடியில்
தவமணி அக்கா மூச்சு வாங்க நடக்க வந்தாள்
என்னத்த, அத்தான் எங்க என்று கேட்க நினைத்து
பயந்து போய் அமைதியாக இருந்தேன்.
அவளே வானத்தைக் கைகாட்டி
இருபது நாளாச்சு என்றாள்.
கீழ் வீட்டுக்காரன் மொட்டை மாடிக்கு வரும்போதெல்லாம்
அந்த அத்தானைப் பார்த்துப் புன்னகைப்பான்.
அவன் போயும் இருபது நாளிருக்குமா?
அத்தானுக்குத் தெரியாது.
வானத்தைப் பார்த்தேன்.
எதிரெதிர் மேகத்திரளில்
அத்தானும் கீழ்வீட்டுக்காரனும்
ஒருவரை ஒருவர்
புன்னகைத்துக் கொண்டார்கள்.

Share