Tag Archive for குறுங்கதை

சங்கரன் அண்ணனின் கடிதம்

சங்கரன் அண்ணனின் கடிதம்

“ஏல… ரத்தம் சுண்டவும்தான் எங்க நினைப்பு வருது என்னல? நானும் உன் வரிசியாரும் இருக்கமா செத்தமான்னு கூட பாக்கல இத்தனை நாளு. ஆனா திடீர்னு எங்க கல்யாண போட்டோவை பெருசாக்கி அனுப்பி வெச்சிருக்க. என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தா, ஒன் பொண்ணுக்கு வெளக்கு கல்யாணம் வைக்க போறியாம்லா? ஒன் சிநேகிதன் எல்லாத்தையும் சொல்லிட்டாம்டே. வேலைக்கு மெட்ராஸுக்கு போனவன் எங்க வீட்டுப் பக்கம் திரும்பி கூட பாக்கல. ஆனா இப்ப மட்டும் எங்க உறவு எனக்கு தேவைப்படுது என்னா? அப்ப இத்தனை நாள் ஒன்கிட்ட என் அட்ரஸ் இருந்திருக்கு! எலேய், நான் ஒனக்கு பெரியம்மை மகனா இருக்கலாம். ஆனா நீ பொறந்தப்ப ஒன்னை தூக்கி வளத்தவம்ல நானு. நீ மங்கயர்க்கரசி ஸ்கூலுக்கு எல்கேஜி போனப்போ ஒன்னை மொத நாளு கொண்டு போயி விட்டவம்ல இந்த சங்கரன் அண்ணன். அது சரி, இதெல்லாம் ஒங்கம்மைக்கே ஞாபகம் இல்ல. ஒனக்கு எங்க ஞாபகம் இருக்கப்போது. நல்ல சித்தி நல்ல புள்ளடே! இப்படில்லாம் சொல்றானே, நாளைக்கு நம்ம பொண்ணுக்கு வெளக்கு கல்யாணத்துக்கு வந்து நிப்பானோ மாட்டானோன்னு நினைக்காத. உம் பொண்டாட்டி மாதிரி இல்லடே எம் பொண்டாட்டி. நீ கூப்ட்டா நேர்ல நாம போயி நின்னு நம்ம பொண்ணு ஃபங்சன நடத்திக் கொடுக்கணும்னுட்டா உங்க வரிசியாரு. கேட்டுச்சாடே? மெட்ராஸுக்கு போயிட்டா கொம்பு மொளச்சிராதுடே… நம்மூருக்கு வந்துதான் ஆவணும். அது சரி, சாதி சனம் நெனப்பெல்லாம் பொண்ணு ஒக்காரப் போறாங்கறப்பதான் வருது என்னல? ஆனாலும் என் கல்யாண நாளு வரப் போகுதுன்னு தெரிஞ்சி நீ எப்பவோ எடுத்த போட்டாவ பெருசாக்கி அனுப்பினேல்லா? அது பெரிய விஷயம்தாண்டே. ஒத்துக்கிடுதேன். ஆனா இன்னொனும் சொல்லுதேன்…”

கடிதம் இன்னும் நீண்டுகொண்டே போனது. “சங்கரன் அண்ணன் என்ன எழுதிருக்கான்?” என்று கேட்ட அம்மாவை முறைத்த சுரேஷ் கோபமாகச் சொன்னான், “ரத்தம் சுண்டிட்டுங்கான். எல்லாம் ஒன்னால. எப்பமோ ப்ரிண்ட் போட்டு வெச்ச போட்டோ வீட்டை அடைச்சிக்கிட்டு கிடக்கு, கிழிச்சி தூரப் போடலாம்னு சொன்னேன். கல்யாண போட்டோவை கிழிப்பாவளா அனுப்பி வைன்னு சொன்னியேன்னு அனுப்பினா, அவன் என்னம்லாம் எழுதிருக்கான்னு பாரு” என்றபடி கோபமாகக் கடிதத்தை அம்மாவிடம் நீட்ட, அவள் கேட்டாள், “அவன் இன்னமும் கோட்டிக்காரனாத்தான் அலைதானால?”

Share

பேரமைதி

முதலிரவு அறையில் இருந்து வெட்கத்துடன் முகம் திருத்தி வந்த பவித்ரா காலை குளித்து முடித்து தலைக்குத் துணி கட்டி அனைவருக்கும் பரிமாறத் தயாரான போது மாமியார் சுசிலா சொன்னாள், “ஏன் கொலுசுல இவ்ளோ மணி இருக்கு? கொஞ்சம் கம்மியா வாங்கிப் போட்டுக்கோ.” நடு இரவில் யுவன் பவித்ராவின் வாயைப் பொத்தியபடி உஷ் என்று சொன்னது ஒரு மின்னல் போல பவித்ராவுக்கு நினைவில் தோன்றி மறைந்தது.

யுவன் ஒரு வேலையாக வெளியே கிளம்பியதை ஆச்சரியமாகப் பார்த்த பவித்ரா, “இன்னைக்கே போகணுமா?” என்று கேட்டதும் யுவன், “அதுக்கு ஏன் இவ்ளோ சத்தமா பேசற?” என்றான்.

யுவன் கிளம்பிப் போனதும் வீடே நிசப்தமாக இருந்தது. டிவி ஓடிக்கொண்டிருந்தாலும் பவித்ராவின் மாமியார் ப்ளூ டூத்தில் அதை இணைத்திருந்தாள். எங்கேயும் எந்த ஒலியும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்த பவித்ராவின் போன் திடீரென சத்தமாக ஒலிக்கவும், காதில் இருக்கும் ப்ளூ டூத்தைக் கழட்டிய பவித்ராவின் மாமியார், “வைப்ரேஷன்ல வெச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு மீண்டும் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டாள். பவித்ரா போனை கட் செய்தாள்.

மாமியார் ஒரு திரைப்படம் பார்த்து முடித்திருந்தாள். நேரம் போகாமல் தவித்துக்கொண்டிருந்த பவித்ரா, எப்போது யுவன் வருவான் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே நல்லவேளையாக யுவன் வந்துவிட்டான். சந்தோஷமாக ஓடிப் போன பவித்ராவைப் பார்த்த யுவன் என்ன என்பது போல், “ம்?” என்று மிகக் குறைவான ஒலியில் முகத்தில் கூடிய ஒரு பரபரப்புடன் சைகையுடன் கேட்கவும், பவித்ரா தன்னை உணர்ந்து அமைதியாக நடந்து போய் யுவன் முன்னால் நின்று என்ன சொல்வது என்று தெரியாமல், “சாப்பிடலாமா?” என்று கேட்க, யுவன், “ம்” என்றான்.

அனைவரும் சாப்பிட்டார்கள். ஏதோ ஒரு ஞாபகத்தில் பவித்ரா டம்ப்ளரைக் கொஞ்சம் வேகமாக வைக்கவும் யுவனின் முகம் ஒரு நொடி மாறி மீண்டும் சாதாரணமாக, பவித்ரா ஸாரி என்பது போல் புன்னகைத்தாள். பதிலுக்கு யாரும் சிரிக்கவில்லை என்பதையும் பவித்ரா கவனித்தாள்.

யுவனும் அவனது அம்மாவும் சாப்பிட்டபோது ஒரு சின்ன சத்தம் கூட இல்லை. கரண்டியால் குழம்பை எடுக்கும் சத்தமோ, பொறியல் பொறுக்கைச் சுரண்டி எடுக்கும் சத்தமோ, உணவை மெல்லும் சத்தமோ எதுவுமே இல்லை. தான் சாப்பிடும் சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பவித்ரா கிட்டத்தட்ட அப்படியே விழுங்கினாள். கரண்டிக்கும் பாத்திரத்துக்கும் கூட வலிக்கும் என்றபடி மிக மென்மையாகப் பரிமாறிக் கொண்டார்கள். சாப்பிட்டபடியே பவித்ரா சாதாரணமாக, “சாம்பார் சூப்பரா இருக்குல்ல.. உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டதற்கு யுவன் பதில் சொல்லவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் யுவன் சத்தமின்றிக் கை கழுவினான். கிட்டத்தட்ட சத்தமே இல்லாமல் வாய் கொப்பளித்தான். தன்னால் அப்படிக் கொப்பளிக்க முடியுமா என்ற சந்தேகம் பவித்ராவுக்கு வரவும் அவள் வாய் கொப்பளிக்காமலேயே விட்டுவிட்டாள்.

யுவன் மாடியேறிப் போகவும் பின்னாலேயே பவித்ராவும் போனாள். அறைக்குள் நுழைந்ததும் பவித்ரா யுவனைக் கட்டிக்கொண்டு, “ரொம்ப போர் அடிக்குது” என்று சொல்லும்போதே யுவன் சொன்னான், “சாப்பிடும்போது மெல்ல பேசு.” தான் பேசவே இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த பவித்ராவின் போன் வைப்ரேட் ஆகவும் பவித்ரா யுவனிடம், “அம்மா கூப்பிடறாங்க… ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, போனுடன் மொட்டை மாடிக்குப் போனாள். போனை எடுத்ததும், “அம்மா… நல்லா இருக்கியா” என்றாள். அம்மா, “சத்தமாத்தான் பேசேண்டி… ஏதோ கிணத்துக்குள்ள இருந்து பேசற மாதிரி இருக்கு. நல்லா இருக்கேல்ல? மாப்ளை நல்லா பாத்துக்குறார்ல?” என்றாள்.

அம்மாவின் குரலுக்குப் பின்னால் தன் வீட்டுச் சத்தம் பவித்ராவுக்குக் கேட்டது. என்னென்னவோ சத்தங்கள். ஒவ்வொரு சத்தத்தையும் உற்றுக் கேட்டாள் பவித்ரா. “லைன்ல இருக்கியாடீ” என்று பவித்ராவின் அம்மா கேட்டதற்கு, “கொஞ்ச நேரம் பேசாம லைன்லயே இரும்மா” என்றவள் தன் வீட்டுச் சத்தத்தைக் கூர்ந்து கேட்டாள். “என்னடீ?” என்று கேட்ட அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் போனை கட் செய்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வாய் விட்டுச் சத்தமாக அம்மா அம்மா அம்மா என்று நான்கைந்து முறை கத்தினாள். பின்னர் சத்தமே இல்லாமல் நடந்து வந்து, சத்தமே இல்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, சத்தமின்றி யுவன் அருகே அமர்ந்துகொண்டாள்.

Share

புதுத்துணி

புதுத்துணி

மகள் எப்போது உக்காருவாள் என்று புவனாவிடம் கேட்காத ஆளே இல்லை. தன் மகள் சீக்கிரமே பெரியவளாகிவிடுவாள் என்று அத்தனையையும் திட்டமிட்டுத் தயாராக இருந்தாள் புவனா. மகள் பெரியவளானதும் என்ன செய்ய வேண்டும், எங்கே மனை போட்டு புதுத்துணி கொடுத்து அவளை உட்கார வைக்கவேண்டும், சாப்பிட என்னவெல்லாம் செய்து தரவேண்டும் என்று புவனா கேட்காத ஆளே இல்லை. ஆளுக்கொன்று சொன்னார்கள். ஹுக்கி எனப்படும் பொங்கல் செய்து தரவேண்டும் என்று ஒருவர், சிகிலி எனப்படும் எள்ளுருண்டை செய்துதரச் சொல்லி இன்னொருவர் என அனைத்தையும் பொறுப்பாகக் குறித்து வைத்துக்கொண்டாள்.

லக்ஷ்மி மாமி ஒரு விஷயத்தைச் சொன்னபோதுதான் அதைப் பற்றி நாம் யோசிக்கவே இல்லையே என்று புவனாவுக்குத் தோன்றியது. பெரியவளானதும் பார்த்து உறுதி செய்ய அம்மா போகக் கூடாது என்றாள் லக்ஷ்மி மாமி. “ஸ்கூல்ல இருக்கும்போதுன்னா ஆயா பாப்பா, வீட்ல இருந்தா வேற யாரையாவது பாக்கச் சொல்லுடீ” என்றாள். அம்மா பார்த்தால் ஆகாதாம். புவனா சரி மாமி என்றாள். மாமி இன்னொரு விஷயமும் சொன்னாள், “அப்படி பாத்து சொல்றவங்களுக்கு புதுத்துணி வாங்கித் தர்றது ஒரு ஐதீகம்.”

புவனா உடனே முடிவெடுத்தாள். தன் ஆசை மகள் பெரியவளாகப் போவதைப் பார்த்துச் சொல்பவளுக்கு பட்டுப் புடவை வாங்கித் தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். இது ஒரு கொடுப்பினை என்றாள். புவனாவின் கணவன், ‘இதற்கெல்லாம் பட்டுச் சேலையா’ என்று அலுத்துக்கொண்டதை புவனா காதில் போட்டுக்கொள்ளவில்லை. அன்றே மிக நல்ல பட்டுப்புடவை ஒன்றை வாங்கியும் வைத்தாள். இந்தப் புடவை வந்த நேரம் சீக்கிரமே தன் மகள் பெரியவாளாவாள் என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் புவனாவின் மகள் எப்போதும் போல சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு, ஊரெல்லாம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, வீட்டுப்பாடம் செய்யாமல் புவனாவிடம் அடி வாங்கிக்கொண்டு, டிவியில் கேட் நிஞ்சா பார்த்துக்கொண்டு ஜாலியாக இருந்தாள். அவள் ஒரே சமயத்தில் மிகச் சிறிய பெண்ணாகவும், எப்போது வேண்டுமானாலும் குதிரப் போகும் பெண்ணாகவும் புவனாவின் கண்ணுக்குத் தெரிந்தாள்.

இப்போது அப்போது என்று எதிர்பார்த்த நாளெல்லாம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. “பதினாலு வயசுதான் ஆகுது, அதுக்குள்ள ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று புவனாவின் கணவன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஊரெல்லாம் பெரு மழை பெய்தபோது தன் மகள் உட்கார்ந்தாள் என்ன செய்வது என்று புவனா யோசித்துக்கொண்டிருந்தபோது, வாசலில் பெரிய சத்தம் கேட்டது. வாசலுக்கு வந்த புவனாவைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரி திட்டு திட்டென்று திட்டினாள். மழைக்காலம் வந்தாலே இந்தப் பிரச்சினைதான். புவனா வீட்டுக் கழிவு நீர்த் தொட்டி நிரம்பி, வாசலில் நீர் ஓடும். எத்தனை சரி செய்து இந்தப் பிரச்சினை தீரவில்லை. இந்தத் திட்டுகளையெல்லாம் புவனா காதில் போட்டுக்கொள்ளாமலேயே சமாளித்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் பக்கத்து வீட்டுக்காரி புவனாவைக் காறித் துப்பிவிட்டுப் போனாள். மழைக்காலத்துல தண்ணி ரொம்பினா நாங்க என்ன பண்றது என்ற ரீதியில் இந்த முறையும் புவனா சமாளித்தாள்.

மழைக்காலம் முடிந்து வெயில் காலம் வந்து, சாலை நீரெல்லாம் வடிந்து காய்ந்து தெருவே பளிச்சென்று இருந்த நாளில், புவனாவின் மகள் அதே சாக்லெட்டைச் சாப்பிட்டுக்கொண்டு சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தாள். புவனா ஆசை ஆசையாக வாங்கி வைத்த பட்டுப் புடவை அவள் கண்ணில் பட்டது. ஏன் இவள் இன்னும் பெரியவளாகவில்லை? நான் பன்னிரண்டு வயதில் பெரியவளானேனே? இவளுக்கு பதினாலு ஆகப் போகிறதே! யோசனையில் இருந்த புவனாவுக்கு ஒரு போன் வந்தது. புவனாவின் தங்கை அழைத்து, “ஏன் உம் பொண்ணு பெரியவாளாவான்னு காத்துக்கிட்டு இருந்தா, என் பொண்ணு பெரியவளாயிட்டாடீ! நாலாவது நாள் தலைக்கு தண்ணி ஊத்தறோம், கிளம்பி வா” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். புவனாவுக்கு கொஞ்சம் சந்தோஷமாகவும் நிறைய அதிர்ச்சியாகவும் இருந்தது. ஐந்தாவது படிக்கும் அவளே பெரியவளாகிவிட்டாளா?

புவனா தன் மகளை விட்டுவிட்டு தான் மட்டும் ஊருக்குப் போனாள். தன் மகளைப் பார்த்தால் நிச்சயம் அவளிடம் எல்லாரும் ‘எப்படீ உக்காரப் போற?’ என்று கேட்பார்கள் என்பதற்காகவே அவள் தன் மகளை அழைத்துச் செல்லவில்லை.

தன் தங்கை வீட்டுக்குள் புவனா காலை வைக்கவும் பக்கத்து வீட்டுக்காரி போன் செய்தாள். இவள் எதுக்கு போன் செய்கிறாள் என்ற யோசனையில் புவனா போனை எடுத்ததும், புவனா பேசுவதற்குள் அவள் திட்ட ஆரம்பித்தாள். ஒரு பாட்டம் திட்டி முடித்துவிட்டு, “வெயில் காலத்துலயும் உங்க வீட்டு கக்கூஸ் தண்ணி ரோடெல்லாம் ஓடுது… இப்பவே வந்து நீங்க சரி பண்ணனும். இல்லைன்னா கார்ப்பரேஷன்ல சொல்லிருவேன்” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டாள். புவனா எரிச்சலில் மனதுக்குள் பக்கத்து வீட்டுக்காரியைத் திட்டியபடி தன் தங்கை மகளைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தாள்.

அங்குமிங்கும் பம்பரமாகச் சுற்றி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்த புவனாவின் போன் ஒலித்தது. மீண்டும் பக்கத்து வீட்டுக்காரியிடம் இருந்து போன். புவனா கோபமாக அவளிடம், “என்ன வேணும் உங்களுக்கு?” என்று சொல்லும்போதே அவள் சொன்னாள், “உம் பொண்ணு பெரியவளாயிட்டாம்மா! உங்க வீட்டுக்காரரு ஆஃபிஸுக்கு போயிருக்காராம். இப்ப எங்க வீட்லதான் இருக்கா. உடனே வா” என்று சொன்னாள்.

அடித்துப் பிடித்து புவனா கிளம்பி வந்து, வீடெல்லாம் அமளிதுமளியாக, மகளுக்கு ஹுக்கி கொடுத்து, அனைவருக்கும் தகவல் சொல்லி, நான்காம் நாள் சொந்தக்காரர்கள் எல்லாம் வந்து இறங்க, அனைவரும் சேர்ந்து புவனாவின் மகளுக்குத் தண்ணீர் ஊற்றி, புதுத்துணி கொடுத்து வீட்டுக்குள் கூட்டிவந்தாள். சொந்தக்காரர்கள் எல்லாம் போன உடன் புவனா பக்கத்து வீட்டுக்குப் போய் அவளைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு வந்தாள்.

அவள் வரவும் புவனா அவள் கையை அன்பாகப் பற்றிக்கொண்டு, “பெரியவளானதை பாத்து சொல்றவங்களுக்கு புதுத்துணி தரணும்மா.. எங்க பக்கத்து வழக்கம். உங்களுக்கும் தர்றேன். சந்தோஷமா தர்றேன். நமக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் மனசுல வெச்சிக்காம எம் பொண்ணை உங்க வீட்ல வெச்சிக்கிட்டீங்களே…” என்று சொன்னவள், தன் அறைக்குள் போய் புடவையை எடுத்துக்கொண்டு வந்து, தாம்பாளத் தட்டில் வைத்துக் கொடுத்தாள். அவர்கள் ‘இப்படில்லாம் ஒரு பழக்கம் இருக்கு பாரேன்’ என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போனார்கள்.

புவனாவின் கணவன் புவனாவிடம், “பட்டுப் புடவை வாங்கி வெச்ச.. இப்ப இந்த சாதா புடவையைக் கொடுத்துருக்க” என்று கேட்டதை எப்போதும் போல் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்த புவனா அவளை மீறிச் சொன்னாள், “சாஸ்திரம்தான? பட்டுப்புடவையே கொடுக்கணும்னா இருக்கு? இவளுக்கெல்லாம் இது போதும். பட்டுப் புடவை எனக்கு இருக்கட்டும்.”

Share

அந்நியன்

முனியப்பன் என்கிற வெங்கடேஷ் திருநெல்வேலியின் பஸ் ஸ்டாண்டில் கதிர்வேலைப் பார்த்தபோது, இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் அப்படியே தூக்கி வீசப்பட்டான். தன்னை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, கதிவேலைப் பார்த்து ஒரு நொடி சிரித்து, இவன் வெங்கடேஷ் அவன் அடுத்த நொடியில் கண்டுபிடித்து அவனும் சிரித்து, ‘நீ எங்கல இங்க?’ என்ற கேள்விக்கு வெங்கடேஷ் சொன்ன பதில், ‘சீராளன் நம்பர் இருக்கால உன்கிட்ட?’ சீராளன் பள்ளியின் சூப்பர் ஸ்டார். ஆங்கிலம் பொளந்து கட்டுவான். கதிர்வேல் சொன்னான், ‘அமெரிக்கால இருக்கானாம்.’

தானும் சீராளனும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் ஒவ்வொன்றாக வெங்கடேஷுக்கு நினைவுக்கு வந்தன. உயிரியியல் வாத்தியார் வரும் முன் அவரைக் கரப்பான் பூச்சி போல வரைந்து வைத்தது, ஒரு சிட்டிகை போட்டால் நூறு முறை தும்மும் பொடியை எல்லாருக்கும் கொடுத்து தமிழ் வாத்தியார் வரும்போது ஒவ்வொருவரும் நூறு முறை தும்மி அவரை அலறி ஓட்ச வைத்தது, மாஸ் கட் அடித்துவிட்டு கலைவாணி தியேட்டருக்கு ஓடியது, நாடோடித் தென்றல் படத்துக்குப் போய் ‘ஒரு கணம் ஒரு யுகமாக’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்டு ராயல் தியேட்டரில் சண்டை போட்டது, பெண்ணின் படம் வரைந்து பாகங்களைக் குறித்து வைத்தது..

உணர்ச்சிப் பெருக்கில் வெங்கடேஷ் கண்ணீர் துளிர்க்க சீராளனுக்கு வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான். ‘யார்னு தெரியுதால?’ ஐந்து நிமிடம் காத்திருந்தான். பதில் இல்லை. ‘வெங்கடேஷ்ல’ என்று அனுப்பினான். அதற்கும் பதில் இல்லை. தான் அனுப்பிய மெசேஜை சீராளன் படித்துவிட்டதாக வாட்ஸப் சொல்லியது. தன்னை மறந்துவிட்டானோ என்று வெங்கடேஷுக்குத் தோன்றியது. மீண்டும் தெளிவாக ‘வெங்கடேஷ், ப்ளஸ் டூல ஒண்ணா படிச்சோம்’ என்று மெசேஜ் அனுப்பினான். அப்போதும் பதில் இல்லை. வெங்கடேஷால் நம்பவே முடியவில்லை. சீராளனா இப்படி? இருக்காது என்று நினைத்து அவனை போனில் அழைத்தான். அழைப்பு கட் செய்யப்பட்டது. உடனே வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் வந்தது. ‘பிஸி.’ வேலையாக இருப்பான் போல என அமைதியாகக் காத்திருந்தான். அவனதுநினைவுகள் அவன் படித்த பள்ளியையே சுற்றி சுற்றி வந்தன.

அன்று முழுவதும் சீராளன் அழைக்கவோ மெசேஜ் அனுப்பவோ இல்லை. அன்று இரவு முழுவதும் சீராளன் நினைவாகவே இருந்தது வெங்கடேஷுக்கு. மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாக அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் வெங்கடேஷ். ‘ஃபீரியால?’ சீராளனிடம் இருந்து எந்தப் பதில் இல்லை. பத்து நிமிடம் காத்திருந்துவிட்டு, மீண்டும் போனில் அழைத்தான். அந்த அழைப்பையும் சீராளன் கட் செய்தான். உடனே வாட்ஸப்பில் இன்னொரு மெசேஜ் அவனிடம் இருந்து வந்தது. ‘பிஸி.’

இவன் எப்பவுமே இப்படி பிஸியாத்தான் இருப்பானா என்கிற எண்ணம் வந்தது வெங்கடேஷுக்கு. அவன் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த மெசேஜை சீராளன் அனுப்பி இருந்தான். ‘விஜயலட்சுமி நம்பர் இருந்தா அனுப்பி வை.’ வெங்கடேஷுக்குள் இருந்த முனியப்பன் அடுத்த மெசேஜை அனுப்பினான். ‘நீ பிஸின்னா தாயோளி நான் என்ன இங்க செரச்சிக்கிட்டால இருக்கேன்? நானும் பிஸி மயிருதான்.’

Share

பிண்டம்

ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையில் ஆரம்பித்தால் அடுத்த மூன்று மாதத்துக்கு உட்காரவே முடியாது என்று பத்மநாபனின் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். வரிசையாகப் பண்டிகைகள். ஆனால் இன்று அப்படிச் சொல்ல அந்த அம்மா இல்லை. அவள் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் அந்த வசனத்தை பத்மநாபன் சொல்ல ஆரம்பித்திருந்தார். முன் தலையில் ஒரு முடி வெள்ளையாகிவிட்டிருந்தது.

ஆடி அமாவாசைக்கு முதல்நாளே வேண்டிய எல்லா சாமான்களையும் வாங்கி வைத்துக்கொண்டார். ‘இலை வாங்கிட்டியாடா? உன் பொண்டாட்டி எதையும் ஞாபகப்படுத்த மாட்டா. இலை உங்க பையன் வாங்கிட்டு வரலைன்னா நான் என்ன பண்றதுன்னு சொல்லிக் காட்டுவா. அதோட நீங்களாவது ஞாபகப்படுத்திருக்கலாமே அத்தைம்பா’ என்று அம்மா பேசுவதைப் போலவே பத்மநாபனுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. கடைத் தெருவில் முதலில் இலையைத்தான் வாங்கினார்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை செய்துவிட்டு, தர்ப்பணம் விட்டுவிட்டு, பிண்டம் வைக்கத் தயாரானார். வீட்டில் செய்த அனைத்தையும் ஒரு இலையில் வைத்து, கொஞ்சம் எள்ளையும் சேர்த்துக் கொடுத்தாள் அவரது மனைவி. ‘நானும் கூட வரேன்ப்பா’ என்ற ஏழு வயது மகனிடம், ‘நீயெல்லாம் எதுக்கு? அவர் மட்டும் போகட்டும்’ என்று சொல்லிவிட்டாள் அவள். ஒரு கையில் தட்டு, அதன் மேல் இலையில் பிண்டம். இன்னொரு கையில் ஒரு செம்பில் நீருடனும், மொட்டை மாடிக்குப் போனார்.

மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி, அதன் மேல் பிண்டம் இருக்கும் இலையைத் தட்டுடன் வைத்து, பிண்டத்தை இரண்டாகப் பரப்பி வைத்தார். அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று. இலை பறக்காமல் இருக்க, அங்கே கிடந்த இரண்டு செங்கல்லையும் இலையின் மேல் ஓரமாக வைத்தார். கா கா என்று நான்கைந்து முறை கத்தினார். பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். பூணூலுடன் சட்டை போடாமல் ஒரு துண்டுடன் மட்டும் வந்தது அப்போதுதான் அவருக்கு உறைத்தது. மீண்டும் கா கா என்று கத்தினார். ஒரு காக்காயும் வரவில்லை. ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, மொட்டைமாடிக் கதவைத் தாழிட்டுவிட்டுக் கீழே வந்துவிட்டார். சாப்பிட்டார். உறங்கிப் போனார்.

ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று அம்மாவின் குரல் கேட்கவும் சட்டென விழித்தார். மணி ஐந்தரை ஆகி இருந்தது. காப்பி குடித்தார். அம்மா இருந்திருந்தால், மதியம் செய்த சித்ரான்னத்தையும் ஆமவடையையும், நமத்துப் போன அப்பளத்தையும், பாயாசத்தையும் கொண்டு வந்து தருவாள். பண்டிகை அன்று மாலைக் காப்பி கிடையாது. அந்த நினைவுடனேயே மொட்டை மாடிக்குப் போனார். கூடவே அவரது மகனும் வந்தான்.

தாழ்ப்பாளைத் திறந்து மொட்டைமாடிக்குப் போனவர் முதலில் பிண்டம் வைத்த தட்டைத்தான் பார்த்தார். அதில் ஒரு பருக்கை கூட இல்லை. அவருக்கு ஆச்சரியமாகிப் போனது. ஒரு பருக்கையைக் கூட விடாமல் அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டுவிட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார். மகனிடம் அதே சந்தோஷத்தில் சொன்னார். மகன் ‘தாத்தா பாட்டியாப்பா’ என்றான். ‘ஏம்ப்பா இவ்ளோ தூரம் வந்துட்டு கீழ வரலை’ என்று கேட்டவனை அப்படியே கட்டிக்கொண்டார். மகன் கேட்டான், ‘எங்கப்பா இலையைக் காணோம்? அதையுமா சாப்ட்டாங்க?’ என்றான். அப்போதுதான் கவனித்தார். தட்டின் மேல் இலை இல்லை. இலை பறக்காமல் இருப்பதற்காக அவர் வைத்த இரண்டு செங்கற்கள் மட்டும் இருந்தன. ஆடி மாதக் காற்றில் இலை பறந்திருக்குமோ என்று சுற்றிலும் பார்த்தார். எங்கேயும் இலை இல்லை. சுத்தமாகக் காற்றும் இல்லை. யாரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நொடி யோசித்தவர், ‘வாடா போகலாம்’ என்று பையனைக் கூட்டிக்கொண்டு விடுவிடுவெனக் கீழே வந்தார். மகன், ‘என்னப்பா?’ என்றான். ‘ஒண்ணுமில்லை’ என்றார்.

Share

திருமலை

பீட்டர் பாலாஜி என்று அவன் பெயரைச் சொல்லும்போது எல்லாருமே துணுக்குறுவார்கள். அது பீப்பாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவன் பீட்டர் பாலாஜி என்ற பீப்பாவாகி இரண்டு வருடங்கள் இருக்கும். உடம்பும்தான். மனதோடு சேர்ந்து உடலும் ரட்சிக்கப்பட்டுவிட்டது. ஏன் ஏன் என்று யார் கேட்டாலும் அவன் ஒரு மாதம் வாயே திறக்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்கும் மேரிக்கும் கல்யாணம் ஆனது. பீப்பாவின் வீட்டுப் பக்கத்தில் இருந்து ஒரு ஈ காக்காய் கூட வரவில்லை. தான் செத்தாலும் தன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று பாலாஜியின் அம்மா போட்ட சாபத்தில் உண்மையில் பீப்பா கொஞ்சம் நிம்மதியானான் என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்த  மூன்று மாதங்களில் குரோம்பேட்டையில் மூன்று அறை ஃப்ளாட் ஒன்று வாங்கிக் குடியேறினான். கேட்டட் கம்யூனிட்டி. மொட்டை மாடிக்குக் கூட்டிக்கொண்டு போன ப்ரோக்கர் அங்கே இருந்து தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைக் காண்பித்தான். பீப்பாவின் உள்ளம் நெகிழ்ந்தது. அந்த மலையில்தான் அவன் ரட்சிக்கப்பட்டான். அங்கேதான் அவன் முதன்முதலாக மேரியைப் பார்த்தான். மொட்டை மாடியிலேயே தேவாலயத்தின் மணி அவன் மனதுக்குள் கேட்டது. அந்த வீடுதான் என முடிவு செய்தான். வாழ்க்கை மாறியது. பழைய பழக்கங்கள், தொடர்புகள் என எல்லாவற்றையும் எளிதாக மறந்தான். புதிய வீட்டுக்குக் குடியேறினான். புது மனைவி. புதிய வாழ்க்கை.

தினம் தினம் மொட்டை மாடிக்கு வந்து தாமஸ் மவுண்ட்டை அங்கிருந்தபடியே பார்ப்பான். தாமஸ் கையில் ஜபமாலையுடன் அங்கும் இங்கும் திரிவதாகக் கற்பனை செய்துகொள்வான். ஒருநாளைப் போல ஒருநாள் மொட்டை மாடிக்கு வந்து தாமஸைப் பார்க்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. எல்லாமே அற்புதம்தான். அவ்வப்போது வந்து தொந்தரவு செய்யும் அம்மாவின் முகத்தைத் தவிர. ஒருநாள் அவளும் செத்துப் போனாள். ஷவரின் கீழே நின்று அரை மணி நேரம் குளித்ததில் பழைய எதுவும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளவில்லை என்று நிம்மதியானான். இரண்டு வருடங்களில் இரண்டு குழந்தைகள். வாழ்க்கை இத்தனை சுவாரஸ்யமானதா? அன்றுதான் திடீரென திருமலை அவன் வீட்டுக் கதவைத் தட்டினான். ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். எரிச்சலானான். லேசாகச் சிரித்தான்.

மேரி சிரிக்கக்கூட இல்லை. உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு “ம்” என்றாள். திருமலை அவர் வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பீப்பாவுக்கு ஒட்டவே இல்லை. அவனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனான். திருமலை லொட லொடவென பேசிக்கொண்டே இருந்தான். பீப்பா தலையைக் கூட அசைக்கவில்லை. அவன் போனால் போதுமென்று இருந்தது.

திருமலையைக் கவனிக்காமல் தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைப் பார்க்க ஆரம்பித்தான். மனதுக்குள் மணியோசை கேட்டது. தன் நெஞ்சில் இருந்த சிலுவையைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றான். திருமலை, “உன்கிட்டதான்டா பேசிக்கிட்டே இருக்கேன்” என்று சத்தமாகச் சொன்னபோதுதான் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தான். இவன் இன்னும் போகவில்லையா? பீப்பா சொன்னான், “என்ன சொன்ன?” திருமலை, “என்ன அங்க பாத்து நின்னுக்கிட்டு இருக்க?” பீப்பா சொன்னான், “தாமஸ் மவுண்ட். புனித தாமஸ். உனக்கெல்லாம் புரியாது.” திருமலை மலையைத் திரும்பிப் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். மலையைப் பார்த்தபடியே சொன்னான், “இதுவா? தாமஸ் மவுண்ட்டா? இந்தப் பக்கம் எப்படிடா தாமஸ் மவுண்ட்டு? இது திருநீர் மலைடா.”

தொப்பென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோதுதான் பீப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு பீப்பாயைப் போலச் சரிந்து விழுந்து கிடந்தது திருமலைக்குத் தெரிந்தது.

Share

கனவுகள்

விதவிதமான கனவுகள். அந்த அளவுக்கு இருந்தாலும் பரவாயில்லை. கலவரமூட்டும் கனவுகள். ராமநாதனுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பயம் இல்லை, ஆனால் என்னவோ ஒரு சின்ன நெருடல். தினம் தினம் கனவா? அந்தக் கனவுகளுக்குள் என்னவோ இருப்பதாகத் தேடினான். எங்கோ ஒரு திருப்பத்தில் எதோ ஒரு பிணம் என்பதாகக் கனவு வரும். பக்கத்தில் போய்ப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருக்கும். சுற்றி இருப்பவர்களைப் பார்த்தால் எல்லாருமே உறவினர்கள் போல இருக்கும். விழிப்பு வந்துவிடும். இன்னொரு நாள் கனவில் எதோ ஒரு விபத்து என்று வரும். சுற்றிலும் உறவினர்கள் நிற்பார்கள். இவன் அருகில் நெருங்கிப் போகவும் விழிப்பு வந்துவிடும்.

இப்படி வகை வகையான கனவுகள், கொஞ்சம் நெருடலூட்டும் கனவுகள். மனைவியிடம் சொல்லலாம். உடனே அவளுக்கு நெற்றியில் வேர்க்கும். லேசாக மூச்சு வாங்கும். அப்படியே சாய்ந்துவிடுவாள். எனவே யோசித்தான்.

மலையாள மாந்த்ரீகரிடம் போனான். அவர் பிரசன்னம் பார்த்தார். மறைக்காமல் சொன்னார். “என்னவோ நடக்கப் போகிறது. எதோ ஒன்று துரத்துகிறது. முடிந்த வரை ஓடு. ஆனால் தப்பிப்பது கஷ்டம். கவனம்.”

ராமநாதன் தன் மகன் மகளிடம் சொல்லலாமா என்று யோசித்தார். காலேஜுக்குப் போகும் வயசில் இது எதற்கு அவர்களுக்கு? வேறு வழியில்லை, மனைவியிடம் சொல்லி விட வேண்டியதுதான். பக்குவமாக. மிகப் பக்குவமாக.

மனைவியை அழைத்து சூடாக ஒரு டீ கொடுத்தார். உடல்நிலையை விசாரித்தார். புதிய கணவனைப் பார்த்தது போல் அவள் கலவரத்துடன் “என்னங்க?” என்றாள். அவள் நெற்றியில் லேசாக வியர்வை. ராமநாதன் சொன்னார், “ரிலாக்ஸ். ரிலாக்ஸ். கூல்.” ஏசியை பதினெட்டில் வைத்தார். அவள் குளிர்ந்தாள்.

மெல்ல மெல்லச் சொன்னார். மூன்று மாதக் கனவுகளைச் சொன்னார். அவள் கண்கள் அகல விரிந்தன. கனவுகளின் வசீகரத்தில் அவளுக்கு வேர்க்கவில்லையோ. நிம்மதியானார். கடைசியாகச் சொன்னார், “ஒவ்வொரு கனவுலயும் என்னமோ நடக்குது. நம்ம உறவுக்காரங்க சுத்தி நிக்கறாங்க.” அவளது கண்களையே பார்த்தார்.

அவள் ஆச்சரியத்தோடு சொன்னாள், “எனக்கும் இதே கனவுங்க. அப்படியே டிட்டோ. அதே மூணு மாசமா. என்னால நம்பவே முடியலைங்க. எப்படிங்க இது? அடிபட்டு கிடக்கிறது, ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கிறது ஆம்பளைக் கால்ங்க.” ஏசியை மீறி ராமநாதனுக்கு நெற்றியில் வேர்த்தது.

Share

கணிகன்

தென்கரைமுத்து எப்போதாவதுதான் என் அலுவலகத்துக்கு வருவான். சென்னையின் மிகப் பிரபலமான வண்ணத்துப் பூச்சி மேம்பாலத்துக்கு அருகே உள்ள ஒரு பழைய கட்டடத்தில் அலுவலகம். தேசலான காகிதம் காற்றில் மிதந்து வருவதுபோல வரும் தென்கரைமுத்து எங்கள் அலுவலகத்தில் டீ கொண்டு வந்து தரும் பெண்ணையே பார்த்துக்கொண்டிருப்பான். அவள் ஆயிரம் கஷ்டங்களில் அலைந்தபடி இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாள். அவள் மதிக்காததை இவன் மதிக்கவே மாட்டான். அவளையே பார்த்தபடி இருப்பான்.

இன்று தென்கரைமுத்து வந்திருந்தான். கூடவே கருத்த கோடு போல ஒரு பையனும் வந்தான். தென்கரைமுத்து நேரே என் அறைக்கு வந்து எனக்கு எதிரே உட்கார்ந்துகொண்டான். கூட வந்த பையன் கையைக் கட்டி நின்றுகொண்டிருந்தான். “டீ சொல்லவால?” என்ற கேள்வியை தென்கரை கண்டுகொள்ளவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது.

பக்கத்தில் இருக்கும் பையனைக் காட்டி, “இவன் ஜோசியம் சொல்வானாம்” என்றான். ஜோதிடமெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பது தென்கரைக்குத் தெரியும். “எல்லாம் பித்தலாட்டம்” என்று சொல்ல வாயெடுத்தவன், அருகில் நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்து அமைதியானேன். தென்கரை சொன்னான், “பித்தலாட்டம்னுதான சொல்ல வார? அவனுக்கு காது கேக்காது, வாயும் பேச வராது. நீ என்ன வேணா சொல்லலாம்.”

ஆச்சரியமாக அவனைப் பார்த்தேன். பிறகு எப்படி ஜோசியம் சொல்வான்? ஆர்வமாக எங்கள் கண்களையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“எங்க ஆஃபிஸ்ல நாலஞ்சு பேருக்கு பாத்தான். அப்படியே நேர்ல பாத்தாமாரி சொல்லுதாம்ல. அதான் இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். ஜோசியம் பாக்க காசே வேண்டாங்கான். ஒரு டீ போதுங்கான்” என்றான். சிரித்தபடியே, “இப்படித்தாம்ல ஆரம்பிப்பானுவொ. பின்னாடி பரிகாரம்பான், செய்வினைம்பான், எடுக்கணும்பான்” என்றேன். “அப்படி சொன்னா கூட்டி வருவேனால?” என்று தென்கரை சொன்னதும் அந்தப் பையனை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தேன். அதிகபட்சம் 20 வயது இருக்கலாம். கருத்து மெலிந்து கைகளைக் கட்டிப் பணிவாக நின்றவன் ஆர்வமாக எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“மொதல்ல நான் பாக்கேன். எங்க ஆஃபிஸ்ல வெச்சி பாத்து இவன் எதாவது ஏடாகூடமா சொல்லிட்டா பிரச்சினைன்னுதான் இங்க கூட்டியாந்தேன்” என்றவன், தன் கையை அந்தப் பையனிடம் நீட்டினான்.

அந்தப் பையன் அவன் கைகளைக் கூர்ந்து நோக்கிவிட்டு, சைகையில் சொல்ல ஆரம்பித்தான். தென்கரையின் அப்பா கண்டக்டராக இருந்தவர். அம்மாவுக்கு தீராத வியாதி. இவன் ஒரு பையன் மட்டுமே. இவனுக்கும் ஒரு பையன் மட்டுமே. பையனுக்கு எதிர்காலம் கணினி துறையில். எல்லாவற்றையும் சொன்னவன், தென்கரைக்குப் பெண்கள் மேல் இருந்த தீரா மயக்கத்தையும் சொல்ல ஆரம்பித்தான். பெண்கள் போல் சைகை செய்தவன் அவனைப் பார்த்து 4 விரல்களைக் காண்பித்து பின்னர் நான்கு நான்கு விரல்களாக நான்கைந்து முறை காண்பிக்கவும் தென்கரை சொன்னான், “சரிடே.. நிறுத்துடே” என்றவன் என்னைப் பார்த்து, “தாயலி.. கூட இருந்து பாத்த மாதிரியே சொல்லுதானே.”

தென்கரை என் கையைக் காட்டச் சொன்னான். “படுத்தாத.. இதெல்லாம் ஃப்ராடு” என்றேன். “புட்டு புட்டு வைக்கான் கண்ணு முன்னாடியே.. பணம் வேண்டாங்கான். இதுல என்னல ப்ராடு?” என்றவன் என் கையை இழுத்து அவனிடம் நீட்டினான். அந்தப் பையன் என் கைகளைக் கூர்ந்து நோக்கினான். பின்னர் என் கண்களைக் கூர்ந்து நோக்கினான். உடனே பெண் போல சைகை செய்து, கழுத்தில் தாலி கட்டுவது போலவும் சைகை செய்து, ரெண்டு ரெண்டு என்று விரல்களைக் காட்டினான். தென்கரை என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான், “அடப் பக்கி.. ஃப்ராடு நீதாம்ல.”

அவனிடம் இருந்து கைகளை உதறிக்கொண்ட நான், உடனே என் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து, கையெடுத்துக் கும்பிட்டு அவனைப் போகச் சொன்னேன். “எதுக்குல இவ்ளோ பணம்?” என்று சொன்ன தென்கரையை நான் பொருட்படுத்தவே இல்லை. பணத்தை வாங்கிக்கொண்ட அந்தப் பையன் என் கண்களையே கூர்ந்து பார்த்துவிட்டு வெளியே போனான். அவன் போனதும் தென்கரை சொன்னான், “எதுக்குல இவ்ளோ பணம் கொடுத்த? ஏன் இப்படி பதர்ற? உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் சொல்லிட்டா ஆச்சா?”” நான் சொன்னேன், “அவன் ரெண்டு பொண்டாட்டின்னு சொன்னதே கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு மக்கா. அதான்.”

Share