Tag Archive for பாஜக

ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்

கரு.நாகராஜன் ஜோதிமணியைப் பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று. பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது.

பெண்களை என்று மதிக்காத திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ அத்தனை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நாகராஜனைக் கண்டிக்க என்ன தகுதி உள்ளது? நாகராஜன் ‘கேவலமான மகளிர்’ என்று சொன்னார். ஆனால் இவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்? கருணாநிதி சிலேடையாகப் பேசுவதாகப் பேசிய பேச்சை எல்லாம், அவரது தமிழ்ப் புலமைக்கும் கழக ஆண்களின் ஆண்மைக்கும் சான்றாகச் சொல்லி விதந்தோதியவர்களே இவர்கள். இவர்களது வரலாறே பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டியதிலும் அவமானப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. ஆனால் பேச்சிலும் எழுத்திலும் மட்டும், அடேயப்பா!

ஜெயலலிதாவையும் மோடியையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இன்று அவரது கட்சியைச் சேர்ந்தவரை நாகராஜன் விமர்சிக்கவும் அந்தக் கட்சியே மிக யோக்கியமானவர்கள் போலப் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நாகராஜன் பேசிய கேவலமான பேச்சைவிடப் பல மடங்கு கேவலமாகப் பேசி இருந்தார் இளங்கோவன்.

திருமாவளவன் – இவர் காயத்ரி ரகுராம் பற்றிப் பேசியது,  (“குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில்”) நாகராஜன் பேசியதே பரவாயில்லையே என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரமானது. திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து அவரது கட்சியினர் மிக மோசமாக காயத்ரி ரகுராமைக் கீழ்த்தரமாக எழுதினார்கள். திருமணத்துக்கு முந்தைய உறவு பற்றி குஷ்பூ ஒரு கருத்துச் சொல்லப் போக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் குஷ்பூவை அரசியல் ரீதியாக ஓட ஓட விரட்டின. அந்த சமயத்தில் குஷ்பூ திரைப்படங்களில் பிற நடிகர்களுடன் நெருக்கமாக நடித்த படங்களை எல்லாம் இணையத்தில் கொட்டி குஷ்பூவைக் கட்டம் கட்டினார்கள். இன்று இவர்கள் பாடம் எடுக்கிறார்கள்.

இந்த விவகாரம் பற்றித் தமிழ் தி ஹிந்து வலைத்தளத்தில் ஒரு செய்தி (https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html) பார்த்தேன். நாகராஜன் திட்டியதைப் பற்றி மட்டும் போட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கல்லால் மக்கள் அடிப்பார்கள் என்று ஜோதிமணி பேசியதைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இதுதான் ஊடகங்களின் லட்சணம்.

திமுகவின் வெற்றிகொண்டான் பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. வெற்றிகொண்டான் உள்ளிட்டவர்களை நாம் விமர்சித்தால், இந்த ரசிகர்கள் உடனே வந்து நமக்குப் பாடம் எடுப்பார்கள். வெற்றிகொண்டான் பேச்சு கழகக்காரர்களை உற்சாகப்படுத்தவாம். திமுகவின் கட்சி மாநாடு நடந்தபோது நாடகம் என்கிற பெயரில் ஜெயலலிதாவை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து இரட்டை அர்த்த வசனத்துடன், சொல்லவே கூச்சம் ஏற்படும் வகையில் ஒரு நாடகம் போடப்பட்டது. கருணாநிதி, அவரது குடும்பம் உட்பட அனைத்து முன்னணித் தலைவர்களும் அதைப் பார்த்தார்கள். சில முன்னணி தலைவர்களே மேடையில் இரட்டை அர்த்தத்துடன் பேசினார்கள். பின்னர் அடுத்து அதே போல அதிமுக மாநாட்டில் அதே போன்ற இரட்டை அர்த்த வசனத்துடனும் கேவலமான சொற்பிரயோகங்களுடனும் கருணாநிதிக்குப் பதிலடி தரப்பட்டது. (http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html and https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952).

இப்போது நாகராஜனுக்குப் பாடம் சொல்கிறார்கள்.

வெற்றிகொண்டான் என்றில்லை, தலைவர்கள் வரை இவர்களது செயல்பாடு இப்படித்தான். இதையேதான் பாஜகவும் பின்பற்ற நினைக்கிறதா என்பதைத்தான் இப்போது பாஜகவும் பாஜகவினரும் பாஜகவின் ஆதரவாளர்களும் யோசிக்கவேண்டும். இதுவே பழக்கமாகவும் பின்னர் வரலாறாகவும் மாறிவிட்டால் அதனால் ஏற்படும் அவமானத்தை எப்போதும் துடைக்கவே முடியாது.

பெண்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் ஒருவரைத் திட்டவும் தகுதி வேண்டும். அந்தத் தகுதி நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வராது. அது தொடர்ச்சியான ஒன்று. எந்தக் கட்சியினர் பேசினாலும், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களே என்றாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் ஒரு அரசியல்வாதியைக் கண்டிக்காத வரை, மற்ற அரசியல்வாதிகளைக் கண்டிக்க யாருக்கும் தகுதி இல்லை. நாகராஜன் பேசியதைவிட தரக்குறைவாகப் பேசிய ஈவிகேஸ் இளங்கோவனையும் திருமாவளவனையும் கண்டித்துவிட்டுப் பின்னர் நாகராஜனுக்கு வாருங்கள். ஈவிகேஎஸ், திருமாவளவன், ராதாரவி, நாகாரஜன் உள்ளிட்ட அனைவரையும் கண்டிப்பவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.

-oOo-

துக்ளக்கில் வெளியான தொகுப்பு சேமிப்புக்காக இங்கே:

நாகரிகமான பேச்சு. இந்தப் பேச்சின்போது கருணாநிதியின் குடும்பமே மேடையில் இருந்தது. பெண்களை மதிக்க, பெண்களுக்காக போராட திமுகவை விட்டால் நாதியில்லை!!!

கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே…

சில சாம்பிள்கள்…

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே “தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்” என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், ” இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்… அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா “
என்றவர், ” அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!” என்று குறிப்பிட்டார்.

* கருப்பசாமி பாண்டியன், “பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, “அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்” என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* பரிதி இளம்வழுதி, ” கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!” என்று விளக்கம் அளித்தார்.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
“ஆண்டியும் போண்டியும்” என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்…

** “ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!”

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: ” அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க”

** “ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”

“யாரு? அந்த…… குச்சியிலே கோவணம் கட்டியவனா?”

** “நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்… அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க..”

(சுசி என்ற பெயருடைய அந்தச் ‘சின்னம்மா’ வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: “இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை.”

சின்னம்மா (சுசி) கூறுவது:

“…கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே”

** ஒருவர்; ” என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?”

மற்றொருவர்: ” எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!”

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
“உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்”

ஆண்டி” உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : “லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது… கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது”

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: “எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? “

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா… புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா…..
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே… ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

” எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க”

( நன்றி: துக்ளக் 1.10.03 )

Share

யாருக்கு வாக்களிப்பது – 2019 நாடாளுமன்றத் தேர்தல்

* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.

* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.

* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.

* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.

* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.

* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.

* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.

* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Share

தேமுதிக கூட்டணி

பாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.

அதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.

தேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.

2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

Share

தூக்கு

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கடும் எரிச்சலாக இருந்தது. ஒரு காங்கிரஸ் ஜால்ரா என்பதாகவே என் மனப்பதிவு இருந்தது. ஆனால் கசாப், அப்சல் தூக்கு வரிசையாக நிறைவேற்றப்பட்டபோது ஆச்சரியமாகவே இருந்தது. உண்மையில் பாஜக அரசு அமைந்திருந்தால்கூட இத்தனை உறுதியாகச் செயல்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பேரும் இஸ்லாமியர்கள் என்பதால், ஒருவேளை பாஜக ஆட்சியில் இருந்து இந்தத் தூக்குகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், முற்போக்காளர்கள் இன்னும் கடும் வீச்சில் செயலாற்றியிருப்பார்கள்.

இரண்டு தூக்குமே சரியான காரணங்களுக்காக நிறைவேற்றப் பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் நிறுத்தவேண்டும் என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது. இதை நான் ஏற்கவில்லை. கடவுள் தந்த உயிரை மனிதன் பறிக்கக்கூடாது என்பதில் இருந்து, காட்டுமிராண்டித்தனம் என்பது வரையிலான காரணங்கள். இவற்றையெல்லாம் மீறி ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை தரப்படுகிறதென்றால் அக்குற்றம் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும் என்றே பார்க்க நினைக்கிறேன். அஹிம்சையை போதித்த காந்தியைக் கொன்றவர்களுக்கு எப்படி தூக்குத் தரலாம் என்பதற்கான பதிலாக, காந்தி கொலை வழக்குத் தீர்ப்பில் சொல்லப்பட்ட பதில், காந்தி போன்ற அஹிம்சாவாதியைக் கூட ஒருவன் கொன்றுவிட்டு தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே கோட்ஸேவுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தாராம். (எனது இந்தியா புத்தகத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார், விகடன் வெளியீடு.)

கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத் தண்டனைகளைவிட, கடந்த இரண்டு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகள் இரண்டு மடங்கு என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது கடந்த இரண்டு மாதங்களில் 2 பேரைத் தூக்கிலிட்டதை இப்படிக் குறிக்கிறார்கள். மிக வசதியாக, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களைப் பற்றி இவர்கள் பேசுவதில்லை. அதேபோல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பு, இறந்தவரின் கடைசிகால நிமிடங்களை விவரிப்பது, அவர்களது குடும்பம் படும் வேதனைகளைச் சொல்லி அனுதாபம் தேடுவது என்பதும் நிகழ்கிறது. எந்த ஒரு மனிதனின் சாவும் கொடுமையானதே. ஆனால் இவர்கள் தாங்கள் பிற மக்களைக் கொன்று குவிக்கும்போது, அவர்களின் கடைசி நிமிடங்களையோ அவர்களது குடும்பத்தின் கதறல்களையோ யோசிப்பதில்லை. இவர்களுக்கு இன்று வக்காலத்து வாங்குபவர்களும் அவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தீவிரவாதத்தை பல காரணங்களுக்காக ஆதரிக்க நினைப்பவர்களின் எளிமையான முகமூடியே இந்த அனுதாபம். எனவே அதையும் நான் ஏற்கவில்லை.

எந்த எந்தக் குற்றங்களுக்குத் தூக்குத் தணடனை தரலாம், தரவேண்டாம் என எனக்கென ஒரு தனி மனப்பதிவு உள்ளது. இந்தியாவை அதிரவைக்கும் ராஜதுரோக குற்றங்கள் (கசாப், அப்சல்) கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிப்பது (சீக்கிய, இஸ்லாமிய, ஹிந்து மக்கள் கொல்லப்படுவதுபோன்ற குற்றங்கள்) ஒரு குறிப்பிட்ட இனத்தைக் கொன்றொழிப்பது (ராஜபக்ஷே) போன்றவற்றுக்குத் தூக்குத் தண்டனைதான் சரியான தண்டனை என்பது என் நிலைப்பாடு. இது ஒரு நீதிபதியின் கண்ணோட்டத்தில் எப்படி சாத்தியமாகிறது என்பது பெரிய விஷயம் என்பதும், என் சிந்தனை திண்ணைப் பேச்சு மாதிரி இருக்கிறது என்பதும் எனக்கே புரிகிறது. Issue based என்பதாகத்தான் இதுவரை தூக்குத் தண்டனை இருந்து வந்திருக்கிறது. அதுவும் சரியாகவே இன்றுவரை இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது.

perarivaalan-murugan-santhan

தூக்குத் தண்டனையைப் பொருத்தவரை, குற்றத்தின் தண்டனை, அது நிகழ்ந்த காலம், அக்குற்றத்தின் இன்றைய தீவிரம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம். குற்றத்தின் இன்றைய தீவிரம் என்பதை மையப்படுத்தும்போதுதான் வீரப்பன் சகா நால்வருக்கும், ராஜிவ் கொலையில் காத்திருக்கும் மூவருக்கும் தூக்குத் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

வீரப்பன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. எத்தனையோ பொதுமக்கள், போலிஸ் அதிகாரிகளைக் கொன்று குவித்துள்ளார். ஆனால் 2004ல் வீரப்பன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இன்று வீரப்பன் சகாக்களுக்குத் தூக்குத் தரப்படுவது எந்த விதத்தில் சரியான தீர்ப்பாக இருக்கப்போகிறது என்பது புரியவில்லை. நீதிமன்றம் தூக்கு என்று அறிவித்த வரையிலும் சரி. ஆனால் பிரணாப் கருணை மனுவை ஏற்றுக்கொண்டிருக்கலாம் – அக்குற்றம் இன்றைய நிலையில் எவ்வித பின்விளைவையும் ஏற்படுத்தாது என்ற நிலையை அடைந்துவிட்டதைக் கருத்தில் கொண்டு. வீரப்பனை தமிழ்த்தியாகியாக உருவகித்து, அவரது சகாக்களைப் பாதுகாக்க சிலர் முனைகிறார்கள். வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா வாலாட்டுமா என்று பொறுப்பட்டுப் பலர் பேசுகிறார்கள். தமிழர் நிலைப்பாட்டை முன்வைத்து வீரப்பன் சகாக்களைக் காக்க முயல்கிறார்கள். இது எதுவுமே சரியானதல்ல. ஆனாலும் இந்நிலையிலும் வீரப்பன் சகாக்களுக்கு தூக்குத் தேவையல்ல என்பதே என் நிலைப்பாடு.

ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்குத் தரப்பட்டிருக்கும் தூக்குத் தொடர்பாக என் நிலைப்பாடும் இதுவே. புலிகள் இன்று வேரறுக்கப்பட்டுவிட்ட நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இந்த மூவருக்குத் தூக்கு என்ன சாதிக்கப்போகிறது? பிரபாகரனோ வீரப்பனோ உயிருடன் இருந்து அவர்களது பயங்கரவாதமும் நடைமுறையில் இருக்குமானால் நாம் வேறு மாதிரியாகச் சிந்திக்கவேண்டியிருக்கும். இப்போது அச்சூழல் இல்லை. (ராஜிவ் கொலைவழக்கில் தூக்குக்குக் காத்திருக்கும் மூவரும் குற்றமிழைக்காதவர்கள், எனவே விடுதலை செய்யப்படவேண்டும் என்ற வாதத்தை ஏற்கவில்லை. உண்மையில் இந்த வாதம்தான் அவர்களுக்கு எதிராகத் திரும்பும் என்று தோன்றுகிறது. குற்றமிழைத்தவர்கள் என்றாலும், இன்றைய நிலையில் தூக்கு தேவையில்லை, ஆயுள் தண்டனை போன்றவற்றைப் பரிசீலிக்கக் கோருவதே பொது மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்பதோடு சரியானதாகவும் இருக்கும்.)

ஒருவேளை நால்வருக்கும் மூவருக்கும் தூக்கு நிறைவேற்றப்பட்டால், கசாப் அப்சலோடு சேர்த்து 9 தூக்குகள். பிராணப்பை நினைத்தால் கொஞ்சம் கலவரமாகவே இருக்கிறது. வீரப்பன் சகாக்களுக்கு இன்று தூக்கு நிறைவேற்றப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. அப்படி நினைவேற்றப்பட்டால், இந்தியாவின் உலக முகம் தொடரும் தூக்குகளால் நிர்ணயிக்கப்படுமோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது. அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே தூக்கு, அதிலும் கடைசிவரை கருணை மனு செய்யும் வாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டுக்கு இம்முகம் ஏற்புடையதல்ல. தேவையற்ற தூக்குகளை நிறுத்தி, மிக அரிதான வழக்குகளுக்கு தூக்கு வழங்குவதே சரியானது.

வெறும் நியாயங்களோடு எல்லாம் முடிவடைந்துவிடவில்லை என்பதற்காகத்தான் கருணையின் வழியே முடிவைத் தீர்மானிக்கும் வசதியை உலகநாடுகள் வைத்திருக்கின்றன என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும்.

Share

மலர்மன்னன் – சில நினைவுகள்

மலர்மன்னன் இறந்துபோவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் என்னிடம் பேசியிருந்தார். அவர் எழுதி, திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டிருந்த வந்தேமாதரம் நூல்களை விற்பது தொடர்பாகவும் அதை மார்கெட் செய்வது தொடர்பாகவும். இரண்டு நாளில் அவரது மரணச் செய்தி வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலர்மன்னன் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய, அவருடன் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. இப்போதும்கூட மலர்மன்னனுடன் நெருங்கிப் பழகியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் சொன்ன மலர்மன்னனாகத்தான் அவர் எனக்கு பெயரளவில் அறிமுகமானார். அவரைப் பற்றிய எனது மனப்பதிவு அவர் கடும் பிராமண சாதிய ஆதரவாளர் என்பதே. அதே மனப்பதிவோடுதான் அவர் எழுதிய புத்தகங்களை நான் வாசித்தேன். அதே தீர்மானத்தோடுதான் அவர் எழுதிய புத்தகங்களையும் புரிந்துகொண்டேன். நான் எழுதிய புத்தக விமர்சனம் கூட அதே நிலைப்பாட்டில்தான் இருந்தது. அதைத் சரியாகப் புரிந்துகொண்ட மலர்மன்னன் அதற்கு ஒரு பதிலும் எழுதியிருந்தார்.

நான் மலர்மன்னனை முதலில் சந்தித்தது, எனி இந்தியன் பதிப்பகம் சார்பாக கலந்துகொண்ட சென்னை புத்தகக் கண்காட்சியில். உண்மையில் அவரை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. கையில் ஒரு புத்தகத்துடன் அதை விற்பனைக்கு வைக்கமுடியுமா என்று கேட்டு வந்தார். நான் எனி இந்தியன் உரிமையாளர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன். அவரே கோபால் ராஜாராமுடன் பேசுவதாகச் சொன்னார். அவர் சென்ற பிறகு, எனக்கு அருகில் இருந்த விருட்சம் அழகியசிங்கர், அவர் யாரென்று தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். அவர்தான் மலர்மன்னன், கோபால் ராஜாராமுக்கெல்லாம் தெரியும், முன்பு கால் என்று பத்திரிகை நடத்தியிருக்கிறார், தற்போது முண்டா பழங்குடியினர் பற்றி அவர் எழுதியிருக்கும் கண் விழித்த கானகம் என்னும் நாவலை விற்க உங்களிடம் கேட்கிறார் என்றார். நாவலுக்கு பெயர் கண் விழித்த கானகமா, எப்படிங்க யார் வாங்குவா என்றேன். இப்படித்தான் முதன்முதலில் மலர்மன்னனை அறிந்துகொண்டேன். (இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. இனி படிப்பேன்.)

அடுத்த அறிமுகம் – காலச்சுவடு நடத்திய கூட்டம் ஒன்றில், அவர் தனது கருத்துகளைக் கடுமையாக முன்வைத்தபோதுதான். ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடந்த கூட்டத்தில், சல்மா பங்குபெற்ற மேடை ஒன்றில், வழக்கம்போல மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து இயக்கங்களுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. (இதைத் தவறு என்று சொல்லவில்லை, என் கருத்தாக மட்டும் சொல்கிறேன்.) பின் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பிராவஹன் அக்கருத்துக்களை மிகக் கடுமையாக எதிர்த்தார். எழுந்து நின்று சத்தம் போட்டார். அதைவிட உரத்தகுரலில் முதல் வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. அது மலர்மன்னனின் குரல். கண்ணன் மேடையேறி என்னென்னவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தார். ஆனால் மலர்மன்னனும் பிரவாஹனும் ஓயவே இல்லை. எனவே அம்மேடை பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மேடையில் கிருஷ்ண ஆனந்தும் இருந்ததாக நினைவு. இதைப் பற்றி அடுத்த காலச்சுவடு இதழில் சல்மா, கண்ணன், மலர்மன்னன், பிரவாஹன் எல்லாருமே எழுதியிருந்தார்கள் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் மலர்மன்னன் வெண்ணிற பைஜாமாவில் வருவது வழக்கம்.

அதற்குப் பின்பு மலர்மன்னனைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் நல்லதாக இல்லை என்பதே உண்மை. அவையெல்லாம் உண்மையா புரட்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதை எனக்குச் சொன்ன நண்பர்கள் நிச்சயம் பொய் சொல்பவர்களோ புரட்டாளர்கலோ அல்ல என்பது உறுதி. அதுமட்டுமல்லாமல், அவர்களே மலர்மன்னன் மேல் மிகுந்த மரியாதை உடையவர்களாகத்தான் இருந்தார்கள், அத்தனைக்குப் பிறகும்.

இந்த அடிப்படையில்தான், கிழக்கு வெளியிட்ட திமுக உருவானது ஏன் என்ற, மலர்மன்னன் எழுதிய நூலை வாசித்தேன். இத்தனை மனச்சாய்வுக்குப் பிறகும், அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. திமுகவை எதிர்க்க, மலர்மன்னனின் சாய்வு மிகச் சரியாகப் பொருந்திப் போய்விட்டதும், அதோடு என் அரசியல் சாய்பு பொருந்திப் போய்விட்டதும் காரணம் என யூகிக்கிறேன். அதைவிட எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மலர்மன்னனின் எழுத்து நடை. மிகத் தெளிவானது, குழப்பமில்லாதது. சில இடங்களில் நக்கலுடன் கூடியதும்கூட. இது அவரது புத்தகத்தை மிக விரைவாக வாசிக்க வைத்தது. மலர்மன்னனின் புத்தகங்களெல்லாம் விற்பனை ஆகுமா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவரது புத்தகம் ஓரளவு நன்றாகவே விற்பனை ஆனது, ஆகிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.

காந்தியைப் பற்றிய தீவிர ஹிந்துவின் பார்வையாக (நான் அதை ஹிந்துத்துவாவின் பார்வை என ஏற்கவில்லை) மலர்மன்னன் எழுதிய கட்டுரைகள், அதன் சாய்வை மையமாக வைத்தே மிக முக்கியமானவையாகின்றன. நவகாளி பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட மலர்மன்னின் கட்டுரை மிக அசத்தலாக இருந்தது. இதை அப்போதே பலருடன் பகிர்ந்துகொண்டேன்.  அதேபோல் காந்தியையும் கோட்சேவைப் பற்றிய பதிவும் முக்கியமானது. (இதை இன்று தேடியபோது டோண்டுவின் பதிவில் கிடைத்தது. டோண்டுவுடன் எனக்குப் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை ஹாய் சொல்லியிருக்கிறேன். அவரும் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.)  மலர்மன்னன் காந்தியை மோகன் தாஸ் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார். இன்றைய ஹிந்து இஸ்லாம் பிரச்சினைக்கு காந்தியே காரணம் என்று நம்பியிருக்கவேண்டும்.

இப்படி மலர்மன்னன் பற்றிய என் புரிதல் இருந்த நேரத்தில், மலர்மன்னனின் ஆர்ய சமாஜம் கிழக்கு வெளியீடாக வெளிவந்தது. மலர்மன்னனுக்காகவே அந்த நூலை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அதற்கு ஒரு மதிப்புரை போல ஒன்றை எழுதினேன். மலர்மன்னன் அதற்குப் பதில் எழுதியிருந்தார். வழக்கம்போல என் பார்வை, மலர்மன்னன் ஒரு பிராமண ஆதரவாளர் என்பதை மையமிட்டதாக இருந்தது. அதை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில் திராவிட இயக்க நூற்றாண்டு வந்தது. இதை ஒட்டி மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் கொண்டு வர கிழக்கு பதிப்பகம் முடிவு செய்திருந்தது. ஒரு புத்தகம் ஒரு தலித்தின் பார்வையில் இருந்து, இன்னொரு புத்தகம் ஒரு திமுக ஆதரவாளரிடமிருந்து. இன்னொரு புத்தகம் ஹிந்துத்துவப் பார்வையிலிருந்து. ஹிந்துத்துவப் பார்வையில் இருந்து வரவேண்டிய புத்தகத்தை மலர்மன்னன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பத்ரியிடம் சொன்னேன். எனது தனிப்பட்ட ஆசை, அது பிராமணப் பார்வையிலிருந்தும் வரவேண்டும் என்பதே. ஆனால் இதை நான் மலர்மன்னனிடம் சொல்லவில்லை. மலர்மன்னனுடன் பணி புரிவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதே ஒரு பொதுக்கருத்தாக இருந்தது. அதைமீறி அவர் அப்புத்தகத்தை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவருடன் பேசுவது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போதுதான் அவரிடம் நான் தனிப்பட்டமுறையில் முதன்முறையாகப் பேசினேன்.

நான் அவர் புத்தகங்களுக்கு எழுதிய விமர்சனங்களை நினைவு கூர்ந்தார். நம்ம, நாம என்றே பேசினார். ஒரு ஜி வட்டம் உருவாகிவிட்டதை உணர்ந்தேன். அவர் எழுதி ஏற்கெனவே வெளிவந்த திமுக உருவானது ஏன் புத்தக எடிட்டிங்கில் அவருக்கு சில மனக்குறைகள் இருந்தன. அவற்றைச் சொன்னார். இம்முறை அப்படி நேராமல் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். இந்தப் புத்தகம் குறித்து பத்ரியைச் சந்தித்துப் பேச வந்தார்.

அவர் பத்ரியைச் சந்திக்கவந்தபோது அது மலர்மன்னன்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த தாடி மட்டும் இல்லை என்றால் நிச்சயம் குழம்பியிருப்பேன். வெறும் காவி வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். மேலே ஒரு காவித் துண்டு. என்ன ஜி இப்படி என்றேன். எல்லாத்தையும் விட்டாச்சு, சந்நியாசம் வாங்கிட்டேன், உங்களுக்குத் தெரியாதா என்றார். கையில் இருந்த வாட்ச்சைக் காட்டி, ஒரு நண்பர் அன்பா கொடுத்தார்ன்றதால இதை கட்டிக்கிட்டு இருக்கேன், சந்நியாசிக்கு எதுக்கு வாட்ச் சென்றார். திராவிட இயக்கத்தை எக்ஸ்போஸ் செய்யணும் ஜி என்றேன். அப்படி முன்முடிவோடல்லாம் எழுதவேண்டியதில்லை என்றார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. எனக்கு இருந்த பயம், மற்ற பார்வைகளில் இருந்து வெளிவரும் புத்தகங்கள் மிகவும் சரியான பார்வையோடு இருந்து, ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தில் வரும் மலர்மன்னனின் புத்தகமும் திராவிட இயக்கத்துக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவு அளித்துவிட்டால் என்னாவது என்பதுதான். மலர்மன்னனின் அந்த பதில் எனக்கு அப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்துவிட்டது. என்ன என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் முதல் மீட்டிங்கிலேயே முடிவுசெய்துவிட்டார். இரண்டே நாள்களில் வேலையையும் ஆரம்பித்துவிட்டார்.

அதற்குப் பின்பு அவர் என்னிடம் தனியாகப் பேசியபோது என் பயம் முற்றிலும் அகன்றது என்றே சொல்லவேண்டும். திராவிட இயக்கமே ஒரு ஃபேக் என்றார். புத்தகம் பெயரே இப்படி வெச்சிரலாம் ஜி என்றேன். சிரித்துக்கொண்டார். என்ன பிரசன்னா, புத்தகம் வந்தா கடுமையா எதிர்ப்பாங்களா என்றார். எதுத்தா அதுக்கும் பதில் எழுதிடலாம் என்றார். என்ன என்ன எதிர்ப்புகள் வருமோ அதற்கெல்லாம் இப்போதே சேர்த்து புத்தகத்தில் எழுதிடுங்க ஜி என்றேன். ஓ அப்படி சொல்றீங்களா என்றார்.

முதல் அத்தியாத்தை எனக்கும் பத்ரிக்கும் அனுப்பினார். அடுத்தடுத்து அத்தியாயங்கள் வந்துகொண்டே இருந்தன. ஐந்து அத்தியாயங்கள் வரை படித்துக் கருத்துச் சொன்னேன். பின்னர் படிக்கவில்லை. விட்டுவிட்டேன். புத்தகமாக வந்ததும் படித்துக்கொள்கிறேன் ஜி என்றேன். நீங்க படிச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் என்றார். என்னால் படிக்க முடியாமலேயே போனது. சோம்பேறித்தனமன்றி வேறு காரணங்கள் இல்லை. ஸாரி மலர்மன்னன் ஜி. 🙁

திராவிட இயக்கத்தை ஒட்டி கிழக்கு கொண்டு வர நினைத்த புத்தகங்களில் வெளிவந்தது இந்த ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. மற்ற புத்தகங்களை எழுத ஒப்புக்கொண்டவர்கள் அல்லது அதைப் பற்றிப் பேசியவர்கள் யாருமே அதை முழுமூச்சாகக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு புத்தகமாக வெளிவருவதன் அவசியம் பற்றியோ, அது தரப்போகும் நீண்ட காலத் தாக்கம் பற்றியோ தெளிவாகப் புரிந்துகொண்டவர் மலர்மன்னன் மட்டுமே.

அந்தப் புத்தகம் எழுதுவதற்குப் பல புத்தகங்களின் நகல்கள் வேண்டுமென்று மலர்மன்னன் கேட்டார். பெரும்பாலான புத்தகங்களைத் தந்துதவியவர் ம.வெங்கடேசன். அரிதான புத்தகங்களெல்லாம் வெங்கடேசனிடமிருந்தன. வெங்கடேசன் ஒரு புத்தகக் களஞ்சியம். வெங்கடேசன் பற்றி ஒரே ஒருமுறை மலர்மன்னனிடம் சொன்னேன். வெங்கடேசனைத் தெரியும் என்றார். மலர்மன்னனின் நன்றிக்குறிப்பில் வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன். புத்தகம் வெளிவரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் புத்தகம் வெளிவரும்போது வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லமுடியாமல் போய்விட்டது. மலர்மன்னனே சேர்த்திருக்கவேண்டும் என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் நான் வாங்கித் தந்த பெரும்பாலான புத்தகங்கள் வெங்கடேசன் தந்தவை என்று மலர்மன்னனுக்குத் தெரியாது. புத்தகம் வெளிவந்ததும் இது பற்றிச் சொன்னேன். அப்படியா, நீங்க மொதல்லயே சொல்லிருக்கலாமே என்றார். ஆமா ஜி, என் தப்புதான் என்றேன். இப்ப என்ன பண்றது என்றார். அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்றேன். சரி என்றார். வெங்கடேசனுக்கு இது எதுவுமே தெரியாது. தன் பெயர் வரவேண்டும் என்றெல்லாம் நினைக்கக்கூடிய மனிதர் அல்ல வெங்கடேசன். ஆனால் எனக்குத்தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. குற்ற உணர்ச்சியுடனேதான் வெங்கடேசனுக்கு திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலும் மலர்மன்னன் இறந்த செய்திகேட்டபோது மிகவும் நொந்துபோய்விட்டேன். 🙁

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் என்ற பெயரைவிட திராவிட இயக்கம் பொய்யும் புரட்டும் என்ற ரேஞ்சுக்குத்தான் பெயர் வைக்க மலர்மன்னன் விரும்பினார். பத்ரி அதை ஏற்கவில்லை என நினைக்கிறேன். நான் ஏற்கவில்லை என்றும் அவரிடம் சொன்னேன். புனைவும் உண்மையும்னா கொஞ்சம் மெல்ல தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்காது என்று கேட்டார். அதெல்லாம் சரியா வரும் ஜி என்றார். பத்ரியிடம் முடிவை விட்டுவிட்டார். கடந்த முறை இருந்த கசப்பனுவங்கள் எல்லாம் அவருக்கு மறைந்திருந்தது. மிக எளிமையான மனிதராக, ஒரு எடிட்டிங்கின் தேவையெல்லாம் புரிந்து நடந்துகொண்டார். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. காந்தியைப் பற்றி அவர் புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். அது நடக்காமல் போய்விட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்தார். அவரது வந்தே மாதரம் புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். ரொம்ப நன்றி பிரசன்னா என்றார். நான் விற்பனையில் படு மும்மரமாக இருந்தேன். அவர் சொல்வதையெல்லாம் மனதால் வாங்கிக்கொள்ளாமல் சரி சரி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன என்னவோ சொன்னார். அவருடன் வந்திருந்த ஒரு சகோதரியை அறிமுகப்படுத்தினார். அவரைப் பற்றியும் என்னவோ சொன்னார். என்னவென்று இப்போது நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் இசை ஆளுமையின் பேத்தி என்ற நினைவு. அந்தப் பெண்மணி, மலர்மன்னனின் ஆதரவில்தான் தன் வாழ்க்கையே நடக்கிறது என்றும், மலர்மன்னன் அடைக்கலம் தந்தார் என்றும் சொன்னார். அடைக்கலம் என்ற வார்த்தையைக் கடுமையாக மறுத்தார் மலர்மன்னன். எனக்கு நீ உதவி செய்றம்மா என்று அவர் சொல்ல, அதை அவர் மறுக்க, அவர்கள் இருவரும் அங்கேயே விவாதிக்கத் தொடங்கினார்கள். 

இறந்து போவதற்கு இரண்டு தினங்கள் முன்பு பேசும்போது, நான் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தைப் படித்துவிட்டேனா எனக் கேட்டார். படிச்சுக்கிட்டே இருக்கேன் என்றேன். எதாவது விமர்சனம் வந்தா சொல்லுங்க என்றார். புத்தகம் பற்றி அவருக்கு வரும் விமர்சனங்களையெல்லாம் எங்களுக்கு அனுப்பி வைப்பார். அவர் எழுத்து புத்தகமாக வருவதில் பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. 

மோடியின் குஜராத் புத்தகத்தைக் கொடுக்க கடந்த வாரம் பிஜேபியின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே செயல்வீரர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மோடியின் குஜராத் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் சொன்னார். அப்போது அங்கே இருந்த இல. கணேசன், ‘கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு முக்கியமான புத்தகம் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும். நான் படித்துவிட்டேன். நம் பார்வையில் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை எழுதியவர் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தையும் அனைவரும் படிக்கவேண்டும்’ என்றார். இதைப் பற்றி மலர்மன்னனிடம் சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

மலர்மன்னனின் இழப்பு ஹிந்த்துத்துவ நோக்கில் பெரிய இழப்பு. அவர் பிராமணவாதி என்பது என் முன்முடிவு. அவரோட பேசிய (பழகிய அல்ல) நாள்களில், அந்த முன்முடிவு தவறு என்று சொல்லும்படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதேபோல் அது சரியானது என்னும்படியாகவும் எதுவும் நடந்துவிடவில்லை என்பதே அதைவிட முக்கியமானது. ஆனால் சந்தேகமே இல்லாமல் நல்ல ஹிந்துத்துவவாதி. ஒரு சாதியவாதி எப்படி நல்ல ஹிந்துத்துவவாதியாக இருக்கமுடியும் என்ற குழப்பங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவருக்குள் அந்த முரண் இருக்கவே இல்லை. ஒருவேளை என் முன்முடிவு தவறாகவும், அவர் சாதியவாதியாக இல்லாத ஒரு நிஜ ஹிந்துவாக இருந்திருக்கக்கூடும். எப்படி இருந்தாலும், என் கருத்துகளை என் கருத்துகள் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஜி என்று அவரை விளிக்கும் ஒரு மனிதரை அவர் உடனே விரும்பினார். அவர் ஹிந்துக்களின் மீதும் ஹிந்துத்துவத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். கிறித்துவ மதமாற்றமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் அவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கின. சித்தர்களைப் பற்றிய பெரிய ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. அவர் வீட்டருகில் இருக்கும் ஒரு சித்தரின் சமாதிக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார். ஒரு நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

Share

கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்

கல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. சட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.

 

புதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது! பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.

ஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும்? சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா? கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))

கல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂

Share

அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

நான் எழுதிய ‘அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ புத்தகத்தின் விமர்சனம் தமிழோவியம் தளத்தில் வெளியாகியுள்ளது.

Share