Tag Archive for அரசியல்

மாமன்னன் – சாதா மன்னன்

மாமன்னன் – தீவிரமான வெளிப்படையான குறியீடுகளுடன் ஒரு படம். பட்டியலின ஆதரவுத் தரப்பு என்பதை திராவிட அரசியல் நிலைப்பாட்டுடன் வெளிப்படுத்தும் தீவிரமான கலைத்தன்மையுடன் கூடிய திரைப்படங்களைப் போல இன்னும் அதன் எதிர்த்தரப்பிலிருந்து அதே பட்டியலின ஆதரவுடன் வராமல் இருப்பது நம் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட தலித் ஆதரவைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தை எவ்விதச் சார்பும் இன்றி ஆராய்ந்து பார்த்தால்,

• முதல் நாற்பது நிமிடங்கள் படம் எதையுமே சொல்லவில்லை. தாமிரபரணியில் ஆளும்கட்சி / போலிஸால் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இத்திரைப்படம் சாதிய மோதலாக உருவகிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான சம்பவம் படத்தின் மையச் சரடோடு பயணிக்காததால் வெறும் ஒரு காட்சியாகத் தனித்து நின்றுவிடுகிறது. எப்படியாவது பதற்றத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிடவேண்டும் என்ற இயக்குநரின் ஆசையைத் தாண்டி எதுவுமில்லை.

• அதற்கடுத்த ஒரு மணி நேரம், பரபரப்பின் உச்சம். அதுவும் மாமன்னன் நாற்காலியில் உட்காரும் காட்சி மிக அருமை.

• அதன் பின் படத்தில் பொருட்படுத்தத்தக்க கோர்வையான காட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவரை மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்ட வசனங்கள் நீர்த்துப் போகத் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், ஒரே விதமான வசனம். இவையெல்லாம் வெறும் தனித்தனிக் காட்சிகளாகத் திரையில் தோன்றி மறைகின்றன. அவை எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. சாவுக்கு வரும் காட்சி, திடீரென இளைஞர்கள் திரண்டு வந்து நிற்கும் காட்சி, ரத்னவேலு காலில் விழும் காட்சி, காரில் மாமன்னன் துப்பாக்கியால் மிரட்டும் காட்சி, கீர்த்தி சுரேஷிடம் அதிவீரன் கோபமாகப் பேசும் காட்சி என எதுவுமே ஒட்டவில்லை. எல்லாம் திடீர் திடீர்க் காட்சிகள். அதிலும் ஒரே ஒரு வீடியோவில் மாமன்னன் வெல்வதெல்லாம் கொடுமை. அதிலும் அந்த வீடியோவில் மாமன்னன் பேசுவதெல்லாம் எவ்வித ஆழமும் இன்றி மேம்போக்காக இருக்கிறது.

• உச்சகட்டக் காட்சியில் மாமன்னன் சபாநாயகராகப் பதவி ஏற்பது அருமை. அதற்கு முந்தைய சண்டை எல்லாம் பொறுமையைச் சோதிக்கிறது.

• கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாமன்னன் அதிமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. முன்னாள் சபாநாயகர் தனபாலை மனதில் வைத்து மட்டும் சொல்லவில்லை. ரத்னவேலு கட்சி மாறியதும் அக்கட்சித் தலைவரின் படம் தினகரனில் முதல் பக்கத்தில் வருகிறது. தினகரனில் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தால் நிச்சயம் அது அதிமுகவாக இருக்கமுடியாது. எனவே மாமன்னன் அதிமுகதான் என்பது நிரூபணமாகிறது. (நானே யோசிச்சேன்!)

• இத்தனை முக்கியமான படத்துக்கு இத்தனை சப்பையான பாடல்களைப் போட்டிருக்கவேண்டாம். இன்னும் கதைக்களத்துடன் பயணப்பட ஏ.ஆர்.ரகுமானால் முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் சமாளிக்கிறார்.

• ரத்னவேலுவின் மனைவியாக வரும் நடிகையும் சரி, கீர்த்தி சுரேஷும் சரி – வீண்.

• பன்றி நாய் குறியீடெல்லாம் சுத்த அறுவை.

• வடிவேலுவின் நடிப்பு பிரமாதம். அதேபோல் ஃபகத்தின் நடிப்பும். இருவருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் உதயநிதி ஏதோ சமாளிக்கிறார்.

பரியேறும் பெருமாள் > கர்ணன் > மாமன்னன்.

Share

அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம்.

யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு பிசினஸ் மீட் என்ற அளவில் மட்டுமே போயிருக்கிறார்கள். பணத்தையும் மதுவையும் அதற்காகத்தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நியாயத்துக்காக எதையுமே வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். இதுவரையும் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படையாக உணர வைத்திருக்கிறார்கள்.

முன்பொரு சமயம், இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து மது தரவேண்டிய சூழல் வந்தது. அவரைத் தனியே அழைத்து மதுவைத் தந்தபோது, அவர் பதற்றத்துடன் சொன்னார், இதெல்லாம் வேண்டவே வேண்டாம், உள்ள வைங்க என்று. அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் திமுக அனுதாபி. இப்போதும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனக்கு அவரை இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தியபோது, நான் அவரைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். மது விஷயத்தைத் தவிர மற்றவற்றைச் சொன்னேன். இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க, எனக்கு எதுவுமே நினைவில்லை என்றார். இன்றும் அவர் இதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்பது தெரியாது என்பதால் அவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். மதுவோ பணமோ எதுவும் வாங்காத உறுதிப்பாடு உள்ள பத்திரிகையாளர்களே முக்கியம். ஆனால் இவர்களால் பொருளாதார ரீதியாக ஜெயிக்க முடியுமா என்று தெரியவில்லை.

யூ ட்யூபர்கள் என்னும் பத்திரிகையாளர்களை அண்ணாமலை இடது கையில் டீல் செய்தது சரிதான். இவர்கள் அதற்குத்தான் லாயக்கு.

ராஜவேல் நாகராஜன், தான் ஒரு ஸ்டிரேடஜிஸ்ட்டாகத்தான் சென்றதாகச் சொல்கிறார். நம்பும்படியாகத்தான் இருக்கிறது. கட்சி அபிமானமே இல்லாமல் வெறும் ஸ்டிரேடஜிஸ்ட்டாக இருப்பது தொழில்முறை சார்ந்த ஒன்று. ஒரு கட்சியின் ஆதரவாளனாகவும் இருப்பேன், இன்னொரு கட்சிக்கு ஸ்டிரேடஜிஸ்ட்டாகவும் இருப்பேன் என்றால் அது சரிப்பட்டு வராது. இதையும் ராஜவேல் நாகராஜன் தெளிவாகவே சொல்கிறார். என்ன ஒன்றென்றால், நேற்று நாம் தமிழர், இன்று பாஜக என்றால், நாளை என்னவாகவும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. அங்கேதான் எந்தக் கட்சிக்கு ஸ்டிரேஜிஸ்ட்டாகப் போகலாம் என்னும் திறப்பும் இருக்கிறது.

அரசியல் வீடியோ வெளியிடும் யூ ட்யூபர்கள் வெறும் காற்றில் கம்பு சுத்திக் கொண்டிருக்கவில்லை. பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வ்யூ இருந்தால் பணம் கிடைக்கும் என்று நம்பி இத்தொழிலை ஆரம்பிப்பவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள். வ்யூ இருந்தால், அரசியல் பணத்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு சானலை ஆரம்பிப்பவர்களே புத்திசாலிகள்.

இந்த யூ ட்யூபர்கள் யாருக்காகவும் நான் சில்லரையை சிதறவிட்டதில்லை என்பதைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். இவர்கள் கேள்வி கேட்ட விதம் பிடித்திருந்திருக்கிறது. இவர்கள் வெளியிட்ட வீடியோ சில பிடித்திருந்திருக்கிறது. அதைத் தாண்டி யாரையும் நான் கொண்டாடவில்லை. தெய்வம் காத்திருக்கிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்தால், நம்பிப் பேச வைத்து, ஒருவரை டிராப் செய்வது மிக எளிது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பொதுவெளியில் வெறும் ஐயாயிரம் ரூபாயை வாங்கினால் கூட அது தவறு என்கிற பொதுப்புத்தி இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலும் வெறும் பதினைந்தாயிரம் ரூபாயும், அதுவும் ஒரு தொழில்முறை கன்சல்டிங்கிற்காக வாங்கிய ஒன்று, இத்தனை பேரை காலி செய்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நேர்மையான பொய்யர்கள். இவர்கள் அது கூட இல்லை.

Share

ஹிஜாப்பும் காவித் துண்டும்

நீண்ட பதிவு, பொறுமையாகப் படிக்கவும். ஜெய் ஸ்ரீராம். 🙂

பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாகியது. கிடைத்தது வாய்ப்பென்று தமிழ் எழுத்தாள முற்போக்காளர்கள் இத்தனை நாள் திரைமறைவில் இருந்தது போதும் என்று உடனே தங்கள் கொந்தளிப்புகளை, ஹிந்துத்துவ அரசியல் தரும் அபாயங்களை எல்லாம் பட்டியலிடத் தொடங்கிவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி இவர்கள் ஒரு மூச்சு கூட விடவில்லை. ஆனால் கர்நாடகாவில் ஒரு பள்ளியில் பிரச்சினை என்றவுடன் கம்ப்யூட்டரில் தட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இவர்கள் போதாதென்று, அரைகுறை ஹிந்துக்களாக ஃபேஸ்புக்கில் வலம் வந்து சரியான நேரத்தில் தவறான கருத்தைச் சொல்லி உயிரெடுக்கும் அரை மண்டையர்கள் இன்னொரு புறம். இவர்கள் பல விதங்களில் பேசுகிறார்கள். முதல் விஷயம், வீடியோவைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் தைரியத்தைப் போற்றுகிறேன் என்பது. இதில் இருப்பது தைரியம் அல்ல, அசட்டுத் தைரியம். இன்னும் சொல்லப் போனால் தேவையற்ற பல அபாயங்களை இந்திய அளவில் உருவாக்கி இருக்கக் கூடிய அனாவசியமான தைரியம். உண்மையில், அந்த நேரத்தில் கும்பல்-மனப்பான்மைக்குள் போகாமல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று குரல் எழுப்பிவிட்டு அமைதியாக அந்தப் பெண்ணைப் போக விட்ட மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இரண்டாம் விதம், மாணவர்கள் காவிக்கொடி ஏற்றியது தொடர்பானது. வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது, ஒரு மாணவன் தன் கையில் இருக்கும் காவி கொடியைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில் ஏற்றுகிறான். அந்தக் காட்சியைப் பார்த்ததும், அடுத்தடுத்து சில செய்திகள் உடனே பரபரப்பபட்டன. அங்கே பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியைக் கழற்றிவிட்டு மாணவர்கள் காவிக் கொடி ஏற்றினார்கள் என. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவர்களைத் தேசத் துரோகிகள் என்றே அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்து, ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன். ஒன்றிலும் தேசியக் கொடி கண்ணில் படவே இல்லை. எந்த மாணவன் கையிலும் தேசியக் கொடி இல்லை. ஆனால் இந்தியா டுடே உள்ளிட்ட தளங்கள் தெளிவாக இதே கருத்தைப் பரப்பின. டிவி9 கன்னடச் செய்திச் சேனலில் ஒருவர் பொறிபறக்கப் பேசினார், தேசியக் கொடியைக் கழற்றிய இந்த மாணவர்கள் தேசத் துரோகிகள் என. அதாவது, தேசியக் கொடி கழற்றப்பட்டதாக இவர் முடிவுக்கே வந்துவிட்டார். (ஒரு ஆறுதல், இவர் எந்தத் தரப்பையும் எடுக்காமல் இரண்டு தரப்பையும் திட்டினார்!) ஆனால் ஏஸியாநெட் ஸ்வர்ணா செய்திச் சானல் தெளிவாகச் சொன்னது, அங்கே தேசியக் கொடி இல்லவே இல்லை என. (இப்போதும் சொல்கிறேன், நாளையே மாணவர்கள் தேசியக் கொடியைக் கழற்றிவிட்டி காவிக் கொடியை ஏற்றிய வீடியோ வெளியானால், சந்தேகமே இன்று இந்த மாணவர்கள் தேசத் துரோகிகளே.)

அங்கே தேசியக் கொடி இல்லை என்பதுவே உண்மை என்று தெரிந்துகொண்ட நம் திடீர் உணர்ச்சிப் போராளி ஹிந்துக்கள் என்ன சொல்லி இருக்கவேண்டும்? வழக்கம்போல ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதானே? அவர்கள் இன்னொரு உளறலை ஆரம்பித்தார்கள். அதாவது அந்தக் கம்பம் தேசியக் கொடி ஏற்றிட வைக்கப்பட்டிருந்த கம்பமாம். அதில் காவிக் கொடி ஏற்றியது தவறாம். இவர்களை எல்லாம் என்ன சொல்ல? தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றி இருந்தால் மட்டுமே அது தவறு. வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில், தேசியக் கொடிக்கான கம்பமாக இருந்தாலுமே, அதில் காவிக்கொடி ஏற்றுவதில் தவறே இல்லை. அதுவும் இது போன்ற ஒரு கும்பல்-மனப்பான்மையிலும் கூட, மாணவர்கள் தங்கள் மூளையை அடகுவைக்காமல் நடந்துகொண்டிருக்கிறார்கள். காவிக் கொடி என்பது இந்திய ஆன்மாவின் கொடி. காவிக் கொடி இந்திய ஒருமைப்பாட்டுக்கான கொடி. இங்கே காவிக் கொடி ஏற்றப்பட்டது கூட, ஹிஜாப் அணிந்து வந்து பிரச்சினையை சில மாணவர்கள் துவக்கி அதன் எதிர்வினையாகத்தான் ஏற்றப்பட்டதே ஒழிய, ஹிந்து மாணவர்கள் போராட்டத்தைக் காவிக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கவில்லை. எவ்விதப் பிரச்சினையும் இல்லாத சமயத்தில் தேவையே இல்லாமல் மாணவர்கள் காவிக் கொடி ஏற்றி இருந்தால், அதுதான் அராஜகம், அநியாயம். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. ஒரு தூண்டல் இருந்திருக்கிறது, தொடர்ந்து மாணவர்கள் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

அடுத்து பெண்ணிய கோஷ்டிகள். இத்தனை நாள் பெண்ணியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், செலக்டிவ் அம்னீஷியாவால் பீடிக்கப்பட்டு, ஹிஜாப் அணிவது பெண்ணின் உரிமை என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படித் தலைகீழ் மாற்றம் கொள்ள இவர்கள் என்றுமே வெட்கப்பட்டதில்லை. ஹிஜாப்பும் சரி, பர்காவும் சரி, நிச்சயம் பெண்ணிய சுதந்திரத்துக்கு எதிரானதுதான். ஆனால் ஒரு முஸ்லிம் பெண் அதை விரும்பி அணிந்தால் அது அவளது சுதந்திரம். இதில் மாற்றமே இல்லை. நாம் போய் அந்த பர்காவை நீக்கு என்று சொல்லும் சுதந்திரம் யாருக்கும் இல்லை, அது பள்ளியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில். பள்ளியில் இந்த சுதந்திரம் கிடையாது. பள்ளியில் பள்ளி சொல்லும் சீருடையில் வரவேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை. இதே பெண் முஸ்கான் 2021ல் பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு வருவேன் என்று பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்தும் இட்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. இதே பெண், மற்ற பொதுவிடங்களில் ஹிஜாப் இல்லாமல் வந்திருக்கிறார் என்று புகைப்படங்களும் பகிரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பெண்ணும் பர்கா அணிந்து பள்ளிக்கு வந்த மாணவியும் ஒருவரேதானா என்று என்னால் உறுதி செய்ய முடியாததால் அதைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒருவேளை இரண்டு பெண்களும் ஒருவரே என்றால், பள்ளிக்கு மட்டும் பர்கா அணிந்து ஏன் வரவேண்டும் என்கிற பதில் சொல்ல முடியாத கேள்வி எழவே செய்யும்.

பர்கா அணிவதும் ஹிஜாப் அணிவதும் முஸ்லிம் பெண்களின் உரிமை என்று பொதுவாகச் சொல்லி, வழக்கம் போல இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். ஒரு ஹிந்துக் கல்யாணம் நடக்கிறது, அங்கே ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வந்தால், அதைத் தடுத்தால், அது அராஜகம் என்று சொல்வதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒரு பள்ளிக்கு ஒரு பெண் வரும்போது பள்ளி சொன்ன சீருடையில் வரவேண்டியது முக்கியம். பள்ளி சொன்ன சீருடையில் வராமல் இருப்பதும், உள்நோக்கத்துடன் பிரச்சினையை உருவாக்கும் பொருட்டு திடீரென்று சில மாணவர்கள் மட்டும் வேண்டுமென்றே வேறு ஒரு உடையில் வருவதும் தவறுதான்.

இப்படி யோசிப்போம். தமிழ்நாட்டில் ஒரு தனியார் ஹிந்துப் பள்ளியில் ஒரு பிராமணப் பையன் (அல்லது தனிப்பட்ட உடை அணியும் எதோ ஒரு சாதியைச் சேர்ந்த பையன்), பள்ளிச் சீருடையில் வரமாட்டேன், பஞ்ச கச்சை அணிந்து, பூணூல் வெளியே தெரிய, உத்தரியம் மட்டும் அணிந்து வருவேன் என்று சொன்னால், ஏற்பீர்களா? கொஞ்சமாவது மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள். இன்று ஃபேஸ்புக்கில் உளறித் திரியும் ஹிந்துக்கள்தான் முதலில் யோசிக்கவேண்டியவர்கள். இன்று பெண்ணின் உடை அவளது உரிமை என்று பேசும் எந்த முற்போக்கு எழுத்தாளர்களும் பிராமணச் சிறுவனின் உடைக்கு ஆதரவாக வாயைத் திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அப்படி உன் உடை முக்கியம் என்றால் மணியாட்டப் போ வாய் கூசாமல் சொல்வார்கள். தமிழ்நாட்டில் கூட இது நடந்திருக்கவேண்டாம், இந்தியாவில் எங்கு நடந்தாலும் இதையே இவர்கள் சொல்வார்கள். இதே விஷயம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு என்று வரவும், அவள் உடை அவள் உரிமை என்று பேசத் துணிந்துவிட்டார்கள். இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் ஃபேஸ்புக் திடீர் ஹிந்துகள் உணர்ச்சிவசப்பட்டு உளறித் திரிகிறார்கள்.

ஒரு பிராமணப் பையன் இப்படி ஒரு உடையுடன் பள்ளிக்கு வந்தால் என் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ‘உன் உடை உன் உரிமை என்றால், அதற்கேற்ற பள்ளிக்குப் போ, உடன் படிக்கும் மாணவர்களின் சூழலைப் பாழாக்காதே. இதே பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்றால், அப்பள்ளி சொல்லும் சீருடையை ஏற்றுக்கொள்ளவேண்டியது உன் கடமை. பள்ளி முடிந்து பொது வாழ்க்கை வந்ததும், உன் இஷ்டம் போல் இரு. பள்ளியில் மதச் சின்னங்களை அணிந்து கொள்ள உனக்கு உரிமை உண்டு, ஆனால் சீருடைக்குப் பங்கம் வரக்கூடாது.’

ஒரு அரசுப் பள்ளியில் பெரும்பான்மை ஹிந்து மாணவன் மட்டும் சீருடையில் வரவேண்டும், ஆனால் சிறும்பான்மையினர் அவரவர்கள் மத உடையில் வரலாம் என்றால், அதை மாற்றுவதற்கு இந்தப் பிரச்சினை ஒரு தொடக்கமாக இருந்தால், அது நல்லதுதான். இதனால்தான் சில ஹிந்து இயக்கங்கள் தங்கள் நிறுவனங்களை சமயத்தின் அடிப்படையில் சிறுபான்மை என்றே அழைக்கவேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று வாய் கிழியப் பேசும் முற்போக்கு வாய்ச்சவடால்காரர்களின் இன்னொரு அசிங்கமான பக்கத்தையும் பார்ப்போம். பள்ளியில் அல்ல, பொதுவெளியில் பிராமணர்கள் பூணூலுடன் போவதை எல்லாம் எத்தனை அசிங்கமாக எழுதி இருக்கிறார்கள்? உன் உடலை செக்ஸியாகக் காட்டுகிறாயா என்று கேட்டு நக்கலாக எழுதிய முற்போக்காளர்களை எனக்குத் தெரியும். குடுமியைக் கிண்டலாக எழுதி, மணியாட்டிப் பிழைக்கிறான் என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும். இதைவிடக் கொடுமை, பூணூல் அறுக்கும் போராட்டமும், பன்றிக்குப் பூணூல் அணிவிக்கும் போராட்டமும் இதே மண்ணில் நடந்திருக்கிறது. அன்றெல்லாம் இதே முற்போக்காளர்கள் வாயே திறக்கவில்லை. திக, திமுக சம்பந்தட்ட எந்த ஒன்றையும் இவர்கள் மறந்தும் கண்டித்துவிடமாட்டார்கள். ஏன்? பிழைப்பரசியல். வாய்ப்பரசியல். இந்த பிழைப்பரசியல்காரர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் மற்ற மதத்துக்காரர்களின் உண்மையான உரிமைக்காகப் பேசவில்லை, ஹிந்துக்களுக்கு எதிரான ஒன்று என்பதால் மட்டுமே பேசுகிறார்கள் என்று.

உடுப்பிப் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஹிந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்திருக்கிறார்கள். ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று சொல்லி இருந்தால் இந்தப் பிரச்சினை இங்கே முடிந்திருக்கும். அல்லது, காவித் துண்டு அணிந்து வரலாம் என்று சொல்லி இருந்தாலாவது, அநியாயத்துக்குள் ஒரு நியாயம் இருந்திருக்கும். இரண்டும் இல்லை. ஹிஜாப் அணிந்து வரலாம், ஆனால் காவித் துண்டு கண்ணை உறுத்துகிறது என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒரு வரியில் இருக்கிறது, யாராக இருந்தாலும், நாளை ஹிந்துக்களே எங்கள் மத உடையில் வருவோம் என்று சொன்னாலும், அதெல்லாம் முடியாது, ஒழுங்காகப் பள்ளிச் சீருடையில் வா என்று சொல்வதுதான் அந்தத் தீர்வு. இல்லை என்றால், இப்படிப் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. இன்று தீர்ப்பு வரலாமோ என்னமோ. எப்படியும் பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவித் துண்டு அணிவதற்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லாமல் தீர்ப்பு வேறு மாதிரி இருக்குமானால், கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் வரை இப்பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும். பெரும்பான்மை மாணவர்களுக்கு மட்டும் எதிராக இருக்கும் சட்டத்தை மாற்ற இந்த பாஜக அரசு முயலவேண்டும். இதற்குள், இந்திய எதிர்ப்பாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்குக் கெட்ட பெயர் வராமல் இருப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.

Share

கமற்சிலையரசியல்

கமற்சிலையரசியல்

சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன்நான். ஆனால், அதை உடைப்பது ரொம்ப கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் என கேட்டிருப்பார்” என்றார்.

கமல் – 12-மார்ச்-2018 (விகடன் தளத்தில் இருந்து.)

அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் ஒதுக்க முதலில் சட்டம் செய்தவர் டாக்டர் சுப்பராயன் அவர்களாவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உத்தியோகம் வழங்க சட்டம் செய்தவர் தோழர் எஸ்.முத்தையா முதலியார் என்றே சொல்லலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி வழங்கினவர் பொப்பிலி அரசர் என்றே சொல்ல வேண்டும். இம் மூவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும், நாளைக்கு இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயிருந்தாலும், இந்தக் காரியங்களுக்கு இவர்களுக்கு சிலை வைத்து கௌμவிக்க வேண்டியது நன்றி உடைமையாகும் என்பதில் நமக்குச் சிறிதும் ஆக்ஷேபணையில்லை.

குடியரசு துணைத் தலையங்கம் 10.11.1935

ஆகவே கொச்சி அரசாங்க உத்தியோகத்தில் சர். ஷண்முகம் வகுப்புவாத பிரதிநிதித்துவ உரிமை ஏற்படுத்திவிட்டார். எனவே அவருக்கு கொச்சி அரசாங்கமும் கொச்சி பிரஜைகளும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அவருக்கு இந்த இரு கூட்டத்தவரும் இரண்டு சிலைகள் செய்து அரசாங்க சிலையகத் துறைமுகத்திலும், பிரஜைகளது சிலையை பட்டணத்து நடுவிலும் அல்லது சட்டசபைக்கு முன்பக்கமுள்ள மைதானத்திலும் வைத்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

குடிஅரசு தலையங்கம் 02.08.1936

அதாவது ஈவெராவின் கருத்து சிலைகளுக்கு எதிரானதாக இல்லை. மாறாக பிராமணர்களுக்குச் சிலை வைப்பதற்கு எதிராகவே இருந்துள்ளது. கமல்ஹாசனாரும் இக்கருத்தையே கொண்டிருக்கிறார் எனில் அதைத் தெளிவுபடுத்துவது நல்லது. அன்னாருக்கு இக்கருத்து இல்லை என்பது தெரியும். ஆனால் ஈவெரா இருந்திருந்தால் சிலையே வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்றெல்லாம் கருணாநிதித்தம்பித்தனமாக அடித்துவிடாமல் இருந்தால் அன்னாருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் என்பதைச் சொல்லவேண்டியுள்ளது.

இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஈவெரா தனக்குத் திறக்கப்பட்ட சிலைக்கு ஆதரவு தருவது போல் உள்ளது. இதையும் அன்னார் கணக்கில் கொள்ளவேண்டும்.

 

மேலே உள்ள புகைப்படம் – மாயவரத்தான் ஃபேஸ்புக் டைம்லைனில் இருந்து எடுக்கப்பட்டது.

Share

உரிமையின் அரசியல்

உரிமையின் அரசியல்

ஒருவருக்கு எதற்கும் உரிமை இருக்கிறது. அடுத்தவரை துன்புறுத்தாவரை அவருக்கு இருக்கும் யாரும் உரிமையை மறுக்கவே முடியாது. வைரமுத்து ஆண்டாளைப் பற்றி மட்டும் ஏன் எழுதினார், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றி எழுத தைரியம் இல்லையே என்று கேட்டால், ஹிந்துக்களைப் பற்றி மட்டும் தேர்ந்து எழுத வைரமுத்துவுக்கு உரிமை இருக்கிறது என்கிறார்கள். யார் மறுத்தது? நிச்சயம் வைரமுத்துவுக்கு அந்த உரிமை இருக்கவே செய்கிறது.

பொதுவாக ஹிந்து மதத்தை மட்டும் தேர்ந்தெடுத்துச் சாத்துகிறவர்களை ஏன் கேள்வி கேட்கிறோம் என்பதற்கு என்னுடைய வரையறைகள் இவை. அதாவது இந்த வரையறைகளுக்குள் இருந்தால், ஒருவர் நிச்சயம் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசலாம். திட்டலாம். இந்த வரையறைக்குள் இல்லாமல் போகும்போது கேள்வி கேட்கிறோம்.

* ஹிந்து மதம் என்றில்லாமல் கிறித்துவ இஸ்லாம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மதங்களையும் அம்மதங்களின் போதாமைக்கும் அராஜகங்களுக்கும் விமர்சிப்பது, கேள்வி கேட்பது. இது ஒரு உச்சகட்ட நிலை. இந்நிலையை மிகச் சிலரிடம் மட்டுமே காணமுடியும். இப்படி இருப்பவர்கள் ஹிந்து மதத்தையும் நிச்சயம் கேள்வி கேட்கலாம்.

* இரண்டாவது வகை, எம்மதத்தின் பிரச்சினைகளுக்குள்ளும் புகாமல் இருப்பது. இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை.

* மூன்றாவது வகை, நான் ஹிந்து என்று அறிவித்துக்கொண்டு, எனக்கு ஹிந்து மதத்தின் மீதான விமர்சனங்களே முக்கியம் என்று சொல்வது. இவர்களை மற்ற ஹிந்து மத மற்றும் ஹிந்துத்துவ ஆதராவளர்கள் ஏற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏற்கிறேன்.

* நான்காவது, ஹிந்து மதத்தின் சீர்திருத்தவாதியாக தன்னை நினைத்துக்கொண்டு கருத்துச் சொல்வது.

இப்படி இல்லாமல் ஹிந்து மதத்தை ஊறுகாய் போல மட்டும் தொட்டுக்கொண்டு பேசும்போது நிச்சயம் கேள்விகளை எழுப்பத்தான் செய்வார்கள். இந்த கேள்விகளை எழுப்பும்போது உரிமை பற்றிப் பேசி நழுவப் பார்ப்பது இன்னுமொரு எஸ்கேப்பிஸம்.

உண்மையில் யாரும் யாருடைய உரிமையையும் கேள்வி எழுப்புவதில்லை. ஒருவர் முட்டாளாக இருப்பதற்கு, சிறிய சிறிய அளவில் பொய் சொல்வதற்கு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதற்கு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்வதற்கு, கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதற்கு என்று ஏகப்பட்ட உரிமைகள் உள்ளன. இவை அனைத்தும் உரிமைகளே.

அப்படி இருந்தும் ஏன் கேள்வி கேட்கிறோம்? ஏனென்றால் உங்கள் கருத்தின் பின்னால் நீங்கள் உருவாக்க நினைக்கும் அரசியலை வெளிப்படுத்த. உங்களை எக்ஸ்போஸ் செய்ய. உங்களை உங்களுக்கே உணர்த்த. இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் இல்லை என்றால், ஹிந்து மதத்தை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் எளிதானதாக இருக்கிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றிப் பேச அச்சமாக இருக்கிறது என்ற உண்மையை மட்டுமாவது சொல்லிவிட்டு விமர்சியுங்கள்.

இல்லையென்றால், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் பற்றிப் பேசும்போதெல்லாம், கூடவே ஹிந்து மதத்தைப் பற்றியும் பேசி, ஊருக்கு ஏற்ப நீங்கள் எழுதவேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடும். ஆனால் ஹிந்து மதத்தைப் பற்றி எழுதும்போது எக்கவலையும் இல்லாமல் எழுத முடியும் என்பதை உங்கள் ஆழ்மனம் உணர்ந்திருக்கும். இதை உணர்ந்திருந்தால் நீங்கள் ஹிப்போகிரைட் மட்டுமே, குறைந்த பட்சம் வெளிப்படையாக உங்களது இயலாமையை வெளியே சொல்லாதவரை.

எனவே மிகத் தெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லிவிடுவது நல்லது. அதைவிட்டுவிட்டு உரிமை பஜனையைக் கையில் எடுத்தால் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான், இரட்டை நாக்கு வெளியே தெரிகிறது, ஒன்றையும் மறைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.

Share

கமல் 10

01. ஹிந்து எதிர்ப்பு அரசியல் இந்த மோடிமஸ்தான் நாட்டில் எடுபடாது. எல்லாம் அவாளின் இந்தியா. இந்த இந்தியாவை அவாள் மட்டுமே ஆளவேண்டும், கருப்புச் சட்டைக்காரன் ஆளமுடியாது. இது முன்பே தெரிந்ததுதான்.
 
02. கமலின் அரசியல் ப்ளாட்டோவின், ஷியோதகோவின்(இனிமேல்தான் இவர் பிறக்கவேண்டும்) கருத்துகளோடு ஒப்பு நோக்கத்தக்கது. நம் மக்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்களுக்கு ஊழல்வாதிகளே சரியானவர்களே அன்றி கமல் போன்ற தத்துவம்சார் அரசியல் அறிஞர்கள் அல்ல.
 
03. கமலின் திரைப்படங்களையே புரிந்துகொள்ளாதவர்கள் கமலின் அரசியலையா புரிந்துகொள்ளப் போகிறார்கள்? பாவம் கமல், இவர்களை நம்பி இறங்கினால்? ஆனால் கமலுக்கு இது புதிதல்ல.
 
04. இயல்பிலேயே மக்கள் ஊழல்காரர்கள்தான். இவர்களுக்குத் தலைமையாக இன்னொரு ஊழல்வாதியே வரமுடியும். எக்கேடும் கெட்டுப் போகட்டும் இத்தேசம். இந்தியா ஒருநாளும் உருப்படாது. தனித்தமிழ்த்தேசமே தீர்வு. தோற்றது தமிழ்நாட்டில்தானே என்று கேட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன். யோசித்துப் பார் முட்டாள்களே.
 
05. கமலுக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு ஓட்டும் நேர்மைக்கானது. இதிலிருந்து தொடங்குவோம். அடுத்த பத்து வருடத்தில் கமலே முதல்வர். இத்தோல்வியே வித்து.
 
06. கமல் திரைப்படம் எடுக்கும்போது செய்யும் தவறை அரசியலிலும் செய்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தை எடுத்துவிட்டு அப்படம் தோல்வி அடைந்தாலும் திரைக்களத்தை அடுத்த கட்டத்துக்கு அசராமல் நகர்த்துபவர் கமல். அரசியலில் நூறு வருடங்களுக்கு முன்பான அரசியலை முன்னெடுத்துவிட்டார். அரசியலை அடுத்த பல கட்டங்களுக்கு கொண்டு போய்விட்டார். இனி கமலுக்கு முன் கமலுக்குப் பின் என்றே அரசியல் பேசப்படும். வெற்றி தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல
 
07. மக்களைத் தயார் படுத்துவது அரசியலில் முக்கியம். மக்களை தயார் படுத்துபவர்கள் ஒருபோதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. உலக வரலாற்றில் நாம் இதைப் பார்க்கலாம். மக்கள் கமலைத் தோற்கடித்ததற்கான காரணம் புரிந்ததா?
 
08. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் இதுவரை இந்தியாவில் எவ்விதப் புரட்சிகரமான மாற்றமும் வந்ததில்லை. மோடியின் வெற்றி நினைவு வருகிறதா?
 
09. கருணாநிதி மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றார். கமலின் தோல்வி என்ன சொல்கிறதென்றால், மக்கள் சோற்றாலும் சேற்றாலும் அடிக்கப்பட்ட பிண்டங்கள் என்பதையே. எங்கே போகிறது இத்தேசம்.
 
10. கமலின் தோல்வி கமலின் தோல்வி அல்ல. மக்களின் தோல்வி, நேர்மையின் தோல்வி. இதனால் கமலுக்கு ஒரு இழப்பும் இல்லை. இலவசத்தை எதிர்பார்த்து பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்களுக்கு இந்த தியாகமெல்லாம் புரியாது. டாட்.
 
நோட் பண்ணி வெச்சிக்கோங்கப்பா. கமலின் கட்சி, கமல் நிற்கும் ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து, எதிர்கால மதிமுக/தேமுதிகவாக விழிக்கும்போது, பயன்படுத்திக்கொள்ளலாம். காப்பிரைட் இல்லாத பிரதி. இலவசம். முற்றிலும் இலவசம்.
Share

தமிழக பாஜக – எங்கே செல்லும் இந்தப் பாதை – தேர்தல் களம் 2016 – தினமலர்

நான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திருச்சியின் கிராமம் ஒன்றான முத்தரச நல்லூருக்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் தெருக்களின் பாஜகவின் விளம்பரத் தட்டிகளையும் சுவரோட்டிகளில் அத்வானி மற்றும் வாஜ்பேயியின் முகங்களையும் பார்த்தேன். அன்றுதான் எனக்கு பாஜக என்னும் கட்சி மிகவும் நெருக்கமாக அறிமுகமாகியது. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் மற்ற எந்த ஊர்களிலும் பாஜகவுக்கு இத்தனை விளம்பரங்களை நான் பார்த்ததில்லை. அத்வானி முத்தரசநல்லூருக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்துக்கு வருகை தந்திருந்தார் என்று நினைவு.

அன்று இருந்த அதே நிலையில் இன்றும் தமிழ்நாட்டு பாஜக கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இடைப்பட்ட 25 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் பாஜகவின் முகம் பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க தமிழ்நாட்டில் மிக மிக மெதுவான வளர்ச்சியை மட்டுமே பாஜகவால் சாதிக்கமுடிகிறது.

இதன் காரணங்கள் என்ன? 1998 வரை பாஜகவினர் தொலைக்காட்சியின் எந்த நேர்காணல்களிலோ அல்லது விவாதங்களிலோ பங்கேற்றால், எதிர்த்தரப்புக்காரர்கள் அப்படியே பம்முவார்கள். ஏனென்றால் எந்தவித சுமையும் இல்லாத ஒரு கட்சியாக பாஜக இருந்ததனால் தமிழகத்தின் கழகங்களை மிக எளிதாக பாஜகவால் எதிர்கொள்ளமுடிந்தது. 1998ல் அதிமுகவுடனும் 2001ல் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் பாஜகவுக்கு சில எம்பி/எம்.எல்.ஏ சீட்டுகள் கிடைத்தாலும், தமிழகத்தில் முதன்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட சிறிய கட்சிகளின் அந்தஸ்தை அடைந்துவிட்டது. இப்படி ஒரு நிலையை விருப்பப்பட்டு தமிழ்நாட்டு பாஜகவே ஏற்படுத்திக்கொண்டது. பாஜகவினருடன் விவாதத்தில் ஈடுபடவே யோசித்த காலம் போய், இவர்களும் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள்தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.

2014 பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியாவெங்கும் வீசியபோதும் தமிழ்நாட்டில் இலையின் அலையில் முடங்கிப் போனது தமிழ்நாட்டு பாஜக. 2014ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓரளவு வலிமையான மூன்றாவது கூட்டணியை உருவாக்கியது ஒரு முக்கியமான சாதனைதான். ஆனால் அதைத் தொடரமுடியாமல் போனது. இதற்கு முதன்மையான காரணம் பாஜக அல்ல என்றாலும், ஒரு பிரதமரைக் கொண்டிருக்கும் கட்சி இவை போன்ற சிக்கல்களையெல்லாம் தெளிவாகச் சமாளித்திருக்கவேண்டும். ஆனால் தமிநாட்டு பாஜகவுக்கு அத்தகைய சாமர்த்தியங்கள் எல்லாம் இருக்கவில்லை.

இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக நன்றாக வேரூன்றியிருக்கும் மிகச் சில கட்சிகளில் ஒன்று பாஜக. இப்படி இருக்கும் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைதான் பாஜகவின் முதல் பிரச்சினையும். ஏகப்பட்ட தலைவர்களைக் கொண்ட கட்சி ஏகப்பட்ட முகங்களுடன் உலா வரும்போது எது நம் முகம் என்ற குழப்பம் வாக்காளர்களிடையே ஏற்படும். காங்கிரஸுக்கும் தமிழக பாஜகவுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினை இது.

மத்தியத் தலைவர்கள் ஒன்றைப் பேசிக்கொண்டிருக்க மாநிலத் தலைவர்கள் இன்னொன்றைப் பேசிக்கொண்டிருக்க இரண்டுக்கும் தொடர்பற்ற வகையில் தொண்டர்கள் செயலாற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு திடீர் திடீர் என்று ஹெ.ராஜா, சுப்ரமணியம் சுவாமி போன்ற தலைவர்கள் எழுப்பும் சலசலப்புகள் வேறு. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழக பாஜக வெளிவரவேண்டும். அதற்குத் தேவை வலிமையான ஒரு மாநிலத் தலைமை.

மாநிலத் தலைமை வலிமையாக இருப்பதுதான் பாஜகவின் வெற்றிக்கான முதல் படியும் முதன்மையான படியும். இன்றைய தமிழகத் தேர்தல் என்பது ஆர்ப்பாட்டம் நிறைந்ததும் ஆடம்பரம் நிறைந்ததும் என்றாகிவிட்டது. இந்நிலையில் பாஜக இப்படி இந்த நீரோட்டத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்குமானால் மக்களின் பரிதாபத்தை மட்டுமே பெறமுடியும், வெற்றியைப் பெறமுடியாது. அதற்காக கழக பாணி அரசியலைக் கைக்கொள்ளத் தேவையில்லை. இந்த ஆடம்பர அரசியலிலிருந்து விலகவேண்டியதும் புதிய அரசியல் களத்தை உருவாக்கவேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். ஆனால் இரண்டுக்கும் மத்தியிலான, பொதுமக்களைக் கவரும் வகையிலான அரசியலையும் மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்துக்கு வருவதற்காகவாவது இவற்றையெல்லாம் தமிழக பாஜக மேற்கொள்ளவேண்டும். தன்னை நிலைப்படுத்திக்கொண்டுவிட்டபின்புதான் அரசியல் தூய்மையில் இறங்கவேண்டும். இன்று மோடி இந்திய அளவில் செய்துகொண்டிருப்பது போல.

தமிழக பாஜக மக்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளுக்கு வருவதில்லை என்பது அடுத்த பிரச்சினை. தமிழக பாஜகவின் போராட்டங்கள் எல்லாம் யாருக்காக யாரோ மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ற வடிவிலேயே நிகழ்கின்றன. ஒன்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள் அல்லது தொலைக்காட்சிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உணர்வு பிரச்சினைகளுக்கான போராட்டத்தைவிட முக்கியமானவை மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டங்கள். அதுவும் மக்களின் கண்முன் நடக்கும் போராட்டங்கள். இவற்றையெல்லாம் பாஜக மேற்கொண்டதா அல்லது பத்திரிகைகள் மறைக்கின்றனவா என்பதெல்லாம் புரிபடாத மர்மங்களாகவே இருக்கின்றன.

இன்று புதியதாகத் தொடங்கும் கட்சிகூட உடனே ஒரு பத்திரிகையையும் தொலைக்காட்சியையும் உருவாக்கும்போது தமிழக பாஜகவால் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. தொடர்ந்து பாஜகவின் கருத்துகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்று பாஜக எப்போது கருதுகிறதோ, அப்போது அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இப்படி ஊடகத்தைத் தொடங்குவதாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அப்படி எந்த ஒரு முயற்சியிலும் பாஜக இறங்கியதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் பல சாதனைகள், ஊழலற்ற ஆட்சி போன்றவையெல்லாம் தமிழகக் கிராமங்களை அடையவே இல்லை. இன்று தமிழ்நாட்டின் சாதனைகள் எனச் சொல்லப்படும் மிகை மின்சாரம், வெள்ள நிவாரணம் போன்றவற்றில் மத்திய அரசின் உதவிகள், மத்திய அரசின் பல புதிய திட்டங்களெல்லாம் அதிமுகவின் சாதனை போலவே மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் விளக்கி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பெரிய நெட்வொர்க் பாஜகவிடம் இல்லை.

தமிழக பாஜக காற்றில் வாள் சுழற்றிக்கொண்டு உள்ளது. அதிமுக மற்றும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் இன்று கணிசமாகத் திரண்டு வரும் வேளையில் அதை தன்வசப்படுத்திக்கொள்ள தமிழக பாஜக எந்நிலையிலும் ஆயத்தமாக இல்லை. ஒரு தேர்தலின் கடைசி நொடி வரை அதிமுகவிலிருந்து அழைப்பு வராதா என்ற ஏக்கத்திலேயே தமிழக பாஜக காத்துக் கிடக்கிறது. தமிழக பாஜவை ஏற்றுக்கொண்டால் உடனடியாக சிறுபான்மை ஓட்டுக்களை இழக்கவேண்டியிருக்கும் என்பது உலகில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் தமிழக பாஜகவுக்கு மட்டும் தெரியவில்லை. எப்படியும் அதிமுக தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக் காத்துக் கிடந்தது. அதிமுக இல்லை என்றானபின்பு தேமுதிகவுக்குக் காத்துக் கிடந்தது.

தேமுதிக விஷயத்தில் பாஜக செயல்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தமிழக பாஜக திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைத்தால் அதை திமுக கூட்டணி என்றோ அல்லது அதிமுக கூட்டணி என்றோ அழைக்கிறார்கள். கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி என்று வரும்போது அதை பாஜக கூட்டணி என்றழைக்கப் பார்க்கிறார்கள். இதிலெல்லாம் பாஜக விட்டுக்கொடுத்துப் போயிருக்கவேண்டும். விஜய்காந்தின் கவனம் முதல்வர் பதவியின் மீது இருக்கும்போது, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக, விஜய்காந்தின் அந்த ஆசையை தமிழக பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். தேமுக நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் பாஜக இதையெல்லாம் யோசிக்காமல் பாஜக கூட்டணியில் தேமுக வரட்டும் என்று காத்துக் கிடந்தது. இதனால் பாஜக ஆதரவாளர்களே ‘முதலில் கட்சி முடிவெடுக்கட்டும், பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். இப்போது ஒரு வழியாக தனித்துப் போட்டி என்று பாஜக அறிவித்திருக்கிறது. இது முதல்படிதான். அதிமுக மற்றும் திமுகவின் வெறுப்பு ஓட்டுக்களைப் பெற தனித்து நின்றால் மட்டும் போதாது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே நிலையில் வைத்து விமர்சிக்கவேண்டும். அதிமுகவை விமர்சிப்பதா என்று நினைத்தாலே தமிழக பாஜகவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடுவது என்னவிதமான நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். டெல்லியில் இருந்தே குனியத் தொடங்கிவிடுகிறார்கள்.

திமுகவை கடுமையாக விமர்சிப்பது, அதிமுகவை செல்லமாகத் திட்டுவது போன்ற அணுகுமுறைகள் ஒரு காலத்திலும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கப்போவதில்லை. இன்றைய தேர்தலின் ஒரே முக்கிய அம்சம், அதிமுக ஆட்சியின் வெறுப்பு ஓட்டுகள் என்றாகிவிட்ட நிலையில், பாஜகவின் முக்கிய இலக்கு அதிமுகவாக இருக்கவேண்டுமே ஒழிய, திமுகவாக இருக்கக்கூடாது.

உண்மையில் தமிழகத்தின் ஹிந்துக்கள் கட்சி அதிமுக என்ற பிம்பமே இங்கே நிலவுகிறது. எனவே மத்தியில் பாஜகவை ஆதரிப்பவர்கள்கூட மாநிலத்தில் அதிமுகவை ஆதரித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இல.கணேசன் போன்றவர்கள், ‘சில விதிவிலக்கான அம்சங்களைத் தவிர, அதிமுகவும் பாஜகவும் ஒரே கருத்துகளைக் கொண்ட கட்சிதான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: 6.4.16 தேதியிட்ட துக்ளக்.)

பாஜகவுக்கு எப்படியும் சிறுபான்மையினர் ஓட்டளிக்கப் போவதில்லை. குஜராத் போல பாஜக ஆட்சி அமைந்து அதை நேரடியாக உணராதவரை சிறுபான்மையினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள். அப்படியானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் ஹிந்துக்களே. அவர்களைக் கவரும் வகையிலாவது பாஜக செயல்படவேண்டும். அதுவும் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாத வகையில், பெரும்பான்மை மக்கள் ஹிந்து ஆதரவு என்பதை பிரச்சினைக்குரிய ஒன்று என நினைக்காத வகையில் அந்தச் செயல்பாடு இருந்தாகவேண்டும். தமிழ்நாடு ஈவெரா வழி வந்த, பொதுவாக ஹிந்து எதிர்ப்பு அரசியலிலேயே ஊறிக்கிடக்கும் ஒரு மாநிலம். அப்படியானால் தமிழ்நாட்டு பாஜகவின் செயல்பாடு என்பது கத்தி மேல் நடப்பது. முதலில் ஹிந்து ஓட்டுக்களைக் கவரவேண்டும். அந்த ஹிந்து ஓட்டுக்களோ அதிமுக வசம் உள்ளது.

இன்று பல முனைத் தேர்தல் நடக்கிறது. இது அதிமுகவுக்கே பல வகைகளில் சாதகம். அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க அல்லது குறைக்க சாத்தியமுள்ள ஒரே கட்சி இன்றைய நிலையில் தமிழக பாஜகதான். இன்னும் 30க்கும் மேற்பட்ட நாள்கள் உள்ளன. அதிமுகவுக்குச் செல்லும் ஹிந்து ஓட்டுகளைக் குறிவைத்து அரசியல் செய்தாலே போதும், அதிமுக பல தொகுதிகளில் தோற்கும் நிலை ஏற்படலாம்.

சென்னை வெள்ளம் வந்து தமிழக அரசு ஸ்தம்பித்து நின்று மக்களைக் கைவிட்ட சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கொஞ்சம் அதிமுகவுக்கு எதிராகப் பேசினார். ஆனால் தொடர்ந்த சில நாள்களில் மத்தியத் தலைமை இவ்விஷயத்தை மென்மையாகக் கையாளும்படி அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. அதன்பின்பு தமிழிசையும் அமைதியாகிவிட்டார். தமிழக பாஜகவின் இப்படியான பரிதாபமான நிலைக்கு மத்தியத் தலைமைகளும் ஒரு காரணம். ஏனோ ஜெயலலிதாவின் ஆதரவை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தின் பிற கட்சிகள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தேவை ஏற்படும்போது தாறுமாறாக அதிமுகவையும் திமுகவையும் தாக்குகிறார்கள். பின்பு இவற்றையெல்லாம் மறந்து கூட்டணியும் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுமே நடக்காதது போல் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக பாஜக மட்டுமே இதில் தடுமாறுகிறது.

இன்றைய நிலையில் தமிழக பாஜக செய்யவேண்டியவை என்ன? முதலில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது. என் தேர்வு: நிர்மலா சீதாராமன், அடுத்ததாக பொன்.ராதாகிருஷ்ணன். இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவப் போகும் வெற்றிடத்தை முழுமையாகக் கைப்பற்ற எல்லா வகையிலும் ஆயத்தமாக இருப்பது. ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பது. தனக்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் கவனம்செலுத்துவது. எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகள் தரும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது. கொள்கை அளவிலான போராட்டங்களையும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது. அவை ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொள்வது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே தூரத்தில் வைப்பது, விமர்சிப்பது. தமிழ்நாட்டின் ஹிந்துக்கள் கட்சி பாஜகதான் என்று பாஜகவின் ஆதரவாளர்களையாவது முதலில் நம்ப வைப்பது. தொடக்கமாக, வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தி, அந்த இடங்களில் கட்சியை பலப்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது. பாஜகவுக்கென ஊடகங்களை உருவாக்குவது. இவை எதிலுமே இன்னும் தமிழக பாஜக பெரிய சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை என்பதுதான் உண்மை. இவற்றைச் செய்தால் இன்னும் ஐந்தாண்டுகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக உருவாகும் கட்சிகளில் முதன்மைக் கட்சியாகவோ அல்லது இரண்டாவது கட்சியாகவோ வரலாம். அப்படிச் செய்யாத வரை தமிழ்நாட்டில் மூன்று சதவீத வாக்கு வங்கிக்கு மேல் வாங்க இயலாமலேயே போகலாம்.

வரலாறு வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் தராது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளே மற்ற கட்சிகளின் மீட்சிக்கான வாய்ப்புகள். அதைப் பயன்படுத்திக்கொள்ளாத வரை எந்த ஒரு கட்சியும் மேலெழ வாய்ப்பில்லை. இதைப் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளாதவரை தமிழக பாஜக இத்தேர்தலில் எதையும் சாதிக்கப்போவதில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இன்னொரு காங்கிரஸாகத்தான் இருக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மீள ஒரே வழி, தமிழக பாஜக தமிழ்நாட்டின் கட்சிதான் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்குவதுதான். அதை நோக்கியே தமிழக பாஜகவின் ஒவ்வொரு நகர்தலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இனியும் இருக்கும்.

Share

வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர்

முன்பெல்லாம் என் தாத்தாவிடம் கேட்பேன், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று. அவர் சிரித்துக்கொண்டே ‘சோத்துக் கட்சிக்கு’ என்பார். எத்தனை முறை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதில் சோத்துக் கட்சி என்பதாகவே இருக்கும். தான் அளிக்கும் வாக்கை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் உறுதி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும், இன்னொரு வகையில் தன் வாக்கு வெல்லும் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் சொன்னதில் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என் நண்பரிடம் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் சொன்னேன். எப்போதும் அதிமுகவுக்கு வாக்களிப்பதையே விரும்பும் அவர் அந்த ஒருமுறை மட்டும் பாஜகவுக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என் நண்பர் வாக்களித்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு வந்தது. அதிமுக வெற்றி கண்டது. என் நண்பர் மீண்டும் மீண்டும் சொன்னது, ‘ஒழுங்கா அதிமுகவுக்கு போட்டிருந்தா, ஜெயிச்ச கட்சிக்கு ஓட்டு போட்ட மாதிரி இருந்திருக்கும்’ என்பதையே.

இந்த ஒரு மனநிலை தமிழ்நாடெங்கும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்னும் மனநிலை. ஆனால் இந் எண்ணம் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். வெல்லும் கட்சி அல்லது இரண்டாவதாக வரும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளை கிட்டத்தட்ட செல்லாத வாக்கைப் போல சித்திரிக்கும் போக்கு இங்கே உள்ளது. இந்த மனநிலையை மாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை என்பது மிகவும் முக்கியமானது, அவசியமானது. எல்லாத் தரப்பு மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஒரு சில கட்சிளால் முழுமையாகக் கவனப்படுத்திவிடமுடியாது. அதோடு சில தனிப்பட்ட சமூகத்தின் அல்லது குழுவின் பிரச்சினைகள் என்ன என்ன என்பதெல்லாம், இரண்டு முதன்மைக் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அல்லது பெரிய அளவில் வாக்கு இல்லை என்பதால் முதன்மைக் கட்சிகள் இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கேதான் சிறிய கட்சிகளின் இருப்பும் பங்களிப்பும் முக்கியமானதாகிறது.

ஜாதிக் கட்சி என்ற சொல் இன்று மிகவும் மோசமான ஒன்றாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற ஜாதி அமைப்பு மிக வலுவாக வேரூன்றிய நாட்டில் இந்த ஜாதிக் கட்சிகளின் தேவை மிக அவசியமானது. இந்த ஜாதிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள், இவை மேற்கொள்ளும் மிரட்டல் அரசியல், அதனால் விளையும் பிரச்சினைகள் – இவையெல்லாம் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் இதன் இன்னொரு பக்கமாக, இந்த ஜாதிக் கட்சிகளே தங்கள் ஜாதிக்குரிய தேவைகளை, பிரச்சினைகளை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன. இவை இல்லாவிட்டால் இப்பிரச்சினைகளெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் வராமலேயே போயிருக்கக்கூடும்.

அதிலும் இந்தியாவில், மிக நுணுக்கமான கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட மீச்சிறிய ஜாதிகளின் பெயர்கள்கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இது போன்ற ஜாதிகளின் தேவைகளை முன்வைக்கும் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த நோக்கில் மிக முக்கியமானது.

இதே கருத்தை சில அமைப்புகளுக்கும் சில குழுக்களுக்கும் விரிவுபடுத்தலாம். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் குரலை ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக முன்வைக்காமல் நாம் அவர்களை ஒருநாளும் புரிந்துகொண்டிருக்கமுடியாது. முதன்மைக் கட்சிகள் இத்தரப்பின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பவேண்டுமானால் இக்குழுக்களின் அழுத்தமும் தொடர் போராட்டமும் மிகவும் அவசியம்.

எனவே நாம் மீண்டும் மீண்டும் வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கான மக்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளமுடியாமலேயே போய்விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள், சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை, கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளாகவே சித்திரிக்கப் பார்க்கின்றன. ஏற்கெனவே முதன்மைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வாக்காளர்கள், வேறு எதையும் சிந்திக்காமல் வெல்லும் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

இது மக்களை அதிகம் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு பிரச்சினை. இதைக் கவனமாகக் கையாளவேண்டும். ஜாதிக் கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் நமக்கு ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் செயல்பாடுகளில் அராஜகங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளை மீறி அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்பின் குரல் மிகவும் இன்றியமையாதது. அக்குரல் நமக்கு ஏற்புடையது என்றால், மற்ற எல்லாப் பிரச்சினைகளையும்விட இப்பிரச்சினை நமக்கு முக்கியமானது என்று தோன்றினால், எக்கட்சி வெல்லும் எக்கட்சி தோற்கும் என்றெல்லாம் யோசிக்காமல், நம் கருத்தை ஒட்டிப் பேசும் கட்சி எத்தனை சிறியதாக இருந்தாலும் அதற்கு வாக்களிப்பதே நியாயமானது. அப்போதுதான் பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு வெளியாக தேர்தல் அரங்கம் மாறும். அதுவே ஜனநாயகத்துக்குத் தேவையானது. இனியாவது அதை நோக்கிப் பயணிப்போம்.

Share