Tag Archive for அறம்

அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி

கலைக்கான படங்களில் பிரசாரமும் பிரசாரப் படங்களில் கலையும் முக்கியமானவை. உண்மையில் ஒரு கலைப்படத்தில் உள்ள பிரசாரத் தன்மையும் பிரசாரப் படத்தில் உள்ள கலைத்தன்மையும் ஒரு திரைப்படத்தின் விவாதங்களைப் பல முனைகளுக்கு எடுத்துச் செல்ல வல்லவை. கலைப்படத்தில் உள்ள பிராசரத்தையும் ஒரு பிராசரப் படத்தில் உள்ள கலைத்தன்மையையும் சேர்த்தோ தனித்தனியாகவோ எதிர்கொள்வது எளிதானதல்ல. இவை இரண்டும் சரியாகப் பொருந்திப் போகும் ஒரு படம், பிரசாரவாதிகளின் கனவாகவே இருக்கும்.

 

அறம் இப்படியானதொரு படம். இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை ஒரு தரமான திரைப்படம் என்று சொல்லும்படியான தன்மையுடன் இயக்குநர் கோபி நயினார் இயக்கி இருக்கிறார். எப்படி ஒரு திரைப்படத்தில், தவிர்க்கமுடியாத பிரச்சினைகளையும் இந்திய எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இணைக்கமுடியும் என்பதை மிக அழகாகச் செய்து காட்டி இருக்கிறார்.

 

இந்த மாதிரியான படங்களின் அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தரமான மற்றும் உணர்வு ரீதியான திரைப்படம் என்ற வகையில் மட்டும் புரிந்துகொள்ளும் சாமானியர்களை, மிக எளிதாக இந்திய எதிர்ப்பு அரசியல் அவர்களது பிரக்ஞை இன்றியே சென்று சேரும். இதுதான் இந்திய எதிர்ப்புப் பிரசாரப் படங்களின் நோக்கம். ஆனால் இதைச் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. கொஞ்சம் பிரசாரம் தூக்கினாலும் படத்தை சாமானியர்கள் நிராகரித்துவிடுவார்கள். பல படங்கள் இப்படி வெற்றுப் பிரசாரப் படங்களாகவே தேங்கிவிடும். கலைத்தன்மை மட்டும் அதிகரித்து மாற்றுத் திரைப்படமாகத் தோன்றினால் அது சாமானியர்களுக்கான படமல்ல என்கிற ஒரு கருத்து உருவாகிவிடும். பிரசாரப் படங்கள் சாமானியர்களிடம் இருந்து விலகுமானால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாது. இரண்டும் இல்லாமல் அந்தரத்தில் அலையும் படங்களாகப் பல படங்கள் அமைந்துவிடும்.

 

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இந்திய எதிர்ப்பு என்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக பிரசாரம் செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

பொது மக்களுக்கு எதிரான ஒரு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியது. மக்களிடம் அந்த அரசுக்குரிய பிரச்சினைகளைக் கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். கூடவே அது பொதுமக்களின் கடமையும்கூட. ஆனால் எந்த அரசை எந்தக் காரணங்களுக்காக அம்பலப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. காரணங்களைக் கண்டுகொண்டு அதற்குப் பொறுப்பான அரசை எதிர்ப்பதுதான் சரியான அரசியல். ஆனால் இங்கே முற்போக்கு என்னும் முகமூடியில் நடப்பதெல்லாம், எந்த அரசை எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு, பின்பு அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி அந்த அரசின் மீது சுமத்துவது.

 

இப்படிச் செய்வதிலாவது ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கவேண்டும். ஆசை வெட்கம் அறியாது என்பதைப் போல, மாநில அரசுக்குரிய பொறுப்புக்களைக் கூட மத்திய அரசின் குற்றப்பட்டியலில் சேர்ப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. காரணம் மத்தியில் இருப்பது ஹிந்து ஆதரவு மற்றும் ஹிந்துத்துவ ஆதரவு அரசு. மோதியின் தலைமையிலான இந்த அரசைக் குறை சொல்வதுதான் ஒரே நோக்கம். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு பிரச்சினையும் மத்திய அரசின் பிரச்சினையாகக் காட்ட போலி முற்போக்காளர்கள் தயாராகவே இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் இதைச் செய்வார்கள். திரைப்படம் என்பது இன்னும் ஒரு ஊடகம். வலுவான ஊடகம். அதை நேர்மையற்ற முறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, அந்த ஊரை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை, புறக்கணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஹிந்துத்துவவாதிகளும் இப்படியான ஒரு அநியாயத்தை ஏற்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மையான பொறுப்பு யாருக்கு உள்ளது? மாநில அரசுக்குத்தானே? ஆனால் ராக்கெட் விடும் மத்திய அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை என்கிற பிரசாரம் படம் முழுக்கப் பரப்பப்படுகிறது. அதைவிட முக்கியமாக மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பாகிறது.

 

ஆழ்துளைக் கிணற்றுக் குழியில் குழந்தை விழுந்துவிடுகிறது. அடிக்கடி இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். இது போன்ற செய்திகள் தரும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இதுபோன்ற செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான்கைந்து நாள் தூக்கம் இழந்து தவிப்போம். இப்படிக் குழந்தைகள் விழுவதும் இறப்பதும் பெரிய கொடுமை. இதற்கான பொறுப்பை உண்மையில் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்பதல்ல. வேறொரு வகையில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

 

 

ஏன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு குழந்தை சாகும்போதும் எதாவது நிவாரணப் பணம் கொடுக்கும் அரசு, இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்விதான், அப்படி குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்ற, குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான கருவிகளை மத்திய மாநில அரசுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பது. இந்த மூன்றுமே முக்கியமானவைதான். கோபி நயினார் மூன்றாவது கேள்வியை மட்டும் மையமாக்கி மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்குகிறார். கருவிகள் கண்டுபிடிக்கப்படாதது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மை என்றாக்கி அத்தகைய இந்தியாவை எல்லா விதங்களிலும் எதிர்க்கலாம் என்பதை நோக்கிப் போகிறார்.

 

மத்திய அரசைப் பொறுப்பாக்குவதால் மாநில அளவில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் முதல் குஞ்சு குளுவான் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மாநில அரசியலில், அதுவும் கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்த வரை வெளிப்படையாக மாநில அரசியலைக் கேள்வி கேட்டு இவர்களுக்குப் பழக்கமில்லை. அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறார்கள்.

 

*

 

திண்ணைப் பேச்சுக்காரர்கள் வம்பளக்கும்போது எதாவது ஒன்றை எதோ ஒன்றுடன் கோர்த்துப் பேசுவார்கள் என்பதைப் பார்த்திருப்போம். ராணுவத்துக்குக் கோடி கோடியாகச் செலவழிக்கிறோம், ஆனால் தெருவில் பாதுகாப்பில்லை என்பது தொடங்கி, சைன்ஸ் சைன்ஸ்னு சொல்றாங்க, 21ம் நூற்றாண்டுன்னு சொல்றாங்க, ஒரு குழந்தையைக் காப்பாத்த முடியலை என்பார்கள். இதில் மேம்போக்கான நியாயம் உள்ளது என்பது சரிதான். ஆனால் நியாயம் மேம்போக்காக மட்டுமே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

 

இந்தத் திண்ணை வம்பின் ஒரு பரிமாணத்தை மட்டுமே இயக்குநர் அறம் படத்தில் காட்டி இருக்கிறார். பல கோடி ரூபாயில் ராக்கெட் விடும் அரசுக்கு ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை என்றால், ராக்கெட் ஒரு கேடா என்பதுதான் கம்யூனிஸ இயக்குநரின் புலம்பல். ராக்கெட் விடுவதும் அதனால் வரும் நன்மைகளை மக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் வேறு. குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பது வேறு. ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தும் அரசு குழந்தையைக் காப்பாற்ற கவனம் செலுத்தாது என்று சொன்னால் அது அயோக்கியத்தனமே. குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு ராக்கெட் விடுவது மோசடி என்பதும் இதற்கு இணையான இன்னுமொரு அயோக்கியத்தனமே.

 

எல்லோருக்கும் ஏற்பில்லாத நீர்ப் பற்றாக்குறை, ஆழ் துளைக் கிணறு பிரச்சினைகளையெல்லாம் ராக்கெட் விடுவதோடு தொடர்புபடுத்தி மத்திய அரசையும் எனவே இந்தியாவையும் அதை ஆதரிப்பவர்களையும் அராஜகவாதிகளாகச் சித்திரிக்கிறார் இயக்குநர்.  ராக்கெட் விடுபவர்களை ஆதரிப்பவர்களும் நீர்ப்பற்றாக்குறையையும் ஆழ் துளைக் கிணற்றில் குழந்தைகள் இறக்கும் பிரச்சினையை எதிர்க்கத்தானே செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதோடு ராக்கெட் விடுவது என்னவோ ஒரு அவசியமற்ற வேலை என்பதான எண்ணத்தை வெகுஜனங்களின் மத்தியில் விதைக்க பெரிய அளவில் மெனக்கெடுகிறார். இவை எல்லாமே ஆபத்தான மற்றும் நியாயமற்ற போக்குகள்.

 

இந்தப் போக்குகளின் ஊடே இன்னும் இரண்டு அநியாயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஒன்று, ஐஏஎஸ் அதிகாரி முட்டாள்தனமாக உணர்ச்சிப் பெருக்கில் செயல்படுவதுதான் சரி என்பதோடு, யோசித்து யதார்த்தமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் எல்லாம் முட்டாள்கள், அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள் என்கிற பார்வையைப் படம் நெடுகிலும் கொண்டு வந்தது. இன்னொன்று, அறிவியல் என்பதே அவசியமற்றது, மாறாக அசட்டு நம்பிக்கையே தேவையானது என்ற பார்வை.

 

ஐஏஎஸ் அதிகாரியாக நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வாழ்நாள் வேடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த ஐஏஎஸ் கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கம்யூனிஸ்ட்டின் கனவு என்பதைத் தாண்டி எந்த வகையிலும் யதார்த்தம் கொள்ளவில்லை. குழந்தை உயிருக்குப் போராடும்போது மக்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று அரசு ஊழியர்களையே கேள்வி கேட்பதும் மக்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு குழந்தையை உள்ளே செலுத்துவது என்று முட்டாள்தனமான முடிவெடுப்பதும் என இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினியோ அஜித்தோ தன் எதிரிகளை ஆயிரம் பேரை ஒரே ஆளாகத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கற்பனைகள்கூட ஆபத்தில்லாதவை. அவற்றில் முட்டாள்தனம் மட்டுமே உண்டு, அதற்குப் பின்னால் அரசியல் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஐஏஎஸ் கதாபாத்திரத்தின் அசட்டுத் துணிச்சலுக்குப் பின்னே, ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கும் அரசியல் உள்ளது. ஆளும் வர்க்கம் புனிதமானது அல்ல. அதே சமயம் அந்தப் புனிதத்தன்மையைக் கேள்வி கேட்பது முட்டாள்தனத்தின் வழியாகவோ, மக்களை உணர்வுரீதியாக மட்டுமே தூண்டிவிடும் முயற்சிகளின் வழியாகவோ இருக்கக்கூடாது. கோபி நயினார் எவ்விதத் தர்க்கமும் இன்றி இந்தியாவின் அறிவியல் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் மனம் போன போக்கில் மட்டுமே அணுகுகிறார்.

 

மத்திய அரசுக்கு எதிரான ஒரு போக்கு ஒருவேளை சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அதை அப்படியே இந்தியாவுக்கு எதிராகக் கட்டமைக்கவேண்டும் என்பது மட்டுமே கோபி நயினாரின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. மத்திய அரசுக்கு எதிரானவர்கள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் கருத்துக்கும், இந்தியாவின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அதே கருத்தைச் சொல்லும்போது அது எதிர்கொள்ளப்படும் விதத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே தீரும்.

 

இந்த எதிர்ப்பில் பிற்போக்குத்தனமான கருத்துகளைச் சொல்வதோடு உதவ வரும் அரசு இயந்திரங்களையும் கேலி பேசுகிறார் இயக்குநர். தன் மனைவி மயக்கம் போட்டு விழும்போது மருத்துவர்களின் உதவி தேவையில்லை என்பதை நியாயப்படுத்தும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம் என்றொரு கிராமம் எல்லா சமயத்திலும் முடிவெடுக்க முடியுமா? இத்தனைக்கும் ஒரு குழந்தை குழியினுள்ளே விழுந்ததும் அனைத்து அரசு இயந்திரமும் விழுந்தடித்துக்கொண்டே அங்கே வருகிறது. அங்கேயே நிற்கிறது. இப்படிக் குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்றத் தேவையான வசதிகளும் கருவிகளும் இல்லை என்று அந்த அரசு இயந்திரமும் கவலைப்படத்தான் செய்கிறது. இதையெல்லாம் தன்னை அறியாமலேயே படத்தில் பதிவு செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

இத்தனைக்குப் பிறகும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் விதமாகவும் மறைக்கும் விதமாகவும் இந்திய எதிர்ப்பு இந்தப் படத்தில் மையச் சரடாகப் பின்னப்பட்டுள்ளது. காவல் துறையின் உதவி, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய அரசு அதிகாரியான ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு (மடத்தனமாக நடந்துகொண்டபோதும் உள்நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவதுதான்) என எல்லாவற்றையும் பின் தள்ளி, இந்திய எதிர்ப்புக் குரலும் அறிவியலைக் கிண்டலடிக்கும் அறிவீனக் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.

 

இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குடித்துவிட்டு, குழியினுள் விழுந்த குழந்தையின் தந்தையைப் பார்த்தும் காவல்துறையைப் பார்த்தும் பேசிக்கொண்டே இருக்கும். குழந்தையின் தந்தையைப் பார்த்து, இவங்க நம்ம குழந்தையைக் காப்பாத்த மாட்டாங்க என்றும் அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கேலி செய்தும் புலம்பிக்கொண்டே இருக்கும். அக்கதாபாத்திரம் வேறு யாருமல்ல, முற்போக்காளர்கள் என்ற பெயரில் அவநம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கும் நபர்களின் உருவம்தான். இந்திய எதிர்ப்பையே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் நபரின் பிரதிபலிப்புதான் அந்தக் கதாபாத்திரம். ஒருவகையில் அவர் இயக்குநர் கோபி நயினார்தான்.

 

*

 

1990ல் மாலூட்டி என்றொரு மலையாளத் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்றது. அச்சு அசலாக ‘அறம்’ திரைப்படத்தின் அதே கதைதான். ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லக் குழந்தை ஆழ் துளைக்காகத் தோண்டப்பட்ட கிணற்றுக் குழியில் விழுந்துவிடும். அதை எப்படித் தூக்குகிறார்கள் என்பதே கதை.

 

 

‘அறம்’ திரைப்படத்தைப் போலவே முதல் காட்சிகளில் கணவன் மனைவியின் கூடல் காட்சிகளெல்லாம் வரும். மாலூட்டியில் அக்காட்சிகள் மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கும். ‘அறம்’ படத்தில் இக்காட்சிகள் மிக யதார்த்தமாக உள்ளன. இக்காட்சிகளில் வரும் நடிகை, இப்படத்தின் கதாநாயகி நயன்தாராவின் நடிப்பையும் தாண்டிச் செல்கிறார். ‘அறம்’ படத்தைப் போலவே ‘மாலூட்டி’ படத்திலும் காவல்துறை, அரசு இயந்திரம் என எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவார்கள். எனவே ‘அறம்’ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை என்ற வகையில் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆனால் அக்களத்தைத் தன் அரசியலுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘மாலூட்டி’ படத்தில் இத்தகைய அரசியல் எதையும் பரதன் முன்வைக்கவில்லை. ஒரு கடினமான நேரத்தில் பொது மக்கள் சொல்லும் குறைகளும் புலம்பல்களும் காட்டப்படத்தான் செய்தன. ஆனால் அப்படியே அவை வளர்ந்து இந்திய வெறுப்புத் தோற்றத்தைக் கைக்கொள்ளவில்லை. அங்கேதான் ‘அறம்’ அரசியல் படமாகிறது.

 

*

 

‘அறம்’ திரைப்படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கில் மனம் வெறுத்துத் தன் வேலையை ராஜினாமா செய்யும் ஐஏஎஸ் அதிகாரி எம்எல்ஏ ஆகிறார். அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் கொள்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்கமுடியும் என்று யூகிக்கலாம். அல்லது சுயேச்சையாக வென்றிருக்கலாம் என்று தர்க்கம் செய்யலாம். எப்படி இருந்தாலும் அது இயக்குநரின் கனவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரி அரசுக்கு எதிராக மனம் நொந்து அரசுப் பணியில் இருந்து விலகி அரசின் அங்கமாகவே மாறும் ஒரு கனவு. உண்மையில் இந்தக் கனவு இன்றும் சாத்தியம் என்பதுவே இந்தியா நமக்களித்திருக்கும் கொடை. ஆனால் இயக்குநர் இந்தக் கனவைச் சொல்ல இந்திய எதிர்ப்புக்கான களத்தை அமைத்துக்கொள்கிறார். ராக்கெட் விடுவதைக் கேலி செய்யும் காட்சிகள் உணர்வு ரீதியாக மக்களைத் தன்வயப்படுத்த மட்டுமே. உண்மையில் நமக்குத் தேவை, ராக்கெட் விடுவதும்தான், இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதும்தான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பதும், ஒன்று நிகழும் வரை இன்னொன்று நிகழ்வது ஒரு கேடா என்று சொல்வதும், அறிவுபூர்வமான தர்க்கங்களல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். இந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே அறம் போன்ற திரைப்படங்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்கமுடியும்.

Share