Tag Archive for இஸ்ரோ

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

இப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது. புத்தகம் முழுக்க பாதி நம்பி நாராயணன் மீது போடப்பட்ட வழக்கு பற்றியது என்றால், மீதி இஸ்ரோவின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியது. எனவே ஒரு திரைப்படமாக இதை இந்தியாவில் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். ஏற்கெனவே பல பயோபிக்சர்கள் தந்த கொடூரமான அனுபவமும் மனதில் ஓடியவண்ணம் இருந்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், மாதவன் டீசண்டான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இத்தனை டெக்னிகல் சவால்கள் உள்ள ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததே ஆச்சரியம்தான். இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி சாதனையாளரா தேசத் துரோகியா என்னும் ஒற்றை வரி சுவாரஸ்யமானதுதான். ஆனால் மாதவன் அதை மட்டும் படமாகச் செய்யவில்லை. எப்படி நம்பி நாராயணன் தன் புத்தகத்தை ஒரு விரிவான களமாகக் கொண்டாரோ அதே போல மாதவனும் தன் திரைக்களத்தை விரிவாக அமைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நம்பி நாராயணன் வழக்கு பற்றிய விஷயங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன.

நம்பி நாராயணன் உலகம் முழுக்கச் சுற்றி இந்தியாவின் இஸ்ரோவுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் பாடுபடும் காட்சிகள் அனைத்தும் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாம் காண்பது ஆங்கிலத் திரைப்படமோ என்னும் மயக்கம் வருமளவுக்குக் காட்சிகளின் தரம் உள்ளது. இதெல்லாம் எத்தனை பேருக்குப் புரியும், வணிக ரீதியாகப் படம் எப்படிப் போகும் என்றெல்லாம் மாதவன் அலட்டிக்கொண்டது போலவே தெரியவில்லை.

உலகத் திரைப்படங்களுக்கு உரிய ஒரு பொதுமொழி, பொறுமை. இந்தப் படமும் அதே பாதையில் மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விவரிக்கிறது. ஃப்ரான்ஸ், ரஷ்யா தொடர்பான காட்சிகளின் விரிவும், வசனங்களின் ஆழமும் பிரமிப்பைத் தருகின்றன. இயக்கத்துக்காக மட்டுமின்றி வசனத்துக்காகவும் மாதவன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். வளவள வசனங்கள் இன்றி, சுருக்கமாக, தீர்க்கமாக வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாதவன், சிம்ரன் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு விஷயமே அல்ல என்னுமளவுக்கு, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மேல்நாட்டு நடிகர்களில் இருந்து உள்ளூர் நடிகர்கள் வரை இதைச் சாத்திருக்கிறார்கள். இயக்குநர் மாதவனாக இந்தப் படத்தை அவர் தூக்கி நிறுத்தியது, இந்த நடிகர்களின் நடிப்பின் மூலமாகவே நிகழ்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

புத்தகத்துக்கும் திரைமொழிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்தவையே. ஆனாலும் மாதவன் இன்னும் சில விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சில விஷயங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாம். புத்தகத்தில் மிக ஆழமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் இங்கே விரைவான தொனியில் சொல்லப்படுகின்றன. குறிப்பாக உன்னி விஷயம். (புத்தகத்தில் பாலகிருஷ்ண பிள்ளை.) பாலகிருஷ்ணன் நம்பி நாராயணனை அறைந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தப் புனைவுச் சுதந்திரத்தை மாதவன் எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் ரத்தமும் சதையுமாக நம்பி நாராயணன் நம்முன் இருக்கும்போது ஏனோ நெருடுகிறது. உன்னி தொடர்பான காட்சிகள் புத்தகத்தில் நெடுக சொல்லப்படும்போது, அவர் மகன் இறந்து போயும் அவனிடம் மறைக்கப்பட்ட செய்தி ஒரு தாக்கத்தைக் கொண்டு வந்தது. திரைப்படத்தில் அதைச் சில நிமிடங்களில் சொல்லவேண்டிய கட்டாயம். எனவே அதன் தாக்கமும் குறைவாகவே உள்ளது. அதுவே உன்னி கைதுசெய்யப்பட்ட நம்பியைக் காணும் காட்சி வலுவாக வந்திருக்கிறது. காரணம், இரு காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலம்தான்.

இந்த உன்னி காட்சியையும், தொடக்க சில நிமிடங்களையும் விட்டுவிட்டால், படம் முழுக்க அறிவியல் திரைப்படம்தான் என்றே சொல்லிவிடலாம். வழக்கு ரீதியான விஷயங்கள் எல்லாம் ஒரு சீரியலைப் போல ஒரே டேக்கில் சொல்லி முடிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு நீதிமன்றக் காட்சி வந்தது போலக் கூட நினைவில்லை.

தமிழ்நாட்டில் இஸ்ரோவுக்கு இடம் கேட்கும்போது குடித்துவிட்டு வந்த திமுக மந்திரியைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. படத்துக்கு அது தேவையில்லை என்று மாதவன் நினைத்திருந்தால், அதுவும் சரிதான். ஆனால் அதை வைத்திருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 🙂

மாதவன் தவறவிட்ட அற்புதமான ஒரு விஷயம், உனக்குத் தெரிந்த முஸ்லிம் ஒருவன் பெயரைச் சொல் என்று போலிஸ் நம்பி நாராயணனை வற்புறுத்தும்போது அவர் சொல்லும் பெயர் ‘அப்துல் கலாம்’. இந்தக் காட்சி சினிமா ரீதியாகவே நன்றாக இருந்திருக்கும். மாதவன் இதையும் வைக்கவில்லை. ஒருவேளை ஒரு திரைப்படமாகப் பார்க்கும்போது நம்பி நாராயணனின் குத்தலான விளையாட்டைச் சிலர் புரிந்துகொள்ளாமல் போகக் கூடும் என்று மாதவன் நினைத்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

ஒரு சினிமாவுக்கே உரியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதால், ஆங்காங்கே தெரியும் சில நாடகத்தனமான காட்சிகளையும் தாண்டி, இத்திரைப்படம் மிக முக்கியமானது. பயோ பிக்சரில் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறோம் என்று பெருமைப்படலாம்.

முதல் திரைப்படத்திலேயே இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் மாதவனை வாழ்த்துவோம். ஹே ராம் போன்ற ஒன் முவீ வொண்டராகத் தேங்கிவிடாமல் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தர மாதவனுக்கு வாழ்த்துகள்.

Share

நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்

இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.

ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!

————————————-+———————-+—————

திமுக விட்ட ராக்கெட்

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.

பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?

விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை

இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.

————————————–+———————+—————-

இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.

ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂

#நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?

என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.

அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.

ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.

இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.

இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.

அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂

பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂

Share