Tag Archive for உத்தி

தமிழில் உலகத் திரைப்படங்கள் வரிசை – பகடி மற்றும் மகுடி

 

”படம் பார்த்துட்டீங்களா? நல்லா இருக்கா?”

“படம் பார்க்கும்போதே பாதிலயே ஃபேஸ்புக்ல மெசேஜ் போட்டிருந்தேனே. படம் செம மொக்கைன்னு.”

“ஓ ஸ்டேட்டஸ் மெசேஜ் நான் பார்க்கலை. அவ்ளோ மொக்கையாவா இருக்கு?”

“பகடி படத்தைதான கேக்குறீங்க? செம மொக்கைங்க. இடைவேளை வரை உட்கார முடியலை. அதுக்கு பின்னாடி நிக்கக்கூட முடியலை. ஓடித்தான் வெளிய வந்தேன்.”

“ஒருவேளை உங்களுக்கு புரியலையோ?’

“என்னங்க புரியலை? படம் மொக்கைன்றேன். சரி, இந்தப் படத்துல புரியறதுக்கு என்ன இருக்கு? ஒரே சினிமாத்தானம். சகிக்க முடியலை. எப்ப பாரு காதல் காதல்னு. சுதந்திரத்துக்கு முன்னாடி நடக்கற படமாம், அப்பவும் காதலைத்தான் காமிப்பாங்களாம். கருமம்.”

“உங்களுக்கு புரியலையோன்னுதான் தோணுது. உதாரணமா ஒரு சீன் வரும் பாருங்க. கதாநாயகனும் கதாநாயகியும் முதல்ல பார்க்கிற சீன். வாவ், கிளாசிக் இல்ல?”

“என்ன கிளாசிக்? நேரடியா பார்க்கவேண்டியதுதான? அதென்ன கீழ கிடக்கிற மழைத்தண்ணில பார்க்கிறது? சரிங்க, அதுக்கு எதுக்கு அஞ்சு நிமிஷம்? இப்படித்தாங்க படம் முழுக்க மெல்லா போவுது.”

“இல்லைங்க, அது மழைத்தண்ணி. கிட்டத்தட்ட சாக்கடை. அதுல ஹீரோவுக்கு ஹீரோயின் முகம் தெரியுது. ஹீரோயினுக்கு ஹீரோ முகம் தெரியுது. சாக்கடைல மலர்ந்த செந்தாமரை மாதிரி.”

“அடக்க்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை? அது ஒரு குறியீடுங்க. அப்ப மழைத்தண்ணில ஒரு பூ விழுது பார்த்தீங்களா? அது இன்னொரு குறியீடு.”

“என்னங்க இது குறியீடுன்னு சொல்றீங்க? அதுவும் வெறும் குறியீடா வருதே, சாதா சீனே வராதா?”

“முழுசா கேளுங்க, கடவுளே அந்தக் காதலை ஆதரிச்ச மாதிரியான ஃபிரேம்ங்க அது.”

“டைரக்டருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நினைச்சேனே.”

“அஃப்கோர்ஸ். அதான் மழைன்னு இயற்கையை வெச்சார். உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல, ஸோ அது உங்களுக்கு கடவுள்.”

“ஓ, இதெல்லாம் நாமளா வெச்சிக்கிறதுதான் இல்ல?”

“நோ நோ, படத்தோட குறியீடு சொல்ற சங்கதி அது. அந்த சீன்ல, பூ விழுந்த உடனே, தேங்கிக் கிடக்கிற மழைத்தண்ணி லேசா அசைஞ்சு திரும்பவும் ரெண்டு பேரோட முகமும் தெரியுது பாருங்க, ஒரு பெண் ஒரு பூ. அவ வரவும் சலனம். அவளுக்குன்னா, ஒரு ஆடவன் பூ தர்றவன். அவன் வரவும் சலனம். கிளாஸ் இல்லை? அதுமட்டுமில்லை, பின்னாடி வரபோற கஷ்டங்களெல்லாம் தெளிஞ்சு அவஙக் நல்லா வாழ்வாங்கன்னு சொல்ற மாதிரி இல்லை?”

“அப்ப அந்த சீனோட படம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்களா? நான் இது தெரியாம கடைசி வரை இருந்து முழுப்படத்தையும் பார்த்துட்டேனே.”

“சே சே. டைரக்டர் எவ்ளோ ரசிச்சி எடுத்திருக்கான் பாருங்கன்னு சொல்லவந்தேன்.”

“படம் நாம ரசிச்சு எடுக்கத்தான எடுக்கணும்? சரி, அதுக்கும் எதாவது சொல்வீங்க.”

“கதையாவது உங்களுக்குப் புரியுதா?”

“என்னங்க புரிய இருக்கு? ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான். அப்ப சுதந்திரப் போராட்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி அதை எதிர்க்கிறான். ஏன்னா அவனுக்கு இவ மேல ஒரு கண்ணு. இவன் அவனை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறான். இதுல என்ன புரியாம இருக்கு?”

“இல்லைங்க, அப்படி நேரடியா பார்க்கக்கூடாது.”

“படம் பார்க்கும்போது நான் கொஞ்சம் கோணலா தலையை சாச்சுத்தான் பார்ப்பேன். வீட்டுலயே கிண்டல் பண்ணுவாங்க.”

“அதைச் சொல்லலை. ஒரு படத்தை படமா பார்க்கக்கூடாது.”

“ஐயையோ. 30 வருஷமா அப்படித்தானே பார்த்துட்டேன்.”

“அதுதான் உங்க பிரச்சினையே. இப்ப பாருங்க. ஹீரோ ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறதை சும்மா காதலுக்காக எதிர்க்கிறான்னு நினைக்கக்கூடாது. இந்தியனைப் பொருத்தவரை பொண்ணுதான் மண்ணு. மண்ணுதான் நாடு. எனவே அவன் நாட்டுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறான்னு பாக்கணும்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை. அப்படித்தாங்க படத்தை பார்க்கணும்.”

“ஆனா படத்துல அதை சொல்லவே இல்லையேங்க.”

“சொல்லமாட்டாங்க. படம்னா அது கேக்கிறதுக்கு இல்லை. பாக்கிறதுக்கு.”

“என்னங்க மொதல்ல நேரா பாக்ககூடாதுன்னீங்க, இப்ப கேக்கக்கூடாதுன்றீங்க. தியேட்டருக்கு போய் என்னதான் பண்றது?”

“கிண்டல் பண்ணாதீங்க சார்.”

“யாரு நானா?”

“சரி விடுங்க, இப்ப பாருங்க அது வெறும் காதல் கதையாவா தோணுது? ஏன் அதை சுதந்திரக் காலத்துல வெச்சான்னு யோசிங்க. காதல்ங்கிறது ஒரு குறியீடு இங்க.”

“இந்த குறியீடுன்றதுதாங்க எனக்கு புரியலை. படத்துல பாட்டு வருது, ஃபைட்டு வருது, அதெல்லாமேவும் குறியீடுதான்றீங்களா?”

“சே சே. அதெல்லாம் சும்மா சீனுங்க.”

“ஏங்க எப்ப குறியீடு வருது எப்ப சாதா சீன் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஏன் இந்த டைரக்டர் குறியீடு வர்ற சீனெல்லாம் ஒரு ப்ளஸ் சிம்பல் போட்டுக் காமிக்கக்கூடாது?”

“இப்பத்தானே சொன்னேன், படம்ங்கிறது கேக்கிறது இல்லை, பார்க்கிறதுன்னு. நீங்களா யோசிக்கணும் சார்.”

“இல்லைங்க, நானும் ப்ளஸ் சிம்பலை காட்டத்தான் சொன்னேன், ப்ளஸ்னு சொல்லச் சொல்லலை.”

“கிண்டல் பண்ணாதீங்க சார். இன்னும் இது மாதிரி நிறைய சீன் இந்தப் படத்துல இருக்கு. ஒரு சீன்ல பாருங்க, அந்தப் பொண்ணோட அப்பா தற்கொலை பண்ணிக்கிற சீன்ல வெறும் கயிறு மட்டும் ஆடிக்கிட்டே இருக்கு பார்த்தீங்களா?”

“என்னது அவங்க அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரா?”

“ஏன் அதிர்ச்சியாகறீங்க? அவங்க அப்பாதானே?”

“அது இல்லைங்க, அந்த கயிறு ஆடற சீன்ல நானும் அப்படித்தான் நினைச்சேன். நினைச்சேனா. அடுத்த சீன் வந்தது. வந்ததா. அதுல பார்த்தீங்கன்னா அவங்க அப்பா உயிரோட வாரான். அப்பாடின்னு எனக்கு அப்பதான் உசிரே வந்தது.”

“தப்புங்க, உசிரே போயிருக்கணும்.”

“அது படம் முடியும்போது நடந்ததுன்னு வைங்க.”

“சே, நான் அதைச் சொல்லலைங்க. அந்த கயிறு ஆடும்போது அவன் செத்தான்னு நினைச்சீங்களா? அதுவரைக்கும் சரி. அடுத்த சீன்ல அவன் ஏன் உயிரோட வர்றான்? அதுக்குப் பிறகும் ஏன் கயிறு ஆடிக்கிட்டே இருக்கு? ஏன்னா அவன் செத்த பொணமா நடமாடறான்னு அர்த்தம்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை இருக்கு. கயிறு ஏன் ஆடிக்கிட்டே இருக்கு, வீட்டுல அதை யாருமே அவுத்து எறியலையான்னு தோணுனா நீங்க சாதாரணமா பார்க்கிறீங்கன்னு அர்த்தம். ஆனா பாருங்க, அந்த வீட்டுல கயிறே இல்லை. கயிறுன்றது உங்க கற்பனை.”

“ஐயையோ இது பேய்ப்படமா அப்ப?”

“விளையாடாதீங்க சார். உண்மைல உங்க மூலமா படத்தை இயக்குநர் பார்க்கிறார். உங்களுக்கு அவன் செத்துட்டான்னு தோணனும்னு சொல்ல வர்றார். ஆனா பாருங்க அவன் சாகலை. அதாவது படத்தைப் பொருத்தவரைக்கும் சாகலை.”

“புரியலைங்க சார்.”

“இல்லைங்க இது ஒரு உத்தி.”

“மொதல்ல குறியீடுன்னு சொன்னீங்களே, அது மாதிரியா சார்?”

“இல்லைங்க அது குறியீடு. இது உத்தி.”

“ஓ.”

“இப்ப புரியுதா! என்ன உத்தின்னா, படத்தை படமாவும் பார்க்கணும். நீங்களாவும் பார்க்கணும். படத்துல உங்களுக்கே இடம் தர்றது.”

“இல்லைங்க, எனக்கு நடிப்பெல்லாம் வராது.”

“இல்லைங்க, பார்வையாளனா இடம் தர்றது. இது ஒரு உத்தி.”

“அந்நியன் படம் பார்க்கும்போதே நான் இப்படி பார்க்கலையேங்க.”

“அந்நியனெல்லாம் கேக்கிற படம். இது பார்க்கிற படம்.”

“அப்புறம் எதுக்குங்க இந்த படத்துல ம்யூசிக், பாட்டு, வசனமெல்லாம்.”

“குட் கொஸின். உண்மைல சொல்லப்போனா நீங்க ம்யூசிக், பாட்டு, வசனத்தையெல்லாம் கூட பார்க்கணும்.”

“என்ன சார் பயமுறுத்துறீங்க.”

“ஐமீன், அப்ர்சவ் பண்ணனும்னு சொல்லவந்தேன்.”

“அப்சர்வேஷனா? என்னங்க இது பேஷண்ட்டை ஐசியூல சேர்த்திருக்கிற மாதிரி சொல்றீங்க. வெறும் படம்தானே இது.”

“என்னங்க வெறும் படம்னு சொல்லிட்டீங்க. படம் முழுக்க குறியீடு உத்தின்னு கலக்கியிருக்காங்க. பின்நவீனத்துவப் படம். சாதா படத்தை பார்க்கிற கண்ணோட இதையும் பார்க்காதீங்க.”

“காதையும் கழட்டிட்டு கண்ணையும் கழட்டிட்டு நான் என்னத்தைங்க பார்க்கிறது.”

“வித்தியாசமான கண் ஐ மீன் கண்ணோட்டத்தோட பாருங்க. உங்களையும் ஒரு பிரதிக்குள்ள வெச்சிப் பார்க்க வைக்கிற படம் தமிழ்ல இதுதான் முதல்ல வந்திருக்கு. அதான் உங்க குழப்பமே.”

“பின் நவீனத்துவப் படம்னு என்னவோ சொன்னீங்களே, அப்படி ஒரு படம் வந்திருக்கா?”

“அது படம் பேரு இல்லைங்க. அது ஒரு உத்திங்க.”

“அதுவுமா?”

“பின்ன, ஒரு படம்னா சும்மா இல்லைங்க.”

“நான் நெஜமாவே சும்மான்னு நினைச்சுட்டேங்க.”

“அப்படி நினைக்காதீங்க. நீங்க வெறும் 60 ரூபாய் கொடுத்து பார்த்துடறதால உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வருது. இதுவே 6000 ரூபாய் கொடுத்து பார்த்தா இப்படி தோணுமா, யோசிச்சு பாருங்க.”

“ஐயையோ ஒரு படத்துக்கு 6000மா? நினைக்கவே நடுங்குதே. படம் நல்லா இல்லைன்னாகூட நான்லாம் நல்லா இருக்குன்னுதான் சொல்வேங்க.”

“எக்ஸாட்லி.”

“இன்னொரு சீன்ல ஒரு டவுட் எனக்கு. கேக்கவே ஒரு மாதிரி இருக்கு. ஆனாலும் உங்ககிட்ட கேளுங்க.”

“குட் குட் கமான். படத்தை இப்படி பேசிப் பேசித்தான் பார்க்கணும்.”

“தாயோளி, எங்க வீட்ல படம் பார்க்கும்போது பேசாத பேசாதன்னே வளர்த்துட்டானுங்க.”

“கூல், சரி, உங்க டவுட்டை கேளுங்க.”

“படத்துல கடைசி சீன்ல எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஏங்க பொண்ணோட அப்பா அழற மாதிரி வருது? நெஜமாவே புரியலை. நான்கூட அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சேன்.”

“இல்லைங்க, ஒரு படைப்பு முடியும்போதுதான் தொடங்கணும்.”

“என்னங்க இது, முடியும்போது முடிஞ்சாத்தான படம் முடியும். தொடர்ந்தா எப்பத்தான் படம் முடியும்.”

“யூ ஸீ, நீங்க அப்ப வேறாளாயிடறீங்க. நீங்க படத்துல இல்லை. வெளியில இருக்கிறீங்க. படம் என்னவோ திரைல முடிஞ்சிடுது. ஆனா உங்க மனசுல உங்களுக்கு நீங்களே எடுக்கிற படம் முடியறதே இல்லை.”

“நான் படம்லாம் எடுக்கிறதில்லைங்க.”

“நோ நோ, அதைச் சொல்லலை. உண்மைல ஒவ்வொருத்தன்குள்ளையும் ஒரு படம் இருக்கு. ஒரே படம்தான், ஆனா ஒவ்வொருத்தர்குள்ளையும் ஒவ்வொரு மாதிரி இருக்குன்றேன்.”

“புரியலைங்க, ஆனா கேக்க நல்லா இருக்கு.”

“புரியும். அவன் ஏன் அழறான்னு நீங்க யோசிக்கும்போது உங்களுக்கு பல காரணங்கள் வரலாம். இன்னொருத்தருக்கு இன்னும் பல காரணங்கள் வரலாம். அப்ப ஒவ்வொருத்தர் குள்ளையும் பல விதமா படம் தொடருது. அதுக்குத்தான் டைரக்டர் அப்படி அந்த சீனை வெச்சிருக்கார்.”

“அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சதை யோசிச்சா எனக்கே கேவலமா இருக்கு சார். எனக்கெல்லாம் பத்தாது சார். சரி சார், நீங்க யோசிச்சீங்களா சார், உங்களுக்கு என்ன என்ன காரணம்லாம் வந்தது?”

“ஸாரிங்க, நான் ரொம்ப வேலையா இருந்துட்டேன், யோசிக்கலை, ஆனா காரணம் இருக்கும்னு மட்டும் யோசிச்சிக்கிட்டேன். நீங்க சும்மாதானே இருக்கீங்க, யோசிச்சுப் பாருங்க.”

“ஆமா சார், நான்லாம் ரொம்ப வளரணும். இது தெரியாம பகடி படத்தை மொக்கைன்னு சொல்லிட்டேன். திரும்பப் போய் நல்லா இருக்குன்னு சொல்லவும் வெக்கமா இருக்கு.”

“நோ நோ, இதெல்லாம் இலக்கிய உலகத்தில் சாதாரணம்.”

“ஓ அப்படி ஒரு உலகம் இருக்கா சார். என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருக்கு சார்.”

“ஒரு படைப்பை முதல்ல நல்லா இல்லைன்னு சொல்லிட்டு, பின்னாடி அதுதான் உலகத் தரம்னு சொல்றதெல்லாம் இங்கே சகஜம். அதை மீள் பார்வை பண்ணனும். அவ்ளோதான்.”

“ஓ மீள் பார்வை இல்ல? நான் இன்னொரு தடவை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டேன். படைப்பு இல்ல? சே, நான் படம்னு நினைச்சுட்டேன்.”

“வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியா வரும். மொத்தத்துல பகடி ஒரு உலகத் திரைப்படம்.”

“உலகத் திரைப்படமா? டைரக்டர் இதையாவது படத்துல சொல்லிருக்கலாம். நான் ஏதோ குன்னத்தூர் பொட்டைல இருக்கிற ஒருத்தன்ல  கல்லுப்பட்டில இருக்கிற பொண்ணுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கான்னு நினைச்சுட்டேன்.”

“உலகத் திரைப்படம்னு சொல்லமாட்டாங்க. நாம்தான் அதை உலகத் திரைப்படம்னு புரிஞ்சிக்கணும். ஏற்கெனவே சொன்னேனே, ஒரு படம் அது படம் அதோட அது உங்க படம்னு.”

“ஆமா, சொன்னீங்கள்ல. உலக திரைப்படம்னா என்ன சார்.”

“உலகத் திரைப்படம்னா… வெல்… வாட் ஐ கேன் ஸே இஸ்… வெல். ஐ கேன் ஸே இட் அ வேர்ல்ட் மூவி. பிரிஸைஸ்லி வேர்ல்ட் சினிமா”

“வேல்ர்ட் சினிமான்னா?”

“வாட் டூ சே, யெஸ், எக்ஸாட்லி, வேர்ல்ட் கிளாஸ் சினிமா.”

“ஓ. நான் உலக திரைப்படமெல்லாம் பார்த்ததில்லைன்றதால எனக்கு சட்டுன்னு பிடிபடலை. இப்ப கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருக்கு.”

“ஒரு படம் உலகத் திரைப்படமான்னு சொல்றதுக்கு நீங்க உலகத் திரைப்படமே பார்த்திருக்கவேண்டியதில்லைன்றதுதான் இதுல இருக்கிற ஐரனி.”

“ஓ ஐரனி. நாம இன்னும் நிறைய பேசணும் சார்.”

“பேசலாம் இல்லை பிரதர், விவாதிக்கணும். விவாதம். சரியா சொல்லணும், சரியா?”

“சரிங்க, நாம விவாதிப்போம்.”

“சரிங்க, இன்னொரு நாள் பார்ப்போம்.”

.

.

.

“என்ன சார் எப்படி இருக்கீங்க.”

“நீங்க சொன்னதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு நேத்தும் ஒரு படம் பார்த்தீங்க.”

“ப்ரில்லியண்ட். என்ன படம்.”

“மகுடின்னு ஒண்ணு வந்திருக்கே அது.”

“ஓ அதுவா, செம மொக்கையாச்சே.”

“அப்படித்தாங்க நானும் நினைச்சேன். ஆனா விடலை. கண்ணை மூடி கொஞ்ச நேரம், காதைப் பொத்தி கொஞ்ச நேரம், யோசிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம், படம் போனதே தெரியலைங்க. சட்டுன்னு முடிஞ்சிட்டு. செம விறுவிறுப்பு.”

“அடச்சே, அது செம மொக்கை படங்க. அதுல என்ன இருக்குன்னு சொல்றீங்க?”

“என்ன சார் இது. வில்லன் ஹீரோவை அடிக்கிறான். ஹீரோ தோத்துடறான். முந்தாநாள் வரை எனக்கும் இது சப்புன்னுதான் இருந்திருக்கும். ஆனா நீங்கதான் சார் ஒரு படத்தை பார்க்கச் சொல்லிக்கொடுத்தீங்க. தெய்வம் சார் நீங்க. ஹீரோ சேரிலேர்ந்து வர்றான். வில்லன் சிட்டி. சிட்டிக்காரன் சேரியை அடிக்கிறானான்னு யோசிச்சேன் பாருங்க, என் ரத்தமெல்லாம் பொங்கிட்டு. டைரக்டரை நினைச்சுக்கிட்டு ஒரு புல்லரிப்போட அப்படியே கையைத் தட்டுனேன் பாருங்க. பக்கத்துல இருக்கிறவனெல்லாம் மெர்சலாயிட்டான். நல்லவேளை, ஒண்ணு ரெண்டு பேர்தான் இருந்தான்னு வைங்க.”

“இல்லைங்க, இது நீங்களா யோசிக்கிறது. இதுல என்ன குறியீடு இருக்கின்றீங்க.”

“ஆமாங்க, சட்டுன்னு அந்த வார்த்தை ஞாபகத்துக்கு வரலை. குறியீடு. மனசுல வெச்சிக்கணும். என்னா குறியீடு இல்லை?!”

“இல்லைங்க, இதுல குறியீடே இல்லை. எல்லாப் படத்துலயும்தான இப்படி வருது?”

“ஏன், எல்லாப் படத்துலயும் குறியீடு வரக்கூடாதா சார்?”

“அப்படீன்னா அது கிளிஷே.”

“அது யாரு கிளிஷே? அதை நீங்க அன்னைக்கு சொல்லலியே.”

“இல்லைங்க, அது வேற சங்கதி. ஆனா இந்த மகுடி மரண மொக்கைங்க. பகடி மாதிரி வராது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இல்லைங்க, நீங்க அந்தப் படத்தோட டைரக்டர் யாருன்னு பார்த்துட்டுதான் குறியீடா கிளிஷேவான்னு பார்க்கணும்.”

“ஓ அப்படி வேற இருக்கா?”

“ஆமா, நீங்க நாளைக்கு வாங்க, நான் ஒரு லிஸ்ட் தர்றேன், அவங்க படத்துல மட்டும் நீங்க குறியீடு உத்தி பின்நவீனத்துவம் பார்த்தா போதும். மத்த படங்களெல்லாம் கிளிஷே.”

“இது கொஞ்சம் பெட்டரா இருக்குங்க.”

“நவ் யூ அர் கிளியர் ஐ கெஸ்.”

“ஆமாங்க.”

“இப்படியே பார்த்துப் பழகிட்டீங்க நீங்க என்னைவிடப் பெரியாளாயிடுவீங்க.”

“ரொம்ப சந்தோஷம் சார், ரொம்ப தேங்க்ஸ். லிஸ்ட்டை மறந்துடாதீங்க ப்ளீஸ்.”

[ஆப்த நண்பர் ஒருவர் கடல் திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது, சாத்தான் தலைகீழாகத் தொங்கும்போது தேவன் தலைகீழாகத் தெரிகிறார் என்று எழுதியிருந்தார். அதை இன்னொரு ஆப்த நண்பரும் சிலாகித்திருந்தார். அப்போது ஏற்பட்ட கடும் மனநெருக்கடியின்போது எழுதியது இது. அந்த இரு நண்பர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். :>]

Share