Tag Archive for எஸ்.ராமகிருஷ்ணன்

நிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்

நிமித்தம் நாவல்

எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசிக்கும் எஸ்ராவின் நாவல் இது. அரைகுறையாகக் காது கேட்கும் ஒருவனது வாழ்க்கை. மிக நீண்ட வாழ்க்கை. அவனுக்கு மட்டுமல்ல, வாசிக்கும் நமக்குமே அந்த அலுப்பைக் கடத்திவிடக்கூடிய ஒரு நாவல்.

தேவராஜுக்கு முதல் அத்தியாயத்திலேயே கல்யாணம் என்று வருகிறது. கடைசி அத்தியாயத்தில் கல்யாணம் நடக்கிறது. இடைப்பட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களில் அவனது திருமணம், கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எப்படியெல்லாம் தள்ளிப்போகிறது, அவன் எத்தனை பெண்களை சந்தித்தான், அவனது வாழ்க்கையில் அவனுக்கு நேர்ந்த தோல்விகள் என விரிகிறது

தேவராஜுக்கு அன்பு செலுத்த யாரும் இல்லை. அப்பா முதல் அம்மாவிலிருந்து உறவினர்கள் எல்லோரும் அவனை அன்புக்கு லாயக்கற்றவர்களாகவே பார்க்கிறார்கள். இடையில் யாரேனும் அவனுக்கு அன்பைத் தந்தால் அவர்களுடனும் ஒரு முறிவு ஏற்பட்டு வருகிறது. கடைசி வரை அவனுடன் நட்பாக அன்பாக இருப்பது அவனது நண்பன் ராமசுப்பு மட்டுமே. இப்படி அன்புக்காகவும் ஒரு பெண் துணைக்கும் ஏங்கி தெரியும் தேவராஜுவின் கதை இது.

ஆனால் நான் இந்த நாவலை எஸ்ரா என்னும் சுவாரஸ்யமான கதைசொல்லியின் ஒரு கதைத் தொகுப்பாகவே பார்க்கிறேன். தொடக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்தவண்ணமுள்ளன. அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பெங்கும் விரியும் இக்கதைகள் அதன் வழியே ஒரு சித்திரத்தைக் கொண்டு வருகின்றன. இந்தக் கதைகள், தொன்மக் கதைகளிலிருந்து பேய்க் கதைகள் என நீண்டு, உண்மைக் கதைகளின் சாயல் கொண்ட கதைகள் என்பது வரை செல்கின்றன. ஒருவகையில் இந்த நாவலில் இக்கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் இக்கதைகளின் சுவாரசியம், நாவலின் மையக் கதையைவிடப் பெரியதாக உள்ளது.

நாவலின் இடையிடையே தெறிக்கும் அரசியல் குறிப்புகளும் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதாக உள்ளது. அந்த அரசியல் குறிப்புகளின் வழி நமக்கு வெளியாகும் கதாபாத்திரம் ஒன்றிரண்டுதான். அந்தக் காலகட்டத்தின் வழியே நாவல் நம்மை இழுத்துக் கொள்ள இந்த உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார் போலும்.

எப்படியாவது தேவராஜுக்குக் கல்யாணம் ஆகி விடாதா அல்லது நாமே ஒரு பெண் பார்த்துக் கட்டி வைத்துவிட்டு விட மாட்டோமா என்று நாமே சொல்லும் அளவுக்கு அவனுக்குப் பெண் துணை தொடர்பான தோல்விகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவன் வாழ்க்கை அங்கும் இங்கும் என ஊர் ஊராக அலைபாய்கிறது. ஒருவகையில் அவனுக்கு எதிலும் நிறைவு என்பது ஏற்படுவதில்லை. இறுதிவரை.
எஸ்ராவின் நாவல்களில் பொதுவாக எனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை என்பது, இப்படியான அல்லது எப்படியாவது ஒரு தொடர்பு கொண்டு வரும் கதைகளின் நுழைப்புதான். ஆனால் இந்த நாவலில் அப்படி வரும் காட்சியமைப்புகள் நாவலின் ஆதாரத்தை விட வெகு சுவாரஸ்யமாக உள்ளன. எனவே இந்த நாவலைப் படிப்பது மிக ரசனையாக உள்ளது.

நாவலில் வரும் பல உபகதைகள் மிகவும் ரசித்த தக்கவையாக உள்ளன. இறுதிக்காட்சிகளில், வாழ்வாங்கு வாழ்ந்த அந்த பண்ணையார் நாயுடுவின் வீழ்ச்சி… ஒரு கதை போல அறிமுகமான நபர், தலைமுறைகள் கழிந்து வீதிகளில் வரும்போது திக்கென்றுதான் உள்ளது.

ஒரு கட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார், ஒரு சாதாரணன் வாழ்ந்ததற்கான தடயங்கள் எந்த வகையிலும் இருப்பதில்லை என்று. இது குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். அந்த யோசனைக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒன்றுமில்லாதது தரும் எல்லாமுமான சிந்தனை எப்போதும் ஒரு பயத்தை அளிக்கக் கூடியது. இந்த நாவலின் சில கதைகள் அந்தப் பயத்தைச் தொட்டுச்சென்றன.

Share

எஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – தி ஹிந்துவின் லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டேன். எஸ்ரா ஒட்டுமொத்த பங்களிப்பைப் பற்றிய பேச்சில் வல்லவர். அவரது நினைவாற்றலும் பரந்த வாசிப்பும் அவற்றைப் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுத்துவதிலும் வல்லவர். எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து பெரும்பாலும் விலகாதவர். இப்பேச்சும் அப்படியே.
 
தமிழ்ச் சிறுகதைகளின் உன்னதத்தைப் பற்றியும் அச்சிறுகதைகளின் பரந்து பட்ட களம் பற்றியும் தெளிவாகப் பேசினார். கதையில் முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற பிரபலமான சிறுகதை விதி என்று நம்பப்படுவதை அறவே மறுத்தார். இக்கருத்து பிரஞ்சுக் கதைகளின் வழியே நம்மை வந்தடைந்தது என்றும், ரஷ்ய சிறுகதைகள் இப்படியானதொரு வரைவைக் கொண்டிருக்கவில்லை என்றும் சொன்னார். உலக, இந்தியச் சிறுகதைகளிலும் தமிழ்ச் சிறுகதைகளே பரந்துபட்டவை என்றும், அவற்றிலும் இன்னும் பரவலாக எழுதப்படாத களங்கள் உள்ளன என்று சொல்லி அவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
 
ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் என்பது பெரியதல்ல. அவற்றை நினைவில் வைத்திருக்கிறார் எஸ்ரா என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு கதையின் பெயரைச் சொன்ன உடனேயே, அது முக்கியமான கதையாக இருந்தால், அவற்றை அப்படியே விவரிக்கும் திறமையும் நினைவாற்றலும் எஸ்ராவுக்கு உள்ளது. எனக்குள்ள பிரச்சினை, ஒரு கதை ஒரு காப்ஸ்யூலாகி எனக்குள் உறைந்துவிடும் என்பதுதான். அதை ஒரு உருவகமாகவும் ஒரு வரியாகவும் ஒரு கதையாகவும் மட்டுமே மீண்டும் என்னால் நினைவுக்குக் கொண்டு வரமுடியும். நான் எழுதிய கதைகள் உட்பட! ஆனால் எஸ்ராவுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. இந்த நினைவாற்றல் மிக முக்கியமானது. ஒரு வழியான பயிற்சியும் கூட இது.
 
நினைவுக்கு வந்த சிறுகதையாளர்களின் பட்டியலை வாசித்தார். பெரும்பாலானவர்களை நானும் வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவேண்டியவை ஏகப்பட்டவை உள்ளன என்னும் எண்ணம் சோர்வையும் நம்பிக்கையையும் ஒருசேர அளித்தது.
 
கடைசியில் ஒரு கதையைச் சொன்னார் எஸ்ரா. (ரஷ்ய கதை என நினைக்கிறேன்.) அந்தக் கதையின் சர்வாதிகார ராணுவ அதிகாரி, எழுத்தாளர்களைத் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறுகிறார் – இலக்கியத்தை வாசித்து. இங்கேதான் நான் குழம்பிப் போன இடம். அல்லது என்னைக் குழப்பிக்கொண்ட இடம். இலக்கியத்துக்கென வாழ்வில் நிச்சயம் ஒரு இடம் உள்ளது என்பதை நம்புகிறேன். இலக்கியம் ஒருவனைத் தீவிரமாக்குகிறது என்பதாக மட்டுமே என் நம்பிக்கை இத்தனை காலங்களில் வந்து சேர்ந்திருக்கிறது. நல்லவனை மிகத் தீவிரமான நல்லவனாக, இலக்கிய ரீதியிலான ஆழ்மன தர்க்கங்களுடன் நல்லவனாக ஆக்குகிறது. கெட்டவனையும் அப்படியே. சூதுவாது கொண்டவர்களையும் அப்படியே. இலக்கியம் இவர்கள் எல்லாவருக்குமான இடத்தையும் தர்க்கங்களின் வழியே அமைத்துக் கொடுக்கிறது.
 
அப்படியானால் இலக்கியம் ஒருவனை நல்லவனாக்குவதில்லையா என்றால், என் பதில் – முன்பெல்லாம் திரையரங்குகளில் ‘மேற்படி’ படங்கள் திரையிடப்படும். அதில் இடைவேளைக்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து, அறிவியல் ரீதியான உண்மைகளைச் சொல்லத் துவங்குவார்கள். இப்படங்களைப் பார்த்து ஒருவர் அறிவியல் ரீதீயான உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது தர்க்க ரீதியாகச் சரிதான். இதே தர்க்க ரீதியாக மட்டுமே இலக்கியம் ஒருவனை நல்லவனாக மாற்றமுடியும். என்னைப் பொருத்தவரை இலக்கியம் ஒருவனை தீவிரமாக சிந்திக்கச் செய்கிறது என்பதை மட்டும் ஏற்கிறேன். மற்றபடி அதன் விளைவு அந்தத் தனிமனிதனின் இயல்பு தொடர்பானதே. அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனில் இலக்கியம் உரசினால் அதன் விளைவு நல்லதாக இருக்கும்.
 
இப்படிச் சொல்வதால் நான் இலக்கியத்தை நம்பவில்லை என்பதல்ல. நிச்சயம் நம்புகிறேன். எனக்கான ஒரே திறப்பு அதுதான் என்றும் உறுதியாக நம்புகிறேன். நிபந்தனைக்குட்பட்டு. இதனால் என்னை நம்பிக்கையின்மைவாதி எனலாம். அதுவும் உண்மைதான்.
 
அப்படியானால் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்துக்கும் வாழ்வில் என்ன பங்களிப்பு என யோசித்தேன். அவை சிறுவயது முதலே வாழ்க்கையில் நமக்கு ஊட்டப்படுகின்றன. அவையே நம் வாழ்வின் பற்றுக்கோல்கள் என்ற அளவிற்கோ, மாதிரி என்ற அளவுக்கோ சொல்லப்படுகின்றன. அவற்றைக் கேட்டவர்களும் இன்று வாழ்வில் அதன்படி உள்ளவர்களுக்குமான வேறுபாட்டைப் பார்த்தாலும் நான் சொல்வது பொருந்தித்தான் போகிறது. அதேசமயம் இதிகாசங்களால் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்து வாழ்பவர்களை நம் மரபும் கலாசாரமுமே அப்படி நடக்க வைக்கிறது என்று நம்புகிறேன். இந்த அட்வாண்டேஜ் நவீன இலக்கியங்களுக்கு இன்று இல்லை.
 
நேரம் கருதி எஸ்ரா சுருக்கமாகப் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன். இது தொடர்பாக எஸ்ரா நீண்ட உரை ஒன்றை விரிவாகப் பேசலாம். அது பெரிய ஆவணமாக இருக்கும்.
 
உரையைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=6huZMOzZGhE
Share