Tag Archive for கவிதை

கவிதைகள்

அழகோவியம்

பஞ்சு விரல்களில்
கோலம் வரைகிறாள்
கண்ணில் விழும் தலைமுடியை
ஒதுக்கிக் கொண்டே இருக்கும்‌ சிறுமி
முயல் வரைந்து உச் கொட்டி அழிக்கிறாள்
மீன் வரைந்து முகம் சுழிக்கிறாள்
கன்று பாதி உருவாகி வரும்போதே நீரூற்றுகிறாள்
ரோஜாவை வரைந்து பார்க்கிறாள்
சூரியகாந்தியை வரையும்போதே
கோலத்தைக் காலால்‌ எத்திவிட்டு
கண்ணீருடன் வீட்டுக்குள் ஓடும்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் கழுத்துக்குப் பின்னே
அவள் வரைந்த
அனைத்து உயிரிகளும்
மலர்களும்
காத்திருந்ததை.

சொற்களை விட்டோடியவன்

அட்டைக் கத்தியால்
வானில்‌ சுழித்தபடி
அந்தக் கோட்டி
உதிர்த்த சொற்களைப்
பாதி பேர் கேட்கவில்லை
மீதி‌ பேருக்குப் புரியவில்லை.
வானத்தில்
தன் கத்தியால்
ஒரு கேள்வி இட்டான்.
சொல்ல சொல்ல
சொற்கள் குவிந்துகொண்டே சென்றன
சொற்களின் பீடம் மேலேறி
கேள்வியை முறைத்து நின்றவன்
கீழே நகரும் கூட்டத்தை
வாத்துக் கூட்டம் என்றான்.
சட்டெனப் புரிந்துவிட்டதால்
கல்லால் அடித்தார்கள்.
சொற்களை வாரி எடுத்துக்கொண்டு
காற்றில் மறைந்தான் அவன்.
எல்லோரும் நிம்மதியானார்கள்.
அவனோ
இன்னொருவனோ
வருவான் என
கேள்விக்குறி
தன் மழைக்காலத்துக்காகக்
காத்திருக்கிறது

நடைக்கோலம்

நீல வானில்
வெண்ணிற மேகங்கள்.
நடைப்பயிற்சி தொடங்கினேன்.
திக்கற்ற மனம்.
எங்கிருந்தோ தீம் திரனன தவழ்ந்து வந்தது.
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ.
எதிர்வீட்டு மொட்டைமாடியில்
தவமணி அக்கா மூச்சு வாங்க நடக்க வந்தாள்
என்னத்த, அத்தான் எங்க என்று கேட்க நினைத்து
பயந்து போய் அமைதியாக இருந்தேன்.
அவளே வானத்தைக் கைகாட்டி
இருபது நாளாச்சு என்றாள்.
கீழ் வீட்டுக்காரன் மொட்டை மாடிக்கு வரும்போதெல்லாம்
அந்த அத்தானைப் பார்த்துப் புன்னகைப்பான்.
அவன் போயும் இருபது நாளிருக்குமா?
அத்தானுக்குத் தெரியாது.
வானத்தைப் பார்த்தேன்.
எதிரெதிர் மேகத்திரளில்
அத்தானும் கீழ்வீட்டுக்காரனும்
ஒருவரை ஒருவர்
புன்னகைத்துக் கொண்டார்கள்.

Share

விலங்குச் சாலை (கவிதை)

விலங்குச் சாலை

தார் ரோட்டில்
சாலையோடு சாலையாக
அப்பிக் கிடக்கும்
நாயொன்றின் தோல் மீது
வண்டி ஏறி இறங்குகையில்
துணுக்குறும் மனத்துக்குள்ளே,
கொல்லாமல் விட்ட
மனிதர்களின் முகங்கள்
வேட்டையாடாமல் விட்ட
அழகிகளின் உடல்கள்
கண் மூடிக் கொண்ட
கடவுள்களின் சாத்தான் குணங்கள்
மண் மூடிக் கிடந்த
மிருகங்களின் விழிப்புகள்.
சாலைக்குக் குறுக்கே ஓடும் நாய்க்குட்டிகளே
இது விலங்குகள் விரையும் சாலை.

Share

கவிதை

விடியல்

பெரும் புழுதியில்
சூறைக் காற்றில்
ஒரு மல்லிகை மொட்டு
இலக்கற்று
பறந்துகொண்டிருந்த போது
பேரலையில்
பெரு வெள்ளத்தில்
ஒரு மரக்கலம்
திசையற்று
தடுமாறிக் கொண்டிருந்தபோது
பெரும் பிரளயத்தில்
பேரச்சத்தில்
அமைதியற்று
உயிரொன்று
அல்லாடிக் கொண்டிருந்தபோது
கொடு நெருப்பு
தன் விருப்பென
அனைத்தையும்
அணைத்துக் கொண்டபோது
கிழக்கே
வானம்
விடியத் தொடங்கியது
எப்போதும் ஒரு காலையைப் போல.

Share

மீட்பின் துளி

கால்சுவட்டில்
தேங்கும்
நீரில்
மிதக்கும்
வானத்தில்
பறக்கும்
பறவையின்
காலில்
உலவும்
உலகின்
பிடியில்
சிக்கிக்
கிடக்கும்
எண்ணத்தை
மீட்க
வருக
வருகவே
ஒரு
துளி

Share

கவிதை

கடவுளர்கள்

பலசரக்குக் கடையில்
கல்லாவில்
சிரிக்கும்
கரிய நிற ஊர்ப்பெண்

இளநீர் சீவும்போது
கண்ணில் விழுந்த தூசிக்காக
வருத்தப்பட்ட
இளநீர்க்கடைக்காரன்

பெட்ரோல் நின்றுபோய்
வண்டியை தள்ளிக்கொண்டு
வேர்க்க விறுவிறுக்க நடக்கும்
முகம்தெரியா மனிதனுக்கு
உதவும் இன்னுமொரு முகமிலி

புன்னகைத்தபடியே
ஸ்டாப் அட்டை காண்பிக்கும்
போக்குவரத்துக் காவல்காரர்

ஒன்றின் மீது
ஒன்றென அமர்ந்து
இறக்கை படபடக்கும்
புறாக்களைப் பார்த்து
வெட்கப்படும் சிறுமி

ஒரே நாளில்
தொடர்ச்சியாக
இத்தனை கடவுளர்களைப் பார்த்து
நெடுநாளாகிவிட்டதில்
இன்றே
உலகம் அழிந்துவிடும்
அச்சத்தில்

ஒரு வசவுக்காக
துரோகத்துக்காக
கேவலத்துக்காக
அதிர்ச்சிக்காக
உள்ளக் கொதிப்புக்காக
ஒரு துளி ரத்தத்துக்காக
காத்திருக்கிறேன்,
எல்லாம்
நொடியில்
இயல்பாகட்டும்.

Share

கவிதை

நம்பாதே

நம்பாதே என்றது அந்தக் குரல்
எப்போதும் என்னுடனே
என் நிழலென வரும் குரல்
நிஜத்தை மீறிய
நிஜமென ஆகும் ஒரு குரல்.
அப்படியே நின்றேன்.

உள்ளமெங்கும் புன்னகை ஒளிர
உதட்டில் ஒரு ஒளியை ஏந்தி
கைகள் இரண்டையும் விரித்தபடி
தழுவ வந்தார்கள்.

எழுதி எழுந்தி ஓய்ந்த கைகளுடன்
உலகம் முழுக்க அமைதியைப் பரப்பியவர்கள்
ஒரு பேனாவுடன் சில காகிதங்களுடன்
என் கை பிடித்து அழைத்துப் போக
அமைதியாகக் காத்திருந்தார்கள்.

உடல் தழுவி
இறுக்கிப் பிணைந்து
பாம்புகளென புரண்டவர்கள்
என் நலனுக்கென
தன்னைக் கொடுத்தவர்கள்
என்னைக் கடைத்தேற்ற
கண்களில் தாபத்தோடு பார்த்திருந்தார்கள்.

கையில் அட்சதையுடன்
கண்களில் நடுக்கம் தெரிய
உடலைத் தேங்கிப் பிடித்தபடி
ஓய்ந்து போய் நின்றிருந்தவர்கள்
எனக்காகவே நின்றிருந்தார்கள்

என்னை அழைத்துப் போவதாகச் சொன்னார்கள்
என்னை சரி செய்வதாகச் சொன்னார்கள்
எனக்கு வழிகாட்டுவதாகச் சொன்னார்கள்
என்னை ஆசிர்வதிப்பதாகச் சொன்னார்கள்
நானின்றிப் பிறிதொன்றில்லை என்றார்கள்.
பிறிதொன்றில்லாமல் நானில்லை என்றார்கள்.
எழுத்தும் தத்துவமும்
அன்பும் காமமும்
கண்களில் ஈரமும்
கைகளில் உறுதியும்
எல்லாம் எனக்காகவே என்றார்கள்.

கருவண்டின் வசீகரமென
புதைகுழியின் ஈர்ப்பென
எரிவிளக்கின் ஒளியென
சிலந்தி வலையின் விரிவென
நெடுஞ்சாலையின் இருளென
விலக்கமுடியாமல் விக்கித்து நின்றேன்.

உள்ளே இருந்து சொன்னது
அந்தக் குரல்,
நம்பாதே.

அக்குரலையும் சேர்த்தே
நம்பவில்லை என்றேன்.

எதைப் பிடித்துக்கொள்வது?
எதைப் பிடித்துக்கொள்வது?

அனைவரும் பார்த்திருந்தார்கள்.
காற்றில் பக்கங்கள் கிழிந்தன.
பேனாக்கள் உலர்ந்தன.
இன்னமும் நின்றுகொண்டிருக்கிறேன்.
அடுத்த அடிக்காகக்
காத்திருக்கிறது நிலம்.

Share

கவிதை

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

ஒரு கவிதை

அநாதியின் நெருப்பு

ஆதிமலரின்
ஆதிக்கும் ஆதி மலரின்
வாசம் கமழத் தொடங்கி இருந்தபோது
அநாதியின் நெஞ்சுத்தீ
வேகெடுக்கத் தொடங்கி இருந்தது
முதலுக்கும் முதலான சங்கு ஒன்றின் இசையில்
பெயரில்லா மூப்பனின் நடனத்தில்
சங்குகள் முழங்கத் தொடங்க
இசை பேரோசை ஆகியது
பிரபஞ்சமெங்கும் பேரோசை
யாராலும் நிறுத்த இயலாத
எவரையும் உள்ளிழுத்துப் பெருகும்
பெரும் நெருப்பு
அநாதியின் மூச்சுக்காற்று
இப்போதும் சுற்றிச் சுழல்கிறது
மாயத்தின் புதிர்கள் அவிழும்போது
எப்போதும்போல் புலர்கிறது ஒரு காலை
ஒரு பெண்ணென ஒரு ஆணென.

Share