Tag Archive for காலம் இதழ்

காலம் 50வது இதழ்

காலம் 50 வது இதழ். ஒரு சிற்றிதழ், அதிலும் தீவிரமான சிற்றிதழ், 50வது இதழ் என்னும் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்வது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. யாரோ ஒருவரின் அர்ப்பணிப்பும் தியாகமும் இன்றி இச்சாதனை சாத்தியமே இல்லை. இந்த ஒருவருக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் நிச்சயம் உதவி இருப்பார்கள். அவர்களும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்களே. செல்வம் என்ற பெயரே எனக்கு காலம் செல்வம் என்றுதான் பரிட்சயம். காலம் இதழைத் தொடர்ந்து கொண்டு வரும் காலம் செல்வம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

காலம் இதழ் 50 – நிச்சயம் வாசிக்கவேண்டிய இதழ். 176 பக்கங்களில் 150 ரூபாய்க்கு வெளியாகி இருக்கும் இந்த இதழைத் தவற விட்டுவிடாதீர்கள்.

மரிய சேவியர் அடிகளாரின் பேட்டி முக்கியமான ஒன்று. என் கொள்கைச் சாய்வுகளில் வைத்துப் பார்த்தால், என் நண்பர்கள் இதில் கற்கவேண்டியது அதிகம் உள்ளது என்றே சொல்வேன். கிறித்துவம் எப்படி மக்களுடன் இயங்கி கலையினூடாக மக்களைத் தன் வசமாக்குகிறது என்பதை இதில் பார்க்கலாம். என் கொள்கைக்கு எதிர்ச்சார்பு கொண்டவர்கள் இக்கருத்தை நிச்சயம் எதிர்ப்பார்கள். அவர்களுக்கும் இப்பேட்டி ஒரு பொக்கிஷமே.

ஐயர் ஒரு அரிய வகை மனிதர் கட்டுரை – பத்மநாப ஐயருக்கு செய்யப்பட்டிருக்கும் மரியாதை.

தீரன் நௌஷாத்தின் கட்டுரை பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறது. பலருக்கு இக்குறிப்புகள் பின்னாட்களில் உதவலாம். 🙂

காயா – ஷோபா சக்தியின் சிறுகதை. இன்றைய காலங்களில் மிகக் காத்திரமான சிறுகதைகளில் எழுதுபவர்களில் முதன்மையானவர் ஷோபா சக்தி. அக்கதைகளின் வரிசையில் உள்ள கதை அல்ல இது. இது வேறு ஒரு வகையான கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு மனரீதியாக ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அன்று இரவு முழுவதும் இக்கதை என் நினைவில் சுற்றிக்கொண்டே இருந்தது. மிக தொந்தரவு செய்யும் கதை. இத்தொகுப்பின் சிறந்த படைப்பு இது என்பதே என் தனிப்பட்ட ரசனை.

நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு என்ற ஒரு சிறுகதையை அசோகமித்திரன் அவரது நினைவிடுக்குகளில் இருந்து தேடி எழுதி இருக்கிறார்.

அமெரிக்க கடற்படையில் அன்னபூரணி அம்மாள் என்னும் கட்டுரை, அன்னபூரணி என்னும் கப்பலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை. 1930ல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட கப்பல் இது. மிக முக்கியமான கட்டுரை.

பொன்னையா கருணாகரமூர்த்தியின் Donner Wetter கதை, இரண்டு மனிதர்களின் அனுபவங்களை அவர்களுக்கிடையேயான கிண்டல்களைப் படம்பிடிக்கிறது. கதை முழுக்க ஒரு மெல்லிய புன்னகையும் இரு மனிதர்களின் ஈகோவும் பிணைந்து வருகின்றன.

திரைப்பட விழாக்கள் – அன்றும் இன்றும் என்ற கட்டுரை சொர்ணவேல் எழுதியது. பல தகவல்களைத் தரும் முக்கியமான கட்டுரை.

நாஞ்சில் நாடனின் ‘கூற்றம் குதித்தல்’ கட்டுரை வழக்கம்போல நாஞ்சில் நாடனின் தமிழ்த்திறமையை பறைசாற்றுவது.

சிறில் அலெக்ஸின் தீண்டுமை கட்டுரை, தொடுதல் பற்றிய அறிவியல் உண்மைகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மிக நல்ல கட்டுரை.

இவை போக இன்னும் சில கதைகளும் (எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழவன்) கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் கதைகளும் பல கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

காலம் 50 வது இதழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு எண் 635 மற்றும் அந்திமழை அரங்கு எண் 299லும் கிடைக்கிறது.

Share