Tag Archive for தந்தி டிவி

இரண்டு நேர்காணல்கள் – சந்திரலேகா ஐ ஏ எஸ், சிவாஜி சொண்டிநேனி

இரண்டு நேர்காணல்கள்
 
* சந்திரலேகா ஐ ஏ எஸ் உடனான நேர்காணல் – ஹரிஹரன் எடுத்தது. ராஜபாட்டை – தந்தி டிவி. மிக நல்ல நேர்காணல். ஆனால் முக்கியமான நேர்காணல் என்று தோன்றவில்லை. சந்திரலேகா இதுவரை பேசியதில்லை என்பதால் இந்நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. ஹரிஹரன் மிக அழகாகக் கேள்விகளைக் கேட்டார். ஆம், அழகாக. எந்தத் தவறான தொனியும் வந்துவிடக்கூடாது, அதே சமயம் எல்லாக் கேள்விகளையும் கேட்டுவிடவேண்டும் என்கிற பொறுப்புணர்வு தெரிந்தது. சந்திரலேகா எவ்வித அலட்டலும் இல்லாமல் (நான் கேட்ட வரைக்கும்) எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவாகவே பதில் சொன்னார்.
 
தன் மீதான அமில வீச்சுக்கு ஜெயலலிதா வேண்டுமானால் காரணமாக இருக்கலாம் (அல்லது அவர்தான் காரணம்) என்ற ரீதியில் பேசியவர், நிச்சயம் சசிகலாவும் நடராஜனும் காரணமாக இருக்கமுடியாது என்றார். அதற்கான காரணம், மிக எளிமையாக, தனக்கு அப்படித் தோன்றுகிறது என்றும், சசிகலாவும் நடராஜனும் நண்பர்கள் என்பதால் அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.
 
நேர்காணலின் ஒட்டுமொத்த தொனி – சசிகலா தியாகி, ஜெயலலிதா மக்கள் நினைப்பது போலப் புனிதமானவர் அல்ல, எல்லாத் தவறுகளுக்கும் சசிகலாவே காரணம் என்றும் ஜெயலலிதாவுக்கு நல்லவை மட்டுமே சேர்கிறது என்றும் இவற்றை ஏற்பதற்கில்லை என்றும் சந்திரலேகா சொல்கிறார். ஒருவகையில் சசிகலா ஜெயலலிதாவை இப்படிப் பிரித்துப் பார்ப்பதே தவறு. எல்லாத் தவறுகளுக்கும் இருவருமே காரணம். மக்கள் ஜெயலலிதா காரணமல்ல என்று நினைத்தால் சந்திரலேகா சசிகலா காரணமல்ல என்று நினைக்கிறார். இரண்டுமே முட்டாள்தனம். இருவருமேதான் காரணம் அவரவர்கள் நிலையில்.
 
தன் மீது அமில வீச்சுக்கு சசிகலா காரணமாக இருக்கமுடியாது என்று சொன்னதற்கு சந்திரலேகா சொல்லும் காரணமெல்லாம் குழந்தைத்தனமானது. எதோ ஒரு வகையில் சுப்பிரமணிய சுவாமியின் இன்றைய திடீர் குபீர் சசிகலா ஆதரவுக்கு இணையான நேர்க்கோட்டை சந்திரலேகா வரைகிறார்.
 
மக்கள் மனத்தில் இருக்கும் கேள்விகளை ஹரிஹரன் கேட்டவகையில் மட்டும் இது முக்கியமான நேர்காணல். பத்து பேரை உட்கார வைத்து நேரடி ஒளிபரப்பில் குய்யோ முறையோ என்று கத்தவிடுவதற்குப் பதிலாக ஹரிஹரனை இது போன்ற பேட்டிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முஷாரஃப்புடன் எடுத்த நேர்காணலில் கலக்கினார் என்பது நினைவுக்கு வருகிறது. ஜெயலலிதா மீதான சாஃப்ட் கார்னரை ஹரிஹரனால் மறைக்கவே முடியவில்லை என்பது, அவரை எனக்குப் பிடிப்பதற்கான இன்னொரு காரணம். 🙂
 
* இரண்டாவது நேர்காணல் – சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நேருக்கு நேர் – சிவாஜி சொண்டிநேனி (உச்சரிப்பு சரியா?!) – இலுமினாட்டிகளின் உலகத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்தார். சிரித்து சிரித்து மாளவில்லை. நல்ல சிரிப்பு நாடகம் பார்க்க விரும்புகிறவர்கள் இதைப் பார்க்கலாம். கேள்விகளும் பதில்களுக்கு ஈடாக நகைச்சுவை வாய்ந்தவை என்பது சிறப்பம்சம். பாஜக பெயரைச் சொல்ல கேள்வி கேட்டவர் அடித்த குட்டிக்கரணம் ஆசம். ஆபரேஷன் திவிராடா-வில் கூட கமலுக்கு இடமில்லை என்பதுதான் சோகமான விஷயம். 😀
Share

கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல்

ரங்கராஜ் பாண்டே கௌதமியுடன் நிகழ்த்திய நேர்காணல் (கேள்விக்கு என்ன பதில், தந்தி டிவி) படு திராபையாக இருந்தது. நேர விரயம். கௌதமிக்குப் பேச எந்த விஷயமும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. கமல் மீது வைத்த பெரிய குற்றச்சாட்டைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தார் கௌதமி. 40 நிமிட நேர்காணலில் கௌதமி சொன்னதில் எதுவுமே முக்கியமானதாக இல்லை. மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு வென்றவர் என்ற ஒற்றை (முக்கியமான) விஷயத்தைத் தாண்டி கௌதமி எதையும் சொல்லவில்லை. ஏன் இந்தப் பேட்டி என்பது புரியவில்லை.

இந்தக் கொடுமைகளையெல்லாம் விடப் பெரிய கொடுமை, ரங்கராஜ் பாண்டே கௌதமியை அறிமுகம் செய்தபோது சொன்னது – போராளி. கௌதமி ஏன் போராளி ஆனார் என்பது பாண்டேவுக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். புற்றுநோயை எதிர்கொண்டு வென்றதால் போராளி என்று சொன்னாரா எனத் தெரியவில்லை. நம் ஊரில் போராளி என்பதற்கு நிகழ்கால அர்த்தம் ஒன்று உள்ளது. அப்படி இருக்கும்போது கௌதமியை சர்வ சாதாரணமாக போராளி என்றால் அநியாயம்.

40 நிமிடம் கேட்டது (எம்பி3) பெரிய நேர விரயம்.

இன்னும் நான் கேட்கவேண்டிய பேட்டிகள்: நிர்மலா சீதாராமன் – பாண்டே நேர்காணல், சந்திரலேகா ஐஏஎஸ் – ஹரிஹரன் நேர்காணல்

Share

சாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு

சாருஹாசனின் ‘கேள்விக்கு என்ன பதில்’ பேட்டியைப் பார்த்தேன். அனுகூலச் சத்ரு என்று கமல் ரசிகைகள் அலறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 🙂

சாருஹாஸன் ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்ததும் முதல் சில இடுகைகளைப் பார்த்து, இவர் கொஞ்சம் நல்லா எழுதுறாரே என்று மதி மயங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். பெரிய தவறுதான், ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் அப்போது வயது இரண்டு எனக்குக் குறைவு என்பதால் நேர்ந்துவிட்ட பிழை என யூகிக்கிறேன். போகப் போகத்தான் புரிந்தது, கமல் எழுதும் பத்து வார்த்தைகளில் பத்து புரியாது என்றால், சாருஹாசன் எழுதும் பத்து வார்த்தைகளில் பதினொன்று புரியாதென்பது. அப்படியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினேன். பின்னர் ஒரு வார இதழில் (குங்குமமா குமுதமா?!) சாரு ஹாஸன் தொடர் எழுதினார். கொஞ்சம் மிரண்டு போய் சில வாரங்கள் படித்தேன். எடிட்டர்களின் கைவண்ணத்தில் அப்பத்திகள் மிக அழகாகவே வெளிவந்தன. ஹாசன்களின்தமிழ்த்தனம் அதில் இல்லை. சட்டெனப் புரிந்தது.

இந்தப் பின்னணியில் சாரு ஹாஸன் பேட்டி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பார்த்தேன், மிக எளிமையாக தன் மனதுக்குப் பட்டதை மிக நேரடியாகப் பேசினார். சில அதிர்ச்சி தந்தார். மோடியைப் பற்றி அவர் சொன்னவை, நான் கொஞ்சமும் எதிர்பாராதவை. திராவிடக் கட்சிகளுக்கு அவர் தந்த அறை, மோடியைப் பற்றி அவர் சொன்னதுக்கும் மேலே! பிராமணர் என்பதால் கமல் முதல்வராக முடியாது என்றதும், கமலும் ரஜினியும் சேர்ந்தாலே 10% வாக்குதான் கிடைக்கும் என்றதும் இன்னொரு அதிர்ச்சி. ரஜினி தனியாக வந்தால் முதல்வர் ஆகிவிடுவார், கமலுடன் சேர்ந்தால் 10% வாக்கு மட்டுமே மொத்தமாகக் கிடைக்கும் என்று அவர் சொல்வதாக எனக்குத் தோதாகப் புரிந்துகொண்டேன். 🙂 விஜய்காந்த் அதிமுகவில் சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றவேண்டும் என்றதெல்லாம் அரசியல் திரைப்பட வகை.

ரஜினி எதிர் கமல் என்ற கேள்விக்கு, ரஜினியை வணங்குகிறார்கள் மக்கள் என்றார். மிகத் தெளிவாக இரண்டு மூன்று முறை சொன்னார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத அர்த்தம் ஒன்றை பாண்டே உருவாக்கி, “கமல் அரசியலுக்கு வரணும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்க சொல்றதா புரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார். இந்த அர்த்தம் எப்படி பாண்டேவுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

கமலா ரஜினியா என்ற கேள்விக்கு கமலின் அண்ணனால் கூட உறுதியாக கமல் என்று சொல்லமுடியவில்லை. இத்தனைக்கும் ஒரே கொள்கை, ஒரே நோக்கம். அப்படியானால் கமலுக்குக் கிடைக்கப்போகும் ஓட்டுகளை எண்ணிக்கொள்ளலாம். 🙂

ரஜினிக்கான ஆதரவு என்பது, ‘திரைப்படம் பார்க்கும் முப்பது சதவீதப் பெண்கள் கமலை விரும்புவதால் அதில் எரிச்சல் படும் 70% ஆண்கள் தந்த ஆதரவு’ என்பது கொஞ்சம் புதிய கருத்துதான் என்றாலும், என்னமோ ரஜினியை நேரடியாக யாருக்கும் பிடிக்காது என்பதாகவும், கமலை விரும்பும் பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருந்தது. இதெல்லாம் கமல் இளைஞனாக மேலே எழுந்த காலத்தில் கொஞ்சூண்டுகொஞ்சம் உண்மையாக இருந்திருக்கலாம். கமல் பெரிய நடிகர் என்ற பெயர் பெற்ற காலத்தில் அவரைப் பிடிக்காத, அவர் திரைப்படத்தைக் கண்டாலே அலறி ஓடிய பெண்களே அதிகம். அருகிருந்து கண்ட உண்மை இது. #வெரிஃபைட். 🙂

பிராமணக் குலத்தில் பிறந்ததால் கமலுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சாரு ஹாஸன் சொன்னது உண்மைதான். இதுவும் கமலின் பின்னடைவுக்கு ஒரு காரணம், ஆனால் மிகச்சிறிய காரணம் மட்டுமே. கருணாநிதி ஒருவேளை மோடியை ஆதரித்தால் சகித்துக்கொள்பவர்கள், கமல் மோடியை ஒருவேளை ஆதரித்தால் சரியாக நூலுக்குப் போய்த்தான் நிற்பார்கள். தமிழ்நாட்டின் மரபு அப்படி. அதையே சாரு ஹாஸன் சொன்னார்.

சுவாரஸ்யமான பேட்டி. கமல் அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதை அவர் குடும்பமும் நம்பவில்லை என்பது நல்ல விஷயம். அப்படியே ஆகட்டும்.

பின்குறிப்பு 1: திமுக போராளிகள் இன்னுமா சாரு ஹாஸனை விட்டு வைத்திருக்கிறார்கள்?

பின்குறிப்பு 2: முதல் வாரத்திலேயே தான் எழுத நினைத்திருக்கும் அத்தனையையும் சொல்ல முயன்று, கமல் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியிருக்கும் தொடரை தொடர்ச்சியாக வாசகர்கள் வாசித்தால், கமலுக்குக் கிடைக்கப்போகும் பத்து சதவீத வாக்குகளிலும் பத்து சதவீதம் மட்டுமே கமலுக்குக் கிடைக்கும் என்று யாராவது அவருக்கு எடுத்துச் சொல்வது நல்லது.

Share