Tag Archive for தினமலர்

தினமலர் தேர்தல் களம்

தினமலர் தேர்தல் களத்தில் வெளியான கட்டுரைகள்:

நிரம்பாத வெற்றிடம் (கட்டுரை 1)

2019க்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் ஒட்டுமொத்த களமும் பரபரப்படைந்துள்ளது. முன்பெல்லாம் தேர்தல் நடக்கும் காலத்தில் மட்டுமே ஒருவிதப் படபடப்பு நிலவும். ஆனால், சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலம் இது. செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னெப்போதையுவிட மிகத் துரிதமாகச் செய்திகளைக் கொண்டு போகவேண்டிய கட்டாயத்தில் நிலவும் சூழல் இது. அதனால், தேர்தல் நடக்காதபோதும்கூட, எல்லா நாளுமே பரபரப்பாகவே கழிகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் அது ஒரு திருவிழா மனப்பான்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. இப்போக்கினால் பலமும் உள்ளது, பலவீனமும் உள்ளது. பரபரப்பையும் கண்ணை மறைக்கும் செய்திக் குவியல்களையும் வெறுப்புச் செய்திகளையும் புறம் தள்ளிவைத்துவிட்டே தேர்தல் செய்திகளை அணுகவேண்டி உள்ளது. அதீதச் செய்திகளே சாபமாகிவிட்ட ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இத்தேர்தல் மிகப் வித்தியாசமானது. கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மௌனமானது ஆகப்பெரிய ஆச்சரியமே. இதனாலேயே மிகப்பெரிய ஒரு வெற்றிடம் நிலவியது. தமிழகத்தின் அரசியல் போக்கை மிக மோசமாக்கியவை இந்த இருபெரும் கட்சிகளே என்று நினைப்பவர்கள், இந்த வெற்றிடம் ஒரு ஆக்கபூர்வமான அரசியலைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே வெற்றிடம் இப்போதும் நிலவுகிறது.

வெற்றிடத்தைப் போக்க, உறுதியான தலைவருடன் கூடிய வலுவான கட்சி ஒன்று வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் நிறைந்துள்ளது. பழைய கட்சிகளின் புதிய பதிப்புகளை மக்கள் ஏற்கவில்லை. ஒரே கட்சி இரண்டாக நான்காக உடைந்து புதிய கட்சியாக மலரும்போது மக்கள் சலிப்பில் அவற்றை நிராகரிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்துப் பழைய கட்சிகளையும் உறுதியோடு எதிர்க்கும் வலிமையான கட்சி இன்று வரை முகிழவில்லை. இதனால் இத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் எப்படிச் சிதறும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை.

இதுவரை தமிழகத் தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் ஓர் ஆய்வைச் செய்து எத்தனை இடங்களில் எந்த எந்தக் கட்சிகள் வெல்லக்கூடும் என்று சொல்வதே பொதுவான நடைமுறை. இதை ஒட்டியே வெற்றி தோல்வி அமையும் என்பது நம்பிக்கை. ஆனால் இத்தேர்தலில் அந்தக் கணக்குகள் எடுபட வாய்ப்பில்லை.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்று தெரியாது. அக்கட்சியின் மரபான வாக்குகளில் எத்தனை சதவீதத்தை தினகரன் பிரிப்பார் என்பதைக் கணிக்கமுடியாது. ஆர்.கே நகர் தேர்தலைப் போலவே தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்பே இல்லை. அதேசமயம் ஆர்.கே நகர் தேர்தல் தந்த அதிர்ச்சியையும் மொத்தமாகப் புறக்கணிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஒன்றிணைந்த அதிமுக பெற்ற வாக்குகளை, இன்றைய அதிமுகவும் தினகரனின் அமமுகவும் எப்படிப் பிரிக்கும் என்பதே இந்த இரண்டு கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. இடையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்த தீபாவை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பதால் அவரை விட்டுவிடலாம்.

அதிமுக இப்படி இருக்கும்போது, திமுக மிகவும் பலமாக இருந்திருந்தால் தேர்தலில் அக்கட்சி பெரிய வெற்றியைச் சுலபமாகப் பெற்றிருக்கும். தொடக்கத்தில் அப்படி ஒரு நிலை இருக்கத்தான் செய்தது. ஆனால் ரஜினியின் வரவு அதைக் கொஞ்சம் முதலில் அசைத்துப் பார்த்தது. ஸ்டாலினிக்கு நிம்மதி தரும்படியாக, ரஜினி எப்போது தேர்தலில் பங்கெடுக்கப் போகிறார் என்பது ரஜினிகே கூட தெரியாத நிலையில், திமுக வெல்லும் வாய்ப்பு அப்படியே தொடர்ந்தது. தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளே ஸ்டாலினிக்குப் பெரிய பின்னடைவைத் தருகின்றன. ஒருவகையில் திமுகவினர் பிறருக்குச் செய்தவை அவர்களுக்கே திரும்ப வருகின்றன என்றே சொல்லவேண்டும். எப்படியோ ஸ்டாலின் வலிமையற்ற ஒரு தலைவர் என்ற கருத்து திமுக அல்லாதவர்களிடம் வெற்றிகரமாகப் பரப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில் கருணாநிதி இருந்தபோது திமுக பெற்ற வாக்குகளைத் திரும்பப் பெற்றாலே பெரிய விஷயம். அப்படிக் கிடைக்கும் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போதாது. கூடுதல் வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிக்காமல் வெல்லமுடியாது. திமுகவின் வாக்குகள் குறைந்தாலும் குறையலாம் என்ற கணிப்பையும் ஒதுக்கிவிடமுடியாது. இப்படியான சிக்கலில் உள்ளது திமுக.

கூட்டணி மூலம் இப்பிரச்சினையைச் சமாளிக்கமுடியும் என்று இரண்டு கட்சிகளுமே புரிந்துகொண்டுள்ளன. அதனால்தான் கூட்டணிக்கு இத்தனை முயற்சி. இதுவரை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இறங்காத அளவுக்குக் கூட்டணிக்காக இரண்டு கட்சிகளும் இறங்கிப் போய்ப் பேசின. அதிலும் அதிமுக இனி இழக்க ஒன்றுமில்லை என்ற முடிவோடு விடாமல் சென்று கூட்டணிக்காகப் பேசியது. எப்போதும் கூட்டணிப் பேரத்தை முதலில் துவங்கும் திமுக, அதைச் சரியாகக் கோட்டை விட்டுவிடும். இம்முறையும் அதுவே நடந்தது. பழம் நழுவிப் பக்கத்து டம்ளர் பாலில் விழுந்துவிட்டது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டாலின், அதுவரை பாமகவிடம் திமுகவும் கூட்டணி பேசியது என்பதையெல்லாம் மறந்து, மிகக் கடுமையாக ராமதாஸைத் தாக்கிப் பேசினார். ஒரு அரசியல் தலைமை செய்யக்கூடாத தவறு இது. இதையே ஒரு படி மேலே போய், தேமுதிகவுக்கு துரைமுருகன் செய்ய, பிரேமலதா இன்னும் ஒரு பங்கு மேலே போய் தவறு செய்தார். கூட்டணித் தலைவர்களை எந்த எல்லையில் நிறுத்தவேண்டும் என்பதை ஜெயலலிதாவிடமிருந்து ஒவ்வொரு கட்சித் தலைமையும் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. கூட்டணிக்காக அதீதமாக ஒட்டிக்கொள்வது பிறகு வெட்டிக்கொள்வதும் எல்லாம் பழைய காலத்து வழி. கூட்டணி என்பதுகூட தன் கட்சியை வளர்க்கத்தான் என்ற நிதர்சனத்தை வெளிப்படையாகவே சொல்வதுதான் இன்றைய வழி. ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களை முடிந்தவரை அலட்சியம் செய்தார். அலட்சியம் செய்வதே ஜெயலலிதாவின் அணுகுமுறை. ஆனால் அவர்களோ மீண்டும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஜெயலலிதா அளவுக்கு அலட்சியமும் இன்றி, கருணாநிதி போல அளவுக்கு மீறிய நட்பாகவும் இன்றி, இரண்டுக்கும் இடையில் இருக்கமுடியும் என்பதை உணர்வது அனைத்துக் கட்சிகளுக்கும் நல்லது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதிக்குச் செய்தது என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் இதை உணரலாம்.

விஜய்காந்த்தின் உடல்நிலை இன்றிருக்கும் நிலையில் அக்கட்சியின் செல்வாக்கு, முன்பு அக்கட்சி பெற்ற வாக்குகளுக்கு இணையாக இருக்கமுடியும் என்று சொல்லமுடியாது. குறைந்துவரும் தன் கட்சியின் செல்வாக்கை அக்கட்சி புரிந்துகொண்டாலும், விட்டுக்கொடுத்துப் போக அக்கட்சியின் செயல்தலைமையால் முடியவில்லை. இதனால் அக்கட்சிக்குப் பின்னடைவுதான் ஏற்படும். ஜெயலலிதா போல இருக்க நீங்கள் ஜெயலலிதாவாக இருக்கவேண்டும் என்பதை பிரேமலதா புரிந்துகொள்வது அக்கட்சியின் எதிர்காலத்துக்கு, அப்படி ஒன்று இருந்தால், நல்லது.

கமல்ஹாசன் கட்சி யாருக்கான மாற்று என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1% வாங்கு வாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நடத்துவதே அவரது நோக்கம் என்று தெரிகிறது. நல்லது செய்வதே நோக்கம், அதுவே கொள்கை என்பதையெல்லாம் திரைப்படங்களில் பார்த்துக் கை தட்டலாம். பொதுவில் அவை ஆழமற்ற பேச்சாகவே பார்க்கப்படும்.

அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இத்தேர்தல், ஒட்டுமொத்த இந்தியத் தேர்தலைப் போலவே, இந்திய ஆதரவுக்கும் இந்திய எதிர்ப்புக்கும் இடையே நிகழ்வதாகவே நான் பார்க்கிறேன். திமுக நேரடியான இந்திய எதிர்ப்புக் கட்சி அல்ல. அதேசமயம் அக்கட்சியின் ஒட்டுமொத்த கூட்டணியின் தோற்றம், அது ஒரு இந்திய எதிர்ப்புக் கூட்டணி என்பதாகவே அர்த்தம் தருகிறது. வெகு நீண்ட காலமாகவே திமுக தேசிய நீரோட்டத்தில்தான் இருக்கிறது. என்றாலும், தொடர்ச்சியாக அது இந்திய எதிர்ப்பு மனோபாவமுள்ள கட்சிகளுடனேயே தன் தோழமையை அமைத்தும் வந்திருக்கிறது. இன்றைய நிலையில், காங்கிரஸ் கட்சிகூட, பாஜகவை எதிர்க்கும் வேகத்தில், இந்திய எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவு தருவது போலப் பேசுகிறது. இதனால், இக்கூட்டணியின் இந்த நிறத்தைத் தவிர்க்க முடியாது. உண்மையில் இகட்சிகள் இந்திய எதிர்ப்பில் நம்பிக்கை இல்லாதவையாக இருக்கலாம். ஆனால் மக்களின் பார்வை இருமைக்குள் சிக்கும்போது, ஒரு பக்கம் தேசிய நோக்கத்தை ஆதரிக்கும் கூட்டணியாக பாஜக கூட்டணியையும், அதை எதிர்க்கும் கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணியையும் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டுத் தேர்தலைப் பொருத்தவரை, இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடம் இன்னும் அப்படியே உள்ளது என்பதையே காட்டுகிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளின் அதீத ஆதிக்கம் குறைவதும் ஒருவகையில் நல்லதுதான். ஏதேனும் ஒரு தேசியக் கட்சி இங்கே பலம் பெறவேண்டியதும் முக்கியம். அது பாஜகவாக இருப்பது நல்லது என்பது என் பார்வை. இத்தேர்தலின் முடிவு தெரிந்த பின்னர்தான், எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்பது தெரியும்.

கூட்டணியை ஏற்பது (கட்டுரை 2)

ஜெயலலிதாவின் காலத்துக்கு முன்புவரை கூட்டணி என்பது, கூட்டணித் தலைவர்களுடனான நட்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி முதலில் ஏற்பட்டபோது, பிறகு ஏற்பட்டபோதும்கூட, அது பொருந்தக் கூட்டணி என்றே சொல்லப்பட்டது. அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது அது இயல்பான கூட்டணி என்று நம்பப்பட்டது. இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

கூட்டணிகள் மாறுவதும், கூட்டணி குறித்த கருத்துகள் மாறுவதும், மாநில சிறு கட்சிகள் ஓரளவுக்கு வாக்குகள் வாங்கத் தொடங்கியதில் இருந்து இயல்பாகிப் போகின. பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு பிரதான கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. தொடர்ந்து வெற்றி முகத்திலும் இருந்தது. கூட்டணி மாறும்போது ஏற்படும் குரல் மாறுபாடுகளை மிக எளிதில் பாமக கடந்தது. என்ன காரணம்? வெற்றிக் கூட்டணியாக அவை அமைந்ததுதான்.

தோல்விக் கூட்டணியாக அமைந்தபோதெல்லாம், கூட்டணி மாறும்போது, மிகக் கடுமையான காரணங்களைத் தேடி தேடி பாமக சொல்ல வேண்டி வந்தது. மீண்டும் அடுத்த கூட்டணியின்போது அதைவிடக் கடுமையான சாடல்களை, காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே பதில் சொல்லமுடியாத சிக்கலிலும் மாட்டிக்கொண்டது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதனை வேறு வகையில் கையாண்டார்கள்.

கருணாநிதி இதயத்தைப் பிழியும் வண்ணம் கட்டுரை எழுதுவார். கூட்டணி முறிந்தாலும், கொள்கை ரீதியாக அவர்களது நட்பு தேவை என்பதை கவனத்தில் வைத்திருப்பார். மீண்டும் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி எந்நேரத்திலும் ஏற்படக்கூடும் என்பது குறித்து அவருக்குச் சந்தேகமே இருந்தது இல்லை.

ஜெயலலிதா கையாண்டது இதற்கு முற்றிலும் எதிரான வகையில். கூட்டணிக்கும் முன்பும் பின்பும் கூட்டணியின் போதும் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எதுவும் பேசமாட்டார். பாராட்டியோ திட்டியோ எதுவும் செய்யமாட்டார். அப்படி அவர் பாராட்டினால் அது கூட்டணிக் கட்சிகளுக்கு இனிய அதிர்ச்சி என்ற வகையில் மிக அபூர்வமாகவே இருக்கும். அதேபோல் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நட்பு என்ற ஒன்றே கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்தவண்ணம் இருப்பார். கூட்டணிக்கு வரும் கட்சிகளைப் பொதுவில் துதிபாடுவது, புகழுரைப்பது என்ற எதுவும் இருக்காது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போதே அதிமுகவின் தொகுதிப் பட்டியலை வெளியிடுவார். இதற்குப் பின்னும் கூட்டணிக் கட்சிகள் அவரிடம் கூட்டணி வைத்ததன் காரணம், வெற்றி என்ற ஒற்றைச் சொல்லுக்காத்தான்.

வெற்றி கிடைக்காத சமயத்தில் கூட்டணிக் கட்சிகள் விலகும்போது ஜெயலலிதாவிடம் இருந்து அது குறித்த, மனதைப் பிசையும் அறிக்கைகள் எதுவும் இருக்காது. மறந்தும் கூட்டணித் தலைவர்களின் பெயரைக்கூட உச்சரித்துவிடமாட்டார். இந்த வகையில், மாநில சிறு கட்சிகளின் இடத்தை அவர்களுக்குக் காண்பித்தது ஜெயலலிதான். இது திமுகவுக்கும் சேர்ந்தே உதவியது என்றே சொல்லவேண்டும். அப்படிக் கூட்டணி இல்லாமலும் அதிமுக வென்றதில், ஜெயலலிதாவின் அதிர்ஷ்டத்துக்கும் ஒரு பங்கு இருந்தது.

முன்பெல்லாம் கூட்டணி என்ற ஒன்று அமைந்தால், அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவது முக்கியமான ஒன்றாக அமையும். ஜெயலலிதா இதையும் புறக்கணித்தார். வெற்றிக் கூட்டணியாக அமைந்துவிடும்போது, இதெல்லாம் மறக்கப்பட்டுவிடும். தோல்விக் கூட்டணியாக அமைந்தால், இது முக்கியக் காரணமாக இருக்கும்.

கூட்டணி அமைப்பது போலவே முக்கியமானது அதனை எடுத்துச் செல்வது. ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது அதனை ஏற்றுக்கொள்வது. 2004ல் ரஜினி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தார். எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதா இதைக் குறிப்பிடவே இல்லை. அதிமுகவினரும் அதிகம் இதைப் பற்றிப் பேசவில்லை. ரஜினியும் ஆதரவுக்குப் பின்பு அமைதியானார். அந்தத் தேர்தலில் இக்கூட்டணி தோல்வியுற்றது.

அப்போது சோ சொன்ன கருத்து முக்கியமானது. ஆதரவைப் பெற்றுக்கொள்வதும், அதனைப் பரப்புவதும், ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது என்றார். இது நடக்காமல் ஆதரவின் அடுத்த கட்டம் நடக்காது. ரஜினியைக் காப்பாற்ற சோ இக்கருத்தைச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அதனளவில் இக்கருத்து முக்கியமானது.

இன்று திமுக எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. பாமக, தேமுதிக அதிமுக கூட்டணி அமைந்துவிட்டது. திமுக கூட்டணி கொள்கை ரீதியாக, ஹிந்து மதத்தை எதிர்க்கும் கூட்டணி என்றாகிவிட்டது. திருமாவளவன் தெளிவாகவே சனாதனத்தை எதிர்க்கும் கூட்டணி என்று சொல்லிவிட்டார். சனாதனம் என்பது ஹிந்து தர்மம்தான். எனவே இவர்களுக்குக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவதில் சிக்கல் இல்லை.

அதிமுக கூட்டணிக்கு அந்தச் சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்தச் சிக்கலை இவர்கள் எளிதாகக் கடந்துவிடமுடியும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி, எவ்வித ஈகோவும் இன்றிப் பேசுவதால், கூட்டணி மாயம் நிகழும் வாய்ப்பு உண்டு. அதிமுக கூட்டணியின் தலைவர்கள் மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பது, திமுகவுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு. இதனை அதிமுக பயன்படுத்திக்கொள்ள, கூட்டணியைப் பெற்றுக்கொள்வதில், பரப்புவதில் முனையவேண்டும். அதுதான் முக்கியமானது. முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில் இந்த மாயம் நிகழத் துவங்கிவிடும். பழைய சாடல்கள் மறக்கப்பட்டுவிடும். தொடர்ந்து ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்கள் பேசும்போது, அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இல்லையென்றால் பெரிய அபாயத்தையே சந்திக்கும்.

நன்றி: தினமலர்

Share

பட்டம் – தினமலர்

வாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.

http://m.dinamalar.com/detail.php?id=1626970

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.

பட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…!

இன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.

* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.

* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.

* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.

* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.

* தொடரும்… கூடவே கூடாது.

* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.

* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.

* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.

* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.

* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது! மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.

* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்!

பள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.

வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.

இது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

Share

சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடர்பாக

பாம்புகள் உலவும் வெளியில் பாம்புகளுக்கு மத்தியில் புத்தகங்களை வாசகர்கள் வாங்குகிறார்கள் என்று மட்டும் சொல்லாத ஒரு கட்டுரையை நேற்று தினமலரில் வாசித்து அதிர்ந்தேன். சென்னை புத்தகக் கண்காட்சி பல இன்னல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. சில குறைகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிக்கும் அளவுக்கோ, வாசகர்கள் பயந்து பின்வாங்கும் அளவுக்கோ குறைகள் எவையுமே இல்லை என்பதே உண்மை.

புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மாபெரும் கூட்டு முயற்சி. நிச்சயம் சில சுணக்கங்கள், சில பின்னடைவுகள் இருக்கவே செய்யும். இவையெல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மெருகேறிக்கொண்டேதான் வருகிறது.

இம்முறை தீவுத்திடலில் நடத்தப்பட ஒரே காரணம், கடந்த டிசம்பரில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பின்விளைவுகளே. ஜூனில் வெயில் கடுமையாகவே இருக்கும். அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்பாராத மழை வேறு. இத்தனைக்கும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளில், நீர் ஒழுகியது என்னவோ பதினைந்து அரங்குகளுக்கும் கீழாகவே இருக்கும். மற்ற அரங்குகளில் பெரிய பாதிப்பு இல்லை. இத்தனை செய்ததே பெரிய விஷயம். ஆனால் நாம் குறைகளை மட்டுமே சொல்லப் பழகிவிட்டோம். குறைகள் சொல்லப்படவேண்டியது நிச்சயம் தேவைதான், ஆனால் புத்தகக் கண்காட்சியில் குறைகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற வகையில் எழுதுவது அர்த்தமற்றது.

புத்தகக் கண்காட்சிக்கு வருகிறவர்கள் நிச்சயம் வேர்வையில் நனைந்தே செல்கிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. அதேசமயம் இத்தனை வேர்வையிலும் எத்தனை பேர் புத்தகம் வாங்குகிறார்கள் என்பதே நாம் பார்க்கவேண்டியது. கடும் வெயில் காரணமாக எல்லா வரிசைகளிலும் அதிக மின்விசிறிகளை நிர்வாகம் வைத்தது. அதன் பிறகு கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் ஜூனில் வேர்க்கவே செய்யும். வேர்வையில் புத்தகம் வாங்குவது ஒரு அனுபவம்தான், ஒரு பெருமைதான் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

வருகின்றவர்களுக்கு அருந்த நீர் வைக்கப்பட்டுள்ளது. கையிலேயே வாசகர்கள் நீரை சுமந்துகொண்டு வருவது நல்லது. குறைந்தபட்சம் நீர் பிடிக்க வாட்டர் கேனாவது கொண்டு வருவது நல்லது. திரைப்படத்துக்குப் போகும்போது, தொடர்வண்டியில் ஊருக்குச் செல்லும்போது நாம் நீர் கொண்டு போகிறோம். புத்தகக் கண்காட்சிக்கும் கையில் நீர் கொண்டு செல்லலாம், தவறில்லை.

மிகவும் தூரம் என்பது ஒரு பிரச்சினை. சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் எங்கே புத்தகக் கண்காட்சி வைத்தாலும் ஏதேனும் ஒரு பகுதி மக்களுக்கு நிச்சயம் வெகுதூரமாகவே இருக்கும். நந்தனத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தபோது தாம்பரத்தில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ வியாசர்பாடியில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ நாம் கேட்கவில்லை. ஆனால் தீவுத்திடலில் வைக்கவும் தென்சென்னைக்காரர்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி வருகிறது. இதே தீவுத்திடலில்தான் பொருட்காட்சி நடக்கிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. அப்போது எப்படி வருகிறார்கள்? இப்போது ஏன் அங்கலாய்ப்பு? புத்தகம் வாசிப்பது என்பது நம் பண்பாட்டோடு ஒன்றி வரவில்லை என்பதுதான் காரணம். புத்தகம் வாசிப்பது என்பது எதோ யாருக்கோ செய்யும் சேவை என்னும் மனப்பான்மையே காரணம். புத்தகம் வாசிப்பது கடமைக்காக அல்ல, ரசனைக்காக. இப்படி எண்ணம் உள்ளவர்கள் நிச்சயம் குறைகளை மட்டுமே அங்கலாய்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். புத்தகம் இருக்கும் இடம் தேடி புத்தகத்தைக் கண்டடைந்து வாசித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அதோடு, பழக்கமான ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு புத்தகக் கண்காட்சியை மாற்றும்போது எழும் பொதுப்புத்தி சார்ந்த பிரச்சினைகளும் ஒரு காரணம். காயிதே மில்லத் கல்லூரியில் இருந்து செய்ண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு மாற்றியபோதும், பின்னர் அங்கிருந்து நந்தனம் வொய் எம் சி ஏவுக்கு மாற்றியபோதும் இதே முணுமுணுப்புகள் இருந்தன. இப்போது நந்தனத்தில் இருந்து தீவுத்திடலுக்கு வரவும் அதேபோல் வருத்தப்படுகிறார்கள். இதுவும் பழகும்.

நந்தம்பாக்கத்தில் ஏன் வைக்கவில்லை என்று ஒரு கேள்வி. நந்தம்பாக்கத்தில் வைத்தால் ஏற்படும் செலவுகளை ஒரு பதிப்பாளரால் சமாளிக்கமுடியாது. நந்தம்பாக்கத்தில் நடத்தும் அளவுக்கு நம் வாசகர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கும் சமயத்தில் அதுவும் நடக்கத்தான் போகிறது.

தீவுத்திடலில் புத்தகக் கண்காட்சிக்கு அதன் அருகில் உள்ள சில முக்கிய இடங்களில் இருந்து இலவச ஆட்டோ சேவையும் வழங்கப்பட்டது. தியேட்டருக்குச் செல்லும்போது தியேட்டர் முன்பாக பேருந்து நிறுத்தம் இல்லையே என்று நாம் நொந்துகொள்வதில்லை. தியேட்டரில் டிக்கட் கிடைக்குமா என்பதிலேயே கவனமாக இருக்கிறோம். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது நமக்கு ஆயிரம் வசதிக்குறைபாடுகள் கண்ணுக்குப் படுகின்றன.

புத்தகக் கண்காட்சி நூறு சதவீதம் நிறைகளோடு செயல்படுகிறது என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் பல விதங்களில் முன்னேற்றம் தேவை. அதே சமயம் புத்தகக் கண்காட்சிக்கே வரமுடியாதபடிக்கான அடிப்படைத் தேவைகளே இல்லை என்பது அநியாயமான வாதம். சென்னையில் கொஞ்சம் தூரம் உள்ள எந்த ஒரு இடத்துக்கும் செல்லும்போது உள்ள அதே பொதுவான வசதிக்குறைவுகள் மட்டுமே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுவதிலும் உள்ளன. தனியாக வேறு குறைகள் இல்லை. புத்தகம் வாங்க சிறந்த இடம் புத்தகக் கண்காட்சியே. இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயம் வாருங்கள். இந்தியாவிலேயே வாசகர்கள் அதிக அளவு புத்தகங்களை நேரடியாக பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கும் பெரிய புத்தகக் கண்காட்சி இது. இதைத் தவறவிடாதீர்கள். அதோடு, புத்தகக் கண்காட்சி என்பது மார்க்கெட்டுக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரும் ஒரு அனுபவம் அல்ல. புத்தகக் கண்காட்சியில் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஒரு புத்தகத்தைக் கண்டடையலாம். உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு எழுத்தாளரை சந்தித்து உரையாட நேரலாம். யாருக்காகவோ யாரோ எழுதிய ஒரு வரி உங்களுக்காக அங்கே காத்திருக்கலாம். இந்த அனுபவங்களுக்கு முன்பு குறைகள் ஒரு பொருட்டே அல்ல என்பது சரிதானே?

Share

தமிழக பாஜக – எங்கே செல்லும் இந்தப் பாதை – தேர்தல் களம் 2016 – தினமலர்

நான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திருச்சியின் கிராமம் ஒன்றான முத்தரச நல்லூருக்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் தெருக்களின் பாஜகவின் விளம்பரத் தட்டிகளையும் சுவரோட்டிகளில் அத்வானி மற்றும் வாஜ்பேயியின் முகங்களையும் பார்த்தேன். அன்றுதான் எனக்கு பாஜக என்னும் கட்சி மிகவும் நெருக்கமாக அறிமுகமாகியது. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் மற்ற எந்த ஊர்களிலும் பாஜகவுக்கு இத்தனை விளம்பரங்களை நான் பார்த்ததில்லை. அத்வானி முத்தரசநல்லூருக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்துக்கு வருகை தந்திருந்தார் என்று நினைவு.

அன்று இருந்த அதே நிலையில் இன்றும் தமிழ்நாட்டு பாஜக கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இடைப்பட்ட 25 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் பாஜகவின் முகம் பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க தமிழ்நாட்டில் மிக மிக மெதுவான வளர்ச்சியை மட்டுமே பாஜகவால் சாதிக்கமுடிகிறது.

இதன் காரணங்கள் என்ன? 1998 வரை பாஜகவினர் தொலைக்காட்சியின் எந்த நேர்காணல்களிலோ அல்லது விவாதங்களிலோ பங்கேற்றால், எதிர்த்தரப்புக்காரர்கள் அப்படியே பம்முவார்கள். ஏனென்றால் எந்தவித சுமையும் இல்லாத ஒரு கட்சியாக பாஜக இருந்ததனால் தமிழகத்தின் கழகங்களை மிக எளிதாக பாஜகவால் எதிர்கொள்ளமுடிந்தது. 1998ல் அதிமுகவுடனும் 2001ல் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் பாஜகவுக்கு சில எம்பி/எம்.எல்.ஏ சீட்டுகள் கிடைத்தாலும், தமிழகத்தில் முதன்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட சிறிய கட்சிகளின் அந்தஸ்தை அடைந்துவிட்டது. இப்படி ஒரு நிலையை விருப்பப்பட்டு தமிழ்நாட்டு பாஜகவே ஏற்படுத்திக்கொண்டது. பாஜகவினருடன் விவாதத்தில் ஈடுபடவே யோசித்த காலம் போய், இவர்களும் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள்தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.

2014 பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியாவெங்கும் வீசியபோதும் தமிழ்நாட்டில் இலையின் அலையில் முடங்கிப் போனது தமிழ்நாட்டு பாஜக. 2014ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓரளவு வலிமையான மூன்றாவது கூட்டணியை உருவாக்கியது ஒரு முக்கியமான சாதனைதான். ஆனால் அதைத் தொடரமுடியாமல் போனது. இதற்கு முதன்மையான காரணம் பாஜக அல்ல என்றாலும், ஒரு பிரதமரைக் கொண்டிருக்கும் கட்சி இவை போன்ற சிக்கல்களையெல்லாம் தெளிவாகச் சமாளித்திருக்கவேண்டும். ஆனால் தமிநாட்டு பாஜகவுக்கு அத்தகைய சாமர்த்தியங்கள் எல்லாம் இருக்கவில்லை.

இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக நன்றாக வேரூன்றியிருக்கும் மிகச் சில கட்சிகளில் ஒன்று பாஜக. இப்படி இருக்கும் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைதான் பாஜகவின் முதல் பிரச்சினையும். ஏகப்பட்ட தலைவர்களைக் கொண்ட கட்சி ஏகப்பட்ட முகங்களுடன் உலா வரும்போது எது நம் முகம் என்ற குழப்பம் வாக்காளர்களிடையே ஏற்படும். காங்கிரஸுக்கும் தமிழக பாஜகவுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினை இது.

மத்தியத் தலைவர்கள் ஒன்றைப் பேசிக்கொண்டிருக்க மாநிலத் தலைவர்கள் இன்னொன்றைப் பேசிக்கொண்டிருக்க இரண்டுக்கும் தொடர்பற்ற வகையில் தொண்டர்கள் செயலாற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு திடீர் திடீர் என்று ஹெ.ராஜா, சுப்ரமணியம் சுவாமி போன்ற தலைவர்கள் எழுப்பும் சலசலப்புகள் வேறு. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழக பாஜக வெளிவரவேண்டும். அதற்குத் தேவை வலிமையான ஒரு மாநிலத் தலைமை.

மாநிலத் தலைமை வலிமையாக இருப்பதுதான் பாஜகவின் வெற்றிக்கான முதல் படியும் முதன்மையான படியும். இன்றைய தமிழகத் தேர்தல் என்பது ஆர்ப்பாட்டம் நிறைந்ததும் ஆடம்பரம் நிறைந்ததும் என்றாகிவிட்டது. இந்நிலையில் பாஜக இப்படி இந்த நீரோட்டத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்குமானால் மக்களின் பரிதாபத்தை மட்டுமே பெறமுடியும், வெற்றியைப் பெறமுடியாது. அதற்காக கழக பாணி அரசியலைக் கைக்கொள்ளத் தேவையில்லை. இந்த ஆடம்பர அரசியலிலிருந்து விலகவேண்டியதும் புதிய அரசியல் களத்தை உருவாக்கவேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். ஆனால் இரண்டுக்கும் மத்தியிலான, பொதுமக்களைக் கவரும் வகையிலான அரசியலையும் மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்துக்கு வருவதற்காகவாவது இவற்றையெல்லாம் தமிழக பாஜக மேற்கொள்ளவேண்டும். தன்னை நிலைப்படுத்திக்கொண்டுவிட்டபின்புதான் அரசியல் தூய்மையில் இறங்கவேண்டும். இன்று மோடி இந்திய அளவில் செய்துகொண்டிருப்பது போல.

தமிழக பாஜக மக்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளுக்கு வருவதில்லை என்பது அடுத்த பிரச்சினை. தமிழக பாஜகவின் போராட்டங்கள் எல்லாம் யாருக்காக யாரோ மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ற வடிவிலேயே நிகழ்கின்றன. ஒன்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள் அல்லது தொலைக்காட்சிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உணர்வு பிரச்சினைகளுக்கான போராட்டத்தைவிட முக்கியமானவை மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டங்கள். அதுவும் மக்களின் கண்முன் நடக்கும் போராட்டங்கள். இவற்றையெல்லாம் பாஜக மேற்கொண்டதா அல்லது பத்திரிகைகள் மறைக்கின்றனவா என்பதெல்லாம் புரிபடாத மர்மங்களாகவே இருக்கின்றன.

இன்று புதியதாகத் தொடங்கும் கட்சிகூட உடனே ஒரு பத்திரிகையையும் தொலைக்காட்சியையும் உருவாக்கும்போது தமிழக பாஜகவால் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. தொடர்ந்து பாஜகவின் கருத்துகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்று பாஜக எப்போது கருதுகிறதோ, அப்போது அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இப்படி ஊடகத்தைத் தொடங்குவதாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அப்படி எந்த ஒரு முயற்சியிலும் பாஜக இறங்கியதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் பல சாதனைகள், ஊழலற்ற ஆட்சி போன்றவையெல்லாம் தமிழகக் கிராமங்களை அடையவே இல்லை. இன்று தமிழ்நாட்டின் சாதனைகள் எனச் சொல்லப்படும் மிகை மின்சாரம், வெள்ள நிவாரணம் போன்றவற்றில் மத்திய அரசின் உதவிகள், மத்திய அரசின் பல புதிய திட்டங்களெல்லாம் அதிமுகவின் சாதனை போலவே மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் விளக்கி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பெரிய நெட்வொர்க் பாஜகவிடம் இல்லை.

தமிழக பாஜக காற்றில் வாள் சுழற்றிக்கொண்டு உள்ளது. அதிமுக மற்றும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் இன்று கணிசமாகத் திரண்டு வரும் வேளையில் அதை தன்வசப்படுத்திக்கொள்ள தமிழக பாஜக எந்நிலையிலும் ஆயத்தமாக இல்லை. ஒரு தேர்தலின் கடைசி நொடி வரை அதிமுகவிலிருந்து அழைப்பு வராதா என்ற ஏக்கத்திலேயே தமிழக பாஜக காத்துக் கிடக்கிறது. தமிழக பாஜவை ஏற்றுக்கொண்டால் உடனடியாக சிறுபான்மை ஓட்டுக்களை இழக்கவேண்டியிருக்கும் என்பது உலகில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் தமிழக பாஜகவுக்கு மட்டும் தெரியவில்லை. எப்படியும் அதிமுக தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக் காத்துக் கிடந்தது. அதிமுக இல்லை என்றானபின்பு தேமுதிகவுக்குக் காத்துக் கிடந்தது.

தேமுதிக விஷயத்தில் பாஜக செயல்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தமிழக பாஜக திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைத்தால் அதை திமுக கூட்டணி என்றோ அல்லது அதிமுக கூட்டணி என்றோ அழைக்கிறார்கள். கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி என்று வரும்போது அதை பாஜக கூட்டணி என்றழைக்கப் பார்க்கிறார்கள். இதிலெல்லாம் பாஜக விட்டுக்கொடுத்துப் போயிருக்கவேண்டும். விஜய்காந்தின் கவனம் முதல்வர் பதவியின் மீது இருக்கும்போது, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக, விஜய்காந்தின் அந்த ஆசையை தமிழக பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். தேமுக நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் பாஜக இதையெல்லாம் யோசிக்காமல் பாஜக கூட்டணியில் தேமுக வரட்டும் என்று காத்துக் கிடந்தது. இதனால் பாஜக ஆதரவாளர்களே ‘முதலில் கட்சி முடிவெடுக்கட்டும், பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். இப்போது ஒரு வழியாக தனித்துப் போட்டி என்று பாஜக அறிவித்திருக்கிறது. இது முதல்படிதான். அதிமுக மற்றும் திமுகவின் வெறுப்பு ஓட்டுக்களைப் பெற தனித்து நின்றால் மட்டும் போதாது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே நிலையில் வைத்து விமர்சிக்கவேண்டும். அதிமுகவை விமர்சிப்பதா என்று நினைத்தாலே தமிழக பாஜகவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடுவது என்னவிதமான நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். டெல்லியில் இருந்தே குனியத் தொடங்கிவிடுகிறார்கள்.

திமுகவை கடுமையாக விமர்சிப்பது, அதிமுகவை செல்லமாகத் திட்டுவது போன்ற அணுகுமுறைகள் ஒரு காலத்திலும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கப்போவதில்லை. இன்றைய தேர்தலின் ஒரே முக்கிய அம்சம், அதிமுக ஆட்சியின் வெறுப்பு ஓட்டுகள் என்றாகிவிட்ட நிலையில், பாஜகவின் முக்கிய இலக்கு அதிமுகவாக இருக்கவேண்டுமே ஒழிய, திமுகவாக இருக்கக்கூடாது.

உண்மையில் தமிழகத்தின் ஹிந்துக்கள் கட்சி அதிமுக என்ற பிம்பமே இங்கே நிலவுகிறது. எனவே மத்தியில் பாஜகவை ஆதரிப்பவர்கள்கூட மாநிலத்தில் அதிமுகவை ஆதரித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இல.கணேசன் போன்றவர்கள், ‘சில விதிவிலக்கான அம்சங்களைத் தவிர, அதிமுகவும் பாஜகவும் ஒரே கருத்துகளைக் கொண்ட கட்சிதான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: 6.4.16 தேதியிட்ட துக்ளக்.)

பாஜகவுக்கு எப்படியும் சிறுபான்மையினர் ஓட்டளிக்கப் போவதில்லை. குஜராத் போல பாஜக ஆட்சி அமைந்து அதை நேரடியாக உணராதவரை சிறுபான்மையினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள். அப்படியானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் ஹிந்துக்களே. அவர்களைக் கவரும் வகையிலாவது பாஜக செயல்படவேண்டும். அதுவும் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாத வகையில், பெரும்பான்மை மக்கள் ஹிந்து ஆதரவு என்பதை பிரச்சினைக்குரிய ஒன்று என நினைக்காத வகையில் அந்தச் செயல்பாடு இருந்தாகவேண்டும். தமிழ்நாடு ஈவெரா வழி வந்த, பொதுவாக ஹிந்து எதிர்ப்பு அரசியலிலேயே ஊறிக்கிடக்கும் ஒரு மாநிலம். அப்படியானால் தமிழ்நாட்டு பாஜகவின் செயல்பாடு என்பது கத்தி மேல் நடப்பது. முதலில் ஹிந்து ஓட்டுக்களைக் கவரவேண்டும். அந்த ஹிந்து ஓட்டுக்களோ அதிமுக வசம் உள்ளது.

இன்று பல முனைத் தேர்தல் நடக்கிறது. இது அதிமுகவுக்கே பல வகைகளில் சாதகம். அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க அல்லது குறைக்க சாத்தியமுள்ள ஒரே கட்சி இன்றைய நிலையில் தமிழக பாஜகதான். இன்னும் 30க்கும் மேற்பட்ட நாள்கள் உள்ளன. அதிமுகவுக்குச் செல்லும் ஹிந்து ஓட்டுகளைக் குறிவைத்து அரசியல் செய்தாலே போதும், அதிமுக பல தொகுதிகளில் தோற்கும் நிலை ஏற்படலாம்.

சென்னை வெள்ளம் வந்து தமிழக அரசு ஸ்தம்பித்து நின்று மக்களைக் கைவிட்ட சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கொஞ்சம் அதிமுகவுக்கு எதிராகப் பேசினார். ஆனால் தொடர்ந்த சில நாள்களில் மத்தியத் தலைமை இவ்விஷயத்தை மென்மையாகக் கையாளும்படி அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. அதன்பின்பு தமிழிசையும் அமைதியாகிவிட்டார். தமிழக பாஜகவின் இப்படியான பரிதாபமான நிலைக்கு மத்தியத் தலைமைகளும் ஒரு காரணம். ஏனோ ஜெயலலிதாவின் ஆதரவை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தின் பிற கட்சிகள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தேவை ஏற்படும்போது தாறுமாறாக அதிமுகவையும் திமுகவையும் தாக்குகிறார்கள். பின்பு இவற்றையெல்லாம் மறந்து கூட்டணியும் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுமே நடக்காதது போல் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக பாஜக மட்டுமே இதில் தடுமாறுகிறது.

இன்றைய நிலையில் தமிழக பாஜக செய்யவேண்டியவை என்ன? முதலில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது. என் தேர்வு: நிர்மலா சீதாராமன், அடுத்ததாக பொன்.ராதாகிருஷ்ணன். இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவப் போகும் வெற்றிடத்தை முழுமையாகக் கைப்பற்ற எல்லா வகையிலும் ஆயத்தமாக இருப்பது. ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பது. தனக்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் கவனம்செலுத்துவது. எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகள் தரும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது. கொள்கை அளவிலான போராட்டங்களையும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது. அவை ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொள்வது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே தூரத்தில் வைப்பது, விமர்சிப்பது. தமிழ்நாட்டின் ஹிந்துக்கள் கட்சி பாஜகதான் என்று பாஜகவின் ஆதரவாளர்களையாவது முதலில் நம்ப வைப்பது. தொடக்கமாக, வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தி, அந்த இடங்களில் கட்சியை பலப்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது. பாஜகவுக்கென ஊடகங்களை உருவாக்குவது. இவை எதிலுமே இன்னும் தமிழக பாஜக பெரிய சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை என்பதுதான் உண்மை. இவற்றைச் செய்தால் இன்னும் ஐந்தாண்டுகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக உருவாகும் கட்சிகளில் முதன்மைக் கட்சியாகவோ அல்லது இரண்டாவது கட்சியாகவோ வரலாம். அப்படிச் செய்யாத வரை தமிழ்நாட்டில் மூன்று சதவீத வாக்கு வங்கிக்கு மேல் வாங்க இயலாமலேயே போகலாம்.

வரலாறு வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் தராது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளே மற்ற கட்சிகளின் மீட்சிக்கான வாய்ப்புகள். அதைப் பயன்படுத்திக்கொள்ளாத வரை எந்த ஒரு கட்சியும் மேலெழ வாய்ப்பில்லை. இதைப் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளாதவரை தமிழக பாஜக இத்தேர்தலில் எதையும் சாதிக்கப்போவதில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இன்னொரு காங்கிரஸாகத்தான் இருக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மீள ஒரே வழி, தமிழக பாஜக தமிழ்நாட்டின் கட்சிதான் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்குவதுதான். அதை நோக்கியே தமிழக பாஜகவின் ஒவ்வொரு நகர்தலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இனியும் இருக்கும்.

Share

வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர்

முன்பெல்லாம் என் தாத்தாவிடம் கேட்பேன், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று. அவர் சிரித்துக்கொண்டே ‘சோத்துக் கட்சிக்கு’ என்பார். எத்தனை முறை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதில் சோத்துக் கட்சி என்பதாகவே இருக்கும். தான் அளிக்கும் வாக்கை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் உறுதி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும், இன்னொரு வகையில் தன் வாக்கு வெல்லும் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் சொன்னதில் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என் நண்பரிடம் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் சொன்னேன். எப்போதும் அதிமுகவுக்கு வாக்களிப்பதையே விரும்பும் அவர் அந்த ஒருமுறை மட்டும் பாஜகவுக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என் நண்பர் வாக்களித்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு வந்தது. அதிமுக வெற்றி கண்டது. என் நண்பர் மீண்டும் மீண்டும் சொன்னது, ‘ஒழுங்கா அதிமுகவுக்கு போட்டிருந்தா, ஜெயிச்ச கட்சிக்கு ஓட்டு போட்ட மாதிரி இருந்திருக்கும்’ என்பதையே.

இந்த ஒரு மனநிலை தமிழ்நாடெங்கும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்னும் மனநிலை. ஆனால் இந் எண்ணம் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். வெல்லும் கட்சி அல்லது இரண்டாவதாக வரும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளை கிட்டத்தட்ட செல்லாத வாக்கைப் போல சித்திரிக்கும் போக்கு இங்கே உள்ளது. இந்த மனநிலையை மாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை என்பது மிகவும் முக்கியமானது, அவசியமானது. எல்லாத் தரப்பு மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஒரு சில கட்சிளால் முழுமையாகக் கவனப்படுத்திவிடமுடியாது. அதோடு சில தனிப்பட்ட சமூகத்தின் அல்லது குழுவின் பிரச்சினைகள் என்ன என்ன என்பதெல்லாம், இரண்டு முதன்மைக் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அல்லது பெரிய அளவில் வாக்கு இல்லை என்பதால் முதன்மைக் கட்சிகள் இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கேதான் சிறிய கட்சிகளின் இருப்பும் பங்களிப்பும் முக்கியமானதாகிறது.

ஜாதிக் கட்சி என்ற சொல் இன்று மிகவும் மோசமான ஒன்றாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற ஜாதி அமைப்பு மிக வலுவாக வேரூன்றிய நாட்டில் இந்த ஜாதிக் கட்சிகளின் தேவை மிக அவசியமானது. இந்த ஜாதிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள், இவை மேற்கொள்ளும் மிரட்டல் அரசியல், அதனால் விளையும் பிரச்சினைகள் – இவையெல்லாம் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் இதன் இன்னொரு பக்கமாக, இந்த ஜாதிக் கட்சிகளே தங்கள் ஜாதிக்குரிய தேவைகளை, பிரச்சினைகளை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன. இவை இல்லாவிட்டால் இப்பிரச்சினைகளெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் வராமலேயே போயிருக்கக்கூடும்.

அதிலும் இந்தியாவில், மிக நுணுக்கமான கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட மீச்சிறிய ஜாதிகளின் பெயர்கள்கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இது போன்ற ஜாதிகளின் தேவைகளை முன்வைக்கும் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த நோக்கில் மிக முக்கியமானது.

இதே கருத்தை சில அமைப்புகளுக்கும் சில குழுக்களுக்கும் விரிவுபடுத்தலாம். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் குரலை ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக முன்வைக்காமல் நாம் அவர்களை ஒருநாளும் புரிந்துகொண்டிருக்கமுடியாது. முதன்மைக் கட்சிகள் இத்தரப்பின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பவேண்டுமானால் இக்குழுக்களின் அழுத்தமும் தொடர் போராட்டமும் மிகவும் அவசியம்.

எனவே நாம் மீண்டும் மீண்டும் வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கான மக்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளமுடியாமலேயே போய்விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள், சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை, கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளாகவே சித்திரிக்கப் பார்க்கின்றன. ஏற்கெனவே முதன்மைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வாக்காளர்கள், வேறு எதையும் சிந்திக்காமல் வெல்லும் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

இது மக்களை அதிகம் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு பிரச்சினை. இதைக் கவனமாகக் கையாளவேண்டும். ஜாதிக் கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் நமக்கு ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் செயல்பாடுகளில் அராஜகங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளை மீறி அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்பின் குரல் மிகவும் இன்றியமையாதது. அக்குரல் நமக்கு ஏற்புடையது என்றால், மற்ற எல்லாப் பிரச்சினைகளையும்விட இப்பிரச்சினை நமக்கு முக்கியமானது என்று தோன்றினால், எக்கட்சி வெல்லும் எக்கட்சி தோற்கும் என்றெல்லாம் யோசிக்காமல், நம் கருத்தை ஒட்டிப் பேசும் கட்சி எத்தனை சிறியதாக இருந்தாலும் அதற்கு வாக்களிப்பதே நியாயமானது. அப்போதுதான் பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு வெளியாக தேர்தல் அரங்கம் மாறும். அதுவே ஜனநாயகத்துக்குத் தேவையானது. இனியாவது அதை நோக்கிப் பயணிப்போம்.

Share

அதிமுகவின் ஐந்து வருடங்கள் – தேர்தல் களம் 2016 – தினமலர்

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமான முக்கியமான வேறுபாடுகள் என்று யோசித்துப் பார்த்தால், முடிவெடுப்பதில் உறுதி, வழவழா கொழகொழா இல்லாத அணுகுமுறை, தீவிரவாதம் எவ்வகையில் வந்தாலும் அதை தீவிரமாக எதிர்ப்பது, உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது, எந்த ஒரு சமூகத்தையும் அவமதிக்காதது, ஓட்டரசியல் மற்றும் தாஜா அரசியலில் ஈடுபடாதது ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றுக்காகத்தான் கருணாநிதியை விடுத்து ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவற்றைவிட்டால் இவர்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. சொல்லப்போனால் இவை தவிர இன்னும் சில விஷயங்களில் கருணாநிதியே முன்னிலை பெறுவார் என்பதே உண்மை. ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இவை எல்லாம் காணாமல் போயின என்பதே கசப்பான உண்மை.

ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதும் திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் சாமானியனின் கனவு, ‘இந்தமுறை ஜெயலலிதா மிகச்சிறப்பான ஆட்சி தருவார்’ என்பதாகவே இருக்கும். உண்மையில் ஜெயலலிதா நினைத்திருந்தால் குஜராத்தின் மோதியைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த அற்புதம் நிகழவே இல்லை.

ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தபோது கடும் மின்வெட்டு நிலவியது. இப்போது அது நிச்சயம் குறைந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில், பத்தாண்டுகளில் தமிழகம் எதிர்கொள்ளத் தேவையான, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு கிட்டத்தட்ட முடங்கியே கிடந்தது. அந்த மூன்று நாள்களுக்குப் பிறகு நிவாரணத்திலும், நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இயற்கைப் பேரிடர் ஒன்றில் தேவையான போது அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவேண்டும். இதுவரை இல்லாத மழைதான், எதிர்பாராத வெள்ளம்தான், ஆனாலும் அரசு தயாராகவே இருந்திருக்கவேண்டும்.

ஸ்டிக்கர் அரசியல் மக்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு கலந்த ஏளனத்தை அதிமுகவினரும் தலைமையும் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. எதிலும் ஸ்டிக்கர் எங்கும் ஸ்டிக்கர். எங்கும் பேனர் எங்கும் விளம்பரம். பேனரை எல்லாக் கட்சிகளுமே இப்படித்தான் பயன்படுத்துகின்றன என்றாலும் அதிமுக அதீதம். ஓர் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தவேண்டியது அவசியம்தான். ஆனால் அதுவும் மிதமிஞ்சிப் போனது. அதிலும் குறிப்பாக சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மதுரை கணேசனின் உடலின்முன்பு ஜெயலலிதாவின் படத்துடன் 10 லட்ச ரூபாய் கொடுத்த வீடியோ கொடுமையின் உச்சம். அரசு சத்தமின்றி பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டு அதை அரசு அறிவிப்பில் வெளியிட்டாலே போதுமானது.

இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு மிரட்டல்களை அரசு சாமானிய மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்ளவில்லை. எங்கோ விஷமத்தனமாக எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு மௌண்ட் ரோடே ஸ்தம்பித்தது. அரசு இதனை மென்மையாகவே கையாண்டது. அதேபோல் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் ஓட்டரசியலில் இதுவரை ஈடுபட்டிராத ஜெயலலிதா இந்தமுறை தன் அணுகுமுறையில் கொஞ்சம் தளர்ந்துவிட்டாரோ என்று யோசிக்க வைத்த விஷயங்கள் இவை. ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான சோவே, துக்ளக் ஆண்டுவிழாவில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். சோவே குறிப்பிட்டிருக்கிறார் என்னும்போது இப்பிரச்சினையின் தீவிரத்தை ஜெயலலிதா உணரவேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக, குறிப்பாக பரப்பன அக்ரஹாரா தீர்ப்புக்குப் பின், ஆட்சி ஸ்தம்பித்துவிட்டது போன்ற ஒரு உணர்வே மேலோங்கியுள்ளது. அதிமுகவினர் தலைமையின் புகழ் பாடுவதை ஒரு பக்கமும், தன்னிச்சையாக செயல்படுவதை இன்னொரு பக்கமும் செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மா உணவகம், காவிரி நீர்ப் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு போன்ற சில நல்ல விஷயங்களைக் கூட இவர்கள் மறக்கடித்துவிடுகிறார்கள். நில அபகரிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்த, தற்போது நடந்துமுடிந்த மகாமகத்தை சிறப்பாகக் கையாண்டது போன்ற அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்களே ஒழிய, எதையும் சாகவாசமாக எதிர்கொள்ளும் அரசை அல்ல. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் கையாண்ட ஜெயலலிதாவைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே அன்றி, இப்படியான தலைவராக அல்ல.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுகவினர் எப்போது அதிகம் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள், விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஸ்டிக்கர் விஷயம், ஜெயலலிதாவைக் கண்டாலே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் காலில் விழுந்துவிடுவது, எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் போஸ் கொடுப்பது, தொலைக்காட்சிகளில் எவ்வித ஆழமும் இல்லாமல் மேம்போக்காகப் பேசுவது, மையப்படுத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு – இவை போன்றவைதான். கட்சியை தன் கைக்குள் முழுவதுமாக வைத்திருக்கும் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் இதை ஒரே நாளில், ஆம், ஒரே நாளில் சரி செய்திருக்கமுடியும். ஆனால் அப்படி ஒன்று நிகழவே இல்லை.ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனை என்பது தன்னுடைய உறுதியான செயல்பாட்டால் தீவிரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் கட்டுக்குள் வைத்திருந்ததுதான். இதுதான் அவரது பலம். அந்த உறுதியான செயல்பாட்டில் எவ்வித சுணக்கம் ஏற்பட்டாலும் அது நாட்டுக்கு நல்லதல்ல. அதன் விளைவு தேர்தலில் தெரியும். தெரியவேண்டும். 

Share

மக்கள் நலக்கூட்டணி

ஊரில் சொல்வார்கள், சும்மா இருந்த நான்கு பேர் சேர்ந்து ஒரு மடம் கட்டிய கதையை. மக்கள் நலக்கூட்டணியை இக்கதையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும், ஒருவாறு இப்படிச் சொன்னாலும் தவறில்லை. இவர்கள் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று சொல்லும்போது, நிச்சயம் இக்கதையுடனே இவர்களை ஒப்பிடமுடியும். ஆனால் இக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் சும்மா இருக்கும் தலைவர்கள் அல்ல என்பது உண்மைதான். இவர்களுக்கென்று தெளிவான கொள்கைகள் உள்ளன. ஒருவருக்கொருவர் கொள்கைகளில் வேறுபட்டாலும், அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்ற வகையில் ஒரு கூட்டணியின் கீழ் ஒன்றுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவும், திருமாவளவனும் இணையும் புள்ளி, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்றாலும், இவர்கள் இணையும் மற்றொரு புள்ளி என, முற்போக்காளர்கள் என்பதைச் சொல்லாம். பொதுவாக அடிப்படைவாதத்துக்கு எதிராகவே முற்போக்கு என்பது உருவாகி வந்திருந்தாலும், புழக்கத்தில் முற்போக்கு என்ற வார்த்தைக்கு அதற்குரிய பொருள் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய நடைமுறையில் இந்த முற்போக்கு என்பது, ஹிந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, சிறுபான்மை ஓட்டரசியல், மறைமுக/நேரடி பயங்கரவாத ஆதரவு என்பவற்றின் கலவையாகவே ஆகிவிட்டது.

ஊழலை விட்டுவிட்டு, இன்று இந்தியாவை உலுக்கும் பிரச்சினைகள் எவை என எடுத்துக்கொண்டு அவற்றின் பின்னணியை ஆராய்ந்தால், அங்கே எல்லாம் முற்போக்காளர்களின் பங்களிப்பு இருப்பதைப் பார்க்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவே இந்திய தேசியமும், ஹிந்து மதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாதவைப் பார்க்கலாம். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தப் புள்ளியில் மிகக் கச்சிதமாக ஒன்றிணைகிறார்கள். இந்த மக்கள் நலக்கூட்டணிக்கு முன்பு இவர்கள் ஒரு கூட்டியக்கமாக இருந்தபோது ஜவாஹிருல்லாவும் இக்கூட்டியக்கத்தில் இருந்தார் என்பது முக்கியமான தகவல்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்று சொல்லும் கட்சிகள், இதற்கு முன்பு தொடர்ச்சியாக மாறி மாறி அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். மாறி மாறி அதிமுகவையும் திமுகவையும் ஊழல் கட்சிகள் என்று திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதோ ஒரு ஊழல் கட்சிக்குத் துணையாக இருந்துவிட்டு, அந்த ஊழல் கட்சிகள் ஆட்சிக்கு வர உறுதுணையாக நின்றுவிட்டு, இன்று அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்று என்கிறார்கள். இவர்களின் நம்பகத்தன்மை இங்கேயே முடிந்துபோய்விடுகிறது.

இதிலுள்ள இன்னொரு குழப்பம், இந்தத் தேர்தல் முடியும்வரையிலாவது இவர்களது உறுதி நிலைக்குமா என்பதுதான். உண்மையில் மக்கள் நலக்கூட்டணி உருவானபோது, ஒரு கூட்டணியாக திமுகவுடன் தொகுதி பேரம் பேசுவார்கள் என்றே நான் நினைத்தேன். இன்னும் சிலர் இவர்கள் அதிமுக வெல்லவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டணியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்றார்கள். விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக வெல்லட்டும் என நினைக்குமென்று நான் நம்பவில்லை. இப்போதும் நம்பவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இவர்கள் திமுகவுடனும் கூட்டணி வைக்கவில்லை.

மதவாதக் கட்சியுடன்  கூட்டணி கிடையாது என்றும் இவர்கள் பேசுகிறார்கள். ஆனால் வைகோ ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர். இனிமேல் அவர் பாஜக பக்கம் போகவே மாட்டார் என்பதற்கும் எவ்வித உறுதியும் கிடையாது. இவர்கள் தவம் கிடந்து அழைத்த விஜய்காந்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்தான்.

அப்படியானால் இக்கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன? ஒன்றுமில்லை. இவர்கள் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே மூன்றாவது கட்சி என்றளவில் தேமுதிக இருக்கும்போது, இது நான்காவது அணியாகவே இருக்கமுடியும். பல்வேறு நிலைப்பாடுகள், பல்வேறு நோக்கங்கள் உள்ள கட்சிகள் இணைந்து ஒரு தேர்தலை சந்திப்பதே கடினம் என்ற நிலையில், இவர்களின் கூட்டணி என்று வேண்டுமானாலும் உடைந்துபோகலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த கூட்டணியான பாஜக-மதிமுக-தேமுதிக-பாமக இன்று இல்லை. இதுவேதான் மக்கள் நலக்கூட்டணிக்கு நேரும் நிலையாகவும் இருக்கப்போகிறது.

நடக்கப்போது சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் பலம் என்பது என்னவாக இருக்கும்? இவர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாது என்றே நான் நினைக்கிறேன். அதிமுக-திமுகவுக்கு மாற்று தேவை என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது உண்மைதான். ஆனால் அது மூன்றாவதாக ஒரு மாற்றுக் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முழுமையான வடிவம் பெறவில்லை. காரணம், மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைமை ஒன்று உருவாகிவரவில்லை. எனவே மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கெல்லாம் கொஞ்சம் காலூன்றி உள்ளதோ அங்கெல்லாம் வாக்கைப் பிரிக்கும் ஒரு கூட்டணியாக மட்டுமே செயல்படும். அதை மீறி இத்தேர்தலில் இவர்களது பங்களிப்பு என வேறொன்றும் இருக்காது.

தேர்தல் முடிந்ததும் எத்தனை தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியால் அதிமுக தோற்று திமுக வென்றது என்றும், திமுக தோற்று அதிமுக வென்றது என்றும் ஆய்வு செய்ய இக்கூட்டணி உதவலாம். இது ஒரு சுவாரயஸ்மான ஆய்வாக இருக்கும். பொழுது போகும். மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இப்படித்தான், பொழுது போகிறது.

Share