Tag Archive for தூக்கு தண்டனை

யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை

உண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.

ஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.

இந்திய மனசாட்சிக்காக (மனுசாட்சியாம்!) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.

யார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.

தூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.

தூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.

இந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் முதலில் கண்டுகொள்ளவேண்டும்.

Share