Tag Archive for நிபுணன்

நிபுணன்

நிபுணன்

அருண் வைத்தியநாதனின் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் வந்த உடனேயே அதைப் பார்க்கவில்லை. பார்க்க நினைத்தேன், ஆனால் ஏனோ விட்டுப் போய்விட்டது. அதை அப்படியே மறந்தும்போய்விட்டேன். ஆறு மாதம் கழித்து ஒரு நண்பர், கிட்டத்தட்ட ஃபேஸ்புக் நரசிம்ம ராவ், என்னிடம் ஃபேஸ்புக் சாட்டில் அந்தப் படத்தைப் புகழ்ந்தார். இவரே புகழ்கிறாரே என்று ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் மகிழ்ச்சி. உடனே அந்தப் படத்தைப் பார்த்தேன். குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து பார்க்கத் துவங்கினோம். சில நிமிடங்களிலேயே என் மகனைப் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த அளவுக்குப் படத்தின் தாக்கம். படம் முழுக்க இருந்த ஒரு திக்திக் தன்மை, அலட்டாத ஸ்டைலிஷ் உருவாக்கம் எனப் படம் மிக நன்றாக இருந்தது. அதிகம் பேசப்படவேண்டிய பிரச்சினை ஒன்றை அதன் சீரியஸ்நெஸ் கெடாமல் கத்திமேல் நடப்பது போன்ற படமாக்கல் சாதாரண விஷயமல்ல.

அவரது அடுத்த படம் பெருச்சாளி (மலையாளம்), தரைக்கு இறங்கி எடுத்த படம். 🙂 இப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணமே. ஆனால் இப்படம் நல்ல ரீச்சைப் பெற்றிருந்தது. மிக நன்றாக ஸ்டைலிஷாக எடுக்கும் படங்களுக்கும் இத்தகைய படங்களுக்கும் வசூல் ரீதியாக உள்ள வேறுபாடு, திரையுலகில் எப்போதும் இருப்பதுதான்.

நிபுணன் திரைப்படம் த்ரில்லர் வகை என்பதாலும் சீரியல் கில்லர் வகைக் கதை என்பதாலும் இந்த இரண்டையும் எதோ ஒரு வகையில் சரியாகக் கையாண்டிருக்கிறது. என்றாலும் ஸ்டைலிஷ் தன்மையே அதிகம். படம் பார்க்கும்போது நம் கவனம் எங்கேயும் சிதறுவதில்லை. இது ஒரு த்ரில்லர் படங்களுக்கு மிகவும் தேவையான ஒரு தன்மை. படம் முடிந்ததும் நாம் அலசலாம் ஆராயலாம். ஆனால் பார்க்கும்போது நம்மைக் கட்டிப் போடவேண்டும். அதை இப்படம் பெருமளவுக்குச் செய்திருக்கிறது. பெருச்சாளி படம் போன்ற ‘தரை ரேஞ்சுக்கு இறங்கி’ச் செய்யும் லாஜிக் அற்ற காட்சிகள் மிக மிகக் குறைவே.

திரைக்கதையை ஏனோ தானோ என்று அமைக்காமல் ஒழுங்காக ஹோம் வொர்க் செய்து மெருகேற்றி, ஒவ்வொரு கேள்வியையும் தாங்களே கேட்டுக்கொண்டு அதற்குச் சரியான பதிலையும் படத்தில் வைத்து, பெரிய அளவிலான சந்தேகங்களே வராத அளவுக்குப் படத்தை உருவாக்கி இருக்கிறது நிபுணன் டீம். திரைக்கதையில் ஆனந்த் ராகவின் பங்களிப்பும் உள்ளது. படத்தில் வசனங்கள் பல இடங்களில் ஷார்ப். சுஜாதாவின் வாசனை சில இடங்களில். அதை தனியே துருத்தித் தெரியாதவாறு படத்தோடு போகிற போக்கில் செய்திருப்பது ரசனையாக உள்ளது. (ரத்தம் உறையாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளைச் சொல்லும் காட்சியும் கொலையை உள்ளே வந்து பாருங்க என்று பிரசன்னா அர்ஜூனை அழைக்கும்போது அர்ஜூன் பதில் சொல்லும் காட்சியும் உதாரணங்கள்.)

அர்ஜூன் அட்டகாசமாக நடிக்கிறார். பிரசன்னா, வரலக்ஷ்மி போன்றவர்கள் தங்கள் தேவையை உணர்ந்துகொண்டு அதை மட்டும் செய்திருக்கிறார்கள். யாரும் ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பது ஆறுதல். மொத்தத்தில் ஒரு டீசண்டான படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

எங்கேயெல்லாம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று பார்த்தால், இடைவேளைக்குப் பிறகு ஒரு தொய்வு, லேசான தொய்வுதான், வருகிறது. அது ஃப்ளாஷ் பேக் காட்சியால் வருகிறது என்றாலும், அதைத் தவிர்க்கமுடியாது என்றாலும், அதற்குப் பிறகு வேகமெடுக்கும் படம், மீண்டும் க்ளைமாக்ஸில் தொய்வடைகிறது. யார் என்பதை கடைசி வரை தெரியாமல் வைத்திருக்காமல் அதற்கு முன்பே அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையெல்லாம் சொல்லி விடுகிறார்கள். ஆளை மட்டுமே கடைசியில் காட்டுகிறார்கள். நமக்குத் தெரிந்த ஒருவர்தான் கொலையாளியோ என்ற எண்ணம் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இருப்பது இயல்பதுதான். அப்படி இப்படத்தில் எதுவும் இல்லாதது ஒருவகையில் சரிதான் என்றாலும் இன்னொரு வகையில் ஏமாற்றமாகவும் இருந்தது. அதேசமயம், நாம் எதிர்பாராத ஒருவரைக் கொலையாளி என்று காட்டி இருந்தாலும் இந்த ஏமாற்றம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பிடிக்காத விஷயம் என்று பார்த்தால், அர்ஜுனுக்கு பார்க்கின்சன்ஸ் நோய் என்று காண்பித்து, முக்கியமான காட்சிகளில் எல்லாம் அவருக்கு வலது கை செயல்படாமல் போவது. இதை மிக எளிதாக ஊகித்துவிட முடிவதாலும் அது அப்படியே நடப்பதாலும், அக்காட்சிகள் எல்லாம் 60களின் தமிழ்ப்பட உத்தி போலத் தோன்றியது. படத்தில் மற்ற எந்த காட்சிகளும் இப்படி இல்லாத நிலையில், உதாரணமாக ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பர்களின் குடும்பத்தைக் கொல்வது மிரட்டுவது போன்ற எந்த அபத்தங்களும் இல்லாதபோது, இதுபோன்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அதேபோல், கொஞ்சம் ஆசுவாசம் செய்யும் காட்சிகள் கூடுதல் இருந்திருக்கலாம். இது ஒரு குறை அல்ல என்றாலும், படத்தின் ரீச்சுக்கு இது உதவும். உதாரணமாக, கொலையாளி பற்றித் துப்பு சொல்லும் ஒருவர் பிரசன்னாவை கான்ஸ்டபிள் என்று அழைக்கும் காட்சி. தனியே உருத்தாமல் இது போன்ற காட்சிகள் தரும் கலகலப்பு ஒரு வணிகப் படத்துக்கு மிகவும் முக்கியமானதே.

வெட்டியாகப் பணத்தைப் போட்டு தரைரேஞ்சுக்கு எடுக்கிறேன் என்று சொல்லி நம்மைப் படுத்தும் படங்களுக்கு மத்தியில் தெளிவாக திட்டமிடப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு நன்றாக எடுக்கப்படும் படங்கள் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை. இவையே தமிழ்த் திரையுலகை வாழவைக்கப் போகும் ஆக்சிஜன். அந்த வகைத் திரைப்படமாக வந்திருக்கிறது நிபுணன்.

பின்குறிப்பு: படத்தின் மிகச்சிறந்த காட்சி எதுவென்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு நிமிடக் காட்சிதான்.
படத்தின் இயக்குநருக்கு ஒரு சைன் ஆஃப் மெசேஜ் – கபாலி ரேஞ்சுக்கு அடுத்த படத்தை எடுக்க வாழ்த்துகள். 😛

 

Share