Tag Archive for பள்ளி

சூழல் பேணல்

நான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.
 
பிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.
 
 
இன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.
Share

பட்டம் – தினமலர்

வாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.

http://m.dinamalar.com/detail.php?id=1626970

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.

பட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…!

இன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.

* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.

* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.

* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.

* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.

* தொடரும்… கூடவே கூடாது.

* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.

* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.

* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.

* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.

* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது! மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.

* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்!

பள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.

வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.

இது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

Share

பள்ளியைக் காப்பாற்றுவோம்

ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப் போல MLWA பள்ளிக்குள் புகுந்தேன் என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முன்புவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியை ஒரு சிறையைப் போலவே உணர்ந்தேன். ஒரு போலிஸுக்கும் திருடனுக்குமான உறவும் அணுகுமுறையையுமே அதுவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் காண்பித்தார்கள். அப்பள்ளியைவிட்டு MLWA பள்ளிக்குச் செல்லும்வரை, பள்ளி என்பது சுதந்திரம் மிகுந்த இடம் என்பதுவும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 13 வயதில் 8ம் வகுப்பில் MLWA பள்ளியில் சேர்ந்தபின்புதான் என் பள்ளி நாள்களின் வசந்த காலங்கள் ஆரம்பித்தன.


பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லாமல் இருந்தது. முதல் ஒரு மாதத்தை ஒரு சந்தேகத்துடனேதான் கழித்தேன். போக போகத்தான் தெரிந்தது, MLWA பள்ளியில் அதிகம் யாரும் அடிப்பதில்லை என்று. அடிப்பதே இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் அஞ்சி நடுங்கவேண்டிய திருடனின் பயம் அப்பள்ளியில் இல்லை. MLWA என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி தந்த சுதந்திரம் மட்டுமே.

எத்தனை எத்தனை ஆசிரியர்கள். 

கிருஷ்ணன் என்றொரு ஆசிரியர் இருந்தார். சமூக அறிவியல் ஆசிரியர். ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, ஹாவ் என்று ஏப்பம் விட்டு, கழுத்தை மேலிருந்து கீழாகத் தடவிக்கொண்டு, இந்திய நில அமைப்பைப் பற்றி வேதம் போலச் சொல்வது இன்னும் நினைவில் இருக்கிறது. புவியியலை மனப்பாடம் செய்யாமல், மனக்கண் மூலம் இந்தியாவை நினைவில் நிறுத்திப் படிக்கமுடியும் என்று தெரிந்ததே கிருஷ்ணன் சார் பாடம் எடுத்த விதத்தில்தான். அவர் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்த விதம் அலாதி. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் படித்திருந்தால் நான் கடந்த கால இந்திய வரலாற்றில் நிபுணன் ஆகியிருப்பேன்.

ஜான் என்றொரு சார். கணிதம் எடுப்பவர். சிலபஸை முடிப்பது, அதை மீண்டும் ரிவைஸ் செய்வது என அவர் செய்த மாயங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரைப் போல இன்னொருவர் மேத்ஸ் எடுக்க முடியாது என்றும், அவரே கணிதத்தின் கடைசிப் புள்ளி என்றும் அன்று நாங்கள் நம்பினோம். 

நார்மன் சார் – அன்பைத் தவிர எதுவுமே அறியாதவர். சிரில் மேரி டீச்சர் – அறிவியலை சொல்லித் தர அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. நாங்கள்தான் எதையுமே புரிந்துகொள்ளக்கூடாது என்று விறைப்பாக இருந்தோம். 

லக்ஷ்மணன் ஐயா – இன்று தமிழில் தெரியும் கொஞ்ச நஞ்ச இலக்கணமும் இந்த லக்ஷ்மணன் ஐயா இட்ட பிச்சைதான். அவர் இல்லை என்றால் தமிழில் ஒன்றுமே தெரியாமல் போயிருந்திருக்கும். 

கணேசன் ஐயா – இவர் வகுப்பறைக்குள் வந்தாலே நாங்கள் ஓ வென்று கூவுவோம். கிட்டத்தட்ட ரஜினியின் ஓப்பனிங் எண்ட்ரியை ஒத்தது இது. இவர் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ.

தர்மராஜ் சார் – இவர்தான் ஹெச் எம். இவர் வந்து நின்றாலே, பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவோம். இவரிடம் அவ்வளவு பயம். 

இந்தப் பள்ளிகளின் நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒட்டுமொத்த நாஸ்டால்ஜியாவுக்குள் சிக்கி வெளியே வர இயலாமல் போய்விடும்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என்னை பழைய நண்பர் ஒருவர் அழைத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நொடி அது. ஆனால் அம்மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் என நினைக்கவில்லை. MLWA பள்ளியை மூடப் போகிறார்கள் என்றார் அவர். 

கஷ்டப்பட்ட ஏழைகள் அதிகம் படிக்கும் பள்ளி. சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு மேனேஜ்மெண்ட் கையில் போயிருக்கிறது. புதிய நிர்வாகம் என்று அறிகிறேன். பள்ளியை மூடிவிட்டு, நல்ல விலைக்குச் செல்லும் அந்த இடத்தை விற்று, காம்ப்ளக்ஸ் போன்ற ஒன்றைக் கட்டுவது அதன் நோக்கம் போல. இதை செய்துமுடிக்க நிர்வாகம் முதலில் செய்தது, புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்தியது. இப்படி நிறுத்தியதுமே இப்பள்ளியை மூடப் போகிறார்களாம் என்ற பேச்சு அப்பகுதி முழுவதும் பரவிவிடும். அவர்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது.

நான் MLWAல் படித்தபோது, 1200 பேர் படித்ததாக என் நினைவு சொல்கிறது. ஆண்டு 1990. இப்போது 200 பேர் படிப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. கண்முன்னே இப்படி ஒரு பள்ளி சீரழிக்கப்படுவது கடும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாரம்பரியம் மிக்க ஒரு பள்ளி, வெறும் லாப நோக்கத்திற்காக இடிக்கப்படுவது ஏனென்று தெரியவில்லை. இப்பள்ளியைச் சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. வெளிப்படையாக அங்கிருக்கும் ஆசிரியர்கள் பேசமுடியாத ஒரு நிலையும் உள்ளது.

தற்போது இப்பள்ளியை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓரளவு ஆதரவு கிட்டியுள்ளது. இவர்கள் இப்பள்ளியைக் காப்பாற்றுவார்கள் என்று அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள், அப்பள்ளியில் படித்த என்னைப் போன்ற அலுமினி மாணவர்கள் நம்புகிறார்கள். இது நடக்கவேண்டும்.

ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியை இப்படி நினைத்தால் மூடிவிடலாம் என்ற அளவில் மட்டுமே நம் சட்டங்கள் இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கிறது. பள்ளி என்பது வெறும் பள்ளியல்ல என்ற கிளிஷேக்கள் இவர்கள் முன் எடுபடாது என்றாலும், இந்த கிளிஷேக்களைச் சொல்லாமல் சில சமயம் உணர்வுகளைச் சொல்லிவிடமுடிவதில்லை. பள்ளி என்பது வெறும் பள்ளி மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி உருவாக்கும் மாணவர்களின் நினைவுகளில் அப்பள்ளி வாழும்தோறும், தொடர்ந்து நல்ல மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு பள்ளி தந்துகொண்டிருக்கும் காலம்தோறும் அது ஒரு சமூகத் தொகுப்பாக மாறுகிறது. இப்படிப்பட்ட பள்ளியை இடிக்க எப்படி புதிய நிர்வாகம் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. உலகுக்கு அன்பை போதிக்கும் பள்ளியை இடிப்பது, மனிதர்களின் உணர்வுகளைக் கொல்வதற்கும் எனவே மனிதர்களைக் கொல்வதற்கும் ஒப்பானது என்பதை மறந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

மால்கள் கட்டவும், காம்பளக்ஸ் கட்டவும் பணம் மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம். அல்லது தேவையான இடத்தில் கட்டிக்கொண்டுவிடலாம். ஆனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் பள்ளியை இடிப்பது என்பது இத்தனை எளிதானதல்ல. அப்பள்ளியில் படிக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கஷ்டப்பட்ட ஏழை மாணவர்கள் எங்கே செல்வார்கள், என்ன ஆவர்கள் என்பதெல்லாம் ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எப்படி பள்ளியை மூட முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பள்ளியும் ஒரு விற்பனைப் பண்டமே என்னும் அர்ப்பணிப்பற்ற ஒரு கணக்கே இதன் காரணமாக இருக்கவேண்டும்.

கடந்த வாரங்களில் புதிய தலைமுறை இதழில், இப்பள்ளியின் மீட்சி குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பள்ளியின் மறுகட்டுமானத்துக்கு பலரும் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்தைவிட, அனைவரின் ஆதரவின் மூலம் பள்ளியை இடிக்காமல், மூடாமல் இருக்கச் செய்வதே உடனடி அவசியம். 

இப்பள்ளியை மீட்க அரசு ஆவண செய்யவேண்டும். செய்யும் என்று நம்புகிறேன். 

நண்பர்கள் கவனத்துக்கு – இப்பதிவை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லுங்கள். ஃபேஸ்புக் மூலமும் டிவிட்டர் மூலமும் பலரைச் சென்றடைந்தால் நல்லது. நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி.

தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இப்பள்ளியின் நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பு அபரிதமானது. இப்பள்ளியைக் காக்கவேண்டும்.

இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/mlwaschoolmadurai

Share