Tag Archive for மாவீரன்

Facebook Notes – 2

புவியிலோரிடம் – பாதி (1-ஜூலை-2011)

பாராவின் புவியிலோரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இது போன்ற ஒரு கதையை (நாவல் என்று சொல்ல இயலவில்லை) நான் வாசித்ததில்லை. முதல் பாகம் வரை படித்திருக்கிறேன். பாராவின் வழக்கமான வரிகள் தந்த தடையை மீறி நாவலுக்குள் நுழைவது ஒரு சவாலாகவே இருந்தது. மேலும் வாசுவாக பாராவையே நினைக்கத் தோன்றுவதையும் மீற முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மீறியதும் நாவல் சட்டெனத் திறந்துகொண்டது. வெளிப்படையான ஒரு அரசியல் பிராமணக் கதையை  இதுவரை யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு இடத்தில் மணிரத்னத்தை நினைவுபடுத்தும் காதல் காட்சிகள். இந்த பாரா எனக்கு புதுசு. ஆயிரம் அபுனைவுகள் எழுதியிருந்தாலும் ஒரு எழுத்தாளன் ஒரு தடமாகப் பதிவு செய்யப்படுவது புனைவில்தான் என்ற எண்ணம் ஒரு அனுபவமாக எழுகிறது. முதல் பாகத்தில் பாரா ராக்ஸ். குறிப்பாக ஆசாரியார் வரும் காட்சிகளில் அவரது மனைவி பேசும் வசனங்கள். ஒரு நாவலுக்குண்டான அழகை சில இடங்களில் பார்க்கமுடிகிறது என்றாலும், அரசியலை சொல்ல நினைக்கும் அவசரமும் கதை சொல்ல நினைக்கும் வேகமும் அதனை உடைக்கின்றன. இரண்டாம் பாகம் நாளை படிக்கப் போகிறேன். சிறிய புத்தகம்தான். வசதி கருதி இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பாதி இன்று, மீதி நாளை.

 

மாவீரன்-லு (30-ஜூன்-2011)

தெலுகு டப்பிங் மாவீரன் படம் பார்த்தேன். எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ஒரு படம் வந்தால் தமிழ்நாட்டைப் போலவே அதனை தெலுகு சகோதரர்களும் விழுந்து விழுந்து வரவேற்பது கண்டு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை மொக்கையாக இருந்தாலும் ஹைப் கூட்டப்பட்ட ஃப்ளாஷ் பேக்குக்க்கு தெலுகு சகோதரர்கள் அடிமையாகிவிடுவது கண்டு ‘ஆஹா நம் ரத்தமல்லவா’ என்ற மகிழ்ச்சி ஓங்கியது. 50 ஆண்டுகளாக ஒரே காதல் காட்சியை திரும்ப திரும்ப எடுத்தும் அதை விடாமல் ரசிக்கும் தெலுகு மக்களை நினைக்கும்போது நெக்குருகி நிற்கவேண்டியிருக்கிறது. விறுவிறுப்பு என்னும் பேரில் அடுத்தடுத்த காட்சிகளிலேயே அடுத்தடுத்த சம்பவங்கள் தடால் தடால் என நடப்பது கண்டு, நம் உற்ற தோழன் தெலுகு திரைப்படமே என்ற நினைப்பு வந்து நம் நெஞ்சை மயிலிறகால் வருடுகிறது. மறக்காமல் பாருங்கள் மாவீரன். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை டப்பிங் திரைப்படம். வசனம் படு பிரமாதம். ப்ராணன் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் மாவீரன் படத்துக்கே 10 டிக்கெட் இலவசம். இதுபோக சென்னைத் தமிழும் உண்டு. ஆஹா. அட்டகாசம். அதிலும் ஹீரோ போட்டிருக்கும் செயின் பல இடங்களில் பூணூலை ஞாபகப்படுத்துகிறது. சிரஞ்சீவிகாருவின் மகன்காரு நடித்து படம்காரு வந்திருக்கிறது. தெலுகுகாருகள் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்களாம். தமிழ்காருகளை நம்பி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நாமும் தமிழ்காருகள் ஆவோம். ஆல் தெலுகு வணிக சினிமா ரசிகர்காருகளுக்கு நம் வந்தனமுலு.


ஜூன் 26, 2011

விடுதலைப் புலிகள் இருந்தபோதுகூட இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் ஆதரவு என்பதே புலிகள் ஆதரவுதான் என்னும் ஒரு மாயை நிலவியதால், அதிலிருந்து விலகி நிற்க விரும்பிய தமிழகத்தமிழர்களே அதிகம். இன்று புலிகள் தோற்கடிப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பற்றிப் பேசவும் அவர்களுக்காக குற்றவுணர்ச்சியுடன் வருந்தவும் ஆயத்தமாகும்போது, மீண்டும் புலி ஆதரவு கோஷம் தலை தூக்குகிறது. இது நிச்சயம் தமிழகத் தமிழர்களை பின்னடைவு கொள்ள வைக்கும். தமிழகத் தமிழர்களின் ஆதரவே தேவையில்லை என்று எண்ணுபவர்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக தமிழர்களின் ஆதரவும் முக்கியம் என்று எண்ணுபவர்கள், இந்த புலி ஆதரவு இல்லாமல், தமிழகத் தமிழர்களின், இந்தியர்களின் ஆதரவைக் கோரும் வகையில் செயல்படுவது நல்லது. புலி ஆதரவு என்பது இன்று வரையில் தமிழகத் தமிழர்களுக்கு ஆகாத ஒன்று. இதனை மனத்தில் கொண்டு ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செயல்படுவதே புத்திசாலித்தனம். புலி ஆதரவு இல்லாமல், அதே சமயம் ஈழத் தமிழர்களுக்காக, அவர்களின் இன்னல்களுக்காக மெழுகுவத்தி ஏற்றிய அனைவருக்கும் நன்றிகள். இனி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கப் போவது புலி ஆதரவையா அல்லது ஈழத் தமிழருக்கான ஒருமித்த ஆதரவையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

 

ரஜினி பத்தி நெண்டே நெண்டு வரி (17-ஜூன்-2011)

ரஜினி டிஸ்சார்ஜ் ஆனதும் முதன்முதலாக ஜெயலலிதாவிடம் பேசியதைத் தொடர்ந்து நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் கடும் மனநெருக்கடி அடைந்து ரஜினியின் மனநிலை தொடங்கி நம்பகத்தன்மை வரை அலசி எதற்குமே ரஜினி லாயக்கில்லை என்ற உண்மையை உடைத்துப் போட்டு வடிவேலு போன்ற மன உறுதி கூட இல்லாதவர் என்றெல்லாம் பேசி தங்கள் கறாரான பார்வையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி எங்கே நாம் பேசியது ரஜினி ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து முடிந்த அளவு அவர்களுக்குத் தெரியுமாறு தனது மீது வெளிச்சம் அடித்து குட்டிக்கரணம் அடித்து முடித்து ஏன் கருணாநிதி கூடவே இருந்து ஜால்ரா அடிக்கும்போதே உனக்கு தெரியலையா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அட அப்பவே ஏன்யா நீ கேக்கலை என்ற பதில் கேள்வியையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை முடிந்த அளவு திட்டி ஓய்ந்த ஒரு காலையில் பார்த்தால்

 இந்த ’மூளைகெட்ட பிஸினஸ்மேன்’ ரஜினிப்பய இன்று காலை கருணாநிதியையும் அழைத்து பேசியிருக்கிறார். இப்போதே அதே நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் மீண்டும் முதல் இடத்தில் தொடங்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டு நான் கலவரப்பட்டு நிற்கும் வேளையில் சொல்வதெல்லாம், உங்க மேல டார்ச் அடிச்சுக்குங்க, அது உங்க உரிமை, ஆனா என் முன்னாடி ஆடாதீங்க என்பதுதான்!

Share