படிக்க வேண்டியவை

<< >>

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம்.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது. மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும்,

Share

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் இவ்விஷயத்தில் கறாராக இருப்பார்கள். காரணம் பெரிய பட்ஜெட்.

கலை விஷயத்தில் கவனமாகவும் பிரமாண்டமாகவும் தயாரிக்கப்படும் படங்கள் காட்சி ரீதியாகப் பார்வையாளனுக்குக் கடத்தும் பல விஷயங்கள் முக்கியமானவை. சர்தார் உதம் இந்த விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையாக வந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.

படத்தைப் பொறுத்தவரை, திரைக்கதை ரிவர்ஸ் பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஒரு சீக்கிய இளைஞன் 20 வருடங்கள் காத்திருந்து பழிவாங்குகிறான் என்பது எப்போதுமே நம்மை வியக்கச் செய்யும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வுக்குள்ளேயே ஒரு கதை இருக்கிறது. ஆனால் இதைத் திரைப்படமாக எடுப்பது சுலபமல்ல. பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில், முதலில் ஜாலியன்வாலா பாக் நிகழ்வைக் காட்டிவிட்டு, இறுதிக்காட்சியாக மைக்கேல் ஓ டயரை (ஜாலியன்வாலா பாக் கொலைக்கு உத்தரவிட்டவர்) கொல்வதைக் காட்டுவதுதான் சிறப்பாக இருக்கும்.

ஆனால் இப்படத்தில் முதல் காட்சியிலேயே மைக்கேல் டயரை உதம் சிங் கொல்வதைக் காட்டிவிட்டார்கள். பின்னர் படம் துப்பறிவு வகைத் திரைப்படம் போல நகர்கிறது. உதம் சிங்கை பிரிட்டிஷ் போலிஸ் எப்படி விசாரிக்கிறது, ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதெல்லாம் அணுஅணுவாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் உதம் சிங்கின் வாழ்க்கை நான்-லீனியராக விரிகிறது. இறுதிக்காட்சியாக ஜாலியன்வாலா பாக் படுகொலை வருகிறது. இதுவே படத்தின் மையம் என்பதால் மிக நீண்ட காட்சியாக இதை எடுத்திருக்கிறார்கள். கண்முன்னே நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்பதால் பதைபதைப்புடன் இதை நாம் பார்க்கிறோம்.

முடிவு இதுதான் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்ற வகைத் திரைப்படம்தான் இது. இருந்தாலும், வழக்கு விசாரணை, சித்திரவதையை இத்தனை தூரம் காண்பித்து, அதையும் விறுவிறுப்பாக எடுத்திருப்பது ஆச்சரியம்தான். மைக்ரோ விஷயங்களில் அதீத கவனம் எடுத்திருப்பதும், வழக்கு விசாரணைகளில் வரும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மைக்கு அருகில் இருப்பதும் இப்படத்தை முக்கியமானதாக்குகின்றன.  உதம் சிங் தன் கையில், ராம் முஹம்மத் சிங் ஆசாத் இன்று பச்சை குத்தி இருப்பதும், நீதிமன்ற விசாரணையின்போது உதம் சிங்கின் தரப்பு பத்திரிகையில் வரக்கூடாது என்று நீதிபதி சொல்வதும், அப்போது உதம் சிங், ‘பிரிட்டிஷ் இம்பீரியலிஸம்’ ஒழிக என்று கத்தியதும் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கௌஷல் பிரமாதமாக நடித்திருக்கிறார். இயக்கம் ஷூஜித் சர்க்கார். தமிழர்களுக்கு அறிமுகமானவர்தான். இவரது திரைப்படமான ‘மெட்ராஸ் கஃபே’ ஈழத் தமிழர்களை மட்டம் தட்டிய வகையில் இருந்ததற்காகப் பெரிய பிரச்சினை அப்போது உருவானது. இந்திய அளவில் முக்கியமான திரைப்படமான பின்க் (தமிழில் நேர்கொண்ட பார்வை) இவரது இயக்கத்தில் உருவானதுதான். இவர் இயக்கிய இன்னொரு திரைப்படம் ‘அக்டோபர்’ நம் பாலுமகேந்திராவின் இயக்கத்தைப் போன்ற ஒரு திரைப்படம். விக்கி டோனர் (தமிழில் தாராள பிரபு) இவர் இயக்கியதுதான்.

நம் நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களின் படத்தைப் பார்க்க வேண்டியது, அதுவும் இத்தனை தரமான படத்தைப் பார்க்க வேண்டியது நம் கடமை.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியல் காலகட்டம்.

இந்த மூன்று காலகட்டங்களிலும் சாவர்க்கரின் பங்களிப்பை ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வருவது பெரிய சவால். சாவர்க்கரைப் பற்றி மட்டும் திரைப்படம் எடுத்துவிடமுடியாது என்பது இதில் இன்னொரு பிரச்சினை. சாவர்க்கரால் நிகழ்ந்தவை, சாவர்க்கரால் தூண்டப்பட்டவர்கள் செய்த புரட்சிகள் என எல்லாவற்றையும் காண்பித்தாக வேண்டும். இப்படிக் கம்பி மேல் நடக்கும் வித்தையில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

படத்தை சாபேகர் சகோதரர்களின் வீரச் செயல்களில் ஆரம்பித்தது நல்ல திரைக்கதை. சாபேகர் சகோதரர்களின் தியாகத்தையும் சாவர்க்கர் சகோதரர்களின் தியாகத்தையும் நான் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரசின் ஒடுக்குமுறைகளில் சிக்குவது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அதிலும் சாபேகர் சகோதரர்கள் மூவரும் ஒரே வாரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டதெல்லாம் எப்பேற்பட்ட பலிதானம்!

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாகக் கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான். 2001ல் ஹிந்தியில் வந்த சாவர்க்கர் திரைப்படத்தைச் சில மணித்துளிகள் பார்த்தேன். வெறும் வசனங்களால் ஆன படம் அது. ஆனால் இத்திரைப்படம் காட்சிகளாலும், தீவிரமான ஆழமான சுருக்கமான வசனங்களாலும் ஆனது.

சாவர்க்கரின் குடும்பத்தின் தியாகத்தை எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் வைத்தது சிறப்பு. கணேஷ் சாவர்க்கர் தன் தம்பி விநாயக் (வீர) சாவர்க்கரிடம், என்னை ஒரு முறை தழுவிக்கொண்டு விடை கொடுக்க மாட்டாயா என்று கேட்கும் தொடக்க காட்சியில் உணர்ச்சிவசப்பட்டேன். அண்ணன் தம்பிகளின் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை, சொற்பமான காட்சிகளில் கடைசி வரை சிறப்பாகக் காண்பிக்கிறார் இயக்குநர்.

இண்டியா ஹவுஸ் என்ற பெயர் தரும் கிளர்ச்சியை, இந்திய சுதந்திரத்தின் ஆயுதப் போராட்டத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள். சாவர்க்கர் இண்டியா ஹவுஸில் ஷ்யாமாஜியுடன் சந்திக்கும் காட்சியெல்லாம் அபாரம். அங்கே ஆயுதமேந்திப் போராட மண்டையம் ஆச்சார்யா, மதன்லால் திங்ரா என்ற பெரும்படையே இருக்க, அனைவரும் ஒன்று கூடி அங்கேயே பெரும் போராட்டத்துக்கான விதையை விதைக்கிறார்கள். ஆங்கில அரசின் மண்ணிலேயே முதல் அரசியல் கொலை நிகழ்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்கும் கையேட்டைக் கைப்பற்றுகிறார் சாவர்க்கர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் குதிராம் போஸ் குண்டு வீசுகிறார். வரலாற்றின் நெடுக நடந்த இந்த நிகழ்வுகளை எப்படித் திரைக்கதையாக்கினார்கள் என்பது ஆச்சரியம்தான். தொடக்க காட்சி முதல் சார்வக்கர் அந்தமான் செல்லும் இடைவேளை வர துளிகூட தொய்வில்லை. இத்தனை ஆவேசமான திரைக்கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு இத்திரைப்படம் வெறும் நேம் டிராப்பிங் அனுபவமாக உறையக் கூடும். ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படும் காட்சி இரண்டு நொடிகளே வருகின்றன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பெரும் வரலாறு உள்ளது. தூக்கில் தொங்கவிடப்படுபவர்களின் வயது சராசரியாக இருபது. மீசை வளரும் முன்னே ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சாகிறார்கள். இக்காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மேடை நாடகப் பாணியில் இருந்தாலும் நம்மை அசைத்துப் பார்க்கிறது.

அந்தமானில் சாவர்க்கர் படும் வேதனைகள் இடைவேளைக்குப் பிறகான ஒரு மணி நேரத்தில் காட்டப்படுகின்றன. அங்கே சாவர்க்கர் அடையும் மனரீதியான நெருக்கடிகள் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதிலும் ரெஜினால்ட் கிரடாக்கும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் காட்சி அபாரம். ஆனாலும், அந்த நெருக்கடியிலும் சாவர்க்கர் அங்கே இருந்தபடியே சிறைக்குள் ஆற்றிய பெரும் சாதனைகள் சரியாகக் காட்டப்படவில்லை. சிறிய சிறிய காட்சிகளாக அவை நகர்ந்து போகின்றன. இதை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம். அதேபோல் அந்தமானில் நடந்த கர்வாப்ஸியின் அவசியத்தையும் இன்னும் சிறப்பாகப் படமாக்கி இருக்கலாம். ஆனால் சாவர்க்கர் அந்தமானில் பட்ட கஷ்டங்களை மட்டும் காட்டவேண்டும் என்று அணுகி இருக்கிறார். ஒருநோக்கில் அதிலும் தவறில்லை என்றே சொல்லவேண்டும்.

படத்தின் அடுத்த நகர்வு, காந்திஜி கொலை காலகட்டம். இப்போது சாவர்க்கரின் வீடு, ஆயுதம் ஏந்திப் போராடும் வீரர்களின் உறைவிடம் போல ஆகிறது. கோட்ஸே உட்பட. காந்தி கொல்லப்படுகிறார். சாவர்க்கர் கைதாகிறார். இவையெல்லாம் டாக்குமென்ட்ரி போலச் செல்கிறது. மேடை நாடகப் பாணி என்றாலும், இதையும் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநராகவும் நடிகராகவும் ரந்தீப் ஹூடா செய்திருப்பது மாபெரும் சாதனை. சாவர்க்கரைப் பற்றிய சிறப்பான திரைப்படம் இது. ரந்தீப் ஹூடா சாவர்க்கராகவே மாறி இருக்கிறார். சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை இப்படி ஒரு திரைக்கதையாக மாற்றியதற்காக இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே போல் சாவர்க்கரின் 1857 புத்தகம் எப்படி ஆயுதப் போராட்டக்காரர்களின் கீதையாக மாறியது என்பதைக் காட்சிரீதியாக அட்டகாசமாகப் படமாக்கி இருப்பதையும் பாராட்டவேண்டும்.

இந்தத் திரைப்படத்தின் போதாமைகள் என்ன? இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய சில செய்திகள் அவசர அவசரமாகக் கடந்து போவது. சில நிகழ்வுகள் முன்னும் பின்னும் இருப்பது. சாவர்க்கர் போன்ற ஒரு தலைவரின் படத்தில் இதைத் தவிர்க்க முடியாது.

இப்படத்தின் பெரிய சறுக்கல் எது? காந்தியும் நேருவும் கோகலேவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம். காந்தியை ஒரு கோமாளி போலவும், ஹிந்துக்களை வஞ்சித்தவர் போலவும் காண்பிக்கிறார்கள். இது அரசியல்ரீதியாகவும் நிஜத்திலும் தவறு. இண்டியா ஹவுஸிலும், பின்னர் சாவர்க்கரின் வீட்டிலும், காந்தியும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் வசனங்களில் சாவர்க்கர் பேசுவது, காந்தியின் மீது வன்மத்தைக் கொட்டுவது போல் இருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து நிஜத்தில் சாவர்க்கர் தன்னுடைய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்தில் மகாத்மா காந்திஜி என அவரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரைப்படத்தில் கோகலே கோமாளி போல் சிரிப்பது அனாவசியம். நேருவும் அப்படியே. காந்தியைத் தவிர மற்றவர்களைப் பற்றிய காட்சிகள் எல்லாம் ஓரிரு நொடிகளே வருகின்றன என்றாலும் தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவுக்கான சுதந்திரம் பற்றி காந்தியின் அஹிம்சைப் போராட்டப் போராளிகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு ஆயுதப் போராளிகள் சொல்லப்படவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை. இந்த இரண்டு வழிகளும் சேர்ந்தே நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன என்பதுவும் உண்மை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் காந்தியைப் போன்ற ஒருவரே மக்கள் தலைவராக இருக்கமுடியும் என்பதும் உண்மை. ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் பெயர்கள் கூட நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டதெல்லாம் அரசியல். அந்தப் பெருங்குறையை இத்திரைப்படம் ஓரளவுக்குக் குறைக்கிறது.

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம்.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது.

மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும், ஒரு பெண்ணுலகைச் சமைப்பதில் பெரும்பாலான ஆண்கள் எத்தனை சுயநலவாதிகள், எப்படி ஆண்கள் எப்போதும் ஆண்கள் என்பதையும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வசனத்திலும் இத்தனை இயல்பாக இத்தனை பலமாகச் சொல்லும் வேறொரு படம் இல்லை என்றே சொல்லலாம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைச் சுற்றி ஆண்கள் என்ன என்ன கதைகளை எல்லாம் புனையக் கூடும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம். பொதுவாக இப்படிப்பட்ட படங்களில் வரும் பிரசாரத் தொனி துளி கூட இல்லை என்பதே இப்படத்தின் ஆதார பலம்.

இப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த நாடகத்தில் நடித்த அத்தனை ஆண் நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நாடகத்தின் கதாநாயகி’ என்று. படத்துக்கும் அது பொருந்தும். அத்தனை ஆண் நடிகர்களும் அட்டகாசமாக நடிக்க, அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் கதாநாயகி. இந்த வருட சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த நடிகை, சிறந்த திரைகதை எனப் பல விருதுகளையும் வெல்லப் போகும் படமாக இது அமைந்தால் வியப்பதிற்கில்லை.

முதல் அரை மணி நேரத்தைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அந்த அரை மணி நேரத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பின்னால் திரைக்கதையில் பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது. டோண்ட் மிஸ் இட் வகையறா படம்.

மலையாளிகள் எங்கோ உச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

2022ல் வெளியான Three of us -ஹிந்தித் திரைப்படத்தின் கதாநாயகி, 2023ல் வெளியான டோபி – கன்னடத் திரைப்படத்தின் கதாநாயகி சைத்ரா, 2024ல் ஸரின் ஷிஹாப் என வரிசைகட்டி கதாநாயகிகள் கலக்குகிறார்கள். இந்தப் படம் 2023லேயே பதியப்பட்டிருந்தால், சிறந்த நடிகை விருதைப் பெறுவதில் சைத்ராவுக்கும் ஸரினுக்கும் பெரும் போட்டி இருக்கும்.

மலையாளத்தின் முக்கியமான திரைப்படமான ‘யவனிகா’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் இந்தப் படம் இன்னும் உயரப் போய்விட்டது.

அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

ஃபேலிமி (M)

Falimy (M) – பார்க்கலாம். சில இடங்களில் மனம் விட்டுச் சிரிக்கலாம். அந்த இடங்களுக்காகப்‌ பல மொக்கைக் காட்சிகளைச் சகித்துக் கொள்ள வேண்டும். காசிக்குச் செல்லும் கதைக்குள் கல்யாணத்தை நுழைத்து மீண்டும் காசிக்கு டிராக் மாற்றுகிறார்கள். காசியில் அப்பாவும் பையனும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் வசனம் அருமை. இரண்டு பெருசுகள் ஜன்னல்‌வழியாகப் பேசும் ஃப்ரேம் மனதைப் பிசைகிறது. மனதளவில் பிரிந்து கிடக்கும் குடும்பத்தை காசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கிறது. காசிக்குச் சாலையில் செல்லும் காட்சிகளிலும் இறுதிக் காட்சியிலும் குபீர் சிரிப்பு உத்தரவாதம். அதற்காக முழுப் படத்தையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்றால், கஷ்டம்தான். அதுவும் தமிழ் டப்பிங் அல்லது சப் டைட்டிலை மட்டுமே நம்பிப் பார்க்கப் போகிறவர்கள் திண்டாட்டம்‌தான். மலையாளம் தெரிந்தவர்கள் முயன்று பார்க்கலாம்.

Share

சங்கரன் அண்ணனின் கடிதம்

சங்கரன் அண்ணனின் கடிதம்

“ஏல… ரத்தம் சுண்டவும்தான் எங்க நினைப்பு வருது என்னல? நானும் உன் வரிசியாரும் இருக்கமா செத்தமான்னு கூட பாக்கல இத்தனை நாளு. ஆனா திடீர்னு எங்க கல்யாண போட்டோவை பெருசாக்கி அனுப்பி வெச்சிருக்க. என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தா, ஒன் பொண்ணுக்கு வெளக்கு கல்யாணம் வைக்க போறியாம்லா? ஒன் சிநேகிதன் எல்லாத்தையும் சொல்லிட்டாம்டே. வேலைக்கு மெட்ராஸுக்கு போனவன் எங்க வீட்டுப் பக்கம் திரும்பி கூட பாக்கல. ஆனா இப்ப மட்டும் எங்க உறவு எனக்கு தேவைப்படுது என்னா? அப்ப இத்தனை நாள் ஒன்கிட்ட என் அட்ரஸ் இருந்திருக்கு! எலேய், நான் ஒனக்கு பெரியம்மை மகனா இருக்கலாம். ஆனா நீ பொறந்தப்ப ஒன்னை தூக்கி வளத்தவம்ல நானு. நீ மங்கயர்க்கரசி ஸ்கூலுக்கு எல்கேஜி போனப்போ ஒன்னை மொத நாளு கொண்டு போயி விட்டவம்ல இந்த சங்கரன் அண்ணன். அது சரி, இதெல்லாம் ஒங்கம்மைக்கே ஞாபகம் இல்ல. ஒனக்கு எங்க ஞாபகம் இருக்கப்போது. நல்ல சித்தி நல்ல புள்ளடே! இப்படில்லாம் சொல்றானே, நாளைக்கு நம்ம பொண்ணுக்கு வெளக்கு கல்யாணத்துக்கு வந்து நிப்பானோ மாட்டானோன்னு நினைக்காத. உம் பொண்டாட்டி மாதிரி இல்லடே எம் பொண்டாட்டி. நீ கூப்ட்டா நேர்ல நாம போயி நின்னு நம்ம பொண்ணு ஃபங்சன நடத்திக் கொடுக்கணும்னுட்டா உங்க வரிசியாரு. கேட்டுச்சாடே? மெட்ராஸுக்கு போயிட்டா கொம்பு மொளச்சிராதுடே… நம்மூருக்கு வந்துதான் ஆவணும். அது சரி, சாதி சனம் நெனப்பெல்லாம் பொண்ணு ஒக்காரப் போறாங்கறப்பதான் வருது என்னல? ஆனாலும் என் கல்யாண நாளு வரப் போகுதுன்னு தெரிஞ்சி நீ எப்பவோ எடுத்த போட்டாவ பெருசாக்கி அனுப்பினேல்லா? அது பெரிய விஷயம்தாண்டே. ஒத்துக்கிடுதேன். ஆனா இன்னொனும் சொல்லுதேன்…”

கடிதம் இன்னும் நீண்டுகொண்டே போனது. “சங்கரன் அண்ணன் என்ன எழுதிருக்கான்?” என்று கேட்ட அம்மாவை முறைத்த சுரேஷ் கோபமாகச் சொன்னான், “ரத்தம் சுண்டிட்டுங்கான். எல்லாம் ஒன்னால. எப்பமோ ப்ரிண்ட் போட்டு வெச்ச போட்டோ வீட்டை அடைச்சிக்கிட்டு கிடக்கு, கிழிச்சி தூரப் போடலாம்னு சொன்னேன். கல்யாண போட்டோவை கிழிப்பாவளா அனுப்பி வைன்னு சொன்னியேன்னு அனுப்பினா, அவன் என்னம்லாம் எழுதிருக்கான்னு பாரு” என்றபடி கோபமாகக் கடிதத்தை அம்மாவிடம் நீட்ட, அவள் கேட்டாள், “அவன் இன்னமும் கோட்டிக்காரனாத்தான் அலைதானால?”

Share

ஒரு தமிழ்ப் புத்தகம்

ஒரு தமிழ்ப் புத்தகம். 40 பக்கங்கள் படித்தேன். முக்கியமான எழுத்தாளர். பதிப்பகக்காரர் நண்பர். அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காகக் கிசுகிசு போலச் சொல்கிறேன். அந்தக் காலக் கதை என்றால், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்ததோ அதை ஒட்டிய ஒரு பேச்சுவழக்கு நம் மனதில் பதிவாகி இருக்கிறது. புராண காலம் என்றால் ஒரு பேச்சு வழக்கு, அரசர் காலம் என்றால் அதற்கு ஒரு பேச்சு வழக்கு என நமக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கிறது. அதை மாற்றுவதில் தவறில்லை. சரியான ஆதாரத்தோடு சரியான பின்பலத்தோடு மாற்றினால் பரவாயில்லை. அதை ஒரே அடியாக மாற்றுகிறேன் என்பதும், அதற்கும் தாண்டி போவதும் நிச்சயம் நம்மைப் புத்தகத்திலிருந்து அந்நியமாக்கிவிடும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. அதிலும் குறிப்பாக, கடவுள் ‘இப்ப பாருடா’ என்று சொல்லிவிட்டு ‘வில்லனை’ அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமை எனக்கில்லை.

Share

மே அடல் ஹூம்

மே அடல் ஹூம் (H) – அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் வாஜ்பாயி போன்ற உடல்மொழியில் பேசும் பங்கஜ் த்ரிபாதி சட்டென்று மனதில் ஒட்டிக்கொள்கிறார். ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் சுமப்பவர்கள் இருவர், ஒரு வாஜ்பாயி, இன்னொருவர் பங்கஜ் த்ரிபாதி.

பயோ பிக் படங்கள் எடுப்பதில் சிக்கல்கள் அதிகம். அதிலும் வாஜ்பாயி போன்ற நீண்ட நெடும் அரசியல் வாழ்க்கை கொண்டவர்களின் வரலாற்றை எடுப்பது எளிதல்ல. அட்டன்பரோவின் காந்தி அந்த வகையில் ஒரு மைல்கல். காந்தியின் நீண்ட நெடும் போராட்ட வாழ்க்கையை மூன்று மணி நேரத்துக்குள் எடுப்பது, அதிலும் நேர்த்தியாக எடுப்பது, அதிலும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் எடுப்பது என்று எல்லா வகையில் அந்தப் படம் ஒரு சாதனை. அப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேண்டும் என்றால் அதற்கான உழைப்பும் பணமும் தேவை. மே அடல் ஹூம் படம் அந்த அளவுக்கு வரவில்லை. ஆனால் படம் பார்த்து முடிந்ததும் படத்தைக் குறித்தே மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஓர் உணர்வுநிலையை ஏற்படுத்திவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மே அடல் ஹூம் படத்தைப் பார்த்து வாஜ்பாயியையோ அவரது கால அரசியலையோ இந்திய அரசியலையோ புரிந்துகொள்ள நினைத்தால் பைத்தியம்தான் பிடிக்கும். இது அரசியலைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கான படமல்ல. இந்த அரசியல் ஏற்கெனவே பற்றித் தெரிந்தவர்களுக்கான படம். ஒரு வகையில் ஆவணப் படம் போன்றது. அந்த எண்ணத்துடன் இப்படத்தை அணுகுவது நல்லது.

வாஜ்பாயியின் தனிப்பட்ட ஆரம்ப கால வாழ்க்கையிலும், அந்தப் பெண்ணைப் பின்னர் வாஜ்பாயி பார்க்கும் காட்சிகளையும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கிறார்கள். இது பெரிய மைனஸ் பாய்ண்ட். இரண்டரை மணி நேர பயோ-பிக்கில் முதல் அரை மணி நேரம் எத்தனை முக்கியமானது? இருவர் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. தமிழின் முக்கியமான முயற்சி. ஆனால் இந்தப் படத்தில் முதல் அரை மணி நேரக் காட்சி சலிப்பை உண்டாக்குகிறது.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஜன சங்கத்தை ஆரம்பிக்கும் காட்சியில் இருந்து படம் வேகமெடுக்கிறது. அதிலும் முக்கியமாக குருஜி கோல்வல்கரிடம் அவர், ‘உங்களிடம் அமைப்பு இருக்கிறது. என்னிடம் கனவு இருக்கிறது’ என்று சொல்லும் காட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்காரர்களுக்கு நிச்சயம் புல்லரிப்பை ஏற்படுத்தும். இப்படிப் பல காட்சிகள் ஆங்காங்கே நன்றாக இருக்கின்றன.

இந்தியாவையே அரசியல் ரீதியாக உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் நிமிடங்களில் கடந்து போகின்றன. வேறு வழியில்லை.

அத்வானிக்கும் வாஜ்பாயிக்குமான நட்பு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அத்வானியாக நடிக்கும் நடிகரின் தேர்வு இன்னும் மெச்சூர்டாக இருந்திருக்கலாம்.

நேருவை மொத்தமாக இரண்டு நிமிடங்கள்தான் காட்டுகிறார்கள் என்றாலும் சிகரத்தில் வைத்துவிட்டார்கள். அதிலும் நேருவின் புகைப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தே தீரவேண்டும் என்று வாஜ்பாயி சொல்லும் காட்சி முக்கியமானது.

இந்திரா காந்தியை அவரது எண்ணம் போலவே காட்டுகிறார்கள். எமர்ஜென்ஸி முடிந்து, ஜனதா வெற்றி பெற்று, சரண்சிங் உள்ளடி வேலை செய்து, ஜனதா கட்சி ஆட்சியை இழந்த பின்பு நடக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உதயமாகும் காட்சியும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாஜ்பாயி மனம் இறுகிக் கிடக்க, அவரே எதிர்பார்க்காமல் அவரை பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கும் காட்சியும் முக்கியமான புல்லரிப்புக் காட்சிகள்.

பொக்ரான் அணுஆயுதச் சோதனை அத்வானிக்கே தெரியாமல் நடந்தது என்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவறு. எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் தெரியும். படத்தில் அந்தக் காட்சியின் சுவாரஸ்யத்துக்காக அப்படி வைத்திருக்கிறார்கள் போல. ஆனால் அத்வானி இந்தியாவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். உள்துறை அமைச்சர். அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.

கார்கில் போர் வெற்றியுடன் திரைப்படம் முடிகிறது. அடுத்த தேர்தலில் வாஜ்பாயி பிரதமராகும் தருணத்துடன் முடித்திருக்கலாம்.

மிஸா கைதில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் காண்பிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பெயர் மட்டும் வருகிறது. வாஜ்பாயி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் தோற்கக் காரணமாக இருந்தவர். படம் முடிந்து பலரது புகைப்படங்களைக் காண்பிக்கும்போது வாஜ்பாயியும் ஜெயலலிதாவும் இருந்த புகைப்படத்தைக் காண்பித்தார்கள். கருணாநிதியும் வாஜ்பாயியும் கூட்டணியில் இருந்தவர்கள். திரைப்படத்தில் கருணாநிதியின் படம் கண்ணில்பட்டதாக நினைவில்லை.

மிக முக்கியமான விஷயம், மோடியின் புகழ் பாடப்படவில்லை. கவனமாகத் தவித்திருக்கிறார்கள். மோடி என்ற பெயர் கூட இல்லை. வாஜ்பாயியின் கனவு அனைத்தையும் மோடி நிறைவேற்றி இருக்கிறார் என்று பார்வையாளர்களே உணரும் வண்ணம் உள்ளது திரைப்படம்.

வாஜ்பாயி ஒரு கவிஞர் என்பதை நிலைநிறுத்தும் காட்சிகள் தொடக்கம் முதல் இறுதி வரை வந்த வண்ணம் உள்ளன. படத்தின் வேகத்தைக் குறைக்கும் விஷயம் இது. இதையும் வாஜ்பாயியின் இளமைக்கால வாழ்க்கையையும் சுருக்கி இருக்கலாம்.

படத்தின் மேக்கிங், நடிகர்கள் தேர்வு என எல்லாமே சராசரித் தரம்தான். பின்னணி இசை மோசம். ஆனால் பங்கஜ் த்ரிபாதி மட்டும் விதிவிலக்கு. அதிலும் அவரது உடல்மொழி அபாரம். வாஜ்பாயியின் ஆவி புகுந்துகொண்டது போல் நடிக்கிறார். படம் சலிப்பேற்படுத்தும் போதெல்லாம் நம்மைக் கட்டி இழுத்துத் திரைப்படத்துக்குள் கொண்டு வருபவர் பங்கஜ் த்ரிபாதி. இந்த வருடத்தின் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

இது அனைவருக்குமான திரைப்படமா என்றால் இல்லை. இந்திய அரசியல் வரலாறு கொஞ்சமாவது தெரிந்தவர்களுக்கான திரைப்படமா என்றால் ஆம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினருக்கான திரைப்படமா என்றால், நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். முக்கியமாகச் சில காட்சிகள் தரும் புல்லரிப்புக்காக.

zee5ல் கிடைக்கிறது.

Share

Merry Christmas (H)

Merry Christmas (H) – அந்தாதூன் நினைவுக்கு வர, ஶ்ரீராம் ராகவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக இதைப் பார்த்தேன். ஜனவரியிலேயே வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு கூகிளில் தேடினால் இந்தப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்திருந்தும் இப்படி ஒரு படம் வந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. படத்தின் தொடக்கத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடிக்கும்போது இருவருக்கும் இடையே ஓர் உறவு மலரும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே ஒரு திருப்பம். பின்னர் அது த்ரில்லர் படமாகிறது. எப்படி ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவனிடம் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு விடையும் கிடைக்கிறது.

படம் எடுத்த விதம் அருமை. நீட்டான திரைப்படம் என்றுதான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதி ஹிந்தியில் பேசினாலும் தமிழ் போலவே ஒலித்தது. படத்திலும் அவர் தமிழ்க்காரர் என்பதால் அது இயல்பாகவும் தோன்றியது. அலட்டலே இல்லாமல் நடித்தார். கத்ரினா கய்ஃபும் பிரமாதமாக நடித்தார். கடைசி பத்து நிமிடம் இசை மட்டுமே என்று என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். மெல்ல செல்லும் திரைப்படம் மெல்ல முடிந்துவிடுகிறது. பிரெஞ்சு நாவலைத் திரைப்படமாக்கி இருப்பதாலோ என்னவோ, வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைத்தது.

அந்த வீடு, படத்தின் கலர் டோன், நடிகர்களின் நடிப்பு – இவற்றுக்காகப் பார்க்கலாம். தமிழில் இந்த அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

Share