Sister Subhalakshmi

சகோதரி சுபலக்ஷ்மியின் சுயசரிதை, சென்ற வருடம் நான் படித்த புத்தகங்களுள் முக்கியமானது. எழுத்தாளர் அம்பை பதிப்பாசிரியராக இருந்து, ஸ்பாரோ மற்றும் சுவாசம் பதிப்பகம் இணைந்து கொண்டு வந்த முக்கியமான புத்தகம் அது.

சகோதரி சுபலக்ஷ்மி மிகச் சிறிய வயதிலேயே, அதாவது திருமணம் என்றால் என்ன என்று அறியாத வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு விதவையானவர். திருமணம் என்பது ஒரு விளையாட்டு என்பது போலத்தான் அந்தச் சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு இருந்திருக்கும். இதில் விதவை என்றால் என்ன தெரிந்திருக்கும் என்பதை நாம் யோசித்துப் பார்க்கலாம். உண்மையில் இதை யோசிக்கும்போது அந்தப் புத்தகத்தைப் படிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

ஒரு பெண் குழந்தை – நிஜமாகவே குழந்தை – விளையாடும்போது உடன் விளையாடும் சிறுமிகள், நீ தாலி அணிந்து கொள்ளக் கூடாதே என்று சொல்ல, அந்தக் குழந்தை ஓடிப் போய் தாலியை அம்மாவிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு விளையாட வர, அதைப் பார்த்த மற்ற சிறுமிகள், உன் தாலி எங்கடி என்று விளையாட்டாகக் கேட்க, அந்தப் பெண் மீண்டும் போய் தாலியைப் போட்டுக்கொண்டு விளையாட வரும் அந்த இடம், கண்ணீரை வரவழைத்து விட்டது. அந்தச் சிறுமியைப் பற்றிய குறிப்பில் இப்படிச் சொல்கிறார், இடுப்பில் அரச்சிலை மட்டும் கட்டி, ரவிக்கை பாவாடை எதுவும் இல்லாமல், கழுத்தில் தாலி மட்டும் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி அவள்.

இன்னொரு இடம், இறந்துபோன ஒரு விதவைப் பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்ய வரும் புரோகிதர்கள் அவளுக்குத் தலைமுடி இருப்பதால் அச்சடங்கைச் செய்ய மறுப்பது. வேறு வழியின்றி நாவிதரை வரவழைத்து, அந்தப் பெண்ணின் முடியை மழித்த பின்னர்தான் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

ஆனால் இந்தப் புத்தகம் கண்ணீரைச் சொல்லும் புத்தகம் அல்ல என்பதுதான் இது ஹைலைட்.

கண்ணீரிலிருந்து ஒரு பெண், அதுவும் அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்த பிராமண வைதீகக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், சிறுவயதிலேயே விதவையான ஒரு பெண், எவ்வாறு மேலெழுந்து இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கிறாள், வஞ்சித்த சமூகத்திற்குத் தன்னால் இயன்ற அரும்பெரும் பணிகளை எவ்வாறு செய்கிறார், எப்படி உயரிய கைசர் – இ – ஹிந்த் விருதைப் பெறுகிறார் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.

1948லிருந்து வெளிவந்திருக்கும் இந்தச் சுயசரிதை, அந்தக் காலத்தில் உள்ள பல நடைமுறைகளைக் கண் முன் கொண்டு வருகிறது. இன்று நாம் எந்த அளவுக்கு முன்னேறிவிட்டோம் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சியாக விளங்குகிறது. இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் தொடர்ந்து வருவது, திருமணம் ஆனவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டே இருப்பதைப் பற்றிய குறிப்புகள். அதில் பல குழந்தைகள் இறந்து போகின்றன. சில உயிருக்குப் போராடி பின்னர் எப்படியோ உயிர் பிழைக்கின்றன. ஆயுத கேஸ் என்பதை நாம் முன்பு கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எல்லாம் இந்தப் புத்தகத்தில் பார்க்கலாம்.

அதேபோல் சில சுவாரசியமான சம்பவங்களும் உண்டு. அதில் குறிப்பாக ஒரு வரி, முதல் முதலில் சைக்கிள் வந்தபோது அதற்கு காற்றடிக்கும் வசதி கிடையாது என்றும், கடினமான ரப்பர் டியூப் மட்டுமே உண்டு, அதைத்தான் ஓட்ட வேண்டும் என்பதும். எப்படித்தான் ஓட்டினார்களோ!

சிஸ்டர் சுபலக்ஷ்மி தன்னைப் போன்ற விதவையான பெண்களுக்கு ஒரு காப்பகம் தொடங்குகிறார். அதில் வரும் பிரச்சினைகளை எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஆங்கிலேய அரசின் உதவியுடன்தான் இந்தக் காப்பகம் தொடங்கப்படுகிறது. ஆனால் சமூக ரீதியாகப் பல தடைகள், அதைத் தொடங்குவதிலும் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதிலும் சரி. எண்ணற்ற பிரச்சினைகளை அவர் எதிர்கொள்கிறார்.

ஆனாலும் எவ்விதச் சுணக்கமும் இன்றித் தொடர்ந்து நடத்துகிறார். சித்தி உதவியுடன் அவர் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார். அங்கே இருக்கும் விதவைப் பெண்களுக்கு வாழ்க்கைக் கல்வியையும், ஏட்டுக் கல்வியை கற்றுக் கொடுத்து அவர்களை ஒரு நிலைக்கு உயர்த்துகிறார். 1940களில் இவையெல்லாம் கற்பனைக்கு எட்டாத சாதனைகள்.

பெண்களின் ஹாஸ்டல் இன்றைக்கு இருந்தாலும் கூட அதையொட்டி எத்தனை பிரச்சினைகள் வரும் என்பது நமக்குத் தெரியும். அந்தக் காலத்தில் அதுவும் விதவைப் பெண்கள் காப்பகம் என்னும்போது கூடுதலாக வரும் ரோமியோக்களின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்க்கலாம். அதைப் பற்றிய சில குறிப்புகள் இந்த நூலில் உண்டு.

சிறுவயதுத் திருமணத்தை எதிர்க்கும் சிஸ்டர் சுபலக்ஷ்மி, தன்னுடைய முழுக் கவனத்தையும் அவர்களுக்குக் கல்வி கொடுப்பதில் செலவிடுகிறார். அவர்களுடைய மறு திருமணம் பற்றி அவருக்குச் சில குழப்பமான எண்ணங்கள் தொடக்கத்தில் இருக்கின்றன. ஆனால் அப்போதே சில முற்போக்காளர்கள் விதவை பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சகோதரியிடம் சொல்ல, பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அதற்குச் சம்மதித்து அதையும் முன்னெடுக்கிறார். தொடர்ந்து பல விதவைகளின் மறுமணங்கள் நடைபெறுகின்றன. பலர் நன்றாக இருக்கிறார்கள். சில பெண்கள் தன் குழந்தை மற்றும் தன் கணவனோடு சிஸ்டரை வந்து பார்த்துக் கண்ணீர் மல்க நன்றி சொல்வதெல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள்.

இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது, இன்றைக்குச் சிலரால் அரசியல்சரியுடன் எழுதப்படும் உள்நோக்கம் கொண்ட புத்தகம் போல் அல்லாமல், இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க இயல்பு நிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. எனவே உண்மையான ஆன்மா இருக்கிறது. ஹிந்து மதத்தைப் பீடித்திருந்த குழந்தைத் திருமணத்தையும் அதனால் எழும் இளம் விதவைக் கொடுமைகளையும் மிகக் கடுமையாகச் சாடுகிறார் சகோதரி. அதேசமயம், குடும்பம் என்னும் அமைப்பை அவர் உதறித் தள்ளச் சொல்லவில்லை என்பது முக்கியமானது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டிலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என்பதோடு, கணவன் உயிருடன் இல்லாவிட்டால் மறுமணத்தில் தவறில்லை என்பதிலும் அவருக்குச் சந்தேகம் இருக்கவில்லை. மிக உயர்ந்த சரியான லட்சியம் இதுதான். மயக்கங்களுக்குள் செல்லாமல் யோசித்தால் இதுபுரியும். இதை அன்றே யோசித்திருக்கிறார் சகோதரி.

தன் மதத்தைச் சேர்ந்த குறைகளைச் சொல்லும் சிஸ்டர், தன் மதத்தைக் கை விடுபவரல்ல. எந்த ஒரு காலத்திலும் அவர் தன் மதத்துக்கு மாற்றாக நினைக்கவே இல்லை. குறைகள் களையப்படவேண்டும் என்பது மட்டுமே அவரது சிந்தனை. ஆங்கிலேயர்களின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளி என்பதால், இவர் படிக்கும்போது இவருக்கு உதவும் பல ஆங்கிலேய கிறிஸ்துவர்கள் இவரது அறிவையும் சேவை மனப்பான்மையையும் மெச்சி இவரை கிறித்துவ மதத்திற்கு மாற்றக் கடும் முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் அது அத்தனையையும் தனியாளாக எதிர்த்திருக்கிறார் சிஸ்டர் சுபலக்ஷ்மி.

ஒரு முறை இவரை கிறித்துவ மதத்திற்கு மாற்ற விரும்பும் ஒரு ஆங்கிலேய அதிகாரி இவரிடம் ஹிந்து மதத்தில் உள்ள குறைகளைச் சொல்ல, இவர் மறுநாளே கிறித்துவத்தில் உள்ள குறைகளை எல்லாம் படித்துவிட்டு அந்த ஆசிரியரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதிலிருந்து அவர் சுபலக்ஷ்மியிடம் இப்படிக் கேள்விகள் கேட்பதில்லை. அதேபோல் இவர் சிறியதாக விபூதி வைத்துக்கொண்டு வருவதைப் பார்க்கும் ஓர் ஆசிரியர், அதெல்லாம் எதற்கு, நாளை முதல் அழித்துவிடு என்று சொல்ல, மறுநாளிலிருந்து மிகப் பெரிய பட்டைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். இப்படிப் பல தருணங்கள்.

அதேசமயம் அந்தக் கிறிஸ்துவர்கள் செய்யும் சேவைய்ல் சிறு பங்காவது நாம் செய்ய ஆரம்பித்தால் நம் இந்துச் சமுதாயத்திற்கு எத்தனை நல்லது நடக்கும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. மதம் மாற்றம் ஒரு நோக்கமாக இருந்தாலும், அவர்கள் செயலில் மனிதாபிமானமும் இருப்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

கணவன் இல்லாதவர்கள் சஷ்டியப்த பூர்த்தி கொள்ளலாமா என்பது இன்றுவரை நிலவும் ஒரு கேள்வி. ஆனால் 1946லேயே சிஸ்டர் சஷ்டியபத பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார்.

இப்படிப் பல தகவல்களுடன் ஒரு பொக்கிஷமாகத் திகழ்கிறது சிஸ்டரின் சுயசரிதை.

இதில் அம்பையின் பங்கு என்ன?

அம்பை சிறந்த எழுத்தாளர் என்பதோடு, ஒரு பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்டும் கூட. எனவே இந்தப் புத்தகம் அதே கச்சிதத்துடன் ஒரு செம்பதிப்பாக வெளியாகி இருக்கிறது. அம்பை இல்லாமல் இது சாத்தியமில்லை. இரண்டாவதாக, அம்பை பல அடிக்குறிப்புகளைச் சேர்த்திருக்கிறார். அது இந்த நூலைப் பல படிகள் உயர்த்துகிறது. பல அடிக்குறிப்புகள் அம்பையின் உழைப்பைச் சொல்கின்றன. மூன்றாவதாக, மிக முக்கியமானதாகச் சொல்லவேண்டியது – இந்த நூல் ‘ஜகன்மோகினி’யில் தொடராக வந்ததன் சில அத்தியாயங்கள் இப்போது கிடைக்கவில்லை. சகோதரியின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அதை எடுத்து இந்த நூலோடு சரியான இடத்தில் சேர்த்து, அதைத் தனியே குறிப்பிட்டு, ஒரு முழுமையைக் கொண்டு வந்திருக்கிறார். மிக முக்கியமான நீண்ட முன்னுரையையும் எழுதி இருக்கிறார் அம்பை. மாலதி ராமநாதனுடன் இணைந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த நூலில் சிலவற்றை மட்டுமே நான் சொல்லி இருக்கிறேன். சிஸ்டரின் பயணங்களைத் தனியே சொல்லலாம். அந்த அளவுக்குப் பயணம் செய்திருக்கிறார். உ.வே.சாமிநாதையர் சிஸ்டரின் தமிழ் ஆசான். விதவைப் பெண் படிக்க நினைக்கும்போது, அதற்கு ஆதரவாகவும் ஒரு சமூகத்தில் பலர் இருந்திருக்கிறார்கள். உலகம் முற்றிலுமாகக் கறுப்பு வெள்ளையாக இருந்துவிடவில்லை. இப்படி இன்னும் பல மாணிக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன.

மொத்தத்தில் இந்த நூல் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத நூல்!

புத்தகத்தை வாங்க: https://www.swasambooks.com/products/en-suya-sarithai/225301000101187037

To buy the English Version: https://www.swasambooks.com/products/my-life-story/225301000100939582

Share

RN Ravi – The ever best governor of Tamil Nadu

தமிழ்நாடு சந்தித்த மிகச் சிறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. முதல் பாராட்டு, தமிழக அரசின் கண்ணில் விரல் விட்டு ஆட்டியதற்கு. இரண்டாவது பாராட்டு, தமிழ்நாட்டு அரசியல் சக்திகள் இந்திய மைய நீரோட்டத்தில் இருந்து விலகுவதுபோல் செயல்பட்டுப் பயமுறுத்தியபோதெல்லாம், அதற்கு தமிழக அரசு துணைபோவது போலச் செயல்பட்டுப் பயமுறுத்தியபோதெல்லாம் அதை இந்தியனாக நின்று எதிர்கொண்டமைக்கு. மூன்றாவது பாராட்டு, பல அவமானங்களைத் தாங்கிக் கொண்டு, அதற்காக ஈகோ மோதலில் இறங்காமல் இருந்ததற்கு. நான்காவது பாராட்டு, தமிழ் மொழியின் மீது உண்மையான ஈடுபாடு கொண்டு, அதற்காக தேசியத்தின்பால் ஈடுபாடுகொண்ட தமிழ் எழுத்தாளர்கள் / மொழிபெயர்ப்பாளர்கள் பலரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் / நேரத்தை ஏற்படுத்திக்கொண்டு கௌரவித்ததற்கும், தமிழில் செம்மையாகப் பல புத்தக முயற்சிகளை ஆதரித்துக் கொண்டு வந்ததற்கும். ஐந்தாவது பாராட்டு, துணை வேந்தர் விஷயத்திலும், சட்டமன்றம் அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஆளுநர் எத்தனை நாள் நிறுத்தி வைக்கலாம் என்பதை இந்திய அளவுக்கான சட்டப் பிரச்சினையாக்கியதற்கும். ஆறாவது பாராட்டு, சத்த்மே இல்லாமல் இந்திய தேசிய ஆதரவைப் பல செயல்பாடுகள் மூலம் தன் ஆதிக்கம் உள்ள இடங்களில் எல்லாம் பரப்பியதற்கு.

தைரியமான ஓர் ஆளுநராக தன் பதவிக் காலம் முழுமைக்கும் இருந்தமைக்காக இன்னும் சிறப்பான பாராட்டு.

எங்கிருந்தாலும் இதே போன்ற சிங்கமுகத்துடன் இருக்க வாழ்த்துகள்.

Share

In the memory of my appa

நேற்று அப்பாவின் நினைவு தினம். மார்ச் 4. திதியும் அவர் இறந்த நாளும் ஒரே நாளில் வந்தது.

அப்பா 2007ல் மறைந்தார். நீண்ட நாளாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நான் சென்னையில் இருந்தேன். அப்பா திருநெல்வேலியில் அண்ணன் வீட்டில் இருந்தார். அப்பாவைப் பார்க்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்த சமயத்தில், அதாவது அப்பா மறைவதற்கு ஒரு வாரம் முன்பு வந்த சனிக்கிழமை இரவில், அப்பாவின் உடல்நிலை மிக மோசமானது. நானும் என் அத்தைப் பையனும் அருகே இருந்தோம். மற்றவர்கள் ஓய்வெடுக்கப் போயிருந்தார்கள். அப்பாவைக் கண்காணிக்க, மாற்றி மாற்றி கண் விழித்துப் பார்க்கும் ஏற்பாடு அது.


Advt.
கருட புராணம், சுவாசம், ரூ 190

இரவு இரண்டு மணி வாக்கில் அப்பாவின் நாடி இறங்கிக்கொண்டே போனது. ஆக்ஸிஜன் வைத்தோம். ஒரு பயனும் இல்லை. இன்னும் அதிகபட்சம் 2 மணி நேரம் கூடத் தங்காது என்று தோன்றியது. அப்போதுதான் உறங்கச் சென்றிருந்த அண்ணனை எழுப்பினோம். அவரும் எங்களுடன் அமர்ந்துகொண்டார். ஒரு கட்டத்தில் நாடி இறங்குவது எங்களுக்கு ஒரு வாடிக்கையாகிப் போனது. கொஞ்சம் நேரம் வெளுக்கவும் உறவினர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தோம்.

ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அப்பாவுக்கு புதிய தெம்பு பிறந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் நார்மலாகிவிட்டார். எங்களால் அதை நம்பவே முடியவில்லை.

அப்பாவைப் பார்க்க வந்த இன்னொரு அத்தைப் பையன், வீட்டுக்குள் வந்தார். அப்பா தலை சீவி பௌடர் போட்டுக்கொண்டு, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, “வாடா சுரேஷ்” என்று கெத்தாக அழைத்ததைப் பார்த்துவிட்டு, அவர் எங்களைப் பார்த்து, “என்னடா ரொம்ப சீரியஸ்னீங்க. நல்லாத்தான இருக்காரு” என்றார். பின்னர் அவருக்கு நிலைமையை விளக்கினோம்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. நான் சென்னைக்குக் கிளம்பவேண்டும். வீட்டில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் சனிக்கிழமை மார்ச் 3ம் தேதி சந்திர கிரஹணம் என்று சிறிய பெட்டிச் செய்தி போட்டிருந்தது. அதை அம்மா பார்த்துவிட்டு, “கிரஹணம் தாண்டனுமே” என்றாள்.

நான் சென்னைக்கு வந்துவிட்டேன். சனிக்கிழமை சந்திர கிரஹணம் வந்த கழிந்தது. அப்பா தாண்டிவிட்டார் என்று நினைத்தோம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்குத் தன் இறுதி மூச்சை விட்டார் அப்பா. ஃபோனில் என்னிடம் அம்மா, “கிரஹணம் தாண்ட விடாதுடா” என்றாள் அம்மா.

இந்த 2026 மார்ச் 3ம் தேதி சந்திர கிரஹணம். மார்ச் 4 அப்பா இறந்த நாளும் அதே திதியும்.

இறுதி வரை நம்முடன் வரப் போகிறவை நம் நினைவுகளே. நினைவுகளே நாமே அன்றி நாமென்ற ஒன்று தனியே இல்லை.

Share

Dhurandhar Hindi Movie

துரந்தர் (H) – சந்தேகமே இன்றிச் சிறப்பான பரபரப்பான படம். தொடக்கம் முதல் இறுதி வரை அங்குமிங்கும் விலகாத ஒற்றை நோக்கிலான திரைக்கதையும் பரபரப்பான சம்பவங்களும், படம் பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் நம்மைச் சிந்திக்க விடாமல் இருத்தி விடுகின்றன. இதுதான் இந்தப் படத்து வெற்றி ரகசியம். இப்படம் இந்தியா முழுக்க வசூலை வாரிக் குவித்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்ல நடிகர்களின் சிறப்பான நடிப்பு, தரமான இயக்கம், அசத்தலான ஒளிப்பதிவு எனப் படத்திற்கு தேவையான அனைத்து வெற்றிச் சூத்திரங்களும் இந்தப் படத்தில் ஒருங்கிணைந்திருக்கின்றன.

படம் முடிந்த பிறகு சில விஷயங்களை யோசித்துப் பார்த்தேன். இந்தப் படம் பிரசாரப் படமா என்றால், ஒருவகையில் பிரசாரப் படம்தான். ஆனால் தரமான, சரியான வரலாற்றுத் தரவுகளுடன் கச்சிதமாகக் கலக்கப்பட்ட கற்பனையுடன் கூடிய படம். தமிழில் எடுக்கப்படும் அற்பத்தனமான பிரசாரப் படங்களை விதந்தோதும் போலி முற்போக்காளர்கள் ஏன் இந்தப் படத்திற்கு மட்டும் அத்தனை குதித்தார்கள் என்பது படத்தைப் பார்த்தாலே எளிதில் விளங்கும்.

இந்தப் படத்தில் சில வெளிப்படையான பிரசாரக் காட்சிகள் இருந்தன. உத்தரப் பிரதேசத்தின் ஊழல் ஆதாரங்களை எல்லாம் சேர்த்து வையுங்கள், யாராவது ஒருவன் நல்லவன் வருவான் என்ற வசனங்களும், புதிய இந்தியா என்ற வசனங்களும் அப்படிப்பட்டவைதான். ஒட்டுமொத்தத் திரைப்படத்தில் இவை அதிகபட்சம் 30 நொடிகள் கூட வருவதில்லை. அதற்கே இந்தப் போலி முற்போக்காளர்கள் கொதிக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் படங்களில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒற்றைப் படைத்தன்மையுடன் வெறுப்புப் பிரசாரம் கலந்து எந்தவிதத் தர்மமும் இன்றி, எந்தவித வரலாற்றுப் பின்புலமும் இன்றி அடித்து ஆடும்போது அதைச் சிலாகிக்கிறார்கள்

தமிழில் வெளிவரும் மாற்றுப் பிரசாரப் படங்கள் அதாவது வலதுசாரி பிரசாரப் படங்கள் என்று சொல்லப்படும் படங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. அவற்றைப் பற்றி நான் எழுதுவதுமில்லை. அவற்றைப் பார்ப்பதும் இல்லை. நானே அந்தப் படங்களை ஏற்கவில்லை. அந்தப் படங்களை இந்தப் போலி முற்போக்காளர்கள் குறை சொல்லும்போது அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துரந்தர் போன்ற படங்களைக் குறை சொல்வது அவர்களது பதற்றத்தைத்தான் காட்டுகிறது.

ஆயிரம் வன்முறைகள் தடுக்கப்பட்டாலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவிட்டால் அது அந்த அரசாங்கத்திற்குக் கெட்ட பெயரைத்தான் கொண்டு வரும். மோடி ஆட்சியிலும் அதேதான். புல்வாமா, பஹல்காம் தாக்குதல் தொடங்கி எல்லாவற்றிலும் அப்படித்தான். ஆனால் அதற்குப் பின்னர் மோடி அரசு என்ன செய்தது என்பது முக்கியமானது.

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 10/20 வருடங்களுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து ஒருவனை எல்லை தாண்டி அனுப்புவது ஒரு ராஜதந்திரம். இதை அஜித் தோவல் போன்ற அதிகாரிகள் மட்டும் முடிவெடுத்துச் செய்திருக்கவே முடியாது. நிச்சயம் பிரதமரின் ஆலோசனையும் அறிவுறுத்தலும் ஒப்புதலும் இருந்தே தீர வேண்டும்.

உண்மையில் இந்தத் திரைப்படம் தேசபக்தி என்பதைப் பின்னணியில் மட்டும் வைத்துக் கொண்ட திரைப்படம் மட்டுமே. அந்த தேசபக்தியைத் தாண்டிய ஒரு கேங் வார் திரைப்படமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. வலுவான காரணமாக தேசபக்தி. பாகிஸ்தானில் கேங் வார் நடக்கிறது, அது அரசியல் உருப்பெற்று, ஆயுதக் கடத்தல் தொடங்கி பிறநாடுகளின் மீதான தாக்குதல் வரை எப்படி நீள்கிறது, இந்த அரசியல்/ஆயுதப் போட்டியில் எப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்து கொள்கிறார்கள், யார் மேலே வருகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்தத் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தின் கதை இந்தியாவுக்கோ, ஏன் தமிழுக்கு கூட புதியதல்ல. கமலின் குருதிப்புனல் திரைப்படமும் விஸ்வரூபம் திரைப்படமும் இந்த வகைக் கதைதான். களங்கள் மட்டுமே வேறு. விஸ்வரூபம் திரைப்படம் நிஜமாகச் சொல்லப்போனால் துரந்தர் திரைப்படத்தின் ஆக்கத்தை விட, இயக்கத்தை விட ஒரு படி மேலானது. விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினை அதில் வந்த தேவையற்ற பல காட்சிகள். சிக்கன் சாப்பிட்டியா மாமி போன்ற தேவையற்ற வசனங்கள் தந்த எரிச்சலும், ஒரு நளினமான நடனக்காரன் ஒருவன் பெரிய வீரனாக உருமாற்றம் கொள்ளும் புல்லரிப்புக் காட்சிகளும் படத்தின் தீவிரப் போக்கைச் சிதறடித்து விட்டன. அந்தக் காட்சிகளை எல்லாம் விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகளை மட்டும் தனியே பார்த்தால் துரத்துரை விடப் பல மடங்கு உயர்ந்த தரத்தில், விஸ்வரூபம் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. துரந்தர் படத்திலும் சில தேவையற்ற காட்சிகள் உண்டு. ஆனால் எப்படியோ அதைப் படத்துடன் கச்சிதமாக இணைத்துவிட்டார்கள். துரந்தர் கதையும் விஸ்வரூபம் கதையும், குருதிப் புனல் இறுதிக் காட்சியும் துரந்தரின் இறுதிக்காட்சியும் ஒன்றுதான்.

துரந்தர் திரைப்படத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒரு காட்சி என்னவென்றால், இந்திய ரகசிய உளவாளியாகச் சென்றவன் தந்த ஆயுதங்கள்தான் மும்பையில் 26/11ல் கொல்லப் பயன்படுத்தப்பட்டது என்னும் கற்பனை. நுணுக்கமான திரைக்கதை. ஒரு ரகசிய உளவாளியின் பின்னால் இருக்கும் நியாய உணர்வு அங்கேயே அடிபட்டு, அந்தக் கணத்திலிருந்து அந்தக் கதாபாத்திரம் நுணுக்கமான தத்துவார்த்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விடும். மிகச் சிறப்பாக அதை எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து அவன் செய்யும் ஒவ்வொரு அராஜகமும் நியாயப்படுத்தப்படும் வகையிலான திரைக்கதை அட்டகாசமாக வந்திருக்கிறது.

உண்மையில் இந்தத் திரைப்படத்தில் அரசியல் பின்னணியிலான கேங்வார் தொடர்பான காட்சிகள் மட்டுமே வந்திருக்கின்றன. போலி முற்போக்காளர்களை இன்னும் பதறச் செய்யப் போகும் புதிய இந்தியா தொடர்பான காட்சிகள் இரண்டாம் பாகத்தில்தான் வரவிருக்கின்றன என நினைக்கிறேன். முதல் பாகம் இத்தனை வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் பாகம் இந்த அளவுக்குப் பேசப்படுமா என்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. விஸ்வரூபம் பாகம் 2 ஒரு கொடுங்கனவு என்பதும் நினைவுக்கு வருகிறது. துரந்தர் 2 என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.

Share

Saturday vibes

#சனி_வைப்ஸ்

நேற்றிரவு 12 மணி முதல் 1 மணி வரை நல்ல ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டேன். எப்படியோ சுற்றிமுற்றி வழக்கம் போல ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது மற்றும் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து  யேசுசுதாசின் பாடல்களுக்கு வந்து சேர்த்தேன்.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல் வரிகள் என்ன ஓர் இசைவு. வார்த்தைத் தேர்வுகளும் இடறாத சந்தமும் அர்த்தமற்ற வார்த்தைகளை அள்ளித் தெளிக்காத அவசரமின்மையும் (வாலி  என நினைக்கிறேன்) அற்புதம்.  இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் அனுபவித்து இருந்தால்தான் புரியும்

பின்னர் ஒலித்தது சொர்க்கம் மதுவிலே. உண்மையில் சொர்க்கம்தான். இசை, எஸ்பிபி குரல், வரிகள் என ஒன்றுக்கொன்று போட்டி போடும் பாடல். வரிகளில் கண்ணதாசனின் ஆட்டம் இப்போது எழுதியது போல் இருக்கிறது. இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Share

Eko – Truly a Master Piece

Eko (M) – என்ன சொல்ல! எப்படியாவது வார்த்தைகளில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு த்ரில்லர் வகைப் படத்தை இத்தனை விரிவாக இத்தனை ஆழமாக எடுக்க முடியுமா? த்ரில்லரும் இலக்கிய வகைமையும் ஒன்று சேர முடியுமா? த்ரில்லை திரைப்படத்தை ஓர் இலக்கிய நாவல் போல எழுத முடியுமா? நாவலில்கூட கை கூட முடியாத சில நுட்பங்களைத் திரையில் கொண்டு வந்துவிட முடியுமா? இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, நிலம் என அனைத்தும் ஒரு படத்தில் ஒன்றுகொன்று உச்சமாக இயைந்து ஒத்துழைக்க முடியுமா? ஓர் இந்திய நிலத்தில் இன்னொரு நிலத்தின் ஆத்மாவையும் காதலையும் அச்சு அசலாகக் கொண்டு வந்துவிட முடியுமா? ஒவ்வொரு நொடியும் புல்லரிக்க வைக்கும் காட்சியும் வசனமும் திரைக்கதையும் என படம் தொடங்கிய நொடி முதல் இறுதி வரை கொண்டு செல்ல முடியுமா? மெல்ல நகரும் படம் ஆனால் இப்படி விறுவிறுப்பாக இருக்க முடியுமா? ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரையில் இப்படிச் செதுக்க முடியுமா? தேவையற்ற காட்சி ஒன்று கூட இல்லாத ஒரு படம் இருக்க முடியுமா? அத்தனையையும் செய்து காட்டி இருக்கிறது எக்கோ என்னும் மலையாளத் திரைப்படம்.

இது திரையில் ஒரு ஆழமான நாவல். த்ரில்லர் வகையின் ஆழமான இலக்கியப் பிரதி.

இறுதிக் காட்சியில் வரும் புல்லரிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இது ஒரு திரையரங்க அனுபவமாக முகிழ்ந்திருக்கவேண்டும். தவற விட்டுவிட்டேன்.

நாம் எப்போது தமிழில் இப்படி ஒரு படம் எடுப்போம் என என்னால் யூகிக்கக் கூட முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் திறமைச்சாலிகளுக்குக் குறைவில்லை. தேவையற்ற அரசியல் தூண்டிலில் சிக்கிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மலையாளிகளோ நிலம் சார்ந்த கதை, கதை சார்ந்த திரைக்கதை என இடதுகையால் திரைப்படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் செலவு 5 கோடிதானாம். நம்ப முடிகிறதா?

எந்த வித நட்சத்திர மதிப்பும் இல்லாத பையன் அப்படி நடிக்கிறான். விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மலையாளப் பையன்கள் அசரடித்துவிடுகிறார்கள். சந்தீப் பிரதிப்புக்கு 25 வயது இருக்குமா? சில படங்களில் சாதாரண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அப்படிச் சாதாரணமாக வந்து பின்னர் இந்தப் பையன் எடுக்கும் விஸ்வரூபம் நம்மை வாய் பிளக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் தின்ஜித் அய்யநாதன். இவரது கிஷ்கிந்தா காண்டமெல்லாம் இந்தப் படத்தின் முன்னால் ஒன்றுமே இல்லை என்றால் இந்தப் படம் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை என அனைத்திலும் இந்தப் படம் தேசிய விருது பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

டோண்ட் மிஸ் வகையறா.

Truly a master piece.

Share

45 Kannada Movie

45 என்றொரு கன்னடப் படம். ரீல்ஸில் ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்த்துவிட்டு சிவராஜ் குமாரின் ஃபிரஷான நடிப்பை முழுவதுமாகப் பார்ப்போம் என்று நினைத்து அந்தப் படத்தைப் பார்த்தேன். ரீல்ஸில் எத்தனை நேக்காக என்னை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த படத்திலேயே எது இரண்டு காட்சியோ அதை மட்டும் ரீல்ஸில் சுத்த விட்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்த பின்னர்தான் எனக்கு உரைத்தது.

கருட புராணத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் என்ற போர்வையில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஸ்பாய்லரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்தில் என்னவெல்லாமோ வருகிறது. என்ன பிரச்சினை என்றால் படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே இதுதான் கதை என்று நான் தீர்மானித்தேன். ஆனால் படம் போக போக அந்தக் கதை இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியில் கிளைமாக்ளில் பார்த்தால் நான் நினைத்ததுதான் கதை. ஒரு ட்விஸ்ட்டுடன். 

கிளைமாக்ஸில் ஒரு திருப்பம் கொடுக்கிறார்கள் பாருங்கள், உலகத்திலேயே இப்படி ஒரு கற்பனையை எவனும் செய்ததில்லை.

ரத்த குளிகா பாதாள குளிகா என்று பல குளிகா காந்தாராவில் எட்டிப் பார்ப்பது போல சிவராஜ் குமார் ஒவ்வொரு பெயராக அழைக்க அத்தனை தெய்வங்களும் சிவராஜ்குமாராகவே வருகிறார்கள்‌ கிராஃபிக்ஸில் கலக்குகிறோம் என்று கண்கொண்டு பார்க்க முடியாதபடி என்னவெல்லாமோ செய்து வைத்திருக்கிறார்கள். 

உபேந்திராவை விறைப்பாக நடிக்க வைக்கிறேன் என்று நம்மைச் சாவடித்து விட்டார்கள். உபேந்திரா, ராஜ் பி செட்டி, சிவராஜ்குமார் என்று பல பெரிய கைகள் இருந்தும் படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், கதையும் பாழாய்ப் போன திரைக்கதையும்தான் காரணம்.

 கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.

Share

TTT review

தலைவர் தம்பி தலைமையில் – சுமாரான திரைப்படம்தான். ஆனாலும்…

படம் முழுக்க வெட்டு குத்து ரத்தம் போன்றவை இல்லை என்பதற்காகவும், கஞ்சா குடி எனப் படம் நெடுக வலிய திணிக்காமல் இருந்த காரணத்துக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். இன்னும் வேறு சில விஷயங்களுக்காகவும் பார்க்கலாம். இயக்குநர் மலையாளி என்பதாலோ (ஃபேலிமி) என்னவோ மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு. ஃபேலிமி அளவு இல்லையென்றாலும், அழகான உணர்வுதான். நேரடி சிறிய பட்ஜெட் மலையாளத் திரைப்படங்கள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் வெறுக்காது.

மிக எளிய கதை. முதல் ஒரு மணி நேரம் கலகலப்பாகவே இருந்தது. பின்னர்தான் கொஞ்சம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. முடிவை வேறு மாதிரி யோசித்திருக்க வேண்டும். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், மலையாளத் திரைப்படங்களில் வருவது போலவே அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். சிறிய வேடத்தில் நடிப்பவர்கள் உட்பட. கொஞ்சம் சுமாராக நடித்தார் என்றால் அது ஜீவா மட்டுமே. தம்பி ராமையா, இளவரசு இருவரும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.

படத்தில் சில காட்சிகள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டன. குழிக்குள் காதலி காதல் காதலனைக் கட்டிக் கொள்ளும் காட்சி. தம்பி ராமையா தன் பொண்ணு வீட்லதான் இருக்கா என்று சொன்னபடியே வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளும் காட்சி. இந்தக் கதவை மூடிக்கொள்ளும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அதைச் சரியான இடத்தில் நிறுத்தியதுதான். தொடர்ந்து அழுவது போலக் காண்பிக்காமல் அப்படி நிறுத்தியது அழகாகவே இருந்தது.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள், மினி மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்க்க விரும்புபவர்கள், நாகர்கோவில் வட்டார வழக்கை உருப்படியாகக் கேட்க நினைப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்.

Share