Uyir – Malayalam Movie

உயிர் (M) – படமாகச் சுமாரான திரைப்படம் தான் என்றாலும், கடைசியில் திரையில் காட்டப்பட்ட ஒரு விவரம், அதாவது இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று பார்த்தபோது, அந்த விவரங்களைத் தேடி எடுத்தேன். சாட்ஜிபிடி பல விவரங்களைக் கொடுத்து உதவியது. அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படம் நிஜமாகவே உண்மைக்கு இயன்ற அளவு நெருக்கமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதை நிச்சயம் பார்க்கலாம்.

Spoiler ahead.

குழந்தைகள் மீதான வன்முறை என்ற அடிப்படையில் பார்த்தால், பெரிய வன்முறை எதையும் நேரடியாகக் காட்டாவிட்டாலும், அவர்கள் அடையும் உளவியல் ரீதியான வன்முறை, உண்மையிலேயே மனதைப் பிசைகிறது. எனக்கு இந்தச் சிறிய வன்முறையைக் கூடத் தாங்க முடியவில்லை. பெரும் மனப்போராட்டம் நிகழ்ந்துவிட்டது. கடைசியில் அவர்கள் நிம்மதியாக மீட்கப்ப்பட்ட பின்னர்தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன். உண்மையை இத்தனை நெருக்கமாக எடுத்ததற்காகவும் கடைசி 20 நிமிடங்களுக்காகவும் பார்க்கலாம்.

ஒரு படமாக மட்டுமே அணுகினால், உண்மைக்கு நெருக்கமாக எடுத்ததாலேயே என்னவோ, எந்த விதத் திருப்பமும் இன்றி, மிக நேரடியாகச் செல்லும், எளிதாக யூகிக்க முடியும் கதை என்கிற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாது.

சிலர் இந்தப் படத்தில் தேவையின்றி ஒரு இஸ்லாமியப் பாடல் நுழைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அது தவறு. இந்தப் படத்தின் உண்மைக் கதைக்கான போலீஸும் ஓர் இஸ்லாமியராகவே இருந்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் மனப் போராட்டத்தோடு அந்தக் குழந்தைகளைத் தேடிப் போகும் போது, அவர் நம்பிக்கையுடன் கூடிய ஒரு பாடலைப் போட்டிருப்பது நியாயமாகத்தான் தெரிகிறது.

From ChatGpt

சமீபத்தில் வெளியான மலையாளப் படம் ‘Uyir’ ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 2017-ல் கண்ணூர் மாவட்டம் Iritty பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கையும், அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி S. Anshad-ன் அனுபவங்களையும் மையமாகக் கொண்டது.

இந்தக் கதை தொடங்கியது 2015-லேயே.

கர்நாடகாவின் Tumakuru பகுதியைச் சேர்ந்த Raju என்பவர், தனது மனைவி Shobha மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த T.K. Manjunath ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 2015 டிசம்பர் 21 அன்று Raju-வை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொன்று, உடலை காட்டுப் பகுதியில் எரித்ததாக Manjunath பின்னர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு Shobha மற்றும் Manjunath கண்ணூர் மாவட்டம் Iritty-க்கு வந்து வாழ்ந்தனர். Shobha-வுக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருந்தனர். Aryan-க்கு 6 வயது, Amrutha-வுக்கு 4 வயது.

2017 ஜனவரி 21 அன்று Iritty பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் அழுகிய உடல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அது Shobha என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் மரணம் குறித்து சந்தேகம் இருந்தாலும், பின்னர் அது கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

போலீசாரின் சந்தேகம் Shobha-வுடன் வாழ்ந்து வந்த Manjunath மீது திரும்பியது. அவரை விசாரித்தபோது, Shobha-வின் மரணத்திற்கும், ஏற்கெனவே நடந்த Raju கொலைக்கும் தொடர்புடைய அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.

Shobha-வுடன் ஏற்பட்ட தகராறில் Manjunath அவரது கழுத்தை நெரித்ததாகவும், அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து கிணற்றில் போட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சில போலீஸ் தகவல்களின்படி, Shobha கிணற்றில் போடப்பட்டபோது உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், பின்னர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

Shobha இறந்த பிறகு, அவரது இரண்டு சிறு குழந்தைகளான Aryan மற்றும் Amrutha-வை Manjunath Bengaluru-க்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து Mumbai செல்லும் ரயிலில் அந்த இரண்டு குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டார்!

அம்மா இறந்துவிட்டார். அப்பா ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுவிட்டார். அவர்களுடன் இருந்த Manjunath-ம் அவர்களை ரயிலில் தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.

சுமார் 45 நாட்களுக்குப் பிறகு அந்த இரண்டு குழந்தைகளும் Mumbai-ல் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பில் எடுத்த அதிகாரிகள், Kerala Police-க்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது Iritty Police குழு Mumbai சென்று அந்தக் குழந்தைகளை மீட்டு Kerala-க்கு அழைத்து வந்தது. இந்த விசாரணை மற்றும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் அப்போது Iritty Police-ல் இருந்த S. Anshad முக்கிய பங்கு வகித்தார்.

இந்த உண்மைச் சம்பவத்துடன்தான் Uyir திரைப்படத்தின் தொடர்பு இருக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம் மட்டும்: Manjunath-க்கு இறுதியில் நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது, அந்த இரண்டு குழந்தைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து நம்பகமான பொது பதிவுகள் கிடைக்கவில்லை.

Share

Chinna Chinna Aasai Malayalam

சின்ன சின்ன ஆசை (M) – எப்படி இப்படி ஒரு செயற்கைத்தனமான கண்றாவியை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் முழுக்க காசி வருகிறது என்பதற்காகப் பார்த்தேன். காசியே பிடிக்காமல் போய்விடும் போலிருக்கிறது. ஒரு காட்சி கூட உருப்படியாகவோ ஒட்டுதலாகவோ இல்லை. ஏன் இந்தக் கருத்தைப் பார்த்தோம் என்று நான் நொந்து கொண்டே படம் முழுக்கவும் பார்த்து முடித்தேன். இரண்டு கிழடுக்களுக்கும் நடிக்க வரவில்லை. படம்தான் அழுது கொண்டே இழுத்துக் கொண்டே போகிறது என்றால், அந்த இசையமைப்பாளர் அதைவிட இழுவையான பாடல்களைப் போட்டுச் சாவடித்து விட்டார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ஒரு டயலாக், என் மாமியாருக்கு என்னைப் பிடிக்காது என்று… அதன் ஃப்ரெஷ்நெஸ்ஸைக் கேட்டு ஆஹா என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்… அது ஹிட் காக்ரோச் விளம்பரம். இந்த கொடுமையில் தான் படம் இருந்தது. இதில், ஏதோ மலையாளியை வைத்தே தமிழ் வசனங்களையும் எழுதி இருப்பார்கள் போல‌. அது ஐயையோ ரகம்.

தயவு செய்து சொல்கிறேன், அந்தப் பக்கமே ஒதுங்கி விடாதீர்கள். சமீபத்தில் பார்த்த மிக செயற்கைத் தனமான திரைப்படம் என்றால் இந்தக் கண்றாவி தான். இந்தப் பாவத்தைப் பார்த்ததற்காகவே மீண்டும் ஒருமுறை காசிக்குச் செல்லத்தான் வேண்டும்.

Share

Baalan Malayalam Movie

Baalan (M) – தரமான படம். ஆஹா ஓஹோ படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நல்ல படம் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தப் பையன் மற்றும் அம்மாவாக வரும் பெண்ணின் நடிப்பும் கேமராவும் கேரளச் சூழலும் மனதை அள்ளுகின்றன. முதல் பாதி வரை மிகவும் விறுவிறுப்பாகவே செல்லும் திரைப்படம், பின்னர் கொஞ்சம் அலைபாய்ந்தாலும், இறுதிக் காட்சியில் மனம் கணக்க வைத்து விடுகிறார்கள். நிச்சயம் பாருங்கள்.

Share

Palliyezhuchi Paavai Paadalgal

இளையராஜா எழுதி அவர் ஆர்கெஸ்ட்ரேஷனில் சஞ்சய் சுப்ரமணியன் இசையில், பள்ளியெழுச்சிப் பாடல்கள் சில கேட்டேன். இதுவரை இளையராஜா எழுதிய எத்தனையோ பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஏன் இளையராஜா நல்ல மெட்டுக்களுக்கெல்லாம் பாடல் எழுதுகிறார் என்று தோன்றியதுண்டு. ஆனால் அவையெல்லாம் வேறு ஜாதி. பள்ளியெழுச்சிப் பாடல்கள் நிஜமாகவே வேறு ஜாதி. இப்படி அவர் எழுதியிருப்பது சத்தியமாக இறைச் செயலன்றி வேறில்லை. நம்பவே முடியவில்லை. அப்படி ஒரு தமிழ். இசையும் வரிகளும் அருமை. கேட்டும் போது அப்படியே பழம்பெரும் ஒரு சிவன் கோவிலுக்குள் (நெல்லையப்பர் கோவில் போன்ற ஒன்றுக்குள்) நுழைந்த உணர்வு ஏற்படுகிறது.

Share

Anomie Malayalam Movie

Anomie (M) – ஒரு நண்பர் பரிந்துரைத்த மலையாளத் திரைப்படம். தரமான திரைப்படம். மேக்கிங் மற்றும் நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. மலையாள வழக்கம் போல மிக மெதுவாக நகரும் திரில்லர் வகைத் திரைப்படம். கொஞ்சம் மெடிக்கலையும் கொஞ்சம் தத்துவத்தையும் தொட்டு என்னவெல்லாமோ காண்பிக்கிறார்கள். அதுவுமே நன்றாகத்தான் இருக்கிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்வு குறித்த பல விதமான கற்பனைகளை இத்தனை விஷுவலாகக் காண்பிக்க ஏன் முயன்றார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அதை ஓரளவுக்கு நம்புபடியாகவே எடுத்திருக்கிறார்கள். கடைசி வரை பரபரப்பையும் தக்க வைத்திருக்கிறார்கள். ஆஹா ஓஹோ என்று புகழும்படியான திரைப்படமல்ல என்றாலும் நிச்சயம் தரமான திரைப்படமே.

Share

Dominic and Ladies Purse & The Devil

இன்று கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. எனவே மைண்டை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள இரண்டு திரைப்படங்கள் பார்த்தேன்.

ஒன்று தி டெவில் என்னும் கன்னடத் திரைப்படம். தர்ஷன் ஒரு கொலை கேசில் உள்ளே சென்ற பிறகு வெளியாகி இருக்கும் அவரது திரைப்படம். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டாலும் இப்போதுதான் ஓ டி டி இல் வருகிறது போல. நான் இன்று தான் பார்த்தேன். மிகவும் சுமாரான படம். ஆனால் எப்படியோ கடைசி வரை பார்க்க முடிந்தது. தர்ஷனின் கொடூரமான நடிப்பைத் தாண்டிப் பார்க்க வேண்டியிருந்தது. தமிழில் அஜித் நடித்தால் உண்மையிலேயே பரபரப்பாகத்தான் இருக்கும். அவரது முந்தைய படங்கள் வாலி துணிவு வேதாளன் போன்ற அத்தனை படங்களையும் நினைவூட்டினாலும் இந்தப் படமும் அவருக்கு நல்ல படமாகவே அமையும்.

அடுத்து நான் பார்த்த திரைப்படம் டொமினிக் லேடிஸ் பர்ஸ் (M) – இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே பார்க்க நினைத்த திரைப்படம். திடீரென்று அதை ஓடிடியில் இருந்து தூக்கி விட்டார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பாகத்தான் மீண்டும் வந்தது. அப்போதிருந்தே பார்க்க நினைத்த திரைப்படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. கௌதம் மேனகாவும் மம்மூட்டிக்காகவும் பார்த்தேன். மம்முட்டி மெலிந்த உடலுடன் நன்றாகவே இருந்தார். முகத்தில் 70 வயசு என்பது தெரியாவிட்டாலும் சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் தெரியத்தான் செய்தது. முதல் இரண்டு மணி நேரம் எப்படி இந்தத் திரைப்படத்தைப் பார்க்க போகிறோம் என்று எரிச்சலாக இருந்தது. வளவள வசனங்கள், இழுத்தடிக்கும் திரைக்கதை. ஏண்டா இந்தக் கொடுமையைஒ பார்த்தோம் என்று நினைத்துக் கொண்டே தான் பார்த்தேன். ஆனால் கடைசி 20 நிமிடங்கள் அட்டகாசம் என்றுதான் சொல்ல வேண்டும். கௌதம் வாசுதேவ மேனனின் படமாக அதுவரை இல்லாமல் இருந்த திரைப்படம், அந்த 20 நிமிடத்தில் அவரது திரைப்படமாக மாறியது. அதிலும் கிளைமாக்ஸில் மார்கழித் திங்கள் பாடலை இணைத்தது அபாரம்.

நேரமும் காய்ச்சலும் இருப்பவர்கள் பாருங்கள்.

Share

Male Breast Cancer

நெஞ்சிலோர் நண்டு – சுதாகர் கஸ்தூரி எழுதிய மிக முக்கியமான புத்தகம்.

இந்தப் புத்தகம் ஆண்களுக்கு வரக்கூடிய, அதாவது லட்சத்தில் ஒருவருக்கோ அல்லது ஆயிரத்தில் ஒருவருக்கோ மட்டுமே ஏற்படக்கூடிய அபூர்வமான மார்பகப் புற்றுநோய் பற்றியது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுதாகர் கஸ்தூரி எனக்கு ஃபோன் செய்து, தனக்கு இப்படி ஒரு நோய் வந்திருப்பதாக, அதாவது மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னபோது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அதிலும் ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் என்று சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் சொல்லும் வரைக்கும் இப்படியொரு நோய் இருப்பதே எனக்குத் தெரியாது.

அப்போது அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. உண்மையில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சுதாகர் கஸ்தூரியை எனக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தெரியும். அடிக்கடி பேசியிருக்கிறோம். அவருடைய புத்தகங்களை நாங்களே வெளியிட்டிருக்கிறோம். அவர் முதல் புத்தகம் எழுதியபோது படித்துப் பார்க்கச் சொல்லி எங்களுக்கு அனுப்பியிருந்தார். அந்த அளவுக்கு பழக்கம் உண்டு. ‘மரத்தடி’ குழுவில் இருந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரும் திருநெல்வேலிக்காரர் என்பதால் இயல்பாகவே நல்ல நட்பு இருந்தது.

அவர் இந்த புற்றைப் பற்றிச் சொன்னபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதன்பின்னர் அவ்வப்போது அவரைத் தொடர்புகொள்வேன். அதிகமாகத் தொந்தரவு செய்யவில்லை. ஒருமுறை பேசும்போது, “இப்போது எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்போது, “கிட்டத்தட்ட இந்த நோயிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பெரும்பாலும் எல்லாமே சரியாகிவிட்டது” என்று சொன்னார்.

அப்போது நான், “இதைப் பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுத வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே அதற்கு சம்மதித்தார். அவருக்கு ஏற்கெனவே அந்த எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை. நான் சொன்னவுடன், “கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என்றார். பிறகு 2026 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தபோது மீண்டும் கேட்டேன். “எழுத ஆரம்பித்துவிட்டேன். கண்டிப்பாகத் தருகிறேன்” என்றார். அந்தப் புத்தகம் இப்போது வெளியாகியிருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், முதலில் ஆண்களின் மார்பகப் புற்றுநோய் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியாது. பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாக மார்பகப் புற்றுநோயைப் பலரும் நினைக்கிறார்கள். ஆண்களுக்கும் இது வரலாம் என்பது பலருக்கும் தெரியாததால், இந்தப் புத்தகம் உண்மையிலேயே ஒரு Eye-opener.

இரண்டாவது, இந்தப் புத்தகம் முழுவதும் பேசும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவரைவிட (அல்லது அதே அளவுக்கு) பாதிக்கப்படுவது அவருடைய குடும்பம். “இது சரியாகுமா? சரியாகாதா? இவர் மீண்டு வருவாரா?” என்ற தெரியாமல், இது தரும் மன உளைச்சல், இதைக் கடந்து வருவது சாதாரண விஷயம் அல்ல.

இதை நான் நேரில் பல நண்பர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்; என்னுடைய நண்பணின் மகன் பன்னிரண்டு வயதில் ரத்தப் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட மீண்ட பிறகு, புற்று மீண்டும் தாக்கி எங்களை விட்டுப் பிரிந்தான்.. அந்தக் குடும்பம் இரண்டு ஆண்டுகள் அனுபவித்த வேதனையை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். (அந்த வலி எழுப்பிய கேள்விகளே நான் எழுதிய ‘கர்மன்’ என்ற நாவல்.)

என்னுடைய நெருங்கிய நண்பரின் குடும்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் புற்றுநோயால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் புற்றுநோய் தரக்கூடிய மன அழுத்தம், வேதனை பற்றி எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது. அந்த Stressஐ அளவிடவே முடியாது.

சமீபத்தில் Palliative Care பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன். அது விரைவில் தமிழில் வரப்போகிறது. அந்தப் புத்தகத்தை யார் வெளியிடுகிறார்களோ, அவர்கள் அதைப் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள். நல்ல முக்கியமான புத்தகம் அது.

அந்தப் புத்தகத்திற்கும் இந்தப் புத்தகத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இரண்டு புத்தகங்களும் நோயாளியை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கின்றன.

இந்தப் புத்தகத்தில், சுதாகர் கஸ்தூரி எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார், அவருடைய குடும்பத்தினர் எப்படி உறுதுணையாக இருந்தார்கள், நண்பர்கள் எப்படி துணையாக இருந்தார்கள் அல்லது சிலர் எப்படி விலகிச் சென்றார்கள், சமூகத்தில் இருக்கும் தவறான நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், “இது தொற்றுநோய்” போன்ற பல கற்பிதங்கள்—இவை அனைத்தையும் மிகத் தெளிவாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதைவிட முக்கியமான விஷயம், இத்தனை பிரச்சினைகள், இத்தனை எதிர்மறை அனுபவங்கள் இருந்தாலும், இந்தப் புத்தகம் விதைப்பது Positive Thinking.

புற்றுநோய் வந்துவிட்டால் மருந்து வாங்குவது, மருத்துவமனைக்குச் செல்வது, செலவுகள், நீண்ட நேரம் காத்திருப்பது, பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பது, எதிர்மறையான முடிவுகள் வருவது, மீண்டும் போராட வேண்டிய நிலை, தனிமையில் உட்கார்ந்து “இனி என்ன செய்வது?” என்று சிந்திப்பது—இவை அனைத்தையும் சொல்லிக்கொண்டே, இந்தப் புத்தகம் ஒரு நேர்மறை நம்பிக்கையையும் இணையாக விதைக்கிறது. அதுதான் இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.

“உங்களால் முடியும். உங்களால் ஜெயிக்க முடியும். இதைத் தாண்டி வர முடியும்.” அதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைச் செய்தி.

புற்றுநோய் வந்தவுடன் ஒவ்வொருவரின் மனத்திலும் எழும் முதல் கேள்வி, “ஏன் எனக்கு மட்டும் இப்படி?” என்பதுதான். உண்மையில் எந்த நோயாக இருந்தாலும், குறிப்பாக புற்றுநோயாக இருந்தாலும், முதலில் எழுவது இந்தக் கேள்விதான். இந்தக் கேள்வி இந்தப் புத்தகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. நான் குறிப்பிட்ட Palliative Care புத்தகத்திலும் மிக முக்கியமான கேள்வியாக “Why Me?” என்பதே பேசப்படுகிறது.

“ஏன் எனக்கு இப்படி வந்தது?” என்பதைத் தாண்டி, “நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேனே!”, “என் குடும்பம் என்ன செய்யப் போகிறது?”, “பொருளாதார ரீதியாக நான் என்ன செய்வேன்?” என்ற எல்லா கேள்விகளையும் கடந்து, “நான் ஜெயிக்க முடியும்; இதைத் தாண்டி வர முடியும்; ஒரு Survivor-ஆக வாழ முடியும்” என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகம் வலிமையாகச் சொல்கிறது.

அதை சுதாகர் கஸ்தூரி மிகவும் அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.

புற்றுநோய் பற்றிய ஒரு புரிதல் அவருக்கு ஏற்கெனவே இருந்ததாலும், அவர் ஒரு சிறந்த சிந்தனையாளராக இருந்ததாலும், இந்த நோயை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. அவர் மருத்துவர்களுடன் பேசிய விதம், மருத்துவ அறிக்கைகள் வந்தபோது அவற்றைப் புரிந்துகொண்டு விவாதித்த விதம், நோயைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்ட விதம்—இவை அனைத்தும் இந்தப் புத்தகத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது வெறும் வலியை மட்டும் சொல்லும் புத்தகம் அல்ல. அதையும் தாண்டி, எப்படி நம்மால் நோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகம். அந்த அடிப்படையில், ‘நெஞ்சிலோர் நண்டு’ மிக முக்கியமான நூல்.

புத்தகத்தை வாங்க https://www.swasambooks.com/products/nenjilor-nandu/3569293000002990031 | போன் 81480 66645

Share

Vyasaraja Mutt Controversy

மத்வ மடங்களில் ஒன்றான சோசலே வியாசராஜ மடம் (Sosale Vyasaraja Mutt), கடந்த சில ஆண்டுகளாக வாரிசுரிமைப் போராட்டங்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதாவது அடுத்த பீடாதிபதி யார் என்பது குறித்த சிக்கல்.

2010 வாக்கில் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2012-ல் கர்நாடக அரசு மடத்தின் சொத்துக்களைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அதை நிர்வகிக்க ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது. 2017 ஜூன் மாதத்தில் ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் தனது பதவியை விட்டு விலகினார்.

மடத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், மடத்தின் பாரம்பரியத்தைக் காக்கவும் ஒரு சட்டப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி,  ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர்  (பூர்வாசிரமப் பெயர்: டி. பிரகல்லாதாச்சார்) உடனடியாகப் புதிய பீடாதிபதியாக வேண்டும், அதே வேளையில் ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தர் (பூர்வாஸ்ரம பெயர்: புஷ்கராச்சார்) என்பவரை மடத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ இளைய பீடாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று முடிவானது.

ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தருடன் சேர்ந்து புதிய பீடாதிபதி வித்யாஸ்ரீஷ தீர்த்தர் சில நாட்களுக்கு மடத்தின் மூல விக்கிரகங்களைத் தொட்டு இணைந்தே பூஜைகளைச் செய்தார். பீடாதிபதிகளைத் தவிர வேறு யாருக்கும் இந்த மூல விக்ரகங்களைத் தொட உரிமையில்லை. மத்வத்தில் மூல விக்ரகங்கள் மிக முக்கியமானவை. ஆனால், சில நாட்களிலேயே எந்தவொரு காரணமும் கூறாமல், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரை மடத்தை விட்டு வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தரப்பு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது. (இதுகுறித்துப் பல குமுறல்கள் ரீல்ஸ்களாகவும் யூ டியூபிலும் கிடைக்கின்றன.)

தற்போது பிரச்சினை என்னவென்றால், ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தனது பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரனான பிரணவ் (பெயர் சரியா எனத் தெரியவில்லை) என்பவரை அடுத்த மடாதிபதியாகக் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பதுதான். தனது பேரனை மூல விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்ய அனுமதித்தது அடுத்த பிரச்சினை.

பொதுவாக பேரனை அடுத்த பீடாதிபதியாக மத்வ மடங்களில் நியமிப்பதில்லை என்றாலும், கடந்த காலங்களில் இப்படி நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரைத்தான் அடுத்த பீடாதிபதியாக்க வேண்டும் என்று எழுத்துபூர்வமான சட்டப்பூர்வ ஒப்பந்தம் இருக்கும்போது, அதை மீறித் தன் பேரனைக் கொண்டுவர தற்போதைய பீடாதிபதி முயல்வது பிரச்சினையாகியுள்ளது.

நான் ஏதோ ஒரு ரீல்ஸைப் பார்க்கப் போக, கடந்த இரண்டு மூன்று நாள்களாக இந்தப் பிரச்சினையை ஒட்டிய ரீல்கள் வந்து குவிகின்றன. என்னடா பிரச்சினை என்று தோண்டித் துருவிப் பார்த்ததில், சாட் ஜிபிடி, ஜெமினை உதவியுடனும், சில யூ டியூப் சர்ச்சைகளைக் கேட்டும் சிலரிடம் பேசியும் நான் புரிந்துகொண்டவை இவை.

தற்போதைய பிரச்சினைக்குரிய ஸ்ரீவித்யாஸ்ரீஷ தீர்த்தர் பெரிய அறிவாளி. ஸ்காலர். பல இடங்களிலும் வியாசராஜ மடத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி விரிவாக்கியவர். இதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இவரது பிரச்சினைக்குரிய செயல்பாட்டை, நிர்வாகப் பிரச்சினைகளை, குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அடுத்த பீடாதிபதி பதவியைத் தர முயல்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

Share