Saturday vibes

#சனி_வைப்ஸ்

நேற்றிரவு 12 மணி முதல் 1 மணி வரை நல்ல ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டேன். எப்படியோ சுற்றிமுற்றி வழக்கம் போல ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது மற்றும் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து  யேசுசுதாசின் பாடல்களுக்கு வந்து சேர்த்தேன்.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல் வரிகள் என்ன ஓர் இசைவு. வார்த்தைத் தேர்வுகளும் இடறாத சந்தமும் அர்த்தமற்ற வார்த்தைகளை அள்ளித் தெளிக்காத அவசரமின்மையும் (வாலி  என நினைக்கிறேன்) அற்புதம்.  இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் அனுபவித்து இருந்தால்தான் புரியும்

பின்னர் ஒலித்தது சொர்க்கம் மதுவிலே. உண்மையில் சொர்க்கம்தான். இசை, எஸ்பிபி குரல், வரிகள் என ஒன்றுக்கொன்று போட்டி போடும் பாடல். வரிகளில் கண்ணதாசனின் ஆட்டம் இப்போது எழுதியது போல் இருக்கிறது. இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Share

Eko – Truly a Master Piece

Eko (M) – என்ன சொல்ல! எப்படியாவது வார்த்தைகளில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு த்ரில்லர் வகைப் படத்தை இத்தனை விரிவாக இத்தனை ஆழமாக எடுக்க முடியுமா? த்ரில்லரும் இலக்கிய வகைமையும் ஒன்று சேர முடியுமா? த்ரில்லை திரைப்படத்தை ஓர் இலக்கிய நாவல் போல எழுத முடியுமா? நாவலில்கூட கை கூட முடியாத சில நுட்பங்களைத் திரையில் கொண்டு வந்துவிட முடியுமா? இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, நிலம் என அனைத்தும் ஒரு படத்தில் ஒன்றுகொன்று உச்சமாக இயைந்து ஒத்துழைக்க முடியுமா? ஓர் இந்திய நிலத்தில் இன்னொரு நிலத்தின் ஆத்மாவையும் காதலையும் அச்சு அசலாகக் கொண்டு வந்துவிட முடியுமா? ஒவ்வொரு நொடியும் புல்லரிக்க வைக்கும் காட்சியும் வசனமும் திரைக்கதையும் என படம் தொடங்கிய நொடி முதல் இறுதி வரை கொண்டு செல்ல முடியுமா? மெல்ல நகரும் படம் ஆனால் இப்படி விறுவிறுப்பாக இருக்க முடியுமா? ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரையில் இப்படிச் செதுக்க முடியுமா? தேவையற்ற காட்சி ஒன்று கூட இல்லாத ஒரு படம் இருக்க முடியுமா? அத்தனையையும் செய்து காட்டி இருக்கிறது எக்கோ என்னும் மலையாளத் திரைப்படம்.

இது திரையில் ஒரு ஆழமான நாவல். த்ரில்லர் வகையின் ஆழமான இலக்கியப் பிரதி.

இறுதிக் காட்சியில் வரும் புல்லரிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இது ஒரு திரையரங்க அனுபவமாக முகிழ்ந்திருக்கவேண்டும். தவற விட்டுவிட்டேன்.

நாம் எப்போது தமிழில் இப்படி ஒரு படம் எடுப்போம் என என்னால் யூகிக்கக் கூட முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் திறமைச்சாலிகளுக்குக் குறைவில்லை. தேவையற்ற அரசியல் தூண்டிலில் சிக்கிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மலையாளிகளோ நிலம் சார்ந்த கதை, கதை சார்ந்த திரைக்கதை என இடதுகையால் திரைப்படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் செலவு 5 கோடிதானாம். நம்ப முடிகிறதா?

எந்த வித நட்சத்திர மதிப்பும் இல்லாத பையன் அப்படி நடிக்கிறான். விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மலையாளப் பையன்கள் அசரடித்துவிடுகிறார்கள். சந்தீப் பிரதிப்புக்கு 25 வயது இருக்குமா? சில படங்களில் சாதாரண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அப்படிச் சாதாரணமாக வந்து பின்னர் இந்தப் பையன் எடுக்கும் விஸ்வரூபம் நம்மை வாய் பிளக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் தின்ஜித் அய்யநாதன். இவரது கிஷ்கிந்தா காண்டமெல்லாம் இந்தப் படத்தின் முன்னால் ஒன்றுமே இல்லை என்றால் இந்தப் படம் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை என அனைத்திலும் இந்தப் படம் தேசிய விருது பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

டோண்ட் மிஸ் வகையறா.

Truly a master piece.

Share

45 Kannada Movie

45 என்றொரு கன்னடப் படம். ரீல்ஸில் ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்த்துவிட்டு சிவராஜ் குமாரின் ஃபிரஷான நடிப்பை முழுவதுமாகப் பார்ப்போம் என்று நினைத்து அந்தப் படத்தைப் பார்த்தேன். ரீல்ஸில் எத்தனை நேக்காக என்னை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த படத்திலேயே எது இரண்டு காட்சியோ அதை மட்டும் ரீல்ஸில் சுத்த விட்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்த பின்னர்தான் எனக்கு உரைத்தது.

கருட புராணத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் என்ற போர்வையில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஸ்பாய்லரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்தில் என்னவெல்லாமோ வருகிறது. என்ன பிரச்சினை என்றால் படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே இதுதான் கதை என்று நான் தீர்மானித்தேன். ஆனால் படம் போக போக அந்தக் கதை இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியில் கிளைமாக்ளில் பார்த்தால் நான் நினைத்ததுதான் கதை. ஒரு ட்விஸ்ட்டுடன். 

கிளைமாக்ஸில் ஒரு திருப்பம் கொடுக்கிறார்கள் பாருங்கள், உலகத்திலேயே இப்படி ஒரு கற்பனையை எவனும் செய்ததில்லை.

ரத்த குளிகா பாதாள குளிகா என்று பல குளிகா காந்தாராவில் எட்டிப் பார்ப்பது போல சிவராஜ் குமார் ஒவ்வொரு பெயராக அழைக்க அத்தனை தெய்வங்களும் சிவராஜ்குமாராகவே வருகிறார்கள்‌ கிராஃபிக்ஸில் கலக்குகிறோம் என்று கண்கொண்டு பார்க்க முடியாதபடி என்னவெல்லாமோ செய்து வைத்திருக்கிறார்கள். 

உபேந்திராவை விறைப்பாக நடிக்க வைக்கிறேன் என்று நம்மைச் சாவடித்து விட்டார்கள். உபேந்திரா, ராஜ் பி செட்டி, சிவராஜ்குமார் என்று பல பெரிய கைகள் இருந்தும் படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், கதையும் பாழாய்ப் போன திரைக்கதையும்தான் காரணம்.

 கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.

Share

TTT review

தலைவர் தம்பி தலைமையில் – சுமாரான திரைப்படம்தான். ஆனாலும்…

படம் முழுக்க வெட்டு குத்து ரத்தம் போன்றவை இல்லை என்பதற்காகவும், கஞ்சா குடி எனப் படம் நெடுக வலிய திணிக்காமல் இருந்த காரணத்துக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். இன்னும் வேறு சில விஷயங்களுக்காகவும் பார்க்கலாம். இயக்குநர் மலையாளி என்பதாலோ (ஃபேலிமி) என்னவோ மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு. ஃபேலிமி அளவு இல்லையென்றாலும், அழகான உணர்வுதான். நேரடி சிறிய பட்ஜெட் மலையாளத் திரைப்படங்கள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் வெறுக்காது.

மிக எளிய கதை. முதல் ஒரு மணி நேரம் கலகலப்பாகவே இருந்தது. பின்னர்தான் கொஞ்சம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. முடிவை வேறு மாதிரி யோசித்திருக்க வேண்டும். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், மலையாளத் திரைப்படங்களில் வருவது போலவே அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். சிறிய வேடத்தில் நடிப்பவர்கள் உட்பட. கொஞ்சம் சுமாராக நடித்தார் என்றால் அது ஜீவா மட்டுமே. தம்பி ராமையா, இளவரசு இருவரும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.

படத்தில் சில காட்சிகள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டன. குழிக்குள் காதலி காதல் காதலனைக் கட்டிக் கொள்ளும் காட்சி. தம்பி ராமையா தன் பொண்ணு வீட்லதான் இருக்கா என்று சொன்னபடியே வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளும் காட்சி. இந்தக் கதவை மூடிக்கொள்ளும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அதைச் சரியான இடத்தில் நிறுத்தியதுதான். தொடர்ந்து அழுவது போலக் காண்பிக்காமல் அப்படி நிறுத்தியது அழகாகவே இருந்தது.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள், மினி மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்க்க விரும்புபவர்கள், நாகர்கோவில் வட்டார வழக்கை உருப்படியாகக் கேட்க நினைப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்.

Share

Parasakthi – Tamil Movie

பராசக்தி – இயக்குநர் சுதா கொங்கரா தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தினை நக்சலைட் போராட்டம் என்று புரிந்து கொண்டிருக்கிறார். தேடி தேடி மாணவர்களை காவல்துறை வேட்டையாடுவதும், போராட்டம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் வன்முறைகளும் படமுழுக்கக் கொட்டிக் கிடைக்கின்றன. மாணவர்களுக்கு நல்ல பெயர் வருவதற்காக, போராட்டக்காரர்கள் புகைவண்டியில் இருப்பவர்களை இறக்கிவிடுவது போலக் காண்பிப்பதும், பின்னர் தன் தம்பியை அடிக்க வருபவனைக் கொளுத்துவதும் என முன்னுக்குப் பின் முரணாகப் பல காட்சிகள். வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டுப் பின்னர் இன்னொருத்தனை நடுத் தெருவில் கொளுத்துவானேன்?

உண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட (அப்படிச் சொல்லப்பட்ட) போராட்டம் இங்கே இந்த படத்தின் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மாணவர்கள் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்தினார்கள் என்பதை நம்ப முடியாது. எப்போதுமே எங்கேயுமே தன்னிச்சையாகப் போராட்டம் இந்தியாவில் நடக்க வாய்ப்புகள் குறைவு. யாரோ ஒருவர் பின்னால் இருந்துதான் நிச்சயம் அதை வழி நடத்தி இருக்க வேண்டும். சுதா கொங்கராவுக்கு திமுக மேல் என்ன கோபமோ தெரியவில்லை, மிகத் தெளிவாக இந்தப் போராட்டத்திற்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் திமுகவினர் ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டதாகக் கூட அவர் காண்பிக்கவில்லை.

ஹிந்தித் திணிப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் என்ன என்பதைப் பற்றிய விரிவான பிரச்சினைகளும் இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரே ஒரு நேர்காணலை மட்டும் காட்டிவிட்டு, திரைப்படத்துக்கு அது போதும் என்று முடிவு கட்டி விட்டார்கள்.

இயக்குநரின் இன்னொரு பிரச்சினை, இந்தியா முழுக்கத் தனக்கு நல்ல பெயர் வேண்டும் என்கிற எண்ணம். அதுதான் திரைப்படத்தின் திரைக்கதையே கந்தரகோலம் ஆக்கி விட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இது ஹிந்திக்கு எதிரான போட்டம்தான், ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரானதல்ல என்று சொல்வது படு செயற்கைத்தனம். சினிமாவில், மேடையில் இப்படி வசனம் பேசலாம். ஆனால் ஒரு போராட்டம் இப்படிப் பார்த்து பார்த்து இலையில் உணவு பரிமாறுவதுபோல் நடக்காது. எந்த வன்முறைக்கும் எந்தப் பேதமும் கிடையாது.

காலம் காலமாகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கர்களும் ஆந்திரத் தெலுங்கர்களும் ஒன்றல்ல (இது கன்னடர்களுக்கும் பொருந்தும்) என்கிற புரிதல் மிக முக்கியம். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பக்கத்து வீட்டுத் தெலுங்கர்கள் தங்கள் வீட்டில் பேசிக்கொள்ளும் மொழி தெலுங்காக இருந்தாலும், அவர்கள் வீட்டுக்குள் செய்து கொள்ளும் சடங்குகள் தெலுங்கர்களுடையதாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இணையாகவே (கூடுதலாகவே தமிழ் உணர்வுடன் என்று கூடச் சொல்லலாம்) வாழ்கிறார்கள். இது சக தமிழர்களுக்கும் தெரியும். இந்தப் படம் அதைச் சரியாகக் காண்பிக்கவில்லை. நல்லவேளை, கடைசியில் அந்தப் பெண் ஒரு வசனம் பேசுவதாகவாவது வைத்தார்கள்.

தன் இந்திய இமேஜைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழர்களின் போராட்டத்தில் தெலுங்கர்கள், கன்னடர்கள், சௌராஷ்ட்ராவினர், மலையாளிகள், இது போதாது என்று பெங்காலி பேசுபவர்கள் என அனைவரும் உயிரைக் கொடுத்தார்கள் என்று காண்பித்ததெல்லாம் அதீதம். இது படத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிற மாநிலங்களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு இணையாக (அத்தனை தீவிரமாக இல்லையென்றாலும்) தமிழ்/தமிழர் எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது அவர்கள் தமிழ்நாட்டுக்கு ரத்தம் சிந்தினார்கள் என்பதெல்லாம் காதில் பூச்சுற்றல். பேருந்தின் மீது ஏறி நின்று இங்கே ஹிந்திதான் வேண்டும் என்பதுதான் எங்கள் போராட்டம் என்று கதாநாயகன் சொல்வதெல்லாம் நகைச்சுவை வசனமின்றி வேறில்லை.

அதைவிட கொடுமை மாணவர்களின் போராட்டத்தை ஒரு காவல்துறை அதிகாரியின் ஈகோ கதையாக மாற்றியது. அதில் அவருக்கு அடையாளச் சிக்கல் வேறு. தான் தமிழனுக்குப் பிறந்தாலும் தன் உடம்பில் ஓடுவது ஹிந்தி ரத்தமே என்பதை நிரூபிக்கத்தான் இத்தனையும் அவர் செய்கிறார் என்பதெல்லாம், ஒட்டுமொத்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டது.

இது அப்பட்டமான பிரசாரப் படம் என்பதால், இந்தப் போராட்டத்தினால் உயிரிழந்த காவல்துறைக்காரர்களைப் பற்றி எதையுமே காண்பிக்கவில்லை. மொத்தம் பத்து காவல்துறை அதிகாரிகளாவது இறந்திருப்பார்கள் என்று வரலாறு சொல்கிறது. சமீபத்தில் கூட இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட காவல்துறை வீரர் ஒருவரது மனைவியின் பேட்டியை நாம் பார்த்தது நினைவிருக்கலாம்.

இந்தப் போராட்டம் நடந்தபோது முதல்வராக இருந்த பக்தவத்சலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் கொடுமை. அதிலும் பொள்ளாச்சியில் அனைவரையும் கொன்று குவிக்கிறேன் என்று காவல்துறை அதிகாரி செல்லும்போது, அதை ஒரு கொடூரமான மகிழ்ச்சியுடன் அவர் ஏற்பது போலக் காட்டியிருப்பதெல்லாம் கேவலம். தமிழில் ஒரு நடிகர் இதை நடித்தால் பிரச்சினை வரும் என்று நினைத்தார்களோ என்னவோ, ஒரு கன்னட நடிகரை (பிரகாஷ் பெலவாடி – நல்ல நடிகர்) நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் ரவி மோகனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற எல்லாமே வேஸ்ட்.

இந்திரா காந்தியாக நடிக்கும் அந்தப் பெண்ணின் பார்வை ஏன் அப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. டெல்லி சாலையில் நடக்கும் பைத்தியக்காரத்தனமான போராட்டத்தின் போது அவர் சாலையில் நின்று சிவகார்த்திகேயனை பார்த்த பார்வையைக் கண்டு, அடுத்த நொடியில் அவர் ஐ லவ் யூ சொல்லிடுவார் என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.

இது தவிர, வரலாற்று ரீதியாக ஆயிரம் ஓட்டைகள். இந்திரா காந்தி கோவையில் நின்று கொண்டிருக்கும்போது எரிந்துகொண்டே புகைவண்டி வருவதெல்லாம் – ஏன் தமிழ் இயக்குநர்கள் இன்னும் இத்தனை பைத்தியங்களாக இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்த தருணம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற தமிழ் வரலாற்றின் முக்கிய நிகழ்வைக் கூட இவர்களால் ஒரு ஹீரோயிஸப் படமாகத்தான் யோசிக்க முடிகிறது என்பது எத்தனை அவலம்! பெரிய மீனின் முள் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு கதாநாயகி ரேடியோவில் பேசும் சீரியஸான காட்சிகளை எல்லாம் படமாக எடுக்கக் கூசி இருக்க வேண்டாமா? புறநானூற்றுப் படை என்று கப்சா விடும்போது அசிங்கப்பட்டிருக்க வேண்டாமா!

படத்தின் ஆக்கமும் மிக மோசம். தேவையேற்ற பல காட்சிகள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் செயற்கைத் தனம். காதல் காட்சிகள், அண்ணன் தம்பி பாசம் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். பார்க்கச் சகிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ஒரே ஒரு நன்மையை மட்டும் செய்திருக்கிறது. ஹிந்திக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை வைத்து மிக தீவிரமான ஒரு திரைப்படம் வருவதை இந்தப் படம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் சுதா கொங்கராவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இசையைப் பற்றித் தனியே சொல்ல வேண்டும். மகா மட்டம்.

Share

The deceptions of Dravidan Movement of Tamilnadu

திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்

பல தலைப்புகளில் ம.வெங்கடேசன் திராவிட இயக்க அரசியல்வாதிகள் கூறி வரும் புரட்டுகளைத் தோலுரித்திருக்கிறார். ம.வெங்கடேசன் இப்படிச் செய்வது முதல் முறையல்ல, கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

இதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக திராவிட இயக்க அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் செய்யப்போவது என்ன? வாய்க்கு வந்தபடி ஏசுவது. இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு குறிப்பொன்றைப் போட்டதற்கே அத்தனை ஏச்சுகள். ஏசியவர் பெயரும் ராமசாமி என்றே இருந்தது. அவர்கள் வழக்கம் அது.

1. பூனா ஒப்பந்தம் அம்பேத்கருக்கு பெரியார் கடிதம் அனுப்பினாரா?
2. அருணன் என்ற மார்க்சிய வரலாற்றுப் புரட்டர்.
3. நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?
4. ஜாதியின் பெயரால் ஜாலம்
5. திருமண மந்திரத்தை திரிக்கும் மஞ்சை வசந்தன்
6. பெரியார் பற்றி வ.உ.சி.
7. பச்சையப்பன் கல்லூரி திறக்கப்பட்டது யாரால்?
8. வ.உசி.க்கு, ஈவெரா கப்பல் வாங்க பணம் கொடுத்தாரா?
9. புரட்சியாளர் அம்பேத்கர் மாட்டுக்கறி உண்ணச் சொன்னாரா?
10. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குற்றம் சாட்டினாரா காமராஜர் ?
11. ஈவெராவால் கொண்டுவரப்பட்டதா எழுத்துச் சீர்திருத்தம்?
12. முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சியா?
13. பாரதியாருக்கு உயிர் மூச்சு தமிழா, ஆரியமா?
14. பெண்கள் சொத்துரிமை
15. பாடப்புத்தகத்தில் தவறான தகவல்

இந்தத் தலைப்புகளில் ம.வெங்கடேசன் எழுதி இருப்பவை அனைத்துமே மிக முக்கியமானவை. எந்த அளவுக்கு இவர்கள் ஒரே பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி உண்மை போன்று நம்ப வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பூனா ஒப்பந்தத்துக்கு ஈவெரா தந்தியடித்தார் என்பது இவர்கள் பல ஆண்டுகளாக அடித்துக்கொண்டிருந்த தந்தி. அதுவும் இணையத்தில் தமிழ் பரவிக்கொண்டிருந்த 2000களில் இந்தப் பொய்யெல்லாம் உலகபிரசித்தம். அது உண்மையே இல்லை என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லி இருக்கிறார் ம.வெ.

கோட்ஸே ‘இஸ்மாயில்’ என்று தன் கையில் பச்சை குத்திக்கொண்டிருந்தார் என்ற பொய்யைப் பரப்பியவர்கள் இன்றுவரை அது தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை.

அருணனுக்கு ம.வெ கொடுத்திருக்கும் பதிலடி மிக முக்கியமானது. ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக முயன்ற வரலாற்றை மறைத்து, ஜாகிதார்களையே எம் எல் ஏக்கள் ஆக்கினார்கள் என்ற பாதி வரலாற்றை மட்டும் சொல்லி கம்யூனிஸ்டுகள் செய்யும் புரட்டை மவெ விரிவாக விளக்கி இருக்கிறார். உண்மையில் பாஜக அன்று செய்தது இன்று வரை அரசியலில் யாரும் செய்யத் துணியாத ஒன்று.

‘ஈவெரா என் குருநாதர்’ என்று வ உ சி சொன்னதாகச் சொல்லும் புரட்டெல்லாம் வேறு வகை. கடைசியில் பார்த்தால், ‘வ உ சி தான் என் அரசியல் குரு’ என்று ஈவெரா சொல்லி இருப்பதை மவெ ஆதாரத்துடன் பதிவிடுகிறார். (ஈவெரா இப்படிச் சொன்னதுகூட வ உ சிக்கு அவமரியதை என்பதுதான் என் நிலைப்பாடு!)


Advt
ஆரிய திராவிட மாயை, கு.சடகோபன், சுவாசம்.

பச்சையப்பன் கல்லூரி அனைத்து ஜாதியினருக்கும் திறந்துவிடப்பட்டது என்பது, இன்றைய திராவிட இயக்க அரசியல்வாதிகள் சொல்லும் பொய்களுக்கு இணையானது. அதையும் அடித்து நொறுக்கிவிட்டார் மவெ. (ஏன் மகாத்மா காந்தி ஒரு மகான் என்பதற்கும் இந்தக் கட்டுரையில் பதில் இருக்கிறது.)

ஆர் எஸ் எஸ் குறித்து காமராஜர் சொன்னதாகச் சொல்லப்படும் பொய், எப்படி திராவிட இயக்க அரசியல்வாதிகள் ஒரு வரியை வெட்டி ஒட்டி அரசியல் வரலாறே எழுதுவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

எல்லா ஆதாரங்களும் கிடைக்கும் நிலையிலேயே இவர்கள் இத்தனை தூரம் அரசியல் செய்திருக்கிறார்கள் என்றால், மற்ற விஷயங்களில் இவர்கள் எத்தனை தூரம் போவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

நான் அடிக்கடி சொல்வதுதான். பாஜக சார்பாகத் தொலைக்காட்சிகளிலும் வேறு விவாதங்களிலும் பங்கேற்க விரும்புகிறவர்கள் மனப்பாடம் செய்யவேண்டிய புத்தகங்கள், அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், சுப்புவின் திராவிட மாயை புத்தகங்கள் உள்ளிட்ட இருபது புத்தகங்கள். இவற்றைப் புரிந்துகொண்டுவிட்டால், நீங்கள் விவாதங்களில் எவரையும் எதிர்கொண்டுவிடலாம். அவர்கள் பரப்பும் புரட்டுகளுக்கு அங்கேயே பதிலடி தந்துவிடலாம்.

அப்படிப்பட்ட பட்டியலில் இன்னுமொரு மைல்கல்லாகச் சேர்ந்திருக்கிறது ம.வெங்கடேசனின் ‘திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்’.

இந்தப் புத்தகத்துக்குத் தேவையற்ற விளம்பரம் தந்து நன்றி தேடிக்கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைப் போல, தமிழக அரசைப் போல, சோஷியல் மீடியா திராவிட இயக்க ஆதரவாளர்களும் செய்வார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால் அவர்களால் ஏசாமல் இருக்க முடியாது.

***
நாளை காலை 11 வரை இந்தப் புத்தகம் சுவாசம் புக்ஸ் வலைத்தளத்தில் 15% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

புத்தகம் வாங்கும் லின்க் https://www.swasambooks.com/products/225301000102875007

Share

Sarvam Maaya

சர்வம் மாயா (M) – இப்படி அழகான க்யூட்டான ஒரு பேய் கிடைக்குமானால் நான்கைந்து பேய்களுடன் வாழலாம் என்பதைத் தாண்டி இந்தப் படத்தில் ஒரு சுக்கும் இல்லை. ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமான கதைகளை மலையாளிகள் காதலிக்கிறார்கள் என்பது புரியவில்லை. கதை திரைக்கதை லாஜிக் என எதுவுமே இல்லாமல் மொக்கையாக ஒரு திரைப்படம். அங்கங்கே லேசாகப் புன்னகை வரப் பார்க்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தை முழுமையாக ஏன் பார்த்தோம் என்பதும் புரியவில்லை. கதாநாயகி அழகாக நடிக்கிறார். நிவின் பாலி தன் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக நகரும் திரைப்படம். போட்டுப் படுத்தி எடுத்து விட்டார்கள். மலையாள படங்களைத் தமிழ் டப்பிங்கில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்‌ எத்தனையோ அரத மொக்கையான மலையாளப் படங்களைப் பார்த்து வைரம் பாய்ந்த கட்டைகள் மட்டும் ஒரு முறை பார்க்கலாம்.

Share

Exiled from Ayodhya

ராமன் வனவாசம் போன வழி – இந்த நூல் சீர்சேந்து முகோபாபாத்யாய எழுதிய நூல். இந்த நூலைப் பற்றி நான்கு வரிகளாவது எழுதாவிட்டால் ராமபாவம் என்னைச் சும்மாவிடாது.

சீர்சேந்து முகோபாத்யாயாவுக்கு ராமாயணம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. அல்லது வம்படியாகத் தவறாகப் புரிந்துகொள்ளும் தீவிர இலக்கியவாதியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ராமன் வனவாசம் போன வழியைத் தேடி அவர் போவது எல்லாம் பிரமாதம்தான். உண்மையில் இது ஒரு மனநிலை. இதைச் செய்ய ஆழமான பற்றுடன் கூடிய முற்றான விலகலும் வேண்டும். இலக்கியவாதிகளுக்கே இது சாத்தியம்.

முதலில் அயோத்திக்குச் செல்லும் சீர்சேந்துவுக்கு எல்லாமே எரிச்சலாகத்தான் இருக்கிறது. பக்திப் பயணத்தைத் தன் தீவிர இலக்கிய அறிவால் அளக்க நினைப்பவர்களுக்கு இப்படித்தான் அமையும். அயோத்தி/காசியின் அறைகள், தெரு, நீர் எல்லாமே மாசடைந்திருக்க, தெருக்களில் நிலவும் ராம கோஷம் எல்லாமே எரிச்சலாகவே இருக்கிறது. ஆனாலும் மானுட நம்பிக்கை இவருக்கு இருக்கிறது. மனிதர்கள் இவரைக் கைவிடவில்லை. எல்லா மனிதர்களும் எப்படியோ உதவுகிறார்கள். இவரது பயணம் பல சுவாரஸ்யங்களுடன் தொடர்கிறது.

செல்லுமிடமெல்லாம் எப்படியோ உணவு — பணம் கொடுத்தோ இலவசமாகவோ — கிடைத்துவிடுவது இன்றுவரை இந்தியாவின் பாரம்பரியம். யாரோ எப்படியோ எங்கோ ஏனோ நமக்கு உதவுவார்கள். அவர்களைக் கடவுள் என்றாலும் சரி, மனிதன் என்றாலும் சரி. இது அனைவருக்கும் நடக்கும். (எனக்கும் நடந்திருக்கிறது.)

நூல் முழுக்க உள்ள பிரச்சினை, இவர் ராமன் சீதையின் அண்ணன் என்று தீவிரமாக நம்புகிறார். லக்ஷ்மணன் சீதையின் காதலன் என்றும் நம்புகிறார். இந்தப் பைத்தியக்காரத்தனமே பிரச்சினை. இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் மூலம், இலக்கியவாதியின் மூளை சிந்திக்கும் விதம்.

எத்தனையோ விதங்களில் ராமாயணம் வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கேயும் ராமன் சீதைக்கு அண்ணன் என்று சொல்லப்படவில்லை. (புத்தக ஜாதகக் கதைகளில் சொல்லப்பட்டிருப்பதாக ஜடாயு சொல்லும் வீடியோ.)

சீர்சேந்துவின் ஊரைச் சேர்ந்த சுகுமார் சென் என்ற ஓர் எழுத்தாளர் எங்கோ ஒரு குறிப்பில் ‘ராமன் சீதைக்குத் தங்கை, தங்கையை மணந்துகொண்டார்’ என்று கிறுக்கி வைக்க, இந்த சீர்சேந்து அதைப் பிடித்துக்கொண்டு விட்டார். இதற்கு சுகுமார் சென் ஓர் ஆதாரத்தைத் தர, அந்த ஆதாரத்தையே புத்தகத்தில் ஆதாரமாகக் கொடுத்து, அதை வைத்து இன்னும் பல கிறுக்குத்தனங்களை சீர்சேந்து சேர்த்துக்கொண்டு விட்டார். அதிலும் குறிப்பாக இது ஆரியர்களின் வழக்கமல்ல, இந்தியர்களின் வழக்கம் என்று அவர் சொல்வது!

அவர் கொடுத்திருக்கும் ஆதாரம் என்ன?

//ரிக் வேதப் பாடல் ஒன்றில்(10-3-3) சொல்லப்படும் விஷயங்கள், ராமனுக்கும் சீதைக்கு இருப்பதாக மரபாகச் சொல்லப்படும் உறவுக்கு மாறாக உள்ளன. ராம்காதார் என்ற தனது நீண்ட கட்டுரையில் இந்த வேதப் பாடலை மேற்கோள் காட்டும் முனைவர் சுகுமார் சென்1, இதை இப்படி மொழிபெயர்க்கிறார்: பத்ரனும் (தாசர அஸ்வின்/ராமன்), பத்ராவும்(உஷை/சீதை) அருகருகே நடந்து செல்கிறார்கள்: அவனது சகோதரி(உஷை/சீதை)யின் பின்னால் அவளது காதலன்(நசத்ய அஸ்வின்/லட்சுமணன்) நடக்கிறான். அக்னி தண்மையாகச் சுடர்விட்டுப் பெருக்கி ராமனுக்குப் பிரியாவிடை கொடுக்கிறான்.//

//ஆனால் சந்தேகவாதிகளுக்கும் குறைவில்லை; அவர்கள் ராமன் ஒரு ஆரியனல்ல என்று அடித்துச் சொல்கிறார்கள். அவன் கருமை நிறத்தவன்; மேலும் தனது தங்கையான சீதையைத் திருமணமும் செய்துகொள்கிறான். இது ஆரியரல்லாத சமூகத்தின் வழக்கம்.//

அந்த ரிக் பாடல் சொல்வதென்ன?

//He comes auspicious, attended by the auspicious; then like a gallant he approaches his ‘sister’ (the Dawn). Agni, spreading everywhere with bright, knowing rays, overcomes the dark night with his shining beams.”//

வழக்கம் போல உருவமாகச் சொல்லப்படுவதை, ராமனும் சீதையும் அண்ணன் தங்கை, திருமணம் செய்துகொண்டார்கள், லக்ஷ்மணன் சீதை மேல் காதல் கொண்டான் என்றெல்லாம் உளறித் தள்ளிவிட்டார். நம்ம ஊர் வம்புப் பிரசாரம் போல அந்த ஊர் வம்புப் பிரசாகர் போல.

அதாவது ஆயிரம் ராமாயணங்கள் ராமனை சீதையின் கணவன் என்று சொன்னாலும்,எங்கேயாவது ஒரே ஒரு ராமாயணம் மாற்றிச் சொல்ல, அதைப் பிடித்துக்கொண்டு, மற்ற ஆயிரத்தையும் மறுக்கும் மனநிலைக்குப் பெயர்தான், இலக்கியவாதிகளின் மனநிலை!

இத்துடன் நிற்கவில்லை. எல்லாவற்றிலும் ஒரு குதர்க்கப் பார்வை.

லக்ஷ்மணனுடன் சீர்சேந்துவின் சந்தேகப் பார்வை நிற்கவில்லை. பரதனுக்கும் தொடர்கிறது. பரதன் ராமனிடம் இருந்து பாதுகையைக் கேட்டது, ராமன் அந்த வெயில் காலத்தில், கல்லிலும் முள்ளிலும் கஷ்டப்பட்டு நடக்கவேண்டும் என்பதற்காக என்பது இவரது கண்டுபிடிப்பு. இது உள்ளூற ராமனுக்கும் தெரியுமாம். ஏனென்றால், பரதனுக்கு மணிமுடி மேல் பேராசை, ஆனால் அது ராமனுக்குத் தரப்பட்டதால், இப்படிப் பாதுகை கேட்டு ஒரு பழிவாங்கல் என்பது சீர்சேந்துவின் இலக்கியத் திறனாய்வு.

//“பரதன் பாதுகையைத் தவிர வேறெதையும் கேட்கவில்லை. புத்திசாலி. ராமனிடமிருந்து பாதுகையை வாங்கிச் சென்றுவிட்டால் ராமன் இந்த இடத்தில் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாவான். ராமனின் உயிர்கூட போய்விடலாம். ஹா ஹா ஹா. இந்தப் பார்வையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “என்ன சொல்ல? அது உண்மையாகக்கூட இருக்கலாம்! அரசியல் என்றால் அப்படித்தானே இருக்கும், சரிதானே?”//

//அரியணையைத் துறந்து வனவாசம் போவேன் என்பதில் ராமன் உறுதியாக இருந்ததற்கு தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்திருக்க வேண்டியதில்லை. நற்சிந்தனை கொண்ட அந்த இளைஞன், கைகேயியின் பேராசையையும் அரியணைமேல் பரதனுக்கிருந்த ரகசிய ஆசையையும் உள்ளூர உணர்ந்தே இந்த சிறுமையான பதவிமோகச் சண்டையிலிருந்து தூர விலகி நிற்க முடிவுசெய்தான்.//

தொடரும் இவரது பார்வை பற்றிச் சில வரிகள் இன்னும்.

//ஆனால் அது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. பிணத்தைத் தூக்கிச் சென்றவர்கள் சன்னியாசிகள்; இறந்தவரும் சன்னியாசிதான், அவரின் தலைமுதல் கால்வரை வெள்ளைத் துணியால் மூடியிருந்தது. அவரது ஆண்குறி மட்டும் ஓர் ஓட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சன்னியாசிகள் வெட்கம் மானம் பார்ப்பதில்லை; இறந்த பிறகு சொல்லவே வேண்டாம். ஆனாலும் இறந்துபோன சன்னியாசியின் ஆணுறுப்பு ஆன்டெனாவைப் போல எதற்காக மேலே தூக்கி இருக்கிறது? அவரது இறுதி யாத்திரையின்போது இது சொல்லும் செய்திதான் என்ன?//

எத்தனை முறை படித்தும் இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்ன விதமான பார்வை இது?

தேநீரை மாட்டு மூத்திரத்தைவிட மோசமாக இருப்பது என்பது, ஹிந்தி மொழி குறித்த கருத்து போன்ற இன்னும் சில அபிப்பிராயங்களும் சீர்சேந்துவுக்கு இருக்கின்றன. ராமனைப் பற்றி வரும்போது மூளையால் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ளும் சீர்சேந்து, மொழி என்று வரவும் எப்படி யோசிக்கிறார் என்று பாருங்கள்.

//எனக்கு இந்தி கிட்டத்தட்டப் புரிந்துக்கொள்ளப் போதுமான அளவுக்கு வசப்பட்டிருந்தது. அது எளிமையான மொழியும்கூட. இங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற சிக்கலான விவாதத்துக்குள் நான் இறங்கவில்லை. ஆனால், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மக்களோடு உரையாடுவதற்கு அது ஓர் எளிய சாதனமாக இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும். சிலருக்கு இந்தி மொழியோடு பிரச்சினை இருக்கலாம்; இருக்கவும் செய்கிறது. ஆனால் இதைப் போல விரைவாகக் கற்றுக் கொள்ளக்கூடியதும் கூலிக்காரர் முதல் பெரிய ஆளுமைகள் வரை புரிந்துகொள்ளக்கூடியதுமான வேறு இந்திய மொழி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இந்தியை வெறுக்கிறார்கள் என்றும் அங்கே எல்லோருக்கும் ஆங்கிலம் புரியும் என்றும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இது உண்மையல்ல என்பது அங்கே போனபோதுதான் தெரிந்தது. கன்னியாகுமரியிலும் சரி ராமேஸ்வரத்திலும் சரி – கர்நாடகத்திலும்தான் – பேச முடியாமல்போகும் மௌனப் புயல் அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்திதான். ஆங்கிலமல்ல. இந்திக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று என்னை விமர்சிக்கக் கூடும்; நான் அனுபவித்துத் தெரிந்துகொண்ட உண்மையை மறைப்பது அவ்வளவு உசிதமல்ல என்பது என் எண்ணம். என்னை விடுங்கள், சுவாமி விவேகானந்தரே இந்திக்குத் தேசிய மொழி அந்தஸ்தை அளித்திருக்கிறார். ‘தேசிய மொழி’ என்ற வார்த்தையில் அபாயகரமான அர்த்தங்கள் தொனிப்பதால் நான் அப்படிச் சொல்லாமல், இந்தி எளிதாக பலருக்கும் புரிவதால் இந்தியாவின் பெரும்பகுதியிலும் பேச்சுத் தொடர்புக்கு ஏற்ற மொழியாக இருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அந்த மொழி மட்டும் தெரிந்திராவிட்டால் அயோத்தி முதல் சித்திரக்கூடம் வரையிலான எனது குறும்பயணத்தில் என்னால் எதையும் புரிந்துகொண்டிருக்க முடியாது.//

இத்தனையையும் மீறி இந்தப் புத்தகம் ஒன்றைச் சாதித்திருக்கிறது. அது முக்கியமானது. எந்த ஒன்று நம்மை இணைக்கிறது என்று பாரம்பரியவாதிகள் சொல்கிறார்களோ அதை சீர்சேந்து போன்ற முற்போக்காளர்களும் ஒப்புகொள்ளும்போது, அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

கடும் முன்முடிவுடன் ராமனை அணுகும் சீர்சேந்து, அயோத்தியின் கோசங்களால் எரிச்சலடையும் சீர்சேந்து, ஒரு கட்டத்தில் ராமபக்தியில் தன்னை இழக்கிறார். ஏனென்றால் ராம பக்தி இயல்பானது. சீர்சேந்துவைப் போல அது காரணங்கள் கொண்டும் காரியங்கள் கொண்டும் உலகை அளப்பதல்ல. அது உள்ளுணர்வோடும் காலம்காலமாக நம்மோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நம் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்தது. காசியும் அயோத்தியும் நம் நாட்டின் இரு பக்திக் கண்கள். அங்கே உங்கள் கண்ணில் படும் மாசுகளை மீறி, அவலங்களை மீறி, ராம பக்தியும் சிவ பக்தியும் உங்களைத் தூக்கிச் செல்லும். நீங்கள் அதற்கு ஒப்புக்கொடுத்தே ஆகவேண்டும்.

அயோத்தியும் காசியும் புனித நகரங்கள். சரயுவும் கங்கையும் இருக்கும் வரை, உங்கள் அகந்தை கொண்ட கால்கள் அங்கே பட்டு அந்த நீரில் முங்கி எழும்போது, இயல்பான இந்திய பக்தி உங்களை முழுக்க நனைத்திருக்கும். இதை ஒப்புக்கொள்ள ஓர் இந்திய இதயம் வேண்டும், அவ்வளவுதான். அது சீர்சேந்துவுக்கு இருந்திருக்கிறது. இதைப் பாராட்டவேண்டும். இதனாலேயே இந்தப் புத்தகம் முக்கியமான பதிவாகவும் மாறுகிறது.

//பக்தி தொற்றுவியாதி போலிருக்கிறது. எனக்கு அன்றுவரையிலும் ராமனிடம் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை; அதிலும் குறிப்பாக, அவன் வாலியைக் கொன்றதும் சீதையை வெளியேற்றியதும், தொட்டதற்கெல்லாம் சிணுங்கியதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், “ராமனையும் அவனது ஆராவாரக் கும்பலையும் நான் வெறுக்கிறேன்” என்று சொன்ன மைக்கேல் மதுசூதன தத்தைப் போல எனக்கு அவன்மீது அவ்வளவு வெறுப்புக் கிடையாது. வங்காளிகள் பலரைப் போல, நானும் அவன்மீது ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தேன்; ஆனால், அயோத்தியில் நான் கேட்ட லட்சக்கணக்கான பக்திப் பரவசக் குரல்கள் என்னை மாற்றிவிட்டன. எனக்குள் என்னையறியாமலேயே ராமன்மீதான மோகத்தின் விதை இடப்பட்டிருக்க வேண்டும். முரட்டு பக்தனான இந்த பில்லோடு சில மணிநேரம் கழித்ததில் அது முளை விட்டிருக்கிறது//

மொழிபெயர்ப்பு மிகக் கச்சிதம். அதைத் தனியே குறிப்பிடவேண்டும்.

புத்தகத்தை வாங்கும் லின்க் www.SwasamBooks.com

Share