இறங்குமுகம்


இறங்குமுகம்

–ஹரன் பிரசன்னா

கையில் கடவுச்சீட்டுடன் விமான தளத்தில் கிஷ் செல்லும் பயணிகள் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். மற்ற விமான சேவைகளில் அளிக்கப்படும் உபசாரமும் மரியாதையும் கிஷ்ஷ¤க்குச் செல்லும் விமான சேவையில் இருக்காது என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால் மரியாதைக் குறைச்சல் கோபம் தரவில்லை. இருந்தாலும் விசிட் விசா முடிந்து மற்றொரு விசிட் விசா வாங்கி வரவேண்டியிருக்கும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொஞ்சம் மேதைமை உள்ளவன். அடித்தட்டுக் கூட்டத்திலிருந்து எந்த செய்கைகள் என்னை தனித்தாக்குமென்று அறிவேன். கையிலிருந்த கனத்த ஆங்கிலப் புத்தகத்தில் லயிப்பது போன்ற பாவனையின் மூலம் என் தனித்துவத்தை விரும்பி நிறுவ முயன்றேன்.

வரிசை நகருவதாகவேத் தெரியவில்லை. விமானத்தில் மரியாதைக் குறைச்சல் எதிர்பார்த்திருந்த எனக்கு விமான தளத்தில் மரியாதைக்குறைச்சல் எதிர்பாராததாய்ப் பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற உடனடி முடிவுக்கு வந்தேன். கொஞ்சம் தூரத்தில் முழுக்க வெள்ளையாய் ஒரு அரபி ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பி, செல்லில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். அவன் விமானதளத்தின் ஒரு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று தோன்றவே வரிசையிலிருந்து விலகி அவனிடம் சென்று அவன் பேச்சு முடியும்வரைக் காத்திருந்தேன். சாவகாசமாய் பேசி முடித்துவிட்டு “சொல்லுங்கள் அன்பரே”என்றான். மிகத் தெளிவான ஆங்கிலத்தில் மறுமொழி அளித்தேன். கேள்வியை உள்ளடக்கிய ஒரு மறுமொழியில் அவன் என் ஆங்கிலத்தின் தரமும் வழக்கமான விசிட் விசா கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன் என்பதும் அவனுக்குப் பிடிபட்டிருக்கவேண்டும். கொஞ்சம் சுவாரஸ்யமானான்.

“உங்கள் பயணச்சீட்டைப் பார்க்கலாமா”என்றான். “சந்தோஷத்துடன்”என்று சொல்லி பயணச்சீட்டைக் காண்பித்தேன். சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தான். “எல்லோரும் விசா மாற்றத்திற்காக மட்டுமே செல்லும் கிஷ்ஷ¤க்கு துபாயின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நீங்கள் செல்வது ஒரு ச்சரியமான நிகழ்வுதான்”என்றான். சிரித்துவிட்டுக் கேட்டேன்.

“நான் அதிக நேரமாய் அந்த நகராத வரிசையில் நின்று பொறுமை இழந்துவிட்டேன். எங்கள் ஊரில் புகைவண்டி நிலையத்தில் கூட இத்தனை நேரம் நின்றதாய் நினைவில்லை. ஒரு விமான தளத்தில் அதுவும் ஒரு நாற்பத்தைந்து நேர நிமிட பயணத்தில் அடையக்கூடிய இலக்கிற்கு இத்தனை நேரம் காக்க வைத்ததன் மூலம் உங்களை அறியாமலேயே நீங்கள் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்”என்றேன். பொறுமையின்றி சிரித்தான். ஒரு புகைவண்டி நிலையத்தை, அதுவும் ஒரு இந்தியப் புகைவண்டி நிலையத்தை துபாயின் பன்னாட்டு விமான தளத்துடன் ஒப்பிட்ட எனது இரசிப்புத்தன்மையை அவன் விரும்பியிருக்க மாட்டானென்றறிவேன். ஆனால் இது போன்ற எதிராளியைக் கொஞ்சம் கூச வைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. அதிலிருக்கும் சந்தோஷமே அலாதியானது.

அவன் கொஞ்சம் பொறுமை காக்கவும் என்று சொல்லி விலகிச் சென்றான். எல்லோருக்குள்ளும் பதில் சொல்லாமல் நழுவும் என் இந்தியநாட்டு மனப்பான்மை ஒளிந்திருக்கிறது. ஒருவழியாய் வரிசை நகர ஆரம்பித்தது.

மிகச் சிறிய இரஷிய விமானம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது. இதுபோன்ற விமானங்களில் பயணிப்பது என் மாட்சிமையைக் குறைக்குமென்றாலும் தொழில் கருதி பொறுக்க வேண்டியிருக்கிறது. விசா மாற்றத்திற்குச் செல்லும் இந்தியர்களின் அவலநிலை குறித்த ஆய்வுக்கட்டுரை என் தலையில் விழுமென்பது நானே எதிர்பாராததுதான். ஆனாலும் மோசமில்லை. மோனியுடன் மீண்டும் ஒரு இனிமையான இரவைக் கழிக்க முடியும்.

பயணிக்கும் ஏறத்தாழ நாற்பது நபர்களில் என்னுள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்தான் கனவாண்கள். பெரும்பான்மை இந்தியர்களும் சில பாகிஸ்தானிகளும் கடைமட்டக் கூலிகளாயிருக்கவேண்டும். கட்டுரையில் அவர்களை எவ்விதம் வர்ணிக்கலாமென்ற உள்ளூறும் யோசனையினூடே ஒவ்வொருவராய் நோட்டமிட்டபோது “தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிகள் – கம்யூனிசப் பார்வை”என்ற புத்தகத் தலைப்பு என்னை நிறுத்தியது. நான் படித்திருக்கும் மிகச்சில தமிழ்ப்புத்தகங்களில் அதுவுமொன்று என்பது காரணமாயிருக்கலாம் என்று நிறுவிக்கொண்டேன். காரணமில்லாமல் எதுவுமே நிகழாதென்பது எனக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொள்கை.

அந்தப் புத்தகம் முப்பதுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கணவானின் கையிலிருந்தது. நான் கொண்டுள்ள கணவான்களின் இலக்கணத்தில் பொறுத்திப் பார்த்த போது தேறினான் என்பதால் அவனை கணவான் என்கிறேன். மூக்கின் நுனியிலிருக்கும் கண்ணாடியின் வழியே ஒவ்வொரு வரிக்கும் மாறும் லாவகம் அவன் கண்களின் அசைவில் தெரிந்தது. வழுக்கையும் தொப்பையும் இல்லாதிருந்தால் வடிவில் எனக்குப் போட்டியாளானாய் இருந்திருப்பான். அரைமணி நேரப் பயணத்தில் அந்த இலங்கைக் காரனுடன் – அவன் இலங்கைக்காரனாய்த்தான் இருக்கவேண்டும்; என் உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்று உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்- கொஞ்சம் கதைக்கலாமென்று விழைந்தேன். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். கண்ணில் தெரிகிறதே.

மிகப்பெரிய முன்னுரையோ தொடர்ச்சியான முகமன்களோ எனக்கு பிடிக்காதென்பதால் நேரடியாகத் தொடங்கினேன்.

“இந்தப் புத்தகத்தில் பெரியதாய் ஒன்றுமில்லை. வழக்கம்போல இந்தியா கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிசப் பார்வை என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல். கம்யூனிஸம் குருடாகி நாள்கள் ஆகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒற்றை வரியில் சொல்வதானால் இடதுசாரி மனப்பான்மையின் தாக்குதல்களின் தொகுப்பாய் இப்புத்தகத்தைக் கொள்ளலாம்”என்றேன். பதிலாய் “யார் நீங்கள்?”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்?”அந்த ஒரு கேள்வியால் என் பேச்சில் கவரப்பாடத கணவானும் இருக்கிறானோ என்ற சந்தேகம் என்னுள் முளைவிடத் தொடங்கிற்று. “உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்கலாமென்று.. ..”மறித்து பதிலளித்தான்.

“இன்னொரு சமயம். இப்போது என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்போம்”என்று சொல்லி நான் நகரும் முன்னமே புத்தகத்தைத் தொடர்ந்தான். நான் என் இருக்கைகுக்குச் செலுத்தப்பட்டேன். அவமானப் படுத்தப் பட்ட கணங்களை நான் மறப்பதே இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

கிஷ் பெருத்த ஈரப்பதத்துடன் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்களை உள்வாங்கிக் கொண்டது. என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என் பார்வை அந்த இலங்கைக்காரனைச் சந்திக்காதிருந்தது. ஆனால் மனம் சொல் பேச்சு கேட்பதேயில்லை. அவமதிக்கப்பட்ட் நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைத்தவண்ணம் சுழன்றது.

என் பெயர் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கியபடி ஒரு ·பிலிப்பனோக்காரி நின்றிருந்தாள். என் பெயருக்குக் கீழாய் ஜார்ஜ் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்த ·பிலிப்பினோக்காரியை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “கிஷ் தீவுக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்”என்றாள். நன்றியுரைத்துவிட்டு, செல்லலாமா என்றேன். “திரு. ஜார்ஜுக்காய் உங்களையும் காத்திருக்க வைப்பதில் வருந்துகிறேன்”என்றாள். “நான் ஏன் ஜார்ஜுக்காய் காத்திருக்கவேண்டும்”என்றேன். “மன்னிக்கவும்”என்று சொல்லிச் சிரித்தாள். இதுபோன்ற சமாளிப்புகளை நான் அறவே ஏற்பதில்லை என்றாலும் எதிராளி என் முன்னே நெளிகிறான் என்ற சந்தோஷம் என்னுள் பரவியதல் கொஞ்சம் அமைதிகாத்தேன். என் எரிச்சல் கோபமாகுமுன் அந்த இலங்கைக்காரன் வேகமாய் எங்களை நெருங்கி தன்னை ஜார்ஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்னிடம் சொன்ன அதே வரவேற்புகளை எழுத்துப் பிசகாமல் அவனிடமும் சொன்னாள். எங்களை ஒரு சொகுசு காரில் ஏற்ற்¢க்கொண்டு தங்குமிடத்திற்கு கூட்டிச் சென்றாள். அடுத்தடுத்து அமர்ந்திருந்தும் நானும் இலங்கைக்காரனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை.

நாங்கள் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எதிரெதிர் அறைகளில் தங்க வைக்கப்பட்டோம்.
பயணக் களைப்பை குளியலில் கொஞ்சம் குறைத்துவிட்டு வரவேற்பை அடைந்து மோனியை நலம் விசாரித்தேன். இரவில் அவளின் தேவையைச் சொன்னேன். இன்றேவா என்றாள். நான் இன்றேவா என்றால் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நன்றி என்றேன். இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னாள். அவளை கடந்த முறை முதலாய்க் கண்ட மாத்திரத்திலேயே ஆப்கானிஸ்தானி என்று உணர்ந்தேன். என் யூகத்திறனை அறிந்து வியந்தாள். வெகுவாய்ப் புகழ்ந்தாள். காணும் அனைவரும் அவளை இரானி என்றே நினைப்பதாயும் நான் ஒருவன் மட்டுமே ஆப்கானிஸ்தானி என்று அறிந்ததாயும் சொன்னாள். இதுபோன்ற புகழ்ச்சியின் இறுதி என்னவென்று அறியாதவனாய் என்னை அவள் நினைத்திருக்கக்கூடும். இருநூறு எமாரத்திய திர்ஹாம்கள் அதிகமாகும்.

ப்கானிஸ்தானிய பாலியல் தொழிலாளிகள் கூட நேரம் தவறலை விரும்புவதில்லை போல. மிகச்சரியாய் அரைமணி நேரத்தில் அறைக்குள் வந்தாள். மணி இரண்டைத் தொட்டிருந்தது. சொந்தக்கதைகளை சொல்லிய வண்ணம் இருந்தாள். அவளின் தம்பி இரசாக் பதிநான்கு வயதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் குழுவிற்கு தன்னை அர்பணித்துக்கொண்டானாம். அவனுக்கு போன மாதம் நடந்து முடிந்த திருமணத்திற்கு இவள் ப்கானிஸ்தான் சென்று வந்தாளாம். பாலியல் தொழிலில் பேச்சுத்தடைச்சட்டம் வந்தால் நல்லது. எனக்குத் தூக்கம் வருகிறது என்றேன். பெருமூச்செறிந்தாள். அறையின் விளக்குகளை அணைக்கலாமா என்றாள். விளக்குகள் இருக்கட்டும் என்றேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நான் அழகை அனுபவிக்க மட்டுமல்லாமல் இரசிக்கவும் தெரிந்தவர்கள் என்றேன். இது இரசனை இல்லை நோயின் அறிகுறி என்றாள். பணம் வாங்கும்போது பாவங்கள் கரைவதுபோல உடல் தளர்ந்து விலகும்போது நோயும் கரையும் பெண்ணே என்றேன். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. எதிர் அறையில் விளக்கு இன்னும் ஏன் எரிகிறது என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு மோனியை முகரத் தொடங்கினேன். அவள் எரியும் விளக்கைப் பார்த்த வண்ணம் ஒத்துழைத்தாள்.

இரவு எத்தனை மணிக்கு உறங்கினேன் என்பதோ மோனி எப்போது என் அறையைவிட்டு வெளியே சென்றாள் என்பதோ எனக்கு நினைவில்லை. எதிரறையில் இருந்து காட்டுத்தனமாக வந்த ஒரு இசை என்னை எழுப்பியதை உணர்ந்தேன். அது எந்த மொழிப்பாடல் என்று நான் தெரிந்திருக்கவில்லை என்பது என் மனதுள் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அந்த இலங்கைக்காரன் -பெயர் கூட ஜார்ஜ் என்று நினைவு- கொஞ்சம் திறமையுள்ளவன் என்று ஒரு எண்ணம் கிளர்ந்தபோது உடனே அதை வேசமாய் பிய்த்து எறிந்தேன். அவமானப்படுத்தப்படுவது மறப்பதற்கல்ல.

இன்று மாலை ஐந்து மணிக்கு துபாய் திரும்பவேண்டும். நாளை காலை கட்டுரையின் முதல் பிரதியைத் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவது அத்தனை கடினமல்ல. சிற்சில கடினமான ஆங்கிய பிரயோகங்களுடன் சில மேற்கோள்களையும் கூட்டிச் சேர்த்தால் உலகம் கைதட்டும். மோனியைத் தொலைபேசியில் அழைத்தேன். வரவேற்பில் ஒருத்தி மோனி இன்று வரவில்லை என்றாள். குரலில் இந்தியத்தனம் இருந்தது. எனக்கு இந்தியப் பெண்கள் மீது மோகம் இல்லை. மோனியின் செல்·போன் எண்ணைக் கேட்டேன். கொடுத்தாள். உடனே தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பில் இன்றுமா என்றாள். அவளின் ஹாஸ்யம் இரசிக்கத்தக்கதாய் இல்லை. சில நிர்வாண நிமிடங்கள் தரும் சலுகையினால் மோனி தப்பித்தாள். கட்டுரை எழுதத் தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்றேன். வரவேற்பைத் தொடர்புகொள்ளச் சொன்னாள். நீ வரமுடியாதா என்றேன். இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாயே வந்துவிட்டாள்.

“விடுதியில் தான் இருந்தாயா? வரவேற்பில் நீ வரவில்லை என்றார்கள்”என்றேன்.

“நான்தான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தேன். எதிரறையில்தான் இருந்தேன்.”என்றாள்.

“அந்த இரசனைகெட்ட இலங்கைக்காரனுடனா?”

“உங்களுக்குத் தெரியுமா ஜார்ஜை? மறக்கமுடியாத அதிசயமான மனிதர். வரிக்கு வரி தாய்நாடு தாய்மொழி என்கிறார் தெரியுமா?.. “என்றாள்.

“பசப்பில் மயங்காதே பெண்ணே. இவர்களுக்கெல்லாம் நாடு களம். மொழி ஒரு ஆயுதம். கிணற்றுத்தவளைகள். மொழியை அவர்கள் வாழவைப்பதாய்ச் சொல்வார்கள். அதுவும் இலங்கைத் தமிழனல்லவா. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படுவான். உலக அறிவு இருக்காது”

“இல்லை திரு. பென்னி. நீங்கள் தவறாய்ச் சொல்லுகிறீர்கள். ஆப்கானிஸ்தான் பற்றி என்ன அழகாய்ச் சொன்னார் தெரியுமா? உருதில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையாம். அழுதே விட்டேன் தெரியுமா.. ஓ என் தாய்நாடே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களானால் உணர்வீர்கள்”என்றாள்.

“பசப்பு மொழிகளின் கூரிய ஆயுதம் கவிதை என்றறிவாயா நீ?”

“எனக்கு வாதிக்கத் தெரியாது திரு. பென்னி.

“எந்த நாட்டில் பூக்கள் மலர்வதில்லையோ
எந்த நாட்டில் குண்டுச் சத்தம் மூச்சுச்சத்தத்தைவிட அதிகம் கேட்கிறதோ
எந்த நாட்டில் குழந்தைகள் முலைப்பால் குடிப்பதில்லையோ
அந்த நாட்டிலும் பெண்கள் ருதுவாகிறார்கள் “

என்ற வரிகளைக் கேட்டவுடன் ஆப்கானிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களும் போரில் பெற்றோரை இழந்த குழந்தையின் அழுகையும் என் ந்¢னைவில் வந்து போனதை நீங்கள் அறிய மாட்டீர்கள். “

“நீ அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிந்திக்கிறாய் மோனி. கவிதை என்பது உயற்சியாகச் சொல்லுதல் மட்டுமே.”

“எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த வரிகளைச் சொன்னேன். சரி விடுங்கள். உங்களுக்கு நான் இப்போது எந்த வகையில் உதவ முடியும்? சொல்லுங்கள்”என்றாள்.

என் தேவைகளைச் சொன்னேன். அரைமணிநேரத்தில் எல்லாம் கொண்டு வந்து தந்தாள். விடைபெற்றுச் சென்றாள். ஜன்னல் திரைகளை விலக்கி அவள் எங்கே செல்கிறாள் என்று நோட்டமிட்டேன். அவள் அந்த எதிரறைக்குள் சென்றாள். எனக்கு ஏனோ கோபமாய் வந்தது.

***

இந்த முறை இரஷிய விமானத்தில் என் வலது பக்கத்தில் அந்த இலங்கைக்காரன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதே இனம்புரியாத ஒரு எரிச்சல் உள்ளுள் பரவுவதை அறிந்தேன். அவன் என்னை எப்படி உணருகிறான் என்று தெரியவில்லை.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் துபாயில் விமானம் தரையிறங்கும். அதற்குமுன்னாய் அவன் என்னை மறக்காதவாறு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தோன்றினால் சரியாய்த்தான் இருக்கும். ஆனால் அவன் ஏதோ ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். என்பக்கம் திரும்பவேயில்லை. வேறு வழியின்றி நானே தொடங்கினேன்.

“மன்னிக்கவேண்டும் திரு. ஜார்ஜ்”என்றேன். சொல்லுங்கள் என்ற பாவனையில் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி மூக்குக்கண்டாடிக்கும் நெற்றிக்குமான இடைவழியேப் பார்த்தான்.

“நேற்று மோனி நீங்கள் ஒரு கவிதை சொன்னதாய்ச் சொன்னாள்”

“மோனி.. ஓ அந்த ஆப்கானிஸ்தான் விபச்சாரியா?”

எனக்கு சட்டென்று ஒரு கோபம் பரவி அடங்கியது.

“திரு ஜார்ஜ். எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது?”

“நிஜத்தை நிஜமாய் சொல்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எந்த வித சுற்றிவளைத்தலோ ஆபரணமோ இல்லாமல் அம்மணமாய் இருப்பது போன்ற ஒன்று உங்களுக்கு விருப்பம் என்றறிந்தேன்.”

“நானாய் பேச எத்தனித்தேன் என்ற ஒரு காரணத்திற்காய் நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பதில்லை”

“அப்படியானால் மிக்க நல்லது. இத்தோடு நமது பேச்சை நிறுத்திக்கொள்ளலாம்”

“சரி நிறுத்திக்கொள்ளலாம். னால் ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும். உங்கள் இரசனைக்கும் வெளி அங்க அசைவுகளுக்கும் அதிக தூரம்”

“இருக்கலாம். ஆனால் எல்லா இரவிலும் நான் விளக்கை அணைக்கிறேன். குருடாகிப் போனப் பார்வையென்றாலும்.”

கொஞ்சம் புரியாத அவன் பதிலை உள்வாங்கிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது நான் மிகுந்த அவமானமாய், நாற்சந்தியில் நிர்வாணமாய் நிற்பதாய் உணர்ந்தேன்.

விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

Share

Comments Closed