பிறிதொன்றில்லாத கணங்கள்-கவிதை

எப்போதும்

கனவொன்றில் பிம்பங்களை

கைபிடிக்கப்பார்க்கவும்

விழித்திருக்கும்போது

கனவின் தடங்களைத் தேடியும்.

     பிறிதொன்றில் ஆழக்கிடக்கும்போது

     சாரல் மழையாகிவிடுகிறது

     ஒரு குழந்தை சிரித்தடங்க

     ஒரு கவிதை முடிந்துவிடுகிறது.

     ஒரு வண்ணத்துப்பூச்சி

     கண்பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது

திறந்திருந்த ஜன்னல் வழி சூரியன்

உள்வந்த சிவப்புக் கதிர்

அறையைச் சிவப்பாக்கி வைத்திருந்தது;

மஞ்சளாக்கிவைத்திருந்தது;

பின்வந்த நிறமற்ற கதிரோ

என்னை எழுப்பிவிட்டது.

     காலிடறும் நேரமும்

     கைதவறும் பீங்கானும்

     அப்பொழுதில்

     சாரலையும்

     ஒரு கவிதையும்

     ஒருசேரக் கொண்டுவருகின்றன

     பிறிதொன்றில்லாத கணங்களில்.

Share

Comments Closed