பிறப்பு – கவிதை

இரண்டு வருடம் முன்பு செத்துப்போன
முப்பாட்டி ஞாபகமும் கொஞ்சம்
27 வருடம் கழித்துத் தாத்தா பிறந்தார்
யாரும் எதிர்பார்க்காத மாதிரி
பாலா மாமாவின் பெயரைச் சொன்னாள் அம்மா
அவளுக்கு பாலா மாமா என்றாலே தனிப்பிரியம்தான்
மாமனாரும் மாமியாரும்
அவர்கள் சொந்தத்தில் ஒருவரைத் தேர்ந்தார்கள்; உடனே
எங்கள் பக்கத்துக்காரர்கள் அதை மறுத்தார்கள்
நான் என் பங்குக்கு என் சித்தப்பாவைச் சொன்னேன்
மரச்சட்டத்தினுள் மாட்டிக்கிடந்த மனிதர்கள்
இறக்கை பூட்டிக்கொண்டார்கள்
இரும்பாலான கதவுகள்
இளகிக்கொள்ள
வீட்டு மரத்தூண்களில்
பாசி படரத் தொடங்கியது
குழந்தையின் ஒவ்வொரு சிணுங்கலிலும்
ஒவ்வொரு நெட்டி முறிப்பிலும்
அவர்கள் தங்களைச் சேர்த்துக்கொள்ள
-தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்-

Share

Comments Closed